விமர்சனங்கள் அணிந்துரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனங்கள் அணிந்துரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூன், 2022

ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா
                              
  - மலையாள மூலம் ட்டி.டி.ராமகிருஷ்ணன்
                                - தமிழில் குறிஞ்சிவேலன்
                                                பக்கம்: 352, விலை: 275
                                                உயிர்மை பதிப்பகம்

                ஒரு பிரம்மாண்ட உலகின் பிரம்மிக்கத்தக்க சகல வெளிகளிலும் பயணிக்கும் அனுபவத்தை ஒரு நாவல் தரமுடியுமா என்ன? ட்டி.டி.ராமகிருஷ்ணன் தனது ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா நாவல் மூலம் அப்படியான ஒரு அனுபவத்தை தந்திருக்கிறார். ஏற்கனவேஆல்ஃபா' நாவல் மூலம் மலையாள மற்றும் தமிழ் வாசகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்த ராமகிருஷ்ணன், பின்நவீனத்தின் எல்லையற்ற சுதந்திர வெளிகளில் பசிகொண்ட பறவையாக பறந்து, பறந்து வேட்டையாடுகிறார். அவரது கூர்ந்த அலகில் வரலாறு, கணிதம், இலக்கியங்கள், இதிகாசம், அரசியல் , பல்வேறுபட்ட மனித கலாச்சாரம் என  எதுவுமே தப்பவில்லை.
                வாசித்தலின்போது கணநேர அலட்சியத்தையும் யோசிக்க முடியாத வகையில் நாவல் கனமான விஷயங்களால் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. கணித மேதை ஹைபேஷியா துவங்கி துபாக் அமரு, ஈராக்கின் சித்திரவதைக் கூடம் அபுகிரைப், பால் ஏர்தோஸ், ஃபெர்மாட்டின் இறுதி தேற்றம், மைக்கேல் ஏஞ்சலோ, சதாம் உசேன், பெருவின் அரசியல் சூழல் என எட்டு திக்கும் பாய்ச்சல் நிகழ்த்தும் ராமகிருஷ்ணன், நரபோஜிகள் பற்றிய விபரங்கள், வர்ணனைகளை தரும்போது வாசிப்பவர்களை திடுக்கிட வைக்கிறார்.
                ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதுவதற்கும் முன் ஒரு மிகப்பெரிய தேடலை வேட்கையோடு நிகழ்த்தியிருக்கிறார். நாவலின் கதை இதுதான் என சுருக்க முயல்வது நாவலுக்குச் செய்யும் அநீதி என்றே படுகிறது. புனைவும் உண்மையும் பின்னிப் பிணைந்து களிநடனம் புரிகின்றன. இதில் எது உண்மை எது கற்பனை என்று தெரியாத அளவு அவரது எழுத்துத் திறன் ஒரு மர்ம குகைக்குள் நம்மை இட்டுச் செல்கிறது. பலசமயம் ராமகிருஷ்ணனின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தளர்ந்து போய்விடுவதும் நடக்கிறது.
                பதினெட்டாம் கூட்டத்தார்கள் என்கிற வினோத வம்சாவழியினர்  விசித்திரமான சடங்குகள், கட்டுப்பாடுகளோடு இருந்தனரா?.. கோராப்பாட்டன் என்பவர் யார்? மர்மயோகியா? மாந்த்ரீகனா?கடவுளா என்பதை எல்லாம்  அனுமானிக்க முடியாதபடி அந்த கதாபாத்திரத்தை நாவல் முழுக்க பேசப்படும்படி அல்லது வாசிப்பவர்கள் உள்ளத்திலிருந்து அழிக்க முடியாதபடி வெற்றிகரமாக செதுக்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் வாசிக்கின்றவர்களே கூட இட்டிக்கோராவைப் பற்றிய ஆய்வில் இறங்கவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது ராமகிருஷ்ணனின் பாத்திர படைப்பு.
