ஞாயிறு, 2 ஜூலை, 2017

மார்லன் பிராண்டோ


       

மனிதனெனும் வகையில் மார்லன் பிராண்டோ ஒரு தேவன்
நடிகனெனும் வகையில் அவன் ஒரு பிசாசு
                                  _பெர்னார்டோ பெர்ட்டுலூசி
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி பிறந்துவிட்டால் ஆஸ்கார் ஜுரம் உலக சினிமா வெளியில் பற்றிக்கொள்ளும். உலக திரைக்கலைஞர்களின் ஒருமித்த ஒரே கனவு ஆஸ்கார் மேடையில் ஏறுவதாகவே இருக்கும். ஆஸ்காருக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பிடித்து விட்டால் கூட போதும், திரைக் கலைஞனாக உருவெடுத்ததன் பலன் கிடைத்துவிடும் என ஏங்காகாதவர்கள் இல்லை. ஆனால் அத்தகைய ஆஸ்கார் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு, அதுவும் பிரதான விருதான சிறந்த நடிகர் பட்டம் கிடைத்தும் அதனை வாங்க மறுத்து உலகின் கவனத்தை ஒட்டு மொத்தமாக ஈர்த்தவர் மார்லன் பிராண்டோ. ஆஸ்கார் அறிவிக்கப்பட்டு வாங்க மறுத்த அல்லது அங்கு மறுத்த கலைஞர்கள் வுடி ஆலன், கோடார்ட், டுடி நிக்கலஸ் உட்பட ஏழு பேர். ஆனால் பிராண்டோ தவிர மற்ற ஆறு பேர் மறுத்ததற்கு அவர்களின் சொந்த பிரச்சினைகள் அல்லது அவர்கள் சார்ந்த தனியார் அமைப்புகளின் பிரச்சினைகள்  காரணம். ஆனால் பிராண்டோ மருத்தற்குக் காரணம்   தன் சொந்த பிரச்சினைக்காக அல்ல, புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக என்பது இன்னமும் ஆச்சர்யம் தரக்கூடிய ஒன்றுதானே..
      1973 ஆம் வருடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 45-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா. கிளிண்ட் ஈஸ்ட்வுட், சார்லஸ் ஹெஸ்டன், ரோஜர் மூர் உள்ளிட்ட ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்கும் மாபெரும் திரை விழா இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளோடு கோலாகலமாகத் தொடங்குகிறது. 1972-ல் வெளியாகி உடனடியாக கிளாஸிக்அந்தஸ்தைப் பெற்று மிகப் பெரிய வெற்றியடைந்த தி காட்ஃபாதர்படத்துக்கு சிறந்த படம், தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் 3 விருதுகள் கிடைக்கின்றன. சிறந்த நடிகருக்கான விருது, ‘தி காட்ஃபாதர்படத்தில் மிகப் பெரிய நிழல் உலக தாதாவாகவும் பொறுப்புள்ள குடும்பத் தலைவராகவும் கார்லோன் என்னும் அற்புதமான கதாபாத்திரத்தினை  தன் நடிப்பால் உயிரூட்டிய மார்லன் பிராண்டோவுக்கு அறிவிக்கப்படுகிறது. அவரது பெயரை அறிவிக்கிறார், நடிகர் ரோஜர் மூர். அனைவரின் கண்களும் மார்லன் பிராண்டோவைத் தேடுகின்றன. ஆனால், அவருக்குப் பதில் செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷீன் லிட்டில்ஃபெதர் மேடையேறுகிறார்.
பிராண்டோவின் பிரதிநிதியாக சாஷீன் வந்திருக்கிறார் என்பதாகப் புரிந்துகொண்டு, ஆஸ்கர் விருதை அவரிடம் நீட்டுகிறார் ரோஜர் மூர். கையை உயர்த்தி அதை மென்மையாக மறுக்கும் சாஷீன், மைக் முன் சென்று நிற்கிறார். தனது கையில் இருக்கும் கடிதத்தைப் பார்வையாளர்களுக்கு வாசித்துக் காட்டுகிறார். விருதை வாங்க மறுத்து பிராண்டோ எழுதிய கடிதம் அது.
இந்த மாலைப் பொழுதில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை அவர் சொல்லச் சொன்னார். அதாவது, தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதை வாங்குவதை வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்!என்கிறார். சாஷீன் நடிகை மட்டுமல்ல  நேஷனல் நேடிவ் அமெரிக்கன் அஃபர்மேடிவ் இமேஜ் கமிட்டிஎனும் அமைப்பின் தலைவரும் கூட!
பிராண்டோவின் தார்மிகக் கோபத்தைப் புரிந்து கொண்ட பார்வையாளர்கள் ஒரு சிலர் கைதட்டி வரவேற்கிறார்கள். நேரமின்மைக் காரணமாக அந்தக் கடிதம் அங்கு முழுமையாக படிக்கப்படவில்லை. உண்மையில் அக்கடிதத்தை சாஷீன் வாசிக்கையில் உணர்ச்சி பெருக்கெடுத்து கண்ணீர் அவர் இமைகளை முட்டுகிறது. அதுவும் கூட இன்னொரு காரணமாக இருக்கலாம். அதற்கு அடுத்த நாள் அந்தக் கடிதம் நாளிதழ்களில் முழுமையாக வெளியாகிறது.
அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை முற்றிலுமாக ஒடுக்கி தங்கள் அதிகாரத்தை  நிறுவிய வெள்ளை இனத்தவர்கள், திரைப்படங்களிலும் அம்மக்களை மோசமான விதத்திலேயே சித்தரித்தனர். அத்துடன், செவ்விந்திய இன நடிகர்களை மோசமாக நடத்தினர்., அது மட்டுமல்லாமல்  அதே ஆண்டு பிப்ரவரி மாதம்  தெற்கு டகோடா மாகாணத்தின் வவூண்டடு நீ (Wounded Knee) பகுதியில் ஒக்லாலா இன நல்வாழ்வுத் துறைத் தலைவர் ரிச்சர்டு வில்ஸன்  ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்கு எதிராகப் போராடிய செவ்விந்திய இனப் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில், 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ரே ராபின்சன் என்னும் மனித உரிமை ஆர்வலர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டபொழுது மர்மமான முறையில் காணாமல் போனார். அவர் கொல்லப்பட்டிருப்பார் என்று சந்தேகிக்கப்பட்டது.  இந்தச் சம்பவத்தால் மனதளவில் பெரிதும் காயம்பட்டிருந்தார் பிராண்டோ. அவரது அறச் சீற்றத்தின் பின்னணி இதுதான். இந்த விருது மறுப்பு விளம்பரம் தேடி அல்ல மார்லன் மறுத்தப் பிறகுதான் வவுண்டட் நீ படுகொலைகளைப் பற்றி இந்த உலகம் அதிக கவலையுடன் விவாதிக்கத் தொடங்கியது.
போராட்டம் என்பது களத்தில் இறங்கி ஆயுதம் ஏந்துவது, கோஷம் எழுப்புவது மட்டுமல்ல. வீட்டுக்குள் உறைந்து கிடக்கும் உள்ளங்களை கிளறச்செய்து செய்து அவர்களை வெளியே இழுத்து வருவதும் கூட. அந்த வகையில் பெரிதாக கூக்குரலிடாமல் அமைதியாக சாதித்தார் மார்லன் பிராண்டோ.  
சமூக அக்கறை மிகுந்த ஹாலிவுட்  கலைஞரான மார்லன் பிராண்டோ பிறந்தது 1924 வருடம் ஏப்ரல் 3ம் தேதி,  அமெ‌ரிக்காவிலுள்ள நெப்ரஸ்கா மாநிலத்தில் உள்ள ஓமாஹா நகரில். அவரது அப்பா மார்லன் பிராண்டோவின் பெயரையே மகனுக்கும் வைத்தனர். தாய் டோரதி ஜூலியா பென்னிபேக்கர். இவரது மூதாதையர் ஜெர்மானிய பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள். மார்லன் பிராண்டோவின் அப்பா பூச்சிக்கொல்லி மருந்துகளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் உயர்பதவி வகித்தவர். தொழிலின் நிமித்தம் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருந்ததால், தன் குழந்தைகளுக்காக அவர் நேரம் செலவழிக்கவில்லை. குடிப்பழக்கம் உடைய அவர் எப்போதாவது வீட்டுக்கு வரும்போது பிள்ளைகளிடம் ஒரு சர்வாதிகாரியைப் போல நடந்துகொண்டார். குழந்தைகளின் கண் முன்னே மனைவியை பெல்ட்டால் அடிப்பார். குழந்தைகளை மிரட்டி உருட்டுவதும் அவரது பழக்கம்.
