ஊரில் சிறந்தவர்கள்
-நெய்வேலி
பாரதிக்குமார்
தையல்
இயந்திரத்தில் பளபளத்துக் கொண்டிருந்த முனையில் துளையுள்ள ஊசி, காஜா தைத்துக் கொண்டிருந்த தலைப்பகுதியில் துளையுள்ள ‘கை ஊசி'யைப் பார்த்து,
“ஓட்டைக்காதே.. ஓட்டைக்காதே... உன்னை விட நானே உயர்ந்தவன். புதுத்
துணிகளோடு தான் பெரும்பாலும் என் உறவு” என்று
கொக்கரித்தது.
பதிலுக்குக் கை ஊசி, “ஓட்டை வாயே... ஓட்டை வாயே... நாவை
அடக்கிப் பேசு. வறுமையில் வாழும் ஏழைகளின் மானத்தை மறைத்து வாழ பெரும்பாலும்
நான்தான் உழைக்கிறேன். ஊசிகளில் உயர்ந்தவன் நானே!” என்றது.
மருத்துவமனையின் மருந்தேற்றும் ஊசியோ மந்தகாசச் சிரிப்புடன்,
“அட, முட்டாள்களே!
உயிரைக் காக்கும் உத்தமப் பணியில் இருக்கும் நானல்லவா உயர்ந்தவன்!” என்றது.
“தானியங்கள் சேமித்து வைத்தால்தானே உயிர் பிழைக்க உணவு கிடைக்கும்?”
என்று குரல் கொடுத்தது சாக்குப்பை தைக்கும் கோணி ஊசி.
“நடந்து தேயும் கால்களுக்கு காலணி தரும் என்னை விடவா நீங்கள் எல்லாம்
உயர்ந்தவர்கள்?” என்றது செருப்பு தைக்கும் ஊசி.
“காலில் இருக்கும் பொருளோடு கை கோர்க்கும் நீயே இப்படிப் பெருமையடிகிறாயே
பெண்களின் கொண்டையில் இருக்கும் நான் உன்னை விட உயர்ந்தவன்” என்றது
கொண்டை ஊசி.
அவர்களுக்குள் ஒருபோதும் சமாதானம் வரவில்லை... எவரும் மற்றவரை ஏற்கத்
தயாரில்லை.
எனவே, ஊரில் பெரியவர் அறிவாளி கரியமேகத்தை
சந்தித்து தங்களது பிரச்சினையைக் கூறி “ஊரில்
உயர்ந்தவர் எங்களில் யார்?” என்றன.
கரியமேகம் அர்த்தப் புன்னகை ஒன்றை சிந்தினார். பின், “ஊரில் கெட்டுப் போன திண்பண்டங்களை ‘ஊசி'ப் போயிற்று என்றுதான் சொல்கிறோம். அந்த கெட்டுப்போன ஊசி உங்களில்
எந்த ஊசி?” என்றார் சிரிப்புடன்.
ஊசிகள் எதுவும் வாய் திறக்காமல் மெளனமாய் நின்றன.
கரியமேகம் மீண்டும் சிரித்தார். பின், “இந்த
உலகில் படைக்கப் பட்ட எதுவும் ஒன்று இன்றி மற்றொன்று இல்லை. ஒருவரையொருவர்
சார்ந்து வாழ்வதுதான் படைப்பின் தத்துவம்... கலங்காதீர்கள். உங்களில் யார்
உயர்ந்தவர் என்று கர்வத்துடன் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்.
ஒன்றுபடுத்தலையும் உயிர்கொடுத்தலையும் உங்களிடமிருந்துதான் எங்கள்
மனித இனம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் பிரிவினை ஏன்?”
உங்கள் ஒவ்வொருவர் உழைப்பில்தான் எங்கள் மனித இனம்
உயிர்த்திருக்கிறது. “ஊரில் சிறந்தவர்கள்” நீங்கள் அனைவருமே என்பதன்
சுருக்கமாகத்தான் உங்கள் அனைவரையும் ‘ஊ சி' என்றழைக்கிறோம்.
உங்களில் தாழ்ந்தோரும் இல்லை, உயர்ந்தோரும் இல்லை. நீங்கள் எல்லோருமே
ஊரில் சிறந்தவர்கள் தான்!” என்றார் கரியமேகம் உறுதியாக.
தங்களது சிறுமைத்தனமான சண்டைகளை நினைத்து வெட்கிய ஊசிகள்
தங்களுக்குள் இனிச் சண்டை இல்லை; பிரிவில்லை; இனி
ஒன்றுபடுத்துவதே நம் பணி என்ற உறுதியோடு “தை தை” என தைத்துக்கொண்டு இருக்கின்றன... உற்சாகத் துள்ளலுடன்!
சென்னை
உலகப் புத்தகக் கண்காட்சி 2022
விரல்கள் எழுதுவதற்கு மட்டுமல்ல பரவலாக்கவும்தான்
கடந்த ஜனவரி மாதம் பபாசி என அழைக்கப்படும்
பதிப்பாளர்கள் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் ஆண்டு தோறும் நடத்தும் சென்னைப் புத்தகக்
கண்காட்சி நடைபெற்ற ஓய்.எம்.சி.ஏ வளாகத்தில் 16,17,18 ஆகிய தேதிகளில் உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது
குறித்து செய்தித்தாள்களில், காட்சி ஊடகங்களில் செய்தியாக பலரும்
அறிந்திருப்பார்கள். ஆனால் சென்னையில் உலகப் புத்தகக் கண்காட்சியின் நோக்கம்
பற்றியும் அதில் தமிழ்நாடு அரசு பங்களிப்பு
குறித்தும் விரிவான தகவல்கள் பெரும்பாலானோருக்கு அதிலும் படைப்பாளிகள்
பலருக்கும் தெரியவில்லை என்பது வேதனையளிக்கும் உண்மை.
சென்னை உலகப் புத்தகக்
கண்காட்சியை தமிழ்நாடு அரசு முன்வந்து நடத்துவதற்கு முதன்மையான காரணம் தமிழ்
இலக்கியங்கள் பிற உலக மொழிகள் மற்றும் பிற இந்திய மொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட
வேண்டும் என்கிற உயரிய நோக்கம்தான். இதுவரை தமிழில் இருந்து உலக மொழிகளுக்கு
அதிகபட்சம் நூறு நூல்கள்தான் மொழிபெயர்க்கப்பட்டு சென்றிருக்கின்றன என்பது
அதிர்ச்சிகரமான உண்மை. தமிழில் உலகத்தரத்துக்கு இணையான அல்லது அதற்கும் மேலான
இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்தாலும் அவை உலகின் பார்வைக்கு எடுத்துச் செல்ல தனி
நபர்கள்தான் அதிகம் முயற்சித்திருக்கின்றனர். முதன் முறையாக தமிழ்நாடு அரசு
மிகச்சிறந்த முன்னெடுப்பை எடுத்திருக்கிறது என்பது பாராட்டுக்குரிய செயல்.
தமிழ்நாடு அரசு தமிழில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நம் நூல்கள் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்க ஆகும் தொகையை அளிக்கும் என்கிற அறிவிப்பு தமிழுக்கும், தமிழ் படைப்பாளிகள், பதிப்பாளர்கள் ஆகியோருக்கும் மகிழ்வளிக்கும் செய்தியாகும். பபாசியுடன் இணைந்து இத்திட்டத்தை நடத்தும் முடிவு என்பது உடனடியாக அதனை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழியாக இருந்தது. இதற்கென CIBF என்கிற இணையதளத்தை உருவாக்கி அதில் பதிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் பதிவு செய்யும்படி அறிவித்தார்கள். அதன்பிறகு புத்தக பரிமாற்றத்துக்கான உரிமம் பெறுவதற்காக வாங்குவோர், விற்போர் மற்றும் இரண்டிலும் விருப்பமானோர் பட்டியலை உருவாக்கினார்கள்.