                எங்கோ பிறந்த ஹைபேஷியாவையும், இட்டிக்கோராவையும் மிக சாமர்த்தியமாக ஒரு புள்ளியில் இணைக்க முயற்சிக்கிறார். சமீபத்தில் கனடா வாழ் தமிழ் எழுத்தாளர் .முத்துலிங்கம் மரபணு ஆய்வு மையம் ஒன்றில் தனது மூதாதையர் பற்றிய மரபணு வரைபடத்தை டி.என். ஆய்வு மூலம் பெற்றதாக செய்தியினை அனைவரும் அறிந்திருக்கலாம். ராமகிருஷ்ணன் தனது படைப்பாக்கம் மூலம் கேரள சிந்தனை மரபொன்றை அலெக்ஸாண்ட்ரியாவோடு தொடர்புப்படுத்த முயல்கிறார். கணிதம், வரலாறு ஆகிய இரண்டையும் சமதூரத்தில் வைத்துக்கொண்டு அனாயசமாக இந்த நாவலை தான் எண்ணிய இலக்கை நோக்கி நடைபோடுகிறார்.
                அந்தந்த தேசத்து கலாச்சாரம், இடங்கள் பற்றிய தெளிவு, ஆடைகள், உணவு வழக்கங்கள் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து நெய்திருக்கிறார். கேரளம், ஈராக், பெரு, அமெரிக்கா, ரோம் என்று பயணிக்கும் இந்த நாவலின் களம் தமிழுக்கு மிகவும் புதியது.
                இந்த நாவலை மொழி பெயர்க்கத் துணிவது ஒரு சித்திரவதைக் கூடத்தில் தானே தன்னை அடைத்துக்கொளவது போன்ற அவஸ்தை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் இதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு நாவலுக்கு நிகரான உழைப்பை சுரண்டக்கூடியது. போகிற போக்கில் இதனை மொழிபெயர்த்துவிட முடியாது. சுயபடைப்பொன்றை புனைவதற்கும் மேலான கவனமும், உழைப்பும் தேவைப்படுகிற புதினம் இது. குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்புப் பணி அசாத்தியமானது. மன உறுதி இல்லை என்றால் எந்த நேரத்திலும் இந்த முயற்சியை பாதியிலேயே நிறுத்திவிட நேரும் அபாயம் கொண்டது இதன் தகவல் திகைப்புகள். குறிஞ்சிவேலனின் அசாத்தியமான அற்புதமான மொழிபெயர்ப்பு தமிழுக்கு ஒரு அருமையான படைப்பிலக்கியத்தை பரிசாக தந்திருக்கின்றது.
                இதன் மொழிபெயர்ப்புப் பணியை சரிபார்க்க ராமகிருஷ்ணன் நேரில் குறிஞ்சிவேலன் அவர்களின் இல்லம் வந்து தங்கியிருந்து அதனை முனைந்து செய்துகொண்டிருந்த வேளையில், அவரை சந்தித்தது நினைவுக்கு வருகிறது. அந்த அர்ப்பணிப்பு இந்த நாவலை நமக்கு அச்சு அசலாக தந்திருக்கிறது.
                