பிராண்டோவின் அம்மா டோரத்தி ஜூலியா ஒரு நாடக ஆசிரியை. சிறந்த நாடக நடிகை. ஓமாஹா நகரின் புகழ்பெற்ற நாடகக் குழுவான ஒமாஹா கம்யூனிட்டி பிளே ஹவுசின்இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். இதனால் பிராண்டோவின் வீட்டுக்கு எந்த நேரமும் நாடகாசிரியர்களும், நடிகர்களும் வருவதும் செல்வதுமாக இருப்பார்கள்.
டோரத்தி ஜூலியா நவீன உலகின் அடையாளமாக திகழ்ந்தவர். ஆண்களைப் போல கிராப் முடியுடன், அரைக்கால் சட்டை, மேல்சட்டை அணிவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். கூடவே  அளவுக்கதிகமான மதுப்பழக்கம், புகைப்பழக்கம் ஆகியவற்றை கொண்டிருந்தார். பிராண்டோவின் இளம் வயது செல்லப் பெயர் ‘புட்’ . அவரது சிறு வயது நண்பன் ஜார்ஜ் இங்க்லன்ட் பிராண்டோவுடனான நட்பின் நினைவுகளை விவரிக்கையில் சிறுவயதிலேயே பிராண்டோ அடுத்தவர்களைப் போல மிமிக்ரி செய்வதில் சிறந்தவராக இருந்தார் என்று குறிப்பிடுகிறார்.. பண்ணையில் உள்ள மாடு மற்றும் குதிரைகளைப் பார்த்து அவற்றைப் போல குரலெழுப்பிக்  காட்டுவார். தன் தாயின்  குடிப்பழக்கத்தைத் திசை திருப்ப பிராண்டோ அவ்வப்போது பலகுரல் நடிப்பினைச் செய்து வந்தார். அவரது அந்த கேளிக்கைகளை ரசிப்பதற்கென ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. தனது கவலைகளை அப்படித்தான் அவரால் மறக்கமுடிந்தது. ஆனால் பிராண்டோவின் இரண்டு மூத்த சகோதரிகளில் ஒருவரான ஜோசலின் பிராண்டோ தான் முதலில் நடிப்புத் துறையில் நுழைந்தவர். அவர் அமெரிக்க நாடகம் மற்றும் நடிப்புக் கல்லூரியில் சேர்ந்தார்.
அப்பொழுது மார்லன் கல்வி கற்க பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தார். பள்ளியில் பல பிரச்சனைகளை வீணே இழுத்து வந்ததால் அவரது தந்தை படித்த இராணுவப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஒரு முறை அவரது அறையில் இருக்க வேண்டிய மார்லன், நகரின் பிரதான வீதிக்கு ஊர்சுற்ற வந்தததின் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார். மிலிட்டரி ஸ்கூலை விட்டு நின்ற பிராண்டோவைப் பார்த்து அவரது அப்பா ,”நீயெல்லாம் உருப்படவே மாட்டே!என்று சாபமிட்டார். தொடர்ச்சியான தோல்வி மற்றும் அவமானங்களினால்  இருபது வயதை தொடுவதற்கு முன்னரே தீவிர நரம்பு தளர்ச்சி ஏற்பட்டது. மனப்பிறழ்வுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று  மீண்டு வந்தார் பிராண்டோ. பின்னர் தனது சகோதரி படித்த அதே நாடகப் பள்ளியில் மார்லனும் சேர்ந்தார்.
அந்தப் பள்ளியில்தான் மார்லன் உற்சாகமாக இருக்க முடிந்தது. ரஷ்யக் கலைஞர் ஸ்தனிஸ்லாஸ் அறிமுகப்படுத்திய ‘மெத்தட் ஆக்டிங்’ வகை நடிப்பு முறையை அங்குதான் அவர் மிகச் சிறப்பாக கற்று தேர்ந்தார். ஒருமுறை வகுப்பில் எல்லோரையும்  முட்டை ஈனும் கோழி போல் நடிக்க சொன்னார் ஆசிரியர். எல்லோரும் அப்படியே அமர்ந்து நடித்துக் கொண்டிருந்தனர். திடீரென அருகில் ஒரு வெடிகுண்டு வெடிக்கும் சப்தம் கேட்க. எல்லோரும் பதறி அடித்துக் கொண்டு ஓடினர். ஆனால் மார்லன் மட்டும் அமர்ந்த நிலையில் அசையாமல் உட்கார்ந்திருந்தார். ஆசிரியர் அவரருகே வந்து உனக்கு வெடிசப்தம் பயமாக இல்லையா எனக் கேட்டார். அதற்கு மார்லன் நான் கோழி ஆயிற்றே எனக்கு வெடிகுண்டு பற்றியெல்லாம் தெரியாது எனக்கூற ஆசிரியர் அசந்து போனார். அப்படியாக தனது பாத்திரத்தில் ஒன்றிப் போனவர் பிராண்டோ   
அதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஹாலிவுட் இயக்குனர் பிரெட் சினோமன் திரைப்படத்தில் நடிக்க பிராண்டோவை அணுகியபோது தனது வழிகாட்டியான ஆசிரியர் ஸ்டெல்லா ஆல்டரிடம் ஆலோசனை பெற்ற பின் ஒப்புக் கொண்டார் பிராண்டோ. பிராண்டோவின் முதல் திரைப்படம் தி மென்ஆகும். காயமடைந்த ஒரு போர் வீரனைப் பற்றிய படமென்பதால் சில மாதங்கள் ராணுவ மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து பழகி, அங்கிருந்த நோயாளிகளின் மன நிலையைக் கூர்ந்து கவனித்தார். நடிப்புக்காக மட்டுமல்லாமல் வாழ்வில் துன்பப்படும் மனிதர்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வாக அவருக்கு அது அமைந்தது. அவரது முதல் படம் மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதான பொருளாதார வெற்றி பெறவில்லை. இருந்தாலும் பிராண்டோவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
அடுத்து பிராண்டோ ஏற்கனவே நடித்து 855 முறை மேடையேறிய எ ஸ்ட்ரீட் கார் நேம்ட் டிசையர்திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இந்த திரைப் படம் 1951ல் வெளிவந்து கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் டாலர்களைச் சம்பாதித்தது. பல பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட இந்தத் திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், துணை நடிகை, சிறந்த கலை போன்ற பிரிவுகளில் விருதினை வென்றது. தனது இரண்டாவது படத்திலேயே சிறந்த நடிகர் பிரிவில் பிராண்டோ பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவருக்கு விருது கிடைக்கவில்லை. ஆனாலும் அவரது ஆறாவது படமான ஆன் த வாட்டர் ஃபிரண்ட்அவருக்குச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினைப் பெற்றுத் தந்தது.
மார்லன் நடிக்கும் பல படங்களில் அவரது பாத்திரம் வறிய நிலை மக்களை பிரதிபலிப்பதாக இருந்தது. உதாரணமாக மெக்சிகோவில் நடைபெற்ற ஒரு உழவர் புரட்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில், ஜபாட்டா என்கிற கூலி விவசாயிகளினுடைய தலைவன் பாத்திரத்தை மார்லன் பிராண்டோ ஏற்று நடித்தார். யுவான் ஜபாட்டா (ஜபாட்டா வாழ்க) என்று அந்தப் படத்திற்குப் பெயர்.
1969ம் ஆண்டு மரியோ பூஸோ எழுதிய நாவலான காட்ஃபாதர் வெளியான நாளிலிருந்தே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நாவலின் மீது கண் வைத்த பாரமவுண்ட் சினிமாஸ் கதை உரிமையை வாங்கி வைத்துக் கொண்டு இயக்குநரைத் தேடி வந்தது. அதன் பொறுப்பிலிருந்தவர் ராபர்ட் இவான்ஸ். காட்ஃபாதர் கதைக்களம் இத்தாலிய பின்னணியில், மாஃபியா கும்பலைப் பற்றியதாக இருந்ததால் இத்தாலியர் ஒருவர் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்று பிரான்சிஸ் கொப்பல்லாவை அணுகினார். இந்த வாய்ப்பை உடனே ஏற்றுக் கொண்ட கொப்பல்லா போட்ட ஒரே நிபந்தனை பிராண்டோ நாயகனாக நடிக்க வேண்டும் என்பது தான்.
