செவ்வாய், 5 அக்டோபர், 2010

மகன்(கள்) தந்தைக்கு ஆற்றிய உதவி

தமிழில் குறும்படங்கள், ஆவணப் படங்கள் திரையிடுவதற்கும், ஊக்குவிப்பதற்க்குமான அமைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சாத்தியப்படுகிற இத் தருணத்தில் அவற்றைத் தயாரிப்பதற்கான முயற்சியில் பலரும் இறங்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான சூழலாகக் கருதலாம்.
திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸிடம் உதவியாளராகப் பணிபுரியும் A.R.சுப்புராஜ் இயக்கி, நடித்திருக்கும் ‘பயணம்' குறும்படம் சமீபத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.



அண்மையில், நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசையும், சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப் பட்ட குறும்படப் போட்டியில் இரண்டாவது பரிசையும் பெற்ற ‘பயணம்' குறும்படம், நாகர்க்கோயில் பகுதிகளில் அன்றாடம் காணும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்டது.

வட இந்தியாவில் மனநிலை சரியில்லாத நபர்களை, குறிப்பாக, முதியவர்களைப் பராமரிக்கத் திராணியில்லாதவர்கள், தென்னிந்தியாவிற்கு வரும் இரயில்களில் ஏற்றிவிடுவது வழக்கமாகி வருகிறது. இரக்கமற்ற இந்த செயலின் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கவனிப்பாரற்றுத் திரியும் பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் பின்னணி எத்தனை குரூரமானது என்று இப்படம் நிதர்சனமாக்கியிருக்கிறது.

மும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வட இந்தியக் குடும்பத்தில் நான்கு சகோதரர்கள். அவர்களைப் பாசத்தோடு வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு மனநிலை பிறழ்ந்து விடுகிறது. தந்தையின் சொத்தான வீட்டை விற்று நான்கு பிள்ளைகளும் பல லட்ச ரூபாய் பங்காகப் பெறுகிறார்கள். ஆனால் ஒருவருக்கும் தங்களது தந்தையை தங்களோடு வைத்துக் கொள்ள இஷ்டமில்லை. ஆளாளுக்கு உப்புசப்பில்லாத காரணத்தைச் சொல்லி தவிர்க்கிறார்கள். முடிவில் பிள்ளைகளில் ஒருவன் சொல்லும் யோசனை பார்க்கும் நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. கன்னியாகுமரி செல்லும் இரயிலில் அவருக்கு டிக்கெட் எடுத்து ஏற்றி விடுவதன் மூலம் அவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பிலிருந்து நழுவி விடுவது அவர்கள் திட்டம். அதன்படி அவர் ஏற்றி விடப் படுகிறார். அதே இரயிலில் வயிற்றுப் பிழைப்புக்காக சிறு சிறு திருட்டுக்கள் செய்து வரும் சிறுவர்கள் இருவரும் கன்னியாகுமரிக்குப் பயணிக்கிறார்கள்.

வயிற்றைப் பசிக்கும் போது ‘கானா' ‘கானா' என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியாத அந்த முதியவரின் செய்கைகள், முதலில் அச்சத்தோடும், பின்பு கவலையோடும் கவனிக்கப் படுகின்றன. இரயில் ஒவ்வொரு மாநிலமாகக் கடந்து தமிழகத்துக்குள் நுழைகிறது. சிறுவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சிறு சிறு பொருட்களைக் கவர்கின்றனர். பெரியவருக்கு ஒன்றிரண்டு தின்பண்டங்கள் தின்னக் கிடைக்கின்றன.

சிறுவர்களில் ஒருவனுக்கு, தான் மும்பையில் திருடச் சென்ற வீட்டில் இப் பெரியவரைக் கட்டிப் போட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. யாரோ வரும் சந்தடியில் மறைந்திருந்து, அங்கு வந்த நால்வரையும் அவர்களின் திட்டத்தையும் கேட்டவன் சந்தடியின்றி நழுவியதையும் ஞாபகப் படுத்திக் கொள்கிறான். ஆக அவர்கள் திட்டப்படி அவரை அநாதரவாக இரயிலேற்றி விட்டிருக்கிறார்கள் என்று புரிந்துபோகிறது. சிறுவன், தன் நண்பனிடம் பெரியவர் பற்றிய உண்மைகளைச் சொல்லி, அவரைக் காப்பாற்றிப் பராமரிக்கலாமென அனுதாபம் மிக சொல்கிறான். தங்களது பல தவறுகளுக்குப் பிராயச்சித்தமாய் அது இருக்கட்டுமென அவர்கள் முடிவு செய்கின்றனர். கருணையுடன் அவரை அணுகும் போது, பழைய திருட்டுக்களுக்காக அவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் காவலரிடம் மாட்டிக் கொள்கின்றனர்.

‘வாங்கடா திருட்டுப் பசங்களா' என்றபடி தங்களைப் பிடித்துக்கொள்ளும் காவலரிடம், ‘அந்தப் பெரியவரோட பிள்ளைகளை என்னன்னு சொல்லுவீங்க?” என்று அந்தச் சிறுவர்கள் கேட்கும் காட்சி, பார்வையாளர்களான நம்மைச் சுடுகிறது.

பெரியவர், யாரும் கவனிப்பாரற்று, ‘கானா கானா' என்றபடி நடந்து செல்கிறார் தனியாக...

நெஞ்சைப் பிழியும் இந்தக் காட்சியுடன் படம் முடிவடைகிறது!

யதார்த்த வாழ்வுக்கு எதிராகவும், தொடர்பில்லாமலும் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மத்தியில், சமகால மனிதர்களின் அவல வாழ்வைப் பதிவு செய்யும் குறும்படமாகப் ‘பயணம்' அமைந்திருக்கிறது.

குறும்படத்தில் மனநிலை பிறழ்ந்தமுதியவராக நடித்திருக்கும் இயக்குனர் சுப்புராஜின் தந்தை எஸ். அருணாச்சலம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேலாளராக சாலிகிராமம் கிளையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். வங்கியில் பணிபுரிந்தாலும் அவரது மனம் முழுக்க நடிப்புத் துறையிலிருந்திருக்கிறது. அவ்வப்போது, அவரது சொந்த ஊரான நாகர்கோயிலில் நாடகங்களில் நடித்திருக்கிறார். பின், பணிச்சுமை காரணமாக நடிக்கமுடியாத ஏக்கத்திலேயே இருந்திருக்கிறார்.

அண்மையில் அருணாச்சலத்தின் ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாட, அவரது பிள்ளைகள் A.R. குமார், A.R.பேபிராஜன், A.R. சுபாஷ். A.R. சுப்புராஜ் நால்வரும் முடிவு செய்த போது, அவருக்கு என்ன பரிசளிக்கலாமென்ற பலத்த ஆலோசனைகளுக்கு இடையில் சுப்புராஜ் தான் இந்த யோசனையைச் சொல்லியிருக்கிறார். ஆளுக்குச் சிறிது பணம் போட்டு, ஒரு குறும்படம் எடுப்பது; அதில் அவர்களது தந்தையையே பிரதான பாத்திரமாக நடிக்க வைப்பது என்று முடிவானது. குறும்படத்தின் கதைப்படி பெற்ற தந்தையை அனாதரவாகப் பரிதவிக்க விடுகிறார்கள் பிள்ளைகள்; ஆனால் படத்தைத் தயாரித்த பிள்ளைகளோ தங்களது தந்தையின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி, அவருக்கு ஆத்ம திருப்தி தந்தது என்ன ஒரு அழகிய முரண்!


அருணாசலத்தின் தத்ரூபமான நடிப்பு, அந்தக் கதாபாத்திரத்தின் மீது ஈரம் கசிந்த பார்வையை பதியச் செய்கிறது. அவர் தனது யதார்த்தமான நடிப்பாற்றலால், அந்தக் கதைக்கு உயிரூட்டியுள்ளார். சுப்புராஜ் ஏற்கனவே இயக்கிய,'செடி' என்ற குறும்படம், திருப்பூர் அரிமா சங்கப் பரிசு, திருச்சி லயன்ஸ் க்ளப்-கிழக்குவாசல் உதயம் குறும்படப் போட்டியில் பரிசு, சென்னை prime force academy பரிசு உட்படப் பல பரிசுகளை வென்றுள்ளது. இந்தப் படம், பிள்ளைகளால் ஒரு தந்தைக்கு தரப்பட்ட மகத்தான பரிசு!

மகன்(கள்) தந்தைக்காற்றும் உதவியென்பது இதுதானோ...!!

