மறக்கப்பட்ட மறவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறக்கப்பட்ட மறவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

சயனைடு அருந்தி சாவை வென்ற முதல் பெண்போராளி


                  பிரித்திலால்
தினசரி பத்திரிகைகளை வாசிப்பவர்கள், சில மாதங்களுக்கு முன் ஏப்ரல் 10-ம் தேதி பினோத் செளத்ரி என்கிற விடுதலைப் போராட்ட வீரர் தனது 103-வது வயதில் கல்கத்தாவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்திருக்கக் கூடும்.
      சுதந்திரத்துக்குப்பின் வங்கதேச குடிமகனாக வாழ்ந்தாலும் மரணத்தின்போது மறுபடி இந்திய மண்ணில் சில நாட்கள் இருந்த பினோத் செளத்ரி, ‘சிட்டகாங் ஆயுதப் பறிப்பு' சம்பவத்தில் ஈடுபட்ட போராளிகளில் நம்மிடமிருந்த கடைசி வீரர். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில்வங்கத்திலிருந்து வெவ்வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் வெவ்வேறு அணுகுமுறைகளில் இயங்கியவர்கள் பலர். அதில் மிக முக்கியமானவர் சூரியாசென். குரு அண்ணா' என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட சூரியாசென், அவர் வாழ்ந்த காலத்தில் தீரமான பல நடவடிக்கைகளை பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக செயல்படுத்தியதன் மூலம் வங்க மக்களிடையே ஒரு கதாநாயக அந்தஸ்துடன் உலவியவர்.
      இந்திய புரட்சிகரப் படை ( ஐ.ஆர்.ஏ.) என்ற பெயரில் ஒரு வீரம் செறிந்த இளைஞர் படை அவர் தலைமையின் கீழ் இயங்கியது. அரக்கத் தனமான பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளின் மீது தாக்குதல், ஆயுதக் கிடங்குகளைத் தாக்கி அங்கிருந்த ஆயுதங்களைப் பறித்துச் செல்லுதல், இந்தியர்களை அவமானப் படுத்தும் பிரிட்டிஷாரின் குடியிருப்புகளின் மீது தாக்குதல் என்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது சூரியாசென்னின் ஐ.ஆர்.ஏ. படை. அவர்களின் மிக முக்கியமான தாக்குதல்களில் புகழ்பெற்றது 1930-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற்ற சிட்டகாங் ஆயுதப் பறிப்பு சம்பவம். அந்தப் போராட்டத்தில் பங்குபெற்றவர்களில் ஒருவர்தான் பினோத் செளத்ரி.
      ஐ.ஆர்.ஏ. -ஐ துவக்கிய சூரியாசென் 1894-ம் ஆண்டு மார்ச்-22-ம் தேதி சிட்டகாங் மாவட்டத்தில் (இன்றைய வங்க தேசத்தில் உள்ளது) போல்காலி என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தை ரமணி ரஞ்சன் சென் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதால், சூரியாசென்னையும் ஆசிரியராக்க விரும்பி, உயர்கல்வியில் சேர்த்தார்.
      1916-ல் பெஹராம்பூர் கல்லூரியில் சூரியாசென் பி.ஏ. முடித்தார். அவர் படிக்கும் காலத்தில் இந்திய சுதந்திர வேட்கை கொண்ட ஜுஹாந்தர் குழு பற்றி அறிந்தார். ஆயுத வழி போராட்டங்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட ஜுஹாந்தர் குழுவின் அவ்வப்போதைய நடவடிக்கைகள் அவரை ஈர்த்தன. சந்தன்பூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியிலிருந்தாலும் அவரது மனம், சுதந்திரப் போராட்டங்களின் மீதே சுற்றிச் சுழன்றது. எனவே, தன்னோடு ஒத்த கருத்துக் கொண்ட இளைஞர்கள், குறிப்பாக பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, ஐ.ஆர்.ஏ. என்ற அமைப்பை துவங்கினார்.

      கிரேக்' என்ற பிரிட்டீஷ் காவல்துறை ஐ.ஜி. இந்தியர்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதில் பிரதானமானவனாய் இருந்தான். அவனுக்கு முன்பாக இந்தியர்கள்  நடந்து செல்வது கூட குற்றமாகக் கருதப்பட்டது. அப்பாவி இந்தியர்களை, அடித்துத் துன்புறுத்துவது அவனது பொழுதுபோக்காக இருந்தது. சூரியாசென்னின் முதல் குறி கிரேக்' மீதே இருந்தது. கிரேக்கைக் கொல்வதன் மூலம் மற்ற பிரிட்டீஷ் அதிகாரிகளை அச்சுறுத்த முடியுமென்று சூரியாசென் உறுதியாக நம்பினார்.
      கிரேக்கைக் கொல்வதற்கு ஐ.ஆர்.ஏ. -வில் இணைந்த இராமகிருஷ்ண பிஸ்வாஸ் மற்றும் சக்கரவர்த்தி ஆகியோரை நியமித்தார். அவர்களிருவரும் நடத்திய தாக்குதலில், கிரேக்குடன் வந்த சந்த்பூர் காவல்துறை கண்காணிப்பாளர்  இறந்தார். ஆனால், கிரேக் தப்பிவிட்டான். பிஸ்வாஸும்,சக்ரவர்த்தியும் பிடிபட்டனர். பிஸ்வாஸுக்கு தூக்கு தண்டனையும் சக்ரவர்த்திக்கு கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது. அன்றிலிருந்து சூரியாசென் தேடப்படும் குற்றவாளியாக, பிரிட்டீஷ் அரசின் மிக முக்கிய இலக்காக கருதப்பட்டார்.
      அவரது திட்டம் காரணமாக கிரேக் தப்பி விட்டாலும் சற்று மிரண்டு போனான் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சம்பவத்திற்குப் பிறகு காவல் துறை அதிகாரிகள் இந்தியர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள யோசித்தனர். இதன் காரணமாக சூரியாசென் வங்க மக்களிடம் பிரபலமானார். அவரது இயக்கத்தில் சேர இளைஞர்கள் பலரும் துடித்தனர்.
      உயிரைத் துச்சமென மதித்து தங்களை விடுதலை வேள்வியில் இணைத்துக் கொள்ள இளைஞர்கள் பலர் முன் வந்தாலும் ப்ரீத்திலதா வதேதார் மற்றும் கல்பனா தத்தா ஆகிய இரண்டு இளம் பெண்களின் அர்ப்பணிப்பு இன்றைய சமூகம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
      கல்பனா தத்தா, 1913-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி சிட்டகாங் மாவட்டத்தில் போல்காலி உபாசிலா வட்டத்தைச் சார்ந்த ஸ்ரீபுர் என்கிற மிகச்சிறிய கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை சிட்டகாங்கில் முடித்து விட்டு, கல்கத்தாவிலுள்ள பெதுனே கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு முடித்தார். படிக்கும் காலத்திலேயே ஷக்திசங் எனப்படும் மகளீர் பொதுநலக் கழகத்தில் இணைந்து பல பொதுநலப் பணிகளில் ஈடுபட்டார். ஒருசில காலம் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய கல்பனாவுக்கு, சூரியாசென்னும் அவரது தோழர்களும் பங்குபெற்ற ஐ.ஆர்.ஏ. அமைப்பின் மீது பற்றுதல் ஏற்பட்டது.

