வியாழன், 4 அக்டோபர், 2012

ஜெயமோகனிடமிருந்து...

          கடிதங்களை ஆவணப்படுத்துதல் என்பதை விட அதில் செறிந்த கருத்துகளை ஆவணப்படுத்துதல் அவசியமாகிறது. என்றோ யாராலோ எழுதப்பட்டு நம் பாதுகாப்பில் பத்திரமாயிருக்கும் இந்திய உள்நாட்டு அஞ்சல் தாள்கள் சில சமயங்களில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தக்கதாய் இருந்து விடுகிறது. எழுத்தாளுமைகளின் படைப்புகளில் அவர்களின் கடிதங்களும் இடம் பெற்று விடுகின்றன... அவர்களின் சிந்தனை வீச்சுகளால்.

           திரு.ஜெயமோகன் எனக்கும் கடிதமெழுதியிருக்கிறார் என்ற பெருமிதப் பீற்றலால் அல்ல இப்பதிவு.  அக்கடிதங்களில் விரவிக்கிடக்கும் அவர்தம் கருத்துக்களை சக நண்பர்கள் முன்வைக்கும் நோக்கமெனக் கொள்ளலாம்.
          மடல் அவிழ் பொழுதெல்லாம் மணம் பரப்பும் மலர்களாய் இவை...

31.8.02 தேதியை முத்திரையிட்ட கடிதம் ஒன்று...


அன்புள்ள பாரதிக்குமார் அவர்களுக்கு,
 

         தங்கள் கடிதம் கிடைத்தது. உண்மைதான். என் மீது பலதரப்புகளிலிருந்து கடுமையான விமர்சனம் உள்ளது. அதற்குப் பல காரணங்கள். முக்கியமானது நான் முன்வைக்கும் விமர்சனங்கள். பெரும்பாலான எழுத்துக்களை நிராகரிக்காமல் தீவிரமான விமர்சனங்களை முன்வைக்க முடியாது இல்லையா? அப்போது கடுமையான கோபதாபங்கள் உருவாவதை தடுக்க முடியாது. இம்மாதிரி கோபதாபங்களுடன் இருப்பவர்கள் பொதுவாக வாசகர்கள் அல்ல. ‘சிறு' எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள் ஆக முஸ்தீபு எடுப்பவர்கள். தங்களால் எழுதிவிட முடியும் என்றோ தாங்கள் எழுதுவது முக்கியம்தான் என்றோ உறுதியாக நம்ப முடியாதவர்கள். இவர்கள் உருவாக்கும் பிரச்சாரத்தை நம்பி என் நூல்களைப் படிக்காமலே கருத்துக்களை உருவாக்கிக் கொண்டுள்ள எளிமையான சிலர். ஆனால் இவர்கள் இருசாரரையுமே நான் பொருட்படுத்துவதில்லை. என் வாசகர்கள் என் நூல்கள் மூலமே என்னைப்பற்றிக் கணிப்பார்கள்.
 

           www.marutham.com என்று ஒரு சிற்றிதழ் இணையத்தில் கொண்டுவர முயற்சியில் இருக்கிறேன். ஏற்கனவே சொல்புதிது என்ற இதழை நான் நடத்துவதை அறிந்திருப்பீர்கள்.
 

          இந்து தத்துவ மரபில் ஆறு தரிசனங்கள் என்று ஒரு தத்துவநூலை எழுதியுள்ளேன். அதை சீக்கிரத்தில் வெளியிடவுள்ளோம்.
 நவீனத்துவத்திற்குப் பிறகு தமிழ்க்கவிதை இருவகையில் முக்கியமானது. ஒன்று தமிழ் கவிமரபின் ஒரு சுருக்கமான சித்தரிப்பை அது அளிக்கிறது. மேற்கத்திய நவீனத்துவ / பின்நவீனத்துவ மரபின் சித்திரத்தையும் அளிக்கிறது. பிறகு தேவதேவனை அவ்வடிப்படையில் விமர்சித்து மதிப்பிடுகிறது. அறிமுக நூல் என்ற முறையிலும் அது முக்கியமானதே.


