திங்கள், 24 நவம்பர், 2025

கனவில் ததும்பும் நதி, 2

 



கனவில் ததும்பும் நதி – 2

 நெய்வேலி பாரதிக்குமார்

               ப்ரல் 23 உலகப் புத்தக தினத்தையொட்டி உலகமெங்கும் புத்தகக் கண்காட்சிகள், அதிகத் தள்ளுபடியுடன் புத்தக விற்பனையை பல்வேறு புத்தக நிறுவனங்கள் நடத்துகின்றன. கடந்த சில வருடங்களாக வெவ்வேறு புத்தக நிறுவனங்கள் இணைந்து சென்னை எழும்பூர் பெரியார் மாளிகையில் (தினதந்தி அலுவலகம் அருகில்) ஐம்பது சதவிகித தள்ளுபடியில் நூல்களை விற்கின்றன. நான் அதில் அரிய நூல்கள் சிலவற்றை வாங்கி இருக்கிறேன். இந்த வருடமும் அறிவிக்கப்படலாம்.

      உலகப்புத்தக தினத்தில் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய எழுத்தாளர்கள் ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ், ழீன் டொமினிக் பாபி ஆகியோர் ஏப்ரல் 23 இல் பிறந்தவர்கள் (ஒரு சிலர் ஷேக்ஸ்பியர் இறந்த தினம் மட்டுமே ஏப்ரல் 23 என்கிறார்கள்) இந்த வரிசையில்  ரே பிராட்பரியையும் இணைக்கலாம். ரே பிராட்பரி அந்த நாளில் பிறந்தவருமில்லை இறந்தவருமில்லை என்றாலும் அவரது ஃபாரன்ஹீட் 451 நாவல் மிக முக்கியமான ஒன்று. அது புத்தகங்களின் முக்கியத்துவம் பற்றி பேசுகின்ற நாவல்

      ரே பிராட்பரி ஒரு அறிவியல் புனை கதை எழுத்தாளர். நம் சுஜாதாவுக்கு இவரும் ஐசக் அசிமோவும்தான் விருப்பமான எழுத்தாளர்கள். அமெரிக்காவில் மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரே பிராட்பரி பார்வைக் குறைபாடு காரணமாக இராணுவத்தில் சேர்வதற்கான வாய்ப்பை இழந்தவர். 12 வயது முதலே எழுதத் தொடங்கி பத்திரிகைகளில் தொடர் சிறுகதைகள் (Chain of Stories) என்னும் முறைமையில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதத் தொடங்கி பின்னர் முழு நேர எழுத்தாளராக தன்னைத் தகவமைத்துக் கொண்டார். அவரது சிறுகதைகளுக்கு கிடைக்கும் அதீதமான வரவேற்பைப் பார்த்து பதிப்[பாளர்கள் அச்சிறுகதைகளை நீட்டித்து அதே வரிசையில் தொடர்ந்து எழுதுமாறு வற்புறுத்தி இருக்கிறார்கள். அதே போல அவரது சிறுகதைகள் பின்னர் விரித்து எழுதப்பட்டு நாவலாகி இருக்கின்றன. ஃப்ரான்ஹீட் 451 நாவல் தி ஃபயர் என்கிற தலைப்பில் சிறுகதையாக எழுதப்பட்டு பின்னர் விரிவுபடுத்தப்பட்ட நாவல்.

      ரே பிராட்பரி ஒரு கற்பனையான தேசத்தை அதில் படைத்திருப்பார். மக்களுக்கு எதிரான சட்டங்களும் நடவடிக்கைகளும் கொண்ட கற்பனை தேசம் அது அவ்வாறு உருவாக்குவதை (dystopia) டிஸ்டோபியா என்கிறார்கள். உடோபியாவுக்கு நேர் எதிர் சமூகம். நல்ல அம்சங்களும், சட்டத் திட்டங்களும் கொண்ட உலகத்தைக் கற்பனையில் உருவாக்கினால் அதனை உடோபியா (utopia )என்பார்கள்.

