ஞாயிறு, 15 ஜூலை, 2012

மடல் அவிழ் பொழுது - 2

திரு. கோவை ஞானி அவர்கள் 7/10/02-ல் எனக்கு எழுதிய கடிதமொன்று...

அன்பு நண்பருக்கு வணக்கம்,

      உங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி. இடையில் நிறைய வேலைகள். உடனடியாக பதில் எழுதவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள். தங்கள் கேள்விகளுக்கு சுருக்கமான பதில் எழுதுகிறேன்.

      உங்கள் உணர்வுகள் நேர்மையானவை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக என் பாராட்டுக்கள். இனி என் பதில்கள்.

       1. தமிழகத்தில் மார்க்சியர் எப்பொழுது எப்படி எல்லாம் தடம் புரண்டு போனார்கள் என்பது பற்றி நிறையச் சொல்ல வேண்டும். திராவிட இயக்கத்தோடு அவர்கள் கடுமையாக முரண்பட்டது ஒரு பெரும் தவறு. திராவிட இயக்கத்தின் இனப்பார்வைதான் இவர்களுக்குப் புலப்பட்டதே தவிர அதன் உள்ளடக்கமாக இருந்த தமிழ்த் தேசிய இனப் பார்வையை இவர்கள் பார்க்கவில்லை. தமிழின் தொன்மை மேன்மை முதலியவற்றை இவர்கள் வெறுத்தனர். மார்க்சியம் வந்த பிறகுதானே உலகத்திற்கு ஒளி வரமுடியும் என்று இவர்கள் உண்மையாகவே நம்பினர். வள்ளுவர் பற்றி எல்லாம் இவர்களுக்கு அக்கறை இல்லை.

       சோவியத் ரஷ்யா எதைக் கொண்டாடுகிறதோ அதையே இவர்கள் கொண்டடினர். மேற்கத்திய மார்க்சியரை இவர்கள் மதிக்கவில்லை. மார்க்சின் மொழிப்பற்றைக் கூட இவர்கள் ஏற்கவில்லை. மார்க்சியத்தை அதன் உள் ஆழங்களோடு இவர்கள் கற்கவில்லை. இந்திய வரலாற்றின் தனித்தன்மை இவர்களுக்கு புலப்படவில்லை. கட்சிக்கு மட்டுமே இவர்கள் முதல்மரியாதை தந்தனர். கட்சிக்குள் பார்ப்பனர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. இன்றளவும் இவர்களுக்கு ஆழமான தமிழ்ப்பற்று இல்லை. பாரதிதாசனை இவர்கள் இன்றுதான் மதிக்கின்றனர். மக்களுக்கு எதிராக கட்சி செயல்பட்டதை இவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்களை மார்க்சியர் என்று நாம் மதிக்க வேண்டியதில்லை. இவர்களுக்குத் தமிழ்ப்பற்று இல்லை, தமிழ்த்தேசிய உணர்வு இல்லை, இயற்கை மீது அக்கறை இல்லை. இந்தியா தான் இவர்கள் தேசம். பா.ஜ.வினரை விட இவர்கள் நேசம் அதிகம். இவர்களைப் பற்றி நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

       2. தி.க.சி. என்னைப் பாராட்டியது எனக்கு வியப்பளிக்கிறது. தி.க.சி.யின் மதிப்பீடு எப்பொழுதுமே கேள்விக்குரியது. எனினும் அவரது அன்பை நான் மதிக்கிறேன். மார்க்சியர், தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றை பெரும் சங்கடத்தோடு தான் ஏற்கத் தொடங்கினார். வர்க்கப் பார்வைக்குள் இவை எப்படி வரும் என்ற கேள்வியைக் கூட ஒதுக்கிவிட்டுத் தலித்தியம் முதலானவற்றை இன்று ஆதரிக்கின்றனர். மக்களிடம் கட்சி செல்வாக்குப் பெறுவதற்கு வேறு என்ன செய்ய முடியும்? எனினும் இவர்களுக்குப் பின்நவீனத்துவம் முதலியவற்றோடு இன்னும் உடன்பாடில்லை. பின்நவீனத்துவத்தினுள்ளும் இருக்கிற இடதுசாரிப் பார்வை எனக்கு உடன்பாடு. அப்புறம் இந்துத்துவம் ஒரு பெரிய சிக்கல். இந்து மதம் வேறு, இந்துத்துவம் வேறு என்று நாம் வேறுபடுத்த வேண்டும். இந்துமதம் பன்முகப் பார்வைகளைக் கொண்டது. நாத்தீகனும் இதற்க்குள் இடம் பெறலாம். கடவுளர்க்கு உருவங்கள் சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம். இந்துத்துவத்திற்கு ஒரே முகம் தான் உண்டு. அது முதலும் முடிவுமாக மதவாத அரசியல், ஆதிக்க அரசியல். இவர்களுக்கு மதம் என்பது கூடப் புரியாது. இப்படி நாம் வேறுபடுத்திப் பார்ப்பதை பலர் ஒப்புக்கொள்வதில்லை. தி.க.சி. அவர்களுக்கும் இது புரியவில்லை.