இத்தனை பார்த்து, பார்த்து செதுக்கிய நாவலில் சில நெருடல்களும் இல்லாமலில்லை. ஃபெர்மாட்டின் இறுதி தேற்றத்தை நிருபிப்பதில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட மேரி சோபி ஜெர்மெயின் பற்றி சில தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன. பாரிசில் அன்றிருந்த அரசியல் சூழலில் பெண்களுக்கு கணிதம், மற்றும் அறிவியல் போன்ற துறைகளில் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனால் இகோல் தொழில்நுட்பக்கல்லூரியில் சோஃபிக்கு கணிதம் படிக்க இடம் கிடைக்க வில்லை என்பதுவரை சரிதான். ஆனால் வீட்டிலிருந்தே ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கும் பாடத்திட்டத்தில் சேர்ந்து பின் பாதியில் படிப்பைவிட்ட எம். லீ ப்ளாங்க் என்பவர் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டது போல மாணவி அல்ல அவன் ஒரு மாணவன். ( ப்ளாங்க் மாணவி எனில் சோபிக்கே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமே.. சோபியின் தந்தை அம்புரோஸ் ஃபிரான்காயிஸ் அரசின் அதிகாரம் மிக்க நிர்வாகக்குழுவில் இருந்தவர். ஆனால் அவரால் கூட அந்த சட்டத்தை மீறமுடியாது)
                ப்ளாங்க் பாரிசைவிட்டுச் செல்லும்போது கல்லூரிக்குத் தெரிவிக்காமல் சென்றதால் அவனது பெயரில் கணித ஆய்வுகட்டுரைகளை அனுப்பினார் சோஃபி. கல்லூரிப் பேராசிரியரும், பிரான்சின் கணித மேதையுமான லாரிஞ்சே கட்டுரைகளை வாசித்துவிட்டு ப்ளாங்க்கின் அறிவுத்திறன் அத்தனை மேன்மையானது இல்லையே என்று சந்தேகப்பட்டு கல்லூரிக்கு நேரில் வரும்படி கடிதம் அனுப்பினார். வேறு வழி இல்லாமல் சோஃபி அப்பொழுதுதான் தான் ஒரு பெண் என்பதை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. அது சட்டப்படி குற்றம் என்பதால் தொடர்ந்து அவ்வாறு செய்ய அனுமதிக்க முடியாது என லாரிஞ்சே மறுத்துவிட்டார். ஆனாலும்   அவரது ஆய்வுக் கட்டுரைகள் நுட்பமானவை  என்பதால் தனக்கு தொடர்ந்து அனுப்பும்படியும், கணிதம் தொடர்பான சோஃபியின் ஆய்வுகளுக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தார். நாவல் ஆசிரியர் குறிப்பிட்டது போல சோஃபி தன் அழகைக் காட்டித்தான் அவருடனான நட்பைப் பெற்றார் என்பது சுத்த அபத்தம்.
                அன்றைய நாளில் பெண்கள் அதிகம் நடமாட முடியாதபடி பாரிசில் கலவரச்சூழல் இருந்தது. இருவருக்குமான தொடர்பு அதிகமானது ஆய்வுதாள்களின் வழியில்தான். லாரிஞ்சேவுடனான அறிமுகம் சோஃபிக்கு மாபெரும் அங்கீகாரம் எதையும் தரவில்லை. அவரால் ஒரு சான்றிதழைக்கூட இகோல் கல்லூரியில் இருந்து சோஃபிக்கு பெற்றுத்தர இயலவில்லை.
                ஜெர்மானிய கணிதமேதைகாஸ்' (GAUSS) என்பவர்தான் சோஃபியின் கணிதத்திறமையை வியந்து, அவருக்கு காடிங்டன் பல்கலைக்கழகத்தில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கவேண்டும் என பெரிதும் முயற்சித்தார்.   காஸ்-இன் முயற்சியின் காரணமாக சோஃபிக்கு  பிரான்சின் புகழ் பெற்ற இன்ஸ்டியூட் ஆஃப் அகாடமி அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அந்த அமைப்பின் முதல் பெண் உறுப்பினர் சோஃபியாதான். இதைத்தவிர அவருக்கு எவ்வித கௌரவமும் அவர் உயிருடன் இருக்கும் வரை வழங்கப்படவில்லை.