      ஐ.ஆர்.ஏ. அமைப்பின் கட்டா கிராமக் கிளையில் இணைந்து விரைவிலேயே சூரியாசென்னின் நம்பிக்கைக்குரிய போராளியாக வளர்ந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஐ.ஆர்.ஏ. நடத்திய சிட்டகாங் ஆயுதப் பறிப்பு வரலாற்றில் தடம்பதித்த மிக முக்கிய நிகழ்வாகும். 1930-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி ஐ.ஆர்.ஏ.-வின் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஐந்து குழுவாகப் பிரிந்தனர். மிகச் சரியாக அன்றிரவு பத்து மணிக்கு, ஒரு குழு கணேஷ் குப்தா தலைமையில் தம்பராவில் உள்ள ஆயுதக் கிடங்கைத் தாக்கி, அங்குள்ள ஆயுதங்களைக் கைப்பற்றினர். மற்றொரு குழு, லோக்நாத் பால் தலைமையில் சிட்டகாங்கின் இன்றைய சர்க்யூட் ஹவுசுக்கு அருகே இருந்த ஆயுதக் கிடங்கைத் தாக்கினர்.
      ஒரு குழு பிரிட்டிஷார் அதிகம் புழங்கும், யூரோப்பியன் கிளப்பைத் தாக்கியது. மற்றொரு குழு நங்கல் கோட் மற்றும் தாம் இரெயில் நிலையத்தில் இருந்த தொழில்நுட்பத் தொடர்புகளைத் துண்டித்து இரயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தது. மேலும் ஒரு குழு சிட்டகாங் நகரெங்கும் தங்களது தாக்குதல் நோக்கம் பற்றியும் தேச விடுதலைக்கான அவசியம் குறித்தும் விளக்கிய துண்டறிக்கைகளை விநியோகித்தது. கல்பனா தத்தா தலைமையிலான ஒரு குழு  தொலை தொடர்புகளை, வெற்றிகரமாகத் துண்டித்தது. கிட்டதட்ட இரண்டு நாட்கள் பிரிட்டிஷ் அரசு செயலிழந்து போனது.
      அனந்த் சிங் மற்றும் கணேஷ் குப்தா ஒரு வண்டியிலும், சூர்யா சென் மற்றொரு வண்டியிலும் ஆயிரக்கணக்கான ஆயுதங்களை அள்ளிச்சென்றனர். வெறியுடன் அலைந்த பிரிட்டிஷ் படை சூர்யா சென்னும் அவரது தோழர்களும் மறைந்திருந்த ஜலாலாபாத் மலைப்பகுதியை சுற்றி வளைத்தது. சூர்யா சென், கல்பனாதத்தா மற்றும் முக்கிய தலைவர்கள் தப்பிவிட்டனர். ஒரு சில தொண்டர்கள் கைதானார்கள்.
      கல்பனா தத்தா பலபகுதிகளில் சுற்றி திரிந்துவிட்டு இறுதியாக 1933 ஆம் வருடம் பிடிபட்டார். கடுமையான சிறைவாசத்துக்குப்பிறகு 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். 1940=இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1943 ஆம் ஆண்டு அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக இருந்த பூரன் சந்த் ஜோஷியை மணந்தார். 1995-இல் இறந்து போன கல்பனா தத்தாவுக்கு சந்த் மற்றும் சூரஜ் சந்த் என்று இரண்டு மகன்கள். சந்த்-இன் மனைவி மானினி எழுதிய do and die நூல் சிட்டகாங் ஆயுதபறிப்பு சம்பவம் பற்றியது.
      பிரிட்டிஷ் படையை மேலும் அச்சுறுத்துவதற்காக தேவி பிரச்சாத் குப்தா, மனோரஞ்சன் தாஸ், சுதேஷ் ராய், பானிந்திர நந்தி, சுபோத் சௌத்ரின் ஆகியோர் ஐரோப்பிய குடியிருப்புகள் மீது சரமாரியாக தாக்கினர். இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. சுபோத் சௌத்ரி, பானிந்திர நந்தி கைது செய்யப்பட்டனர் ஏனையோர் கொல்லப்பட்டனர். ஐ.ஆர்.ஏ வின் மற்றொரு முக்கியமான தாக்குதல் பஹர்தலி கேளிக்கை விடுதி தாக்குதல்' ஆகும். அந்த கேளிக்கை விடுதியில் இந்தியர்களுக்கும், நாய்களுக்கும் அனுமதியில்லை' என்று ஒரு அறிவிப்பு பலகையை திமிர் பிடித்த பிரிட்டிஷ் பிரஜைகள் வெளியே தொங்கவிட்டிருந்தனர். அதைக்கண்டு ஐ.ஆர்.ஏ.வின் தீரமிக்க வீராங்கனையாக விளங்கிய பிரித்தீலால் வதேதார்க்கு குருதி கொதித்தது.
      1911 ஆம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி சிட்டகாங் மாவட்டம் தால்காட் கிராமத்தில் பிறந்த பிரித்திலால் வதேதாரின் தந்தை நகர நிர்வாக அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்தார். பிரித்திலால், கல்பனா தத்தாவின் பள்ளித்தோழி. படிக்கும் காலத்தில் அவரது பிரியத்துக்குரிய ஆசிரியை உஷா டேராணி லக்குமிபாயின் வீரமிக்க வரலாற்றை உணர்ச்சிப்பூர்வமாக அடிக்கடி சொல்லி வந்தார். அதுவே அவர்  ஐ.ஆர்.ஏவில் இணைய காரணமாயிற்று. சிட்டகாங் ஆயுத பறிப்பு சம்பவத்துக்குப்பிறகு இயக்கம் தோய்வடைந்து விடவில்லை என்பதை உணர்த்தும் விதமாக, பஹர்தலி கேளிக்கை விடுதி தாக்குதலை பிரித்திலால் திட்டமிட்டார்.
      1932 செப்டம்பர் மாதம் 23-ந்தேதி பிரித்திலால் பஞ்சாபி ஆண் வேடம் புனைந்தார். அவரோடு காளிசங்கர் ராய், பிரபுல்ல தாஸ், பினேஷ்வர் ராய், சாந்தி சக்கரவர்த்தி ஆகியோர் வேட்டி சட்டையிலும், மகேந்திர சௌத்ரி, சுஷில் டே, பன்னா சென் ஆகியோர் லுங்கி சட்டையிலுமாக தனித்தனி குழுவாக நான்கு புறத்திலும் விடுதிக்குள் நுழைந்தனர். பிரிட்டிஷ் போலிஸ் எதிர்பாராத தருணத்தில் தங்கள் தாக்குதலை நடத்தினர். திருப்பி போலிசாரும் சுட அதில் ஒரு குண்டு பிரித்திலால் மீது பாய்ந்தது. அவர் நகரமுடியாத அளவுக்கு இரத்தம் வெளியேற எப்படியோ தவழ்ந்து சென்று ஒரு இடத்தில் மறைந்துகொண்டார், மற்றவர்கள் தப்பிவிட்டனர். மிகப்பலவீனமான நிலையில் இனி தன்னால் தப்பிக்க முடியாது என்று முடிவு செய்த பிரித்திலால் பிரிட்டிஷாரிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற உறுதியில் தயாராய் வைத்திருந்த சயனைட் அருந்தி மரணமுற்றார்.
      ஒரு இரவு முழுவதும் பனியில் கேட்பாரற்றுக் கிடந்த அவரது உடல் மறுநாள் காலையில்தான் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறு சோதனையில்தான் அவர் சயனைட் அருந்தி இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய சுதந்திர வரலாற்றில் எத்தனையோ பேர் தங்கள் இன்னுயிரை துச்சமென தூக்கி எறிந்திருக்கின்றனர். இருப்பினும் சயனைட் அருந்தி உயிர்விட்ட முதல் வீராங்கனை பிரித்திலால்தான்.