அன்புடன்,
ஜெயமோகன்.



31.10.02 முத்திரையிட்ட ஒரு இந்திய அஞ்சல்...

அன்புள்ள பாரதிக்குமார்
 
        தங்கள் கடிதம் கிடைத்தது. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? தீராநதி கட்டுரை வாசிக்கிறீர்களா? அது ஒரு புதுவகை உத்தி. மேலோட்டமாக கண்ணில் படும் விஷயங்களை சகஜமாக சொல்லிப்போகும் பாணியில் உள்ளோட்டமாக வேறு சில விஷயங்களைக் குறிப்பிட்டு போகும் முறை அது. குற்றால அருவி வழியும் குளிர்ந்த பாறை லாவா உறைந்து உருவானது. அதேபோல், மனம் என்றால் என்ன என்ற வினாவை எழுப்பிக் கொள்ளும் கட்டுரை அது எனக் கூறலாம். குளிர்ந்த சகஜத்தின் அடியில் கொதிக்கும் பித்து உள்ளது. நாம் எல்லோருமே எப்போதாவது நம் மனதின் கட்டுக்கடங்காத நிலையை எண்ணி அஞ்சியிருப்போமல்லவா? அந்த கணத்தை தொட முயலும் கட்டுரைதான் அது. பரவலாக அது கவனிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் இருக்கிறது எனக்கு.
 

         www.marutham.com என்ற இணையதளம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறேன். 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் இணைய இதழ் இது.

அன்புடன்,
ஜெயமோகன்.


20.1.04 முத்திரையிட்ட அஞ்சல் ஒன்று...

அன்பிற்குரிய பாரதிக்குமார் அவர்களுக்கு,
 

         தங்கள் கடிதம் கிடைத்தது.
 

         நெய்வேலியில் பா.சத்தியமோகன் எனக்கு பிரியமான நண்பர். அவரும் கடிதம் எழுதி இருந்தார். சங்கச்சித்திரங்கள் உங்களுக்கு பிடித்திருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் கடிதத்திற்கு நன்றி.
 

          இலக்கியம் என்ற பேரிலும் சரி, மேடைப்பேச்சு கடிதம் அனைத்திலும் சரி. பொது ஊடகத்தில் அலங்காரமான பொய்களை சொல்வதற்கு நாம் பழகி விட்டிருக்கிறோம். எழுதினால் பேசினால் கேட்பவரை மகிழ்விப்பதே முதல் நோக்கம் என்றாகி விட்டிருக்கிறது. மெதுவாக உண்மையை பேச ஊடகமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டிருக்கிறது இல்லையா?
       

          சங்க சித்திரங்களை எழுதும் போது முன்கூட்டியே நான் எனக்கு போட்டுக்கொண்ட நிபந்தனை ‘உண்மையை' மிகையின்றி எழுதுவது என்பது ஒன்று. இரண்டு ஒவ்வொரு இலக்கிய ஆக்கமும் வாசிப்பவனின் வாழ்பனுபவங்களையே தீண்ட வேண்டும் அவன் சொந்த வாழ்வை வேறு ஓர் ஒளியில் காட்ட வேண்டும் அது. அதற்குத்தான் சங்க சித்திரங்களில் ஒவ்வொரு கவிதையும் என் சொந்த வாழ்வில் என்னை எப்படி பாதித்தது என்று எழுதினேன். இம்மாதிரி ஒரு வாசிப்பு முறை உருவாக வேண்டும் என்பதே என் விருப்பம்.
            உங்கள் கடிதத்தைக் கண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாம் பேசுவது மறுபக்கத்து சமான இதயத்திற்கு கேட்கிறது என்ற மகிழ்ச்சி. எத்தனை மலினப் படுத்தப் பட்டாலும் கூட நவீன மொழியில் நம்மை தொடர்புறுத்த முடிகிறது என்ற திருப்தி. ஒருவேளை இலக்கியம் என்பதே இதனால்தான் போலும் எழுதப்படுகிறது. பழகி தேயும் மொழியை முடிவின்றி புதுப்பிக்க.

-ஜெயமோகன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...