                  திருமணமே செய்துகொள்ளாமல் கணித ஆய்வுகளிலேயே தனது வாழ்வின் எஞ்சிய நாட்களை செலவிட்ட சோஃபியா இறுதிகாலத்தில்  புற்று நோயால்  மரணமுற்றார். அவர் இறந்து 6 ஆண்டுகளுக்குப்பிறகுகாஸ்'-ன் கடுமையான முயற்சிகளால் காடிங்கன் பல்கலைக்கழகம் சோஃபியாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இத்தனைக்கும்காஸ்' ஒரு முறை கூட சோஃபியை நேரில் சந்தித்தது இல்லை. வெறும் கடிதத் தொடர்புகள்.. அதுவும் கணித ஆய்வுகள் சம்மந்தப்பட்டவையே.. ஆக சோஃபி கவர்ச்சியால் தன்னை முன்னிலைப்படுத்தினார் என்பது அவரின் திறனை சிறுமைப்படுத்துவதாகும். எத்தனை பெரிய மேதையாக இருந்தாலும் அவர் பெண்தானே அவர்எதையும் அப்படித்தான் பெற்றிருப்பார்'என்கிற எண்ணம் பிற்போக்கானது.
                ரோம் சாம்ராஜ்யத்தின் ஹைபேஷியா, ஹங்கேரியின் ஏர்தோஷ், பிரான்சின் ஃபெர்மாட் மற்றும் மேரி சோஃபி என உலகின் பல்வேறு கணித ஆளுமைகளை நாவலில் கதாபாத்திரங்களாக உலவவிட்ட ராமகிருஷ்ணன்.. இந்தியாவைப் பொருத்தவரை இட்டிக்கோராவை மட்டுமே முன்னிறுத்துவது ஆச்சர்யமளிக்கிறது. ஒரு ஜனரஞ்சக திரைப்படத்தில் எல்லாப்புகழும் கதாநாயகனுக்கே என்பதுபோன்ற முயற்சி. அது படைப்பாளியின் உரிமை எனக்கூட சொல்லலாம்.. ஆனால் இந்த நாவல் உண்மையையும், வரலாற்றையும் பிணைத்து சொல்கிறது எனவே அந்த கண்ணோட்டத்தில் இதனை வாசிக்கும் போது இது ஆபத்தான உத்தி.. இந்தியாவை பொருத்தவரை ஆரியபட்டாக்கள், வராஹமிரா, பிரம்மகுப்தா, பவுலரி மல்லானா, ஸ்ரீதராபாஸ்கராக்கள், இராமானுஜர், எஸ். எஸ். பிள்ளை, காப்ரேகர், சகுந்தலாதேவி வரை ஒரு நீண்ட கணித பாரம்பரியம் இருக்கிறது. இராமனுஜரை ஒரு சில வரிகளில் கடந்து செல்கிறார். பாஸ்கராவின் லீலாவதியில் ஒரு செய்யுளை பயன்படுத்தி இருக்கிறார். மற்றவர்களைகவனமாக' மறந்துவிடுகிறார். ஆனால் இந்த நாவல் அவர்களைப் பற்றி எல்லாம் சொல்ல கிடைத்த அபூர்வமான களம்.
                நாவலில் ஏர்தோஷ் இளம்பெண்களை Epsilons என்று தனது தனிப்பட்ட மொழியில் அழைக்கும் பழக்கம் உள்ளவரென முதலில் அறிமுகம் செய்கிறார். அவ்வாறே மொறிகாமியை அழைக்கவும் செய்கிறார். அடுத்த சில பக்கத்தில் வகுப்பறையில்நீ ஆண் என்றல்லவா நினைத்தேன்' என ஆச்சர்யத்துடன் கேட்கிறார். அப்படியானால் அதற்கு முந்தைய பக்கங்களில் Epsilon என அழைப்பது முரண் இல்லையா? அதுபோல பொறிஞ்சு பாதிரியாரின் பெயர் குழப்பமும் உண்டு. ஒரு வேளை வாசித்தலின் போது ஏற்படும் குழப்பமாகவும் இருக்கலாம்.
                ஒரு நாவலை எழுத ராமகிருஷ்ணன் எத்தனை பிரயாசைப் படுகிறார் என்பது நாவலின் ஒவ்வொரு வரியிலும் புலனாகிறது. ஆலிஸின் அற்புத உலகம் போல எத்தனை முறை நுழைந்தாலும் பிரம்மிப்பூட்டுகிறது. இந்திய நாவல் இலக்கியத்தில் இது குறிப்பிடத்தக்க முயற்சி.. அவரது அடுத்த நாவலை பரபரப்புடன் மனம் எதிர்நோக்குகிறது..
                                                                                               
