ஞாயிறு, 3 ஜூன், 2012

பாலை என்றொரு பசுமை



               

        திரைப்படங்களும் தமிழர் வாழ்வும் பின்னிப் பிணைந்திருப்பவை. அதனால் விளைந்த நன்மைகளும் தீமைகளும் வெவ்வேறு அளவுகளால் மதிப்பிடப்பட வேண்டியவை. உலக வரலாற்றில் திரைப்படமென்கிற கலைச்சாதனம் தோன்றிய சில வருடங்களிலேயே தமிழரொருவரால் (வின்செண்ட் சின்னதுரை) அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப்பிறகு தமிழர் வாழ்வின் சகல பகுதிகளிலும் இன்றுவரை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவை திரைப்படங்களே. ஆனால், உலகத் திரைப்படங்களின் பாய்ச்சலோடு ஒப்பிட்டால் நமது திரைப்படங்களின் போக்கும் நோக்கும் மிகப் பின் தங்கியிருக்கின்றன. இந்த மதிப்பீடு தமிழர்களின் திறமை மற்றும் ரசனை சார்ந்தவையல்ல. திரைப்படத் துறையில் நுழைந்த அரசியலும், திரைப்படங்கள் அரசியலில் நுழைந்ததும் தான் காரணம்.
       உலகத் தரத்தில் திரைப்படமென்பது, தொழில்நுட்ப பிரம்மாண்டங்களை கணக்கிட்டே நம் மனம் பழகிவிட்டது. ஹீரோயிசம் விரவிக் கிடக்கும் திரைப்படச் சூழலில், உலகளவில் தரப்படும் திரைப்பட விருதுகளையும், ஏதேனுமொரு கதாநாயகன் வென்றெடுத்து வருவான் என்கிற மனோபாவம் பெருகிவிட்டது.
        உலகத்தரமென்பது கதாநாயகர்களின் அசாத்தியத் திறன்களை முன்னிறுத்துவதாலோ, கருவிகளின் அதிநுட்ப வெளிப்பாடுகளாலோ நிர்ணயிக்கப் படுவதில்லை. உலகின் மிகச் சிறந்த திரைப்படங்கள் உன்னத இலக்கியப் பிரதிகளின் காட்சி வடிவமாகவோ, வரலாற்றைப் பதிவு செய்யும் அக்கறையை அடிப்படையாகக் கொண்டவை என்பது உலகத் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் அறிவர்.

இந்த சூழலில் சமீபத்தில் ‘செம்மை வெளியீட்டகம்' சார்பில் தயாரிக்கப்பட்டு வெளிவந்திருக்கும் ‘பாலை' திரைப்படம் பல்வேறு வகைகளில் தமிழ்த் திரைப்படத்தை நகர்த்திச்செல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

      
         தமிழ்த்திரையுலகம் இதுவரை பதிவு செய்யாத வரலாறு என்பதோடு எவரும் துணிந்திராத முயற்சி ‘பாலை'. மற்ற விமர்சனங்களைப் போல இது இந்தத் திரைப்படத்தின் கதை பற்றிப் பகிரும் போக்கில் எழுதப்பட்ட கட்டுரையல்ல. திட்டமிட்டு வேண்டுமென்றே கவனிக்கப் படாத ஒரு திரைப்படம் பற்றிய குமுறல்.
        பாலை ஒரு இனத்தின் வரலாற்றை பதிவு செய்யும் ஆவணம் மட்டுமல்ல. வந்தேறிகளால் இன்னும் சிதைந்து கொண்டிருக்கும் நம் இனம் பற்றிய எச்சரிக்கையும் கூட. தமிழ், தமிழ் சமூகம், இன வரலாறு பற்றிப் பேசுவது இன்றைக்கு அறிவுஜீவித் தனமில்லை என்ற பிற்போக்கான மனப்போக்கு நிலவுகிறது. அழித்தொழிப்பு சகல வழிகளிலும் நிகழ்கிற போது 'கள்ள மெளனம்' சாதிக்கும் மெத்தப் படித்தவர்கள்,' வலி'யால் துடித்துக் குரலெழுப்பும் போது ஆவேசமாக நம் குரல்வளையை நெரிக்கும்  அராஜகம், மனிதத் தன்மையற்ற மற்றொரு படையெடுப்பாகவே கருதமுடியும். எனவே தான், 'பாலை' ஒரு பதிவு மட்டுமல்ல. அவசியமான 'கலை போரும்' கூட.
       