உலக பதிப்பாளர்கள்,
முகவர்கள் பதிவதற்கான விரிவானத் தளமாக அது உருவாக்கப்பட்டது. அதே இணையத்தில்
தங்கள் புத்தகங்களின் விவரங்கள் அடங்கிய கையேட்டினை அவரவர் உருவாக்கி பதிவிடவும்,
சென்னை உலகப் புத்தகக் கண்காட்சியில் நேரடியாக சந்தித்து உரிமைப்
பரிமாற்றத்துக்கான நேர பகுப்பு பிரிக்கப்பட்டு, இணையம் வழியாகவே தங்கள்
விருப்பத்தேர்வை உறுதி செய்ய வசதிகளும் செய்யப்பட்டன. சென்னைப் புத்தகக்கண்காட்சி
நடக்கும் அதே வளாகத்தில் உலகப் புத்தகக் கண்காட்சிக்கான தனி அரங்கு
அமைக்கப்பட்டது. அந்த அரங்கில் புத்தக விற்பனை இல்லை, ஜனவரி 16,17,18 தேதிகளில் பதிப்பாளர்கள், முகவர்கள், படைப்பாளிகள்
நேரடியாக உரையாடி நூல்கள் மொழிமாற்றத்துக்கான
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
சென்னை உலகப் புத்தகக்
கண்காட்சி அரங்கிலேயே மொத்தம் 365 புரிந்துணர்வு
ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின என்பது பெருமகிழ்வளிக்கும் செய்தி. தமிழிலிருந்து அயலக
மொழிகளுக்கு 90 ஒப்பந்தங்களும்,
தமிழில் இருந்து பிற இந்திய மொழிகளுக்கு 60 ஒப்பந்தங்களும், பிற மொழிகளில் இருந்து
தமிழுக்கு 170
ஒப்பந்தங்களும், பிறமொழிகளுக்குள் 45 ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. முதல் முயற்சியிலேயே
இத்தனை ஒப்பந்தங்கள் என்பது பெருமிதத்துக்குரிய ஒன்றுதான்.
உலகப் புத்தகக்
கண்காட்சிக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கு உலக தரத்தில் இருந்ததாக அயலகத்தில்
இருந்து வந்திருந்த பதிப்பாளர்கள் பாராட்டினார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக
ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட்டில் தொடர்ந்து உலகப் புத்தகக் கண்காட்சி பிரம்மாண்டமாக
நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மத்தியில் நடைபெறும் ஜெர்மனி உலகப்
புத்தகக் கண்காட்சியில் உலகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து
சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும்
ஒவ்வொரு தேசத்துக்கென கௌரவ அந்தஸ்து அளிக்கப்பட்டு அந்த நாட்டினுடைய நூல்கள்,
கலாச்சார பண்பாட்டு வெளிப்பாட்டுக்கு என முதன்மையான கவனத்தை ஃபிராங்க்பர்ட் உலகப்
புத்தகக் கண்காட்சியில் அளிக்கிறார்கள். 2006 ஆண்டு இந்தியாவுக்கு
சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. நம் தலைநகர் தில்லியிலும் உலகப் புத்தகக்
கண்காட்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
சென்னை உலகப் புத்தகக்
கண்காட்சி அரங்கின் வடிவமைப்பு மிக நேர்த்தியாக இருந்தது. தமிழில் இருந்து பிற
மொழிகளுக்கு அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட (100) ஒவ்வொரு மொழிக்கென ஒரு குறளை
மாதிரிக்கு இடம்பெற்ற திருக்குறளின் மாபெரும் வடிவம் அரங்கினுள் வைத்தது
போற்றுதலுக்குரிய செயல். ஒவ்வொரு நாளும் அயலக பதிப்பாளர்கள் கலந்து கொண்ட
கருத்தரங்கு உள்ளேயே நிகழ்த்தப்பட்டன.
சென்னை உலகப் புத்தகக்
கண்காட்சிக்கென உருவாக்கப்பட்ட இணையதளம் (www.cibf.com) மிகச்சிறப்பாக
வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு அதில் படைப்பாளிகளையும் இணைவதற்கான
வாய்ப்பை உருவாக்கியது மகத்தான ஒன்று. ஆனால் பதிப்பாளர்கள் அதில் பங்கேற்ற அளவு
படைப்பாளிகள் கலந்து கொள்ளவில்லை. இதில் பதிப்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்
என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கலாம் அல்லது தகவல்கள் சென்று சேராமல்
இருந்திருக்கலாம். ஆனால் வரும் காலத்தில் திரளாக கலந்துகொள்வது படைப்பாளிகளுக்கு
நல்லது. குழு சாராத, பதிப்பகங்கள் தூக்கிப் பிடிக்காத படைப்பாளிகள் அல்லது பிரபல
எழுத்தாளர்களின் அருட்கடாட்சம் பெறாத படைப்பாளிகள் தங்களின் படைப்புகள் வழியே
தங்களை முன்னிறுத்துவதற்கான சூழல் இப்பொழுது இல்லை
தங்கள் படைப்புகள்
பிறமொழிகளுக்கு சென்றால் மட்டுமே நம் இலக்கியங்கள் பற்றிய கவனம் உலகின் பார்வைக்குச்
செல்லும். இந்தியாவின் பிற மொழிகளுக்கு செல்வதற்கான வழிகளைக் கூட அறியாமல்தான்
தமிழ்ப் படைப்பாளிகள் இயங்கி வருகின்றனர். சில குறிப்பிட்ட படைப்புகள் மட்டுமே
தமிழில் இருந்து பிற இந்திய மொழிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மலையாளத்தில்
எழுதப்பட்ட மிகச் சுமாரான படைப்புகள் கூட தமிழுக்கு வருகின்றன. ஆனால் தமிழின்
உச்சமான இலக்கியங்கள் கூட பிற மொழிகளுக்குச் செல்வதில்லை. அதற்கான மாபெரும் வாயில்
இப்பொழுது திறக்கப்பட்டுள்ளது. பதிப்பாளர்கள் விழிப்புடனும் மிகச் சிறந்த
வழிகாட்டல்களுடன் இதனைப் பயன்படுத்துகிறார்கள் ஆனால் படைப்பாளிகள் எழுதுவதுடன் நம்
வேலை முடிந்தது என்கிற மனப்பான்மையுடன் அசட்டையாக இருந்து வருகின்றனர். இந்த உலகப்
புத்தகக் கண்காட்சியில் நான் அறிந்த வரையில் ஒரு இருபது எழுத்தாளர்கள் கலந்து
கொண்டனர். அதிலும் இணையத்தைப் பயன்படுத்தி பதிப்பாளர்களைச் சந்தித்து
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களை ஒரு கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம்.
இந்தியாவின் பிற மொழி
பதிப்பாளர்களில் கேரளாவைச் சார்ந்த பதிப்பாளர்கள்தான் மும்முரமாக செயல்பட்டு அதிக
ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டிருக்கின்றனர். வடஇந்திய மொழிகளில் அனேகமாக இல்லை
என்கிற அளவுக்குத்தான் பங்கேற்பு இருந்தது. இது தமிழ்நாடு அரசு தந்திருக்கின்ற
மகத்தான வாய்ப்பு இதனை தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
முதலில் தாங்கள்
வெளியிடும் நூல்கள் ISBN பதிவுடன்
இருக்கிறதா என்று உறுதி செய்து இல்லை எனில் அதனைப் பெற வேண்டும். தங்கள்
படைப்புகள் பற்றிய சுருக்கக் குறிப்புகளைக் கொண்ட கையேட்டினை ஆங்கில மொழியில்
உருவாக்கிக் கொள்ளவேண்டும். அடுத்த ஆண்டுக்கான நிகழ்வு பற்றிய அறிவிப்பு அனேகமாக
இந்த ஆண்டு நவம்பரில் வந்துவிடும் அதற்குள் தயாராகவேண்டும். அறிவிப்பு வந்தவுடன்
அதற்கான இணையதளத்தில் பதிவிட்டு தொடர்ந்து அதனைக் கவனித்து அனைத்து முறையான
செயல்பாடுகளையும் உடனுக்குடன் முழுமை செய்யவேண்டும். பதிப்பாளர்களுடன் உரையாடும்
வாய்ப்பையும், சரளத்தையும், தமிழ்நாடு அரசின் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தும்
உத்வேகத்துடனும் இயங்கினால் நமது நல்ல
இலக்கியங்கள் பிறமொழிகளுக்குச் சென்று சேரும். நமது கரங்கள் எழுதுவதற்கு மட்டுமல்ல
பரவலாக்கவும்தான்...