               
               
               
                 

                

திங்கள், 27 ஜூன், 2022

 

‘கண்ணுக்குத் தெரியாத காற்று ‘ நூலுக்கான எனது முன்னுரை

             


   ‘இடம்’அல்ல அவர்களின் இடம் ...

     அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கும் சிவபெருமான் தனது இடப்பாகத்தை, சக்தியாக விளங்கும் பரமேஸ்வரிக்குத் தந்ததாக நாம் புராணங்களில் படித்திருக்கின்றோம். உடலின் பாதியையே அவர் தந்து, பெண்ணினத்திற்கு மாபெரும் மரியாதையை அளித்திருக்கிறார் எனவே இந்த ஒட்டு மொத்த சமூகமும் அவ்வாறே பெண்ணினத்தை மதிக்க வேண்டும் என்பதே இந்த புராணக்கதையின் உள்ளடக்கம். ஆனால் உடலின் இடது புறத்தின் உறுப்புகள் அனைத்தையும் இயற்கையே ஒப்பீட்டு நோக்கில் வலது புறத்தைவிட பலம் குன்றியே வைத்திருக்கிறது. நாம் இயல்பிலேயே இடதுபாக உறுப்புகளை அலட்சியத்தின் குறியீடாக கவனப்படுத்துகிறோம். உதாரணமாக அவர் என்னை இடதுகையால்தான் ஆசீர்வதித்தார் என்று ஒருவர் குறிப்பிட்டால் அதன் பொருள் அவர் வெறுப்போடு அல்லது விருப்பமின்றி அங்கீகரித்தார் என்றுதான் அர்த்தப்படுத்தப்படுகிறது. மனிதர்கள் கால் மீது கால் போட்டு அமரும்போது கூட பெரும்பாலும் இடது காலின் மீது வலது கால் அழுத்த, இடது கைமீது வலது கை விழுமாறுதான் அமர்கிறோம். ஆக பெருந்தன்மையாக இடமளித்த சிவன் கூட இடது பாகத்தைத்தான் பெண்ணுக்குத் தந்திருக்கின்றார்.

     சமூகத்தில் பெண்ணின் நிலையும் கூட அவ்வாறேதான் இருக்கிறது. உண்மையில் அவர்கள் தாங்கள் அழுத்தப்பட்ட இடத்திலிருந்து, அலட்சியப்படுத்தப்பட்ட உதாசீனங்களிலிருந்துதான் தாங்களாக வெடித்துக் கிளம்ப வேண்டியிருக்கிறது. உலகம் முழுக்க ஜனநாயகம் செழித்து, தழைத்தோங்குவதாக முழங்கும் தேசங்களில் கூட பெண்கள் தங்களுக்கான நியாயமான உரிமைகளை போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அப்படியான போராட்டங்களை முன்னெடுத்தவர்கள், வழி நடத்திய பெண்கள் தங்களது சுயநலத்துக்காக இல்லாமல் முழுக்க, முழுக்க சமூக நலன் சார்ந்தே இயங்கி இருக்கிறார்கள் என்பது அவர்கள் மீதான மரியாதையை மேலும் உயர்த்துகிறது. யதார்த்தத்தில் சுயநலம் சாராமல் பொது நலன் இல்லை என்னும் கூற்று சமூகத்தில்  ஒரு அங்கீகரிக்கப்பட்ட பண்பாகவே இருக்கிறது. ஆனால் பெண்போராளிகள், பெண் சமூக செயற்பாட்டாளர்கள் பணியில் பெரும்பாலும் அந்தக் கூற்று அர்த்தமற்று போயிருப்பதைக் நான் கவனித்திருக்கின்றேன். அவர்களின் இயல்பான தாய்மையுணர்வு எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராத அர்ப்பணிப்புத்தன்மைக் கொண்டது. அந்தத் தன்மைதான் இந்தக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது. உலகம் முழுக்க பெண்போராளிகள், பெண் சமூக செயற்பாட்டாளர்களின் வலி மிகுந்த போராட்டங்கள் நீர் மேல் எழுத்து போல் மறைந்தே இருக்கின்றன. எனவே அவற்றை ஓரளவேயாகிலும் வாசிப்பது, வாசிக்க வைப்பது நம் கடமை என்றே தோன்றியதன் விளைவே இந்த நூல்.

     இந்தக் கட்டுரைகளை தொடராக வெளியிட அனுமதித்த ஊக்குவித்த ‘ கிழக்கு வாசல் உதயம்’ திங்களிதழின் ஆசிரியர் திரு உத்தமசோழன் அவர்கள் என்றும் என் நன்றிக்கு உரியவர். அவர் அந்த பத்திரிகையைத் துவங்கிய காலக் கட்டத்தில் இந்தத் தொடரை எழுத என்னை அனுமதித்தார். இதிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் ‘கிழக்கு வாசல் உதயத்தில்’ வெளியானவை. ஒரு சில கட்டுரைகள் தமிழ் இந்து நாளிதழ் மற்றும் அம்ருதா, தாமரை. காக்கைச் சிறகினிலே. திருப்புமுனை ஆகிய  சிற்றிதழ்களில்  பிரசுரமானவை. அந்தந்த இதழ் ஆசிரியர்களுக்கு என் நன்றிகளை இந்த நேரத்தில் சமர்ப்பிக்கிறேன்.