           இயக்குநர் செந்தமிழன் வணிக நோக்கோடு திரையுலகுக்கு வந்த வியாபாரியல்ல. தஞ்சையைச் சார்ந்த இயற்கை வேளாண் விவசாயி, நல்ல கவிஞர், தமிழிய ஆய்வாளர், பத்திரிகையாளர். அவரது 'பாலை', மேலோட்டமாகப் பார்த்து விட்டுக் கடந்துவிடக் கூடிய படைப்பு அல்ல. மிகச் சரியாக அடையாளப்படுத்தப் படவேண்டிய திரைப்படம்.
        வந்தேறிகளால் ஆயக்குடியிலிருந்து அப்புறப்படுத்தப்படும் தமிழ் சமூகம் ஒரு பாலை நிலத்தை முல்லைக் குடியாக மாற்றியதோடு, இழந்த ஆயக்குடியை மீட்டெடுக்கும் போருக்கு தள்ளப்பட்டனர் என்பதுதான் பாலையின் ‘ஒருவரி'க்கதை.
        ஆனால், பாலையின் உள்ளீடாக செந்தமிழன் முன்வைக்கும் பல செய்திகள் தமிழ்ச் சமூகம் அறிந்து விடாமலிருக்க, மிகச் சாமர்த்தியமாக புறக்கணிக்கப் படுகிறது.
        சிந்துவெளிச் சமூகமென்பது தமிழ்ச் சமூகமே என்பதை செந்தமிழன் தனது கட்டுரைகள் வழி பல சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார். பாலைத் திரைப்படத்தில் காட்சிகள் வழி அதனை உறுதி செய்கிறார்.
         ஆதிதமிழர்களிடையே வேள்விகளில்லை. சடங்குகளில்லை. மத நம்பிக்கைகளில்லை. அதுபோல தமிழர்களுக்கென்று மிகச் சிறந்த பண்பாடு, கலாச்சாரம் இருந்தது. எனவே, அதனைக் கட்டிக் காக்க வேண்டிய கடப்பாடு இருந்ததால், தமிழர்களின் போர்முறையென்பது தற்காப்பதாகவே இருந்ததே ஒழிய, அழித்தொழிப்பாக இருந்ததில்லை. அத்துடன், பெண்கள் எல்லா நிலைகளிலும் சமமாக நடத்தப் பட்டனர். தமிழர்களின் இயற்கை சார்ந்த அறிவும், சமயோசித புத்தியும் பறந்துபட்டது என்பது மறுக்க முடியாது.
        பாலைத் திரைப்படத்தில் வரும் காட்சிகள், தமிழ்ச் சமூகத்தின் ஆதிகால வாழ்வை அழகாகப் பதிவு செய்திருக்கின்றன.
        முல்லைக்குடி நிலப் பகுதியில் மீன் வளம் பெருக, இயற்கை அன்னையை வழிபடும் காட்சியும், வலன் - காயாம்பு திருமணக் காட்சியும், வேள்விகளும் சடங்குகளும் பிற்காலத்தில் புகுத்தப் பட்டவை என்பதை உணர்த்துகின்றன. செந்தமிழன் வெறும் கேள்விஞானத்தில் இந்தக் காட்சிகளை வைக்கவில்லை. தனது கட்டுரையொன்றில் (‘காட்சி' இணையதளம்) வைகை ஆற்றங்கரையில் அந்தணர்கள் வளர்க்கும் வேள்வித் தீயில், ஆற்றில் குளித்து விளையாடிய இளம் தமிழ்ப் பெண்கள் தங்கள் ஆடைகளை உலர்த்தியதாக பரிபாடலின் பாடலொன்றைக் குறிப்பிடுகிறார்  செந்தமிழன்.
          “விரிநூல் அந்தணர் விழவுத் தொடங்கப்
           புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப...”
                                                                  -பரிபாடல் - 11
         வேள்வித் தீயென்பது ஆதிகால தமிழ்ச் சமூகத்தில் கேலிக்குரிய ஒன்றாகவே இருந்திருக்கிறது.
        போர் குறித்து முதுவனும், விருத்திரனும் உரையாடும் காட்சி மிக முக்கியமான காட்சி. 'போரென்பது என்ன?' என்று முதுவன் கேட்கும் போது, விருத்திரன், 'எதிரியைத் தாக்குவது' என்று பதிலளிக்கிறார். இது தமிழரின் மனப்போக்கில் வெளியாகும் இயல்பான பதில். ஏனெனில், தமிழர்களைப் பொறுத்தவரை போரென்பது தங்களைத் தாக்க வரும்போது மட்டும் திருப்பித் தாக்குவது. எனவேதான், முதுவன் திருத்துகிறார்: 'எதிரியைத் தாக்குவதல்ல; வீழ்த்துவது' என்று முதுவனின் அடுத்த கேள்வியான 'போரில் ஆயுதங்கள் எதற்கு?' என்பதற்கு விருத்திரன், 'தற்காப்புக்கு' என்று பதிலளிக்கிறார். மறுபடியும் முதுவன் திருத்துகிறார்... 'தற்காப்புக்கல்ல; அழிப்பதற்கு' என்று.