. -சங்கு ஜூலை 2023 இதழ்
கற்பித்தலின் மாமன்னன்
பேராசிரியர் மா. நன்னன்
-நெய்வேலி பாரதிக்குமார்
வகுப்புத் தொடங்குவதற்கு அடையாளமாக, வழக்கமான அச்சுறுத்தும்
மணியோசை இருக்காது. நாவைத் துருத்தியபடி பிரம்புடன் ’உள்ளே போ’ என்று எவரும்
நிற்பதில்லை. வகுப்பறையில் மிக வசதியாக வெவ்வேறு வயதினரும் புன்முறுவல் ததும்பும்
முகங்களுடன் அமர்ந்திருப்பர். இப்படியானச் சூழலில் கல்வி போதிக்கும் பணியை அதுவும்
மொழி இலக்கணத்தை கற்பிக்கும் வியத்தகு தருணங்களை தந்தவர் பேராசிரியர் மா. நன்னன். கிட்டத்தட்ட
17 ஆண்டுகள் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக
எண்ணும் எழுத்தும், அறிவோம் அன்னை மொழி ஆகியத் தலைப்புகளில் எளிய நடையில் வலிய
உதாரணங்களுடன் பிழையின்றி தமிழ் எழுத அவர் நடத்திய நிகழ்ச்சிகள் தமிழுக்கு கிடைத்த
கொடை. கற்பித்தலில் புதிய அணுகுமுறையைப் புகுத்தியவர். நன்னன் கற்பித்தல் முறை
என்றே அதற்கு பெயர்.
புலவர் மா. நன்னன் அவர்கள் பிறந்தது ஸ்ரீமுஷ்ணத்துக்கு
அருகில் உள்ள காவனூர் என்று எழுத முற்படும்போது முதுகுக்குப் பின் நின்று அது ஸ்ரீமுஷ்ணம்
இல்லை திருமுட்டம் என்று திருத்தி எழுது என்கிற கனிவான அதே நேரம் மிக உறுதியான
குரல் கேட்டால் அது நன்னன் அவர்களின் குரலாகத்தான் இருக்கும். நல்ல தமிழில் உரைநடை
எழுத விரும்பும் எல்லோரது குரலிலும் அவரது குரலின் ஒலியைக் கேட்கலாம். நாளிதழ்களிலும்
வார இதழ்களிலும் இடம்பெறும் கட்டுரைகளில் பிழையான தமிழ்ச்சொற்களை வாசிக்க
நேரிட்டால் அது குறித்து எழுதியவர்களுக்கு சந்திக்கும்போதோ அல்லது தொலைபேசியிலோ
தெரிவித்து அதனை நெறிப்படுத்துவது அவரது இயல்பு.
சிதம்பரம் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் அவரது வகுப்பறைப் பாடங்கள் முடிந்து தேர்வுகளும் நிறைவுற்றபோது.
மயிலாடுதுறைக்கு அருகில் வடகரையில் பெரியார் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில்
பேசுவதற்காக மாணவப் பருவத்திலேயே அழைக்கப்பட்டார் அந்த நிகழ்ச்சியின் நிறைவில் “நீ
என்னுடன் வந்துவிடுகிறாயா?” என்ற் பெரியார் கேட்டபோது யாருடைய அனுமதிக்காகவும்
காத்திராமல் அவருடன் ஈரோட்டுக்கு சென்றுவிட்டார். அன்றைக்கு பின்பற்றி நடக்கத்
தொடங்கிய பெரியாரின் பாதையிலிருந்து சற்றும் விலகாமல் தனது இறுதி மூச்சு வரை
தொடர்ந்தார். ஈரோட்டில் குடியரசு
பத்திரிகையில் பணியாற்றியவர் பின்னர் ஆசிரியர் பணிக்கு மாறவேண்டிய சூழல் வந்தது.
அதற்குப் பின்னர் பேராசிரியர் பணி தொடங்கி தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பதவி
வரை அவரது தமிழ்த்தொண்டு தளராது தொடர்ந்தது.
நன்னன் எழுதியுள்ள. எழுபதுக்கும்
மேற்பட்ட நூல்கள் பெரும்பாலும் தமிழியல் அல்லது பெரியாரியல் சார்ந்தே இருக்கும்.
தமிழ்ச் சொற்களின் வேர்ச்சொல் ஆய்வு , அறிவியல் சொற்களுக்கு இணையான கலைச்சொற்களை
உருவாக்குதல் ஆகிய அவரது பணிகள் இன்றைய படைப்பாளிகளுக்கு ஆகச்சிறந்த வழிகாட்டிகள்..
எளிய மக்கள் அறியாத சொற்களாயிற்றே என்று தயங்கினால் அவர் எப்பொழுதும் அதனை
மறுப்பார். பள்ளத்தில் இருப்பவர்களை மேலேற்றிவிட வேண்டும் என்றால் நீங்கள்
கைகொடுத்து தூக்கிவிடுவீர்களா அல்லது பள்ளத்துக்குள் குதிப்பீர்களா என்பதுதான்
அவரது கேள்வியாக இருக்கும். அப்படியான சமாதானங்களை அவர் ஒருபோதும் ஏற்பதில்லை.
நன்னன் குடி அமைப்பின்
சார்பாக ஆண்டுதோறும் இலக்கியப்போட்டிகள், மாணவ மாணவியர்களுக்கான தமிழறிவை வளர்க்கும்
கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவற்றை நடத்தி அவரது பிறந்தநாளான சூலை
முப்பதாம் தேதி பெரும் பொருட்செலவில் விழா எடுத்து பரிசுகள் அளித்து ஊக்குவிப்பதை
தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருந்தார். இப்பொழுதும் அவரது மகள்கள் வேண்மாள்,
அவ்வை ஆகிய இருவரும் அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் விடாமல் அனைத்துப் போட்டிகளையும்
நடத்தி விழா எடுத்து கௌரவிக்கின்றனர்.
அவர் மறைந்த அன்று இறுதி
ஊர்வலத்தில் அவரது துணைவியார் பார்வதி அம்மாளும் கூடவே இடுகாடு வரை வந்து அவரது
கைகளைப்பற்றி “திருமணத்தின் போது நீங்கள் சொன்னது போலவே உங்கள் கரங்களைப்
பிடித்துக்கொண்டு உங்கள் கொள்கையின் பொருட்டு பெரியார் வழியில் இதோ தொடர்ந்து
வந்துவிட்டோம்” என்று கண்கலங்கிய தருணத்தில் அங்கிருந்தவர்களும் கண்கள் கலங்க
நெகிழ்ந்தனர். அவரது மகள்கள் இருவரும் தமிழியல் பணியிலும் பெரியாரின் சிந்தனைகளைப்
பரப்பும் நோக்கிலும் தினந்தோறும் நன்னனின் சொல் துலக்கங்கள், பெரியாரின் கொள்கைகள்
விளக்க காணொளிகளை பதிவிடுகிறார்கள்.
அடுத்தத் தலைமுறைக்கும் தன்னுடைய கொள்கைகளை அவர்கள் உளமாற ஏற்கும் அளவுக்கு தனது
வாழ்வியல் முறைமைகளை உறுதியாகக் கடைபிடித்தவர் புலவர் மா.நன்னன் அவர்கள்.