ரே பிராட்பரியின் கற்பனை தேசத்தில் புத்தகங்கள் வாசிப்பது வீண் வேலை நேரத்தை வீணடிப்பது. ஆகவே புத்தகங்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். அப்படி அரசாங்கத்துக்குத் தெரியாமல் புத்தகங்கள் வைத்திருந்தால் அவை எரிக்கப்படும். புத்தகங்கள் வைத்திருந்தவருக்கு கடுமையான தண்டனையும் உண்டு. புத்தகங்களை எரிப்பதற்கு என்றே அரசாங்க நிறுவனம் ஒன்று உண்டு. அங்கு உள்ள புகார் பெட்டிகளில் புத்தகங்கள் வைத்திருப்பவர் பற்றி தகவல் தெரிவித்தால் உடனடியாக அங்குள்ள குழு சென்று அந்தப் புத்தகங்களை எரித்துவிடும். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மாண்டேக் என்பவனுக்கு அரசாங்கத்தின் இந்தச் செயல்பாடு மிகப் பிடித்தமானது. அவனுக்கும் புத்தகங்கள் வாசிப்பவர்கள் உதவாக்கரைகள் என்கிற எண்ணம் உண்டு.

அந்த தேசத்துக்கு ஆசிரியர் பணிக்காக புதிதாக வரும் ஒரு ஆசிரியை மாண்டேக்கை எதேச்சையாக சந்திக்கிறாள். அரசின் இந்தச் சட்டம் மக்களின் அறிவு நலனுக்கு எதிரானது என்று தெரிவிக்கிறாள். அதை மறுக்கும் மாண்டேக்கிடம் “நீங்கள் இதுவரை புத்தகங்கள் வாசித்திருக்கிறீர்களா?” என்று கேட்கிறாள். இல்லை என்று தலையாட்டுகிறான். ஒன்றைப் பற்றித் தெரியாமலேயே அது பயனற்றது என்று எப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்க மாண்டேக் யோசிக்கிறான். அடுத்த முறை புத்தகங்களை எரிக்கும் பணிக்குச் செல்லும்போது தீயில் எரிபடாத புத்தகம் ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து ரகசியமாக வாசிக்கின்றான். அது சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “The life History of Copperfield” என்னும் கற்பனை சுயசரிதைப் புத்தகம். அந்தப் புத்தகம் மெல்ல மெல்ல உள்ளிழுக்கிறது.

மாண்டேக் அதன்பிறகு புத்தங்களை எரிக்கச் செல்லும்போது வேண்டுமென்றே சில புத்தகங்களை எரியவிடாமல் செய்து அவற்றை ரகசியமாக வீட்டுக்கு எடுத்துவந்து படிக்க ஆரம்பிக்கின்றான். ஒரு கட்டத்தில் அவனால் புத்தகம் வாசிக்காமல் இருக்கவே முடியவில்லை. தொலைக்காட்சிப் பிரியையான அவளது மனைவி கோபத்தில் அவனைப் பற்றி புகார் பெட்டிக்குத் தகவல் அனுப்புகிறாள். அவன் அரசின் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகத் தப்பி ஓடுகின்றான். அவனது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய அந்த ஆசிரியை அரசுக்குத் தெரியாத ரகசியத் தீவு ஒன்றை அறிமுகம் செய்கிறாள். அங்கு உள்ள அனைவரும் நாள் முழுவதும் புத்தகம் வாசிக்கிறார்கள். அரசாங்கம் கண்டுபிடித்தால் புத்தகம் எரிக்கப்படும் என்பதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு புத்தகத்தை மனப்பாடமாக வாசித்து அதை மனதில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். யாரெல்லாம் அப்படி ஒரு முழு புத்தகத்தை மனனமாக வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அந்தப் புத்தகத்தின் பெயரையே சூட்டிவிடுவார்கள். யோசித்துப் பாருங்கள் இங்கும் அப்படி ஒரு பழக்கம் இருந்தால் ஒரு சிலரை நாம் திருக்குறள் என அழைக்கலாம். ஒன்றிருவரை நாம் சிலப்பதிகாரம் என்றழைக்கலாம் எத்தனை அற்புதமாக இருக்கும்? மாண்டேக் அந்தத் தீவில் தனக்கான புத்தகம் ஒன்றைத் தேர்வு செய்து வாசிக்க ஆரம்பிக்கின்றான். இந்த நாவலைத் தமிழில் வெ.ஸ்ரீராம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

