செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

திசையெட்டும் சிறகு விரிக்கும் கவிதைப் பட்சி

திசையெட்டும் சிறகு விரிக்கும் கவிதைப் பட்சி                                                                -அன்பாதவன்
   
        “சிந்தை முழுவதும் ஊறி அதை இயக்கும் சக்திக்கு மறுபெயர்தான் கவிதை. கவிஞனுடைய வேலை இந்த சக்திக்கு தன்னை ஊற்றுக் கண்ணாகத் திறந்து கொள்வதுதான். இயற்கை என்ற ஒளியை விசிறும் மின்சாரம்தான் கவிதை. அந்த மின்சாரத்தை இயற்கையாகக் கவிஞன் உணர்கிறான். அவனை அவனது பாஷை மூலம் நாம் உணர்கிறோம். ஆகவே பாஷைத் தகட்டைச் செப்புக் கம்பியாக நீட்டி, தன் ஆத்மாவினுள் கரைந்த கவிதையைப் பாய்ச்சுகிறான். நம்மூடேயும் அக்கவிதை பாய்ந்து மனதில் ஒளியாகப் பூக்கின்றது”
-எனக் கவிதையூறும் கோட்பாட்டைச் சொல்வார் பிரேமிள்.

         ஒரு கதைக்காரராக, திரைப்பட ரசனையாளராக சிறந்து விளங்கும் பாரதிக்குமாரின் மற்றுமொரு பரிமாணமாய் ‘மிச்சமிருக்கும் ஈரம்' கவிதைத் தொகுப்பு.

        ‘என் படைப்புகள் பிரசுரத்துக்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல... அவை என் இருப்பின் பிரகடனங்கள்' எனப் பேரிகை முழக்கமிடும் பாரதிக்குமாரின் கவிதைவெளி மிகப் பெரியது. வானுக்கு கீழுள்ள அனைத்தையும் கவிப்பொருளாய்க் காண்பது.

         மிச்சமிருக்கும் ஈரம் தொகுப்பில் உறவுகளும் தோழமையும் ஊடும் பாவுமாய் கலந்து செல்கின்றன. எல்லாக்கவிதைகளையும் குறித்துப் பேசலாம். அது ஒரு பாணி; எனினும் எனக்குப் பிடித்த மூன்று கவிதைகளால் இந்தத் தொகுப்பை எடைபோட உத்தேசம்.

        மூன்று கவிதைகளும் ‘உறவு' குறித்துப் பேசுபவை;  உறவைப் பேணுபவை.
 ‘முகவரிகள்'
 ‘சொல்லாமல் செல்வது'
 ‘மிச்சமிருக்கும் ஈரம்'

            முகவரிகள் கவிதை, பெருங்கூட்டத்தால் உதாசீனப்படுத்தப்பட்ட மனதொன்றின் ஆற்றாமையாக பதிவாகியுள்ளது. ஒரு நல்ல திரைப்படத்தின் உத்தியோடு நெய்யப்பட்டது.
           அப்பத்தாவை ஒதுக்கி உதாசீனம் செய்த உறவுக்கூட்டம்தான் இப்போது இந்தக் கவிதைசொல்லியையும் உதாசீனம் செய்து ஓரங்கட்டி மூலைக்குத் தள்ளுகிறது. புறக்கணிப்பின் வலி புரிந்தவர்கள் யாவரும் இந்தக் கவிதையின் வலியை, அவஸ்த்தையை அறிய முடியும்.
           முதல் வரியில் லாங் ஷாட்டில் அப்பத்தா வீசியெறியப்பட்ட மூலையைக் காட்டுபவர், கடைசி வரிகளில் க்ளோசப் ஷாட்டில் சொல்கிறார்...
         “... அப்பத்தா உன் முகத்தின் சுருக்கங்களை
         இப்போது புரிந்து கொள்ள முடிகிறது
        வரிகளுக்கிடையே புதைந்து கிடந்தவை
        வருடங்களல்ல...
        வருத்தங்களும், உதாசீனங்களும்தான் என்று.”

         ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும்' என்கிற குறளின் காட்சிப் படிமமாய் விரியுமொரு வெற்றி பெற்ற கவிதை இது!

         ‘சொல்லாமல் செல்வது' கவிதையில் ஒரு கதை சொல்கிறார் பாரதிக்குமார்.
          மரணம் சம்பவித்த வீட்டில் சொல்லிக் கொண்டு போகலாகாது என்ற மரபை, உறவுகளின் இன்னொரு முகத்தைக் காட்ட வாகாக எடுத்துக் கவிதை நெய்திருக்கிறார் கவிஞர்.
             தந்தையின் மரணம். தந்தையின் உடன் பிறந்த உறவுகளுக்கு அது செத்த பிணம்! 
       காடாத் துணியை கோடித்துணியாகக் கொணர்ந்த பெரியப்பா!
       வாய்க்கரிசியை மறந்த அத்தை!
       இன்னொரு தரம் வர மனம் அலுக்கும் மாமா!
       உடன்பால் தெளிச்சிட்டா ஊருக்குப் போக சவுகர்யமென முணுமுணுக்கும் சித்தி!
என உறவுகள் எனும் பெயரில் காகிதச் சங்கிலிகள் ஒருபுறம்.

       இன்னொருபுறம், நிராதரவாய் நிற்கும் அம்மா, அக்கா, தம்பியென கையறு நிலை உறவுகள்.
          இந்தக் கவிதையைப் படித்தபோது என் தந்தையின் மரணமும் பிறகு நிகழ்ந்த கசப்பான சம்பவங்களும் நினைவுக்கு வந்தன.
         ஒவ்வொரு வீட்டிலும் இப்படியோர் கசந்த மரம் இருக்கக் கூடும்!

        இப்படியாகப் புறக்கணிப்புகளும் உதாசீனங்களும் சுயநலங்களும் கூடிய சமூகத்தில் வாழத் தேவை மனத்திட்பம்! அதைத் தான் ‘மிச்சமிருக்கும் ஈரம்' கவிதையில் காட்டுகிறார்.

       ‘...எதிர்கொள்ள எத்தனிப்பதற்குள்
        எல்லாப் புயல்களையும்
        எனக்கெதிராய் வீசச் செய்கிறது
        வாழ்வின் அவலச் சூழல்.
         ... ... ...
          ... ... ...
         எந்த ஆதாரமும் இல்லாமல்
         என் காலடியில் நழுவுகிறது
         வாழ்க்கை'

       ஆனால், யதார்த்தமென்பது குரூரம் மட்டுமல்ல! ஏதோ ஓர் மூலையில் கருமேகம் சூழும்! மழைத்துளி வீழும்! என்ற நம்பிக்கையை விதைக்கிறது இந்தக் கவிதை. தோட்டத்துள் மட்டுமல்ல; தோட்டத்துக்கு வெளியிலும் பூக்கள் சில மலர்வதுண்டு என்ற நன்னம்பிக்கை முனையைக் காட்டுவதாய் இக் கவிதை.

        பாரதிக்குமாரின் கவிதைகள் பலவற்றிலும் கவிதைப் பொறி நிறையவே இருக்கிறது. செய்நேர்த்தியும், நுட்பமும் சரிவிகிதத்தில் சேர்ந்திருக்குமானால், மாபெரும் வெற்றித் தொகுப்பாக இந்நூல் மின்னியிருக்கக் கூடும்.

         ஆனாலுமென்ன... கவிதை அழகுதான் என்றாலும் மனிதம் கவிதையைவிட உயர்ந்தது!
 

1 கருத்து:

  1. அன்பதாவனின் கவிதை விமர்சனம் மிச்சமிருக்கும் ஈரத்தை பருக தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...