      ஐ.ஆர்.ஏ வின் பிற உறுப்பினர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் பிடிபட்டாலும், சூர்யா சென் மட்டும் பால்காரராக, கூலித்தொழிலாளியாக, இஸ்லாமியராக பல்வேறு வேடங்களில் சுற்றித்திரிந்தார். கடைசியில் நேத்ரா சென் என்ற பணத்தாசைப் பிடித்த கருங்காலி ஒருவன் 10,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, அவரை காட்டிக்கொடுத்துவிட்டான். சூர்யா சென்னின் மீது அதீத பாசம் கொண்ட அவரது தொண்டர்களில் ஒருவர், நேத்ரா சென்னின் வீட்டுக்குள் நுழைந்து அவனது மனைவியின் கண்ணெதிரிலேயே, அவனது கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டார். இதில் நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் நேத்ரா சென்னின் மனைவி அவனுக்கு சூர்யா சென்-ஐ காட்டிக்கொடுத்ததற்காக அறிவிக்கப்பட்ட பரிசு பணத்தை, கையால் தொடக்கூட மறுத்துவிட்டதோடு நேத்ரா சென்-ஐ கொன்றவரை போலீசாருக்கு அடையாளம் காண்பிக்கவும் மறுத்துவிட்டார். இறுதிவரை அவர் யாரென்பது நேத்ரா சென்னின்  மனைவியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. வங்கத்தின் தவப்புதல்வன் சூர்யா சென் எங்கள் மூத்த சகோதரர் அவரைக்கொன்றவனை என்னாலும் மன்னிக்க முடியாது என்று நேத்ரா சென்னின் மனைவி பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார்.
      சிறைக்கொடுமைகளில் மிக மோசமாக சித்திரவதைப்பட்டவர்களின் பெயர்கள் பட்டியிலிடப்பட்டால், சூர்யா சென்னின் பெயர் பிரதான இடம் பிடித்திருக்கும். அவர் மீது கொண்ட அடங்காத ஆத்திரம் காரணமாக அவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தனர்.அவரது விரல் நகங்கள் பிடுங்கப்பட்டன. எலும்பு மற்றும் நரம்புகள்  உடைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட தினமான ஜனவரி 12, 1934 அன்று அவர் தூக்கு மேடைக்கு நடந்தும் வரும் நிலையில் இல்லாததால், தரதரவென இழுத்து வந்து தூக்கிலிட்டனர்.அதன் பிறகும் வெறி அடங்காத அவர்கள், அவரது உடலை இரும்பு பெட்டியில் வைத்து பூட்டி கடலில் தூக்கி எறிந்தனர்.
      இறப்பதற்கு சில நாட்களுக்குமுன் தன் நண்பருக்கு சூர்யா சென் அனுப்பிய கடைசிச்  செய்தியில் மரணம் என் கதவைத் தட்டுகிறது. ஆனால் என் மனமோ சுதந்திரக்காற்றைத் தேடி வெளியே அலைகிறது. எனக்கு ஒரு கனவு தோன்றுகிறது. அது தங்கமான கனவு. இந்தியா விடுதலைப் பெறும் பொன்னான கனவு. தோழர்களே அந்தக் கனவை நோக்கி உங்கள் பாதங்களை உறுதியாக வையுங்கள். அதை ஒரு நாள் நிச்சயம் கண்டடைவீர்கள்என்று குறிப்பிட்டிருந்தார்.

      நாம் இன்று சுவாசிக்கும் சுதந்திரக்காற்றில், அவர்களின் கதறல்களும், ஓலங்களும்  கலந்து எம்மைப் பதறச்செய்கின்றன. கருத்துக்குருடர்களால் அவர்களது வலிமிகுந்த உயிர்க்கசிவை ஒரு போதும் உணரமுடியாது...
              நன்றி  "காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 2013

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

தோட்டாக்கள் பாதம் பணிந்த சரஸ்வதி ராஜாமணியும், சிறைக்கு அஞ்சா அஞ்சலையம்மாளும்...



மறக்கப் பட்ட மறவர்கள்-5

தோட்டாக்கள் பாதம் பணிந்த சரஸ்வதி ராஜாமணியும்,
சிறைக்கு அஞ்சா அஞ்சலையம்மாளும்...

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. என்றாலும், அவர்களின் பெயரும் புகழும் தமிழகம் தாண்டி எந்த அளவு பரவி இருக்கிறது என்று ஆராயப் போனால் விரக்தியே மிஞ்சும். இந்தியாவின் எந்தப் பகுதியில் புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் சீர்குலைந்தது என்று கேள்விப்பட்டாலும், உடனடியாக தமிழர்கள் தங்கள் தயாள குணத்தை எல்லா வகையிலும் காண்பிப்பதற்கும் அள்ளி வழங்குவதற்கும் தயங்கியதேயில்லை. ஆனால், தமிழர்களின் தியாகம், ஈகை, வீரம் இவற்றைப் பற்றி பேசினால் இன்றைக்கு பிற்போக்குத்தனம் என்றும், பத்தாம்பசலித் தனம் என்றும் இகழப்படும் அவலம் தமிழகத்துக்கு உள்ளேயே அறிவு(!) ஜீவிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

         ஒரு இனம் தன்னை மேம்படுத்திக் கொள்ள தன்னை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதில் தவறேதுமில்லை. ஆனால், தனது தகைசார்ந்த பெருமைகளை தனது அடுத்த சந்ததியினர்க்கு எடுத்துச் செல்வது கூட இங்கு கேலிக்குரிய செயலாகிவிட்டது. இத்தகைய சூழலில் தமிழ்ப் பெண்களின் வீரம் செறிந்த சுதந்திரப் போராட்டப் பங்களிப்பை நாம் எந்தளவு அறிந்து வைத்திருக்கிறோம் என்கிற சுய பரிசோதனையில் இறங்க வேண்டியது மிக அவசியம்.

