சனி, 21 ஆகஸ்ட், 2010

Looking for Comedy in Muslim World





எல்லோரும் குழந்தையாகிற அரிதான சந்தர்ப்பங்களை நகைச்சுவை மட்டும்தான் வழங்குகிறது. திரையரங்குகளில் எப்பொழுதாவது நீங்கள் திரைப்படம் பார்ப்பதை வி்ட்டுவி்ட்டு அரங்கில் அமர்ந்து ரசிக்கும் மனிதர்களை கவனித்திருக்கிறீர்களா? நகைச்சுவை காட்சிகள் வருகிற சமயத்தில் மீசை நரைத்த, சுருக்கங்கள் விழுந்த குழந்தைகளை காண முடியும். அத்தனை இருட்டையும் மீறி அவர்களது முகத்தில் மினுக்கும் பிரகாசத்தை நீங்கள் உணர முடியும்.


Albert Brooks
நமக்கு அருளப்பட்டிருக்கிற இந்த வாழ்வு சதாசர்வமும் சோகக் காட்சிகள் அல்லது இறுக்கமான பொழுதுகள் நிரம்பியதாகவே இருக்கிறது. எல்லோருமே போலியான சிரிப்பு ஒன்றை ஏந்தியபடியே அலைகிறோம். மனம் விட்டு சிரித்தல் என்பது நமது ஒட்டு மொத்த வாழ்வின் நிமிடங்களை சதவிகித கணக்கில் வகை பிரித்தால் மிகச் சொற்பமானதாகவே இருக்கும். அவரவர் வாழ்வில் அதி முக்கியமான தினங்கள் என்று பட்டியலிட்டால் பெரும்பாலானவர்களுக்கு அவர்களது பள்ளி நாட்களோ அல்லது கல்லூரி நாட்களோ அந்தப்பட்டியலில் முதலாவதாக இடம் பெறும். அதற்குப்பிறகு நாம் கடக்கும் நிமிடங்களெல்லாம் கடினமானவையாகவே இருக்கும்.

Michael Glacchino


நம் திரைப்படங்களில் நகைச்சுவை கூட பெரும்பாலும் அடுத்தவரை துன்புறுத்துவதாகவோ அல்லது தன்னை தாழ்த்துவதாகவோ அமைந்து விடுகிறது. இந்த திரைப்படம் இதிலிருந்து சற்று வேறுபட்டு சமகால வாழ்வில் யதார்த்தமாக நிகழும் நகைச்சுவையான விஷயங்களை படம் பிடிப்பதாக இருக்கிறது. 


அமெரிக்க அரசு பிற நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கான யுக்தியினைத் தேடி சில ஆய்வுகளை நடத்த முடிவு செய்கிறது. அதன் ஒரு கூறாக ‘இஸ்லாமிய மக்களிடம் நகைச்சுவை உணர்வு என்கிற விஷயத்தை ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்கிறது. அந்தக் குழு அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான ஆல்பர்ட் புரூக்ஸ் இடம் இந்தப் பணியை ஒப்படைக்கிறது. அவர் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் இந்தியா,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பிரயாணம் செய்து, ஒரு ஆய்வறிக்கையை ஒரு மாதத்திற்குள் தயாரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். அவர் பிரயாணம் செய்யும் நாட்கள், ஆய்வறிக்கை தயார் செய்ய எடுத்துக்கொள்ளும் முயற்சிகள், அதன் பின்விளைவுகள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
                    
“யதார்த்தமான நகைச்சுவை“ என்று இந்தப் படத்தைக் குறிப்பிடலாம். இதில் வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை என்று எந்தக் காட்சியிலும் இல்லை. படத்தில் யாரும் துன்புறுத்தப்படவில்லை. இகழப்படவில்லை. அவரது செயல்பாடுகளும், அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் எல்லாம் இயல்பாக இருக்கின்றன. உரையாடல்களில் கூட வார்த்தை விளையாட்டு எதுவும் இல்லை. ஆனால் படம் பார்க்கும் நீங்கள் உங்களை அறியாமல் சிரித்து விடுவீர்கள்.

உதாரணமாக, புரூக்ஸ்-ஐ ஆய்வுப் பணிக்கு கேட்டுக் கொள்ளும் அதிகாரிகளுக்கும், புரூக்ஸ்-க்கும் இடையே நடக்கும் உரையாடல்.
       
                 “புரூக்ஸ், நீங்கள் இஸ்லாமிய மக்கள் எது மாதிரியான நகைச்சுவையை விரும்பி ரசிக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் 500 பக்க அளவில் அறிக்கை ஒன்றை தயார் செய்ய வேண்டும்“
                          
               “500 பக்கமா...?
           
            குழுவின் தலைவர் தன் சக அதிகாரியிடம் “வழக்கமாக ஒரு அரசு அறிக்கை எத்தனை பக்கங்கள் இருக்க வேண்டும்?

