செவ்வாய், 15 மே, 2012

ஈரானிய சினிமாவின் புதிய எழுச்சி

          2011- ம் ஆண்டில் வெளிவந்த உலகத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுவிட்டது. எதிர்பார்த்தது போலவே ‘தி ஆர்ட்டிஸ்ட்' திரைப்படமும் ‘ஹ்யூகோ' திரைப்படமும் தலா ஐந்து விருதுகளை பங்கிட்டுக் கொண்டன. பிரபல ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப் மூன்றாம் முறையாக ஆஸ்கர் விருதைப் பெற்றுக் கொண்டார்.
          மெளன மொழிப்படமாக எடுக்கப்பட்டிருந்த ‘தி ஆர்ட்டிஸ்ட்' திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணம் படத்தின் கரு, களம், பண்பட்ட நடிப்பு, எடுக்கப்பட்ட விதம் என்று பல காரணங்கள் இருந்தாலும் சலனப்படங்கள் வெளியான கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள் ‘ஆர்ட்டிஸ்ட்', மெளனப் படங்களுக்கான அஞ்சலி என்றுதான் கருதுகிறார்கள்.
        மார்ட்டின் ஸ்கார்ஸஸியின் ‘ஹ்யூகோ' படமும் விமர்சகர்களால் கணிக்கப்பட்ட படம்தான். ஆனால் ஆஸ்கர் படவிழாவில் மட்டுமல்ல; பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் மிக அதிகமான அளவில் பார்வையாளர்களை கவர்ந்த படம் என்றால் அது ஈரானின் ‘SEPERATION'  -ஐ தான் குறிப்பிட வேண்டும்.
        பொதுவாக ஈரானியத் திரைப்பட இயக்குநர்கள் தங்கள் திரைப்படங்களுக்கான கருவை மிக எளிதாக கட்டமைத்துக் கொள்வார்கள். சிக்கலான திருப்பங்களோ, பரபரப்பான காட்சிகளோ இருக்காது. அன்றாடம் வாசிக்கும் செய்தித்தாளின் ஒரு வரிச் செய்தியிலும் அவர்களால் மெலிதான ஒரு திரைக்கதையைத் தந்துவிட முடியும்.
        CLOSE-UP என்றொரு திரைப்படம். ஈரானின் பிரபல இயக்குநர் மக்மல் பஃப் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் அடிப்படையில் உருவானது.
         மக்மல் பஃப்-ஐ பார்த்தே இராத ஒரு குடும்பத்திடம் நான் தான் மக்மல் பஃப் என்று ஏமாற்றுகிறான் ஒருவன். பணத்துக்காகவும், சில சலுகைகளுக்காகவும் அவன் அப்படி பொய் சொல்கிறான். ஆனால் சில நாட்களிலேயே அவன் மக்மல் பஃப் இல்லையென்று கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறான். இது செய்தியாக ஈரானியப் பத்திரிகைகளில் வெளிவந்தது.
        இதனை ஈரானின் மற்றொரு பிரபல இயக்குநர் கியாஸ்தர்வஸ்கி வாசிக்கிறார். அவ்வளவுதான். கேமரா, பட யூனிட் சகிதம் கைதான நபர் அடைபட்டிருக்கும் சிறைச்சாலைக்கு செல்கிறார். அந்த வழக்கின் விசாரணையையும், பிடிபட்டவனின் அதற்குப் பிறகான நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பிந்தைய நிலைமையையும் அப்படியே நேரிடையாகப் படம் பிடிக்கிறார். (சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியுடன்) விசாரணைக்கு முந்தைய சம்பவங்களை சுருக்கமான திரைக்கதையினால் படமாக்குகிறார்.
       ஈரானில் சட்டப்படி குற்றம் சுமத்தியவர்களே பிற்பாடு குற்றவாளியை மன்னிப்பதாக முடிவெடுத்தால் தண்டனை ரத்து செய்யப்படும். அந்த அடிப்படையில் குற்றவாளி விடுதலையாகிறான். விடுதலையான பின் தான் ஏமாற்றிய விதத்தை இயக்குநர் கியாஸ்தர்வஸ்கியிடம் விவரிக்கிறான். அவனையே முன்பாதி கதையிலும் நடிக்க வைக்கிறார். அதோடு இல்லாமல் குற்றவாளியை நிஜ மக்மல் பஃப்-இடம்  அழைத்துச் சென்று அறிமுகப் படுத்துகிறார். இதுவும் படத்தில் ஒரு காட்சியாகிறது.
         உலகத் திரைப்பட வரலாற்றில் நானறிந்த வரையில் ஒரு திரைப்படத்தின் பாதி பகுதி வழமையான முறையில் காட்சிகளாகப் பிரிக்கப்பட்டு படமாக்கப்பட்டு, மீதமுள்ள பகுதி நேரிடையான சம்பவங்களை படமாக்கிய உத்தி, ‘குளோசப்' படத்தில்தான் இடம் பெற்றதாகக் கருதுகிறேன். விசாரணை நடக்கும் நீதிமன்றக் காட்சியைக் கூட நேரடியாகவே படம்பிடித்துள்ளனர்.
       படத்தின் இயக்குநர் க்யாஸ்தர்வஸ்கி ஒரு புதுமை விரும்பி. இப்படியான புதுமைகளை எப்படிக் கண்டடைகிறீர்கள் என்று ஒரு நண்பர் அவரைக் கேட்டதற்கு, ‘தேவையும் சூழலும்தான் மனிதனை புதுமையை நோக்கித் துரத்துகிறது' என்று பதிலளித்தாராம்.
         உண்மைதான், ஈரானிய திரைப்படத் தணிக்கைக் குழு மிகக் கடுமையான விதிகளைப் பின்பற்றி இயங்குகிறது. ஆண் பெண் தொடுதலோ, பெண்களின் உடலுறுப்புகளை ஆபாசமாக வெளிப்படுத்துதலோ, அரசியலை- நிர்வாகத்தை நேரடியாக விமர்சித்தலோ எந்தக் காட்சியிலும் இடம் பெறக் கூடாது என்பது முக்கியமான விதி. ஈரானின் தேசியம், மதம் மற்றும் பண்பாடுகளையும் இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் வசனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதில் யாருக்கும் விதிவிலக்கும் இல்லை.