திருஞானசம்மந்தம் என்கிற
தனது இயற்பெயரை தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக நன்னன் என்று மாற்றிக்கொண்டார்.
மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் ‘பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாட,, என்கிற
வரிகளில் மதுரையின் முதல் யாமம். எப்படி
கழிந்தது என்பதைப் பற்றி வர்ணிக்கையில் தன்னுடைய வள்ளல்தன்மையால் புகழ்பெற்ற நன்னன்
என்னும் மன்னனின் பிறந்தநாளின் போது அவன் மீது அன்பு கொண்ட மக்கள் தெருக்களில்
அவனைக் கொண்டாடி ஆர்ப்பரிப்பது போல மதுரையின் முதல் யாமம் ஆர்ப்பரித்துக் கழிந்தது
என்று பாடியிருப்பார். பேராசிரியர் நன்னன் அவர்களுக்கு இந்த சூலை முப்பதாம் தேதி
பிறந்தநாள். அதுவும் இந்த ஆண்டு அவரின் நூற்றாண்டு தொடக்கம். அவரது பெயரைச்
சொல்லும் தருணத்தில் நம்மையறியாமல் சொல் பற்றிய தேடலும் அது குறித்த துலக்கமும்
நம்முள் எழுந்து நம்மை ஒழுங்கு செய்கிறது எனில் அது நன்னன் கற்றுத்தந்த தமிழின்
ஆர்ப்பரிப்பு...
.
நெய்வேலி பாரதிக்குமார்
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி பொள்ளாச்சியில் கொலுசு இலக்கிய இதழ் சார்பாக
அதன் ஆசிரியர் அறவொளி அவர்களின் பெரு முயற்சியில் நிகழ்ந்த சிறுகதைப் பயிலரங்கில்
ஒரு பயிற்றுனராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் முடிவில் அறிவுத் தேடல் கொண்ட,
இலக்கியத் தாகம் கொண்ட நெஞ்சங்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருந்தேன்.
இன்னொரு புறம் உலகக் கோப்பைக் கால்பந்து ஆட்டத்தின் இறுதிப்போட்டி அன்றுதான்
என்பதால் மனம் அங்கும் இங்குமாகத் தாவிக்கொண்டிருந்தது. இறுதிப் போட்டியில் மோதும்
அர்ஜென்டினா பிரான்ஸ் இரண்டு அணிகளுமே கால்பந்தின் அத்தனைச் சூட்சுமங்களையும் வெளிப்படுத்தும்
மகத்தான வீரர்களைக் கொண்ட அணிகள்தான் என்பதால் கூடுதலான ஈர்ப்பு என்னைப் போன்ற
தீவிர கால்பந்து ரசிகர்களுக்கு இருந்தது. அதிலும் லியோனல் மெஸ்ஸிக்கு இது கடைசி
உலகக் கோப்பை வாய்ப்பு. அடுத்த உலகக் கோப்பை ஆட்டத்துக்கு அவரது வயது
அனுமதிக்காது. பிரான்சின் இளம் வயது ஆட்டக்காரர் கிலியான் எம்பாபே இந்த உலகக்
கோப்பையில் அசாத்தியமான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்திக் கொண்டே
இருந்தார். நிச்சயம் இந்த இறுதிப் போட்டி யாராலும் மறக்க முடியாத ஒரு உன்னதமான
ஆட்டமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை இரு அணிகளும் ஏமாற்றவில்லை. பொள்ளாச்சி
நிகழ்வு முடிந்து நெய்வேலிக்கு 19 ஆம் தேதி
அதிகாலை நான்கரை மணிக்கு வந்தபொழுது அர்ஜென்டினா கையில் உலகக் கோப்பை இருந்தது கத்தார்
அரசின் மதிப்புமிக்க அரசு உடையான பிஷ்ட்டை
மன்னர் ஷேக் தமீம் ஹமாத் கலிஃபா அல் தானி மெஸ்ஸிக்கு அணிவித்து கௌரவித்தார்.
வழக்கம்போல ஒன்றையணா
கருத்துக் கந்தசாமிகள் கறுப்பு நிற பிஷ்ட்டை அணிவித்து அவர் அர்ஜென்டினாவின் அடையாள
நிறமான வெள்ளை, நீல நிறத்தை திட்டமிட்டு மறைத்துவிட்டார் என்று ஊத
ஆரம்பித்துவிட்டார்கள். .பிஷ்ட் எனப்படும் கறுப்பு நிற அங்கி அரபு நாடுகளின் அரசக்
குடும்பங்கள், உயர்பதவியில் இருப்பவர்கள் குறிப்பிட்ட விழாக்காலங்களில் மட்டும்
அணியும் ஒரு கௌரவமிக்க அங்கி.. டிசம்பர் 18 ஆம் தேதி கத்தார் நாட்டின் தேசிய தினமும் கூட.. அந்த
நாட்டைப் பொறுத்தவரை வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை
நடத்துவதற்கு வாய்ப்பளித்ததை மிகக் கௌரவமாகக் கருதுகிறார்கள். ஆகவே அதன் இறுதிப்
போட்டியில் வெல்லும் அணியின் தலைவருக்கு அணிவிப்பதை அவர்கள் கலாச்சார ரீதியான மரியாதையாகக்
கருதுகிறார்கள் என்று இஸ்லாமிய தத்துவத்துறைப் பேராசிரியர் டாக்டர் முஹம்மது பெய்க் விரிவாக விளக்கமளித்து
இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஒன்றையும் ஆக்கப்பூர்வமாக யோசித்துப்
பழக்கமில்லாத மங்குனிகள் இப்படி எல்லாவற்றையும் பற்றி வாந்தி எடுப்பது உலகம்
முழுக்க வழக்கமாகிவிட்டது.
லியோனல் மெஸ்ஸியே
இப்படியான அவதூறு கற்களை எல்லாம் வலியோடு எதிர்கொண்டு தன் கால்களில் அல்லாடும்
கால்பந்துகளை உதைத்து விளையாடுவது போல உதைத்து
உதறிவிட்டு வந்துதான் இன்றைக்கு கத்தாரில் உலகக்கோப்பை கிண்ணத்தை நெகிழ்ச்சியுடன்
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்.
இதே கத்தார் உலகக்
கோப்பையின் முதல் சுற்று ஆட்டத்தில் சவூதி அரேபியாவிடம் அர்ஜென்டினா தோற்றபோது
அர்ஜெண்டினாவின் கால்பந்து கடவுள் டிகோ மரோடனாவின் மகன் கருத்து கந்தசாமி ஜூனியர்
மாரோடோனா கடுங்கோபத்துடன் “தோற்றது பைத்தியம்” என்று வசைபாடியபோது “எங்களை
நம்புங்கள் நாங்கள் மிகச் சிறந்த ஆட்டத்தை அர்ஜென்டினா மக்களுக்கு பரிசாகத்
தருவோம்” என்று மெஸ்ஸி தன்னம்பிக்கையோடு பத்திரிகைகளுக்கு
பேட்டி கொடுத்தார். சவூதி அரேபிய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த அல்தாவ்சாரி
சம்மர் ஷாட் கோல்-ஐ அத்தனைச் சுலபமாக எதேச்சையானது என்று சொல்ல முடியாது அது
மதிப்புமிக்க கோல் என்று மெஸ்ஸி அதற்குரிய மரியாதையை அளித்தார். ஒரு திறமையாளனின்
மதிப்பு இன்னொரு திறமையாளனுக்குத்தான் தெரியும். அல்தாவ்சாரி என்கிற
திறமையாளனுக்கு அன்று மெஸ்ஸி அளித்த மரியாதை
இன்று அரேபியர்கள் அணியும் மதிப்புமிக்க பிஷ்ட் வழியாகத் திருப்பி அவருக்கு
அணிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகக்கோப்பை ஆட்டங்களில்
இப்படியான அதிர்ச்சிகரமான தோல்விகள் இதற்கு முன்பும் நிகழ்ந்திருக்கின்றன. இதே
கத்தார் உலகக்கோப்பையின் மற்றொரு ஆட்டத்தில் பிரான்சை செனகல் அணி தோற்கடித்து
அதிர்ச்சி அளித்திருக்கிறது. செனகளிடம் தோற்ற பிரான்ஸ்தான் இன்று இறுதிச்சுற்று
வரை வந்திருக்கிறது. ஜப்பான் பலம் மிக்க ஜெர்மனியை தோற்கடித்தது. மொராக்கா அணி
போர்ச்சுக்கல்லையும், பிரேசில் அணியை குரேஷியா அணியும் வெல்லும் என கனவில் கூட
நம்பியிருக்க மாட்டார்கள். கால்பந்து வரலாற்றில் இப்படியான அதிசயங்கள் நடந்து
கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் அர்ஜென்டினா கடந்த
பத்தாண்டுகளில் எங்கு தோற்றாலும் மெஸ்ஸியின் தலையை உருட்டுவது ஒன்றுக்கும்
பயன்படாத உதாவாக்கரைகளின் பொழுது போக்காக
இருக்கிறது.. மெஸ்ஸி அவர்களுக்கு தன் இடது காலால் பதில் சொன்னபடி இருக்கிறார்.