             “850 பக்கங்கள் இருப்பது மரபு. 500 பக்கங்கள் என்பது மிகக் குறைவுதான்

           இன்னொரு அதிகாரி, கவலைப்பட வேண்டாம். அதை யாரும் படிக்கப்போவதில்லை. ஒருவேளை எடை போட்டுப்பார்ப்பார்கள். நீங்கள் வரைபடங்களை கூட சேர்த்துக்கொள்ளலாம். பக்க கணக்குக்காக...“

இன்னொரு அதிகாரி அதற்காக முழுதும் வரைபடங்களாகவே இருந்து வி்டக்கூடாது

புரிகிறது. ஆனால் அது என்ன கணக்கு? 850 பக்கங்கள். 500 பக்கங்கள்...

இந்தக்குழு செய்யும் செலவினங்களுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும்

ஒரு அரசு நியமிக்கும் குழுக்கள் அதன் ஆய்வுகள் அதன் விளைவுகள் இன்ன பிற லட்சணங்கள் வெளிப்படும் அற்புதமான காட்சி இது. ஆல்பர்ட் புரூக்ஸ் ஆய்வு செய்ய ஒப்புக்கொண்டு முதலில் இந்தியா வருகிறார். தனக்கு உதவியாளராக மாயா என்கிறப் பெண்ணை தேர்வு செய்கிறார்.



நெரிசல் மிக்க பகுதிகளில் நின்று கொண்டு நகைச்சுவை துணுக்குகளை எதிர்ப்படுபவர்களிடம் சொல்கிறார். தனி நபர் நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்துகிறார். மக்கள் பெரிதும் ரசிக்க வில்லை. அவரால் இந்திய மக்கள் எதற்கெல்லாம் சிரிப்பார்கள் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க இயலவில்லை. பாகிஸ்தான் செல்வதற்கான அனுமதி அவருக்கு உடனடியாக கிடைக்கவில்லை. எனவே இந்திய எல்லையை ரகசியமாக ஒரு ஏஜென்ட் மூலம் கடந்து அங்குள்ள காமெடியன்களை சந்திக்கிறார். அவர்களது சிரிப்பு செயற்கை நிறைந்ததாகவும் சில சமயம் அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது. அத்துடன் இவர் இந்தியாவுக்கு வந்த வழியே திரும்புகிறார்.

பிரச்சினை  அதற்குப் பிறகுதான் துவங்குகிறது.  இந்தியாவில்  உள்ள  பாகிஸ்தான்  தூதரகத்தில்  அவரது நடவடிக்கைகள்  தீவிரமாக  விவாதிக்கப்படுகின்றன.  இந்திய உள்துறை அமைச்சகத்தில் அவர்  மீது  சந்தேகம்  எழுகிறது.  இரு நாட்டு  அதிகாரிகளும் புரூக்ஸ் தங்கள் நாட்டுக்கு எதிராக ஏதோ சதிவேலை செய்கிறார் என்று முடிவுக்கு வருகிறார்கள். இருநாட்களுக்கு இடையே நடந்து வரும் அமைதிபேச்சு வார்த்தை இதனால் தடைபடுகிறது. இரு நாடுகளும் தங்கள் எல்லைப்பகுதியில் இராணுவ துருப்புக்களை நிறுத்தி வைக்கின்றன. அணு ஆயுதங்களை தயார் நிலைப்படுத்துகின்றன.

ஆல்பர்ட் புரூக்ஸ் ஆய்வை நிறுத்திவிட்டு உடனே நாடு திரும்பும்படி அமெரிக்க அரசு அவருக்கு ஆணை இடுகிறது. ஆல்பர்ட் புரூக்ஸ் நாடு திரும்பி அதுவரை தான் தயாரித்த 6 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கிறார். அத்துடன் அந்த ஆய்வு கைவிடப்படுகிறது?

பொதுவாக இந்திய மக்கள் சமாதானப்பிரியர்கள். அதே நேரத்தில் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். உற்றுக்கவனித்தால் நம் பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் இந்த இரண்டு காரணங்கள் தான் அடிப்படை என்பதை உணரலாம்.

சார்லி சாப்ளின் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் ஆளுமை என்பது திரைப்படத்துறையில் வேறுவிதமானது. சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் பல்வேறு பிரச்னைகளை இருவரும் இயல்பாக நையாண்டி செய்யும் திறன் படைத்தவர்கள்.


ஆல்பர்ட் புரூக்ஸ் மெனக்கெட்டு எதையும் புனையாமல் இயல்பான நகைச்சுவையால் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். யதார்த்த வாழ்வில் நாம் சிரிப்பை தொலைத்துவிட்டு யோகா பயிற்சியில் சிரிப்பை ஒரு பயிற்சியாக செய்யும் காட்சியை படத்தில் வெகு சாமர்த்தியமாக வைத்திருக்கிறார்.

நல்ல நகைச்சுவை என்பது எப்படி  இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சரியான உதாரணமாக இந்தப்படத்தில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


இந்தியர்கள் எப்படிப்பட்ட நகைச்சுவை உணர்வு படைத்தவர்கள் என்பதை அறிய இந்தியாவில் நடைபெறும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் எதையும் பார்க்கவோ அல்லது இந்திய நகைச்சுவையாளர்கள் எவரையும் சந்திக்கவோ ஏன் புரூக்ஸ் முயற்சிக்கவே இல்லை என்ற கேள்வி படத்தை பார்க்கும்போது எழுவது இயல்பே. படத்தில் இது போன்ற கேள்விகளுக்கு இடமளிக்கும் காட்சிகள் சிலவும் உள்ளன. அவற்றைத் தவிர்த்துவிட்டு பார்க்கையில் இந்தப்படம் சிறந்ததொரு யதார்த்த நகைச்சுவைப்படம்.