ஆனால் ராபர்ட் இவான்ஸ் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. திமிர் பிடித்த ஆள், யாருக்கும் அடங்காதவர் மேலும்  அவரது படங்கள் வரிசையாகத் தோல்வி கண்டன போன்ற காரணங்களைச் சொல்லி பிராண்டோவை புறக்கணித்தார். இதைக் கேள்விப்பட்ட பிராண்டோ தனது ஒப்பனையாளரை வைத்தே கார்லோன்பாத்திரத்துக்கான ஒப்பனையைப்  போட்டுப் படங்களை அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த கொப்பல்லோவும், பூஸோவும் தாங்கள் மனதில் நினைத்திருந்த கதாபாத்திரம் நேரில் வந்ததாகவே உணர்ந்தனர். பிராண்டோ நாயகனாக ஒப்பந்தமானார்.
படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களில் கொப்பல்லாவின் போக்கில் திருப்தியடையாத பாரமவுண்ட் அவரை மாற்ற முடிவு செய்தது. விஷயத்தை அறிந்த பிராண்டோ, “கொப்பல்லோ இல்லையென்றால் நான் இந்தப் படத்தில் தொடரப் போவதில்லைஎன்று பகிரங்கமாக அறிவித்தார். இந்த பிடிவாதமான அறிவிப்புதான் கொப்பல்லோ இப்படத்தில் தொடர்ந்து பணியாற்றக் காரணமாக இருந்தது.  
டைம்பத்திரிக்கை 2000ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வின்படி சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த ஐம்பது படங்களில் காட்ஃபாதர்படமும் இடம் பெற்றது. உலகம் முழுக்க எத்தனையோ தாதா கதைகள் வந்திருக்கலாம். அவற்றுக்கெல்லாம் முன்னோடி காட்ஃபாதர் திரைப்படம். அந்த படத்தில் நடித்தமைக்குத்தான் அவருக்கு ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதைத்தான் அவர் வாங்காமல் புறக்கணித்து சரித்திரத்தில் இடம் பெற்றார். இப்படி அவர் விருதை புறக்கணிப்பது எதிர்காலத்தில் அவருக்கு மற்ற எந்த விருதுக்கு தேர்வு செய்யவும் ஒரு தடையாக அமையும் என்பதும் மார்லனுக்குத் தெரியும் இருப்பினும் அதை உதாசீனப்படுத்திவிட்டு மன உறுதியுடன் அந்த முடிவை எடுத்தார்.  
பொதுவாகவே இரக்க குணமும், விளிம்பு நிலை மக்கள் மீது ஆழ்ந்த அன்பும் கொண்டிருந்தார் பிராண்டோ. அவர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் தனது நண்பனுடன் ஒரு அறையில் தங்கியிருந்தார். இருவரும் தங்கள் சட்டைப் பையில் வைக்கும் பணம் அடிக்கடி திருடு போவதை உணர்ந்தனர். பிராண்டோவின் நண்பர் அறையைச் சுத்தம் செய்யும் நபர் தான் பணத்தைத் திருடுகிறார் என்பதை ஒரு நாள் கண்டுபிடித்து அவரைப் போலீசில் மாட்டிவிடலாம் என்று பிராண்டோவிடம் சொன்ன போது, ‘பாவம் அவனுக்கு நம்மை விடத் தேவை அதிகம் போலிருக்கிறது. இல்லையென்றால் அவன் இப்படி செய்பவனில்லைஎன்று சொல்லி அவனுக்காகவே தனது சட்டைப் பையில் பணத்தை வைக்கத் துவங்கினார்.
               படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தபோது தென்னாப்பிரிக்க தூதரகத்திற்கு முன்பு, தென்னாப்பிரிக்க அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி நடந்து கொண்டிருந்த போராட்டத்தைப் பற்றி அறிந்து படப்பிடிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு போராட்டத்தில் தானும் கலந்து கொண்டார். 1963_ஆம் ஆண்டு மாரட்டின் லூதர் கிங் உரை நிகழ்த்திய ஆகஸ்ட் மக்கள் உரிமைப் பேரணியில் பங்கேற்றார். ‘ எனக்கு ஒரு கனவு இருந்தது’ என்று மார்ட்டின் லூதர் கிங் முழங்கியது அப்பொழுதுதான். மார்ட்டின் மறைந்த பொழுது கண்ணீருடன் தனது படபிடிப்புக்களை ரத்து செய்துவிட்டு அவருக்கான அஞ்சலி கூட்டங்களில் பங்கேற்றார். ஜான் எஃப். கென்னடி அதிபராகப் போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாகப் பல கூட்டங்களில் படப்பிடிப்பைப் புறக்கணித்து விட்டுப் பங்கேற்றார்.
மனிதர் உயிரை மனிதர் பறிக்கும் மரண தண்டனைக்கு எதிராகவே அவரது எண்ணமும் உறுதியும் இருந்தன. சான் குவென்டின்சிறையில் ஒரு கைதியின் மரண தண்டனையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
               உலகம் முழுக்க தன்னுடைய படங்களுக்காக பயணம் போன பொழுது அவர் எப்படி கிழக்கு நாடுகள் பஞ்சத்தில் தோய்ந்து துன்பப்படுகின்றன என்பதை கண்டார். இந்த நாடுகள் இப்படி வாடுவதற்கு நம்மைப்போன்ற மேற்குலக நாடுகளின் சுரண்டல் தான் காரணம்.என்று கோபமாக  அவர் கொந்தளித்தார்.
      1959 ஆம் ஆண்டிலேயே  ஹென்றி ஃபாண்டா, மர்லின் மன்றோ, ஆர்தர் மில்லர் போன்றவர்களுடன் இணைந்து அணு ஆயுதத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்டார். தனது படங்களை இனவெறி கொண்ட பார்வையாளர்கள் முன்பு எக்காலத்திலும் காண்பிக்கக் கூடாது என, திரைப்படக் கதாசிரியர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் போன்றவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்துமாறு கோரி முன்னணியில் நின்று செயல்பட்டார்.         
இந்தியாவின் பீகாரில் நிலவிய கொடிய பஞ்சத்தை பற்றி ஆவணப் படமெடுத்து அமெரிக்க மக்களுக்கு போட்டு காண்பித்து அவர்களுக்கு உதவ நிதி திரட்ட முயன்ற பொழுது அதற்கு அமெரிக்காவில் பெருந்தடைகள் எழவே அமெரிக்க மனம் இதர மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதே இல்லை!என்று கோபத்தோடு பதிவு செய்தார் அவர்.
                பிராண்டோவின் திரைப்பட வாழ்வில் ஐம்பது ஆண்டு காலத்தில் முப்பத்து ஒன்பது திரைப்படங்களில் மட்டுமே  அவர் நடித்துள்ளார். அவர் இப்படியான அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தனது தொழிலை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் நூறு படங்களைத் தொட்டிருக்கக் கூடும். இன்னும் பல விருதுகள், கோடிகள் அவரை அடைந்திருக்கும்.
அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை அவரது இறுதி காலம் வரை துன்பங்கள் நிறைந்தவையாகவே இருந்தன. அவரது ஒரு மகன், தனது ஒன்றுவிட்ட சகோதரியின் காதலனை கொன்றதற்காகக் சிறையிலடைக்கப்பட்டான். பிராண்டோவின் மகள் அவளது காதலனைப் பறிகொடுத்தத் துயரினைத் தாங்க இயலாமல்  தற்கொலை செய்துகொண்டாள் என்றாலும்  கடைசிவரை ஒரு போர்க்குணம் உடையவராகவே அவர் இருந்திருக்கிறார். ஈராக் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்தை எதிர்த்து, கண்டித்து அறிக்கை விட்டதோடு மட்டுமில்லாமல், தனது 78 வது வயதில், இராக் யுத்தத்துக்கு எதிராக  நடுநிலையாளர்கள் ஊர்வலம் போனபோது அவர்களில் ஒருவராக மார்லன் பிராண்டோவும் போயிருக்கிறார்.
தனது கடைசி நாட்களில் அவரது நண்பர் மைக்கேல் ஜாக்சனின் நெவர்மேன்ஸ் லாண்டில்கழித்தார் பிராண்டோ. தாகித் தி எனும் பூர்வகுடி இந்தியப் பிரதேசத்தில் அமைந்த தனித்த வீட்டில் சிலநாட்கள் கழித்தார் 'அம்மா எனக்குச் சொன்ன பாடல்' எனும் தனது சுயசரிதையை 1996_ஆம் ஆண்டு பிராண்டோ எழுதி வெளியிட்டார். அவரது விரிவான வாழ்க்கை வரலாற்றை தமிழில் அஜயன் பாலா எழுதி இருக்கிறார். மார்லன் பிராண்டோ 2௦௦4 ஆம் ஜூலை ஒன்றாம் தேதி மரணமடைந்தார்.