சனி, 11 செப்டம்பர், 2010

விசும்பல்


“சொக்கன் வந்துட்டானா?”
“கெழக்கால பக்கம் நிக்கிறேன் சாமி.....”
“ அப்பிடியே பந்த கால் பக்கம் குந்துடா. அரை மணிக்கொரு தரம் நீயா பாத்து ஊதவேண்டியதுதான்... ஒனக்கு ஒரு ஆளு மேம்பார்வை பாத்துகிட்டு வெரட்டிகிட்டு இருக்கமுடியாது... சுத்தம்பற ஊதுனாத்தான் பேசுனபடி காசு..” தலையாரி உத்தரவு போட்டுக்கொண்டே நடந்தார்.
“ தெரு கிளிஞ்சிடாது... ஓன் சோலியப்பாரு... அய்ய.... என்னப் பத்தி கவலப்படாதே” சங்கை எடுத்து மணி அடித்தபடி ஊதத்துவங்கினான் சொக்கன்.
தெரு சனம் ஒவ்வொருவராய் வர துவங்கினர். சின்ன வயசு சாவுதான் என்றாலும் விபத்து நடந்து மூணு மாதமாகியும் அப்பவோ இப்பவோ என்று இழுத்துக்கொண்டதில் எதிர்பார்த்த சாவுதானே என்ற அசுவாரசியம் தெரிந்தது எல்லோர் முகத்திலும். ஊரில் நல்ல காரியம் வைக்க தேதி குறிக்க முற்படுபவர்கள் ‘எதுக்கும் ஒரு எட்டு செவனாண்டி வூட்டுல பாத்துட்டு வா.. அங்க வேற ஒண்ணு சொள்ளைகரைக்கு போவேனான்னு அடம் புடிச்சுகிட்டு கெடக்கு” அப்பிடின்னு ஆளனுப்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
32 வயசெல்லாம் ஒரு வயசா... ஆனாலும் மனித மனம் எத்தனை குரூரமாக மாறிவிடுகிறது சுயநலம் என்று வந்துவிட்டால்... செவனாண்டி மகன் சம்பத்து வண்டியில் ஏறி ஒரு அரக்கு அரக்கி பறந்தானென்றால் தெரு கொஞ்சம் ஆடிதான்போகும். கடைசியில் அவனது வாகனமே அவனுக்கு எமனானது..முதுகெலும்பில் பட்ட அடி மூளையை பாதிக்க வெறும் உயிர் ஒடும் ஊடகமாக மட்டுமே அவனது உடல் கிடந்தது மூன்று மாதமாய்...
“ முருகேசா... மருதாயி கெளவிக்கு ஆளனுப்பிட்டியா?”
“ அனுப்பிட்டேன் பெரிசு. அவ மவகாரி வந்துருக்கா போல இருக்கு.. மதியமா வரேன்னிருக்கா..”
“ அதுவும் செரிதான்.. தெருக்கார சனத்துக்கு தொண்டை அடுத்த வேளை கவளம் எறங்கறவரைக்குந்தான்...அப்பறம் கத பேச ஆரம்பிச்சுடுவாளுக..அப்பறம் ஒப்பாரி வைக்க ஆளிருக்காது மருதாயி அப்பம் வந்தா போதும்”
மருதாயி கெளவி குரலும், ஒப்பாரியும் ஜில்லா பிரசித்தம். எங்க சாவு விழுந்தாலும் முறைக்காரனுவங்களுக்கு முன்னாடி அவளுக்கு செய்தி போயிடும். அப்பப்ப டீ தண்ணியும், ஒரு சொம்பு சுடு தண்ணியும் இருந்தாபோதும்,ரெண்டு நாளானாலும் பிசிறு தட்டாது ... ஊரு கிடுதாங்கற மாதிரி வெங்கலக் குரல் அவளுக்கு.
புருஷன்காரன் ரெண்டு புள்ளையக் குடுத்துட்டு ஓடிப்போனப்பறம் தென்னங்கீத்து முடையற வேலை போக ஒப்பாரிக்கு போறதுலதான் அவ பொழப்பு ஓடுது. ‘எவன் வூட்டுலயாவது எழவு வுளுந்தாதான் எனக்கு வாழ்வு' என்பாள் அடிக்கடி.
பாத்திர யாவாரி வேலுவத்தான் கட்டிப்பேன்னு ஒத்தக் கால்ல நின்னு, இப்ப அவங்கிட்ட அடியும் ஒதையும் தின்னு ஒடம்பு வீங்கி மாசம் தவறாம வர்ற மவ எச்சுமி பத்தின துக்கமும், காலு வெளங்காம மூளை வளராம வூட்ட விட்டு நகராம மொடங்கிக் கெடக்கற மவன் ராசுவோட வைத்தியத்துக்கு காசு இல்லாத துக்கமும் தீரப்போவதுமில்ல... அவ அழுக ஓயப்போறதுமில்ல.
எப்படி முடியுது விடாம அழுவ அப்படீன்னு யாராவது கேட்டா,
‘உங்களுக்கெல்லாம் பொறக்கறச்சயும் சாவறச்சையும் தான் அழுவை. எனக்குப் பொழப்பே அழுவைதான்' அப்படீன்னு அவ பொலம்பறதைக் கேட்டா கஷ்டமாத்தான் இருக்கும்.
மருதாயிக் கெழவி அடுப்பு நெருப்பைத் தூண்டியபடி எச்சுமி பக்கம் திரும்பாமல் எக்கச்சக்க கோபத்தில் இருந்தாள்.
“எவடி இங்க ஒன்னை வெத்தலைப்பாக்கு வெச்சு கூப்பிட்டா? எதுக்கு வர்றே? பெரிய கார்த்திகை அன்னிக்குக் கூட வயித்தால போயி இப்பவோ அப்பவோன்னு கெடந்தேன். இருக்காளா செத்தாளான்னு பாக்க ஒரு நாதியில்லே. இப்ப மட்டும் எதுக்குடி வந்தே...?”
“எங்க போவேன் ஆத்தா... நெனச்சா வர்றதுக்கு சீமான் வூட்லயா வாக்கப்பட்டிருக்கேன்? ரெண்டு அலுமினியப் பாத்திரத்த வெச்சுகிட்டு தெருத்தெருவா சுத்தற வெறும் பயகிட்டல்ல லங்கு அடிச்சிட்டு கெடக்கேன்...”
“நானாடி கட்டிக்கச் சொன்னேன்? ஒந்திமிருக்கு நாயி வாயில வெரல விட்டுட்டு இப்பக் கடிக்கிதே கொதறுதேன்னா எப்பிடி?”
“அதான்... அதான். கெரவம். என் புத்திக்கு நாத்தம் புடிச்சிக் கெடக்கேன். மவராசி நீ சொன்னதான்... வெளக்கமாத்தால மொத்து, என்னை அடிச்சிக் கொல்லு... ஆனா என்னை வராதேன்னு சொல்லாதே ஆத்தா.”
பேரப்பய முருவன் இது எதுலயும் கவலப்படாம மருதாயிக் கெழவி புடவையப் பிடிச்சு இழுத்தான்.
“வருந்தோறும் ஏண்டி இந்த சிசுவ வேற இளுத்துகிட்டு வர்றே... தூண்டிப் புழுவாட்டம். இவனக் காமிச்சிக் காமிச்சி இருக்கற மீனெல்லாம் பிடிச்சிட்டுப் போயிட்ட. இப்ப ஏங்கிட்ட என்னாடியிருக்கு? கொளம் வத்திப் போச்சு. போதும் என்ன வுட்டுடு.”
“அப்பிடி சொல்லாத ஆத்தா. சைக்கிளப் பிடிங்கிட்டுப் போயிட்டான் கடங்காரப்பய. அவன் ஒரு கழிச்சல்ல போவோ... வெக்கங் கெட்டு அவன் கால்ல வுளுந்து கூட கதறிப்பாத்தேன். படுபாவி மனசெரங்கலையே. எட்டி ஒதச்சிட்டுப் போயிட்டான். சைக்கிள் இல்லாம யாவாரத்துக்கு எப்பிடி போவும்?”
முருவன், சோர்ந்து சுருண்டு கிடக்கும் ராசுவின் முகத்தில் இரு கைகளால் அடித்து எழுப்பினான். ஒரு முறை தலையுயர்த்திப் பார்த்து விட்டு, இயலாமல் திரும்பவும் சுருண்டான் ராசு.
“அங்க பாரு... ஆமை மாதிரி கெடக்கு. என்னால சாவக் கூட முடியாதுடி. இது இருக்கற வரைக்கும் என் உசிரப் புடிச்சு வெச்சிக்கணும். ஒப்பன் ஓடிப் போறப்ப வைரமும் வைடூரியமுமா வெச்சிட்டுப் போனான்...? இந்த சப்பாணிப் பயல ஏந்தலையில சுமையா தானே வெச்சிட்டுப் போனான்? எங்க சுத்தி எங்க வந்தாலும் ரவைக்கு வூடு திரும்பிடனும். ஒரு ஆம்பளையா லட்சணமா சைக்கிள் வாங்கப் பணம் பொரட்ட முடியாத பொறம்போக்கு ஒன்னை ஒதைச்சு அனுப்புறானே... தூத்தேரி... வெளங்குவானா?”