படத்தின் உச்சபட்ச காட்சியில் புரூக்ஸ் நாடு திரும்பியதும் அவருக்கு சிறு விருந்து அளிக்கப்படுகிறது. அதில் புரூக்ஸ்ன் மனைவி புரூக்ஸ் செய்த ஆயவின் பின் விளைவுகள் எதையும் தெரிந்துகொள்ளாமல் நீங்கள் மிக உன்னதமான செயல் முடித்து நாடு திரும்பியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்என்கிறார். அறையிலிருக்கும் தொலைக்காட்சியில் இரு நாடுகளின் எல்லைப்பகுதிகளும் பதற்றம் நிலவியதாக இருக்கின்றன. அமைதிப்பேச்சு வார்த்தை முறிந்து போனதுஎன்று செய்தியில் அறிவிப்பு காட்டப்படுகிறது. அழகான காட்சியமைப்பின் மூலமே இரு வேறு நிலைப்பாடுகளை உணர்த்தும் அற்புதமான இடம் இது.

அமெரிக்க அரசு எங்கும் நுழைந்தாலும் அது இன்னொரு யுத்தத்துக்கான முகாந்திரமாக அமைந்து விடுகிறது என்பதையும் உணர்த்துகிறது. படத்தின் இசையமைப்பாளர் மிக்கேல் கியாசினோவையும், உடையலங்கார நிபுணர் எவர்ட்ன் மற்றும் ஆடையணியும் பழக்கங்கள் பற்றி முறையே அறிந்து அதற்குத்தக்க தங்கள் பணியை செய்திருக்கிறார்கள். குறிப்பாக புரூக்ஸ் நாடு திரும்பியதும் தன் பெண் குழந்தைக்கு இந்திய புடவை மற்றும் ரவிக்கையை வாங்கிவர அந்தக்குழந்தை அவற்றை அணிந்துக்கொண்டு நடைபயிலும் காட்சி கொள்ளை அழகு.

பிக்கலும் பிடுங்கலும், சிக்கல்களும் சிடுக்குகளும் நிறைந்த நமது வாழ்வைச் சுற்றியிருக்கும் பிரச்னைகளின் கயிறு அவிழ்க்க முடியாத முடிச்சுக்களோடு இறுகிக்கிடக்கிறது. நகைச்சுவை என்கிற உணர்வுதான் அவ்வப்போது நம்மை தளர்த்துகிறது. கலை, இலக்கியங்களின் பணியும் நோக்கமும் கூட மனிதர்களை விடுவிப்பதுதானே....அந்த வகையில் பார்த்தால் நகைச்சுவைப்படங்களும் எனதுபார்வையில் கலைப்படங்களேயாகும்.


சனி, 14 ஆகஸ்ட், 2010

‘கலை'க்காகத் திரண்ட மக்கள் (Shwaas)


‘கலை கலைக்காக' என்றும், ‘கலை மக்களுக்காக' என்றும் இரு வேறு வாதப் பிரதிவாதங்கள் எல்லா மொழியிலும், எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், கலைக்காக மக்கள் திரண்ட சம்பவம் அங்கொன்று இங்கொன்றாக சரித்திரம் சந்தித்திருக்கிறது. மராத்தி மொழியில் வெளியான shwaas(சுவாசம்) என்னும் திரைப்படம் அப்படியான மெளனப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறது.


வணிக சாத்தியக் கூறுகள் அதிகமுள்ள மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தி திரைப்படங்களின் நெரிசலுக்கு இடையே மராத்தி மொழிப் படங்கள் சவலைப் பிள்ளையாகவே இருந்து வருகின்றன. இந்தித் திரையுலகில் நுழைய முயற்சிப்பவர்கள் கிடைக்கும் இடைவெளியை நிரப்ப மராத்தி படங்களை எடுத்து வந்தனர்.

இந்திய அரசால் வழங்கப்படும் ‘தங்கத் தாமரை' விருது 1954ல் shyamach Aai என்ற படம் பெற்றபிறகு கிட்டத்தட்ட 50 வருடங்கள் வேறு எந்த மராத்தி படமும் அந்த விருதைப் பெறவே இல்லை என்ற நிலையில் shwaas திரைப்படம் அந்த விருதைப் பெற்று ,மராத்தி மொழிப் படங்களின் திருப்புமுனையாகவும் இருக்கிறது.


சந்தீப் சாவந்த்

புனேயில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மராத்தி பெண் எழுத்தாளர் மாதவி கர்புரே ஒரு பத்திரிகையில் தீபாவளி மலருக்காக எழுதிய கதைதான் shwaas. இந்தக் கதையை வாசித்த கணக்குப் பதிவாளர் விஸ்வனாத் நாயக் இது பற்றி நாடக நடிகர் அருண் கடவாலேயேவிடம் தெரிவிக்க, கதையால் ஈர்க்கப் பட்டு, தான் இயக்கும் முதற்படத்துக்காக நல்ல கதையைத் தேர்வு செய்யும் முயற்சியிலிருந்த இயக்குனர் சந்தீப் சாவந்துக்குப் பிடித்துப் போனது.