சர்ச்சைகளும், அவதூறுகளும், விமர்சனங்களும், துன்பியல் சம்பவங்களும் நிறைந்த ஒரு சாகசப்படம் போன்ற அவரது வாழ்க்கையில் அவரது போராட்டக்குணம்தான் அவரது அழிக்க முடியாத அடையாளமாக இன்றும் கருதப்படுகிறது. 

பியர் பாவ்லோ பசோலினி (இத்தாலி)


                               


1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி இத்தாலியின் திரேனியன் கடலை ஒட்டிய ஒஸ்டியா கடற்கரையில் பியர் பாவ்லோ பசோலினி கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரை கொலைக்கருவி கொண்டு கடுமையாக தாக்கிய தோடல்லாமல் அவர் மீது பலமுறை காரை ஏற்றி சிதைத்திருந்தனர். ஜியுசெப்பி என்னும் பதினேழு வயது இளைஞன் அவரைக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டான். ஓரின சேர்க்கையாளரான பசோலினி தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்தினார் என அவன் வாக்குமூலம் தந்திருந்தான், என்றாலும் அவனது குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக காவல்துறையும் பொதுமக்களும் நம்பவில்லை.        முப்பது ஆண்டுகள் கழித்து, 2005 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி அவன் தனது வாக்குமூலத்தை மாற்றி மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் தனது குடும்பத்தை மிரட்டி, பசோலினி என்கிற அசிங்கம் பிடித்த கம்யூனிஸ்ட்டை கொன்றுவிடு என நெருக்கடி தந்தார்கள் என்று சொன்னான். அவர்கள் தெற்கு இத்தாலியின் வட்டார மொழியில் பேசியதாக கூறினான். ஆனால் அதுவும் கூட ஆதாரமற்ற செய்தி என விசாரணைக்கு பின் காவல் துறை தெரிவித்துவிட்டது. அப்படியானால் பசோலினி எதற்காக கொல்லப்பட்டார்? அது இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. பசோலினி இத்தாலியின் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர், நடிகர், நாவலாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், அரசியல்வாதி, ஓவியர் என பன்முகம் கொண்ட ஆளுமை. அதைக் காட்டிலும் அவர் ஒரு புரியாத புதிர். அவரது கொள்கைகளும் நடவடிக்கைகளும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை. பலராலும் விளங்க முடியாத கவிதை அவர்.
 பசோலினி 1922 ஆம் வருடம் பொலொக்னா என்னும் இடத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆல்பெர்ட்டா கடுமையான குணம் கொண்ட இத்தாலிய இராணுவ அதிகாரி. அவரது தாய் சுசானா கலூசி ஒரு ஆசிரியை. பொலொக்னா இடது சாரி சிந்தனையாளர்கள் கொண்ட நகரம். பசோலினி இயல்பாகவே இடதுசாரி சித்தாந்தத்தின் மீது ஈர்க்கப்பட்டார். அவரது குடும்பம் கசார்சாவுக்கு இடம் பெயர்ந்தது. கசார்சா ஒரு இயற்கை சூழல் மிக்க ஊர். அது மட்டுமல்லாமல் ஃப்ரியூலி மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற பிராந்தியம். ஃப்ரியூலி எழுத்துக்கள் இல்லாத வெறும் பேச்சு மொழி கொண்டது. இருப்பினும் எட்டு லட்சம் மக்கள் பேசுகின்ற மொழி. பசோலினி அம்மொழி மீது தீராத காதல் கொண்டவர். தமிழகத்தில்தான் மொழிப்பற்றோடு இருப்பது பிற்போக்குத்தனமாக கருதப்படுகிற அவலம் தொடர்ந்து அறிவுஜீவிகளால் முன்னிறுத்தப்படுகிறது. ஆனால் இத்தாலியில் ஃப்ரியூலி மொழி அறிவு ஜீவிகள் தங்கள் தாய்மொழிக்கான உரிமைக்காக குரல் கொடுப்பதை தார்மீகக் கடமையாக கருதினார்கள்.     
 பசோலினி ஃப்ரியூலி மொழி பேசும் மக்களின் தனித்த கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் பிரதானப்படுத்தி ஃப்ரியூலி பிராந்தியத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது முதல் கவிதைத் தொகுதி ஃப்ரியூலி மொழியில்தான் வெளியிடப்பட்டது. ஃப்ரியூலி மொழிக்கு எழுத்துக்கள் இல்லாததால் இலத்தீன் மொழி எழுத்துக்கள்தான் நூல் வடிவத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஃப்ரியூலி மொழிக்  கவிஞராக பசோலினி கருதப்படுகிறார். அல்போன்சா கேட்டி, அண்டானியோ ரஸ்சி, பிராங்கோ காட்டினி ஆகிய அறிவுஜீவிகளும் விமர்சகர்களும் அவர் இத்தாலியின் குறிப்பிடத்தக்க கவியாளுமை எனப் புகழ்கிறார்கள். 
 பசோலினியின் தந்தை அல்பெர்ட்டோ மதப்பற்றாளர். அதேசமயம் தாய் கலூசி தேவாலயங்களுக்கு செல்வதை மறுக்கக்கூடியவர். அல்பர்ட்டோ தீவிரமான தேசப்பற்றாளர். சர்வாதிகாரி முசோலினியை கொலை செய்ய நடந்த முயற்சியிலிருந்து அல்பர்ட்டோ ஒரு முறை அவரைக் காப்பாற்றினார் என்பதால் பாசிஸ்ட்டுகளிடையே அல்பெர்ட்டோவுக்கு நல்ல மரியாதை இருந்தது. பசோலினி ஒரு முறை செடாசியோ என்கிற பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். ஆனால் அந்த பத்திரிகையின் அதிபர் முசோலினியின் ஆதரவாளர். வெகுவிரைவில் பசோலினி அப்பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்டார். அதுவரை பசோலினி ஒரு பாசிச இலக்கியவாதி போலவே இயங்கிவந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு அவர் தன்னை முழுமையான பொதுவுடமையாளனாக மாற்றிக் கொண்டார். தாய்,தந்தை இருவரின் கலவையாகவே பசோலினி வளர்ந்து வந்தார் அவரது இறுதிக்காலம் வரையிலும் இந்த குழப்பமான தோற்றம் அவர் மீது  படிந்திருந்தது.
