ஞாயிறு, 4 ஜூலை, 2010

கடவுளின் வாழ்த்து

எல்லாக் கணங்களும் கடந்து போகின்றன
எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாமலேயே...
எல்லா தினங்களும் முடிந்து போகின்றன
எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமலேயே...

இருப்பினும் சில தினங்களை நினைவு கூர்கிறோம். சில தினங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ப்ரியங்களைப் பகிர்ந்து கொள்ள சில நாட்களைத் தேர்வு செய்கிறோம். நாட்கள் சரியாக அமைந்து விடுகின்றன.

ப்ரியங்களை மிகச் சரியாகப் பகிர்கிறோமா? யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு முறை புத்தாண்டு பிறக்கும் போதும் உற்சாகமாக வரவேற்கிறோம். வாழ்த்துகளும் விசாரிப்புகளும் பரிமாறப் படுகின்றன. சில உறுதிமொழிகள் எடுக்கப்பட்டு பின்பு, மறக்கப் படுகின்றன.

ஆனால், குறிப்பாக என்ன செய்தோம் என்று நினைவு படுத்த முடியவில்லை. ‘புத்தாண்டும் ஒரு தினமே' என்று நினைவுப் பெட்டகத்தில் இருக்க மறுத்து கரைந்து விடுகிறது.

மனித வாழ்வில் சராசரி வாழ்வு 60 வயது. ஏதுமறியா குழந்தைப் பருவம், ஏதும் முடியா முதுமைப்பருவம் நீக்கினால், உண்பதும் உறங்குவதுமாகக் கழியும் பெரும்பொழுதும் போக உருப்படியாய் கழிந்த பொழுதை மட்டும் கணக்கிட்டால் மாதக் கணக்கில் சுருங்கிடும் அற்பமே நம் வாழ்நாள்.
வேஷமின்றி துவேஷமின்றி பிறருக்காக வாழ்தல் என்பது மிக உன்னதமான நாட்கள். நம் ப்ரியமானவர்களுக்காக வாழும் வாய்ப்புக் கிடைத்தால் அவையும் அர்த்தமுள்ள நாட்களே.

எல்லா குடும்பத்திலும் எவரேனும் ஒருவர் ஜீலையில் பிறந்திருக்கிறார்கள்.
அப்படி ஜீலையில் பிறந்த அனைவருக்காக, அவர்களை வாழ்த்த நாங்கள் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தோம்.





‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதனினும் அரிது கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது'  என்றாள் ஒளவை.

சகலமும் சரிவரப் பெற்று வாழும் நாம், அப்படியாக இல்லாமல் ஊனமுற்றவர்களாகப் பிறந்து வறுமையில் வாடும் சிலரோடு நம் உறவினர் பிறந்த தினங்களைக் கொண்டாடினோம்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் வாய் பேச இயலாத, காது கேளாத குழந்தைகள் கல்வி பயில அரசுக் காப்பகங்கள் மட்டும்தான் வழி. அங்கு தங்கியிருக்கும் ஒரு குழந்தைக்கு உணவு செலவுக்காக அரசு ஒதுக்கும் தொகை மாதம் ரூ.225/- மட்டுமே. அந்த தொகைக்குள் அவர்களுக்கு தினசரி மூன்று வேளைகள் வீதம் மாதம் முழுதும் உணவிட வேண்டும். கஞ்சியோ கூழோ, கலந்த சாதமோ, விற்கும் விலையில் கட்டுப்படியாகும் காய்கறிகளோ இட்டு நிரப்பி அக்குழந்தைகளின் பசியாற்ற காப்பகப் பொறுப்பாளர்கள் படும் பாடு படாத பாடுதான். நன்கொடையாளர்கள் கிடைக்கும் நாட்களில் தான் அக்குழந்தைகளின் வயிறு நிறைந்து முகம் மலர்கின்றன.

இந்த ஜீலை மாதம் பிறந்தநாள் காணும் நம் பிரியமானவர்களுக்காக 25.06.2010. அன்று கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளிக் குழந்தைகள் 25 பேருக்கு மதிய உணவும், அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் கைவினைப் பொருள்கள் செய்யத் தேவையான பொருட்களும் அளித்து மனநிறைவோடும் நிம்மதியோடும் வீடு திரும்பினோம்.






கடந்த 7,8 வருடங்களாக இது போன்ற வெவ்வேறு காப்பகங்களில் எங்கள் திருமண, பிறந்தநாள், உறவினர் பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகிறோம்.



இதனை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளக் காரணம் நீங்களும் உங்களுக்குப் பிரியமானவர்களுக்கான சிறந்த தினங்களை இப்படிக் கொண்டாடத் திட்டமிடலாமென்றுதான்.


சில கேள்விகள் எழுவது இயற்கை.

1.ஒரு வேளை உணவளிப்பதால் அவர்கள் துயரம் தீர்ந்துவிடுமா?

எல்லாக் கடலும் நீர்த்துளிகளின் சேர்க்கைதான். பிறருக்காக சிந்தும் கண்ணீர் ஒரு துளியென்றாலும் அது கனமானது, ஈரமானது, தேவையானது...



2.கையில் பணமிருந்தால் எல்லாரும்தான் செய்யலாம்...அந்த அளவுக்கு வருமானமில்லாதவர்கள்...?

உங்கள் கொண்டாட்டங்களுக்காக நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் தொகையில் சிறிதளவு தரலாமே... இல்லாவிடில், உங்கள் நேரத்தை ஒதுக்கி அவர்களுக்கு ஏதேனும் கற்பித்தல், வழிகாட்டல், மகிழ்வித்தல் என இயன்றதை செய்யலாம். தேவை, எளியோர்க்கு இரங்கும் கருணை மனம்.



3.அரசுதானே இதைச் செய்யவேண்டும்... நாமெதற்கு?

யார் செய்ய வேண்டுமென்ற தர்க்கம் வயிற்றுக்குத் தெரிவதில்லை. அதற்குத் தெரிந்தது பசி. தீர்க்க முயல்பவன் தர்க்கம் செய்வதில்லை.



4. மீன் பிடிக்கக் கற்றுத் தருவது மீன் தருவதை விடச் சிறந்தது..

மீன் பிடிக்கக் கற்றுத் தருவது மாபெரும் கொடை. முடிந்தால் அதைச் செய்யலாம். அது வரை மீன் கொடுங்கள்

.
5.ஒரு நாள் தந்து விட்டால் மீதி நாள் அதற்கு மனம் ஏங்குமே...



எல்லா தினங்களிலும் யாராவது பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைக்குக் கூட உங்கள் பிரியமானவர்களின் பிறந்தநாளாக இருக்கலாம். நீங்கள் தரலாம். அல்லது அவரைத் தரும் படித் தூண்டலாம். அப்படியான முயற்சியிது.



எங்களுக்குப் பிரியமான உங்களுக்காகவும், நாங்கள் இதைச் செய்தோம். கட்டாயம் ஏதுமில்லை. நீங்கள் இருக்குமிடத்தில் உங்கள் அருகில் நீங்கள் தருவதைப் பெற எவரேனும் இருக்கலாம்.
பிறப்புக்கும் இறப்புக்குமிடையே என்ன சாதித்திருக்கிறோம் என்ற கேள்வி எப்போதேனும் ஒரு முறை தாக்கியிருக்கலாம்.

‘என் வாழ்வின் அத்தியாயத்தில் அர்த்தமுள்ள பக்கங்களும் இருந்தன' என்று அடையாளப் படுத்த உங்களுக்கான தினங்களை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.

இதோ மெளனமாகப் பிரார்த்திக்கும் இவர்களிடம் பேசிக்கொள்ள மொழியில்லை. ஆனால் அர்த்தம் பொதிந்த வரிகள் நிரம்பியிருக்கின்றன.



கடவுளின் அருளுக்காக எல்லா வழிகளிலும் பிரார்த்திக்கிறோம். கடவுளை வாழ்த்தியபடி...

கடவுளின் வாழ்த்து சுலபமாகக் கிடைக்கிறது... நமக்காகப் பிரார்த்திக்கும் மனங்களில்...

எல்லோர்க்கும் எங்கள் பிரார்த்தனைகள்...

எல்லோர்க்கும் எங்கள் வாழ்த்துகள்...!



மிக்க அன்புடன்,






(நெய்வேலி பாரதிக்குமார்)

வியாழன், 1 ஜூலை, 2010

உயிர்ச்சுமை

சந்துருவுக்கு வீடு திரும்புவதை நினைத்தாலே வயிற்றிலிருந்து ஒரு அக்னிச்சுழல் எழும்பி தொண்டை முழுக்க வியாபித்தது போல துக்கம் நிரம்பியது. அவனை அறியாமல் விழிகளில் பொங்கிய நீர் பிரிந்து புரண்டது.