        தமிழ்ச்சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அடிமை முறை இல்லை. என்பதை பின்னணிக் குரல் மூலம் வலியுறுத்தும் செந்தமிழன், காட்சிகள் வழியிலும் இதைப் பதிவு செய்திருக்கிறார். வந்தேறிகள் முல்லைக் குடி மீது வன்மம் தீர்க்க, வலனைக் கடத்திச் சென்று அடிமையாக வைத்திருக்கின்றனர். ஆனால், வலனை மீட்க, முல்லைக்குடி மறவர்கள் ‘ஆநிரை கவர்தல்' (பசுக்களைக் கவர்தல்) உத்தியைப் பின்பற்றுவதோடு, அவைகளை பாதுகாக்கவும் செய்கின்றனர்.
        அதுபோல வந்தேறிகளின் உற்பத்தித் தொழிலென்பது மேய்த்தலாக இருக்கிறது. குடியிருக்க வீடு கட்டத் தெரியாத, கூடாரம் அமைத்து தங்கும் கூட்டமாகவும், மாட்டை அறுத்துத் தின்னும் வழக்கமும் கொண்டவர்கள் என்பதைக் காட்சிப் படுத்தும் செந்தமிழன், முல்லைக்குடி மக்கள் குடியிருக்க வீடு கட்டும் அறிவும், வேளாண் தொழில் செய்து உண்ணும் பழக்கமும் (பாலை வந்தால் திங்க சோறு இருக்காது, குடிக்க தண்ணீர் இருக்காது என்று முதுவன் ஒரு காட்சியில் எச்சரிக்கிறார்) உடையவர்களென்பதைத் தெளிவுபடுத்துகிறார். கூடாரம் அமைத்து வாழ்பவர்கள் என்பதால் போரென்று வந்தால், வந்தேறிகள் எதையும் கட்டிக் காக்கவேண்டிய நிர்பந்தமில்லாமல் அழித்தொழிக்கும் உத்தியைக் கையாள்கிறவர்கள் என்பது மறைமுகமான மற்றொரு செய்தி.
        என்றாலும், போரென்று வந்துவிட்டால், தமிழர்கள் பின்பற்றும் உத்திகள் யுத்த தந்திரத்தின் உச்சங்கள் என்று புலப்படுத்தும் காட்சியையும் வைத்துள்ளார். புகைவழி செய்தி பரிமாற்றம், காலடித் தடம் மூலம் திசை திருப்பல், தேளையும் ஆயுதமாகப் பயன்படுத்தல், நெருப்புக் கணைகளை எறியும் திறன் என்று பல விதத்தில் ஆரவாரமில்லாமல் எளிமையாக அடையாளப் படுத்தியிருக்கிறார்.
         ஈழப் போரில், தனியொருவனாக மாட்டிய சிறுவனொருவன், தன்னைச் சுற்றி வளைத்த எதிரிகளை திசைதிருப்ப தன்னை சுற்றிலும் ஆயுதங்களை மட்டும் வைத்துவிட்டு (பல வீரர்கள் தன்னுடன் இருப்பது போல் பொய்யாக உருவகித்து) அவர்களை அச்சத்தின் வழி ஓட வைத்ததாக ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன். செந்தமிழன் பாலை திரைப்படத்தில் சமயோசிதமாக இப்படியொரு காட்சியை வைத்துள்ளார்.
         பெண்களின் நிலை அன்றைய கால கட்டத்தில் மேம்பட்டதாக இருந்தது என்பதை உணர்த்தும் விதமாக, போர் செய்யும் பயிற்சி எடுத்தலையும், ஆண்களை தோழர்களாக பாவிக்கும் வழக்கத்தையும், கள்ளருந்துதலையும், உடன்போக்கு என்னும் புரிந்துணர்வு காதலையும், மன்றக் கூட்டங்களில் பங்கேற்று கருத்துக்களை பகிரும் சமநிலை ஆகியவற்றையும் காட்சிப் படுத்தியிருக்கிறார் செந்தமிழன்.
 பாத்திரங்களுக்கான பெயர் சூட்டலில், ஒரு தேர்ந்த படைப்பாளியாக நான் செந்தமிழனைக் காண்கிறேன். சிந்துவெளித் தமிழர்கள் தங்கள் தலைவனாக இருப்பவனை ‘விருத்திரன்' என்றழைப்பது தான் வரலாறு. நீர்நிலை காப்பவன் ‘அகி'. வந்தேறிகள் முதலில் கொல்வது ‘அகி' என்ற முல்லைக்குடி வீரனைத்தான். வந்தேறிகளின் பழக்கம் முதலில் எதிரியின் நீர்நிலையை அழிப்பது என்பது இதன்மூலம் சொல்லாமல் சொல்லப்பட்ட தகவல்.
          ஆனால் வந்தேறிகள் தங்கள் தலைவனை ‘இந்திரன்' என்றே குறிப்பிடுவர். செந்தமிழனோ அவனுக்கு ‘அரிமாவன்' என்று பெயரிட்டிருக்கிறார். திரைக்கதையாளர் செந்தமிழன் ஏன் அவனது பெயரை மாற்றினார் என்பது படம் பார்த்து முடித்தபிறகு எல்லோருக்கும் புரிந்துவிடும். அதுபோலவே அரிமாவன் தமிழ் உச்சரிப்பு, தமிழல்லாத பிறமொழியினர் பேசுவது போல அமைத்திருப்பது இயக்குநர் செந்தமிழனின் சாமர்த்தியம்!
         