      சர்ச்சைகளுக்கும், சாகசங்களுக்கும் பசொலினியின் வாழ்வு முழுவதும் அசைக்க முடியாத இடமுண்டு. 1942 ஆம் வருடம் ஜெர்மனின் நாஜிப்படையினரால் பசோலினி கைது செய்யப்பட்டார். ஆனால் சில நாட்களிலேயே ஒரு விவசாயியைப் போல வேடமிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். அடுத்து இத்தாலியின் உதின் மாகாணத்துக்கு வந்த அவர் ஃப்ரியூலி மொழிக்கு சம அந்தஸ்து வேண்டும் என்பதற்காகப் போராடினார். 1945 ஆம் ஆண்டு பசோலினியின் சகோதரன் க்யுட்டி கொல்லப்பட்டார். அவர் இறந்த ஆறாம் நாளிலேயே ஃப்ரியூலி மொழிக்காக ஒரு அகாதமி ஆரம்பித்து அதன் பணிகளைத் தொடங்கினார். இவையாவும் அவரது கல்லூரி காலத்திலேயே நடந்தது.
1947 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்துடனான தொடர்புகள் கிடைத்தன. அதன் பிறகு கட்சி சார்ந்த பல போராட்டங்களில் அவர் கலந்துகொண்டார். இயக்கத்தினர், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கும் அரசுக்கும் பல போராட்டங்கள் நடந்தன. அந்தப் போராட்டங்களின்போது காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பல்வேறு மோதல்கள் நடந்தன. இதன் காரணமாக பல போராட்டக்காரர்கள் அடிபட்டனர். இந்த காட்சிகள் பசோலினிக்கு மன அதிர்வை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 1955-இல்  ரகாசி டி விட்டா என்கிற நாவலை எழுதுகிறார். இந்த நாவல் காரணமாக அவர் மீது அவதூறு வழக்குகள் பாய்ந்தன. இருப்பினும் 1959 ஆம் ஆண்டு அவரது இரண்டாவது நாவல் தி வயலன்ட் லைப் வெளியாகிறது.   
1957 –இல் பெடரிக்கோ ஃபெலினியின் திரைப்படமான லே நோடி டி காப்ரியா வுக்கு குறிப்பிட்ட சில காட்சிகளுக்கு மட்டும் வசனம் எழுதுகிறார். அதிலிருந்துதான் அவருக்கு திரைப்பட ஆர்வம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. கோபோ II என்ற படத்தில் ஒரு நடிகராக அறிமுகம் ஆகிறார். அவரது இயக்குனர் முகம் வெளிப்பட்டது அக்கொட்டான் (1961) என்னும் முதல் படம் மூலமாகத்தான். அதே வருடம் அவர் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார். அப்பொழுது இந்தியா பற்றி முப்பது நிமிடம் ஓடக்கூடிய ஆவணப்படம் (Visual notes for a film in India) ஒன்றை இயக்கினார். இந்திய சுதந்திரத்துக்கு முன்பான நிலை மற்றும் அப்போதைய வறுமை ஆகியவற்றைப் பற்றி அப்பட்டமாக இப்படம் பேசியது. 1961 ஆம் ஆண்டு உலகின் பெரும்பான்மை நாடுகளுக்கு அவர் சுற்றுப்பிரயாணம் சென்றார். அதன் பிறகு சுமார் பத்து படங்களுக்கு மேல் அவர் இயக்கினார். தொடர்ந்து ஆவணப்படங்கள் ஆறு, நாடகங்கள் ஏழு, அரசியல் கட்டுரைகள் என அவரது பங்களிப்பு இடைவிடாத அர்ப்பணிப்பான ஒன்று. தி காஸ்பல் அக்கார்டிங் டு மாத்யூ  என்கிற அவரது திரைப்படத்துக்கு வெனிஸ் உலகப்பட விழாவில் விருது கிடைத்தது.
ஆனால் பசோலினி எப்பொழுதும் அதிர்ச்சியூட்டுகிற. முரண்பாடான மனிதராகவே காட்சியளித்தார். 1947ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் 1949ஆம் ஆண்டு நீக்கப்படுகிறார். காரணம் அவர் தன்னை ஓரின சேர்க்கையாளர் என்று வெளிப்படுத்திக் கொண்டதுதான். தி காஸ்பல் அக்கார்டிங் டு மாத்யூ என்கிற அவரது திரைப்படத்துக்கு கிருத்துவ மதப் பாதிரியார்கள் பலத்த கரவொலியோடு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கின்றனர். இதனால் அவர் கம்யூனிஸ்ட்டுகளின் பலத்த எதிர்ப்பை சம்பாதிக்கிறார். ஆனால் இயேசுவை ஒரு புரட்சியாளராக மட்டுமே பார்ப்பதாகவும்  மற்றபடி தான் ஒரு நாத்திகர் என்பதில் எந்த ஒரு மாற்றமுமில்லை என பசோலினி குறிப்பிடுகிறார்.
பசோலினி தொடர்ந்து தனது படைப்புகளில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் இருள் பக்கங்களையே பதிவு செய்து வந்தார். அவரது கதாபாத்திரங்கள் தூய்மையான கனவு நாயகர்கள் அல்ல. அவரது முதல் நாவலான ராக்காசி டி விட்டாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் அடுத்தடுத்த சமூகத்தில் ஒழுக்ககேடான விஷயங்களாக கருதப்பட்ட பாலியல், வன்முறை ஆகியவற்றில் அவர்கள் ஈடுபடுவதினை விவரிக்கின்றது. அவரது இரண்டாவது  நாவலான தி வயலன்ட் லைப்பில்  டோமஸோ புஸிலி என்பவன் பாலியல் தொழிலில் இருக்கும் ஒரு பெண்ணின் மகன், அவன் சமூகத்தில் எப்படி தன் எதிர்வினைகளை ஆற்றுகிறான் என்பது குறித்து பேசுகிறது.
            