படத்தின் கதை மிகச் சுருக்கமானது. முதியவர் விசாரே(அருண் கடவாலே) தன் 10 வயது பேரக்குழந்தை பரசுராமுக்கு ஏற்பட்ட பார்வைக்குறைவை சரி செய்ய பட்டணத்துக்கு வந்து, பிரபல மருத்துவர் ஸானேவிடம் காண்பிக்கிறார்.



பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் retino blastoma எனப்படும் கண் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் ஸானே... அறுவை சிகிச்சை தவிர வழியில்லை, அதுவும் விரைவில் செய்தாக வேண்டுமென்கிறார். பரசுராமின் உயிரைக் காக்க, பார்வை பறிபோவதை தவிர்க்க முடியாதென்கிறார்.

பரசுராமிற்கும் அவனது பெற்றோர்க்கும் தகவல் தெரிவித்தாக வேண்டிய கட்டாயம் விசாரேவுக்கு. நோயாளிக்கு சிகிச்சை முறை பற்றிய அறிவுறுத்தலும், அறிவித்தலும் சட்டப்படி நியாயமெனினும் பத்து வயது பிள்ளையிடம் உனது கண்பார்வையை பறிகொடுத்தே உன் உயிரைத்தக்க வைக்க வேண்டுமென தெரிவிக்க, தேற்ற, மிரண்டு திகைக்கிறார் விசாரே.

அவருக்கு துணை வந்த சமூக சேவகி ஆஸ்வாரி, மருத்துவர் ஸானேவிடம் மன்றாடி, அவர் மூலமே பரசுராமுக்குத் தெரியப்படுத்துகிறார்.

முதலில் அழுது ஆர்பாட்டம் செய்தவன் நிலைமையின் தீவிரம் புரிபட ஓய்ந்து போகிறான். குறித்த தேதியில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றான். எதிர்பாராவிதமாய் அறுவை சிகிச்சை ஒரு நாள் தள்ளிப் போகிறது. படுக்கையிலேயே நாள் முழுதும் இருக்கச் சலித்தவனைச் சமாளிக்கப் பாடாய்ப் படுகிறார் விசாரே. மூடிக்கிடக்கும் ஜன்னல்களைத் திறக்கும் போது மட்டுமே அமைதியாகிறான் அவன். வெளியுலகக் காட்சிகளுக்கான அவனது ஏக்கம் புரிகிறது விசாரேவுக்கு.

திடீரென மருத்துவமனை அறையிலிருந்து மாயமாகின்றனர் பாட்டனும் பேரனும். மருத்துவர் ஸானேயும் நிர்வாகமும் பதைக்கின்றனர். தகவல் வெளிக்கசிய பத்திரிக்கைகளும், ஊடகங்களும் மருத்துவமனைக்குப் படையெடுத்து யூகங்களாலும் கேள்விகளாலும் திணறடிக்கின்றனர். மருத்துவர் ஸானே மிகுந்த கோபமாகிறார்.

பொழுது சாயும் நேரத்தில் விசாரேயும் பரசுராமும் மருத்துவமனைக்குத் திரும்புகின்றனர். பரசுராம் கையில் ஏகப்பட்ட விளையாட்டு பொம்மைகள். எதிர்ப்படும் ஸானே, விசாரேயைக் கடுமையாகத் திட்டுகிறார்.

பரசுராமுக்கு பார்வையிருக்கப் போகும் இந்த ஒரே ஒரு நாளாவது அறைக்குள் அடைந்து கிடக்காமல் புறவுலகின் எழில் கொஞ்சும் காட்சிகளைக் கண்டு ரசிக்கவும், அவனையொத்த வயதினருடன் குதூகலமாக விளையாடி மகிழவும் தான் வெளியே அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார் விசாரே.



அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஸானே, கடிந்து கொண்டதற்குப் பிராயச்சித்தம் போல், அறுவை சிகிச்சை செய்யப் போகும் அறையை குழந்தைகள் விரும்பும் பொருள்களைக் கொண்டு வண்ணமயமாக அலங்கரிக்க, பணியாளர்களுக்கு உத்தரவிடுகிறார்.

பரசுராம் ஒளியிழந்த தன் விழிகளைக் கண்ணாடிக்குள் ஒளித்து ஊர் திரும்ப, ஊர் மக்கள் அனைவரும் திரண்டு அவனை வரவேற்க நிற்பதுடன் படம் நிறைவடைகிறது.

