வியாழன், 13 நவம்பர், 2014

டிம் ஹெதரிங்டன் & க்ரிஸ் ஹோண்ட்ராஸ்

கலகக்கார கலைஞர்கள் -6
                      
Displaying timhetherington1.jpg
 டிம் ஹெதரிங்டன்

       தங்கள் சொந்த தேசத்திற்காக அல்லது தாங்கள் சார்ந்த கொள்கைகளுக்காக போராடி பாதிப்புகளுக்குள்ளான கலைஞர்கள் பலர் இருக்கின்றனர். அதே நேரம் பற்றியெரியும் பிரச்சினை பூமிகளுக்கு பயணித்து, அங்கு பாதிக்கப்படும் அப்பாவி மக்களைப் பற்றியும், அங்கு நடக்கும் அநீதிகள் பற்றியும் வெளி உலகுக்கு வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் கலைஞர்களும் இருக்கிறார்கள். டிம் ஹெதரிங்டனும் க்ரிஸ் ஹோண்ட்ராஸ்-ம் இந்த இரண்டாவது பிரிவைச் சார்ந்தவர்கள்.
           
    சதா சர்வ காலமும் ஆபத்தான கலவர பூமிகளில் சுற்றித்திரிபவர்கள் பத்திரிகை நிருபர்கள், புகைப்பட நிபுணர்கள் மற்றும் ஆவணப்படக் கலைஞர்கள். சாவை ஒவ்வொரு நொடியும் உரசிச்செல்லும் துணிச்சலும், உயிரை துச்சமாக நினைக்கும் தியாக மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே இந்த பணிகளில் ஈடுபடுகிறார்கள். அப்படியானவர்கள் டிம் ஹெதரிங்டனும், ஹோண்ட்ராஸ்-ம்
            
    2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந்தேதி அவர்கள் இருவரும் லிபியாவிலுள்ள மிஸ்ரடா நகரில் சிறிய ரக ராக்கெட் வீச்சுக்களினாலும் துப்பாக்கி குண்டுகளாலும் துளைக்கப்பட்டு இறந்த போது அவர்களுக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை.
           
    டிம் ஹெதரிங்டன் 1970 ஆம் வருடம் டிசம்பர் 5-ந்தேதி இங்கிலாந்திலுள்ள பிர்கன் ஹெட் நகரில் பிறந்தவர். என்றாலும் அவர் வளர்ந்தது சவுத் போர்ட்டில் உள்ள செஃப்டானில்.. அவரது முழுப்பெயர் சற்று நீளமானதுடிமோத்தி அலிஸ்டர் டெலிமாச்சூஸ் டிம் ஹெதரிங்டன்' என்பதுதான் அவரது பெயர். அவரது பள்ளிப்பருவம் செயிண்ட் பாட்ரிக் பள்ளியிலும் பின்னர் ஆங்கில இலக்கியம் மற்றும் செவ்வியல் துறையில் பட்டப்படிப்பினை ஜேசூயிஸ்ட் கல்லூரியிலும் முடித்தார்.
            
    பாட்டியின் செல்லமாக வளர்ந்த அவருக்கு அன்பும், அரவணைப்பும், ஆசைப்பட்ட பொருட்களும் பாட்டியின் வழியே கிடைத்தன. இப்படித்தான் டிம் ஹெதரிங்டன் ஆசியாவைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் கிளர்ந்த போது, அவரது பாட்டிதான் 5000 யூரோ டாலர்கள் கொடுத்து அனுப்பி வைத்தார். இந்தியா, சீனா, திபேத் ஆகிய நாடுகளைச் சுற்றிவந்தார். அந்த பயணம்தான் அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
            
     அந்த பயணத்தில் ஒரு சாதாரண சுற்றுப்பயணியாக தனது கையடக்க கேமராவில் படமெடுத்து வந்த அவருக்கு புகைப்படம் எடுக்கும் கலையில் ஆர்வம் பிறந்தது. மாலை நேர வகுப்பில் புகைப்படக்கலை பற்றி கற்றுக்கொள்வதற்காக சேர்ந்தார். அதன் பிறகு அப்போது பத்திரிகைத் துறையில் பிரபலமாய் இருந்த புகைப்படக்கலைஞர்கள் டேனியல் மெடோவல் மற்றும் காலின் ஜெய்சன் ஆகியோரிடம் புகைப்படக்கலையின் நுணுக்கங்கள் பற்றி கற்றுக்கொண்டார்.
            