அவரது திரைப்படங்களும் கூட இப்படியான எதிர் நாயகர்களின் வாழ்வையே அதிகம் பதிவு செய்திருக்கிறது. அதோடு அந்தக் காட்சிகள் அதீத வன்முறை நிறைந்ததாகவும் இருந்தன. அவரது மம்மா ரோமா திரைப்படம் பிரபல இயக்குனர் ரோபார்ட்டினி இயக்கிய ரோமா சிட்டா அபார்ட்டா என்னும் திரைப்படத்தில் உள்ள பெண் கதாபாத்திரத்தின் நீட்சியாக அல்லது அவளின் மற்றொரு பக்கமாக எடுக்கப்பட்டதுதான். ரோபார்ட்டினி அப்படத்தை தேசபக்தியை பிரதானமாக கொண்ட படமாக உருவாக்கியிருந்தார். ஆனால் பசோலினி அவர்களையெல்லாம் மக்களுக்கானவர்கள் அல்ல என தோலுரித்திருந்தார். லா ரிகார்ட்டா என்னும் குறும்படத்தில் கிருத்துவர்களின் மனம் புண்படும்படி காட்சிகள் அமைத்திருந்தார் என்று வழக்குத் தொடரப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவை எல்லாம் அவரைப்பற்றிய குரூரமான சித்தரிப்புகளுக்கு காரணமாயின. அவரது திரைப்படங்கள் திரையிடப்படும் அரங்குகளில் எல்லாம் அவருக்கெதிரான போராட்டங்கள், கோஷங்கள் எழுப்பப்பட்டன. வன்முறையில் முடிந்த திரையிடல்களும் உண்டு.
ஒரு சமயம் இத்தாலியில் மாணவர் அமைப்புகள் சேர்ந்து ஒரு பெரும் தேசிய போராட்டத்தை முன்னெடுத்து நடத்தின. அவர்களது போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் ஆதரித்தனர். ஆனால் இடதுசாரி சிந்தனையாளரான பசோலினி இந்தப் போராட்டம் நியாயமற்றது என்று கருதினார். ஆகவே பசோலினி வெளிப்படையாக அந்த போராட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.   
பசோலினி ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடும் குறிப்பிட்ட இடங்களில் அதிகம் காணப்பட்டார். அது விஷயத்தில் அவரது கொள்கைகள், செயல்பாடுகள் எதையும் அவர் மறைக்க முயலவில்லை. ஆனால் இதுவே இவர் மீது பல்வேறு வதந்திகளை, யூகங்களை பரப்பக் காரணமாயிற்று. அவர் சில இளைஞர்களுடன் திடீரென ஒரு நாள் மாயமானார். அவர், அவர்களை கடத்திச் சென்றுவிட்டதாக பரபரப்பான தகவல்கள் பரவின. பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மையானதில்லை என நிரூபிக்கப்பட்டது. மீண்டும் அவர் ஆயுதக் கொள்ளையில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டு அதுவும் உண்மை இல்லை என்று உறுதியானது. நியோ பாசிஸ கட்சியினர் அவர் மீது பல தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர்கள்தான் அவர் மரணத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இத்தனை வருடங்கள் ஆகியும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
இவையெல்லாம் தாண்டி எழுத்தாளர் இடாலோ கால்வினோ, இயக்குனர் பெர்னாண்டோ பெர்ட்லூசி, ஆங்கிலக் கவிஞர் எஸ்ரா பவுண்ட் ஆகியோருக்கு  அவர் மீது  ஆத்மார்த்தமான மரியாதை  இருந்தது. அவர்கள் பசோலினி மீது எதிர்மறையான கருத்துக்கள் கொண்டவர்கள் இல்லை.
பசோலினி உண்மையில் ஒரு சுதந்திரமான சிந்தனையாளர், செயல்பாட்டாளர் என்றே அவதானிக்க முடிகிறது. அவர் எந்த சுயலாபம் கருதியும் எந்த கொள்கையையும் வடிவமைக்கவில்லை. தன்னலம் கருதாத சிந்தனையாளர்கள் எந்த அமைப்போடும் நீண்ட நாட்கள் இயைந்து செல்ல முடியாது. எனவேதான் அவரது செயல்பாடுகள் அனைத்தும், எல்லாத் தரப்பினர் மத்தியிலும் எல்லா நேரத்திலும் அங்கீகரிக்க முடியாததாக இருந்தது. அச்சமற்ற அவரது மனநிலை எதுகுறித்தும் அவரால் எதிர்வினையாற்றும் துணிச்சலைத்  தந்திருந்தது.
பெர்லின் திரைப்பட விழா, கேன்ஸ் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழாக்களில் பசோலினியின் திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. சில திரைப்பட விழாக்களில் நடுவராக இருந்திருக்கிறார். கேரளா திரைப்பட விழாவில் அவருக்கான நினைவஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. எப்பா டேமன்ட் என்பவர் பசோலினி பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார். செப்பா பாட்டியாகிலி என்னும் இசையமைப்பாளர் பசோலினிக்காக ஒரு இசைத்தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். அபெல் பெரைரா என்னும் அமெரிக்க இயக்குனர் பசோலினியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 2014 ஆம் ஆண்டில் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படி அவர் மரணம் நிகழ்ந்து முப்பது ஆண்டுகளுக்குப்  பின்னும் இத்தாலியைத் தாண்டியும் அவர் கொண்டாடப்படுகிறவராக, விவாதிக்கப்படுகிறவராக பசோலினி திகழ்கிறார். அவர் தி ஆஷஸ் ஆப் கிராம்சி என்னும் தலைப்பில் எழுதிய கவிதையில்
“நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கும் இடையில் உன்னை அணுகிக்கொண்டு இருக்கிறேன்” என்று துவங்குவார். அவரைப்பற்றிய சித்திரத்தை உலகம் எப்படி உள்வாங்குகிறது என்பதை இந்த வரிகள் அழகாக புலப்படுத்துகின்றன.  
கலகக்காரர்கள் எப்பொழுதுமே உலகை, மறைமுகமாக மனதை ஆள்பவர்களாகவே இருக்கிறார்கள். பியர் பாவ்லோ பசோலினி அதற்கு விதிவிலக்கு இல்லை.     
         