“நல்லா துப்பு... காறி துப்பு.” புடவைத் தலைப்பை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு அழுத எச்சுமி, “அடி...தாங்கலை ஆத்தா. ஆம்பளையா லட்சணமா என்னையத்தான் போட்டு ஒதைக்கிறான். நேர்ல பாக்க ஒனக்குக் கொடுத்து வெக்கலை. சம்பாதிக்கத் துப்பில்லைன்னு சொல்லிட்டாப் போதும்... எலும்ப ஒடிச்சிட்டுத்தான் மறுவேலை... இங்கப் பாரு” என்று புடவையைத்தூக்கி கெண்டைக்கால் காயத்தைக் காண்பிக்கிறாள்.
“புள்ளையையும் காயத்தையும் காட்டிக் காட்டி என்னைக் கரைக்காதடி. வேணுமானா ஒரு ஓரமா ஒக்காரு. ஒருபாட்டம் ஒனக்காவ அழுவறேன்.”
“காதுல போட்டிருந்தியே ஏழுகல்லுத் தோடு... அதைக் கொஞ்சம் குடு ஆத்தா. அப்பனாணை விக்க மாட்டேன்... எங்கனாச்சும் வெச்சி, ரெண்டு மாசம்... எண்ணி ரெண்டே மாசம் மூட்டுக் குடுத்துடறேன்.”
“ஏங்கிட்டப் பொட்டுத் தங்கம் இல்லே தாயி... ஆளை வுடு. அத வெச்சுத்தான் எனக்கு வைத்தியம் நடந்துச்சு. தோ... கெடக்கானே சவலைப் பிள்ளை... அவனுக்கும் வைத்தியம் பாத்தேன். இனும ஒரு நயா பைசா பேறாது.”
“கஞ்சிக்கிக் கூட வழியில்ல வூட்ல... யாவாரத்துக்குப் போயி இன்னியோட நாப்பத்தஞ்சு நாளாச்சு. இன்னும் எத வித்து சாப்பிடறதோ தெரியல. எப்பிடிப் பொழைப்பேன் ஆத்தா?”
“நீ வாழ வேண்டாண்டி வாழ வேணா. ஒண்ணு, இங்க வந்துறு. இல்ல செத்துப் போயிடு. ஒருத்தி வாழ ஒம்போது பேர் சாவ முடியாது. வாழ்ந்து வழிச்சது போதும். போம்மா மவராசியா.”
“என்னா ஆத்தா இப்புடி சொல்லிட்ட... ஒரு பெத்த தாய் இப்புடிப் பேசலாமா?”
“என்னை என்னடி பண்ணச் சொல்ற? வந்ததுக்கு ஆக்கி வெச்சிருக்கறதச் சாப்புட்டுட்டு அந்த அரிசிப் பானையில கொஞ்சம் நொய்யரிசி இருக்கு. எடுத்துட்டுக் கெளம்பு. அவ்வளவு தான் முடியும்.”
“ஏ கெளவி... தலையாரி ஒன்னை அர்சண்டா வரச் சொன்னாரு. பாடை கட்டறப் பயலுவ கூட வந்துட்டானுவோ. ஒன்னைக் கையோட இட்டாரச் சொன்னாரு.” வாசலில் குரல் கேட்டது.
தலை முடியை அள்ளி முடிந்துகொண்டு கிளம்பிய மருதாயி, “ரெண்டு ரெஸ்க் கெடக்கு அந்தப் பச்சை டப்பாவில.முருவனுக்கு அதை எடுத்துக் குடு. இங்க ஒரு எழவு. நா போவனும். சாப்புட்டு நீ கெளம்பு.” வெளியேறினாள் மருதாயி.
செவனாண்டி வீட்டில ஜனம் கொலேரென்று கூடியிருந்தது. மருதாயி தெருவுக்குள் நுழைந்த போதே புரிந்துகொண்டாள். ஒறமொறக்காறனுவ அதிகம்னு. கூடுமான வரைக்கும் எவ கொரலையும் எழும்ப விடக் கூடாதுன்னு தொண்டைய செருமிகிட்டு, கையிரண்டையும் உயரே விரித்து, பெருங்குரலெடுத்து,
“அய்யோ... ஈ வந்து மொய்க்கலையே
எறும்பு ஒன்ன நெருங்கலையே
கண்ணுல வெச்ச உசிர
இமை கூட காக்கலையே...
என்னப் பெத்த அய்யா
பூவாட்டம் தூங்குறியே
பொழுது இன்னும் சாயலியே”
என்று பிணத்தருகே சென்று அட்டனக்கால் போட்டமர்ந்து மூக்கைச் சிந்தி அருகாமை தூணில் தடவினாள்.
சன்னமாக மெலிந்து தேய்ந்து ஆங்காங்கு அழுது கொண்டிருந்த குரல்கள் ஆசுவாசமாயின. அப்பாடா... வந்துட்டா. இனும அவ பாத்துப்பா என்ற மகிழ்ச்சியில் புற வாசலுக்கு நழுவினர் பெண்டுகள்.
சிவனாண்டி பெண்டாட்டியும் மாமியாரும் பாய்ந்து வந்து மருதாயியைக் கட்டிக்கொண்டு அவள் பாட்டுக்கு சுருதிபோல ராகம் போட்டு அழுதனர்.
“வலை போட்டு வீசினாலும்
சிக்காத வஞ்சிரமே...
சங்கு கழுத்தழகா
உன் சிங்கார சிரிப்பழக
சேத்து வெக்க மறந்தேனே
பாவி, இனியெப்ப பாக்கப்போறேன்
பொசக் காத்து போறாப்ல ஏங்கண்ணே
பொசுக்'குன்னு பறப்பியே தெருமேல
பொணமாக் கெடக்கியே
புயலோஞ்சு கெடக்குது ஊரு”
ஒருமணி நேரம் சளைக்காமல் தனியாவர்த்தனமாய் ஒலித்தது கெழவியின் ஒப்பாரி. வருகிறவர்கள் அவளுக்கு ஈடு கொடுக்க மாட்டாமல் புடவைத் தலைப்பை வாயில் புதைத்தபடி துக்கம் தாளாதவர்கள் போல குனிந்தபடி நழுவினர்.
மேட்டுத் தெரு பொன்னம்மாவுக்கு மருதாயி மேல் தாங்கமுடியாத பெருமிதம் உண்டு. யாருக்கும் கேட்காமல் பக்கத்திலிருந்தவரிடம் கெழவியின் பராக்கிரமத்தை பரப்பிக் கொண்டிருந்தாள்.
“எம காதகி... அவ இழுவைக்கு எவளும் கிட்டே நெருங்க முடியாது. அழுவறத நெறுத்திட்டா பொணமே எந்திரிச்சி ‘பாடுடி இன்னும் செத்த'ன்னு கேக்கும்!”
“நெசம் தான் ஆத்தா! பெத்தவ கூட இத்தனை பதறலை... அட! இவ ஒப்பாரிக்கே சாகலாம் போலிருக்குன்னா பாத்துக்கயேன்.” பொன்னம்மாவுடன் பாக்கியமும் உவந்தோங்கி போனாள்.
“இருக்காதா பின்னே... நம்ம வல்லக் கோட்டைக்காரரோட மூத்தாரு செத்தப்ப, அவரு புள்ள சிங்கப்பூரிலேருந்து வரணும்னு ரெண்டு நாள் பொணம் கெடந்துது. மவராசி ஓயலியே! ரெண்டு நாளும் இவ அசராம வெச்ச பாட்டுலதான் பொணம் நாறாம தூங்குச்சுன்னு இப்பவும் ஊர் பேசுதே.”
“மூஞ்சுல அழவை வெக்கலைன்னாலும்... மூச்சுல அழுவைய வெச்சுட்டான் கடவுள்.”
ருக்குமணி கெழவி மருதாயி காதில், “ஒன்னப் பத்திதான் பின்னாடி இருக்கறவளுவோ பேசிக்கறாளுவோ. தலைய உட்டு உன்னை எறக்கறதில்லே.”
“உளுது... உளுது... காதுல உளுது. பின்னாடி எல்லா சிறுக்கிவோளும் பெருமையாத்தான் பேசுறாளுவோ... எதுக்க வந்துட்டா ஒப்பாரி வெக்கிறவ வர்றாளே... சகுன பெசகுன்னு ஒளியறாளுவோ. எதுலியும் எனக்கு ஏறுமாறுதான்.பாரேன்... வெத்தலைத் தட்டில களிப்பாக்கைத் தேடறேன் பொட்டலம் பாக்கா கெடக்கு!” என்றபடி களிப்பாக்குக்காக முந்தியின் முடிச்சையவிழ்க்கும் போது பகீரென்றது அவளுக்கு.