          இரங்கூனில் மிகக் குறிப்பிடத் தக்க செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்கு 1937 ஆண்டு வாக்கில் காந்தியடிகள் சென்றிருந்தார். தங்கச் சுரங்கமொன்றை சொந்தமாக வைத்திருந்த அந்த செல்வந்தரின் செல்ல மகள் தோட்டத்தில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்துக் கொண்டு பயிற்சி செய்து கொண்டிருந்தாள். காந்திக்கு மிக ஆச்சர்யமாகவும் அதே நேரம் மிக அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த சிறுமியை அழைத்து “நீ சிறு பெண் அல்லவா, துப்பாக்கியை வைத்துக் கொண்டு விளையாடுவது ஆபத்து ஆயிற்றே?” என்று அக்கறையோடு கேட்டார்.

       “நான் துப்பாக்கியை எப்படி இயக்குவது என்று பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தாள் அந்த சிறுமி.
“இந்த வயதில் ஏன் உனக்கு துப்பாக்கிப் பயிற்சி?”
“நான் வெள்ளைக் காரர்களை இந்தியாவை விட்டு விரட்டுவதற்காக துப்பாக்கிப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.”
“அது மிகவும் வன்முறையான வழியில்லையா? நாம் அவர்களை அகிம்சா வழியில் வெளியேற்ற வேண்டும்.”
“கொள்ளைக்காரர்கள் வீட்டுக்குள் புகுந்துவிட்டால், அவர்களை துப்பாக்கியால் சுட்டுத்தானே விரட்ட வேண்டும்?! நான் வளர்ந்து பெரியவளானதும் நிச்சயம் ஒரு வெள்ளைக்காரனையாவது சுடுவேன்.”
காந்தியடிகள் திகைத்துப் போனார்.
அந்த சிறுமியின் பெயர் ராஜாமணி.


காந்தியை சந்தித்த அடுத்த சில நாட்களில் நேதாஜி ரங்கூனில் ஒரு கூட்டத்தில் பேசுகிறார். அங்கு வாழும் இந்தியர்களிடையே தனது எழுச்சி மிக்க உரையின் மூலம் அவர்களின் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்புகிறார். தனது போராட்ட முயற்சிகளுக்கு நிதிதர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். நேதாஜியின் உரை, அந்தக் கூட்டத்திலிருந்த சிறுமி ராஜாமணியை வெகுவாகக் கவர்ந்தது. உடனடியாக தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றி அவரிடம் கொடுக்கிறாள். அதனை மறுக்காமல் வாங்கிக் கொண்ட நேதாஜி மறுநாள் அந்த சிறுமியின் வீட்டுக்கு வந்து அவளது தந்தையைச் சந்திக்கிறார்.

         “ஐயா, உங்கள் மகள் வயதில் மிகச் சிறியவள். இந்த நகைகள் எத்தனை மதிப்பு மிக்கவை என்பது அவளுக்குத் தெரியாது. எங்கள் போராட்டத்துக்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டாள். அவளது அறியாமையை மன்னித்து நகைகளைத் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் நேதாஜி.

        ஆனால், அச்சிறுமியின் தந்தையோ அவற்றை வாங்கிக் கொள்ளாமல் புன்னகை பூக்கிறார். அவரது மகளின் மன உறுதியும் அறிவாற்றலும் அவர் அறிந்தது தானே!

        ராஜாமணி அந்த சமயம் அந்த அறைக்கு வந்து நேதாஜியிடம், “அந்த நகைகள் எனக்காக எனது தந்தை கொடுத்தவை. அன்றிலிருந்து அந்த நகைகள் என்னுடையவை. அதன் மதிப்பு தெரிந்து தான் உங்களிடம் கொடுத்திருக்கிறேன்.  திருப்பி வாங்குவது என்னுடைய வழக்கமில்லை” என்று கோபமாக கூறினாள். அவளது தீர்க்கமான பதிலைக்கண்டு வியந்து போன நேதாஜி, “லக்ஷ்மி, (செல்வம்) வரும் போகும். ஆனால், சரஸ்வதி கடாட்சம் அப்படியல்ல. அது நிலையானது. உன்னிடம் சரஸ்வதியின் அருட்பார்வை நிரம்பியிருக்கிறது. இனி உன்னுடைய பெயர் சரஸ்வதி” என்று அவளைப் பாராட்டிவிட்டு வெளியேறினார். அன்றிலிருந்து அவரை சரஸ்வதி ராஜாமணி என்றுதான் எல்லோரும் அழைத்தனர்.

          சில நாட்கள் கழிந்த பிறகு அவர் நேதாஜியின் இந்திய தேசியப் படையில் அவரது ஐந்து தோழிகளுடன் இணைந்தார். அவருக்கும் அவரது தோழிகளுக்கும் பிரிட்டிஷ் உயரதிகாரிகளை உளவு பார்க்கும் பணி தரப்பட்டது. சரஸ்வதியும் அவரது தோழிகள் ஐவரும் ஆணுடை தரித்து பிரிட்டிஷாரின் குடியிருப்புகளில் தங்களது உளவுப் பணியைத் துவக்கினர். சரஸ்வதி தனது ஆண் வேடப் பெயராக ‘மணி' என்று வைத்துக் கொண்டார்.

saraswathy rajamani.jpg

       கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அவர்கள் அந்தப் பணியை செவ்வனே செய்தனர். உளவுப் பணியின் போது அவர்களில் யாராவது ஒருவர் பிரிட்டிஷாரிடம் அகப்பட்டுக் கொண்டால் அந்தப் பெண்ணை மற்றவர் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குள் இருந்த இரகசிய உடன்படிக்கை. ஒரு சமயம் சரஸ்வதியின் தோழி ஒருத்தியை பிரிட்டிஷ் அதிகாரி அடையாளம் கண்டு அவளை விசாரணைக்காக தனது அறைக்கு அழைத்துச் செல்கிறார். ஏற்கனவே செய்த உடன்படிக்கையின் படி சரஸ்வதி அவளை சுட வேண்டும். ஆனால், சரஸ்வதி, தனது ஆண் வேடத்தைக் கலைத்து விட்டு, ஒரு நடன மாதுவைப் போல் விசாரணை நடந்த அறைக்குள் செல்கிறாள். பிரிட்டிஷ் அதிகாரிகள் அருந்திக்கொண்டிருந்த மதுவில் மயக்க மருந்து கலந்து அவர்களை மயங்க வைத்து விட்டு தோழியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விடுகிறாள். ஆனால், காவலுக்கு இருந்த பிரிட்டிஷ் படை வீரன், அவர்களை துரத்தி வந்து துப்பாக்கியால் சுடுகிறான். சரஸ்வதி ராஜாமணியின் கால்களில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. அடிபட்டக் காலோடு இனி தப்ப முடியாது என்று உணர்ந்த சரஸ்வதியும் அவளது தோழியும் அருகிலிருந்த ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து விடுகிறார்கள். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அவர்கள் இருவரும் மரத்தை விட்டு இறங்கவேயில்லை. அதன் பிறகு தப்பி வந்து, நேதாஜியை சந்திக்கிறார்கள். அறுவை சிகிச்சையின் மூலம் சரஸ்வதியின் காலில் இருந்த குண்டுகள் எடுக்கப்பட்டன. என்றாலும், அவரால் அதன் பிறகு இயல்பாக நடக்க முடியவில்லை. நேதாஜி அவர்களின் சாதுர்யமான வீரம் மிக்க செயலைப் பாராட்டியதோடு, நேதாஜியுடன் இணக்கமாக இருந்த ஜப்பானிய அரசரிடம் அவர்களை அறிமுகப்படுத்துகிறார். ஜப்பானிய அரசரின் கையால் சரஸ்வதி ராஜாமணிக்கு விருது கிடைக்கிறது.

           இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு நேதாஜி கேட்டுக் கொண்டதன் பேரில், சரஸ்வதி ராஜாமணி இந்தியாவுக்குத் திரும்பிவிடுகிறார். அவருக்கு ஒரு சொற்ப தொகை ஓய்வூதியப் பணமாகத் தரப்பட்டு வந்தது. தனது செலவு போக மிஞ்சும் பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அவர் வழங்கி வந்தார். சுநாமியின் போது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் பாதிக்கப் பட்ட மக்களுக்கா தனது ஒரு மாத ஊதியத்தை நிதியாகத் தந்து விட்டு, உணவருந்தப் பணமின்றி, பட்டினியாகக் கிடந்திருக்கிறார்.
அவரைப் பற்றி செய்தியை பத்திரிகையில் பார்த்த அன்றைய முதல்வரின் அலுவலக அதிகாரிகள் முதல்வரின் கவனத்துக்கு அவரது நிலையை பற்றிய செய்தியை கொண்டு சென்றனர். 2005-ம் ஆண்டு ஜுன் 21-ம் தேதி, அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவருக்கு அரசு அடுக்கக வீடு ஒன்றை இலவசமாகவும், ரூபாய் 5,00,000-த்தை அவரது வாழ்வாதாரத் தொகையாக கொடுத்தார்.
saraswathi rajamani 3.jpg

         என்றாலும் பரபரப்புச் செய்திகள், அதிர்ச்சியூட்டும் கொலைகள் பல்டியடிக்கும் அறிக்கைகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டிருக்கும் பலராலும் சரஸ்வதி ராஜாமணி பற்றிய செய்தி தவறவிடப்பட்டிருக்கலாம்.


        ஒரு குடும்பமே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அதற்காக சிறை தண்டனை பெற்றதும் அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் பெரிய புகழ் வெளிச்சம் ஏதுமின்றி இயல்பாக வாழ்வதும் தமிழகத்தில் இருக்கின்ற பலர் அறியாத செய்தி.

anjalai ammaal 2.jpg

        1890-ம் ஆண்டில் கடலூர் முதுநகரில் பிறந்த அஞ்சலையம்மாள் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து இந்திய சுதந்திரத்திற்காக பல்வேறு  போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை தண்டனை அனுபவித்தவர். குறிப்பாக ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், நீல் சிலை அகற்றும் போராட்டம், கள்ளுக்கடைகளை எதிர்த்து போராட்டம்,தனி நபர் சத்தியாகிரகப் போராட்டம் ஆகிய  போராட்டங்களில் ஈடுபட்டு கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகள் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர். அவரது கணவர் முருகப்படையாச்சியும் அவரோடு சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் சிறைபுகுந்தவர்தான்.
1933 ஆம் ஆண்டு வேலுரில் அவர் சிறையிலிருந்த போது அவர் நிறைமாத கர்ப்பிணி. குழந்தை பிறக்கப்போகின்ற சமயம் அவர் வெளியே அனுப்பிவைக்கப்பட்டு, குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலத்தில் அந்த குழந்தை பிறந்ததால், ஜெயில் வீரன் என அக்குழந்தைக்கு பெயரிட்டார். ( தற்போது அவரது பெயர் ஜெயவீரன்).காங்கிரஸ் இயக்கப் பணிகளுக்காக செலவிடவேண்டிய சூழ்நிலை வந்தபோது, தயங்காமல் தனது வீட்டை அடமானம் வைத்து அந்த செலவுகளை சமாளித்து இருக்கிறார். அஞ்சலையம்மாள் சிறையிலிருந்த சமயம் கடனை திருப்பித்தர இயலாத காரணத்தால்அவரது வீடு ஏலத்துக்கு வந்தது. இஸ்லாமிய சமூக நண்பரொருவரின் முயற்சியால் அந்த வீடு ஏலத்தில் பறிபோகாமல்  தடுக்கப்பட்டது. நெசவுத்தறிதான் அஞசலையம்மாள் குடும்பத்தின் வாழ்வாதாரம். கைத்தறித் துணிகளின் அருமையாஇ உணர்த்த அவர் தந்தை பெரியாரோடு இணைந்து, அலைந்து திரிந்து கைத்தறித் துணிகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். கள்ளுக்கடை மறியல் போராட்டங்களிலும் கலந்துகொண்டு போராடியிருக்கிறார்
அஞ்சலையம்மாளின் மூத்த மகள் அம்மாபொண்ணு தனது ஒன்பதாவது வயதிலேயே நீல் சிலையகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். அவர் சிறையிருந்து வெளிவந்த பின் காந்தியடிகள் அவரை அழைத்து, அம்மாபொண்ணை  தன்னோடு அழைத்துகொண்டு தனது சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்க வைத்துக்கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி ஆசிரமத்தில் காந்தியடிகளின் நேரடிப்பார்வையில் வளர்ந்த அவருக்கு லீலாவதி என்று காந்தியடிகள் பெயரிட்டார். ஆசிரமத்திலிருந்து வந்த பிறகு லீலாவதி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு வீரரான பன்மொழிப் புலவர் ஜமதக்கனியை மணந்து கொண்டார்.

         அஞ்சலையம்மாள் தன் வாழ்நாள் முழுக்க எதற்கும் அஞ்சாத அம்மாளாகவே இருந்திருக்கிறார். காந்தியடிகள் ஒருமுறை கடலூர் வந்தபோது அவரைச் சந்திக்க அப்போது தடை விதிக்கப் பட்டிருந்தது. ஆனால், அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு காவல்துறை அதிகாரிகளை ஏமாற்றி விட்டு, துணிச்சலாக காந்தியடிகளைச் சந்தித்ததோடு அவரை குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு, அடுத்து செல்ல வேண்டிய ஊருக்கு அவரை அழைத்து சென்றாராம். இதன்காரணமாக, காந்தியடிகள் அவரை ‘தென்னாட்டின் ஜான்சி' என்று பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார்.

        மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, போராட்டங்களையும் தாண்டி, சமூகக் கடமைகளை நிறைவேற்ற அவர் முயற்சித்திருக்கிறார். கடலூர் அரசு பொது மருத்துவமனையில் எக்ஸ்-ரே கருவி அஞ்சலையம்மாளின் பெருமுயற்சியால் தான் தருவிக்கப் பட்டது. வீராணம் ஏரியிலிருந்து புவனகிரி பாசனத்துக்கு செல்லும் வாய்க்காலில் கிளை பிரித்து தீர்த்தாம்பாளையம் என்ற ஊருக்கு பாசன வசதிக்காக ஒரு வாய்க்காலை ஏற்படுத்தித் தந்தவர் அஞ்சலை அம்மாள்தான். அதனால் தான் அந்த வாய்க்காலுக்கு அஞ்சலை வாய்க்கால் என்று பெயர். உலகமே வர்த்தகரீதியாக தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கையில், வலைபதிவர்கள் பலர் தன்னலம் கருதாமல், தன்னிச்சையாக இப்படி மறைக்கப்பட்ட வரலாறுகளை, செய்திகளை தோண்டியெடுத்து பதிவு செய்கிறார்கள். சந்தனமுல்லை, டாக்டர் இரத்தினப்புகழேந்தி, கடலூர் எழில் போன்றவர்களின் வலைப்பதிவுகள் வழியே அஞ்சலையம்மாள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

         வரலாற்றில் அவரது சிறை வாழ்வு குறித்து பதிவு செய்யப்படும்போது, சிறைத் தண்டனை பெற்ற சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு சமைத்துக்கொடுத்தார் அதன் காரணமாகத்தான் அவர் சிறைத் தண்டனை பெற்றதாக குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

       வேண்டுமென்றே கள்ள அரசியல் புரியும் சுயலாபக்காரர்களால் நம் வரலாறு  அனுதினமும் கற்பழிக்கப்படுகிறது. அரசியலைத்தாண்டிய  அரசியல் வாதிகளால் நாம் நம்மை அறியாமல் கடத்தப்படுகிறோம். ஜடாமுடியற்ற கோடங்கிகளால் நமக்கு பாடம் அடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

         திரிபுகளும், புரட்டல்களும் அரசியலில் இன்று சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு இந்த தேசத்துக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்களின் மகத்தான தியாகங்கள் மீது கருத்துத் திணிப்புகளும்,உள்நோக்க விமர்சன வன்முறைகளும் நிகழ்த்தப்படுவது நம்மை நாம் புதைத்துக்கொள்வதற்கு சமம்...

நன்றி: 'காக்கை சிறகினிலே' செப்.2013

புதன், 10 ஜூலை, 2013

காகோரி சதிவழக்கும் கொலையுண்ட மறவர்களும்

      1925-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஷாஜஹான்பூர் செல்லும் புகைவண்டி காகோரி இரயில் நிலையத்தை அடையும் நேரம் அலம் நகர் என்ற பகுதியை கடக்கும் சமயம் திடீரென அவ்வண்டி ஒரு பயணியால் அவசர சங்கிலி பிடித்திழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. வண்டியின் கார்டு தனது பெட்டியிலிருந்து இறங்கி வந்து இழுக்கப் பட்ட பெட்டியை நோக்கி நகர்கிறார். அவர் மீது இரு இளைஞர்கள் வண்டியிலிருந்து குதித்து அமுக்குகிறார்கள். வலுவான உடலும் முரட்டுத் தோற்றமும் கொண்ட அஷஃபுல்லாகான் பாய்ந்து கார்டு இருந்த பெட்டிக்குள் நுழைகிறார். அங்கிருந்த இரும்புப் பெட்டியை வெளியே எடுத்து வந்து அதன் பூட்டை உடைக்க முயல்கிறார். அவரது தோழர்கள் புகைவண்டியின் இரு முனைகளிலும் நின்று கொண்டு பயணிகளை எச்சரிக்கிறார்கள், “அன்பார்ந்த இந்திய சகோதரர்களே, நாங்கள் உங்கள் தோழர்கள். நாங்கள் உங்களை எதுவும் செய்து விட மாட்டோம். இங்கு நடப்பவை பிரிட்டீஷ் அரசுக்கு எதிரான போராட்டம். தயவு செய்து இரயில் பெட்டிகளிலிருந்து வெளியே வந்து விடாதீர்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்திருங்கள்.” என்கிறார்கள்.
                அந்த நேரம் அடுத்த இருப்புப் பாதையில் ஒரு இரயில் வண்டி வேகமாக வந்து கொண்டிருக்கிறது. அதற்குள் அவர்கள் அந்தப் பெட்டியை உடைத்து அதிலிருந்த பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமான பணப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். எனவே, அவசரமாகப் பூட்டை உடைக்க முயல்கிறார்கள்.
                பெட்டியை உடைக்க இரயிலில் வந்த ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை மிரட்டுவதற்காக வானை நோக்கிச் சுடுகிறார்கள். H.R.A. எனப்படும் இந்துஸ்தான் ரெவில்யூஷனரி அசோஷியேஷன் என்ற அமைப்பின் உறுப்பினர்களான அந்த இளைஞர்கள். பயத்தின் காரணமாக வெளியே வந்த ஒருவர் மீது எதேச்சையாக குண்டு பாய்ந்து அவர் அந்த இடத்திலேயே மரணமடைகிறார். இறுதியாக பெட்டி உடைக்கப்பட்டு அதிலுள்ள பண மூட்டைகளை எடுத்துக் கொண்டு தோழர்களுடன் பறக்கிறார் அஷஃபுல்லா கான்.
                காக்கோரி இரயில் கொள்ளை சதி வழக்கு என்று சுதந்திரப்போராட்ட காலத்தில், பரபரப்பாக பேசப்பட காரணமாயிருந்த இந்த சம்பவத்தை நிகழ்த்தத் திட்டமிட்டவர் இராம்ப்ரசாத் பிஸ்மல்.
                காந்தியடிகள், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்ததைத் தொடர்ந்து நாடெங்கும் பரவலாக அதற்கு ஆதரவான போராட்டங்கள் நடந்தன. 1922-ம் வருடம், செளரிசோரா எனுமிடத்தில் விவசாயிகள் மீது பலத்த தடியடிப் பிரயோகம் நடத்தப்பட்டதால் பலர் காயமுற்றனர், ஊனமுற்றனர். இதற்கு எதிராக பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் புறப்பட்டு, செளரிசோரா காவல் நிலையத்தை தீயிட்டு எரித்தனர். இதில் சில காவலர்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் காந்தியின் மனதில் பெரும் கசப்பை ஏற்படுத்தியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமில்லை என்றாலும் பிஸ்மல், அஷஃபுல்லா கான் போன்றோரின் உணர்ச்சிகரமான உரைகள், செயல்பாடுகள் காரணமாகத் தான் மக்கள் அந்த கட்டுப்பாடற்ற நடவடிக்கையில் இறங்கியதாக காந்தி நினைத்தார்.
                எனவே, காந்தி தனது போராட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தார். 1922-ல் நடந்த கயா-காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக காந்திக்கு எதிரான குரல்கள் எழும்பின. பிஸ்மல் மற்றும், அவரது தோழர்கள் மாநாட்டை விட்டு வெளியேறினர்.
                இனி, அஹிம்சாவழிப் போராட்டத்தின் மூலம், பிரிட்டிஷ் அரசைப் பணிய வைக்க முடியாது. அநீதியான, அடக்குமுறைக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்துவது அவசியம் என்று புறப்பட்ட இராம் ப்ரசாத் பிஸ்மல் அன்றைக்கு அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் இருந்தபடி இந்திய சுதந்திரத்துக்கான அடித்தளமான வேலைகளை செய்துக்கொண்டிருந்த லாலா ஹர்தயாளின் அறிவுரைப்படி இந்துஸ்தான் புரட்சிகரக் கழகம் (H.R.A.) வை துவக்கினார். பின்னாளில் HSRA என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இந்த அமைப்பில் தான் பகத்சிங் இயங்கினார்.
                HRA அமைப்பை முன்னெடுக்கும் போராட்ட நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்பட்டது. எனவே, அநியாயமாக இந்தியரிடமிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் வசூலித்த பணத்தையே எடுத்து, அவர்களுக்கெதிரான பணிகளை செய்வது என முடிவெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, சிட்டகாங்கில் உள்ள தபால் நிலையத்தைத் தாக்கி அங்கிருந்த பணத்தைக் கவர்ந்தனர். ஒரு முறை பிஸ்மல் ஷாஜஹான்பூரிலிருந்து லக்னோ செல்லும் போது ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் அரசாங்கப் பணியாளர்கள் சிறு மூட்டைகளில் பணத்தை எடுத்து வந்து குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மேல் துவாரம் வழியே போட்டுச் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்தமாக அந்தப் பெட்டியையே களவாடி விட்டால் அது அமைப்பைப் பலப்படுத்த உதவும் என்று நினைத்த பிஸ்மில் அதற்காகத் தீட்டிய திட்டத்தின் செயல்வடிவமே காகோரி இரயில் சம்பவம்.
                பிரிட்டிஷ் அரசு இந்திய இளைஞர்களின் உத்வேகத்தை குறிப்பாக H.R.A. அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பெரிதும் அஞ்சியது. அவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், பிரிட்டீஷ் அரசு விரைவில் வலு இழந்து வெளியேற நேரிடும் என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் ஸ்கார்ட்லாண்ட் யார்டிலிருந்து பயிற்சி பெற்ற அதிகாரிகள் குழுவை வரவழைத்து காகோரி இரயில் சம்பவம் குறித்து விசாரிக்க நியமித்தனர்.
                செப்டம்பர் 16, 1925-ல் பிஸ்மில் மற்றும் அவரது தோழர்கள் ரோஷன் சிங், சச்சீந்திர பக்ஷ், சந்திரசேகர ஆசாத், கேசாப் சக்ரவர்த்தி, பன்வாரிலால், முகுந்தி லால், மன்மத் நாத் குப்தா ஆகியோரையும் இன்னும் வழக்குக்கு சம்பந்தப்படாத சிலரையும் என மொத்தம் 42 பேரைக் கைது செய்தது. அஷஃபுல்லா கான் மட்டும் சமயோசிதமாக கரும்புக் கொல்லையில் பதுங்கி பின், காசிக்குத் தப்பிச் சென்று விட்டார். அங்கு பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் அவரைக் காப்பாற்றி வந்தனர். அங்கிருந்து பீகாருக்குச் சென்ற அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்தார். என்றாலும், சுதந்திர வேட்கை தணியாத அஷஃபுல்லா தோழர்களைக்காப்பாற்றவும், அமைப்பை மறுகட்டமைப்பு செய்யவும் தில்லி வந்து சேர்ந்தார். எப்படியாவது அமெரிக்காவிலுள்ள லாலா ஹர்தயாளை சந்தித்து விட்டால் அமைப்பை வலுப்படுத்தி விடலாம் என்பதற்காக சில நண்பர்களை சந்தித்தார். அதில் அவருடைய ஊரைச் சேர்ந்த ஒரு வகையில் அவருடைய உறவினரான ஒருவன் காட்டிக் கொடுத்ததால் பிரிட்டிஷ் போலீஸிடம் சிக்கிக் கொண்டார். வழக்கு தீவிரமடைந்து இராம் ப்ரசாத் பிஸ்மல், அஷஃபுல்லா கான், இராஜேந்திர லகரி, ரோஷன் சிங் ஆகிய நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனையோருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது. பிரிவி கவுன்சில் வரை தாக்கல் செய்யப்பட்ட அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது. 1927-ம் வருடம் டிசம்பர் மாதம் அவர்கள் நால்வரும் வெவ்வேறு நாட்களில் தூக்கிலிடப்பட்டனர்.