        முதுமக்கள் தாழி, தமிழ் எண்கள், இயற்கையை வைத்துக் குறிசொல்லல் எனப் பல தகவல்களை போகிற போக்கில் செந்தமிழன் காட்சிப்படுத்தியுள்ளார்.
          செந்தமிழனின் படக்குழு செம்மையான குழுவாக அமைந்திருப்பது தமிழ்த்திரையுலகுக்கு நல்ல செய்தி. அபிநந்தனின் ஒளிப்பதிவு, படம் துவங்கிய காட்சியிலிருந்து இறுதி வரை நெஞ்சை அள்ளுகிறது. ‘கொல்லேறே' பாடலில் பாத்திரங்களோடு குதியாட்டம் போட்டு கூடவே ஓடும் கேமரா, மன்றக் கூட்டத்தில்  பல்வேறு அண்மைக் காட்சிகள் மூலம் முதுவனின் உணர்வுகளைப் பதிவு செய்கிறது.  பல சமயங்களில் பயிர்களின் ஊடே சென்று காட்சியை பசுமையாகப் பதிவு செய்திருக்கிறார்.
 வேதிசங்கரின் பின்னணி இசையும் செந்தமிழனின் பாடல்வரிகளும் படத்திற்கு மிகப் பெரிய பலம். ‘கொல்லேறே', ‘யாதோ யாதோ' பாடல்கள் படமாக்கப் பட்ட விதமும் இசையும் கண்களை உறுத்தாத செவிகளைக் கெடுக்காத இனிமை.
       முதுவனாக வரும் பேராசிரியர் வை. நடராசன், காயாம்பூவாக வரும் ஷம்மு, விருத்திரனாக வரும் இளையராஜா ஆகியோர் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக வை.நடராசனின் முகபாவங்களும், உடல்மொழியும் ஒரு தேர்ந்த கலைஞனின் வெளிப்பாடுகளுக்கு இணையானது.
        திரைப்படத்தில் ஒரு சிலர் இயல்பாக நடிக்க முடியாமல் சிரமப்படுவதும், ஒலிப்பதிவில் சில தடுமாற்றங்களும் சிறு குறைகளாகத் தெரிந்தாலும் தமிழ் என்றொரு இனத்தின் வரலாற்றை  பதிவு செய்த விதத்தில் உலகத் தரத்திலொரு தமிழ்த்திரைப்படம் என்று ‘பாலை'யைக் கொண்டாடலாம்.
         செந்தமிழன் ‘நமது மரணம் குறித்து...' என்ற கவிதையில்,
              “இனம், மொழி, போர் ஆகியவை
               விஷம் தடவிய சிறு முட்களை
               உங்கள் முதுகில் குத்துவது போல
               வலிகொடுத்துக் கொல்லும்...” என்று எழுதியிருப்பார்.
         சமகால சூழலில் தமிழினத்துக்கு எதிரான நிகழ்வுகள் அன்றாடம் நம்மைக் கொன்றபடியிருக்கின்றன. ஆறாத காயங்களோடு அழுகிறது மனம். என்று ஆறுமோ... மாறுமோ... என்று தெரியாவிட்டாலும் ‘பாலை' மருந்திட்டிருக்கிறது