        நான் இந்துத்துவத்தை அணு அளவும் ஏற்கவில்லை. இந்து மதத்தோடும் மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இன்னும் கடவுள் முதலியவை இன்றும் தேவை. கட்சி இவர்களுக்கு இன்னும் விடுதலை தரவில்லை. அரசு இருக்கும் வரை வர்க்க வேறுபாடுகள் இருக்கும் வரை மதமும் இருக்கும் என்று கூறியவர் மார்க்ஸ். ஆதிக்கத்தோடு ஒத்துழைக்கிற மதத்தோடு நமக்கு உடன்பாடில்லை. மக்களின் விடுதலைக்கு மதமும் பணிபுரிய முடியும். கிறிஸ்த்துவத்தினுள் விடுதலை இறையியல் என்று ஒரு போக்கு இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயமோகன் இந்துத்துவவாதி என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஜெயமோகன் மார்க்சியத்திற்கு எதிரி இல்லை.

       3. கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் யூனியனிலும் சரி, இங்கும் சரி வரலாற்று இயக்கத்தோடு ஒத்துச் செல்லவில்லை. மாஸ்கோ விசாரணை என்ற பெயரில் ஸ்டாலின் தன் கருத்தோடு முரண்பட்டவர்களை ஒழித்துக் கட்டினார். இப்படி ஒழிக்கப்பட்டவர்களில் ஒருவர் புகாரி. இவர் ஒரு அசலான தத்துவ அறிஞர். லெனினால் மதிக்கப்பட்டவர். கோர்பசேவ் காலத்தில் ஸ்புட்னிக் இதழில் இவரைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை வெளிவந்தது. கோர்பசேவ் ஆவணக் காப்பகத்தைத் திறந்து விட்டு குறுகிய காலத்தில் மூடிவிட்டார்.

        புகாரின் முதலிய ஆயிரக்கணக்கானவர் பழைய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை பெற்றனர். கோர்பசேவ் காலத்தில் “மாஸ்கோ நியூஸ்” என்ற ஓர் இதழ் வெளிவந்தது. முன்பு மறைக்கப்பட்ட எத்தனையோ உண்மைகள் அந்த இதழில் வெளிவந்தன. பிறகு அந்த இதழும் மூடப்பட்டது. வரலாற்றை மூடி மறைப்பதில் எல்லா அரசியல்வாதிகளும் திறமையானவர்கள் தான். இதில் கம்யூனிஸ்டுகளுக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு சொல்ல வேண்டியதில்லை. ஆவணக் காப்பகத்திலிருந்து எதுவும் வெளிப்படவில்லை என்பது வடிகட்டிய பொய். இதையெல்லாம் உண்மையா பொய்யா என்று தெளிபடுத்துவதற்கு இவை பற்றிப் பேசுபவர் எந்தளவுக்கு நேர்மையானவர் என்பதை அவரோடு பழகும்போது  நாமே அளந்து கொள்ளலாம். எனக்கு அவர்களைப் பற்றி ஓரளவுக்கேனும் தெரியும். மார்க்சியன் இப்படிப் பொய்யனாக இருப்பதன் மூலம் மார்க்சியத்தின் மரியாதையைக் கெடுக்கிறான். மார்க்சியம் இன்று மதிக்கப்படாததற்கு இப்படியும் ஒரு காரணம். தமிழ்நேயத்திற்கு நன்கொடை தேவை. தமிழ்நேயம் அனுப்புகிறேன்.

                                       தங்கள்,
                                      ஞானி (கி. பழனிச்சாமி).
                                      கோவை.
                                       7. 10. 02.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...