இராம் ப்ரசாத் பிஸ்மல்:

                1897-ம் ஆண்டு ஜுன் மாதம் 11-ம் தேதி .பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர். தந்தை  முரளீதர், தாய் மூல்மதி. சிறு வயது முதல் இலக்கியம், கவிதை எழுதுதல் ஆகியவற்றில் ஈடுபாடு  கொண்ட பிஸ்மல், அமெரிக்காவிலிருந்த லாலா ஹர்தயாளின் ஆன்மீக மற்றும் அரசியல் உரைகளால் பெரிதும் கவரப்பட்டார். ஆரிய சமாஜ் என்ற அமைப்பில் தீவிர உறுப்பினராக இயங்கிய அவர் இராம், அக்லத், பிஸ்மல் என்ற புனைப்பெயர்களில் எழுதிய கவிதைகள் அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் பிரபலமாயிருந்தன. வங்காளி மற்றும் ஆங்கிலத்திலிருந்து பல படைப்புகளை இந்தியில்  மொழிபெயர்த்தார்.
                லாகூரில் பரமானந்த் என்கிற நண்பருடன் சேர்ந்து அரசுக்கு எதிரான தடைசெய்யப்பட்ட, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பொதுக்கருணை ஆணைப்படி விடுதலை செய்யப்பட்டார். சுவாமி சோமதேவ் மூலம் பண்டிட் ஜண்டாலால் தீட்சித்தின் அறிமுகம் கிடைத்தது. தீட்சித் சிவாஜி சமிதி என்ற பெயரில் ஒரு தீவிர அமைப்பை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடத்தி வந்தார். 1918-ல் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்ற தலைப்பில் அந்த அமைப்பின் துண்டுப்பிரசுரங்களைப் பதிப்பித்து தில்லி முதல் ஆக்ரா வரை மறைந்து கொண்டே பொதுமக்களிடம் கொடுத்து வந்தார். அதுபற்றி அறிந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்த போது யமுனை நதியில் குதித்து தலைமறைவானார். அவர் இறந்து விட்டாரென நினைத்து பிரிட்டிஷ் போலிஸ் அங்கிருந்து வெளியேறியது. ஆனால், தண்ணீருக்குள்ளேயே நீந்தி, வேறிடத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.
                தன் வாழ்நாள் முழுக்க சாகச செயல்களால் பிரிட்டிஷ் அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்த பிஸ்மில்லைப் பற்றி தனது அண்ணன் ரியா ராத் உல்லாகான் மூலமறிந்த அஷஃபுல்லா கான் வலியச் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். ஆனால், பிஸ்மல் தனது நண்பரின் இளைய சகோதரனை ஆபத்துகள் நிறைந்த இந்தப் பணிகளில் ஈடுபடுத்த விரும்பவில்லை. எனவே, அஷஃபுல்லா கானை முடிந்தவரை தவிர்த்தபடியிருந்தார். இருந்தாலும், அஷஃபுல்லா தனது விடாமுயற்சியால் பிஸ்மல்லுடன் சுதந்திரப்போராட்ட வேள்வியில் இணைந்து கொண்டார்.