        கிட்டதட்ட சர்க்கஸில் ஒரு நபரை நிற்கவைத்து அவரைச் சுற்றிலும் கத்திகள் வீசப்படுவது போல, ஈரானில் தணிக்கை விதிகள் படைப்பாளிகளைச் சுற்றி வீசப்படுகின்றன.
        ஈரானின் இயக்குநர்கள் தங்களின் கருத்துக்களை, விமர்சனங்களை விதிகளின் சூறைக்காற்றில் சிதைவுறாமல் மிதக்கும் இலைகளைப்போல் மிக நுட்பமாக திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். அவை உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்களிடையே பலத்த அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.
        உலகின் மிகச் சிறந்த பத்துத் திரைப்படங்களை பட்டியலிடும்படி எந்த விமர்சகரிடம் கேட்டாலும் அதில் நிச்சயமொரு ஈரானியத் திரைப்படமிருக்கும்.  குறிப்பாக Children of Heaven, Colour of Paradise, Cyclist, Apple, White Balloon, Baran ஆகிய திரைப்படங்களுக்கு உலகம் முழுக்க மொழிகள் கடந்த ரசிகர்கள் இருக்கிறார்கள்.
         ஆனால், இத்தனை சிறப்பான படங்களிருந்தும், ஈரானியப் படங்கள் 2011 வரை ஆஸ்கார் விருதினை வென்றதில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் இவ்வாண்டு ‘Seperation' திரைப்படம் ஆஸ்காரில் பிறமொழிப் படங்கள் வரிசையில் சிறந்த திரைப்படமாக தேர்வாகியுள்ளது.
         ஆஸ்கார் என்பது முடிவான அங்கீகாரம் என்று சொல்லிவிட முடியாது. ஆஸ்கார் விருது இன்னும் அதிகமான கவனத்தை ஈர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
        ‘Seperation' திரைப்படத்தின் கதை ஒரு பயணச்சீட்டின் பின்புறம் எழுதிவிடக் கூடிய அளவு மிகச் சுருக்கமானதுதான். எல்லா மனிதருக்குள்ளும் ஒரு குற்றவாளியும் ஒரு நீதிபதியும் மறைந்தே இருக்கிறார்கள் என்பது  படத்தின் ஒரு வரி நீதி.
         விவாகரத்து கோரி மனு செய்திருக்கும் நடேர் மற்றும் சிமின் ஆகியோரின் ஒரே பெண் டெர்மே. இருவரின் பிரிதலுக்குப் பிறகு யாருடன் மகள் இருக்க வேண்டும் என்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு. வழக்கு நீதிமன்றத்திலிருக்கும் போது சிமின், பிரிந்து சென்று விடுகிறார். தனது வயதான நோயுற்ற தந்தையை கவனிப்பதற்காக ரசையா என்ற கர்பிணிப் பெண்ணை பணிக்கமர்த்துகிறார் நடேர். அவர் அலுவலகம் சென்றிருக்கும் தருணத்தில் நடேரின் நோயுற்ற தந்தை கட்டிலை விட்டு இறங்கிவிடாமலிருக்க அவரது கைகளை கட்டிலோடு வைத்து பிணைத்து விட்டு, தனக்காக மருத்துவரைப் பார்க்க சென்றுவிடுகிறார் ரசையா. பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் டெர்மே தாத்தா கட்டிலிலிருந்து கீழே விழுந்து பேச்சு மூச்சற்று கிடப்பதைப் பார்த்து அலறுகிறாள். நடேர் தனது தந்தையின் நிலையைப்பார்த்து மிகுந்த கோபமடைகிறார். வீட்டுக்கு திரும்பிய ரசையாவிடம் சண்டை போடும்போது ரசையா மாடிப்படியில் தவறி விழுகிறார்.
        அடுத்த மருத்துவப் பரிசோதனையில் ரசையாவின் கர்ப்பம் கலைந்துவிடுவது தெரிகிறது. நடேர் தள்ளி விட்டதால் தான் இப்படியானதாக ரசையா புலம்ப, அவளது கணவன் நடேர் மேல் வழக்கு தொடுக்கிறார். குற்றம் நிரூபிக்கப் பட்டால் நடேருக்கு மூன்றாண்டு சிறைதண்டனை நிச்சயம் என்ற நிலையில் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் இரண்டு குடும்பத்தினரும் ஒரு உடன்பாட்டுக்கு முயற்சிக்கிறார்கள்.
        இறுதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு வழக்கைத் திரும்பப் பெற ஒப்புக் கொள்கிறார் ரசையாவின் கணவன் ஹுஜட். நடேரின் மனைவி சிமின் தான் இந்த ஏற்பாட்டினை செய்கிறார். ஆனால் நடேருக்கு ஒரு தீர்மானமான நம்பிக்கை இருந்தது. நிச்சயம் ரசையாவின் இந்த நிலைக்குத் தான் காரணமில்லை என்று. எனவே ரசையாவிடம் தொகைக்கான காசோலையைத் தரும்போது, ரெசையாவை  குரான் மீது ஆணையிட்டு ‘நடேர்தான் குற்றவாளி' என்று கூறிவிட்டு பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறார். ரெசையாவின் உள்மனம் உறுத்துகிறது. ஏனெனில் இந்த நிகழ்ச்சி நடக்கும் சில நாட்களுக்கு முன்புதான் கார் மோதிய சம்பவம் ஒன்று நடந்து, அதன் பிறகான மருத்துவப் பரிசோதனையில் கர்ப்பம் கலைந்ததை அறிந்ததால்தான்.