ஃபாரன்ஹீட் 451 அதே பெயரில் திரைப்படமாக ஃபிரான்காயிஸ் ட்ரூஃபெட் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது. மிக அற்புதமான இந்தத் திரைப்படம் பற்றி விரிவான விமர்சனத்தை சௌந்திர சுகன் இதழில் எழுதி இருக்கிறேன். அந்தக் கட்டுரை பின்னர் விழித்திரையில் நிற்கும் பிரமொழித்திரைப்படங்கள் என்னும் என்னுடைய நூலில் இடம்பெற்றுள்ளது. புத்தகங்களின் மகத்துவம் பற்றி எடுக்கப்பட்ட மிக முக்கியமான படங்கள் என  ஃபாரன்ஹீட் 451 மற்றும் The Diving Bell and Butterfly  ஆகியவற்றைக் குறிப்பிடுவேன். தேடிக் கண்டடையுங்கள்..

முகநூலை வெற்று அரட்டை என்றும் சுயத்தம்பட்ட ஊடகம் என்றும் கடுமையாக விமர்சிப்பவர்கள் உண்டு. நவீன இலக்கியவாதிகள் பலர் அது கவுரவக் குறைச்சலானக் களம் ஆகவே முகநூல் குழுக்களுடன் அன்னந்தண்ணி ஆகாரம் எல்லாம் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் ரகசியமாக விடாமல் வாசிக்கிறார்கள். இல்லையென்றால் முகநூல் போராளிகள் என்னைக் கண்டபடி வசை பாடுகிறார்கள் என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை எவரும் அவர்களிடம் கேட்பதில்லை. இப்பொழுது விமர்சனங்களுக்கும், பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கும் வசை என்று பெயர் சூட்டிவிட்டார்கள். அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவிட்டால் “என் வளர்ச்சியை பிடிக்காத எதிரிகள் செய்த சூழ்ச்சி” என்கிற நிரந்தர வசனம் போலாகிவிட்டது இந்த வசை என்கிற சொல்.

நீங்கள் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் முகநூல் என்பது இன்று பரவலான மக்கள் தொடர்புக்கானத் தளமாக இயங்குகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கவனிக்கின்ற, ஓரளவு வாசிக்கின்ற எழுத்துவடிவிலான சமூக ஊடகமாக முகநூல் மட்டுமே இருக்கின்றது. தன் தாயின் மீதோ, தந்தையின் மீதோ எந்தப் பதிவுக்கும் கமென்ட் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்து மிகுந்த கொள்கைப் பிடிப்புடன் இருப்பவர்கள் கூட நிச்சயம் வாசிக்கிறார்கள் என்பதை அவர்களை அடுத்த முறை சந்திக்கும் போது கண்டுபிடித்துவிட முடிகிறது. இளையதலைமுறை இன்ஸ்டா, ரீல்களில் மூழ்கித் திளைத்திருக்க பூமர் என்று ஒதுக்கப்பட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சரணடைய சரியான தளம் முகநூல்தான்.

முகநூலை மிக ஆக்கப்பூர்வமாக, படைப்பூக்கத்துடன் பதிவிடுபவர்கள் முகநூல் பக்கங்களை அர்த்தமுள்ளதாக மாற்றி வருகிறார்கள். அதில் குறிப்பாக Karikalan R, Geethapriyan Vasudevan, Magudeswaran, அறிவழகன் கைவல்யம், பொ. வேல்சாமி என்று பலரைக் குறிப்பிடலாம். இதில் கரிகாலனின் பணி அற்புதமானது மிகவும் வியக்கவைப்பது. அவரது பதிவுகள் திரைப்படம், கவிதைகள், சமகால நிகழ்வுகள், வரலாற்றுச் செய்திகள் என பல்வேறு தளங்களில் பாய்ச்சலை நிகழ்த்துகின்றன. ஒரு கவிஞராக மட்டுமே அதிகம் அறியப்பட்ட அவரின் நுட்பமான, தீர்க்கமானப் பார்வை முகநூல் வழியாகத்தான் அதிகம் வெளிப்படுகிறது. குறிப்பாக அவரது பெரியாரின் இரங்கல் உரை பதிவு எத்தனை தத்துவார்த்தமானது என்ன ஒரு அழகான Narration . அதில் எத்தனை விஷயங்களை ஒரு கடுகுக்குள் கடலை நிரப்புவது போல நிறைக்கிறார். மரணம் என்பது ஒளியை அணைப்பது போல அல்ல விடியல் வந்தால் விளக்கை அணைப்பது போல என்கிற தாகூரின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார். நாகம்மை இறந்தபொழுது “இனி வீட்டுக்குப் போகவேண்டும் என்கிற அவசியமில்லை” என்கிற பெரியாரின் கூற்று அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை நமக்குள் விதைக்கிறது. பெரியாரின் இரங்கல் உரையை eulogy poetry தன்மையைக்  கொண்டிருக்கிறது என்று அதனை வகைமைப்படுத்துவது எத்தனைப் புரிதலைத் தருகிறது? .