வசிப்பிடம்தான் எல்லோருக்கும் இளைப்பாறல்... ஆனால் ஒரு சில சமயம் வீடற்று இருப்பதும் ஒரு சவுகர்யம் என்று தோன்றியது. பற்றற்று இருப்பது பேரானந்தம் என்கிற ஞானமெல்லாம் துயரம் சூழ்ந்து அழுத்துகையில் தோன்றாமலிருக்கிற மனிதர் எவருமில்லை.

மணி தன் இறுதி நிமிடங்களை சிரமப்பட்டு நர்த்திக்கொண்டிருக்கிறது. அதன் தீனமான குரைப்பொலி இல்லாத வீடு அமானுஷ்யமாக இருக்கிறது இப்பொழுதெல்லாம். எத்தனை மெலிதாக வண்டியின் சத்தத்தை குறைத்துக்கொண்டு சென்றாலும் சட்டென்று தான் படுத்திருந்த இடத்திலிருந்து தலையை தூக்கி காதுகள் விரைக்க வாசல் பக்கம் திரும்பி குரைக்கும் அதன் கம்பீரமான அழகு எல்லா கவலைகளையும் கண்நேரத்தில் துரத்திவிடும். செருப்பொலியில் ஏதோ ஒரு சுரத்தை கண்டு தரம் பிரித்து தன் பிரியமானவர்களை எளிதாக இனம் காணும் அதன் வாலாட்டல் கலப்பற்ற நேசட்ர்ஹ்தின் அடையாளம்.

மனிதர்களின் ஆதிக்க மனோபாவத்தின் வடிகாலாய் இருப்பதால்தான் நாயை செல்லப்பிராணியாக்கி வளர்க்கிறார்கள் என்பான் கிருஷ்ணா, வரும்தோறும்.. தனக்கு கீழே ஏதோ ஒரு ஜீவன் வாலாட்டியபடி, குழைந்து நக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை நாய்தானே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது என்பது அவன் வாதம். எல்லாவற்றையும் தர்க்கத்தராசில் ஏற்றி எடை போட்டபடி இருக்க முடியாது. கிருஷ்ணாவின் காரண அறிவு எல்லாவற்றிலும் விழித்துக்கொண்டு தன் இருப்பை நிலை நிறுத்தியபடியே இருக்கிறது. சந்துருவின் தரப்பில் அதற்கு வேறு அர்த்தம் உண்டு. சதா அன்பை யாசிக்கும் மனிதனுக்கு சலிப்பின்றி நாயைத் தவிர வேறு எது அன்பை அப்படி வஞ்சனையின்றி தரமுடியும்.

செல்வ வினாயகர் ஆலயத்தின் பிரகாரம் தண் என்று காற்றை வாரி அவன் முகத்தை வருடி ஆற்தல் சொன்னது. ‘ ஒரு நாள் எப்படியும் இழக்க போகிறோம் என்று தெரிந்துதானே எல்லாவற்றையும் பெறுகிறோம்'. சில நொடிகள் கழித்து சலனமற்ற மௌனத்தில் காற்று அசையாமல் அதை மெய்ப்பித்தது.

யாருக்கும் நாய்களை, குருவிகளை, கிளிகளை பரிசளிக்காதீர்கள் என்று இப்பொழுதெல்லாம் எல்லோரிடமும் சிபாரிசு செய்கிறான் சந்துரு.மணியை விளையாட்டாக ஏழு வருடங்களுக்கு முன்பு பரிசளித்துச்சென்ற சந்தானத்தை எல்லோரும் இப்போது திட்டித் தீர்க்கிறார்கள். ஆனால் அவன் அதை இங்கு விட்டுச்சென்றபோது எல்லோருக்கும் ஒரு புது உலகம் தங்களுக்குள் தோன்றியதுபோல் இருந்ததை மறந்துவிட்டார்கள்.

பொமரேனியன் க்ராஸில் பிறந்த மணி, பழுப்புக் கலந்த வெள்ளை நிறத்தில் புஸு, புஸு வென்று விரல் விட்டு அளைகையில் விளைந்த நெற்பயிரை வருடுவது போல் இருக்கும். அதன் உட்செவி புதிதாகப் பூத்த சிவந்த ரோஜா போல், சூரிய ஒளி படும்போது தக தகக்கும். எந்த மின்சக்தியும் இல்லாமல் ஒளிரும் அதன் கண்களை உற்றுப்பார்க்கும் எவரும் அதனிடம் மயங்காமல் இருக்கமுடியாது.

புதிதாக பிறந்தக் குழந்தையை கீழே இறக்க மனமில்லாமல் ஆளாளுக்கு தூக்கி அதன் பிஞ்சு கழுத்தில் முகம் கொஞ்சுவோமே அது போல, அதை கடந்து செல்பவர்கள் ஒரு முறையேனும் அதனை தூக்கி கொஞ்சிவிட்டு, ‘ இப்ப எதுக்கு என்னைக் கூப்பிட்ட' என்று அதன் சாதாரண தலையாட்ட்லுக்கெல்லாம் அர்த்தம் கற்பித்து அதனை மடியிலேந்துவார்கள்.

சின்ன சின்ன பிணக்குகள், மனித உறவுகள் மீதான அதிருப்திகள் என்று களையிழந்துக் கிடந்த வீட்டை ‘மணி'யின் வருகைதான் ரம்யமாக்கியது. சரியான சமயத்தில் கொடுத்தான் சந்தானம் என்று அவ்வப்போது நினைத்துக்கொள்வான் சந்துரு. அன்பின் அடையாளமாகத்தான் அதனை தந்தான் சந்தானம். வயோதிகத்தாலும் நோயாலும் அவதிப்படும் மணி இப்பொழுது கூடுதல் சுமையாகத்தெரிந்தது வீட்டில் சிலருக்கு... அவர்கள் எல்லாம் சந்தானத்தை புரட்டி எடுத்தார்கள் தங்கள் வார்த்தைகளில்... இலகுவாக வளையும் என்பதால் நாக்குதான் எப்படியெல்லாம் புரட்டிப் பேசிவிடுகிறது...

வெத்திலைப் பாட்டிதான் கரித்துக்கொட்டிகொண்டிருந்தாள் சந்தானத்தை..யாரையாவது திட்டியபடி, குறை சொன்னபடி இருந்தாலதான் பாட்டிக்கு பொழுது நகரும். தாத்தா வழி உறவில் எப்போதோ ஆதரவில்லையென்று தாத்தா காலத்தில் வந்து ஒட்டிக்கொண்டவள், இப்பொழுது கொட்டிகொண்டிருக்கிறாள். மணி வருவதற்கு முன் வீட்டு பெண்பிள்ளைகள், மணி வந்த பிறகு மணி, இப்பொழுது சந்தானம்.... பாட்டி மீது இப்பொழுதெல்லாம் கோபம் வரவில்லை. பாவமாக இருந்தது. அன்பை உணராத, அன்பை அனுபவிக்கத் தெரியாத மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகள்தானே...

‘அந்த குமாரு பய கேட்டுகிட்டு கெடந்தான் அப்பவே குடுத்து தொலைச்சிருக்கலாம்.. இப்ப வாந்தி எடுத்துகிட்டு, சீக்கா கெடக்கு.. எப்ப ஒழியுமோ தெரியலை.'.என்று புலம்பிக்கொண்டிருக்கும் வெத்திலை பாட்டிக்கு இரண்டு வருடங்களுக்கு முன் கால் அடிபட்டு நடக்கமுடியாமல் ப்டுத்த படுக்கையாக கிடக்கிறாள். எல்லாமே பெட்டில்தான்.ஜீவகாருண்யத்துக்கும், தாஇய்மைக்கும் பல சமயங்களில் பொருள் புரியாமல் போய்விடுகிறது.