தோட்டைக் காணோமே என்று விக்கித்து ஒருகணம் திகைத்த மருதாயிக்கு உடனே ஞாபகம் வந்தது, ‘அய்யோ நேத்து தானே பத்திரமாயிருக்கட்டும்னு அரிசிப்பானையில வெச்சேன். ஆக்கங்கெட்ட மூதி! அத மறந்துட்டு முந்தியில முடிஞ்ச நெனப்பா வந்துட்டேனே... ராசுப்பயலுக்கு இடுப்பு தேஞ்சித் தேஞ்சி ரணமாக் கெடக்கு. டவுனுக்குப் போயி வைத்தியம் பண்ணலாம்னு இத்தினி நாளு சாக்ரதையா காவந்து பண்ணி வெச்சிட்டு இன்னைக்கு வுட்டோட்டிட்டேனே... சும்மா கெடந்தவள நொய்யரிசிய எடுத்துக்கோன்னு வேற சொல்லித் தொலைச்சிட்டேனே... பாதகத்தி கண்ணுல பட்டுட்டா நோவாம எடுத்துடுவாளே. வெக்கத் தெரியாதவ வெக்கப்போர்ல வெச்ச மாதிரி ரோசனையில்லாம கைநீளக்காரி இருக்கற எடத்துல நொய்யரிசிப் பானையில மாட்டிக்கிச்சே தோடு...! பச்ச வாழியம்மா இப்ப நா என்ன பண்ண... உள்ளுக்குள் மருகினாள் மருதாயி.
அப்போதுதான் உள்நுழைந்த சிவனாண்டியின் உறவுக்காரி மருதாயியைக் கட்டிக்கொள்ள ஒப்பாரியை விட்ட இடத்திலிருந்து தொடங்கினாள் மருதாயி.
“கையிருப்பு கரைஞ்சிடுச்சே
களவாட விட்டுட்டேனே
தங்கமே ஒன்ன
ஒளிச்சு வெக்கத் தெரியலையே
எமங் கையில கொடுத்தேனே
வெலையில்லா பொக்கிஷமே
வேற கதி ஏதெனக்கு
ஒண்ணே ஒண்ணு
ஏங்கண்ணே கண்ணு
ஒன்னை விட்டா யாரெனக்கு?
கழுகு ஒன்னக் கொத்தாம
காவந்து பண்ணி வெச்சேன்
பருந்து ஒன்னத் தூக்காம
பத்திரமா பாத்து வெச்சேன்
காத்தாட்டம் பறந்திடுச்சே
கண்சிமிட்டும் நேரத்தில
கையிருப்பு கரைஞ்சிடுச்செ
களவாட வுட்டுட்டனே”
தாண்டிச் சென்ற தலையாரியை அருகே அழைத்து ‘எப்ப சாமி எடுக்கப் போறீங்க' என்று கேட்டாள்.
“எடுத்துட வேண்டியதுதான். குளுசம் முடிய அரை மணியிருக்கு இப்ப ஒனக்கென்ன அவசரம்?”
“இல்ல... ஏம் மவ வந்திருக்கா...”
“ஆமா, டெல்லிக்கு மகராணி... சோத்தை தின்னுட்டு கெடக்கப்போறா... போலாம் போலாம் செத்த தொணப்பாதே.”
இன்னும் அரைமணி நேரமா.. அதுக்குள்ள அவ கையில சிக்கிட்டா... சண்டாளி அடுத்த செகண்டு கெளம்பிடுவாளே... பெரியகுப்பம் அய்யனாரே, எட்டணா சூடமேத்தறேன். அவ கண்ணுல மாட்டாம மறைச்சுடு. அவளும் என்ன பண்ணுவா... காசில்லாத கூறு... அதுக்காவ….. அந்தக் கால் சூம்புன பயலுக்கென்ன விமோசனம்? இருப்புக் கொள்ளாமல் தவித்தாள் மருதாயி. நிமிஷங்கள் நரகமானது.
“பொணத்தக் குளுப்பாட்டனும்... எல்லாம் செத்த வெளிய இருங்க” ஏழுமலையின் குரல் கேட்டு அப்பாடாவென்றிருந்தது அவளுக்கு.
இன்னும் செத்த நேரம் தள்ளுனா ஓடிப்போயிடலாம். பொணத்தை எடுத்தாத்தான் ஒப்பாரி கூலி கைக்கு வரும். பொணம் சொள்ளக் கரைக்குப் போவாம தலையாரி காசு பிரிச்சி கொடுக்க மாட்டான்.
“சொர்க்கம் சேர்... வைகுண்டம் சேர்... ஈஸ்வரன் பாதம் சேர்...
சொர்க்கம் சேர்... வைகுண்டம் சேர்... ஈஸ்வரன் பாதம் சேர்...” ஏழுமலை சூடத் தட்டை ஏந்திக் கொண்டு பிணத்தைச் சுற்றி வர நெருங்கிய உறவுக் கூட்டமும் கூடவே சுற்றியது.
“கோயிந்தா... கோயிந்தா...” என்றபடி பிணத்தைத் தூக்க பெண்டுகளும் குரலுயர்த்தி அழுதனர். நகரத் துவங்கியது ஊர்வலம்.
எப்பவும் மணிக்கடைக்கு வந்து டீயும் பொறையும் உள்ளே போனால்தான் வண்டி நகரும் மருதாயிக்கு. ஆனால் இன்னைக்கு அதையெல்லாம் உதறிவிட்டு ஓட்டமும் நடையுமாக வீடிருக்கும் தெருமுனைக்கு ஓடினாள். மனசு வேற திடும் திடும்ன்னு அடிக்குது வேகமா. முருவன் குரல் கூட கேக்கலையே... அம்மா தாயே பச்சைவாழியம்மா என்னைக் கைவிட்டுறாதே... வேண்டுதலோடு நுழைந்தாள் வீட்டுக்குள். ராசு மட்டும் கூழையாய் சுருண்டுகிடந்தான். நடுவீட்டில் அரிசிப்பானை கவிழ்ந்துகிடந்தது. நிமிடத்தில் புரிந்து போனது மருதாயிக்கு.
“அய்யோ பாதகத்தி... கண்ணு சிமிட்டறதுக்குள்ள களவாண்டுட்டியே... நீ கட்டையில போவோ... நாசமத்துப் போவோ... அம்மா தாயே இருந்த ஒண்ணும் போச்சே... நா என்னா பண்ணுவேன்” என்று புடவையை கீழே விரித்து கதறத் துவங்கினாள்.
ராசுவுக்கு விழிப்பு வந்து ஒரு கணம் அலங்க மலங்கப் பார்த்தான். கடைவாயில் ஒழுகிய எச்சில் துணியையெல்லாம் நனைத்திருந்தது. அவளது அழுகையைப் பார்த்துப் பார்த்து அலுத்ததாலோ என்னவோ தலையை ஒரு உதறு உதறி திரும்பவும் சுருண்டு கொண்டான்.
“பெத்த வயித்துல பெரண்டைய வெச்சிக் கட்ட... இப்படி ஒரு புள்ள எனக்குத் தேவையா...பாழும் வயித்துல நெருப்பு வெச்சித் தீய்க்க...” ‘ஓ’வென்று ஓலமிட்ட அவளது குரல் இரவைக் கிழித்து தெருவெங்கும் பரவியது.
“கெழவி….நிறுத்து. நிறுத்துன்னா நிறுத்தனும் ”குடிகார மாசிலாமணி குரல் இடிபோல் வெளியே கேட்டது. நிக்கவே முடியாத அளவுக்கு போதை தலைக்கேறி தள்ளாடினான் மாசி. “உள்ள வந்தேன்... வாயில மிதிச்சிடுவேன். ஓங்கொரலக் கேட்டாலே எங்க எழவு விழுந்துடுச்சோன்னு சும்மா பகீருங்குது வயிறு. எதுக்குடி அழுவுற...? இப்ப எதுக்கு அழுவுற...? யார் இங்க மண்டையப் போட்டா? ஒனக்கு தான் பொணத்தக் கண்டா பிச்சிட்டுக் கெளம்புமே பாட்டு. அப்புறமெதுக்கு ஒப்பாரிக்கு ஒத்திகை... ஒழுங்கா வாய மூடு... இல்ல... தலையாரிகிட்ட தெருக்காரங்க எல்லாம் சேந்து எந்த எழவுக்கும் உன்னக் கூப்புடக்கூடாதுன்னு கண்டிச்சி சொல்லிடுவோம். அப்பறம் ஒன் பொழப்பு நாறிடும் நாறி!” என்று துண்டை உதறி கத்தி மாதிரி வீசிட்டு நடையக் கட்டினான்.
“ஒழிச்சிடுவன்... யாருகிட்ட...” என்று காற்றிடம் சவால் விட்டு நாக்கைத் துருத்தி எச்சரிக்கை செய்தான் மாசி.
உறவே இல்லாத எத்தனையோ பிணத்துக்காக தொண்டை வறள ஒப்பாரி பாடிய மருதாயி பொழைப்புல மண்ணு விழுந்துடுமேன்னு பயந்து வாயில் துணியைப் புதைத்துக்கொண்டு சப்தம் வராமல் விசும்பினாள்.
கழுவ முடியாத கறையோடு கண்ணீர் அவளது சுருங்கிய கன்னங்களில் உருண்டோடி பின் விக்கித்து நின்றது.
(கல்கியில் வெளிவந்தது)