            கரிகாலனின் பார்வை வேறொரு கோணத்தில் இயங்குவது.  இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் பரிசு பெற்ற படங்களைக் குறிப்பிடுவது என்பது எல்லோரும் செய்யக்கூடியதுதான் என்றாலும் கரிகாலன் மொத்தமுள்ள 24 ஆஸ்கர் விருதுகளில் 13 விருதுகளை பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்? அவரது ஒவ்வொரு பதிவுமே தொகுக்கப்பட வேண்டியவைதான். அரிதாக அவரது கவிதைகளைப் பதிவிடுவார். சமீபத்தில் அவர் பதிவிட்ட இந்தக் கவிதை புன்னகைக்க வைப்பது. கவிதையில் நகைச்சுவை மிக அரிது கரிகாலன் எதையும் சாத்தியப்படுத்துவார்.  

பாவம்

~

ஏழு பாவங்களுள்

ஒன்று பொறாமை

விவிலியம் கூறுகிறது

அழகாக இருந்து

பொறாமைப்படுத்தாதீர்

அறிவாளியாக இருந்து

பொறாமைப்படுத்தாதீர்

கனவானாக

சீமாட்டியாக இருந்து

பொறாமைப்படுத்தாதீர்

பகைவரை மன்னித்து

பொறாமைப்படுத்தாதீர்

இரக்கமுடையவராக இருந்து

பொறாமைப்படுத்தாதீர்

ரொம்ப நல்லவராக இருந்து பொறாமைப்படுத்தாதீர்

'பொறாமைக்கு தூண்டுவது

எட்டாவது பாவம்!'

என்கிறது, கரிகாலன்

எழுதிக் கொண்டிருக்கிற

புதிய விவிலியம

 

                                                                                    (இன்னும் ததும்பும்)

 

 

 

      

கனவில் ததும்பும் நதி

 கனவில் ததும்பும்  நதி

-நெய்வேலி பாரதிக்குமார்

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சிக்கு 15 கி.மீ. தொலைவில் ஸ்வர்ணரேகா என்னும் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மேற்குவங்கம் வழியாக ஒடிசாவுக்குச் சென்று பின் கடலில் கலக்கிறது. ஜார்க்கண்டின் சில பகுதிகளில் மட்டும் அதன் மணற்பகுதியில் தங்கத்துகள் கலந்து கிடப்பதால் அங்குள்ள பழங்குடி மக்கள், நாள் முழுவதும் மணலை சலித்து, மில்லி கிராம் அளவுக்கு தங்கத்தை எடுத்து விற்று தங்கள் வயிற்றுப்பாட்டைத் தீர்க்கின்றனராம். இந்தச் செய்தியை அறிய நேரிட்டால் பலரின் கனவில் ஓடும் நதியாக ஸ்வர்ணரேகா இருக்கலாம்.

      ஆனால் கலை, இலக்கியரசனை உள்ளவர்களின் கனவில் ஏதேனும் ஒரு வரியோ, அரிய சொல்லோ. ஒரு ஓவியத்தின் கோடுகளோ, வண்ணமோ அல்லது சிற்பங்களின் பாவங்களோதான் அதிகம் வரக்கூடும். அதற்காக இலக்கியவாதி பணத்தின் மீது பற்றற்றவன் என்பதல்ல பொருள். அவன் தலையெழுத்து அவனது கனவுகளில் அவையே வந்து தீரும்.