     பதிப்புலகில் இன்றைக்கு நிலவும் சவால்கள் அனைத்தையும் ஒரு புன்னகையோடு எதிர்கொள்ளும் தேவகி ராமலிங்கம் அவர்களை தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்திருக்கும். நிவேதிதா, ஊருணி ஆகிய பதிப்பகங்களை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் ஆனால் அது பற்றி எந்தப் புகாருமின்றி தவம் போல் நிர்வகித்து வருகிறார். எம்.ஆர் என்று பத்திரிகை உலகில் எல்லோராலும் அறியப்படும் அவரது கணவர் இராமலிங்கம் அவர்கள் இடப்பாகத்தை அல்ல எல்லா பாகத்தையும் தந்து அவரை சுயமாக இயங்கத் துணை நிற்கின்றார். இருவருமே எனது மரியாதைக்கும், நன்றிக்கும் உரியவர்கள். இந்த இருவரையும் எனக்கு அறிமுகம் செய்த பல்லவிகுமாருக்கு பிரத்தியேகமான நன்றிகள்.

   அன்பின் அம்மா சாந்தாவுக்கும், எனது எல்லா இலக்கியப் பணிகளுக்கும் தனது உள்ளார்ந்த ஈடுபாட்டால் துணை செய்யும் எனது மனைவி நிலாமகள் என்னும் ஆதிலட்சுமிக்கும் எனது பேரன்பு பெருஞ்செல்வங்கள் பிருத்வி மதுமிதா மற்றும் சிபிக்குமாருக்கும் எனது பிரத்தியேக நன்றிகள்.

     இந்தக் கட்டுரைகள் வெளியான தருணத்தில் ஒவ்வொரு கட்டுரையைப் பற்றியும் நெகிழ்வோடு தனதுக் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பரமக்குடி பா.உஷாராணி மற்றும் தனது பள்ளி மாணவர்களுக்கு இந்தக் கட்டுரைகளை வாசித்துக் காண்பித்த அவரது சகோதரி மதிப்பிற்குரிய பா.சரசுவதி அவர்களுக்கும்...

எனது படைப்புகள் மீதும் என் மீது பெரிதும் நம்பிக்கை வைத்து செல்லும் இடம் தோறும் என்னைப்பற்றி பெருமிதமாக குறிப்பிடும் அன்புக்குரிய தோழி கவிஞர் கிருஷ்ணப்பிரியா அவர்களுக்கும்...

தன்னைவிட ஒருபடி மேலே வைத்து என்னை மதிக்கும் அன்புக்குரிய எழுத்தாளர் மாலா உத்தண்டராமன் மற்றும் சக எழுத்தாளர்கள் ஜீவகாருண்யன், நளினி சாஸ்திரி, ஓவியர் கோவிந்தன், புகைப்படக் கலைஞர் நெய்வேலி என். செல்வன், மருதூர் அரங்கராசன், குறிஞ்சி வேலன் மற்றும் குறிஞ்சி ஞான வைத்தியநாதன், நாகை வெற்றிச்செல்வன்,புலியூர் முருகேசன், நண்பர்கள் பாலு, ஐயப்பன், பாபு ஆகியோருக்கும்..

என் நூல்கள் வெளிவரும்தோறும் அவற்றுக்கு ஒரு விமர்சன அரங்கை அமைத்துத் தருகிற செஞ்சி குறிஞ்சி இலக்கிய வட்டத் தோழர் ஜெ.ராதாகிருஷ்ணன், அவரது நண்பர்கள் செந்தில்பாலா, நினைவில் வாழும் செஞ்சி செல்வன், இயற்கை சிவம், பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழினியன், ரிஷபன், தயாளன், நிழல் திருநாவுக்கரசு  இன்னபிற நண்பர்களுக்கும்.

இந்த நூலுக்கான அட்டை வடிவமைப்பு செய்த நண்பர் கீர்த்தி அவர்களுக்கும் அச்சிட்ட அச்சக ஊழியர்களுக்கும் என் நன்றிகள். 

நான் பணியாற்றும் என். எல்.சி. நிறுவனத்துக்கும், எனக்கு தமிழூட்டிய ஆசிரியர் பெருமக்களுக்கும், எனை உயிர்ப்போடு வைத்திருக்கும் என் இனிய தமிழுக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றிகள்..

                                           மிக்க அன்புடன்

                                     நெய்வேலி பாரதிக்குமார்

 


சிறு துளியில் மிதக்கும் கடல் ....