     பிக் இஷ்யூ என்ற என்ற பத்திரிகையில் அவருக்கு வேலை கிடைத்தபோது அவருக்கு அமைந்த முதல் பணியே சவாலானதுதான். லைபீரியா, சியாரோ லியான்  போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுக்கலவரங்கள் தலைவிரித்தாடின. கலவரங்களுக்கிடையே பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றியும் அவர்களது இழப்புகள், துயரங்கள் பற்றியும் தகவல்களை புகைப்படங்களோடு சேகரிப்பதுதான் அவருக்கு இடப்பட்ட பணி.
            
   லைபீரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகளைக் கொண்டு ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டது. The devil came on camel back  என்ற பெயரில் ஒளிபரப்பான அந்த படம் டிம் ஹெதரிங்டன்னுக்கு ஒரு புதிய அடையாளத்தை தந்தது.
            
     அதற்குப்பிறகு நைஜீரியா பற்றிய அவரது பதிவுகள் Unreported world என்ற பகுதியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த இரண்டு படங்களில் அவரது பணியினைப்பார்த்து மனித உரிமை அமைப்பு அவரை புதிய பணிகளுக்காக அழைத்தது. அவர்களது ஆலோசனைக்கு ஏற்ப இலங்கை சென்றார். அங்கு உள்நாட்டுப்போர் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரம். கொடூரமான இன அழிப்பு பற்றிய தகவல்களுக்காக அவர் சென்றிருந்தபோது, அவரை அங்கு அனுப்பிய மனித உரிமை அமைப்பே அங்கு அவரது உயிருக்கு பாதுகாப்பில்லை, எனவே மேற்கொண்டு எந்த பணியிலும் ஈடுபடவேண்டாம், உடனே நாடு திரும்பவேண்டும் என அழைத்தது. அந்த அழைப்பை மீறமுடியாமல் திரும்பினார்.
            
    சர்வதேச மனித உரிமை அமைப்பில் சேர்ந்தபிறகுதான் அவர் பிரச்சினை பூமிகளுக்கு அதிகம் பயணிக்க நேரிட்டது. இராக்கில் அமெரிக்க தாக்குதல்களின் போதும், ஆப்கனில் உக்கிரமாக நிகழ்ந்த உள்நாட்டு யுத்தத்தின் போதும் அந்த பகுதிகளில் செய்தி சேகரிக்க அங்கு அனுப்பப்பட்டார். அங்கே அவர் எடுத்த புகைப்படங்கள்தான்  உண்மை நிலைமைகளை பிரதிபலிப்பதாக இருந்தன. இதன் காரணமாக உலக பத்திரிகையாளர் கழகம் அவருக்கு அந்த ஆண்டுக்கான (2007) சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருதை அளித்து கௌரவித்தது.
            
    ஆப்கானின் உள்நாட்டு யுத்தங்கள், அதன் விளைவுகள் குறித்து அவர் தேசம் முழுக்க சுமார் 15 மாதங்களுக்கு மேலாக சுற்றித்திரிந்து, அவரது பத்திரிகை உலக நண்பர் செபாஸ்டியன் ஜங்கர் என்பவருடன் இணைந்து 300 மணி நேரம் கொண்ட வீடியோ பதிவுகளை எடுத்தனர். அதனை  இருவரும் சேர்ந்து ஒரு மணி நேரம் ஓடக்கூடிய ஆவணப்படமாக உருவாக்கினர். அந்த படத்துக்கு Restrepo  என்று பெயரிட்டு 2010-இல் திரையிட்டனர். அந்த படம் ஆஸ்கார் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் தேர்வாகியது. பரிசு கிடைக்காவிட்டாலும், அதன் தாக்கம் பலமாக இருந்தது. சண்டான்ஸ் படவிழாவில் சிறந்த ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
            
    அதே 2010-இல் தனது பத்திரிகை உலக அனுபவங்கள் மற்றும் யுத்த பூமியில் தான் சந்தித்த அபாயகரமான நிகழ்வுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கிட்டதட்ட ஒரு சுயசரிதம் போல “ The Diary”  என்ற குறும்படத்தை எடுத்தார்.
            