       

ஜூலியானோ மெர் காமிஸ்

                       

                                                                         
                                        

                     இரு தேசங்களுக்கு இடையே தீராத பகை இருக்கிறது, இரண்டு தேசத்து மக்களும் வெவ்வேறு இனங்களைச் சார்ந்தவர்கள் எனில் அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகள் என்பது ஒரு பொது வரையறைக்குள் அடங்கிவிடும். பிரச்சினை சார்ந்த மக்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருந்துவிடுவர். ஆனால் அந்த இரண்டு இனத்தவர்களில் பாதிக்கப்பட்ட மக்களை  மனிதாபிமான முறையில் அரவணைக்க முயலுபவர்கள் அந்தந்த இனங்களில் துரோகிகளாகவே சித்தரிக்கப்படுவார்கள். இயக்குனர், நடிகர் ஜூலியானோ மெர் காமிஸ் அப்படித்தான் தவறாகக் கருதப்பட்டு கொல்லப்பட்டார்.
               ஜூலியானோ மெர் காமிஸ் 1958 ஆம் வருடம் மே மாதம் 29 ஆம் தேதி  இஸ்ரேலின் வடமாகாணத்திலுள்ள மிகப்பெரிய நகரமான நாசரேத்தில் பிறந்தவர். இயேசு கிருஸ்துவின் இளமைப்பருவம் நாசரேத்தில்தான் கழிந்தது என்பதால் நாசரேத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. மெர்காமிஸ்-இன் தந்தை சலிபா காமிஸ் பிறப்பால் பாலஸ்தீனியன், இவரது மூதாதையர்கள் கிருத்துவ மதத்தைத் தழுவியவர்கள். சிந்தனையால் பொதுவுடைமை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர். சலிபா காமிஸின் வசிப்பிடம் இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. என்றாலும் சலிபாவின் கொள்கை மாறவே இல்லை அவர் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். சலிபா இஸ்ரேலின் குறிப்பிடத்தக்க அறிவுஜீவியாக கருதப்பட்டவர்.
                ஜூலியானோவின் தாய் ஆர்னா காமிஸ் சிறந்த நாடக நடிகை மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர். இளம் வயதில் ஆர்னா இன்றைய இஸ்ரேலை ஆக்ரமித்த பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக இயங்கி வந்த பால்மா என்கிற ஆயுதக்குழுவில் இடம்பெற்று தீவிரமாக பணியாற்றியவர். போரின் உக்கிரத்தை நேரில் கண்டதாலோ என்னவோ அவரது பிந்தைய காலம் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்புகளில் இயங்க  ஆர்னா காமிஸ் இஸ்ரேல் ஆக்ரமித்தப் பகுதியான ஜெனின்-இல் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக்கொண்டு ஒரு நாடகக்குழுவை நடத்தி வந்தார். ஆர்னா காமிஸ்-இன் பணிகளைப் பாராட்டி அவருக்கு ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் நாட்டினர் இணைந்து ஏற்படுத்திய வாழும் உரிமைகளுக்கான' சர்வதேச விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது மனித உரிமை, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் உலகம் முழுக்க தன்னலம் பாராமல் சமூகத்துக்காக இயங்கி வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆர்னாவின் தந்தை ஜிடோன் மெர் ஒரு அறிவியல் விஞ்ஞானி மற்றும்  சமூக சேவகர். 
               இப்படி ஜூலியானோவின் பாரம்பரியம் சமூகத்துக்காக பணியாற்றுகிற, போராடுகிற நீண்ட பின்னணியைக் கொண்டது என்பதால் இயல்பாகவே சமூகத்தின் மீதான அக்கறைக் கொண்டவராகவும், அதிகாரத்துக்கு எதிரான போராளியாகவும் அவரை உருவாக்கியது. ஆர்னா நிர்வகித்த நாடகக்குழு இஸ்ரேல் ஆக்ரமித்தப் பகுதியான ஜெனின் -இல் இயங்கி வந்தது. ஆர்னா இறந்த பிறகு ஜூலியானோ ஃபிரீடம் தியேட்டர் என்ற பெயரில் அம்மாவின் நாடகப் பள்ளியில் படித்த சகாரியா சுபைதியுடன் இணைந்து ஜூலியானோ நடத்தி வந்தார்.
               ஃபிரீடம் தியேட்டர் குழுவில் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலியத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இணைந்தே படித்தார்கள். அதோடு இருபாலரும் இணைந்தே நாடகங்களில் நடத்தினர். இது மத அடிப்படைவாதிகளுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மறுபுறம் அவர்கள் நடத்திய நாடகங்களின் மையக்கருத்து, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது. இது இஸ்ரேலிய அதிகார வர்க்கத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் நாடகப்பள்ளியில் படித்த சிறுவர்கள் ஜெனின் பகுதிகளில் நடந்த இன்ஃபெடிடா என அழைக்கப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான தன்னெழுச்சிப் போராட்டங்களில் தன்னிச்சையாக ஈர்க்கப்பட்டு அதிகார படைகளுக்கு எதிராக கல்வீச்சுக்களில் ஈடுபட்டனர். சகாரியா சுபைதி அப்படியான கல்வீச்சில் சிறுவயதில் ஈடுபட்டு இளம் சிறார்களுக்கான சிறையில் மூன்று முறை அடைக்கப்பட்டவர்.
               சுபைதியின் தாயாரும் அவரது சகோதரரும் அரசு பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர் என்பதால் அவருக்கு இயல்பாகவே அதிகாரத்துக்கு எதிரான மனநிலையுடனே இருந்து வந்தவர். வளர்ந்தபிறகு தன்னை ஒரு ஆயுதப் போராட்டக்குழுவுடன் இணைத்துக் கொண்டார். ஒரு தாக்குதலின் போது தனது காலில் குண்டு பாய்ந்து அறுவை சிகிச்சையால் குறைக்கப்பட்டு அதன் காரணமாக வாழ்நாள் முழுதும் ஒரு கால் குட்டையாக நடக்கும்போது தாங்கி, தாங்கி நடப்பவராகவே இருந்தார். ஆனால் பிற்காலத்தில் அவரது மனநிலை ஆர்னாவால் பக்குவப்பட்டதால் மனம் மாறி தனது ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் எண்ணத்தால் ஜூலியானோவுடன் இணைந்து ஃபிரீடம் தியேட்டர் நாடகக்குழுவை நடத்த முன் வந்தார். ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஒரு புறம் அவர் இஸ்ரேலிய படைகளால் சந்தேக கண்ணுடன் கண்காணிக்கப்பட்டார், மறுபுறம் மத அடிப்படைவாதிகளால் வெறுப்புடன் பார்க்கப்பட்டார்.
               சிறுவர்களை தீவிரவாதிகளாக உருவாக்குகிறார்கள் என அரசு அதிகாரம் குற்றம் சாட்டியது, மத அடிப்படைவாதிகள் மதக் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என ஜூலியானவையும் சகாரியாவையும் வறுத்து எடுத்தார்கள். சமூகத்தின் மீதான மெய்யான அக்கறையோடு செயல்பட்ட அவர்கள் இரு பக்கத்திலும் வெறுப்பினை சம்பாதித்தார்கள்.  
                இந்த இடத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையேயான பிரச்சினையை சுருக்கமாக பார்க்கலாம். வரலாற்றை நெருக்கமாக கவனிக்கிறவர்கள், செய்தித்தாள்களை அன்றாடம் தவறாமல் வாசிக்கிறவர்கள் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சினைகள் குறித்து அறிந்திருப்பார்கள். ஜெருசலேம்தான் பாலஸ்தீன இஸ்ரேலிய பிரச்சனைக்கு ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. ஜெருசலேம் நகரம் யூதர்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் புனித நகரமாக இருக்கிறது. அங்கிருக்கும் அல் அக்ஸா என்ற பள்ளிவாசல் நபிகள் நாயகம் பாலஸ்தீன பயணத்தின்போது  அங்கு வந்திருந்தார்கள் என்று இஸ்லாம் சொல்கிறது. அதே சமயம்  அங்குதான் சாலமன் தேவாலயம் இருந்ததாக  சொல்லி யூதர்கள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார்கள். யூத பாரம்பரியம் நவீன இஸ்ரேலை, பைபிளில் வரும் மூன்று நாயகர்களில் முதல்வரான , ஆப்ரகாம் மற்றும் அவரது வழித்தோன்றல்களுக்கு தருவதாக உறுதியளிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பில் உருவான நாடாகக் கருதுகிறது. யூதர்களைப் பொறுத்தவரை, பழைய பாலஸ்தீனத்துக்குத் திரும்புவதை, தங்களுக்கு பைபிளில் உறுதி அளிக்கப்பட்ட நிலத்துக்குத் திரும்புவதாக கருதுகிறது.
               இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய யூதர்கள் அனுபவித்த யூதஎதிர்ப்பு நடவடிக்கைகளால் உத்வேகம் பெற்று, யூதர்களுக்கு ஐரோப்பாவுக்கு வெளியே ஒரு சொந்த நாடொன்றை நிறுவும் நோக்கில் சியோனிச ( Zionism) இயக்கம் உருவானது. அவர்கள் பாலஸ்தீனிய பிராந்தியத்தில் தங்களது தேசத்தை கட்டமைக்க தீர்மானித்தார்கள். அந்தக் காலகட்டத்தில், பாலஸ்தீனப் பிராந்தியம் ஆட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.  அரபு தேசிய வாதிகளுக்கும் சியோனிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதல்கள், யூத மற்றும் அரபு ஆயுதக் குழுக்களுக்கு இடையேயான மோதல்களால் வலுப்பெற்றன. ஆட்டோமான் பேரரசு வீழ்ந்தபின், பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்குக் கிடைத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், யூத நாடு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் வலுத்தன.
               பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்குமிடையே பிரித்துத் தரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  1948 மே 14ம் தேதி இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவாக இந்த முடிவு  காரணமாயிருந்தது. இதற்கடுத்த நாள், எகிப்து, ஜோர்டான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் பிரிட்டிஷாரின் முந்தையக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல் அரபு-இஸ்ரேலிய யுத்தம் உருவாகக் காரணமாக இருந்தது.
               இந்த மோதலுக்குப் பின்னர், அரபு நாடு என்ற ஒன்றுக்காக ஐநா முதலில் திட்டமிட்டிருந்த நிலப்பரப்பு பாதியாகக் குறைக்கப்பட்டது. சுமார் 7.5 லட்சம் பாலஸ்தீனர்கள் அண்டைநாடுகளுக்கு வெளியேறிவிட்டனர் அல்லது யூதப் படைகளால் வெளியேற்றப்பட்டனர்.
               1967ல் நடந்த ஆறு நாள் போரில்இஸ்ரேல் பெற்ற வெற்றி அது காசா நிலப்பரப்பையும் சினாய் தீபகற்பத்தையும் ஆக்ரமிக்க உதவியது. இவை 1948லிருந்து எகிப்து கட்டுப்பாட்டில் இருந்தன. கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக்கரை ஜோர்டான் கட்டுப்பாட்டில் இருந்தது. கோலான் குன்றுகள் சிரியாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவை அனைத்தையும் இஸ்ரேல் கைப்பற்றிவிட்டது.
               இந்தப் போரை அடுத்து, 1973ல் ' கிப்பூர்' போர் நடந்தது இதில் எகிப்தும் சிரியாவும், இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்தப் போரில் எகிப்து சினாய் தீபகற்பத்தில் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றியது. ( மீதமிருந்த பகுதியை இஸ்ரேல் 1982ல் திருப்பி அளித்துவிட்டது). ஆனால் காசா நிலப்பரப்பையோ அல்லது சிரியாவின் கோலன் குன்றுகளையோ இஸ்ரேலிடமிருந்து பெற முடியவில்லை.
                 1994க்கு பின்னர் திரும்ப ஒப்படைக்கப்பட்ட காசா நிலப்பரப்பில் 2008, 2009,2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது ஆயுத மோதல்கள் நடந்தன.
             