சனி, 21 ஆகஸ்ட், 2010

Looking for Comedy in Muslim World





எல்லோரும் குழந்தையாகிற அரிதான சந்தர்ப்பங்களை நகைச்சுவை மட்டும்தான் வழங்குகிறது. திரையரங்குகளில் எப்பொழுதாவது நீங்கள் திரைப்படம் பார்ப்பதை வி்ட்டுவி்ட்டு அரங்கில் அமர்ந்து ரசிக்கும் மனிதர்களை கவனித்திருக்கிறீர்களா? நகைச்சுவை காட்சிகள் வருகிற சமயத்தில் மீசை நரைத்த, சுருக்கங்கள் விழுந்த குழந்தைகளை காண முடியும். அத்தனை இருட்டையும் மீறி அவர்களது முகத்தில் மினுக்கும் பிரகாசத்தை நீங்கள் உணர முடியும்.


Albert Brooks
நமக்கு அருளப்பட்டிருக்கிற இந்த வாழ்வு சதாசர்வமும் சோகக் காட்சிகள் அல்லது இறுக்கமான பொழுதுகள் நிரம்பியதாகவே இருக்கிறது. எல்லோருமே போலியான சிரிப்பு ஒன்றை ஏந்தியபடியே அலைகிறோம். மனம் விட்டு சிரித்தல் என்பது நமது ஒட்டு மொத்த வாழ்வின் நிமிடங்களை சதவிகித கணக்கில் வகை பிரித்தால் மிகச் சொற்பமானதாகவே இருக்கும். அவரவர் வாழ்வில் அதி முக்கியமான தினங்கள் என்று பட்டியலிட்டால் பெரும்பாலானவர்களுக்கு அவர்களது பள்ளி நாட்களோ அல்லது கல்லூரி நாட்களோ அந்தப்பட்டியலில் முதலாவதாக இடம் பெறும். அதற்குப்பிறகு நாம் கடக்கும் நிமிடங்களெல்லாம் கடினமானவையாகவே இருக்கும்.

Michael Glacchino


நம் திரைப்படங்களில் நகைச்சுவை கூட பெரும்பாலும் அடுத்தவரை துன்புறுத்துவதாகவோ அல்லது தன்னை தாழ்த்துவதாகவோ அமைந்து விடுகிறது. இந்த திரைப்படம் இதிலிருந்து சற்று வேறுபட்டு சமகால வாழ்வில் யதார்த்தமாக நிகழும் நகைச்சுவையான விஷயங்களை படம் பிடிப்பதாக இருக்கிறது. 


அமெரிக்க அரசு பிற நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கான யுக்தியினைத் தேடி சில ஆய்வுகளை நடத்த முடிவு செய்கிறது. அதன் ஒரு கூறாக ‘இஸ்லாமிய மக்களிடம் நகைச்சுவை உணர்வு என்கிற விஷயத்தை ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்கிறது. அந்தக் குழு அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான ஆல்பர்ட் புரூக்ஸ் இடம் இந்தப் பணியை ஒப்படைக்கிறது. அவர் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் இந்தியா,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பிரயாணம் செய்து, ஒரு ஆய்வறிக்கையை ஒரு மாதத்திற்குள் தயாரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். அவர் பிரயாணம் செய்யும் நாட்கள், ஆய்வறிக்கை தயார் செய்ய எடுத்துக்கொள்ளும் முயற்சிகள், அதன் பின்விளைவுகள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
                    
“யதார்த்தமான நகைச்சுவை“ என்று இந்தப் படத்தைக் குறிப்பிடலாம். இதில் வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை என்று எந்தக் காட்சியிலும் இல்லை. படத்தில் யாரும் துன்புறுத்தப்படவில்லை. இகழப்படவில்லை. அவரது செயல்பாடுகளும், அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் எல்லாம் இயல்பாக இருக்கின்றன. உரையாடல்களில் கூட வார்த்தை விளையாட்டு எதுவும் இல்லை. ஆனால் படம் பார்க்கும் நீங்கள் உங்களை அறியாமல் சிரித்து விடுவீர்கள்.

உதாரணமாக, புரூக்ஸ்-ஐ ஆய்வுப் பணிக்கு கேட்டுக் கொள்ளும் அதிகாரிகளுக்கும், புரூக்ஸ்-க்கும் இடையே நடக்கும் உரையாடல்.
       
                 “புரூக்ஸ், நீங்கள் இஸ்லாமிய மக்கள் எது மாதிரியான நகைச்சுவையை விரும்பி ரசிக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் 500 பக்க அளவில் அறிக்கை ஒன்றை தயார் செய்ய வேண்டும்“
                          
               “500 பக்கமா...?
           
            குழுவின் தலைவர் தன் சக அதிகாரியிடம் “வழக்கமாக ஒரு அரசு அறிக்கை எத்தனை பக்கங்கள் இருக்க வேண்டும்?

             “850 பக்கங்கள் இருப்பது மரபு. 500 பக்கங்கள் என்பது மிகக் குறைவுதான்

           இன்னொரு அதிகாரி, கவலைப்பட வேண்டாம். அதை யாரும் படிக்கப்போவதில்லை. ஒருவேளை எடை போட்டுப்பார்ப்பார்கள். நீங்கள் வரைபடங்களை கூட சேர்த்துக்கொள்ளலாம். பக்க கணக்குக்காக...“

இன்னொரு அதிகாரி அதற்காக முழுதும் வரைபடங்களாகவே இருந்து வி்டக்கூடாது

புரிகிறது. ஆனால் அது என்ன கணக்கு? 850 பக்கங்கள். 500 பக்கங்கள்...

இந்தக்குழு செய்யும் செலவினங்களுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும்

ஒரு அரசு நியமிக்கும் குழுக்கள் அதன் ஆய்வுகள் அதன் விளைவுகள் இன்ன பிற லட்சணங்கள் வெளிப்படும் அற்புதமான காட்சி இது. ஆல்பர்ட் புரூக்ஸ் ஆய்வு செய்ய ஒப்புக்கொண்டு முதலில் இந்தியா வருகிறார். தனக்கு உதவியாளராக மாயா என்கிறப் பெண்ணை தேர்வு செய்கிறார்.



நெரிசல் மிக்க பகுதிகளில் நின்று கொண்டு நகைச்சுவை துணுக்குகளை எதிர்ப்படுபவர்களிடம் சொல்கிறார். தனி நபர் நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்துகிறார். மக்கள் பெரிதும் ரசிக்க வில்லை. அவரால் இந்திய மக்கள் எதற்கெல்லாம் சிரிப்பார்கள் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க இயலவில்லை. பாகிஸ்தான் செல்வதற்கான அனுமதி அவருக்கு உடனடியாக கிடைக்கவில்லை. எனவே இந்திய எல்லையை ரகசியமாக ஒரு ஏஜென்ட் மூலம் கடந்து அங்குள்ள காமெடியன்களை சந்திக்கிறார். அவர்களது சிரிப்பு செயற்கை நிறைந்ததாகவும் சில சமயம் அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது. அத்துடன் இவர் இந்தியாவுக்கு வந்த வழியே திரும்புகிறார்.

பிரச்சினை  அதற்குப் பிறகுதான் துவங்குகிறது.  இந்தியாவில்  உள்ள  பாகிஸ்தான்  தூதரகத்தில்  அவரது நடவடிக்கைகள்  தீவிரமாக  விவாதிக்கப்படுகின்றன.  இந்திய உள்துறை அமைச்சகத்தில் அவர்  மீது  சந்தேகம்  எழுகிறது.  இரு நாட்டு  அதிகாரிகளும் புரூக்ஸ் தங்கள் நாட்டுக்கு எதிராக ஏதோ சதிவேலை செய்கிறார் என்று முடிவுக்கு வருகிறார்கள். இருநாட்களுக்கு இடையே நடந்து வரும் அமைதிபேச்சு வார்த்தை இதனால் தடைபடுகிறது. இரு நாடுகளும் தங்கள் எல்லைப்பகுதியில் இராணுவ துருப்புக்களை நிறுத்தி வைக்கின்றன. அணு ஆயுதங்களை தயார் நிலைப்படுத்துகின்றன.

ஆல்பர்ட் புரூக்ஸ் ஆய்வை நிறுத்திவிட்டு உடனே நாடு திரும்பும்படி அமெரிக்க அரசு அவருக்கு ஆணை இடுகிறது. ஆல்பர்ட் புரூக்ஸ் நாடு திரும்பி அதுவரை தான் தயாரித்த 6 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கிறார். அத்துடன் அந்த ஆய்வு கைவிடப்படுகிறது?

பொதுவாக இந்திய மக்கள் சமாதானப்பிரியர்கள். அதே நேரத்தில் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். உற்றுக்கவனித்தால் நம் பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் இந்த இரண்டு காரணங்கள் தான் அடிப்படை என்பதை உணரலாம்.

சார்லி சாப்ளின் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் ஆளுமை என்பது திரைப்படத்துறையில் வேறுவிதமானது. சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் பல்வேறு பிரச்னைகளை இருவரும் இயல்பாக நையாண்டி செய்யும் திறன் படைத்தவர்கள்.