    பற்றியெரிந்து வறண்டு தவித்துக் கிடக்கும் சோமாலியாவைச் சேர்ந்த இடில் இப்ராஹி என்ற பெண்ணைத்தான் அவர் காதலித்து, மணம் செய்து கொள்ளாமல் மனமொத்து வாழ்ந்துவந்தார்.
            
    இந்த தருணத்தில் அவர் லிபியா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது40 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி செய்துவந்த கடாஃபியை எதிர்த்து லிபியாவில் 2011- பிப்ரவரி மத்தியில் மிகப்பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டது. அவரை எதிர்த்துப் போராடிய குழுக்களோடு லிபிய இராணுவத்தின் ஒரு பிரிவினரும் இணைந்து கொண்டதால், உலகத்தின் பார்வையில் அது முக்கியமான நிகழ்வாக கவனத்தை ஈர்த்தது. கடாஃபி தனக்கென உருவாக்கிய பாதுகாப்புப் படைக்கு எல்லா அதிகாரத்தையும் தந்திருந்தார்.
            
    ஆயுதம் ஏந்திய அவரது படை அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியது. போராளிகளுக்கும் மக்களிடையே பெரும் ஆதரவு இருந்தது. அங்கு நடக்கும் புரட்சியின்போது மீறப்படும் மனித உரிமைகள் குறித்து உலக மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கடமை இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கருதின. எனவே டிம் ஹெதரிங்டன் அங்கு பயணப்பட்டார். அவரோடு கெட்டி நியூஸ் என்ற அமைப்பின் புகைப்படக்காரர் கிரிஸ் ஹோண்ட்ராஸ்-ம் இணைந்துகொண்டார்.
           
Displaying hondros020708a.jpg
க்ரிஸ் ஹோண்ட்ராஸ்

    கிரிஸ் ஹோண்ட்ராஸ் மார்ச் 14, 1970 ஆம் வருடம் பிறந்தவர். அமெரிக்காவின் வட கரோலினாவைச் சார்ந்தவர். அவரது பெற்றோர்கள் இரண்டாம் உலக யுத்தத்தின்போது அகதிகளாக அமெரிக்கா வந்தவர்கள். அவரது தந்தை கிரேக்கத்தையும், தாய் ஜெர்மனியையும் சார்ந்தவர்கள். ஆங்கில இலக்கியம் மற்றும் காட்சி ஊடக தொடர்பியலில் பட்டம் பெற்ற ஹோண்ட்ராஸ் மிக ஆர்வத்துடன் கெட்டி நியூஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். யுத்தத்தின் கொடுமையால் அகதிகளான தந்தை தாயின் இரத்தம் அவரது உடலிலும் ஓடுவதாலோ என்னவோ, அவரும் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளின்மீது அதீதமான வெறுப்பை கொண்டிருந்தார். அதன் காரணமாக டிம் ஹெதரிங்டன் போல யுத்தபூமிகளின் கொடூரமான மறுபக்கத்தை உலகுக்கு காட்டும் முயற்சியில் தனது உயிரைப்பற்றிய அச்சமின்றி இருந்தார்.
            
     கொசாவா, அங்கோலா, சியாராலியோன், லெபனான், ஆப்கான், காஷ்மீர், பாலஸ்தீனம், இஸ்ரேல் என அவர் பயணிக்காத போர்க்களங்களே இல்லை என்னும் அளவுக்கு சுற்றித்திரிந்தவர். லிபியாவின் மிஸ்ரடா நகருக்கு வந்த பிறகு அவருக்கு சரியான துணையாக ஹெதரிங்டன் விளங்கினார். இருவரும் சேர்ந்து போராளிக்குழுவுடன் பயணித்து அவர்கள் சந்திக்கும்  காட்சிகளை பதிவு செய்யும் ஆவலில் இருந்தனர்.
            