என்றாலும் மணிக்கு பாட்டி மேல் துவேஷம் ஏதுமில்லை. பதிலுக்கு குரைக்காது. ஆனால் தோட்டக்கார முருகனைக் கண்டால் எப்பொழுது பார்த்தாலும் குரைக்கும். சஞ்சீவிதான் அதற்கு விளக்கம் சொன்னான், சில மனிதர்களின் வாசம் நாய்களுக்குப் பிடிக்கும்.. அவர்களோடு சட்டென்று எளிதாக ஒட்டிக்கொள்ளும். சந்துருவுக்கு பல இடங்களி அதே அனுபவம்தான். எந்த ஜாதி நாயானாலும் சந்துருவிடம் மிக சுலபத்தில் சினேகமாக பழகிவிடும். சில மனிதர்களின் வாசம் நாய்க்கு பிடிக்காது. அவர்களைக் கண்டால் சதா குரைக்கும் என்பான் சஞ்சீவி. மனிதர்களின் நல்ல எண்ணங்கள்தான் அவனைச்சுற்றி வாசனையாகவும், ஒளியாகவும் சுழல்கிறது என்பது சஞ்சீவியின் உபரித்தகவல். நாய்க்கு மனிதர்களின் வாசம் பிடிக்கிறதோ இல்லையோ சந்துருவுக்கு நாய்களி வாசம் என்றால் ரொம்ப இஷ்டம்..அதன் நெற்றியை, தாவாங்கட்டையை, கழுத்துப்பகுதியை, முதுகை வருட, வருட அதன் மென்மையும், வாசமும் அலாதி சுகம்.அந்த சுகத்தை முழுமையாக உணர நாயைக் குளிப்பாட்டிப் பாருங்களேன். தன் மீது பரவிய நீர்த்திவலைகளை சட சடவென்று அது உதறுகையில் அதன் அருகில் இருப்பவர்கள் அருவியின் தெறிப்பில் கிடைக்கும் சிலிர்ப்பை அனுபவிக்கலாம்.

மணிக்கு நான்கு நாட்களாக அன்ன ஆகாரம் ஏதுமில்லை. எப்பொழுதாவது ஒரு முறை கொஞ்சம் பால்.. கண்கள் ஒளி இழந்து ஜுரகளை கழன்றது. அதற்கு இஷ்டமான ரஸ்க் ஐ போட்டால் கூட தீண்டத் திராணியில்லாமல் அப்படியே கிடக்கிறது.அதன் ஜீவன் துளி துளியாக கரைந்துகொண்டிருக்கும் காணச் சகியாத நிலையை பார்த்து அப்பா எங்கையாவது இதை விட்டுத் தொலை என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்.இயலாமை என்று தெரிந்த பிறகு அதை கை கழுவ நினைப்பது எத்தனை குரூரம்.

எப்போதோ ஒரு முறை எல்லோரும் வெளியேப் போக நேரும்போது வர மறுக்கும் நாயை கவனிக்கும் வெலையை சொல்லிப்போனால் மகா எரிச்சலடைவார். எல்லா வீட்டுக்கும் நாய்தான் காவல்... எங்கள் வீட்டில் நாந்தான் நாய்க்கு காவல் என்பார் கிண்டல் தொனிக்க.. மணி அப்படியொன்றும் திருடர்களை கவ்விப்பிடிக்கவில்லை என்பது அவர் குறை.

மணி சார்ந்த நாய்களின் இனத்தில் அது குணம் இல்லை.அது அன்பே மயமானது. துரத்தலும், கடித்தலும் அதன் அடையாளம் இல்லை. அதன் நரம்பில் ஊறி முகிழ்க்கும் அன்பை அது நாவால் திரட்டி தீண்டி, தீண்டி ஈரமிக்க மொழியில் உரையாடும் அன்பின் பிரளயம் மணி. அதன் சிலிர்ப்பை வாசிக்க முடியாதவர்களால் ஒரு போதும் அதன் அன்பை உணரமுடியாது.

மணிக்கு குழந்தைகளிடம் அலாதி பிரியம். குழந்தைகளும் அதனிடம் அதீத சலுகை எடுத்துக்கொள்வார்கள். அதன் காதுகளை பிடித்து இழுத்து, வாய்க்குள் விரலைவிட்டு விளையாடும் பிள்ளைகளை ஒரு போதும் மிரட்டியதே இல்லை. அத்தனை வலிகளை பொறுத்ததாலோ என்னவோ பிரியா அதன் வலிகளை புரிந்தவளை இருந்தாள்.

இப்படித்தான் ஒரு தடவை பிரியா‘ஏம்பா கடவுள் ரொம்ப பெக்யூலியர் கேரக்டரா இருக்கார்' என்றாள்

‘ ஏன் அப்படி கேக்கற?'

‘ உலகத்திலேயே ரொம்ப நன்றி உள்ள ஜீவன்னா நாய்தான்னு சொன்னே. ஆனா அதுக்கு போய் 15 வருஷம்தான் ஆயுள் குடுத்துருக்கிறார். நன்றி உள்ள ஜீவனுக்கு கடவுள் தரும் பரிசு அவ்வளவுதானா?'

குழந்தைகள் எத்தனை சுலபமாக கனமான கேள்விகளை கேட்டுவிடுகிறார்கள். அதன் பளுவை சுமக்க முடியாமல் நழுவுகிறது மனது.

‘ அப்படியில்லடா இந்த உலகம் நன்றியுள்ள பிறவிகளுக்கானது இல்லை. அப்படியான அன்பானவற்றை தன்னருகில் அழைச்சுக்கிறார்.'

‘ வெத்திலைப் பாட்டி மேல கடவுளுக்கு பிரியமே இல்லை போலிருக்கு' ரகசிய குரலில் களுக்கென்று சிரித்தபடி சொன்னாள் பிரியா.

‘அப்படியெல்லாம் பேசக்கூடாது” என்று அடக்கினான் சந்துரு.

‘ நீ ஒரு தடவை யயாதி கதை சொன்னியே.. அது மாதிரி மத்தவங்க ஆயுள் காலத்திலேர்ந்து அதுக்கு லைஃப் தரமுடியாதா?'

‘ நாம வாழற ஆயுள்காலத்துல நாயோட ஆயுள் காலமும் இருக்கு. அதுக்கு ஒரு கதை இருக்கு தெரியுமோ?'

‘சொல்லுப்பா'

‘ கடவுள் ஒவ்வொரு விலங்கா கூப்பிட்டு அதன் ஆயுள் காலத்தை ஃபிக்ஸ் பண்ணினாராம். குரங்கை கூப்பிட்டு உனக்கு 20 வருஷம் ஆயுள் அப்படின்னாராம். குரங்கு வேண்டாம் கடவுளே மரத்துக்கு மரம் தாவுற பொழப்பு எனக்கு அதுக்கு 10 வருஷம் போதும்னுச்சாம். சரின்னு அதை பூமிக்கு அனுப்பிட்டாராம். அடுத்து கழுதையை கூப்பிட்டு உனக்கு 50 வருஷம்னாராம். காலம் முழுக்க பொதி சுமக்கற எனக்கு எதுக்கு அத்தனை வருஷம் 20 வருஷம் போதும்னுச்சாம். சரின்னுட்டாராம். அப்புறமா நாய் வந்துச்சாம் அதுக்கு 30 வருஷம்னாராம். தெருத் தெருவாக அலைச்சல் வாழ்க்கை எனக்கு ஏன் அவ்வளவு 15 வருஷம் போதும்னாச்சாம். சரின்னு அதை அனுப்பிட்டாராம். கடைசியா மனுஷன்.. எல்லாமே குறைச்சுக் கேக்குதேன்னு உனக்கு 40 வருஷம் போதுமான்னாராம். மனுஷங்கதான் பேராசைக்காரவங்களாச்சே இத்தனை அழகா உலகத்தை படைச்சுட்டு 40 வருஷம் குடுத்தா எனக்கு போதாதே 100 வருஷம் வேணும்னானாம். கடவுளும் யோசிச்சு பார்த்துட்டு சரி குரங்கு, கழுதை,நாய் திருப்பி கொடுத்த வருஷங்களை நீ வச்சுக்கன்னாராம் அதனாலதான் மனுஷன் அந்தந்த வயசுல அந்தந்த குணத்தில இருக்கான். ஆனா வேடிக்கையை பாரு நல்லதை எடுத்துக்க தெரியாத மனுஷன், நாய்கிட்டேர்ந்து அலைச்சலை எடுத்துகிட்டான் நன்றியை மறந்துட்டான்' என்று சிரித்தான் சந்துரு

செல் ஒலித்தது. துர்க்காதான் பேசினாள்.

‘ எங்கே இருக்கீங்க. இன்னிக்கு ஏதாவது ஓ.டி. பார்க்கறீங்களா? நேரமாச்சே காணுமேன்னு பார்த்தேன்'

‘ கோயில்ல இருக்கேன் துர்க்கா. மனசு என்னமோ போல இருந்தது. வந்துடறேன்'

சிறிது நேர மெளனத்திற்கு பிறகு ‘ போதும். கடவுளுக்கு ரொம்ப நெருக்கடி குடுக்காதீங்க. இப்பவே ரொம்ப இழுத்துகிட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நாளுக்கு இருக்கட்டும்னு அப்ளிகேஷன் போட்டிங்கன்னா பாக்க சகிக்காது. சீக்கிரம் நல்லபடியா கொண்டு போயிடுன்னு வேண்டிக்கங்க'

‘சரி, சரி' செல் ஐ ஆஃப் செய்தான். எல்லோரும் எத்தனை சுலபமாக முடிவெழுதிவிடுகிறார்கள். பாவம் அவளும்தான் என்ன செய்வாள். அது உடம்பு சரியில்லாத காலங்களிலெல்லாம் அது கக்கி வைப்பதை அவள்தான் கழுவிவைக்கவேண்டியிருக்கிறது. பிறக்கும் போதும் பிறரை வலிக்கச்செய்து, இறக்கும்போது வலிக்கவைக்கும் பிறவி ஏன் எங்களுக்கு என்று ஒரு முறை மூலஸ்தானத்தைப் பார்த்து கேட்டுவிட்டு வீடு நோக்கி நடந்தான் சந்துரு.