கடந்த உலகக் கோப்பை
ஆட்டங்களில் அர்ஜென்டினா தோற்ற போதும் மற்றொரு புகழ் பெற்ற போட்டியான கோபா
அமெரிக்க கோப்பைக்கான போட்டியில் சிலியிடம் தோற்றபோதும் அவதூறான விமர்சனங்கள்
வீசப்பட்டிருக்கின்றன. கால்பந்து என்பது அணியின் ஒட்டுமொத்த திறனின்
அடிப்படையில் அதன் வெற்றி தோல்வி இருக்கும் அதில் தனிப்பட்ட வீரரின் ஆட்டம் ஒரு
பெரிய அதிசயத்தை எப்பொழுதும் நிகழ்த்த முடியாது. அதற்கு பெரிய உதாரணம்.
போர்ச்சுக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அவர் உலகின் எந்த வீரருக்கும் சமமாக
கருதப்படும் திறமைசாலி ஆனால் அவரால் போர்ச்சுக்கல் அணியை ஒட்டு மொத்தமாக தலையில்
சுமந்து செல்ல முடியாது. உலக விமர்சகர்கள் யாரும் அதற்காக அவரைக் குறை சொல்வதில்லை.
ஆனால் மெஸ்ஸி மீண்டும் மீண்டும் குதறப்பட்டார்.. மகத்தானவர்கள் தங்கள் பதில்களை
தங்கள் செயல்பாடுகள் வழியாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கு மெஸ்ஸியும் ஒரு
உதாரணம்.
இந்த ஆண்டின் உலகக்
கோப்பைக்கான இறுதிப் போட்டி உண்மையில் மறக்க முடியாத அற்புதமான ஆட்டம். இரண்டு
அணிகளிலுமே திறமையான ஆட்டக்காரர்கள் அவர்களின் சளைக்காத போராடும் குணம்... ஒரு பக்கம். மெஸ்ஸி என்னும் மாயாஜாலக்காரன்
இன்னொரு பக்கம் பிரான்சின் கிளியன் எம்பாபே என்னும் அபாரமான மந்திரவாதி. என இறுதி ஆட்டம்
உலகக் கோப்பையின் மகுடம் என்று சொல்லலாம்
முடிவைத் தெரிந்து
கொண்டபிறகு ஆட்டத்தைப் பார்ப்பது சற்று அயற்சி தரும் அனுபவமாக இருக்கும் என்று
நினைத்தேன். ஆனால் எத்தனை நேர்த்தியான ஆட்டம் எத்தனை முறை வேண்டுமானாலும்
திரும்பவும் பார்க்கலாம். தனி மனித சாதனைகளைவிட அணியின் வெற்றிதான் இலக்கு என்கிற
எம்பாபே- யின் ஆட்டம் கால்பந்து தொடக்க நிலை வீரர்களுக்கு ஒரு பாடம். உலகக் கோப்பை
ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனை (ஒரே நபர் ஒரு ஆட்டத்தில் மூன்று கோல் அடிப்பது) என்பது
பெரும் கொண்டாட்டமான விஷயம். அதுவும் இறுதிப் போட்டியில் என்றால் எத்தனை அளப்பரிய
சந்தோஷத்தைத் தரக்கூடியது. இதற்கு முன்னர் 1966ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் ஜியோப்
ஹர்ஸ்ட் அடித்ததுதான் இது வரையிலான சாதனையாக இருந்தது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு
எம்பாபே அடித்துதான் ஹாட்ரிக் ஆனால் அதற்குப்பின்னும் ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் ஒரு நொடியைக்கூட
வீணாக்காமல் எம்பாபே பந்தைத் தூக்கிக்கொண்டு ஓடும்போது கைத்தட்டத்
தோன்றுகிறது. ஒருவேளை கோப்பையை பிரான்ஸ் வென்றிருந்தால் இந்த டிசம்பர் 20 தேதி
அவரது பிறந்தநாளுக்கான ஈடு இணையற்ற பரிசாக இருந்திருக்கும். ஆனாலும் இது ஒன்றும் பேரிழப்பில்லை அவருக்கு
இப்பொழுது 23 வயதுதான் ஆகிறது. உடல்தகுதியை சரியாக பராமரித்தால் இன்னும் மூன்று
அல்லது நான்கு உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பு இருக்கிறது.
அதுவும் இல்லாமல் சென்ற உலகக்கோப்பையை பிரான்ஸ் வென்றது. அந்த அணியில் இடம்பெற்று
அந்த வெற்றியின் ருசியை அனுபவித்தவர்தான். அவருடைய கொண்டாட்டங்களுக்கு இன்னும்
வாய்ப்பிருக்கிறது.
மெஸ்ஸியும் எம்பாபேவும்
பிரான்சின் புகழ் பெற்ற அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மாயின் க்ளப் அணிக்காக ஒன்றாக
விளையாடுபவர்கள். இந்த வினோதம் கால்பந்து விளையாட்டில் இயல்பாக நடக்கக் கூடியது.
உலகக் கோப்பையில் அவரவர்கள் நாட்டுக்காக எதிர் எதிராக விளையாடுபவர்கள்
அதற்குப்பிறகு வெவ்வேறு தனியார் க்ளப் அணிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஒன்றாகவும்
விளையாடுவார்கள். ஒரே கிளப்பைச் சேர்ந்த இருவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில்
இடம் பெற்ற அணிகளின் தலைவர்களாக இருப்பதும் ஒரு புதுமையான செய்திதான்.