ஆல்பர்ட் புரூக்ஸ் மெனக்கெட்டு எதையும் புனையாமல் இயல்பான நகைச்சுவையால் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். யதார்த்த வாழ்வில் நாம் சிரிப்பை தொலைத்துவிட்டு யோகா பயிற்சியில் சிரிப்பை ஒரு பயிற்சியாக செய்யும் காட்சியை படத்தில் வெகு சாமர்த்தியமாக வைத்திருக்கிறார்.

நல்ல நகைச்சுவை என்பது எப்படி  இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சரியான உதாரணமாக இந்தப்படத்தில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


இந்தியர்கள் எப்படிப்பட்ட நகைச்சுவை உணர்வு படைத்தவர்கள் என்பதை அறிய இந்தியாவில் நடைபெறும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் எதையும் பார்க்கவோ அல்லது இந்திய நகைச்சுவையாளர்கள் எவரையும் சந்திக்கவோ ஏன் புரூக்ஸ் முயற்சிக்கவே இல்லை என்ற கேள்வி படத்தை பார்க்கும்போது எழுவது இயல்பே. படத்தில் இது போன்ற கேள்விகளுக்கு இடமளிக்கும் காட்சிகள் சிலவும் உள்ளன. அவற்றைத் தவிர்த்துவிட்டு பார்க்கையில் இந்தப்படம் சிறந்ததொரு யதார்த்த நகைச்சுவைப்படம்.

படத்தின் உச்சபட்ச காட்சியில் புரூக்ஸ் நாடு திரும்பியதும் அவருக்கு சிறு விருந்து அளிக்கப்படுகிறது. அதில் புரூக்ஸ்ன் மனைவி புரூக்ஸ் செய்த ஆயவின் பின் விளைவுகள் எதையும் தெரிந்துகொள்ளாமல் நீங்கள் மிக உன்னதமான செயல் முடித்து நாடு திரும்பியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்என்கிறார். அறையிலிருக்கும் தொலைக்காட்சியில் இரு நாடுகளின் எல்லைப்பகுதிகளும் பதற்றம் நிலவியதாக இருக்கின்றன. அமைதிப்பேச்சு வார்த்தை முறிந்து போனதுஎன்று செய்தியில் அறிவிப்பு காட்டப்படுகிறது. அழகான காட்சியமைப்பின் மூலமே இரு வேறு நிலைப்பாடுகளை உணர்த்தும் அற்புதமான இடம் இது.

அமெரிக்க அரசு எங்கும் நுழைந்தாலும் அது இன்னொரு யுத்தத்துக்கான முகாந்திரமாக அமைந்து விடுகிறது என்பதையும் உணர்த்துகிறது. படத்தின் இசையமைப்பாளர் மிக்கேல் கியாசினோவையும், உடையலங்கார நிபுணர் எவர்ட்ன் மற்றும் ஆடையணியும் பழக்கங்கள் பற்றி முறையே அறிந்து அதற்குத்தக்க தங்கள் பணியை செய்திருக்கிறார்கள். குறிப்பாக புரூக்ஸ் நாடு திரும்பியதும் தன் பெண் குழந்தைக்கு இந்திய புடவை மற்றும் ரவிக்கையை வாங்கிவர அந்தக்குழந்தை அவற்றை அணிந்துக்கொண்டு நடைபயிலும் காட்சி கொள்ளை அழகு.

பிக்கலும் பிடுங்கலும், சிக்கல்களும் சிடுக்குகளும் நிறைந்த நமது வாழ்வைச் சுற்றியிருக்கும் பிரச்னைகளின் கயிறு அவிழ்க்க முடியாத முடிச்சுக்களோடு இறுகிக்கிடக்கிறது. நகைச்சுவை என்கிற உணர்வுதான் அவ்வப்போது நம்மை தளர்த்துகிறது. கலை, இலக்கியங்களின் பணியும் நோக்கமும் கூட மனிதர்களை விடுவிப்பதுதானே....அந்த வகையில் பார்த்தால் நகைச்சுவைப்படங்களும் எனதுபார்வையில் கலைப்படங்களேயாகும்.


சனி, 14 ஆகஸ்ட், 2010

‘கலை'க்காகத் திரண்ட மக்கள் (Shwaas)


‘கலை கலைக்காக' என்றும், ‘கலை மக்களுக்காக' என்றும் இரு வேறு வாதப் பிரதிவாதங்கள் எல்லா மொழியிலும், எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், கலைக்காக மக்கள் திரண்ட சம்பவம் அங்கொன்று இங்கொன்றாக சரித்திரம் சந்தித்திருக்கிறது. மராத்தி மொழியில் வெளியான shwaas(சுவாசம்) என்னும் திரைப்படம் அப்படியான மெளனப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறது.


வணிக சாத்தியக் கூறுகள் அதிகமுள்ள மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தி திரைப்படங்களின் நெரிசலுக்கு இடையே மராத்தி மொழிப் படங்கள் சவலைப் பிள்ளையாகவே இருந்து வருகின்றன. இந்தித் திரையுலகில் நுழைய முயற்சிப்பவர்கள் கிடைக்கும் இடைவெளியை நிரப்ப மராத்தி படங்களை எடுத்து வந்தனர்.

இந்திய அரசால் வழங்கப்படும் ‘தங்கத் தாமரை' விருது 1954ல் shyamach Aai என்ற படம் பெற்றபிறகு கிட்டத்தட்ட 50 வருடங்கள் வேறு எந்த மராத்தி படமும் அந்த விருதைப் பெறவே இல்லை என்ற நிலையில் shwaas திரைப்படம் அந்த விருதைப் பெற்று ,மராத்தி மொழிப் படங்களின் திருப்புமுனையாகவும் இருக்கிறது.


சந்தீப் சாவந்த்

புனேயில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மராத்தி பெண் எழுத்தாளர் மாதவி கர்புரே ஒரு பத்திரிகையில் தீபாவளி மலருக்காக எழுதிய கதைதான் shwaas. இந்தக் கதையை வாசித்த கணக்குப் பதிவாளர் விஸ்வனாத் நாயக் இது பற்றி நாடக நடிகர் அருண் கடவாலேயேவிடம் தெரிவிக்க, கதையால் ஈர்க்கப் பட்டு, தான் இயக்கும் முதற்படத்துக்காக நல்ல கதையைத் தேர்வு செய்யும் முயற்சியிலிருந்த இயக்குனர் சந்தீப் சாவந்துக்குப் பிடித்துப் போனது.

படத்தின் கதை மிகச் சுருக்கமானது. முதியவர் விசாரே(அருண் கடவாலே) தன் 10 வயது பேரக்குழந்தை பரசுராமுக்கு ஏற்பட்ட பார்வைக்குறைவை சரி செய்ய பட்டணத்துக்கு வந்து, பிரபல மருத்துவர் ஸானேவிடம் காண்பிக்கிறார்.



பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் retino blastoma எனப்படும் கண் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் ஸானே... அறுவை சிகிச்சை தவிர வழியில்லை, அதுவும் விரைவில் செய்தாக வேண்டுமென்கிறார். பரசுராமின் உயிரைக் காக்க, பார்வை பறிபோவதை தவிர்க்க முடியாதென்கிறார்.

பரசுராமிற்கும் அவனது பெற்றோர்க்கும் தகவல் தெரிவித்தாக வேண்டிய கட்டாயம் விசாரேவுக்கு. நோயாளிக்கு சிகிச்சை முறை பற்றிய அறிவுறுத்தலும், அறிவித்தலும் சட்டப்படி நியாயமெனினும் பத்து வயது பிள்ளையிடம் உனது கண்பார்வையை பறிகொடுத்தே உன் உயிரைத்தக்க வைக்க வேண்டுமென தெரிவிக்க, தேற்ற, மிரண்டு திகைக்கிறார் விசாரே.

அவருக்கு துணை வந்த சமூக சேவகி ஆஸ்வாரி, மருத்துவர் ஸானேவிடம் மன்றாடி, அவர் மூலமே பரசுராமுக்குத் தெரியப்படுத்துகிறார்.

முதலில் அழுது ஆர்பாட்டம் செய்தவன் நிலைமையின் தீவிரம் புரிபட ஓய்ந்து போகிறான். குறித்த தேதியில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றான். எதிர்பாராவிதமாய் அறுவை சிகிச்சை ஒரு நாள் தள்ளிப் போகிறது. படுக்கையிலேயே நாள் முழுதும் இருக்கச் சலித்தவனைச் சமாளிக்கப் பாடாய்ப் படுகிறார் விசாரே. மூடிக்கிடக்கும் ஜன்னல்களைத் திறக்கும் போது மட்டுமே அமைதியாகிறான் அவன். வெளியுலகக் காட்சிகளுக்கான அவனது ஏக்கம் புரிகிறது விசாரேவுக்கு.

திடீரென மருத்துவமனை அறையிலிருந்து மாயமாகின்றனர் பாட்டனும் பேரனும். மருத்துவர் ஸானேயும் நிர்வாகமும் பதைக்கின்றனர். தகவல் வெளிக்கசிய பத்திரிக்கைகளும், ஊடகங்களும் மருத்துவமனைக்குப் படையெடுத்து யூகங்களாலும் கேள்விகளாலும் திணறடிக்கின்றனர். மருத்துவர் ஸானே மிகுந்த கோபமாகிறார்.