சந்துரு உள்ளே நுழையும்போது கொஞ்சம் பிரகாசமாகி எழ முயற்சித்து பின் ஹீனமான முனகலோடு படுத்துக்கொண்டது மணி.

‘பரவாயில்லையே.. எந்திரிக்கப் பார்த்தியே.. உடம்பு சரியாச்சாடா உனக்கு? துர்க்கா மணி எதாச்சும் சாப்பிட்டுச்சா?'

‘ம்ஹூம்' உதட்டை பிதுக்கிவிட்டு ‘ டாக்டர்கிட்ட சாயந்திரம் கூட காண்பிச்சாச்சு..ரொம்ப வைத்தியம் பண்ணிக்கிட்டு இருக்க வேணாம் பிரயோஜனமில்லன்னுட்டார். கையை சுத்தமா கழுவிட்டு சாப்பிட வாங்க' என்றாள்.

முகம் கை, கால் கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தான். தட்டில் பிசைய, பிசைய மனம் பிழிவது போல் இருந்தது. சாப்பிட முடியாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். சட்டென்று உள் நுழைந்த காற்று ஜில் லென்று முகத்தில் அறைந்துவிட்டு வெளியேறியது.ஏதோ தோன்ற கையை உதறிவிட்டு மணியிடம் போனான்.......

................. முடிந்து போயிருந்தது.

ஒரு கணம் அதன் முன் அமர்ந்த சந்துரு துக்கம் தாங்காமல் ஓவென்று கதறி அழுதான். பதறியடித்து வந்த துர்க்கா எதுவும் பேச முடியாமல் தூணருகே சாய்ந்து நின்றாள்.பின் அவனருகே வந்து அவன் தலையை கோதிவிட்டு ‘ மெல்ல... மெல்ல பிரியா தூங்கிட்டு இருக்கா'.சட்டென்று கட்டுப்படுத்திக்கொண்டான்

அதன் குறும்பான துறுதுறுப்பை, எல்லையற்ற அன்பை, கள்ளமற்ற விசுவாசத்தை, நிகரற்ற அழகை ஒற்றை இழையாஇ இது வரை சுமந்திருந்த உயிர் பறந்துவிட்டது. அந்த கண்ணுக்குத்தெரியாத காற்று இத்தனை ஸ்தூலமான உடலை சுமந்து திரிந்தபோது கொண்டாடியவர்கள் எத்தனை பேர்.

உடல் தளர்ந்து, சரிந்த போது கனமற்ற அந்த காற்றை சுமக்க முடியாமல் தவ்க்கின்ற பொழுதுகள் மிகக்குறுகியதாக இருந்தாலும் எத்தனை கொடுமை?

பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் எல்லையற்ற வெளியில் விடையற்றுத் திரியும் எல்லா கேள்விகளோடு மணியின் உயிரும் கலந்தது....



- நெய்வேலி பாரதிக்குமார்







நன்றி; கல்கி-20.06.2010

சிறகு உதிரும் நீலப்பறவை

அம்மாவின் கண்ணீர் உப்பேறிக் கறைபடிந்த
எழுத்துக்களை முன் போல் காணமுடிவதில்லை
துணை எழுத்துக்களின் துணையில்லாமல்
நலம் பேணும் கடைசித் தம்பியின் விசாரிப்புகளும்,
விவாதங்களுடனும், விளக்கங்களுடனும்
நீளும் நண்பர்களின் மடல்களும் நின்று போயின!

விரலசைவில் சுலபமாய் ‘ஹலோ'க்கள்!

தொலைபேசியின் கவர்ச்சி சிணுங்கலில்
தபால்காரரின் மணியோசை மெலிந்துபோனது
ஊர்கள் சுருங்கி, உலகம் சுருங்கி
ஒயர்களாய் நெளிந்தன

எண்களை சுழட்ட, சுழட்ட
சேமிப்பிலிருந்து கரைந்தவை சில நூறு மட்டுமல்ல....
ஞபகங்களாய் வைத்திருக்க
காலவரிசைப்படி கடிதங்களும்தான்..

திங்கள், 28 ஜூன், 2010

August Rush





இசை என்ற பொருத்தமான சொல்லை எப்படி யார் நம் மொழியில் சூட்டினார்கள் என்பதை எண்ணி பல முறை வியக்கிறேன். “இசை“ என்று உச்சரிக்கும் போதே ஒரு “ஆணை“ இடுவது போல் எப்படிப்பட்டவரும் உடன்பட்டு இசைந்து விடுவர். எந்த ஒரு கலைக்கும் இல்லாத சிறப்பு “இசை“க்கு உண்டு. கேட்கிற சில நொடிகளில் நீங்களும் ஒரு வாசிப்பாளராக, பாடுபவராக உணர்கிற அல்லது மாற முயற்சிக்கிற அற்புதம் நிகழ்ந்தே தீரும். 


நாம் துக்ககரமாக இருக்கின்ற ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ சில உனனதமான இசை எங்கிருந்தோ மிதந்து வந்து வாழ்வின் அற்புத தருணங்களை, இருத்தலின் நியாயத்தை உணர்த்தியிருக்கும்.

மிக அற்புதமான விஷயம் என்று நீங்கள் கருதும் ஒன்றை வேறொருவர் “அற்புத“மென கருதலாம். நீங்கள் துச்சமென நினைக்கும் ஒன்றை இன்னொருவர் கூத்தாடி கொண்டாடலாம். ஆனால் இசையை வெறுப்பவர்கள் என்று எவரேனும் உண்டா என்ன?

எல்லோராலும் கைவிடப்பட்டவர்களைக் கூட இசை தன் தோளில் சுமக்கிறது என்பதை இரயில் பயணங்களில் குறுக்கிடும் பார்வையற்ற பாடகர்களை காணும் போதெல்லாம் உணர்கிறேன். “அகதிகள்“ என்று யாரை குறிப்பிடுவோம்? ஒரே தேசத்திலிருந்து இன்னொரு தேசத்துக்கு ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கு துரத்தப்பட்டவர்களை மட்டும்தானா?

பெற்ற தாயும், தகப்பனும் உயிருடன் இருக்கும் போதே சமூக பொருளியல் காரணங்களால்  கைவிடப்பட்டு வாழும் குழந்தைகள் கூட ஒரு வகையில் அகதிகள்தானே...

கணநேர பாலுணர்வு தூண்டலால் கருவாகி பின் அற்ப காரணங்களால் பிரிய நேரிட்ட ஒரு பெண்ணின் குழந்தைதான் “இவான்“. அழிக்கப்பட்ட அடையாளத்தை இசை மூலம் மீட்டெடுக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு இயங்குகிற சிறுவனின் கதையே ஆகஸ்ட் ரஷ்.

ஒரு பயணச்சீட்டின் பின்புறம் எழுதிவிடக்கூடிய எளிமையான கதை. காலம் காலமாக நாம் தமிழ்ப்படங்களில் பார்த்து வரும் “மையக்கரு“ தான் இந்த படத்தின் கதையும். தொழில் நுட்ப ரீதியாக கலை ரீதியாக இந்த பழக்கப்பட்ட கதையை ஒரு ரம்மியமான திரைப்படமாக்கியிருக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் சிறப்பு.

லூயிஸ் என்பிற கிதார் கலைஞனும், லைலா என்கிற செலோ வாத்திய கருவியை இசைக்கும் பெண்ணும் எதேச்சையாக ஒரு இசை நிகழ்ச்சியில் சந்திக்கிறார்கள். செலோ(Cello) என்பது வயலின் குடும்பத்தைச்சார்ந்த இத்தாலிய நாட்டு இசைக்கருவி. உட்கார்ந்தபடி  ஒரு ஆள் அதை வாசித்தால் அவர் உயரத்துக்கும் இருக்கும். பார்த்த மாத்திரத்தில் இருவரும் ஈர்க்கப்பட்டு உடல் ரீதியாகவும் அதே நிமிடத்தில் இணைந்தும் விடுகிறார்கள். விடிந்த பிறகு லைலாவின் தந்தை அவளை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விடுகிறார். லூயிஸ் சான்பிரான்சிஸ்கோவிற்கு சென்று விடுகிறான்.