என்னுடைய
பிரியத்துக்குரிய அணி பிரேசில்தான். அவர்கள் கால்பந்தை விளையாட்டாக நினைப்பதில்லை
ஒரு கலையாகக் கருதுபவர்கள். அவர்களின் ஆட்டத்தில் ஒரு நளினம் இருக்கும் பந்தைக்
கடத்துவதில் நேர்த்தி இருக்கும். இந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் எனக்குப் பிடித்த
கோல் என்றால் பிரேசிலின் ரிச்சல்சன்
அடித்த பைசைக்கிள் கோல்தான். அற்புதமான சிலிர்க்க வைக்கும் கோல் அதே போல போலந்தின்
செஸ்னி இந்த உலகக் கோப்பையின் எனக்குப்
பிடித்தமான கோல்கீப்பர் இரண்டு அபாரமான பெனால்டி கார்னர் ஷாட்களை தடுத்து
எல்லோரையும் கொள்ளை கொண்டவர். . அனால் இருவருக்கும் இறுதி ஆட்டம் வரை வருவதற்கான
வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
எப்படி இருந்தாலும் இந்த
ஆண்டு உலகக்கோப்பை ஆட்டம் மறக்க முடியாத பல அற்புதங்களை நிகழ்த்தியது என்றால்
அதில் மிகையில்லை. அரை இறுதி ஆட்டம் நடந்த சமயத்தில் இனி சர்வதேச கால்பந்து
ஆட்டங்களில் இருந்து ஒய்வு பெறப் போகிறேன் என்று மெஸ்ஸி அறிவித்த போது அர்ஜென்டினா
மக்களைப் போல நானும் அதிர்ச்சி அடைந்தேன். அவரது நளினமான ஆட்டம் தொய்வுறாமல் அதே
தரத்தில் இருந்தது. அபாரமான உடல்தகுதியும் இருக்கிறது பிறகு ஏன் இந்த மனிதர்
இப்படியான முடிவை எடுத்தார் என்று யோசித்தேன் நல்லவேளையாக உலகக்கோப்பையை வென்ற
கையோடு அந்த முடிவை மாற்றி இனி அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று
அறிவித்திருக்கிறார். உலகக்கோப்பை இறுதி ஆட்டம் அவர் அர்ஜென்டினா அணிக்காக
விளையாடும் 98வது ஆட்டம். இன்னும்
இரண்டு ஆட்டங்கள் ஆடினால் நூறாவது என்கிற சாதனையை அவர் எளிதாக எட்டிவிட முடியும்
என்பதை யாராவது அவருக்கு நினைவுப்படுத்தி இருக்கக்கூடும்.
வழக்கம் போல் இந்த
முடிவு மாற்றத்துக்கும் யாராவது விமர்சனக் குப்பை வண்டிகளோடு காத்திருக்கலாம். அவர்
பணத்தாசை மிக்கவர் அல்லது புகழ் போதை கொண்டவர் என்றெல்லாம் விமர்சிக்கலாம். மெஸ்ஸி
இதையும் வழக்கம்போல தனது இடதுகாலால் இடறிவிட்டு போய்க்கொண்டே இருக்கும் காட்சியை
நான் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் டிசம்பர் 19ஆம் தேதி புன்னைகையோடு
கற்பனை செய்து கொண்டிருக்கிறேன்.
வசையாளர்கள் எதையும்
செய்யும் திராணியற்று விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். திறமையாளர்கள் தங்கள்
பதில்களை தங்கள் செயல்களின் வழியே தங்களுக்கான களங்களில் பதிவு செய்தபடி இருக்கிறார்கள் .
கொலுசு மாத இதழ் ஜனவரி 2023
மரகதப்புறா
-நெய்வேலி பாரதிக்குமார்
பேசும் புதிய சக்தி இதழ் நடத்திய எழுத்தாளர் ராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசுபெற்றச் சிறுகதை
கி.பி. 1838 ஆம் ஆண்டு
சல்லிவன் துரைக்காக கன்னேரிமுக்கு பெருங்கல்லு வீட்டுக்கு
எதிராக கடும் சினத்துடன் காத்திருந்தான் ஆயன். ‘வரட்டும் இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது’ முறுக்கிய மீசையும் திண்ணென்ற
தோள்களும், தேக்கு போன்ற வலுவான கைகளும் திமிறியபடி இருந்தன. கால்வளையங்கள் கூட தேவைப்பட்டால்
ஆயனுக்கு ஆயுதங்கள்தான். மஞ்சள் வண்ணம் தீட்டப்பட்ட வெண்கல அணிகலன்கள் விரலிலும்,
செவிகளிலும் பொய்யாயினும் மின்னின.
வேலா வீடு வந்து சேர்ந்தபொழுது மழை வலுத்திருந்தது. பில்லி
ஒரு நைந்து போன பழைய புடவையைத் தரையில் விரித்து அதன் மீது நடுங்கியபடி
படுத்திருந்தாள்.
“அம்மா”என்று
பில்லியின் அருகில் சென்று மெலிதாகக் குரல் கொடுத்தான் வேலா. அவனை நிமிர்ந்துப்
பார்த்ததும் பரவசமான பில்லி “எப்படி மழை கொட்டுது.. கொஞ்சம் ஒதுங்கி நின்னு வரக்கூடாது?”
என்று கடிந்தபடி தன் முந்தானையால் வேலாவின் தலையைத் துடைத்துவிட்டாள்.
வேலாவின்
கையில் இருந்த தொரட்டிக்கம்பை பார்த்ததும் பில்லிக்கு புரிந்துவிட்டது, ஆயனுக்குப்
பதிலாக தொரட்டிக் கம்பு வந்திருக்கிறது என்று....கம்பின் நுனியில் இருந்த கவைக்
குச்சியை ஆதுரமாகத் தடவினாள் பில்லி.
“வைத்தியர்
வந்தாராம்மா”
“வர்றாரு
வர்றாரு.. நமக்கும் அவரை விட்டா ஆள் இல்லே..அவருக்கும் நம்மளை விட்டா கதி இல்லே.“.
ஆட்டுக்கிடையில் மழை வெய்யிலுக்கு ஒதுங்க அமைத்திருக்கும்
குடில் போல தரையோடுத் தரையாக, இளஞ்சிவப்பு மலர்கள் பூத்த வாகை மரம் தன் கிளைகளை கவித்திருந்தது.
ஆயன் அதன் விரிந்த இலைகளுக்கு சற்றுத்தள்ளி அதேநேரம் நேர்த்தியாகத் தன்னை
மறைத்துக்கொண்டு மிக வசதியாக அமர்ந்திருந்தான். வாகை மரத்தின் இலைகளைப் பார்த்தாலே
பாய்ந்து தின்னும் பவழமல்லி அன்றைக்கு எந்தச் சலனமும் இல்லாமல் அவனருகில் அமைதியாக
நின்று கொண்டிருந்தது. ஆடுகளுக்கு பெயர் வைத்து அழைப்பதுதான் ஆயன்
குடும்பத்தினரின் வழக்கம். பவழமல்லியின் தாய்ஆடு பொன்னியை சல்லிவன் துரையோட ஆட்கள்
பிடித்துக்கொண்டு வந்துவிட்டார்கள்.
ஆயனின் வசம் இருந்தது வேலாவின்
தொரட்டிக்கம்புதான்., அருகில் வைத்திருந்த அந்தத் தொரட்டியில் கட்டி
வைக்கப்பட்டிருந்த கொக்கைச் சத்தகக் கத்தியின் கூர்மையைச் சோதிப்பதற்காக தன்
ஆட்காட்டி விரலால் தடவினான். தடம் தெரியாமல் அது விரலைப் பதம் பார்க்க.. மடி
பெருத்த ஆட்டுக்குட்டியின் காம்பிலிருந்து பால் துளிர்ப்பது போல மளுக்கென்று
இரத்தம் வெளிவந்தது.
சொரசொரத்த
பாறைகளைப் பார்த்துவிட்டால் வேலா அப்படியே நின்று தன் குழை அறுக்கும் கத்தியை கூர்
தீட்ட ஆரம்பித்துவிடுவான். ‘புல்லு கண்ட இடத்துலே வெட்டனும் கல்லு கண்ட இடத்துலே
தீட்டனும்’ என்பான் அடிக்கடி.. தேக்கை விட வலிமையான தோதகத்தி மரத்தின் கழியில்தான்
கொக்கைக் கத்தியைக் கட்டுவான். ’ஈட்டி செய்யற மரம்டா அது. நாம வளக்கறது வரையாடுங்க
எல்லாம் பணக்கார வீட்டு செல்லப்பிள்ளைங்க மாதிரி காட்டுமரத்து இலையைத்
தின்னாத்தான் பசியடங்கும் வலுவான மரத்துலதான் கழி போடனும்” என்பான் வேலா.
வரையாடு
வளர்ப்பதற்கு மலை மேல்தான் வரவேண்டும். அதுவும் பாறைகள் மேல்தான் வரையாடுகள்
பெரும்பொழுது கிடக்கும். ஒவ்வொன்றும் நூறுகிலோ வரைக்கும் கூட பெருக்கும்.