      ஸ்வர்ணரேகா என்கிற பெயரைக் கேள்விப்பட்டதும், ரித்விக் கதக்கின் சுபர்ணரேகா என்கிற பெங்காலித் திரைப்படம்தான் நினைவுக்கு வந்தது. இந்தியப் பிரிவினைக் காலக்கட்டத்தில் நடப்பதாக உருவாக்கப்பட்ட கதைக்கரு. ஸ்வர்ணரேகா நதிக்கரையில்தான் அந்தக் கதைத் தொடங்குகிறது. ரித்விக் கதக் இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனர். சத்யஜித் ரேவுக்கு இணையாகக் கருதப்பட வேண்டியவர். சுபர்ணரேகா ஆசியப் பத்திரிகையின் பட்டியல் ஒன்றின்படி எல்லா காலத்துக்குமான சிறந்த திரைப்படங்களின் வரிசையில் 11 வது இடத்தைப் பிடித்தது. அவரது மேக தக்க தாரா இந்தியத் திரைப்படங்களில் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று.

      சுபர்ணரேகா ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் தற்பொழுது இணையத்தில் யூ ட்யூப் வழியாகக் காணக்கிடைக்கிறது. இணையம் என்பது தேடித்தேடிக் கண்டடைபவர்களுக்கான பொக்கிஷங்களைத் தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது. இணையம் என்பது ஒட்டுமொத்தமாக மோசமானதல்ல அது தனக்குள் சிறந்தவற்றுக்கும், மிகச்சிறந்தவற்றுக்கும், மோசமானவற்றுக்கும் மிக மோசமானவற்றுக்கும் தாராளமாக இடமளித்திருக்கிறது. நாம்தான் நமக்கான ஆரோக்கியமான கனி எவை என்பதை அறிந்து பறிக்கவேண்டும்.

 

         மீபத்தில் ஒரு இலக்கிய நிகழ்வில் ஒரு பேச்சாளரிடம் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சிறுகதைகளின் தொகுப்பை அளித்து அதிலுள்ள கதைகள் குறித்துப் பேசச்சொல்லி இருந்தார்கள். அவர் அந்தத் தொகுப்பை ஓரமாக வைத்துவிட்டு, தான் சிறு வயதில் படித்த ரஷ்யச் சிறுகதைப் பற்றி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் போல அபிநயங்களுடன் பேசினார். பிறகு கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன் என்று அவரது பேச்சு இலக்கில்லாமல் அங்கும் இங்குமாகப் பாய்ந்தது. சிறந்தச் சிறுகதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தான் கொண்டு வந்த பசுமாட்டை, பனைமரத்தில் கட்டிவிட்டு ஒருவழியாக ஓய்ந்தார். அண்மைக்காலங்களில் சில பேச்சாளர்கள் தங்களுக்குத் தரப்பட்ட நூல்களைப் படிக்காமல் மேடைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த ஆலாபனைகளில் பஜனைப் பாடுவது அதிகமாகிவிட்டது. இதனால் சமகால இலக்கியங்கள் பற்றி, படைப்பாளிகள் பற்றிய விரிவான விவாதக்களம் உருவாகாமல் வெறுமையாகிவிட்டது.

குழுக்கள் சார்ந்த படைப்பாளிகள், ஊர்ப்பாசத்தில் முன்னிறுத்தப்படும் படைப்பாளிகள் தவிர பிற படைப்பாளிகள் இருள்வெளியில் எந்த வெளிச்சமுமின்றி இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.  தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத்  தொகுப்பு ஒன்றில் அதன் முன்னுரையை எழுதிய ஒருவர் அதிலுள்ள கதைகளைப் பற்றியோ, எழுத்தாளர்கள் பற்றியோ ஒரு வரி கூட கூறாமல் சாமர்த்தியமாக ந்ழுவிச் சென்றதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன். பெயர்களைக் குறிப்பிட்டால் ஆயபயன் என்ன என்பதை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்துவிட்டே உச்சரிக்கிறார்கள். தனக்கு உதவாத பெயர்களைக் குறிப்பிட சிலர் ஒருபோதும் விரும்புவதில்லை. எனவே சிலருக்கு மட்டும்  உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பொங்கிப் பெருகும் புகழ் வெளிச்சமும், விருதுகளும் கிடைக்கின்றன.

கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை படைப்புலகில்  இரண்டு செல்விகள் மிக முக்கியமானவர்கள். அதிலொருவர் தமிழ்ச்செல்வி அவர்கள். கீதாரி, மாணிக்கம், அளம், கற்றாழை என தனது பல்வேறு படைப்புகளால் பரவலாக அறியப்பட்டவர். இவர் திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தவர் என்றாலும் விருத்தாச்சலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்.

இன்னொருவர் கலைச்செல்வி நெய்வேலியில் பிறந்து வளர்ந்து தற்சமயம் திருச்சியில் வாழ்ந்து கொண்டிருப்பவர். காந்தியச் சிந்தனைகள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட கலைச்செல்வியின் நாவல் ஹரிலால் த/பெ.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மிக முக்கியமானது. அவரது நாவல்கள் காத்திரமானவை. அற்றைத்திங்கள், சக்கை, புனிதம், தேய்புரி பழங்கயிறு ஆகியவற்றுடன் ஆலகாலம் என்னும் நாவல் வித்தியாசமான கூறுமுறையால் வாசிப்பவரை தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

காலத்தை ஒரு துளியில் அழிக்கும் விஷம் ஆலகாலம் என்பார்கள். காலம் என்பது எப்பொழுதும் மாறிக்கொண்டே இருப்பது. தனக்குள் ஆச்சர்யங்களையும் எதிர்பாரா விசித்திரங்களையும் புதைத்துக்கொண்டிருப்பது. ஆனால் நிலையில்லாதது என்பதை ஊடுஇழையாகக்கொண்டு எழுதப்பட்ட நாவல் ஆலகாலம்.  நாவல் ஐந்து காலகட்டங்களில் நடப்பதாக ஐந்து உள்பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பாகம் முடியும் இடத்தில் அடுத்தப் பாகம் தொடங்குவதற்கான இணைப்புப் புள்ளியை லாவகமாக தன் எழுத்தின் வழியே மெல்லியச் சங்கிலியாக உருவாக்குகிறார் கலைச்செல்வி.  .

முதல் பாகத்தில் மனதில் வாழும் காதலனுக்காக கசிந்துருகும் பாணர் குலத்து  குழலி மற்றும் அவளது சகோதரன் அறிவுடைநம்பி இருவரும் மதுரைக் காஞ்சியைப் படைத்த மாங்குடி மருதனாரைச் சந்திக்கும் இடத்தில் தொடங்குகிறது. மருதனாரின் பாடல்களையும் இசைக் கோர்த்து பாடும் பாணர் குடி. ஆகையால் இருவருக்குமான பிணைப்பு இறுகுகிறது. ஆனால் அண்ணனும் தங்கையும் யாரைத் தேடிச் செல்கிறார்களோ அந்த மன்னன் போரில் கொல்லப்பட்டிருப்பான் என்பதை மருதனார் வழி அறிந்து துயருற்று அவர்களின் மனம் இசையில் கலந்து ததும்பும் இடத்தில் அப்பாகம் நிறைவுறுகிறது.

அடுத்தப் பாகத்தில் காஞ்சியை அடுத்த மணிமங்கலத்தில் இருந்து நண்பனின் திருமணத்துக்காக சோழ மண்டலத்தில் பழையாறை வரை சென்றுவிட்டு திரும்பும் போது காஞ்சி போரினால் சிதைவுற்று வழியெங்கும் பிணங்கள் கிடக்கின்றன. சிர்பியாகிய அவன் வடித்தச் சிற்பங்கள் அவனை நோக்கித் திரும்பி நிற்கின்றன. அவன் மீண்டும் வாடா திசை நோக்கிச் செல்வதோடு அப்பாகம் நிறைவுறுகிறது.

மிக முக்கியமான மூன்றாம் பாகத்தில் ஈசனுடன் பராந்தகச் சோழன் மரணம் குறித்தும் நிலையாமைக் குறித்தும் உரையாடுகிறார். தனக்குள் இருக்கும் அசைவின்மையைக் காலத்தாலும் தொட இயலாது என்றுணரும் இடத்தில் நிறைவுறுகிறது.