றந்து விட்டதாக லைலாவிடம் பொய் சொல்கிறார்.
ஓர் இரவில் ஏற்பட்ட உறவில் கர்ப்பமாகிறாள் லைலா. கலைக்க மறுத்து குழந்தையை சுமக்கும் லைலா ஒரு விபத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அங்கு குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தையை லைலாவின் தந்தை போலியாக லைலாவின் கையெழுத்திட்டு அனாதை இல்லத்தில் சேர்த்து விடுகிறார். குழந்தை

அனாதை இல்லத்தில் வளரும் குழந்தை இவானுக்கு இசையின் மீது அளப்பரிய ஈடுபாடு. 11 வயது நிரம்பும் போது குழந்தை நல சமுக சேவகர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவனது இசை ஆர்வம் மற்றும் அவனது பின்னணி பற்றி அறிந்து இரக்கம் ஏற்பட்டு  தன்னை  நியுயார்க்கில்  வந்து சந்திக்கும் படி முகவரி அட்டையை தருகிறார். நியுஜெர்சியில் உள்ள அனாதை  இல்லத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி நியுயார்க் செல்கிறான்.  இவான் ஆனால் முகவரி அட்டையை தொலைத்த காரணத்தினால்  அவரை சந்திக்க முடியாத  இவான் சாலையோரம் கிடார் இசைத்து  பிச்சையெடுக்கும் ஆர்தரை சந்திக்கிறான்.

ஆர்தரிடம்  நட்பு  பாராட்டி  அவனோடு இரவில் அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்கிறான். அது ஒரு  பாழடைந்த பழைய நாடக கொட்டகை அங்கு ஆர்தரைப் போன்ற அனாதை குழந்தைகள்  இசைக்கருவிகளை வாசித்து பிச்சையெடுப்பவர்களாக  இருக்கிறார்கள்  அவர்களை  விசார்ட் என்பவன் பாராட்டி பராமரித்து வருகிறான். விசார்டிடம் தனக்கு கிடார் வாசிக்க கற்றுத்தருமாறு கேட்கிறான். இவான். யாருக்கும் தெரியாமல் இரவில் கிடார்-ஐ பயிற்சி இல்லாமல் இவான் வாசிப்பதைக் கண்டு இவன் சாதராணமான ஆளில்லை என்று புரிந்து கொண்டு அவனுக்கு கிடார் வாசிக்க கற்றுத் தருகிறான். குழந்தைகளை அடைத்து வைத்து பிச்சையெடுப்பது பற்றி அறிந்த காவல்துறை அரங்கிற்குள் ரெய்டு செய்கிறது. அங்கிருந்து தப்பித்த இவான் ஒரு சர்ச்சிற்குள் சென்று மறைகிறான். அங்கு இசைக்கப்படும் ஒரு பாடலில் மயங்கி அங்கேயே தங்கி விடுகிறான். இசைக்குழுவில் பாடும் ஹோப் எனும் கறுப்பின சிறுமி அவன் பியானோ வாசிக்க அனுமதிக்கிறாள். முன் பின் தொட்டறியா பியானோவில் சுற்றுப்புற சப்தங்களை வைத்து இசைக்குறிப்புகளை உருவாக்குகிறான்.

அதிசயித்துப்போன ஹோப், சர்ச் பாதிரியாரிடம் காண்பிக்கிறான். பிரமித்துப்போன அவர் இவானை புகழ்பெற்ற ஜுலியார்ட் இசைக்கல்லூரியில் சேர்க்கிறார். அங்குதான் அவன் ஆகஸ்ட் ரஷ் என்று பெயரை மாற்றி பதிவு செய்கிறான்.

விடம் மகன் உயிரோடு நியுஜெர்சியில் உள்ள அனாதை இல்லத்தில் இருப்பதாக கூறுகிறார். மகனைத் தேடி வரும் லைலாவிடம் இவான் யாரிடமும் சொல்லாமல் வெளியேறிய தகவல் சொல்லப்படுகிறது. குழந்தை நல சமூக சேவகர் மூலம் இவானின் புகைப்படம் கி்டைக்கிறது.லூயிஸ் ஒரு நிகழ்ச்சிக்காக நியுயார்க் வருகிறான்.
லைலாவின் தந்தை இறக்கும் தருவாயில் லைலா

மோனிக் இசை நிகழ்ச்சியில் வாசிக்க தேர்வு செய்கிறார்கள். அதே நிகழ்ச்சிக்கு வர இவானின் நம்பிக்கையைப்போல இசை அவர்களை இணைக்கிறது.
ஜுலியார்ட் கல்லூரியிலும் இவான் புதிய இசைக்குறிப்புகளை உருவாக்கும் வேகத்தைப் பார்த்து அவனை புகழ்பெற்ற பில் ஹார்

படத்தின் ஆரம்பக்காட்சியில் இவான் ஒரு வயல் பிரதேசத்தில் நிற்பான். காற்றின் இசைக்குறிப்புகளுக்கு ஏற்ப பச்சை பசேலென்ற பயிர்கள் நடனமாடியபடி இருக்கும். பயிர்களின் நடுவே நின்று இவான் ஒரு கோர்ப்பாளான் போல கைகளினால் இசையை சைகைகள் செய்யும் காட்சியில் ஒளிப்பதிவும், இசையும் நேர்த்தியான கச்சேரியை கண்முன் நிறுத்துகிறது. கண்ணுக்கு விருந்து என்ற சொல்லுக்கு பொருந்தும் காட்சி அது. காட்சி ஊடகங்களில் ஒரு உணர்வை எப்படி நேர்த்தியாக வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இந்த காட்சி மிகப்பெரும் உதாரணம். திரைப்படக்கலை பயிலும் மாணவர்கள் அவசியம் தங்கள் கவனக்குறிப்பில் கொள்ள வேண்டிய காட்சி இது. இவானின் உலகமே இசைதான் என்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணரலாம்.

பறவைப் பார்வை எனப்படும் Bird’s Eye View கோணத்தில் கேமரா மெல்ல நகர்ந்து செல்ல கூடவே அதே உயரத்துக்கு நம்மை சுமந்து கொண்டு இசையும் உயர உயர காட்சி இலக்கணத்தில் சாட்சி கவிதை அது. ஜான் மெத்தனானின் கேமரா பசுங்கதிர்களின் ஈர்ப்பசைவைக் கூட உணர வைக்கிற அளவு துல்லியமாக பதிவு செய்திருக்கிறது.

தன்னைத் துருத்திக்கொள்ளாமல் கதையின் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளுக்கேற்ற லைட்டிங் பயன்படுத்தியிருக்கிறார் மெத்தினன். குறிப்பாக ஆர்தர் போன்ற சிறார்கள் அடைக்கப்பட்ட இடத்தினை குறைந்த மஞசள் வெளிச்சத்திலும் இவானும், லூயிஸும் கிடார் வாசிக்கும் இடத்தில் பளிச் சென்ற வெள்ளை பின்னணியிலும் படமாக்கியிருக்கிறார்.

லூயிஸ் நியுயார்க் வரும் காட்சியில் தூவும் பனிச்சாரல் இடையே லூயிஸ் நடந்து செல்லும் போது நீங்களும் நனைவீர்கள். ஒரு வேளை நீங்கள் துவட்டிக்கொள்ளவும் முயற்சிப்பீர்கள்.

சர்ச்சில் அடைக்கலமான இவான் பியானோ வாசி்க்கும் காட்சி தொழல்நுட்ப திருவிழா என்றே கூறலாம். சர்ச்சின் சுவர் துவாரங்கள் வழியே ஊடருவும் ஒளிக்கற்றை இவான் மற்றும் பியானோ மீது படர சச்சின் வெளியே கேட்கும் ஒவ்வொரு அசைவும் இசையாக பரிணமிக்கிறது. கூடைப்பந்து தரையில் படும் சப்தம், கண்ணாடி கோப்பையின் விளிம்பில் நீர் சுழலும் சப்தம், கால்கள் நடக்கும் சப்தம் தெரு வியாபாரியின் மணி சப்தம் இப்படி எலலாம் இசையாகிறது. ஜான் கேஜ்ன் பிரபலமான சொல்லாடலான் All Sounds are Music (எல்லா ஒலியும் இசையே) என்பதை அடிப்படையாக் கொண்ட காட்சி இது.

படத்தில் மார்க் மன்சினாவின் இசை பல இடங்களில் பிரமிக்க வைக்கிறது. சர்ச்சில் வான நுழையும் பொது கறுப்பினக்குழுவினர் பாடும் Rise it Up’ என்ற பாடல் எவரையும் மயங்கவைத்து விடும். குழுவில் பாடும் ஹோப் என்ற சிறுமியின் முகபாவங்களும் அங்க அசைவுகளும் அபாரமானவை. இந்த பாடல் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. விருது கிடைக்காவிட்டாலும் மிக ரம்மியமான பாடல் என்பதில் எவருக்கும் வேறு கருத்து இருக்கமுடியாது. இதைப்போல ஆர்தர் பாடும் Father” என்கிற பாடல் உயிரை ஊடுருவும்.






எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல இறுதி காட்சியில் இசைக்கப்படும் “Rhapsody” எனப்படும் சிம்பொனி இசைக்கோளம் நம் நரம்புகளில் ஓடி ஒவ்வொரு அணுவையும் துடிக்கச் செய்யும் இசை மிக அதிகமான வயலின் கருவிகள் அதில் பயன்படுத்தப்பட்டதால் அதில் இந்தியத் தன்மை இருப்பதும் ஒரு காரணம்.

எடிட்டிங் சில இடங்களில் குறைபாடுகளுடனும் சில இடங்களில் நிறைவாகவும் உள்ளது. இவான் வயல்வெளிகளில் வாசிக்கும் காட்சியில் ஜம்ப் கட் ஆகி அனாதை இல்லத்துக்கு வருவது பிழை. சர்ச் காட்சியி்ல் பியானோ வாசிக்கும் இடத்தில் நேர்த்தி படத்தின் ஒலிப்பதிவு மிக துல்லியம்.

இத்தனை தொழில் நுடப சிறப்புகள் இருந்தும் படத்தை உச்சியில் வைத்து கொண்டாட முடியாத படிக்கு தடுப்பது மிக பலவீனமான கதையும் ஓட்டைகள் நிறைந்த திரைக்கதையும்தான்.

சந்தித்த நிமிடத்தில் உறவு அதன் விளைவாக கர்ப்பம் தமிழ்படங்களில் உள்ளது போல் அப்பாவின் கெடுபிடி ரொம்ப சுலபமாக தத்து கொடுத்துவிடுதல், மருத்துவமனையில் எவருமே இது பற்றி லைலாவிடம் சொல்லாதது. 11 வருடங்கள் வரை காதலியைத் தேடாத லூயிஸ் அதன் பிறகு செல்போனில் முயற்சிப்பது எந்த இசைக்கருவியையும் முன்பின் தொடாமலே ராகத்துடன் வாசிப்பதும் இசைக்குறிப்புகள் எழுதுவதும் என்று ஏகப்பட்ட லாஜிக் இல்லா மேஜிக்குகள்.

நியுயார்க் டைம்ஸ்-ன் பிரபல திரை விமர்சகர் ஸ்டீபன் ஹோல்டன் இரு ஒரு நகைச்சுவையான மாயாஜால கற்பனை என்று விமர்சித்தார். Docwell எனும் இசை விமர்சக குழு உண்மையான இசைக் கலைஞர்களை இது இழிவுப்படுததுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

எந்த ஒரு கலை இலக்கிய படைப்புக்கும் உயிர் அதன் உள்ளடக்கம்தான். திரைப்படங்களை பொருத்தவரை கதைதான் பிரதானம் மற்ற அனைத்து தொழில் நுட்பங்களும் கதைக்கு நேர்மையாக உற்ற துணையாக இருக்க வேண்டும்.

தொழில் நுட்ப காரணங்களால் ஒரு படம் ஓடினால் அது விதிவிலக்கே தவிர உதாரணமில்லை. திரைப்படக்கலை பயில்பவர்கள் இந்தப்படத்தை காட்சியமைப்பை உருவாக்க தெரிந்து கொள்ள அவசியம் பார்க்க வேண்டும்.

ஜுன் மாதம் 20ம் தேதி ஆண்டு தோறும் உலக அகதிகள் தினமாகவும், ஜுன் மாதம் 21ம் தேதி உலக இசைதினமாகவும் அனுசரிக்கப்படுவதால் பெற்றோர்களால் கைவிடப்பட்டு அகதியைப்போல் திரியும் ஒரு குழந்தை இசை மூலம் அவர்களை அடையும் இப்படத்தை இம்மாதம் குறிப்பிட்டுள்ளேன்.

துயரங்கள் சூழந்த இந்த வாழ்க்கையில் இழப்புகள் குறித்த கவலைகள் நம்ம இநுக்கிய படியே இருக்கின்றன். என்றாலும் அன்னையின் பாரபட்சமற்ற கனிவான பார்வை போல் இயற்கையின் வனப்பு மிக்க காட்சிக்கும் மனத்தெம்பூட்டும் ஒரு தந்தையின் கரங்கள் போல தமூட்டும் இசையின் வருடல்களும் இருக்கும் வரை நம்மில் எவரும் அனாதை இல்லை என்றுதான் தோன்றுகிறது.





வியாழன், 17 ஜூன், 2010

ஒரு கணம்

அழிக்க முடியாமல்அடுத்தடுத்து
ஒன்றன் மீது ஒன்றுஅழுத்துகிறது...
ஒப்பனை முடிந்து பூசப்பட்ட வர்ணங்களை
உரிக்க முயன்று வரிவரியாய் எரிகிறது உடல்...
உளிகொண்டு
செதுக்கிய இடத்தில்வழிகிறது
உதிரம் சொட்டு சொட்டாய்...
காற்றுத் தூவிய மகரந்தத் துகள்கள்
சுடுமணலாய் கொதித்தது மனத்தழும்புகளில்...
ரோஜா இதழ்கள் சிதறிக் கிடந்தன
முட்கள் கீறிய புண்களில்...
இறக்கி வைக்க முடியாமல் கனக்கிறது
கடந்தகால நினைவுகள்...
அச்சமூட்டுகிறது
மனதைச் சுமந்தபடி திரியும் மனிதம்...
புல்வெளியெங்கும் புரண்டு
உடல் தேய்ந்து
நாவால் முதுகு வருடி
சில கணமாவது
மனமற்ற பாழ்வெளியில்
ஐந்தறிவு மிருகம் போல்
கிடக்கத் தவிக்கிறது
ஆறாவது அறிவு.

நமக்குள் விழித்திருக்கும் ஆசிரியர்;

“கடவுளின் பிரதி தாய்-கடவுளின் பரிசு குழந்தை”

