சனி, 16 பிப்ரவரி, 2013

‘இந்த முறை நீ வெடி'


அன்புள்ள அண்ணா,

சப்தமென்றால் உனக்குப் பிடிக்காது. அதனால்தான் ஊரடங்கிய அமைதியான சூழலில் உறக்கமற்ற நள்ளிரவில் உனக்கு இதை எழுதுகிறேன். எப்பொழுதும் விட்டுக்கொடுக்கிறவனாகவே நீ இருந்திருக்கிறாய். சிறுவயதிலிருந்து உனக்கு அது பழக்கமாகிவிட்டது. எடுத்து வந்த சட்டைகளில் எனக்கு எது பிடிக்கும் என யூகித்து, அதை தவிர்த்த மிச்சமிருக்கும் சட்டையை உனக்கு பிடிப்பதாக வலுக்கட்டாயமாக சொல்லிவிட்டு எடுத்துக்கொள்வாய். உனக்கு மிகப்பிடித்தமான வெளிர் பச்சை வண்ணத்தில் வந்த உடையைக்கூட நன்றாகத்தான் இருக்கு, ஆனால் இந்த முறை நீ போட்டுக்கோ என்றாய்.

       செய்து வைத்த பலகாரங்கள் தீர்ந்து போகும் சமயத்திலதான் நீ சாப்பிட கிடைக்கும். கேட்டால் இந்த முறை உனக்கு ரொம்ப பிடித்த ஸ்வீட் நீயே சாப்பிடு என்பாய்.

        உனக்கு விட்டுக்கொடுக்க முயன்று பலமுறை தோற்றுப்போயிருக்கிறேன். சமாதானங்களால் எதையும் சரிகட்டிவிடும் ஆற்றல் உனக்கு.

        மும்பைக்கு நீ சென்ற பின் தொலைபேசியில் பேசும்போது இங்கே ஒரே சத்தம். இரைச்சலாயிருக்கு என்றாய்.ஊசி விழும் சப்தம் கூட உறுத்துவதாய் தோணும் உன்னை, உரலில் இட்டது போல், காலம்  மும்பைக்கு தூக்கி விசிறிவிட்டது.

        சிறு வயதில் வெடிகள் வெடிக்கும்போது, இந்த முறை நீயே வெடி என்று ஒவ்வொன்றாக எனக்கே வெடிக்க கொடுத்துவிடுவாய். நானும் ஆசைஆசையாய் உனக்கு வாய்ப்புத்தராமல் எல்லாவற்றையும் வெடித்துவிடுவேன்.

        என் சுயநலம் தணிந்தது உன் பிரிவுக்குப்பின்.. உனக்கு விட்டுத்தர ஏங்குகிறது மனது. தீபாவளி வரட்டும் இந்த முறை நீ வெடி என எல்லாவற்றையும் விட்டுத்தரலாம் என்றிருந்தேன்.

இடியாய் வந்தது  எவனோ வைத்த வெடிகுண்டு உன்னை பலி வாங்கிய செய்தி

       ‘இந்த முறை நீ வெடி' என்று நான் சொல்ல நினைத்த வாசகம் இப்படியா பலிக்கவேண்டும்?

        இனி வெடிக்கப்போவதில்லை அண்ணா,  எப்போதும் வெடிக்கப்போவதில்லை..ஒரு முறை வெடிதயாரிக்கும் கம்பெனிக்கு சென்று பார்த்துவிட்டு வந்த அதிர்ச்சியில் நீ சொன்ன வாசகம் இப்பொழுதும் நினைவிலிருக்கிறது, ‘ ஒவ்வொரு திரியை பற்றவைக்கும்போதும் ஒவ்வொரு பிஞ்சு விரலை பற்றவைப்பதுபோல் இருக்கிறது' என்றாய்.

        இனி எப்படி வெடிப்பேன்? உனக்கு ஏற்பட்ட நடுக்கம் எனக்கும் வருகிறது. சிறுவயதிலிருந்து சப்தமென்றால் பிடிக்காதென்பதால்தான் அமைதியான இடத்தி உறங்கப்போய்விட்டாய் போலும். நிம்மதியாய் தூங்கு அண்ணா.. இனி வெடிக்கமாட்டேன்.

என்றும் உன் அன்பு தம்பி.

நன்றி: 'சங்கு' இலக்கிய இதழ்.

2 கருத்துகள்:

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...