இப்படம் இந்தியாவின் அதிகாரப் பூர்வமான திரைப்படமாகப் பரிந்துரைக்கப் பட்டு ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப் படுகிறது. பிறகுதான் மராத்தி மக்களின் உணர்வுப் பூர்வமான எழுச்சியை நாம் உணரும் நிகழ்வுகள் நடந்தன

அமெரிக்காவில் தயாரித்து திரையிடப்படும் பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் எளிதாக ஆஸ்கார் விருதுக்குப் பரிசீலிக்கப் படும். பிறமொழிப் படங்கள் ‘சிறந்த அயல்மொழித் திரைப்படம்' எனும் பிரிவில் மட்டும் பரிசீலிக்கப்படும். படத்தை நடுவர்கள் மற்றும் ஆஸ்காரின் 5835 உறுப்பினர்கள் கண்டு அவர்கள் மனதில் படம் பற்றிய மதிப்பை பதிய வைக்க செலவு பிடிக்கும் மெனக்கெடுவைச் செய்ய வேண்டும். ஏனெனில், உலகம் முழுக்க ஏற்கனவே பிரபலமான படங்கள் உறுப்பினர்களிடையேயும் அறியப்பட்டிருக்கும். பிற மொழி படங்கள் பற்றி ஆஸ்கார் குழுவினரிடம் பிரபலப்படுத்த படத்தை தயாரித்தவர்கள்தான் முயற்சிக்கவேண்டும். அமீர்கான் கூட ‘லகான்'படத்துக்காகவும், பின்னர் ‘தாரே ஜமீன்பர்' படத்துக்காகவும் நிறையச் சிரமப்பட்டார்.

shwaas படத்தை தயாரிக்க ஆன செலவை (30,00,000) விட அதிக தொகை படத்தை முன்னிறுத்த(promote) தேவைப்பட்டது. மஹராஷ்ட்ராவில் உள்ள ஜோஹேஸ்வரி பள்ளிக் குழந்தைகள், விளக்குகள் தயாரித்து விற்றுக் கிடைத்த ரூ.30,000 பணத்தை தந்தனர். வேறொரு பள்ளி மாணவர்கள் பகுதி நேர வேலையாக கார்களைத் துடைத்து அதில் கிடைத்த தொகையை அனுப்பினர். சச்சின் டெண்டுல்கர் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தந்தார். அமிதாப்பச்சன் ரூ.ஒரு லட்சமும், கோவா அரசு 2.5 லட்சமும், மகாராஷ்டிர அரசு 15 லட்சமும் தந்தனர். அமெரிக்காவிலுள்ள மகராஷ்டிர மக்களிடம் திரட்டிய பணம் மற்றும் மகாராஷ்டிர நாடக அமைப்புகள் 65,000 ரூபாயும், சித்தி வினாயகர் ஆலய நிர்வாகிகள் தனியொரு உண்டியல் மூலம் திரட்டி தந்த சிறு தொகையும் பயன்படுத்தி 14 முறை ஆஸ்கர் குழுவினர் பார்ப்பதற்காகத் திரையிடப்பட்டது.

ஒரு திரைப்படம், திரையரங்குகளில் மக்களை ஈர்த்து பெருந்திரளாகச் சேர்ப்பது கூட அரிதாகி விட்ட சூழலில், ஒரு மாநில மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒரு திரைப்படத்தின் பின்னே திரள வைத்தது பெரும் எழுச்சி என்று சொல்லலாம்.

படத்தில் சிறுவனாக நடித்த அஸ்வின் சிட்டாலே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றான். shwaas திரைப்படம் ஆஸ்கார் விருதை தவறவிட்டாலும், பெரும்பாலான மக்கள் திரளும் திருமண மண்டபங்கள், பள்ளி அரங்குகளில் மக்களாலே பல முறை திரையிடப்பட்டு மராத்தியர்களிடையே தனக்கென ஒரு இடம் பிடித்தது.

40கோடி,50கோடி முதலீடு செய்து ஒரு படத்தை தயாரிக்கத் தயாராய் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இதுபோன்ற வெகு குறைந்த முதலீட்டில் வருடத்துக்கு ஒரு படத்தை தயாரிக்க முன்வந்தால் மக்கள் அவர்கள் பின் திரளமாட்டார்களா என்ன?

(கல்கியில் பிரசுரமானது)

சனி, 31 ஜூலை, 2010

சர்ச்சைகளின் பெட்டகம் (The Hurt Locker)


இயக்குனர்: கேத்தரின் பிக்ளே



தயாரிப்பாளர்: நிக்கோலஸ் சார்ட்டியர்

 

கதாநாயகன்: ஜெரோமி ரென்னெர்

ஆஸ்கார் வரலாற்றில் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை காதரீன் பிக்ளோ-வுக்குப் பெற்றுத்தந்த படம் The hurt locker (வேதனைகளின் பெட்டகம்)


ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவப் படையில் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் பிரிவுகள் அங்கு ஒரு வருடத்திற்கு ஒரு குழு என்ற சுழற்சி முறையில் பணியாற்றுகின்றன.

மரணத்தின் அருகே சென்று கை குலுக்கி குசலம் விசாரிக்கும் அந்த எமகாதக வேலையில் வில்லியம் ஜேம்ஸ், தாம்சன், ஓவன், ஸான்பார்ன் அடங்கிய குழு 2004-ல் பணியாற்றுகிற போது நேர்கின்ற பரபரப்பான, வேதனையான சம்பவங்களே படத்தின் மையக் கரு.

வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணியில் தாம்சன் இறந்து விடுகிறார். தேசம் விட்டு தேசம் வந்து, சொந்த பந்தங்கள் இல்லாத பூமியில் பழகிய நால்வரில் ஒருவரின் இழப்பு மற்றவர்களை வெகுவாக பாதிக்கிறது.