பொழுது சாயும் நேரத்தில் விசாரேயும் பரசுராமும் மருத்துவமனைக்குத் திரும்புகின்றனர். பரசுராம் கையில் ஏகப்பட்ட விளையாட்டு பொம்மைகள். எதிர்ப்படும் ஸானே, விசாரேயைக் கடுமையாகத் திட்டுகிறார்.

பரசுராமுக்கு பார்வையிருக்கப் போகும் இந்த ஒரே ஒரு நாளாவது அறைக்குள் அடைந்து கிடக்காமல் புறவுலகின் எழில் கொஞ்சும் காட்சிகளைக் கண்டு ரசிக்கவும், அவனையொத்த வயதினருடன் குதூகலமாக விளையாடி மகிழவும் தான் வெளியே அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார் விசாரே.



அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஸானே, கடிந்து கொண்டதற்குப் பிராயச்சித்தம் போல், அறுவை சிகிச்சை செய்யப் போகும் அறையை குழந்தைகள் விரும்பும் பொருள்களைக் கொண்டு வண்ணமயமாக அலங்கரிக்க, பணியாளர்களுக்கு உத்தரவிடுகிறார்.

பரசுராம் ஒளியிழந்த தன் விழிகளைக் கண்ணாடிக்குள் ஒளித்து ஊர் திரும்ப, ஊர் மக்கள் அனைவரும் திரண்டு அவனை வரவேற்க நிற்பதுடன் படம் நிறைவடைகிறது.

இப்படம் இந்தியாவின் அதிகாரப் பூர்வமான திரைப்படமாகப் பரிந்துரைக்கப் பட்டு ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப் படுகிறது. பிறகுதான் மராத்தி மக்களின் உணர்வுப் பூர்வமான எழுச்சியை நாம் உணரும் நிகழ்வுகள் நடந்தன

அமெரிக்காவில் தயாரித்து திரையிடப்படும் பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் எளிதாக ஆஸ்கார் விருதுக்குப் பரிசீலிக்கப் படும். பிறமொழிப் படங்கள் ‘சிறந்த அயல்மொழித் திரைப்படம்' எனும் பிரிவில் மட்டும் பரிசீலிக்கப்படும். படத்தை நடுவர்கள் மற்றும் ஆஸ்காரின் 5835 உறுப்பினர்கள் கண்டு அவர்கள் மனதில் படம் பற்றிய மதிப்பை பதிய வைக்க செலவு பிடிக்கும் மெனக்கெடுவைச் செய்ய வேண்டும். ஏனெனில், உலகம் முழுக்க ஏற்கனவே பிரபலமான படங்கள் உறுப்பினர்களிடையேயும் அறியப்பட்டிருக்கும். பிற மொழி படங்கள் பற்றி ஆஸ்கார் குழுவினரிடம் பிரபலப்படுத்த படத்தை தயாரித்தவர்கள்தான் முயற்சிக்கவேண்டும். அமீர்கான் கூட ‘லகான்'படத்துக்காகவும், பின்னர் ‘தாரே ஜமீன்பர்' படத்துக்காகவும் நிறையச் சிரமப்பட்டார்.

shwaas படத்தை தயாரிக்க ஆன செலவை (30,00,000) விட அதிக தொகை படத்தை முன்னிறுத்த(promote) தேவைப்பட்டது. மஹராஷ்ட்ராவில் உள்ள ஜோஹேஸ்வரி பள்ளிக் குழந்தைகள், விளக்குகள் தயாரித்து விற்றுக் கிடைத்த ரூ.30,000 பணத்தை தந்தனர். வேறொரு பள்ளி மாணவர்கள் பகுதி நேர வேலையாக கார்களைத் துடைத்து அதில் கிடைத்த தொகையை அனுப்பினர். சச்சின் டெண்டுல்கர் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தந்தார். அமிதாப்பச்சன் ரூ.ஒரு லட்சமும், கோவா அரசு 2.5 லட்சமும், மகாராஷ்டிர அரசு 15 லட்சமும் தந்தனர். அமெரிக்காவிலுள்ள மகராஷ்டிர மக்களிடம் திரட்டிய பணம் மற்றும் மகாராஷ்டிர நாடக அமைப்புகள் 65,000 ரூபாயும், சித்தி வினாயகர் ஆலய நிர்வாகிகள் தனியொரு உண்டியல் மூலம் திரட்டி தந்த சிறு தொகையும் பயன்படுத்தி 14 முறை ஆஸ்கர் குழுவினர் பார்ப்பதற்காகத் திரையிடப்பட்டது.

ஒரு திரைப்படம், திரையரங்குகளில் மக்களை ஈர்த்து பெருந்திரளாகச் சேர்ப்பது கூட அரிதாகி விட்ட சூழலில், ஒரு மாநில மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒரு திரைப்படத்தின் பின்னே திரள வைத்தது பெரும் எழுச்சி என்று சொல்லலாம்.

படத்தில் சிறுவனாக நடித்த அஸ்வின் சிட்டாலே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றான். shwaas திரைப்படம் ஆஸ்கார் விருதை தவறவிட்டாலும், பெரும்பாலான மக்கள் திரளும் திருமண மண்டபங்கள், பள்ளி அரங்குகளில் மக்களாலே பல முறை திரையிடப்பட்டு மராத்தியர்களிடையே தனக்கென ஒரு இடம் பிடித்தது.

40கோடி,50கோடி முதலீடு செய்து ஒரு படத்தை தயாரிக்கத் தயாராய் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இதுபோன்ற வெகு குறைந்த முதலீட்டில் வருடத்துக்கு ஒரு படத்தை தயாரிக்க முன்வந்தால் மக்கள் அவர்கள் பின் திரளமாட்டார்களா என்ன?

(கல்கியில் பிரசுரமானது)

சனி, 31 ஜூலை, 2010

சர்ச்சைகளின் பெட்டகம் (The Hurt Locker)


இயக்குனர்: கேத்தரின் பிக்ளே



தயாரிப்பாளர்: நிக்கோலஸ் சார்ட்டியர்

 

கதாநாயகன்: ஜெரோமி ரென்னெர்

ஆஸ்கார் வரலாற்றில் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை காதரீன் பிக்ளோ-வுக்குப் பெற்றுத்தந்த படம் The hurt locker (வேதனைகளின் பெட்டகம்)


ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவப் படையில் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் பிரிவுகள் அங்கு ஒரு வருடத்திற்கு ஒரு குழு என்ற சுழற்சி முறையில் பணியாற்றுகின்றன.

மரணத்தின் அருகே சென்று கை குலுக்கி குசலம் விசாரிக்கும் அந்த எமகாதக வேலையில் வில்லியம் ஜேம்ஸ், தாம்சன், ஓவன், ஸான்பார்ன் அடங்கிய குழு 2004-ல் பணியாற்றுகிற போது நேர்கின்ற பரபரப்பான, வேதனையான சம்பவங்களே படத்தின் மையக் கரு.

வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணியில் தாம்சன் இறந்து விடுகிறார். தேசம் விட்டு தேசம் வந்து, சொந்த பந்தங்கள் இல்லாத பூமியில் பழகிய நால்வரில் ஒருவரின் இழப்பு மற்றவர்களை வெகுவாக பாதிக்கிறது.

தாம்சனுக்குப் பிறகு ஜேம்ஸ்தான் வெடிகுண்டுகளோடு உரையாடி, உறவாடி அவற்றை உயிரற்ற ஜடமாக்கும் பணியை செய்ய வேண்டியிருக்கிறது.

குறுந்தகடுகளை விற்கும் பெக்ஹாம் என்ற சிறுவனோடு ஜேம்ஸுக்கு விளையாட்டாக நட்பு உருவாகிறது.

தங்களது அடுத்த வேட்டையின் போது முகம் சிதைந்த இறந்து போன சிறுவனின் வயிற்றுக்குள் வெடிகுண்டு இருப்பதைக் கண்டுபிடித்து, ஜேம்ஸே அதனை வெளியிலெடுத்து அழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இறந்து போன சிறுவன் பெக்ஹாம் தானோ என்ற சந்தேகம் எழ, ஜேம்ஸ் அவன் வேலை பார்க்கும் கடையில் தேடுகிறான். அங்கு அவனைப் பற்றி எந்த தகவலும் சொல்லப்படாமல் போக கவலையுடன் முகாமுக்கு வருகிறான்.

மற்றொரு வேட்டையில் உடனிருக்கும் ஓவனின் இடுப்புக்குக் கீழ் படுமோசமாகக் காயம் படுகிறது. அவன் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப் படுகிறான்.

ஈராக்கிய அப்பாவி ஒருவரின் இடுப்பில் தீவிரவாதிகள் வெடி குண்டு வைத்து கட்டிவிட, அதனைச் செயலிழக்க வைக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் அவர் தூள் தூளாகும் காட்சி உருக்கமானது. இந்த கொடூரமான காட்சியை நேரில் பார்த்தபின் இனி இப்படியான பணியில் ஈடுபடக் கூடாது என்ற மன உறுதி ஸான் பார்னுக்கு ஏற்படுகிறது. படத்தின் இறுதி காட்சியில் பெக்காம் குறுந்தகடுகளை விற்றபடி வருகிறான்.