        குடும்பக் கடன், கணவரின் வற்புறுத்தல் காரணமாக நடேர் மீது வழக்கு தொடுக்க சம்மதித்திருந்தாள். ஆனால், பணத்தை பெறும் சமயம், அது பாவத்தின் பணம்; அதன் காரணமாக தன் குழந்தையின் எதிர்காலம் சூன்யமாகி விடும் என்று சத்தியம் செய்ய மறுக்கிறாள்.
         நடேர், சிமின் விவாகரத்து நீதிமன்றத்தில் சட்டப்படி உறுதி செய்யப் படுகிறது. இறுதிக் காட்சியில் மகள் டெரிமேவிடம் நீதிபதி, “நீ யாருடன் செல்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் தன் பெற்றோரை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு நீதிபதியிடம் தனியே தன் விருப்பத்தைக் கூற விழைகிறாள். நடேர், சிமின் வெளியே காத்திருக்க, படம் நிறைவடைகிறது.
        ஈரானின் திரைப்படங்கள் வழக்கமாக ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்பங்களில் பெரிதாக கவனம் செலுத்தப்படாதவையாக இருக்கும். ஆனால், Seperation  திரைப்படத்தில் அற்புதமான ஒளிப்பதிவு, நேர்த்தியான படத்தொகுப்பு, அருமையான இசை, மிகப் பொருத்தமான இயல்பான நடிப்பு என்று எல்லாத் துறைகளிலும் உலகத் தரத்துக்கு சவால் விடுபவையாக இருக்குமாறு இயக்குநர் அஸ்கர்ஃபர்ஹாதி கவனமாக அணிசேர்த்திருக்கிறார். தொழில்நுட்ப பங்களிப்புகளும் ஒரு திரைப்படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்க்க அத்தியாவசியம் என்பதை ஈரானியின் திரையுலகிற்கு  அஸ்கர் நிரூபித்திருக்கிறார்.
       அஸ்கரின் இந்த புதிய எழுச்சி ஈரான் திரைப்படத்துறைக்கு புத்துணர்வைத் தந்திருக்கும். அதற்கான சான்றே ஆஸ்கார் விருது!