                  நெய்வேலி பாரதிக்குமார்

கவிதை பல சமயம் ஒரு சொல்லில் கிடைத்து விடுகிறது அல்லது நிறைவு பெற்றுவிடுகிறது. அந்த சொல்லை ஒரு வாசகன் எப்பொழுது கண்டடைகிறானோ அப்பொழுது கவிதை தன் உன்னதத்தை அடைந்துவிடுகிறது. ஆகையினால் கவிதைக்கு வடிவம் என்பது பொருட்டில்லை. கால மாற்றம் வடிவத்தை நிர்ணயிக்கிறது. சில சமயம் வாழும் காலத்து சமூகம் கவிதையை வடிவங்களால் அலங்கரிக்கிறது. மகாகவிகள் வாசகனை வடிவங்களின் வாசல் வழியே கவியுலகிற்கு இட்டுச் செல்கின்றனர்.

ஜப்பானிய சமூகம் தனக்கு ஏற்பட்ட பேரழிவுகளை உடைத்து தன்னை முன்னிறுத்தும் இயல்பு கொண்டது. ஜப்பானை அழிக்க இயற்கையும் உலகமும் முயன்ற போதெல்லாம் சிதறிப் பிரிந்து ஒவ்வொரு சில்லிலும் ஒரு புதிய ஜப்பானை பிறப்பிக்கும் வல்லமை கொண்டது. ஒட்டுமொத்த உலகமும் மிகப்பிரம்மான்டம் என்ற ஒன்றை நோக்கியே வெறியாக ஓடிக்கொண்டிருந்தபோது.. ஜப்பான் சிறியதிலும் சிறியதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. எல்லா பிரம்மாண்டத்துக்கும் மையம் ஒரு சிறிய அணுதானே என்பதை உலகம் திரும்பி நின்று புரிந்து கொள்ள முயன்றபோது ஜப்பான் தன்னை முதன்மையான இடத்தில் நிறுத்திக் கொண்டது ஜப்பானை நான் இப்படி குறிப்பிடுவதுண்டு ‘சிறு துளியில் மிதக்கும் கடல்’ என ... அது ஹைக்கூவுக்கும் பொருந்தும்...

சிறியதிலும் சிறியது என்கிற சாதனையை தொழில்நுட்பத்தின் எல்லா தளங்களிலும் ஜப்பான் சாதித்தபோது கவிதையில் சிறியதிலும் சிறியது முகிழ்க்கத் தொடங்கியது. ஹொக்கு, ஹைக்கு, ஹைபுன், சென்ரியு என்ற பலவாக அதன் சில்லுக்கள் கவிதையின் புதிய தரிசனங்களை உலகுக்கு ஜப்பான் சீரான இடைவெளியில் தந்து கொண்டே இருந்தது.

ஜப்பானின் மிகச்சிறந்த கவிகளான பாஷோ, பூசன், இசா, ஷிகி ஆகியோர் வெவ்வேறு சாலைகள் வழியே வாசகனை அழைத்துச் சென்றதன் வரலாற்றையும் அவர்களின் படைப்புகளையும் வைப்பு முறை என்று சொல்லப்படும் அழகான வரிசைப்படி நால்வர் என்கிற இந்த நூலில் கவிஞர் பல்லவிகுமார் தொகுத்து தந்திருக்கிறார்.

சைவ நெறியில் நால்வர் என்று சம்மந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்றும் வைணவ நெறியில் நால்வர் என்று பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் என்றும் சொல்வார்கள். அது போல ஜப்பானின் நால்வரை தமிழிலக்கிய உலகிற்கு எளிமையாக அறிமுகப் படுத்தியுள்ளார் பல்லவி.

தமிழில் ஹைக்கூ அறிமுகமாகி நூறாண்டுகளுக்கு மேல் ஆகின்றன தமிழ் இலக்கிய உலகிற்கு ஹைக்கூ பற்றிய அறிமுகத்தை 1916 ஆம் ஆண்டிலேயே மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரை வழியே தந்திருக்கிறார் என்கிற செய்தி இந்த சமயத்தில் பெரும் வியப்பையும் பெருமிதத்தையும் தருகிறது.. அவருக்குப் பின் ஈரோடு தமிழன்பன், அமுதபாரதி, சுஜாதா, மித்ரா, அறிவுமதி எனப்பலரும்... அவர்கள் வழியில் பல்லவிகுமார் நால்வர் என்னும் இந்த நூல் வழியே ஹைக்கூவின் கரம்பிடித்து நம்வசம் ஒப்படைக்கிறார்.