நாடகக் கம்பெனியில் விடப்பட்ட சுப்பையா காந்தியின் ஆசிரமத்திற்குச் சென்று அங்கு காந்தியுடன் வாழும் சந்தர்ப்பத்தில் எப்படி அவர் மரணத்துயரால் ஆட்படாத மனநிலையை அடைந்திருக்கிறார் என்பதை தரிசித்து தெளிவு பெறுகிறார். ஐந்தாவது பாகம் சம காலத்தில் நிகழ்வதாக படைக்கப்பட்டிருக்கிறது. தேர்ந்த மொழிநடை அர்த்தமுள்ள உரையாடல் ஆகியவற்றால் வாசிப்பவர்களின் சிந்தனைப் போக்கை கலைத்து விளையாடுகிறது ஆலகாலம் நாவல். யாவரும் பதிப்பக வெளியீடு.

லார்க் பாஸ்கரன் மிகச் சிறந்த வடிமைப்பாளராகவே அதிகம் அறியப்பட்டாலும் அவரது கவிதைகள் உண்மையை நோக்கிய ஆக்ரோஷத்தின் குரலாக இருக்கின்றன. பொதுவாக தற்கால நவீனக் கவிதையுலகம் நேரடியான உணர்வுகளின் பதிவுகளை தவிர்க்கவே விரும்புகிறது. இருண்மையின் வழியே மனதைத் தொடுவதையே அதிகம் முயற்சிக்கிறது. வானம்பாடி கவிதைகளை பொய்மைக் கலந்த கோஷங்கள் என்று நிராகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் அவர்களின் பாடுபொருள்களையும் முடிந்தவரை விலக்கியே வைக்கிறார்கள். ஆனால் லார்க் பாஸ்கரன் அப்படியான  பாடுபொருள்களை  நவீனக் கவிதை மொழியில் தனக்குள் குமுறும் கொந்தளிப்புகளோடு முன் வைக்கிறார்.

பசி என்னும் தலைப்பிலான அவரது கவிதை (இப்படியானத் தலைப்புகளை, சமகாலக் கவிஞர்கள் விரும்புவதே இல்லை) பசித்தவனின் எஞ்சிய சொத்தாகச் சுற்றும் அறிவை இப்படிப் பேசுகிறது.

வாயில் நுரை தள்ள

கதறும் அறிவின் சுமை

கிட்டத்தட்ட நொறுக்கப்பட்ட

இதயத்தின் சுவரில்

கொஞ்சம் ஆக்சிஜனைச்

சரிசெய்தபடி

சுற்றி வருகிறது...

………..

நீட்டிய கால்களில்

ரசமட்டம் பார்த்தபடி

புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்

பொய்களின் மேல் கட்டப்பட்டக்

கேள்வியை...

லார்க் என்றாலே வானம்பாடி என்றுதானே பொருள்.. ஆகையினால் கூட அவருக்குள் ஒரு வானம்பாடி இன்னும் விடாமல் இசைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கின்றேன். லார்க் என்னும் பெயரில் சிங்கப்பூர் போன்ற தேசங்களில் இயங்கும் மென்பொருள் தனித்தியங்கும் தன்மைப் பெற்றது. சீனாவில் பயன்படுத்தப்படும் ஃபெய்ஷு மென்பொருளைப் போன்றது என்கிறார்கள். லார்க் பாஸ்கரனும் தனித்துவமான படைப்பாளிதான். வேரல் புக்ஸ் வெளியிட்டிருக்கும் கடல் தன் மீனை சமைப்பதில்லை கவிதை நூலில் இக்கவிதை இடம்பெற்றிருக்கிறது. 


 



















 











 

வியாழன், 7 செப்டம்பர், 2023

 

வளைதலும் வாழ்தலும்

-நெய்வேலி பாரதிக்குமார்

 

              




    ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக யாரைக் கண்டாலும் ஆடுவதும், நிமிர்த்த முடியாதபடிக்கு வளைந்தும் இருப்பதை அவமானமாகக் கருதியது. படைத்தவனிடம் சென்று வால் இல்லாமல் இனி நாய் ஜென்மத்தைப் படைக்கும் படி கேட்பதற்காக சென்றது.

               ஆட்டுக்குக் கூட அளவாய் அளந்து வைத்த நீங்கள் ஏன் எங்களுக்கு இத்தனை நீளம் வைத்துப் படைத்தீர்கள்?”