அதனால்தான் ஆயனும் வேலாவும் காடு, மலை, பாறை என்று பார்க்காமல் ஏறிவிடுவார்கள்.
அடிக்கடி களவு போகிறது என்பதால்தான் பட்டியை இந்த முறை தரையிலும் போடாமல்.
மலையிலும் போடாமல் இடைப்பட்ட முள்ளியில்
போட்டிருந்தார்கள். அப்படியும் கண்ணயர்ந்த நேரத்தில் களவாணிகள் பொன்னியைத் தூக்கிக்கொண்டு
வந்துவிட்டார்கள். சல்லிவன் துரை வீட்டில்தான் கட்டிப் போட்டிருப்பார்கள் என்று
ஆயன் யூகித்தான். துரைக்கு வரையாட்டுக்கறி என்றால் ரொம்பப் பிடிக்கும். நேரம்
கிடைத்தால் வேட்டைக்கு கிளம்பிவிடுவான். அது தெரிந்த சல்லிவனின் எடுபிடிகள்,
மீந்து போகும் மதுவுக்கும் வறுத்த கறிக்கும் ஆசைப்பட்டு பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும்
வரையாட்டை களவாடி வந்துவிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு மாதமும் இருவது முப்பது
ஆடுகளை வீடுகளில் இருந்தும் படிகளில் இருந்தும் திருடிக்கொண்டு
வந்துவிடுகிறார்கள். அதிகாரமும் ஆயுத பலமும் கையில் இருப்பதால் எவரும் அஞ்சுவதே
இல்லை. பொன்னுசாமியின் கிடையில் இருந்து கடந்த மூன்று மாதத்தில் அஞ்சு ஆடுகளை
களவாண்டு சென்று விட்டார்கள் என்று சென்ற முறை பார்த்த போது சொல்லி அழுதான். கிடை
பிடிப்பதையே விட்டுவிடலாமான்னு பாக்கறேன்.. ஆனா வேற என்ன வேலை செஞ்சு வயித்தைக்
கழுவரதுன்னு தெரியலையே அன்று அவன் புலம்பியபோது பாவமாக இருந்தது.
வாசல்ல நிற்கிற காவல்கார ஆளுங்க
கொஞ்சம் அசரட்டும் துரையின் சங்கை அறுத்துவிடுவது என்று கருவிக்கொண்டு
உட்கார்ந்திருந்தான்.. இந்த பொணந்தின்னி இருக்கற தைரியத்துலதானே கள்ளனுக ஆட்டை
அள்ளிட்டு வந்துடறானுங்க.. வேலா கூட அதெல்லாம் ஒண்ணும் பண்ணிடாதே வெள்ளைக்கார
துரைங்க ரொம்ப மோசமான ஆளுக.. அத்தனை சுலபத்துல
விட்டு வைக்க மாட்டானுங்க என்று எச்சரித்தான். வீடு நிலம் எப்படி
மத்தவங்களுக்கு சொத்தோ அது மாதிரிதானே ஆடும் நமக்கு.. அதெப்படி விடறது? இப்படி
ஆயன் பதில் சொல்லவில்லைதான் வேலா ஊருக்கு போகட்டும் ஒரு கை பார்த்துக்கலாம்
என்றுதான் அவனை அனுப்பி வைத்தான்.
அம்மாவைப்
பார்க்கத்தான் வேலா அடிவாரத்துக்கு போய் இருக்கிறான். அம்மாவுக்கு சில மாதங்களாகவே
உடல்நிலை சரியில்லை. இந்த முறை ஊருக்குப் போக வேண்டியது முறைப்படிப் பார்த்தால் ஆயன்தான்.
ஆனால் வேலா கிளம்பிவிட்டான். அவன்தான் எட்டுப் பிள்ளைகளில் கடைசிப் பிள்ளை. அம்மாவுக்கு
ஏதாவது ஒன்று என்றால் அவன்தான் கொள்ளி வைக்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம்
திசைக்கு இருவராகக் கிளம்பி கிடை பார்க்கிறார்கள். கிடை பார்க்க ஊர் ஊராகச்
செல்லும் போது வீட்டில் உள்ளவர்களில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் குறிப்பிட்ட
நாட்கள் கழித்து கிடையில் இருந்து கிளம்பி, ஊருக்கு யாராவது ஒருவர் வருவதுதான்
வழக்கம் ஆனால் அம்மாவின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருப்பதாக ஊரில் இருந்து
மாட்டுக்கிடை ஓட்டி வந்த பொன்னுசாமியை நேற்று எதேச்சையாக முள்ளியில் பார்த்தபொழுது
அவன் சொன்னதால் வேலா கிளம்ப வேண்டியதாயிற்று. ஆயன் எப்பொழுதும் வைத்திருக்கும் கவைக்குச்சிக்
கட்டி இருக்கும் தொரட்டியைத் தன் சார்பாக வேலாவிடம் கொடுத்துவிட்டு அவனுடைய
கொக்கைத் தொரட்டியை வாங்கிக் கொண்டான். பெற்ற தாய் இறந்தாலும் கிடையை விட்டுவிட்டு
ஒரே நேரத்தில் இரண்டு பேர் போக முடியாது. நினைக்கும்போதே துக்கம் தொண்டையை
அடைத்தது ஆயனுக்கு.
ஆயனின்
அத்தனை கேள்விகளுக்கும் பில்லிதான் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருப்பாள்.
ஆயனுக்கு வலுவும் அதிகம் அறிவும் அதிகம் என்பாள் அடிக்கடி. அவளுக்கு எல்லா
பிள்ளைகளும் ஒன்றுதான் என்றாலும் ஒரு தோழியைப் போல அவளுடன் உரையாடிக் கொண்டு
இருப்பவன் ஆயன்.
வாகைமரத்தின் கிளையில்
மரகதப்புறா ஒன்று தனது கூட்டில் குஞ்சுகளோடு உட்கார்ந்திருந்தது. அது மரகதப்புறா
என்பதை பில்லிதான் ஒருமுறை அடையாளம் காட்டிச்சொன்னாள். அதன் இறகுகள் பசேலென்று மயில்தோகை
நிறத்தில் இருந்தது. அம்மாவுடன் பார்த்த அன்றைக்கு அது குஞ்சுகளோடு வாய் வைத்து
கொஞ்சிக் கொண்டிருந்தது.
“அது
கொஞ்சலைடா.. பால் கொடுக்குது.. மனுசங்க மாதிரியே அதுக்கும் குஞ்சுக பொறந்தவுடனே
அதுங்க தொண்டையிலே பால் சுரக்கும்.. அதைத்தான் குஞ்சுக வாய் வச்சி குடிக்குதுங்க..
குஞ்சுக தானா இரையை கொத்தி சாப்பிடற வரைக்கும் தாய்ப் பறவை தானியம்
சாப்பிடாதுங்க.. தொண்டையிலே தானியம் அடைச்சிக்கிட்டா பால் சுரக்காதில்லே.. அது
வரைக்கும் தாய்ப்பறவை பட்டினிதான்”
ஆட்டுப்பாலுக்கும்,
வயலுக்கு உரமாகிற ஆட்டுப்புழுக்கைக்கும் கிடைக்கும் கேழ்வரகோ, கம்போ கஞ்சியாக
மாறும் நாள் அவர்களுக்குத் திருவிழாதான். ஆனாலும் அம்மாவுக்கு மிச்சம் இருக்காது.
எல்லா பிள்ளைகளும் சாப்பிட்ட பிறகு சட்டி வெறுமையாகத்தான் இருக்கும். தழை பறிக்கப்
போகும்போது கிடைக்கும் முருங்கைக் கீரையையோ, அகத்திக் கீரையையோ கூட்டாக்கி
சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவாள். ஒரு நாளாவது அவளுக்கு ஒரு குவளைக்கஞ்சியை ஆசைத்தீர
குடிக்கவைத்துப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இன்றுவரை நிறைவேறவேயில்லை.