ஹைக்கூ கவிதையுலகில் பாஷோவையும்,  எடோவையும் அறிந்த அளவுக்கு பூசன் , ஷிகி ஆகியோரை அறிந்திருப்போமா? என்றால் ஹைக்கூவின் வரலாற்றோடு  பரிச்சயமானவர்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். ஹைக்கூ கவிதைகளை ஒரு வாசகனாக ரசிப்பவர்கள் இந்த நால்வரை சென்றடைந்திருப்பார்களா என்பது சந்தேகமே

பல்லவி ஒரு வரலாற்று எழுத்தாளனைப்போல அவர்களின் வாழ்வியல் சம்பவங்களை ஒரு கோர்வையாக அதே நேரம் சுவாரசியமாக குறிப்பிட்டுவிட்டு ஒரு கவிஞனின் நேர்த்தியான நடையோடு அவர்களின் கவித்துவ வரிகளை நமக்கு கடத்துகிறார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பற்றிய செய்திகளை குறிப்பிட்டுவிட்டு இடையிடையே பொருத்தமான மனம் கவர் கவிதைகளை ஒரு முன்னோட்டம்போல இடம்பெற வைத்து கட்டுரையின் கடைசியில் அவர்களின் ஆகச்சிறந்த கவிதைகளை மழையென பொழியச் செய்திருக்கிறார்

மொழிபெயர்ப்பில் மிகக் கடினமானது கவிதைகளை மொழிபெயர்ப்பதுதான். பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியும் மொழிபெயர்ப்புகளை பலரும் அனுபவித்திருக்கக் கூடும். ஆனால் இடர்பாடில்லாத வாசிப்பு அனுபவத்தை தருகிறது பல்லவியின் மொழிபெயர்ப்பு சில கவிதைகள் ஜப்பானிய வாசகனின் மெய்யான அதே அனுபவத்தை ஒரு தமிழ் வாசகன் உணரும் அளவு இருக்கின்றன.

காற்றின் கொப்பளிப்பு

பாறைகளால் பிளவுபட்டது

தண்ணீரின் குரல்

என்கிற பூசனின் கவிதைதான் எத்தனை அளப்பரிய நுட்பங்களைக் கொண்டது  

புதர்க் காட்டு வாசல்

பூட்டாய் இருந்தது

நத்தை

என்கிற இசாவின் கவித்துவ பார்வை தரும் வியப்பு எல்லையற்றது

     ஷிகியின் கவிதைகளை இன்னும் தமிழுலகம் கொண்டாடவில்லை என்று ஒரு உரையாடலில் ஆதங்கமாய் குறிப்பிட்டார் பல்லவி

           ஊமையின் இராப்பிச்சை

           காதுகேளாதவன் பாத்திரத்தில்

           தாளமிடும் மழை

என்கிற கவிதையையும் 

           சிட்டுக்குருவி

சற்று கால் தூக்கிட

           சேறு துடைக்கும் பூ

என்கிற கவிதையையும் வாசிக்கும் போது நாமும் பல்லவியின் கருத்தை ஆமோதிக்கிறோம் ஆம். ஷிகியை கொண்டாடியே தீரவேண்டும்..

     நால்வர் என்கிற இந்த நூல் வழியே ஹைக்கூ கவிதை உலகிற்கு நீங்கள் செய்திருக்கும் இந்தப் பணி மகத்தானது பல்லவி அதற்காக உங்களையும் கொண்டாடியே ஆக வேண்டும்.

     அணிந்துரையை எழுதி முடித்தாலும் பல்லவிகுமார் மொழிபெயர்த்த இந்த கவிதைகள் மீண்டும் என்னை நூலுக்குள் இழுக்கின்றன. நான் கவிதைகளுக்குள் மூழ்குகிறேன் ஒரு படைப்பாளனின் வெற்றி அங்கு நிறுவப்படுகிறது .....

                                     மிக்க அன்புடன்

                                நெய்வேலி பாரதிக்குமார்

 

 

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...