அஷஃபுல்லா கான்:

                1900 வருடம், அக்டோபர் 20-ல் .பி.யிலுள்ள ஷாஜஹான்பூரில் பிறந்த அஷஃபுல்லா கானின் தந்தை ஷஃபீஸ் உல்லா கான்.தாய் மஸூர் உன்னிசா. நான்கு மகன்களில் இளையவரான அஷஃபுல்லா அடிப்படையில் கவிஞர். வார்சி, மற்றும் ஹஸரத் என்கிற புனைப்பெயர்களில் கவிதைகளை எழுதிவந்தார். ஆரம்பகாலங்களில் பிஸ்மல்லிடம் கவிதைகளைக் காண்பித்து அதில் திருத்தங்கள் பெறுபவராக அவரிடம் நட்பு பாராட்டினார். போகப்போக பிஸ்மல்லின் நம்பிக்கைக்குரிய தோழனாக மாறினார். காகோரி இரயில் கொள்ளை வழக்கில் பிரிட்டிஷ் போலிசார் இவரை அரசு தரப்பு சாட்சியாக மாற்ற  ஒரு இஸ்லாமிய போலீஸ்காரரை அனுப்பிபிஸ்மல் நம்பிக்கைக்குரிய நபரல்ல; அவரால் கிடைக்கும் சுதந்திர இந்தியாவில் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது' என்றெல்லாம் சொல்ல வைத்து அஷஃபுல்லா கானை பணிய வைக்க முயற்சித்தனர். எந்த சூழலிலும் பிஸ்மல்லையும் தோழர்களையும் காட்டிக் கொடுக்க மறுத்த அஷஃபுல்லா அதன் காரணமாகவே தூக்கிலிடப்பட்ட பட்டியலில் நால்வரில் ஒருவரானார்.
 இராஜேந்திர லஹரி:

                1901-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி வங்காளத்தின் பாப்னா மாவட்டத்திலுள்ள மோகன்பூர் கிராமத்தில் பிறந்தார். ( தற்சமயம் இது பங்களாதேஷில் உள்ளது). அவரது தந்தை சிதிஷ் மோகன் லஹரி ஊரிலேயே மிகுந்த செல்வந்தர். பனாரஸ் உட்பட பல்வேறு ஊர்களில் அவருக்கு விலை மதிப்புமிக்க சொத்துக்கள் இருந்தன. எம். வரை பனாரஸ்-ல் பாடித்த ராஜேந்திர லஹரி சுகபோகமாக வாழ சல வசதிகளும் உடையவராக வளர்ந்தார். ஆனால் அவற்றையெல்லாம் உதறி எறிந்துவிட்டு இந்திய சுதந்திர போருக்காக போராடிய தீவிர அமைப்புகளில் இணைந்து இயங்கினார். தக்ஷினேஷ்வர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
                காகோரி ரயில் கொள்ளை சம்பவத்தில் அவரும் இருந்தார் என்றாலும் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அளவு பெரும் தவறுகள் எதுவும் செய்யவில்லை. சாட்சியங்களையும், வாதங்களையும் அவருக்கு எதிராக திருப்பிவிட்டு தனது வெறியை தீர்த்துக்கொண்டது பிரிட்டிஷ் அரசு. 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி கோண்டா மாவட்டச் சிறைச்சாலையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

ரோஷன்சிங்:

                1892-ம் வருடம் ஜனவரி மாதம் 23-ந் தேதி ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள நவதா எனும் கிராமத்தில் பிறந்த ரோஷன்சிங்-கின் தந்தை ஜாங்கி சிங் தாய் கௌசல்யா தேவி. துப்பாக்கி சுடுதலிலும், மல்யுத்தத்திலும் திறன் பெற்ற ரோஷன் சிங் ஆர்ய சமாஜம் என்ற அமைப்பில் தீவிர உறுப்பினர். இந்திய தேசிய காங்கிரசின் தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பின் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்கிய ரோஷன் சிங் .பி அரசுக்கு எதிரான போராட்டங்களில் இயங்கிவந்தார். 1921 ஆம் வருடம் இதன் காரணமாக கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார்.
                சிறையிலிருந்து வெளிவந்ததும் ஷாஜகான்பூர் சென்று பிஸ்மல்லை சந்தித்து தன்னை H.R.A.  அமைப்பின் உறுப்பினாராக இணைத்துக் கொண்டார். அமைப்பின் நிதி திரட்டலுக்காக உள்ளூரில் கந்து வட்டி தொழில் செய்து கிராம மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த பால்தியா பிரசாத் என்பவனைத் தாக்கினார். இதன் காரணமாக அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை கிடைத்தது. திடீரென எந்த முகாந்திரமும் இல்லாமல் அவரது பெயர் காகோரி இரயில் கொள்ளை வழக்கில் சேர்க்கப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டது.
                அதிகார மையம் நினைத்தால் எவரையும் தூக்கு மேடையில் நிறுத்திவிட முடியும் என்பதற்கு ராஜேந்திர லஹரி ,ரோஷன்சிங், ராம் பிரசாத் பிஸ்மல், அஷஃபுல்லா கான் ஆகியோரின் மரணமே சாட்சி.
                இன்னொரு மறுவிசாரணை செய்யப்பட்டால் இவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது தவறு என்று நிரூபிக்கப்படலாம். ஆனால் தூக்குக் கயிறு தின்ற உயிர்களை திரும்ப வரவழைத்து அவர்கள் இன்னொரு முறை இந்த் உலக வாழ்வை அனுபவிக்க வைக்க முடியுமா என்ன?
                மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் ஒரு கணம் வரலாற்றை புரட்டினால், எத்தனை உயிர்கள் நியாயமற்ற முறையில், காழ்ப்புணர்ச்சி மற்றும் துவேஷங்கள் காரணமாக, உணர்ச்சி வசப்பட்ட சூழலின் பொருட்டு பலியாகியிருக்கும் என்பதை உணரமுடியும்.
                ரோஷன் சிங் தனது இறுதி காலத்தில் அலகாபாத் சிறையிலிருந்தபடி தனது மாமாவுக்கு எழுதிய கடிதத்தில்கடவுளின் படைப்பில் அதி உன்னதமானது மனிதப்பிறவி. சக மனிதர்களின் சுதந்திரத்துக்காக தன்னையே தியாகம் செய்ய இயலுமெனில், அதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமிதம் அடைகிறேன். என் மரணத்துக்காக வருந்த வேண்டாம். நான் கடவுளின் மடியில் உறங்கப்போகிறேன்என்று எழுதியிருந்தார்.
                கடவுளின் மடியில்தான் அழிக்கமுடியாமல் இப்படி எத்தனை இரத்தக்கறைகள் ..?...


                                                                                

வெறியாட்டு

    வெறியாட்டு     (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)         ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...