“ஏம்மா
உனக்கு பில்லின்னு பேரு வச்சாங்க?”
“அது
நம்ம குலசாமி பேருடா.. என்னிக்காச்சும் ஒருநாளு உங்களை எல்லாம் அங்க கூட்டிட்டுப்
போகணும்னு ஆசை.. ஆடுங்க வாலைப் பிடிச்சுக்கிட்டுத்தான் நீங்க எல்லாம் நிக்க
கத்துக்குவீங்க.. உங்களுக்கு எல்லாம் நடக்க தெரிஞ்சிட்டாலே போதும் கெடைக்கு
அனுப்பிடுவாரு உங்க அப்பா.. அப்புறம் எங்க கோயிலுக்குப் போறது? எட்டு பிள்ளைக...
வயித்தைக் கழுவனும்லே”
சல்லிவன் துரையைப் பார்க்க நாலைந்து பேர் வந்தார்கள். வேதக்கார
சாமியார் சல்லிவனிடம் வந்து நெஞ்சின் குறுக்கேயும் நெடுக்கேயும் கைகளால் ஏதோ
செய்தார். அருகில் இருந்த இரண்டு பேர் துரையின் கைகளைப் பிடித்து மிகச் சோகமாக
முகத்தை வைத்துக் கொண்டு ஆறுதல் சொல்லுவது போல எதையோ சொன்னார்கள். சல்லிவனின்
கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. பிறகு சாமியார் கைகளை முன்பக்கம்
கட்டியபடி தலை குனிந்தவாறே சப்தமாக பிரார்த்தனை செய்தார்.
உடன்
வந்த பட்டு வேட்டி, பட்டுச்சட்டை, சரிகை தலைப்பாகை அணிந்த உள்ளூர் பெருந்தனக்காரர்
தாத்தநாடு ஊர் தலைக்கட்டு ராமய்யா தழுதழுக்கும் குரலில் “மாட்சிமைப் பொருந்திய
கோயம்புத்தூர் ஜில்லா கலெக்டர் சல்லிவன் பிரபு,.. உங்கள் உறவுகளின் இழப்பை எப்படி ஈடு செய்வது என்று
புரியவேயில்லை. மேன்மை பொருந்திய தங்களது துணைவியார் மேடம் ஹென்ரிட்டா கடவுளின்
கருணைப் பாதங்களில் அடைக்கலமான ஒரு வாரத்திற்குள் தங்களது மகள் ஹாரியட்டையும்
இழந்துவிட்டீர்களே.. இந்த ஒத்தகமந்து மக்களுக்கும் ஊருக்கும் எத்தனையோ நல்ல
காரியங்களை செய்து தந்திருக்கிறீர்கள். தாங்கள் அமைத்துத் தந்த சாலையில்தான்
நாங்கள் சிறுமுகையில் இருந்து குதிரை வண்டியில் வசதியாகப் பயணித்து
வந்திருக்கிறோம்”
சல்லிவன்
குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.
“கடவுளே ஏன் இவருக்கு
இப்படி ஒரு தீராத துயரத்தைக் கொடுத்தாய்?. மாட்சிமைப் பொருந்திய பிரபு,,.. தாங்கள்
வெட்டி வைத்த ஏரியின் நீரை இந்தச் சிறிய செம்பில் எடுத்து வந்திருக்கிறேன். எங்களைப்
பொறுத்த வரை அது புனித நீர். அவர்களின் கல்லறைகளில் தெளியுங்கள்” சல்லிவனின்
உதவியாளர் ஆர்தர் அதை வாங்கிக் கொண்டார்.
அப்பொழுது சல்லிவனின் வயதான
வளர்ப்புத் தாயார் மார்க்கரெட்
உள்ளிருந்து வெளியில் வந்தாள். வேதக்கார சாமியைப் பார்த்ததும் கண்ணீர் சடசடவெனப்
பெருகியது அவளுக்கு
“சேசுவே.. எனக்கு ஏன்
இப்படி ஒரு கொடுமை ஃபாதர்.. இத்தனை வயதில் நான் எதுக்கு இந்த உயிரைச்
சுமக்கனும்?.. அழுகிப் போன கனி நானிருக்க.. இளம் பிஞ்சுகளை எதுக்கு எங்களிடமிருந்து
பறிக்கனும்.. ”
“அவர்கள் கர்த்தரின்
ஆத்மாவுக்குள் நித்திரை கொண்டார்கள். அதுதான் கர்த்தரின் விருப்பமாக இருந்தால்
நாம் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் அம்மா”
ஆயனுக்கு அவர்கள் பேசியது
பெரும்பாலும் புரியவில்லை ஆனால் உணர முடிந்தது அம்மாவின் நினைவு வந்தது. ஒரு கணம்
மனம் தடுமாறியது. குலசாமி கண் முன் வந்து தன் அகன்ற விழிகளை உருட்டி உருட்டி
அதட்டுவது போலத் தோன்றியது. ஏற்கனவே இரண்டு இரண்டு உயிர்களை இழந்து தவிக்கும்போது எப்படி
இன்னொரு பலி கொடுப்பது? தாயிருக்கையில் மகனைக் கொல்வது தர்மமா?
அம்மா பில்லி என்னை ஏன்
இந்த இக்கட்டில் நிறுத்தினாய். இல்லாதப் பட்டவர்களின் கண்களுக்கு முன்னால் மட்டும்
ஏன் எப்பொழுதும் நியாயத்தின் தராசு ஆடிக் கொண்டே இருக்கிறது? உலகின் மிக அதிகமான
பாரம் கொண்ட கருணையை நாங்கள் மட்டும்தான் சுமந்து கொண்டே இருக்க வேண்டுமா? அம்மா
பில்லி.. இரக்கத்தின் தேனடையை ஏன் சமமாக பிரித்துத் தர மறுக்கிறாய்?
‘மே’ திடீரென்று ஒலித்த
குரல் வந்த திசையைப் பார்த்தார் சல்லிவன். அங்கே பொன்னி கட்டப்பட்டிருந்தாள். கோபமான
சல்லிவன் ஆங்கிலத்தில் “யார் இந்த வேலையைச் செய்தது? அதை அவிழ்த்துவிடுங்கள். மடியைப்
பார்த்தால் தெரியவில்லையா? பால் கொடுக்கும் தாய் அல்லவா அது? எவ்வளவு நல்லது
செய்து என்ன பயன்? எத்தனைத் தாயை, குட்டியிடமிருந்து பிரித்தேனோ இன்றைக்கு
மனைவியையும் மகளையும் இழந்தேன்” மறுபடியும் அழுதார்.
ஆர்தர் பயந்து ஒடிப்போய் பொன்னியை
அவிழ்த்துவிட்டான். அது ஏற்கனவே குட்டி இருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டது போல
பவழமல்லி இருக்கும் பக்கம் பாய்ந்து ஒடி வந்தது. சில பேருக்கு கருணையை தண்டனைகள் வழியே பில்லி கற்பிக்கிறாள்
போலிருக்கிறது.
ஆயன் வாகை மரத்தை
நிமிர்ந்து பார்த்தபடியே அமர்ந்திருந்தான். அவன் நினைத்தது போலவே மரகதப்புறாவின்
குஞ்சுகள் தாயின் அலகில் வாய்வைத்து பாலருந்தத் தொடங்கின.
ஊரில் தொரட்டிக்கழியைப் பிடித்தபடியே படுத்திருந்த பில்லி நினைவு
தப்பினாலும் “ஆயன் இன்னுமா வரலை?” என்று வாசல் தட்டியைப் பார்த்தபடி முனகினாள்.
அவள் கண்களில் அவளது உயிர் பிடிவாதமாக ஒட்டிக் கொண்டிருந்தது.... ஒருவேளை அடுத்த
முறைக்கு ஆயன் வரட்டும் என்று காத்திருக்கிறதோ என்னவோ..?
“
.
வெறியாட்டு (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை) ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...