தாம்சனுக்குப் பிறகு ஜேம்ஸ்தான் வெடிகுண்டுகளோடு உரையாடி, உறவாடி அவற்றை உயிரற்ற ஜடமாக்கும் பணியை செய்ய வேண்டியிருக்கிறது.

குறுந்தகடுகளை விற்கும் பெக்ஹாம் என்ற சிறுவனோடு ஜேம்ஸுக்கு விளையாட்டாக நட்பு உருவாகிறது.

தங்களது அடுத்த வேட்டையின் போது முகம் சிதைந்த இறந்து போன சிறுவனின் வயிற்றுக்குள் வெடிகுண்டு இருப்பதைக் கண்டுபிடித்து, ஜேம்ஸே அதனை வெளியிலெடுத்து அழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இறந்து போன சிறுவன் பெக்ஹாம் தானோ என்ற சந்தேகம் எழ, ஜேம்ஸ் அவன் வேலை பார்க்கும் கடையில் தேடுகிறான். அங்கு அவனைப் பற்றி எந்த தகவலும் சொல்லப்படாமல் போக கவலையுடன் முகாமுக்கு வருகிறான்.

மற்றொரு வேட்டையில் உடனிருக்கும் ஓவனின் இடுப்புக்குக் கீழ் படுமோசமாகக் காயம் படுகிறது. அவன் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப் படுகிறான்.

ஈராக்கிய அப்பாவி ஒருவரின் இடுப்பில் தீவிரவாதிகள் வெடி குண்டு வைத்து கட்டிவிட, அதனைச் செயலிழக்க வைக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் அவர் தூள் தூளாகும் காட்சி உருக்கமானது. இந்த கொடூரமான காட்சியை நேரில் பார்த்தபின் இனி இப்படியான பணியில் ஈடுபடக் கூடாது என்ற மன உறுதி ஸான் பார்னுக்கு ஏற்படுகிறது. படத்தின் இறுதி காட்சியில் பெக்காம் குறுந்தகடுகளை விற்றபடி வருகிறான்.

தங்களுக்கான சுழற்சி முறை முடிந்து ஜேம்சும், ஸான் பார்னும் நாடு திரும்புகின்றனர். ஜேம்ஸ் தன் வேதனைப் பெட்டகத்தைத் திறந்து, கொடூரமான அனுபவங்களை தன் ஒரு வயதுக் குழந்தையிடம் சொல்லுகிறான். ஆனாலும் மீண்டும் வரும் அடுத்த சுழற்சி பணிக்காக திரும்பவும் தயாராகும் காட்சியோடு படம் முடிவடைகிறது.

படத்தில் ஜேம்ஸ்-ஆக வரும் ஜெரோமி ரென்னெரின் நடிப்பு அபாரமானது துல்லியமான முகபாவங்கள், அங்க அசைவுகள் அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகின்றன. பேரி அக்ராய்ட்டின் ஓளிப்பதிவு பாலைவன வறட்சியையும் மீறி அழகியலாக காட்சிகளை பதிவாக்கியிருக்கிறது. ஒரே காட்சியில் வெவேறு கோணங்களை படமாக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் கதையமைப்பு இருந்தாலும் கோணங்களை அடுத்து அடுத்து மாற்றுவதில் குழப்பமில்லாத நேர்த்தியை கையாண்டிருக்கிறார்.

ஒரு ஆவணப் படத்துக்கான சாயலுடன் எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படம் ஆஸ்கார் விருதைப் பெறுவதற்கு முன்னும் பின்னும் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்திருக்கிறது.



அமெரிக்க இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ‘பொஹம்மர்'என்ற இராணுவ வீரர், அமெரிக்கா முழுவதும் மிகப்பிரபலமானவர். அவரது வலைப்பூ மூலம் ராணுவ வீரர்களுக்காக நிதி வசூலித்து பாதிக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய வீரர்களின் குடும்பத்துக்காக உதவி வருகிறார். பொஹம்மர் படத்தில் ஜேம்ஸ் தன்னிச்சையாக பல இடங்களில் முடிவெடுத்து, தன் மேலதிகாரிகளுக்குக் கட்டுப்படாமல் சாகஸங்கள் நிகழ்த்துவது போல் காண்பிக்கப் பட்டிருப்பதைக் கடுமையாக ஆட்சேபித்தார். இராணுவத்தில் கடைநிலை ஊழியன் மேலதிகாரிக்குக் கட்டுப் படாதவன் என்கிற பிம்பத்தை தோற்றுவித்துவிடும் என்பதோடு, படத்தில் வீரர்கள் அணிந்திருக்கும் இராணுவ உடைகளும் தவறானவை. பாலைவனத்தில் அணியத்தக்கவென்றே பிரத்யேகமான உடைகள் தான் அமெரிக்க அரசால் தரப்பட்டன. வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்க பல்வேறு முறைகள் உள்ளன. படத்தில் பெரும்பாலும் கட்டிங் ப்ளேயர், ஸ்க்ரூ டிரைவர் ஆகியவற்றையே அதிகம் பயன் படுத்துவது வர்த்தக படங்களின் அடியொற்றியே எடுக்கப்பட்டிருக்கும் அறியாமையை காட்டுகிறது என்பதும் அவரது குற்றச்சாட்டு.