     அதற்கான வாய்ப்பு ஏப்ரல் 20 -ந்தேதி ( 2011) யில் கிடைத்தது. அன்று புதன் கிழமை. கடாஃபியின் பாதுகாப்புப் படையினரிடம் பலம் வாய்ந்த ஆயுதங்கள் இருந்தன. போராளிகளிடம் ஆயுதபலம் இல்லை.ஆனால் துணிச்சலும், அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்ற ஆக்ரோஷமும் அவர்களிடம் பொங்கி வழிந்தது.
            
    ஏற்கனவே குண்டுவீச்சால் சிதிலமடைந்திருந்த ஒரு கட்டடத்தில் மறைந்த படியே புரட்சிப்படையினர் முன்னேறிக்கொண்டிருந்தனர். அவர்களோடு ஹெதரிங்டன்னும், ஹோண்ட்ராஸும் இணைந்து கொண்டனர். சிறிய ரக ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள் அவர்களை நோக்கி அனல் மழையென பொழிந்தன. அந்த தாக்குதலில் மேற்கண்ட இருவர் உட்பட சுமார் 20 பேரின்மீது குண்டுகள் பாய்ந்தன. ஹெதரிங்டன் கடுமையாக குண்டடிப்பட்டு அந்த இடத்திலேயே இறந்தார். ஹோண்ட்ராஸ் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவர்களோடு சேர்ந்து அந்த தாக்குதலின் போது மொத்தம் 12 பேர் இறந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் கிரிஸ்டோபர் பிரவுன் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக காயங்களோடு தப்பித்த ஒரே பத்திரிகையாளர்.
            
   இருவரது உடல்களும் அமெரிக்கா வந்த போது அமெரிக்க செனட் உறுப்பினர் ஜான் மெக்கெயின் (2008இல் இவர்தான் அமெரிக்க குடியரசு தலைவர் தேர்தலில்  போட்டியிட்டார்) மதிப்புமிக்க அமெரிக்க கொடி ஒன்றை அனுப்பிவைத்தார். அது வீரச்செயல் புரிந்தவர்களுக்கு மட்டும் அளிக்கும் கௌரவம் மிக்க செயல்.
            
   லிபிய புரட்சி 2011 அக்டோபர் மாதம் கடாஃபி கொல்லப்பட்டபிறகு முடிவுக்கு வந்ததும், புரட்சியாளர்கள் மிஸ்ரடா நகரில் உள்ள அஜ்டேபியா சதுக்கத்துக்கு டிம் ஹெதரிங்டன் பெயரைச்சூட்டினர்.
            
   சர்வதேச மனித உரிமை அமைப்பு டிம் ஹெதரிங்டன் நினைவாக புகைப்படக்கலைஞர்களுக்கு 20,000 அமெரிக்க டாலர்கள் தொகையுடன் ஒரு விருதை ஆண்டு தோறும் தருவதாக அறிவித்தது. 2013 ஆம் ஆண்டு பிரெஞ்சு புகைப்படக்காரர் ஓலிவர் ஜோபார்ட்  என்பவர் அந்த விருதைப் பெற்றார்.
           
    Here I Am   என்கிற தலைப்பில் ஹெதரிங்டன் வாழ்க்கை வரலாற்று நூலை  ஆலன் ஹாஃப்மன் என்பவர் எழுதியிருக்கிறார். செபாஸ்டியன் ஜங்கரும், ஹெதரிங்டன்னும் இணைந்து ஆப்கனில் எடுத்த வீடியோ பதிவுகளின் எஞ்சிய பகுதிகளை ஜங்கர் ஒழுங்கு செய்து மற்றொரு ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்.
            
    ஹோண்ட்ராஸ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அடிக்கடி
நான் முதுமையை வெறுக்கிறேன். ஏனெனில் அது ஒரு மனிதனை இயங்கவிடாமல் செய்துவிடும்என்பாராம். அவர் சொன்னது போல கடைசி வரை இயங்கியபடி தனது மரணத்தை இளம் வயதில் தழுவினார்
           

  நன்றி: 'நிழல்'           

2 கருத்துகள்:

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...