நன்றி: 'காக்கை சிறகினிலே ' மே - 2012

4 கருத்துகள்:

  1. அழகான இரண்டு விமர்சனங்கள் ஒரே பதிவில்...முழுமையான நிறைவு.Close-Up, Children of Heaven, Colour of Paradise, Baran போன்ற ஈரானிய படைப்புகளை கண்ட அனுபவம் மனதில் நிறைந்திருக்கிறது ஐயா..அதுவும் பாரான்...தென்றலாய் வந்து என்னைத் தீண்டிய ஈரத்துளிகள்..மறக்க முடியாத, காதலே இல்லாத காதல் சித்திரம்.

    இதில் Seperation படம் இன்னும் பார்க்க நேரம் கிடைக்கவில்லை..பார்க்கின்ற ஆவலை தங்களது எழுத்துக்கள் மேலும் வலுப்படுத்திவிட்டன. கண்டிப்பாக பார்க்கிறேன்..

    ஒரு நிறைவான விமர்சனம் படித்த திருப்தி...ரொம்பவும் சிறப்பா எழுதியிருக்கீங்க..அதுவும் ஈரானிய சினிமா, சென்சார் விதிகள் ஆகியவற்றை பற்றிய விளக்கமும் உண்மைகளும் அருமை..மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. என் விருப்பமான சேனல் Z studio ஆனாலும் நான் படம் பார்ப்பது மிக அரிதாகிவிட்டது. தங்கள் பட விமர்சனங்கள் நான் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி குமரன் . பழனி, கொடைக்கானல் என்று சுற்றுலா சென்று விட்டு சமீபத்தில்தான் திரும்பினோம் . ஆகவேதான் தாமதம். இரானிய திரைப்படங்களின் பாதிப்பில் சிக்காத உலக சினிமா ரசிகர்களே அனேகமாக இல்லை எனலாம். உங்கள் பரந்துபட்ட சினிமா அறிவில் இரானிய படங்கள் பற்றிய புரிதல் நிச்சயம் இருக்கும் என்று தெரியும். அண்ணல் நான் மிகவும் வியந்த விஷயம் close -up திரைப்படத்தை பார்த்தவர்கள் மிகக்குறைவு . ஆனால் அதையும் தேடி பிடித்து பார்த்து இருக்கிறீர்கள் என்பது உங்கள் அசாதரணமான தேடலை புலப்படுத்துகிறது. baarun என்னை கவர்ந்த மிக சிறந்த படம். உங்கள் ரசனைக்கு என் வந்தனம்

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி மணிச்சுடர் . அட z studio சேனலை விரும்பி பார்ப்பவரா நீங்கள் வாழ்த்துகள் . seperataion மாதிரியான படங்கள் அதில் வெளியாக சில மாதங்கள் ஆகலாம். தரமான dvd கல் கிடைக்கின்றன முடிந்தால் கிடைக்கின்ற படங்களை பார்க்கவும் நன்றி

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...