தங்களுக்கான சுழற்சி முறை முடிந்து ஜேம்சும், ஸான் பார்னும் நாடு திரும்புகின்றனர். ஜேம்ஸ் தன் வேதனைப் பெட்டகத்தைத் திறந்து, கொடூரமான அனுபவங்களை தன் ஒரு வயதுக் குழந்தையிடம் சொல்லுகிறான். ஆனாலும் மீண்டும் வரும் அடுத்த சுழற்சி பணிக்காக திரும்பவும் தயாராகும் காட்சியோடு படம் முடிவடைகிறது.

படத்தில் ஜேம்ஸ்-ஆக வரும் ஜெரோமி ரென்னெரின் நடிப்பு அபாரமானது துல்லியமான முகபாவங்கள், அங்க அசைவுகள் அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகின்றன. பேரி அக்ராய்ட்டின் ஓளிப்பதிவு பாலைவன வறட்சியையும் மீறி அழகியலாக காட்சிகளை பதிவாக்கியிருக்கிறது. ஒரே காட்சியில் வெவேறு கோணங்களை படமாக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் கதையமைப்பு இருந்தாலும் கோணங்களை அடுத்து அடுத்து மாற்றுவதில் குழப்பமில்லாத நேர்த்தியை கையாண்டிருக்கிறார்.

ஒரு ஆவணப் படத்துக்கான சாயலுடன் எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படம் ஆஸ்கார் விருதைப் பெறுவதற்கு முன்னும் பின்னும் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்திருக்கிறது.



அமெரிக்க இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ‘பொஹம்மர்'என்ற இராணுவ வீரர், அமெரிக்கா முழுவதும் மிகப்பிரபலமானவர். அவரது வலைப்பூ மூலம் ராணுவ வீரர்களுக்காக நிதி வசூலித்து பாதிக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய வீரர்களின் குடும்பத்துக்காக உதவி வருகிறார். பொஹம்மர் படத்தில் ஜேம்ஸ் தன்னிச்சையாக பல இடங்களில் முடிவெடுத்து, தன் மேலதிகாரிகளுக்குக் கட்டுப்படாமல் சாகஸங்கள் நிகழ்த்துவது போல் காண்பிக்கப் பட்டிருப்பதைக் கடுமையாக ஆட்சேபித்தார். இராணுவத்தில் கடைநிலை ஊழியன் மேலதிகாரிக்குக் கட்டுப் படாதவன் என்கிற பிம்பத்தை தோற்றுவித்துவிடும் என்பதோடு, படத்தில் வீரர்கள் அணிந்திருக்கும் இராணுவ உடைகளும் தவறானவை. பாலைவனத்தில் அணியத்தக்கவென்றே பிரத்யேகமான உடைகள் தான் அமெரிக்க அரசால் தரப்பட்டன. வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்க பல்வேறு முறைகள் உள்ளன. படத்தில் பெரும்பாலும் கட்டிங் ப்ளேயர், ஸ்க்ரூ டிரைவர் ஆகியவற்றையே அதிகம் பயன் படுத்துவது வர்த்தக படங்களின் அடியொற்றியே எடுக்கப்பட்டிருக்கும் அறியாமையை காட்டுகிறது என்பதும் அவரது குற்றச்சாட்டு.



விருது அறிவிக்கப்படும் முன் படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘நிக்கோலஸ் சார்ட்டியர்' ஆஸ்கார் நடுவர் குழு உறுப்பினர்களுக்கு இ.மெயில் மூலம் இந்தப் படத்தை தேர்வு செய்யும் படி வேண்டுகோள் அனுப்பியது ஆஸ்கார் குழுவை எரிச்சலூட்டியது. அவர் எச்சரிக்கப்பட்டு, விருது வழங்கும் விழாவுக்கு அவர் வரக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டார்.

படத்தின் கதை ‘மார்க்போல்' என்ற பத்திரிகையாளருடையது. இவர் ஈராக் யுத்தத்தின் போது செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் இந்தக் கதையை எழுதியிருந்தார். வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவில் பணியாற்றிய அமெரிக்க இராணுவ வீரர் ஜெஃப்ரி சார்வரின் சாயலாகவே படத்தின் ‘ஜேம்ஸ்' கதாபாத்திரம் படைக்கப் பட்டிருப்பதாக அமெரிக்கா முழுவதும் நம்பப் படுகிறது. இதன் காரணமாக படத்தில் இராணுவம் பற்றிய ஆட்சேபகரமான தகவல்கள் இருப்பதாக தற்பொழுது‘ஜெஃப்ரி' வழக்குப் பதிவு செய்துள்ளார். சிறந்த கதாசிரியருக்கான ஆஸ்கார் விருதை இந்த படத்துக்காகப் பெற்ற மார்க்போல் தான், இப்படத்தின் தொழில் நுட்ப ஆலோசகரும் கூட. எனவே, மார்க்போலுக்கு இந்த வழக்கு கூடுதல் தலைவலியைத் தந்துள்ளது.

இதேபோல 1930-ல் எடுக்கப் பட்ட All Quiet on Western Front என்ற படமும் ஆஸ்கார் விருது பெறும் போது பல சர்ச்சைகளைச் சந்தித்தது. ஜெர்மன் இராணுவ வீரர்கள் மீதான அனுதாபப் பார்வையோடு எடுக்கப் பட்டது அந்த படம். அவர்களின் கொடூரமான இன்னொரு முகத்தை மறைக்கும் முயற்சி என்று விமர்சிக்கப் பட்டது.

2010-க்கான கோல்டன் குளோப் விருதுப் போட்டியில் ஜேம்ஸ் காமரூன் இயக்கிய ‘அவதார்' படம் ‘ஹர்ட் லாக்கரை'ப் பின்னுக்குத் தள்ளி வென்றாலும், ஆஸ்கார் விருதுக்கான போட்டியில், ‘அவதாரை' தோற்கடித்து ‘ஹர்ட் லாக்கர்' பரிசை தட்டிச் சென்றது.



‘அவதார்' படத்தை இயக்கிய ஜேம்ஸ் காமரூனின் முன்னாள் மனைவிதான் ‘ஹர்ட் லாக்கரை' இயக்கிய கேத்தரின் பிக்ளே என்பது மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம்.
 
(கல்கியில் வெளிவந்தது)

செவ்வாய், 13 ஜூலை, 2010

பிரதி

பிரதியெடுப்பதுதான் நடக்கிறது
வாழ்க்கை முழுதும்...

வெயிலெடுத்து போட்டது
நிழலை நிஜத்தின் பிரதியாய்...
மேகமூட்டம் போல்
புகை எழும்பி பரவியது வெளியெங்கும்....
பெருக்கெடுக்கும் வியர்வை துளி போல்
கசிகிறது நீர்த்துளி கண்ணிலிருந்து

கண்ணாடி துண்டங்கள் போல்
ஜ்வலிக்கிறது கானல் நீர் வரி வரியாய்...
பிரதிடுப்பதுதான் நடக்கிறது
உலகமெங்கும்....

கடற்கரை மணலில் பதிந்து கிடந்தது
எவர் முகத்தின் பிரதியோ...
இழுத்து சென்ற ஆழிப் பேரலை மட்டுமே அறியும்
எங்கே தவிக்கிறதோ எவராலும் பிரதி எடுக்க முடியாத
உயிர்....

கவிஞனாயிருத்தல்

வறண்டு பிளந்த நிலத்தினுள்
வதங்கித் தளர்ந்திருக்கும் வேர்தேடி
நனைத்து உயிர்ப்பிக்கும்
ஓர் மழைத்திவலை போல
இருக்க நினைத்ததுண்டு...

குளிர்ந்த கிரணங்களால் இரவை நிரப்பி
பாலாய்ச் சிரிக்க
ஒரு நிலவைப்போல்
இருக்க நினைப்பதுண்டு...

தூங்கும் மொட்டிதழை வருடியவிழ்த்து
கொஞ்சம் வாசம் உறிஞ்சி
செல்லும் திசைதோறும்
விதைத்துப்போகும்
காற்றாய்த் திரிய நினைத்ததுண்டு...

அலையாய் அலைந்து மணலை அள்ளி
உள்ளிழுத்து கர்வம் ததும்பக் கொந்தளிக்கும்
கடலாய் இருக்க நினைத்ததுண்டு...

உயிரில் இழைத்து உதிரம் நிறைத்து
பிரபஞ்ச தரிசனம் தந்த தாயாய்ப்
பிரதிபலிக்க வார்த்தைகளால் வாழ்க்கையில்
முடிந்ததில்லை
எதுவும் சாத்தியப்படாதபோது
எல்லாவற்றுக்கும் மாற்றாய் ஒன்றுண்டு.

அது‘ஒரு கவிஞனாயிருத்தல்'

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...