வியாழன், 8 மார்ச், 2012

பேசாமல் பேச வைக்கும் படம் ‘The Artist'

              ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-மார்ச் மாதங்கள் பிறக்கும் சமயங்களில் சினிமா உலகில் ‘ஆஸ்கார் ஜீரம்' பற்றிக் கொள்ளும். அறிவிக்கப்படும் வரை இந்தியாவில், ஆஸ்கார் விருதுகள் பரவலான கவனத்தைப் பெறுவதில்லை.
      
        காரணம் ஆஸ்கார் வரை பயணிக்க இந்தியாவுக்கு தெம்பு இல்லையென்பதா? அல்லது வாய்ப்பு குறைவு என்பதா?
        
        இரண்டாவது காரணம்தான் உண்மை. ஆஸ்கார் விருதுகளின் அடிப்படை விதிகள் பற்றி அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதான தகவலில்லை.
 ஆஸ்காரின் நேரடி விருதுகள் பெற ஆங்கிலப் படங்கள் மட்டுமே பரிசீலிக்கப் படுகின்றன. அத்துடன், அமெரிக்காவின் ஒரு சில திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்பது இன்னொரு விதி.
        
        ஆங்கிலம் அல்லாத பிறமொழித் திரைப்படங்கள், சிறந்த அயல்மொழித் திரைப்படங்களுக்கான விருது பெற மட்டுமே அனுமதிக்கப்படும்.
 ஆஸ்கார் என்னும் கவர்ச்சிகரமான மாளிகையின் ஒரேயொரு வாசல் மட்டுமே நமக்கு திறந்து வைக்கப் பட்டிருக்கிறது. பிரதான வாசல்களில் ஆங்கிலப்படங்கள் மிக வசதியாக நுழைந்து கொண்டிருக்கின்றன. எல்லா நாடுகளில் இருந்தும் நுழைய முற்படும் நெரிசல்களில் நாம் பரிதாபமாக விழி பிதுங்கி நிற்கிறோம். எனவே நசுக்கப்படுவதற்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கனவுகளோடு நாம் காத்திருக்கிறோம்.
       
        ஆஸ்கார் என்ற அமைப்பில் ஐயாயிரத்து சொச்சம் உறுப்பினர்கள். இவர்கள் பெரும்பாலும் ஹாலிவுட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்ற இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள். இவர்களின் அதிகப்படியான வாக்குகள் பெற்ற படங்களில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். ஏழுகடல் தாண்டி ஏழு மலை தாண்டி மறைந்திருக்கும் ரகசியத்தினை தேடுவதுபோல மிகக் கடினமான செயலாகும்...
       
        வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுதானே... பிரெஞ்சு இயக்குநர் மைக்கேல் ஹஸன்விசியஸ் எல்லா வாசல்களையும் தவிர்த்துவிட்டு சாமர்த்தியமாக ஜன்னல் வழியாக ஆஸ்காரின் இரும்புக் கோட்டைக்குள் குதித்து விட்டார்.
      
        அவரது  The Artist  திரைப்படம் வசனங்களற்ற மெளனமொழித் திரைப்படம். எனவே, அது எந்த மொழிப் போட்டிக்கும் தகுதியான படம். ஆஸ்கார் விருது இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஐந்து படங்களில் ஒன்றாக ‘The Artist' அமைந்து விட்டது. பொதுவாக பரிந்துரைப் பட்டியலில் (Nominetion list) இடம் பெறுவதே ஆஸ்கார் விருதுக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது. இந்த படம்தான் ஆஸ்கார் விருது பெறபோகிறது  என்று பல பிரபல விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படும் படமாக இருக்கிறது.
      
          பிரெஞ்சு இயக்குநர் மைக்கேல் ஹஸன்விசியஸ் மிக புத்திசாலித்தனமாக படத்தின் கதை ஹாலிவுட்டை சார்ந்து நடப்பதாக அமைத்து விட்டார்.
 கதை, சலனப்படங்கள் தயாரிக்கப்பட்ட 1927-ல் நடப்பதாக துவங்குகிறது. ஜார்ஜ் வேலண்டின் என்பவர் பிரபலமான ஹாலிவுட் நடிகர் இவரது ஆதரவில் திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார், பெப்பி மில்லர் எனும் நடிகை.

         மெளன மொழியிலிருந்து உரையாடல் பின்னணியில் தயாராகும் மாற்றத்தை நோக்கி திரையுலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மாற்றத்தோடு ஒத்துப் போக முடியாத ஜார்ஜ் மெல்ல, மெல்ல நட்சத்திர அந்தஸ்தை இழந்து தனிமனிதனாகிறார். பட வாய்ப்புகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, தன்னுடைய வீடு, கார் முதலியவற்றை விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
      
         பெப்பி மில்லரோ பேசும்படங்களில் பிரபலமான நடிகையாக உருவெடுக்கிறார். தன்னுடைய பிரபல்யத்தை பயன்படுத்தி, நொடித்துப் போயிருக்கும் ஜார்ஜ் வேலண்டினுக்கு வாய்ப்பு பெற்றுத் தருகிறார். நடனக் கலைஞராக புது அவதாரமெடுக்கிறார் ஜார்ஜ்.

         மிக மெல்லிதான நூலிழை போன்ற கதை. ஆனால், அதனை தன் திறம் மிக்க திரைக்கதையினாலும், படமாக்கிய விதத்தினாலும் பிரமாதப் படுத்திவிட்டார் இயக்குநர் மைக்கேல் ஹஸன்விசிலஸ்.
        