6 கருத்துகள்:

  1. என் விகடனில் தங்கள் வலைப்பூ அறிமுகப்படுத்தப் பட்டமைக்கு வாழ்த்துக்கள் , மேலும் தொடரவும் .

    இணையத் தமிழன்,
    http://www.inaya-tamilan.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. அழித்தொழிப்பு சகல வழிகளிலும் நிகழ்கிற போது 'கள்ள மெளனம்' சாதிக்கும் மெத்தப் படித்தவர்கள்,'

    நிஜமான வார்த்தைகள்... மெத்தப் படித்தவர்கள் என்று இந்த சமூகம் நினைக்கின்றவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்...

    உங்களுடைய பல திரைப்பட விமர்சனங்கள் படித்திருக்கும் எனக்கு, இந்த கட்டுரை வலியைத் தந்தது. கொலவெறிப் பாடல்களைப் பிரபலமாக்கும் ஊடகங்கள் இது போன்ற நல்ல படங்களைப் பற்றி சிந்திப்பதில்லை....

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி பிரியா ... தமிழில் மிக சிறந்த முயற்சி பாலை..உங்களுக்கு உள்ள அதே ஆதங்கம் தான் என்னையும் இந்த கட்டுரயை எழுத தூண்டியது

    பதிலளிநீக்கு
  4. கனமானேன் படித்து, கண்டுனரும்போது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜெயஜோதி. படத்தை திரையிட உரிய திரை அரங்குகள் இன்னும் கிடைக்கவில்லை என்பது வேதனையான இன்றைய தமிழ் சூழல்...

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...