விருது அறிவிக்கப்படும் முன் படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘நிக்கோலஸ் சார்ட்டியர்' ஆஸ்கார் நடுவர் குழு உறுப்பினர்களுக்கு இ.மெயில் மூலம் இந்தப் படத்தை தேர்வு செய்யும் படி வேண்டுகோள் அனுப்பியது ஆஸ்கார் குழுவை எரிச்சலூட்டியது. அவர் எச்சரிக்கப்பட்டு, விருது வழங்கும் விழாவுக்கு அவர் வரக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டார்.

படத்தின் கதை ‘மார்க்போல்' என்ற பத்திரிகையாளருடையது. இவர் ஈராக் யுத்தத்தின் போது செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் இந்தக் கதையை எழுதியிருந்தார். வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவில் பணியாற்றிய அமெரிக்க இராணுவ வீரர் ஜெஃப்ரி சார்வரின் சாயலாகவே படத்தின் ‘ஜேம்ஸ்' கதாபாத்திரம் படைக்கப் பட்டிருப்பதாக அமெரிக்கா முழுவதும் நம்பப் படுகிறது. இதன் காரணமாக படத்தில் இராணுவம் பற்றிய ஆட்சேபகரமான தகவல்கள் இருப்பதாக தற்பொழுது‘ஜெஃப்ரி' வழக்குப் பதிவு செய்துள்ளார். சிறந்த கதாசிரியருக்கான ஆஸ்கார் விருதை இந்த படத்துக்காகப் பெற்ற மார்க்போல் தான், இப்படத்தின் தொழில் நுட்ப ஆலோசகரும் கூட. எனவே, மார்க்போலுக்கு இந்த வழக்கு கூடுதல் தலைவலியைத் தந்துள்ளது.

இதேபோல 1930-ல் எடுக்கப் பட்ட All Quiet on Western Front என்ற படமும் ஆஸ்கார் விருது பெறும் போது பல சர்ச்சைகளைச் சந்தித்தது. ஜெர்மன் இராணுவ வீரர்கள் மீதான அனுதாபப் பார்வையோடு எடுக்கப் பட்டது அந்த படம். அவர்களின் கொடூரமான இன்னொரு முகத்தை மறைக்கும் முயற்சி என்று விமர்சிக்கப் பட்டது.

2010-க்கான கோல்டன் குளோப் விருதுப் போட்டியில் ஜேம்ஸ் காமரூன் இயக்கிய ‘அவதார்' படம் ‘ஹர்ட் லாக்கரை'ப் பின்னுக்குத் தள்ளி வென்றாலும், ஆஸ்கார் விருதுக்கான போட்டியில், ‘அவதாரை' தோற்கடித்து ‘ஹர்ட் லாக்கர்' பரிசை தட்டிச் சென்றது.



‘அவதார்' படத்தை இயக்கிய ஜேம்ஸ் காமரூனின் முன்னாள் மனைவிதான் ‘ஹர்ட் லாக்கரை' இயக்கிய கேத்தரின் பிக்ளே என்பது மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம்.
 
(கல்கியில் வெளிவந்தது)

செவ்வாய், 13 ஜூலை, 2010

பிரதி

பிரதியெடுப்பதுதான் நடக்கிறது
வாழ்க்கை முழுதும்...

வெயிலெடுத்து போட்டது
நிழலை நிஜத்தின் பிரதியாய்...
மேகமூட்டம் போல்
புகை எழும்பி பரவியது வெளியெங்கும்....
பெருக்கெடுக்கும் வியர்வை துளி போல்
கசிகிறது நீர்த்துளி கண்ணிலிருந்து

கண்ணாடி துண்டங்கள் போல்
ஜ்வலிக்கிறது கானல் நீர் வரி வரியாய்...
பிரதிடுப்பதுதான் நடக்கிறது
உலகமெங்கும்....

கடற்கரை மணலில் பதிந்து கிடந்தது
எவர் முகத்தின் பிரதியோ...
இழுத்து சென்ற ஆழிப் பேரலை மட்டுமே அறியும்
எங்கே தவிக்கிறதோ எவராலும் பிரதி எடுக்க முடியாத
உயிர்....

கவிஞனாயிருத்தல்

வறண்டு பிளந்த நிலத்தினுள்
வதங்கித் தளர்ந்திருக்கும் வேர்தேடி
நனைத்து உயிர்ப்பிக்கும்
ஓர் மழைத்திவலை போல
இருக்க நினைத்ததுண்டு...

குளிர்ந்த கிரணங்களால் இரவை நிரப்பி
பாலாய்ச் சிரிக்க
ஒரு நிலவைப்போல்
இருக்க நினைப்பதுண்டு...

தூங்கும் மொட்டிதழை வருடியவிழ்த்து
கொஞ்சம் வாசம் உறிஞ்சி
செல்லும் திசைதோறும்
விதைத்துப்போகும்
காற்றாய்த் திரிய நினைத்ததுண்டு...

அலையாய் அலைந்து மணலை அள்ளி
உள்ளிழுத்து கர்வம் ததும்பக் கொந்தளிக்கும்
கடலாய் இருக்க நினைத்ததுண்டு...

