வியாழன், 23 ஏப்ரல், 2015

கள்வனுக்காகக் காத்திருக்கிறேன்



கள்வனுக்காகக்  காத்திருக்கிறேன்
பூட்டுகளுக்கான கொத்துச் சாவியைத்
தேடிக்கொண்டிருக்க வேண்டாம்
கதவுகளைத் திறந்தே வைத்திருக்கிறேன்
அமாவாசை இரவுக்காக
காத்திருக்கவும் வேண்டாம்
சுட்டெரிக்கும் உச்சி வெயில் கூட
சாதகமானதுதான்..
ஆயுதங்களைத்  தீட்டிக்கொண்டிருக்கும்
அவசியமும் இல்லை
நிராயுதபாணியாகவே வருவது உத்தமம்..
சுவரேறிக் குதிக்கும்
வித்தை எதுவும் தேவைப்படாது
கண்ணி வெடி இருக்குமோ
என்ற அச்சமும் தேவையில்லை
காவல்துறையிடம் புகார் தரும்
உத்தேசம் எதுவுமில்லையென
உத்தரவாதம் தருகிறேன்
வீட்டிற்கு வருவோர் போவோரிடம்
ஜாடைமாடையாகக்  குறிப்புகள் தருகிறேன்
எல்லா அறைகளையும்
துருவித்துருவிப்  பார்ப்பவர்கள் கூட
பொக்கிஷங்கள் நிரம்பியிருக்கும் அந்தஅறையின் 
நிலைப்படியிலேயே நின்றுவிடுகிறார்கள்
பேசுவதற்கு ஏதுமற்றவர்களும்
என் பொக்கிஷங்களைப் பற்றி
பேச்செடுத்தால் மௌனிக்கிறார்கள்
எடுத்துப்போகிறவர்களுக்கு ஏதுவாக
என் புத்தக அறையை திறந்து வைத்திருக்கிறேன்
விலைமதிப்பற்ற வரிகளைத் திருடிச்செல்லும்

அந்தகள்வனுக்காக இன்னமும் காத்திருக்கிறேன்..

(உலகப் புத்தக தின வாழ்த்துக்கள்)

திங்கள், 20 ஏப்ரல், 2015

ருசி



ஆற்று மணலில் வீடுகட்டி
போட்டிபோட்டு கலைக்கும்போது
ஒட்டியிருந்த  மண் ருசியை
வயது முதிர்ந்ததும்
கல்வியும், பதவியும் தடுக்கின்றன

நீர்விட்டுப் பிசைந்து, பிடித்த ரூபத்தில்
உருட்டி செதுக்கி தேற்றிய உருவத்தை
தாழ்வாரமெங்கும் பதித்ததுண்டு

விரல்களில் மிச்சமிருந்த மண்துகள்கள்
எந்த உப உணவுமின்றி உள்ளே சென்றுவிடும்..

வளர்ந்தபின் மண்ணோடு இருந்த
தொடர்புகள் யாவும் அறுந்து போயின
ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிட்ட
குடும்பத்தை புறக்கணிப்பது போல
கால்களில் மிதிபடுவதோடு சரி..

விவசாயம் லாபகரமானது இல்லை
என்று போதிக்கப்பட்டதால்
தோட்டம் சீர் செய்யக்கூட
தொடுவதில்லை உபகரணங்களை..

பளிங்குத்தரைகளை
பெயர்க்க முயற்சிப்பதில்லை பெருச்சாளிகள்...

மழைவந்தால் , இறுக்க மூடிக்கொண்டு
தொலைக்காட்சிகளோடு  சங்கமித்துவிடுகிறோம்
மண்வாசனை மடிந்துபோய்விடுகிறது
குளிர்சாதன அறைக்குள் வராமலேயே....

எத்தனைக் கழுவினாலும்                  
சாமர்த்தியமாக தப்பிய
ஒரு நாவற்பழம்
நாவினில் சேர்த்துவிடுகிறது
மண்ணின் ருசியையும்
நழுவிப்போன பால்யத்தையும்...

நன்றி: 'கல்கி' 19.04.2015.

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...