               கறிக்கு ஆட்டை வெட்டுகிற மனிதர்கள் உன்னை வெட்டாமல் விட்டு வைப்பதற்கு நன்றியாய் கொஞ்சம் வாலாட்டிப் போவதில் உனக்கு என்ன பிரச்சினை?”

               நாய் வாலை நிமிர்த்தவே முடியாது’ என்று திருத்த முடியாத ஜென்மங்களுக்கு உதாரணமாய் எங்களைச் சுட்டிக்காட்டுவது, ரொம்பக் கேவலமாக இருக்கிறது. பத்தாததற்கு அவ்வளவு நீளமாய் நாக்கு... ஓடும் போதெல்லாம் வாய்க்குள் இருக்காமல் தொங்கிக் கொண்டே இருப்பதால், பேராசைக்காரனுக்கு ஒப்பிடவும் எங்களைத்தான் சொல்கிறார்கள்... என்ன பிழைப்பு இது?”

               எல்லாவற்றுக்கும் ஈடு செய்வது போல நன்றியுள்ள ஜீவனுக்கு உதாரணமாக உன்னைத்தானே சொல்கிறார்கள்... அப்புறமுமா குறை?”

               சரி, நாக்கு இல்லாவிட்டால் ஜீவனம் செய்ய முடியாது. இந்த வாலால் என்ன பிரயோசனம்? குறைந்த பட்சம் அது நிமிர்த்தியாவது இருக்கக் கூடாதா?” - நாய்.

               கொஞ்சம் பொறுமையாக ஓரங்கட்டி நில்.. அடுத்த நபர் ஒரு புகாருடன் வருகிறான். அமைதியாகக் கேள்என்றார் கடவுள்.

               மிகுந்த அச்சத்துடன் உள்ளே நுழைந்த முள்ளம்பன்றி கடவுளே எனக்கு ஏன் இந்த முட்கள்?”

               ஒரு பாதுகாப்புக்குத்தான்... அச்சமூட்டும். எவராவது நெருங்கினால் சட்டென்று நிமிர்ந்து நிற்கும் வசதி செய்திருக்கிறேன், அப்புறமென்ன?”

               வளைக்க முடியாமல், நெளிவு சுளிவு இல்லாமல் ஒரு உறுப்பு உடம்பின் மீது இருந்தால் எவர் என்னிடம் நெருங்குவர்?”

               உனக்கு செளகர்யம் தானே?”

               வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாததால் வளர்ப்பு மிருகமாக எவரும் என்னை வைத்துக் கொள்வதில்லை. குழந்தைகளைத் தொட்டு  உணரும் பாக்கியம் எனக்கில்லை. முறைத்துக் கொண்டே இருப்பதால் எங்கள் இனமே அருகிக் குறைந்து விட்டது. பாடப்புத்தகங்களில் மட்டுமே எங்கள் படம் அடையாளத்துக்காக இருக்கிறது. அருங்காட்சியகத்தில் இருப்பதைப் போல...

நாய்க்கு இருப்பதைப் போல வளைந்து நெளியும் வால் இருந்திருந்தால் குழந்தைகள் ரசித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்... எவருமே விரும்பாத வாழ்க்கை அமையப்பெறுவது ஏதோ சாபம் போலிருக்கிறது. சதா முறைத்துக் கொண்டும் விரைத்துக் கொண்டும் இருப்பது பெருமைக்குரிய விஷயமில்லையே?” என்றது முள்ளம் பன்றி.

               சிடுசிடுவென விழுவதும், கடுகடுவென முகம் இருப்பதும் மேலாண்மையின் ஒரு தந்திரமிக்க பாவனை. நிறைய மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.. என்னைப் பார்த்தவுடன் அஞ்சும்படி மேலாடையாக முட்கள் இருப்பதால் நான் சிறந்த மனிதன் போல  ஆவேன் என்று நீதானே வரம் கேட்டாய்? நான் என்ன செய்ய முடியும்?” கடவுள் கைவிரித்து விட்டு நாயை அன்புடன் பார்த்தார். முள்ளம்பன்றி தலை குனிந்து வெளியேறியது

               நாய் நன்றியோடு முன்னைவிட வேகமாக வாலாட்டியபடி ஓடத்துவங்கியது.

 

வெறியாட்டு

    வெறியாட்டு     (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)         ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...