உலகின் அதிகபட்ச சந்தோஷக்காரர்களாக இரண்டு பிரிவினரைக் குறிப்பிடுவார்கள். 1.மனநிலை பிறழ்ந்தவர். 2.குழந்தைகள்.
இரண்டு பிரிவினருக்கும் கள்ளங்கபடமில்லை. இரண்டு பிரிவினருக்கும் நீண்ட காலத் துயரங்கள் இல்லை. தாங்கள் எதுவாக ஆக நினைக்கிறார்களோ அதுவாகவே நினைத்த நிமிடத்தில் நினைத்த இடத்தில் ஆக முடிந்தவர்கள்.
பிரச்சனை அவர்களுக்கு சிகிச்சையளித்து நம்மைப் போலவே மாற்ற நினைக்கும் இடத்தில் துவங்குகிறதோ என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்தபடியே இருக்கிறது.
தேர்வுகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட மாதங்கள் துவங்கியவுடனே எழுகிற பதட்டம் குழந்தைகளை விடப் பெற்றோர்களுக்கு அதிகமாகி விடுகிறது.எவ்வளவு நீளமான பட்டங்களைப் பெயர்களுக்குப் பின்னால் தாங்கி நின்றாலும் குழந்தைகளை படிக்க வைக்கிற முயற்சியில் முட்டாளாக நம்மை உணர்கிற தருணம் உறுத்தியபடியிருக்கிறது.
நாமறியாமல் நமக்குள் விழித்திருக்கும் ஆசிரியர், பல சமயங்களில், பல விதங்களில் குழந்தைகளை மிரட்டியபடி கர்ஜிக்கிறார்.
எதையெல்லாம் செய்யக்கூடாது என்று உறுதியெடுத்தோமோ அதையெல்லாம் செய்து முடித்தபின் தோல்வியில் முடிகிறது நம் பாடம் புகட்டும் பொழுதுகள். நம்மை வாகனங்களாக்கிக் குழந்தைகளை நாம் நினைத்த இடத்திற்குக் கொண்டு சேர்ப்பதா? அவர்களின் வழியிலேயே அவர்களைப் பயணிக்க விடுவதா? என்ற குழப்பம் ஒருநாள் விட்டு ஒருநாள் மாறி மாறி வந்து நம்மை உறங்க விடாமல் செய்கிறது.
இன்றைய பெற்றோர்கள் தலைமுறை மீது என்னதான் ஆயிரம் ஆயிரமாகக் குற்றச் சாட்டுகளை அள்ளி வீசியபடி சபித்தாலும் ஒரு விஷயத்துக்காக பாராட்டியே ஆக வேண்டும். குழந்தைகளுடனான நெருக்கத்தில் அதிகபட்ச உச்சங்களை, முன் எப்போதையும் விட கண்டிருப்பதற்கு. இருபது முப்பது வருடங்களுக்கு முந்தைய பள்ளிக் கூட வாசல்களில் ஐஸ் விற்பவர்களையும், மிட்டாய் விற்பவர்களையும் மட்டுமே காண முடியும். இப்போதோ குழந்தைகளை விடுவதற்கும், அழைப்பதற்கும் அக்கறையுடன் காத்திருக்கும் பெற்றோர்கள்!
குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் விவாதிக்கும் ஆர்வத்துடனும், சக்திக்கு மீறிய செலவுகளால் குழந்தைகளின் திருப்தியின் எல்லை எதுவென்று தேடிய படி தவிப்புடன் இருக்கும் பெற்றோர்களை இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் காண்பதரிது.
அதன் காரணமாகவே குழந்தைகளின் மீது சுமத்தப் படுகிற பளூ அவர்களின் சக்திக்கு மீறியதாகவே இருக்கிறது. அது அவர்கள் மீது செலுத்தப் படுகிற பாசமாக இருந்தாலும், அவர்களுக்கு விதிக்கப் படுகிற பாடதிட்டங்களாக இருந்தாலும், கூடுதல் சுமையாகவே உணரப் படுகிறது.
பட்ட மேற்படிப்பை முடிக்கும் வரை இன்றைய தந்தைக்கோ தாய்க்கோ ஆன செலவைவிட இன்றைய மூன்றாம்-நான்காம் வகுப்பு படிக்கிற குழந்தைகளுக்கு ஆகும் செலவு அதிகமாக இருக்கிறது என்ற உண்மை புலப்படுகிற அதே சமயத்தில், பட்டமேற்படிப்பு முடிக்கும் வரை இன்றைய பெற்றோர்கள் சந்தித்த தேர்வுகளை விட இன்றைய மூன்றாம்-நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் சந்திக்கும் தேர்வுகள் அதிகமென்பதையும் மறுத்துவிட முடியாது.
வீக்லி டெஸ்ட், ஸ்லிப் டெஸ்ட், மந்த்லி டெஸ்ட், ரிவிஷன் டெஸ்ட், மாடல் டெஸ்ட், மெயின் எக்ஸாம், எண்ட்ரன்ஸ் டெஸ்ட் என்று மதிப்பெண்களைத் துரத்தியபடியே நகர்கிறது நம் குழந்தைகளின் நாட்கள். இதுவும் போதாதென்று இந்தி வகுப்பு, பாட்டு கிளாஸ், டான்ஸ் க்ளாஸ், யோகா க்ளாஸ், கராத்தே க்ளாஸ் என்று வகுப்புகளின் தொகுப்பாக குழந்தைகளை சகல கலா வல்லவர்களாக்கும் முயற்சிகள்!
நம்மால் இயலாதென்று விடுபட்ட விஷயங்கள், நமக்குக் கிடைக்காமல் கைநழுவிப் போன வித்தைகள், நம் கனவுகளில் சதா சஞ்சரிக்கும் நம்முடைய ஆசைகளைத் திணிக்கும் பையாகக் குழந்தைகளை ஆக்குகிறோமோ என்ற கவலை நம்மைக் குற்றஞ் சாட்டியபடியே இருக்கிறது.
எல்லாமுமாகச் சேர்ந்து குழந்தைகளைக் கல்வி ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ சராசரிக்குக் கீழே தள்ளி விடுகிறது.
போதனை முறைகளையும் கற்கும் சூழல்களையும் மாற்ற முடியாதவரை நமக்குள் விழித்திருக்கும் ஆசிரியரை சற்று சாந்தப்படுத்தி சிந்திக்க விடுவதே நல்லது.
நாம் என்ன செய்யப் போகிறோம்?

தீவுகளின் திரள்;

“தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்கள், பக்கத்திலிருக்கும் இமைகளைப் பார்ப்பதில்லை”
இந்த வார்த்தைகளில் இருக்கும் நிஜம் சுட்டும் பொருள் அனேகம். உலகம் நாளுக்கு நாள் மெல்ல மெல்லச் சுருங்கி விரல் நுனியில் குவியத்தொடங்கி விட்டது. நினைத்த இடத்திலிருந்து, நினைத்த மாத்திரத்தில், யாரையும் எளிதாக செல்லிடைப் பேசிகள் மூலம் எண்களை ஒற்றித் தொடர்பு கொள்ள முடிகிறது.
கண்ணெதிரே விரியும் அலைதளத்தில், செய்திகள் இ.மெயில் சிறகில் சுகமாய்ப் பிரயாணிக்கின்றன விரைவாக...
ஏதோ ஒரு நாட்டின் எங்கோ ஒரு மூலையில் பந்தின் மீது படும் மட்டையின் மெல்லிய ஒலி சட்டென்று நம் காதருகே விழுந்து திடுக்கிடச் செய்கிறது சாட்டிலைட் ஒளிபரப்பின் மூலம்...
அனேகமாக தொலைபேசியில்லாத வீடுகளில்லை எந்த ஒரு நகரத்திலும்...
இருப்பினும் நகரம் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகளில் ஒன்று ‘அறிமுகமின்மை'. ஒருவருக்குமே தெரியாமல் ஒரு மனிதன் நகரத்தின் மையப் பகுதியில், நெரிசல் மிகுந்த வீதியில், கதவுகள் சாத்தப்பட்ட வீடொன்றில் வசித்து, சுவடில்லாமல் மறைந்துவிட முடியும். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் அது மிக சாத்தியம்.
நம் முன் எழும் முக்கியமான கேள்வி ‘தொலைத் தொடர்பில் நாம் நினைத்துப் பார்த்திராத உச்சிக்குச் சென்றுவிட்டோம். ஆனால், அருகிலிருக்கிறவரை அறிந்திருக்கிறோமா?'
இந்தியாவின் எந்த ஒரு பெயர் பெற்ற நகரத்திலும், எந்த ஒரு பிரதான அல்லது சந்தடியற்ற வீதிகளில் வசிப்பவர்களிடம் உங்களால் மெளனத்தை மட்டுமே பெற முடிந்த கேள்வியொன்றை தைரியமாகக் கேட்டுவிட முடியும். அது, ‘உங்கள் தெருவில் வசிப்பவர்கள் அனைவரின் பெயர் மட்டுமாவது உங்களுக்குத் தெரியுமா... சந்தேகத்திற்கிடமின்றி?'
கிராமங்களையும் மெல்ல மெல்ல நகரங்களாக்கி வருகிறோம். மனிதர்களை நாகரீகப் படுத்துவதில் அலாதி ஆர்வம் நமக்கு. மறுபடியும் அவர்களை ‘வெள்ளந்தியான' மனிதர்களாக மாற்ற முடியுமா சில விஷயங்களுக்காகவாவது...?
ஆனால், இவை யாவற்றுக்குமான குற்றவாளிகளென்று யாரையாவது கூண்டிலேற்றிவிட்டுத் தப்பித்தல் ஒருபோதும் தீர்வாகாது...
காரணிகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்க, அவிழ்க்க நமக்குள் இருக்கும் சிக்கல்கள் ஒவ்வொன்றாய்க் கலையும்.

1.வீடுகள் கிராமங்களில் உள்ளதுபோல் நெருக்கியடித்துக் கொண்டில்லாமல் தனித்தனியே விலகி பதவிசாக அமைந்திருக்கும் பொதுவான தெருக்கள் அமைப்பு.

2.வெளியேறிச் சென்று விடாமல் கண்களையும் கால்களையும் பிடித்திழுக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள்...

3.கிராமவாசிகள் பெரும்பாலும் சுய தொழில் சார்ந்தவர்கள். நகரங்களில் ஏதோ ஒரு நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் சூழல்களால் நேரங்களைப் பகிர்ந்தளிக்க முடியாதபடிக்கு நெருக்கடியான கால அட்டவணை.

4.கிராமங்களில் எவ்வளவு விமர்சையாக நடந்தாலும் திருமணம் போன்ற தனிமனித விழாக்கள் வீடுகளில் நடத்தப்படுவது வழக்கம். இதனால் தெருவாசிகள் ஒவ்வொருவரையும் திருமண வேலைகளில் பங்கேற்றச் செய்யும் சாதுர்யம். நகரங்களிலோ பிறந்தநாள் விழாக்கள் கூட ஒப்பந்தக்காரர்களை நம்பி மட்டுமே...

5.ஊர் நலனுக்கு ஊர் கூடி முடிவெடுக்கும் போக்கு இல்லாத நகர அமைப்பு...
இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.கொஞ்சம் கொஞ்சமாக மனித மனம் மரத்துப் போகும்படி செய்யும் வாழ்க்கை முறை நம்மை எங்கே இட்டுச் செல்கிறது? மனிதத் தீவுகள் மிதந்தபடி... சலனமற்றிருக்கிறது பிரபஞ்சம் பல சமயங்களில்.