உயிரில் இழைத்து உதிரம் நிறைத்து
பிரபஞ்ச தரிசனம் தந்த தாயாய்ப்
பிரதிபலிக்க வார்த்தைகளால் வாழ்க்கையில்
முடிந்ததில்லை
எதுவும் சாத்தியப்படாதபோது
எல்லாவற்றுக்கும் மாற்றாய் ஒன்றுண்டு.

அது‘ஒரு கவிஞனாயிருத்தல்'

மழையை ரசியுங்கள்

பூமிப் பக்கங்களில் ஒவ்வொரு முறை எழுதும்போதும்
ஒவ்வொரு பொருளைத் தரும்
மழைவரிக் கவிதைகளை வாசியுங்கள்
உங்களுக்கு அருளப்பட்ட
வாழ்வின் அர்த்தம் புரிபடலாம்.

அடர்ந்த தூக்கத்தில்ஆழ்ந்து
அதிகாலைப் பனியை
தவறவிட்டவர்களுக்காக
முதிர்பனியாய் தன்னை
நகலெடுத்துக் கொண்டிருக்கிறது மழை!

நீங்கள் வீடு திரும்பும்போது
இலை வழியே பன்னீரைத் தூவியபடி
ஒரு வரவேற்பாளனைப் போல்
பூ இதழ்களில்அலங்கார விளக்குகளேற்றிக்
காத்திருக்கிறது மழை!

அழைத்துச் செல்ல எவருமில்லாமல்
படுக்கையில் கிடக்கும்
முதிர்பருவத்தினருக்கு
ஜன்னல் வழியே
சாரல் வார்த்தைகளால்
ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது மழை!

எல்லா வெப்பத்தாலும்
சூடேறிப்போயிருக்கும் உங்களை
பாதம் வழியே தணிக்க
வாசலருகே ஆங்காங்கே கிடக்கின்றன
மழைத் திட்டுகள்.

உப்புக் கலக்காத மழைக்கண்ணீரை
நாவிலேந்துங்கள்
வானிலிருந்து இடறி விழுந்த
மழைக் குழந்தைகளை
முடிந்தால் மடியிலேந்துங்கள்...!

உங்கள் தோட்டத்து ரோஜாவை
வெயில் விரல்கள் பறித்துவிடாமல்
சுற்றி நடும் மழைக் கம்பிகளை
நன்றியுடன் ரசியுங்கள்!

பள்ளிவிட்டு தனியே வரும்போதெல்லாம்
தோளோடு அணைத்தபடி
உடன்வரும் மழைத் தோழனை
வீட்டின் வாசல் வந்ததும்
அப்படியே விட்டுவிட்டு வந்துவிடாதீர்கள்...
நட்பிற்கு இலக்கணமல்ல அது...

ஊன்றத் துடித்து தோற்று
தரையில் பரவும் மழையின் பாதங்களை
மிதித்து விடாதீர்கள்...
அதன் போக்கில் நகர விடுங்கள்.

மழைப் பரிவாரங்களின்ஆரவாரமான ஆர்ப்பரிப்பு
சிலசமயம் வலிப்பது போல் தோன்றும்...
வசை பாடாதீர்கள்...
அது பூமி விழிப்பிற்கான
எழுப்புதலாய் இருக்கலாம்...
ஒரு தாயின் அதிகாலை உசுப்புதலைப் போல.

பூமி விரிப்பில் மழைத் தூரிகைகள்
வரைந்து முடித்த ஓவியங்களில்
ஒரு சோம்பேறிச் சூரியன்
தாமதமாய் வர்ணம் கலக்க முயற்சிப்பதுபோல்
வாளாவிருந்து விட்டுப்பின் வருந்தாதீர்கள்.

மிகச்சரியாக மழையின் எந்தச் சொட்டு
உங்களைசிலிர்க்கச் செய்திருக்குமென்று
இனம் பிரித்துவிட முடியாது...
எல்லாச் சொட்டுக்களையும்
நிதானமாகச் சேகரியுங்கள்.

ஏனென்றால்-மழலைப் பருவமும்
மழைச் சொட்டுக்களும்
இழந்தால் கிடைப்பதில்லை!!

வரம்

கண்டதைக் கிழிக்கலாம்...
கண்டபடி திட்டலாம்...
காறி உமிழலாம்..

சூழலின் ஐளனத்தை உதறி
குமுறிக் குமுறி ஆழலாம்

மணல்வெளியில் மணிக்கணக்காய் புரளலாம்...
உடைகளற்றுத் திரியலாம்...

கூத்தாடி கூத்தாடி கையில் பட்டதை
போட்டுடைக்கலாம்...

கால் தடுக்கிய கல்லை
நையப் புடைக்கலாம்..

தோன்றும் போதெல்லாம் உரக்க சிரிக்கலாம்

சூரியனுக்கு நேராய் திமிராய் உறங்கலாம்...
நிலவொளியில் குபீரென
குளத்தில் குதிக்கலாம்...

துயரங்களின் துரத்தல்களிலிருந்து
தப்பித்து திரியலாம்
பைத்தியமாகும் வரம் மட்டும்
கடவுளிடம் கிடைத்துவிட்டால்...

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...