        1927 காலத்திய உடைகள், அரங்குகள், பாவனைகள் என்று எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி பார்ப்பவர்களை அந்த காலத்துக்குள் இழுத்துச் செல்கிறார். படம் கறுப்பு வெள்ளையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உலக சலனப் படங்களுக்கான மெளன அஞ்சலி என்று சினிமா நோக்கர்கள் இந்தப் படத்தைப் பாராட்டியிருக்கிறார்கள்.
      
        இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி, 2011-ல் வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது.  பரிசு பெறப் போகிறவர் யார் என்று அன்றைக்குத் தெரிந்துவிடும்.
      
        சிறந்த படத்துக்கான இவ்வாண்டின் பரிந்துரைப்பட்டியலில்,  ஸ்டீவன் ஸ்பீல்பர்க்-ன்  ‘War Horse', மார்ட்டின் ஸ்கார்சசியின் ‘The Hugo' உட்பட எட்டு படங்கள் ‘The Artist' படத்துடன் போட்டியில் இருக்கின்றன.
      
        சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான போட்டிக்கு இந்தியாவிலிருந்து மலையாள திரைப்படம் ‘ஆதாமிண்டே மகள் அபு' அனுப்பப்பட்டிருந்தது. சலீம்குமார், சரீனா வகாப், நெடுமுடி வேணு, கலாபவன் மணி, முகேஷ் போன்ற முக்கிய மலையாள நடிகர்கள் நடித்த இந்தப் படத்தின் கதையும் மிக எளிமையானது. அத்தர் விற்கும் அபி, ‘ஹஜ்' பயணம் செல்ல நீண்ட காலமாக பணம் திரட்டுகிறார். கிளம்புகிற நேரத்தில் செலவிற்காக வரும் பணம் நல்ல வழியில் வரவில்லை என்று அறிந்து பயணத்தைத் தவிர்க்கிறார் அபு.
        
        விருதுக்கான  பரிந்துரைப் பட்டியலில் பெல்ஜியம் நாட்டின்  ‘Bull Head', இஸ்ரேலின்  ‘Foot Note', போலந்தின் ‘In Darkness', கனடாவின் ‘Monsiear Lazhar', ஈரானின் ‘A seperatim' ஆகியன தேர்வு பெற்றுள்ளன. ‘ஆதாமிண்டே மகன் அபு' தேர்வாகவில்லை.
         
         84 ஆண்டுகால ஆஸ்கார் வரலாற்றில் இதுவரை மூன்று இந்தியப் படங்கள் மட்டுமே இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றன. நர்கீஸ் நடித்த ‘மதர் இந்தியா', மீரா நாயரின் ‘சலாம் பாம்பே', அமீர்கானின் ‘லகான்' ஆகியவை அவை.
       
         A.R. ரஹ்மான், ரசூல் பூக்குட்டி உட்பட இதுவரை ஆஸ்கார் விருது பெற்ற இந்தியர்கள், அவர்கள் பணியாற்றிய ஆங்கிலப் படங்களின் மூலம் பெற்றனர். சத்யஜித்ரே மட்டும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். இதுவொரு கெளரவ விருது.
       
        இந்தியப்படங்கள் விருது பெறாமல் போனதற்கு ‘தரம்' மட்டும் காரணமல்ல. விருதுக்கு அனுப்பப்படும் படங்களை வாக்களிப்பவர்களுக்குத் திரையிட்டுக் காண்பித்து, அவர்களின் கவனத்தை ஈர்க்க ஆகும் செலவு, படத்தயாரிப்பு செலவை விட அதிகமாக ஆகிவிடுகிறது என்பதும் ஒரு காரணம்.
       
         இப்படியான இக்கட்டான சூழலில் மைக்கேல் ஹன்ஸ்விசியஸின் சமயோசிதமான அறிவு 'The Artist ' படத்தை ‘மெளன மொழிப்' படமாக உருவாக்க யோசித்திருக்கிறது. ‘பேசாமல்' எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், உலகத்தைப் பேச வைக்குமா என்பது பிப்ரவரி 26-ல் தெரிந்துவிடும்.

(இக்கட்டுரை ஜனவரி கடைசியில் 'அனுபவம்' முதல் இதழுக்காக எழுதி அனுப்பப் பட்டது. பிப்ரவரி கடைசியில்    'The Artist ' ஆஸ்கர் விருது பெற்றது அறியவந்தபோது மனம் மகிழ்வடைந்தது )

நன்றி: 'அனுபவம்' மாத இதழ், மார்ச் 2012 

3 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா, நலமா ?
    பல நாட்களுக்கு பிறகு தங்களது வலையுலகுக்கு வருகிறேன்..வாசகனாக மீண்டும் ஒரு முறை மகிழ வைத்துவிட்டீர்கள்.
    எவ்வளவு சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்..இன்னும் கொஞ்சம் நீளக்கூடாதா என்ற எண்ணத்தை படித்து முடிக்கும் தருணம் மனதுக்குள் சொல்லவைத்துவிட்டீர்கள்..ஒவ்வொரு எழுத்தும் சுவையாக இருக்கிறது.

    எப்போதும் சொல்வது போலதான், தங்களை போல விமர்சனங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் உண்டு.ஆனால், எனக்கு அவ்வளவு திறமை கிடையாது..இந்திய சினிமா, ஆஸ்கர், மொழிகள் என்று பல அறிந்திராத தகவல்களை தந்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அடிக்கடி எழுதுங்கள், நன்றிகளோடு குமரன்.

    Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி குமரன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ...

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு! நேரமிருந்தால் களஞ்சியம் எனும் பதிவையும் பாருங்கள். நன்றி!

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...