சில உறுதிப்பாடுகள் மூலம் நம்மை நாமே நகர்த்த முடியும் எளிதாக...

1.அடிக்கடி வசிப்பிடம் மாறும் வாய்ப்பு கிடைப்பது புதிய மனிதர்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கே என்பதைப் புரிந்து கொண்டு, நம்மை நாமே வலுக்கட்டாயமாகவாவது தெரு முழுக்க அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்-புதிதாகக் குடியேறுகையில்...

2.புன்னகையைப் பரிமாறுதல் செலவின்றி நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளும் தேகப்பயிற்சியல்லவா...? எதிர்ப்படுவோரிடம் புன்னகைக்க முயலுவோம்.

3.ஊர்களுக்கென்று அல்லது வட்டங்களுக்காக, குறைந்தபட்சம் தெருக்களுக்கென்று ஒரு நலச் சங்கம் அமைத்து அதன் மூலம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் முயற்சி சுவையானதாகவும், பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்தானே...!

4.குழந்தைகளை விளையாட்டு போன்ற தனித்திறன், அல்லது கல்வியின் பொருட்டு ஒருங்கிணைத்தல் நம் அடுத்த தலைமுறைக்கு நாம் தரும் நல்ல வழிகாட்டுதலாய் இருக்குமே...

5.ஒருநாளைக்கு ஒரு முறையேனும் நம் அண்டை வீட்டாருடன் பேசுவது என்று சங்கல்பமெடுத்துக் கொண்டால் மனிதர்களுக்கிடையே முளைத்திருக்கும் முட்புதர் கருகிவிடுமல்லவா? குறைந்தபட்சம் ஒரு ‘ஹலோ'...

நாம் என்ன செய்யப் போகிறோம்?









வரவேற்பறையில் பூத கணங்கள்:


‘மாடுகளும் ஆடுகளும் மேய்ந்தும் நடந்தும் செல்கின்ற புல்வெளி முற்றிலுமாய் அழிவதில்லை... மனிதன் நடக்கும் புல்வெளி ஒற்றையடிப் பாதையாகிவிடுகிறது'
பழக்கங்களுக்கு அடிமையானவன் மனிதன். அவனது அனுதினப் பழக்கங்கள் அவனை மெல்ல, மெல்ல விஷமாக்கி விடுகிறது. குடிகாரர்களில் தீவிரக் குடிகாரர்களைத் தேனீர்க் கடைகளில் நாம் கண்டுணர முடியும். நுட்பமாக யோசிக்கையில் பழக்கங்கள் நம்மைத் தேய்த்து தேய்த்து நம்மில் ஏற்படுத்தியிருக்கும் பாதை சரியானதுதானா என்று ஆராய்ந்து பார்க்கையில், எல்லாவற்றையும் மறுபரிசீலிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.
சிலரது வீடுகளில் பார்வையாளர்கள் யாருமற்ற, வெளிச்சமான அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் யாராவது பேசிக்கொண்டோ, பாடிக்கொண்டோ இருக்கிறார்கள். அமைதியாக சலனமற்றுத் தெருக்கள் நீண்டு கிடக், வீடுகளுக்குள் அழையா விருந்தாளிகளாக நுழைந்த கதாபாத்திரங்கள் அழுதுகொண்டோ, விரல்களை நீட்டிக் கொக்கரித்துக் கொண்டோ இருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் நம்மிடையே புழங்கும் சுலபமான வார்த்தை ‘பழக்கமாகிவிட்டது'
ஞாயிற்றுக்கிழமை என்றொரு அற்புத தினத்தை நமக்காக... நமக்காக மட்டுமே ஒதுக்கி வைத்திருந்தோம். நட்புகளைப் புதுப்பிக்க, உறவுகளைக் கொண்டாட நமக்கென்று இருந்த தினம் அது ஒன்று தான். ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் இப்போதெல்லாம் யார் வீட்டுக்கும் சென்று விட முடியாதபடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நேர இடைவெளியின்றி கண்களுக்குள் பொங்கித் ததும்புகிறது.
ஸ்பைடர் மேனிலிருந்து தலையில்லாத முண்டங்கள் வரை எல்லோர் வீட்டு வரவேற்பறைகளிலும் நமக்கு முன்னே சென்றமர்ந்து நிரம்பியிருக்கிறார்கள்.
ஒவ்வொருவரையும் எழுப்ப எத்தனிக்கையில், திடுமென அதனைப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட ‘போதைக்காரர்கள்' நம்மிடம் மூர்க்கமாக உட்புகுந்து தடுக்கிறார்கள்.
பெண்களில் சிலர் தன் குடும்ப உறுப்பினர்களுக்காக கவலைப் படுவதைக் காட்டிலும், தொடர்களில் வரும் அபிமான பாத்திரங்களுக்காக அழுவதும் குமுறுவதும் அதிகரித்து விட்டது.
மைதானத்தில் கைநழுவ விட்ட ‘கேட்ச்'களுக்காக பற்களை நெறித்தபடி கோபப் படுகிற ஆண்களில் சிலர் அடுத்தடுத்து வரும் ‘மேட்ச்'களுக்காகவும், ‘கேட்ச்'களுக்காகவும் வேலைக்கு விடுப்பெடுத்து தவங்கிடக்கிறார்கள்.
கார்டூன் படங்களுக்காக ரிமோட்டைத் தர மறுக்கும் குழந்தைகள் ‘மந்திர தந்திர'த் தொடர்களில் ஓடும் தலையில்லாத முண்டங்களை மிரட்சியுடன் பார்க்கிறார்கள்.
மருமகள்களுடனும் நாத்தனார்களுடனும் விகல்பமின்றித் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்தவர்கள் கூட இன்று, குரோதத்துடனும் ஒருவர் மீது பிறிதொருவர் சந்தேகத்துடனும் பார்க்கும் அளவுக்கு வில்லிகளாகவும், சதிகாரர்களாகவும் பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களில் சித்தரிக்கப் படுகிறார்கள்.
வீட்டிற்குள் நுழைந்த போது அற்புத விளக்காகத் தோன்றிய தொலைக்காட்சிப் பெட்டிகள், தேய்க்கத் தேய்க்கப் பூதங்கள் முளைத்து விஸ்வரூபமெடுத்து நமது அறைகளை ஆக்கிரமித்து விட்டன. அவற்றுக்கு வேலை தர முடியாமலும், திருப்பியனுப்ப முடியாமலும் ‘ஹால்'வுதீன்கள் ஆகிவிட்டோம். நம்மில் சிலரை நாற்காலியிலிருந்து ‘பிய்த்து' எடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்து நம்மை திடுக்கிடச் செய்கிறது.
எல்லோருக்குமே இதிலிருந்து எப்படி விடுபடுவதென்ற குழப்பம் துவங்கிவிட்டது. அதற்கான தீர்வுகளாக சிலவற்றைப் பார்ப்போம்.
1.குழந்தைகளுக்கான படிக்கும் நேரமென்றால், நமக்கும் அதுதான் படிக்கும் நேரமென்று நம்மை புத்தகங்களுக்கு ஒப்படைத்து விடலாம்.
2.குழந்தைகளின் விளையாட்டு நேரம், நமக்கும் தேகப்பயிற்சி நேரம் என்று முனைந்தால், அவர்களும் கூட நட்போடு இணையலாம்.
3.செலவுகளற்ற ‘வெளிச்செல்லல்'(பூங்கா, கோயில், நண்பர்கள் வீடு) வாரத்துக்கு ஒன்றாவது நிச்சயித்துக் கொள்ளலாம்.
4.குடும்பத்தினரை, குழந்தைகளை அழைத்துச் செல்லும் குறைந்த தூர வேலைகளுக்கு நடந்துதான் செல்லவேண்டுமென்று நமக்குள் ஓர் உறுதியெடுத்துக் கொள்ளலாம்.
5.சாப்பிடுவது என்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் (டி.வி. இல்லாத)ஒரே இடத்திலென்று தீர்மானித்து விட்டால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளும், இறுக்கமும் கூடக் குறையலாமல்லவா?
நம்மால் இதற்கெல்லாம் சாத்தியப்படாது என்றால் நமக்கு முன் இருக்கும் ஒரே வழி பூதங்களைக் கொண்டு வரும் அற்புத விளக்கைத் தூக்கியெறிய வேண்டியதுதான்.
நம் கையில் ‘ரிமோட்' இருக்கும் வரை முடிவெடுப்பது எளிது. தள்ளிப் போட்டால் ரிமோட் கண்ட்ரோல்களால் நாம் இயக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.
நாம் என்ன செய்யப் போகிறோம்?

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...