                மேற்குக் கரை (west bank) தற்போது பாலஸ்தீன தேசிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு. இதன் முக்கிய குழு என்பது மதசார்பற்ற ஃபத்தா கட்சி (FATA party) ஆகும்.  பாலஸ்தீன விடுதலை அமைப்பும், இஸ்ரேலும் 1993ல் ஆஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, பாலஸ்தீன விடுதலை அமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டது. மேலும் அது இஸ்ரேல் நாட்டினையும் அது சார்ந்த நிலப்பகுதிகளில்  அதற்கிருக்கும் உரிமையையும் அங்கீகரித்தது. தற்போது ஹமாஸ் என்ற முக்கிய பாலஸ்தீன இஸ்லாமியவாத அமைப்பு காசா நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஹமாஸ் அமைப்பு  பாலஸ்தீன குழுக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட எந்தவொரு ஒப்பந்தத்தையும் அங்கீகரிக்கவில்லை.
                இப்பொழுதுள்ள மிகவும் சிக்கலான பிரச்சினை, ஜெருசலேத்துக்கு உள்ள  வரலாற்று முக்கியத்துவம்தான். பாலஸ்தீன நிர்வாகம் மற்றும் ஹமாஸ் குழு ஆகிய இரண்டுமே கிழக்கு ஜெருசலேத்தை தங்களது தலைநகராகக் கோருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதை 1967லிருந்து ஆக்ரமித்து வைத்திருக்கிறது. எனவே ஜெருசேலம் யாராவது ஒருவருக்கு விட்டுக் கொடுக்கப்படாத வரை அங்கு பிரச்சினைகள் தீராது. யெருசேலம் என்றால் எபிரேய மொழியில் அமைதியின் உறைவிடம்' என்று பொருளாம். ஆனால் இன்றைக்கு அமைதியிழந்து தவிக்கின்ற இடமாக இருக்கின்றது.
               பிரச்சினைகள் சீறிக்கொண்டிருக்கும் இடமான ஜெனின் -இல் காயம் பட்ட மனதுக்கும் உடலுக்கும் இதமான கருணை உள்ளங்களின் தேவை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த இடத்தை நிரப்பிக்கொண்டிருக்கும் பணியைத்தான் ஜூலியானோ, அவரின் தாய் ஆர்னா, சகாரியா ஆகியோர் செய்து கொண்டிருந்தனர்.
               ஜூலியானோ தனது வாலிபப் பருவத்தில் கட்டாய இராணுவப் பணியை இஸ்ரேல் படையில் முடிக்க வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு அவர் தனக்குப் பிடித்தமான நாடகத்துறையில் இறங்கினார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்புக் கிடைத்தன. அமெரிக்கப் படமான தி லிட்டில் ட்ரம்மர் கேர்ள்தான் அவர் நடித்த முதல் படம். இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையேயான பிரச்சினைகளை பின்புலமாகக் கொண்டது அந்தத் திரைப்படம். அதற்குப்பிறகு 51 Bar, Wedding Galilie, Kedma, Easther, Kippur உட்பட சுமார் 20 திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த Seat of this sea  என்ற இஸ்ரேலிய படம் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படப் பிரிவில் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
               பின்னர் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி ஃபிரீடம் தியேட்டர் குழுவை சகாரியாவுடன் இணைந்து துவக்கியதிலிருந்து அவருக்கு தொல்லைகளும் தொடங்கின. ஃபிரீடம் தியேட்டர் குழு இயங்கிய இடத்தை பல முறை மர்ம நபர்கள் தாக்கினர். அவர்களது நாடகங்களை நடத்த விடாமல் தடுத்தனர். அப்பொழுதுதான் தனது தாயார் ஆர்னா மெர்காமிஸ் எத்தனை எதிர்ப்புகளைத் தாண்டி இத்தகைய பணிகளில் ஈடுபட்டிருப்பார் என்பது ஜூலியானோவுக்குப் புரிந்தது. ஆர்னாவின் சமூக மற்றும் நாடகப்பணிகள், அவற்றுக்கு எதிராக நடந்த தாக்குதல்கள் ஆகியவற்றை மையமாக வைத்து Arna's Children என்கிற ஆவணப்படத்தை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தனது நண்பர் டேனியல் டேனியல் என்பவரோடு இணைந்து இயக்கினார். அந்தப் படம் பல உண்மைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியது என்பதால் அந்தப் படத்தை திரையிடத் தடை விதிக்கப்பட்டது. மீறி யாருக்கும் தெரியாமல் பொதுப் பார்வையாளர்களுக்கு திரையிட்டார். அது தெரிந்து மெர்காமிஸ் மிரட்டப்பட்டார். திரையிடப்பட்ட இடங்களை பின்னர் தெரிந்து கொண்டு அங்கும் தாக்குதல்கள் நடந்தன. எனவே அந்தப் படத்தை இஸ்ரேல் தாண்டி வெளிநாடுகளுக்கு திரையிடும் முயற்சியில் மெர்காமிஸ் ஈடுபட்டார்.
               Arna's Children வெளிநாடுகளில் பலத்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான ராபர்ட் நீரோ துவக்கி, நடத்திவந்த ட்ரிபெக்கா திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டு சிறந்த ஆவணப்படத்துக்கான விருதைப் பெற்றது. (ட்ரிபெக்கா அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகருக்கருகே அமைந்துள்ள வனப்புமிக்க இடமாகும். அங்கு ஆண்டு தோறும் ஆவணப்படங்களுக்கான போட்டியும், வெற்றி பெறும் படங்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன.)
               அந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும் மெர்காமிஸ் நடத்திவந்த நாடகக்குழுவை கலைக்க வேண்டும் என்றும் மிரட்டல்களும் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஆனால் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பகுதி இளைஞர்களிடம் மெர்காமிஸ்-க்கு ஆதரவுப் பெருகியது. மெர்காமிஸ்  போரால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் அரபுக் குழந்தைகளுக்கு தொடர்ந்து கலை ஆர்வத்தை வளர்க்கும் பயிற்சியிலும், அவர்களை உள ரீதியாக பண்படுத்தும் முயற்சியிலும் ஈடுபடுவதிலிருந்து பின் வாங்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். இது ஒரு கலாச்சாரப் போர் என்றும் அறிவித்தார். இதனால் இரண்டு தரப்பிலிருந்தும் எதிர்ப்பினை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
               2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி தொலைக்காட்சிக்காக தனது நாடகக்குழு சிறுவர், சிறுமியர்களை பேட்டி எடுத்து அதனை ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பும் எண்ணத்தில் ஜெனின் -இல் உள்ள தனது நாடகப்பள்ளியில் அதற்கான முன்னேற்பாடுகளை செய்துவிட்டு திரும்புகையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
               அவரது அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டால் இன்னும் பலத்த எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. அவரது இறுதிச் சடங்கில் இரண்டு தரப்பு இளைஞர்களும் ஆயிரக் கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். எல்லாப் பக்கமும் அவருக்கு எதிரிகள் இருந்ததால் அவரைக் கொன்றது எதிர் அமைப்பினர்தான் என்று சொல்லி எல்லா அமைப்புகளும் தங்களுக்கு எதிரான அமைப்புகளை கைகாட்டிவிட்டு தப்பித்துக்கொள்கின்றன. இன்னமும் அவரைக் கொன்றது எந்தப்பிரிவினர் என்பது தெரியாமல் மர்மம் நீடிக்கிறது. விசாரணை நடந்துகொண்டுதான் இருக்கின்றது இருப்பினும் உண்மையான குற்றவாளிகள் எங்கிருக்கிறார்கள், என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை.
               மெர்காமிஸ் உச்சரித்த கலாச்சாரப் போர் என்கிற வார்த்தை வலிமை மிக்கது.  எந்த ஆயுதத்தையும் எடுக்காமல் எதிரிகளை நடுங்கவைத்தது. பொதுவாக கலை, இலக்கியம் ஆகியன ஒவ்வொரு தேசத்திலும் மௌனப் புரட்சிகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் வீச்சை மெர்காமிஸ் போன்ற மெய்யான கலைஞனின் மரணம்தான் வரலாற்றில் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றது.
                 

                                                         

வெறியாட்டு

    வெறியாட்டு     (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)         ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...