திங்கள், 14 பிப்ரவரி, 2011

வாசிப்பை நேசிப்போம்(‘ஃபாரன்ஹீட் 451' )

 கதை :

ராய் பிராட்பரி

திரைக்கதை, இயக்கம்  : 
ஃபிரான்காய்ஸ் ட்ரூஃபெட்

இசை : 
பெர்னார்ட் ஹெர்மன்

ஒளிப்பதிவு
நிக்கோலஸ் ரோ
     எதிர்காலம் பற்றிய கற்பனை என்றால் எல்லோருமே ‘புதுவகையான' இயந்திரங்களைப் படைக்கும் முனைப்பில் இறங்கி விடுவர். தங்கள் மனதில் சிறகடிக்கும் அத்தனை நிறைவேறாத ஆசைகளையும், விபரீதங்களையும் நிறைவேற்றும் அதியற்புத இயந்திரங்களை, விலங்குகளைக் கற்பனையில் உருவாக்கித் தீர்த்துவிடுவர்.

     ஆனால், மனித மனம் கால ஓட்டத்தில் எப்படி வக்கிரமடையும், அதன் விளைவுகள் எப்படியெல்லாம் மற்றவர்களைப் பாதிக்கும் என்பது பற்றிய கற்பனை வெகு அரிதே...


திங்கள், 7 பிப்ரவரி, 2011

The Story of Weeping Camel



பொதுவாக காட்சிக் கலை வடிவங்களை திரைப்படங்கள், விவரணப்படங்கள், குறும்படங்கள் என்று தான் வகைப்படுத்துவார்கள். இந்த வரிசையில் சேர்க்க வேண்டிய இன்னொரு பிரிவுமிருக்கிறது. அது விவரணக் கதைப் படம் (Docu.drama) என்று குறிப்பிடலாம். முழுக்க முழுக்க கற்பனை சார்ந்த திரைப்படங்கள், குறும்படங்கள் இது போல உருவாக்கப் படுகின்றன. கால அளவு மட்டும் வித்யாசம். விவரணப்படங்கள் (Documentry film)குறிப்பிட்ட வரலாற்றைப் பதிவு செய்பவையாக இருக்கும். அது தனி மனித வாழ்க்கை வரலாறாகவோ இடம், சம்பவம், பொருளென்று ஏதேனும் ஒன்றை மையப்படுத்தி நேரடியான தகவல்களைத் தருபவை. விவரணப்படங்கள் பல சமயம் தட்டையாக அமைந்துவிடும் அபாயமிருக்கிறது. சொல்லப்படும் விஷயம் குறித்து எவர்க்கு ஈடுபாட்டுடன் ஆர்வமிருக்கிறதோ அவர்களால் தான் அவற்றை சலிப்பேற்படாமல் பார்க்க இயலுமெனில் பதிவு செய்யப் பட்ட ஆவணங்கள் வெறுமனே காப்பகங்களில் அடைபட்டுக் கிடப்பதுதான் நியதியா?

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மறக்கப் பட்ட மகாத்மாவின் அஸ்தி! (Road to Sangam)


             பயணங்களின் போது ஒரு ஊர் வந்துவிட்டதை உணர்த்த முன்பெல்லாம் பெயர்ப் பலகைகள் மட்டுமிருந்தன. இப்பொழுதெல்லாம், சாலையின் இருமருங்கிலும் டிஜிட்டல் பேனர்கள் ‘சொல்லவே கூச'த் தகுந்த பட்டங்களைச் சுமந்தபடி உள்ளூர் உருப்படிகளும், தேசியத் தலைவர்களும்...

வியாழன், 9 டிசம்பர், 2010

ஊர்ப்பாசம்

ஒவ்வொரு தேசமும் தனக்கென்று அருங்காட்சியகங்கள் வைத்திருப்பது போல, ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒர் அருங்காட்சி அறையை அவரவர் வீட்டில் அவரவர் வச்திக்கேற்ப வைத்துக்கொண்டால் என்ன என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.

கோலிக்குண்டுகளின் கனம் தாங்காமல் கிழிந்து தொங்கிய ட்ரவுசர், ஒளிந்து பிடிக்கும் விளையாட்டில் விழுந்து தேய்த்த முழங்கை சிராய்ப்புக்குத் துணையாய் நைந்து போன முழுக்கை சட்டை, அம்மை குத்தியது போல ‘ஆக்கர்கள்' நிறைந்த பம்பரம், உருட்டி உருட்டித் தேய்ந்து போன தாயக் கட்டைகள் என்று... (இப்படி உங்களிடமும் ஒரு பட்டியல் இருக்கலாம்)

பால்யத்தின் ஒவ்வொரு துளியும் தளும்பி சிந்தாமல் இன்னமும் நினைவில் நிரம்பி வழியும் என் ஊர் தஞ்சை மாவட்டத்தில் பந்தநல்லூர் செல்லும் வழியிலுள்ள கீழக்காட்டூர்.. மலைகளோ, குன்றுகளோ கூட இல்லாத தஞ்சை மாவட்டத்தில்தான் தமிழ்நாட்டின் தலைச்சிறந்த சிற்பக்கலைக்கு அடையாளங்களாக பிரகதீஸ்வரர் ஆலயம், தாராசுரம் கோயில்கள் இருப்பது எப்படி பேரதிசயமோ அது போல அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சையில்தான் மூன்று மதங்களின் அடையாளங்களான வேளாங்கன்னி தேவாலயம், நாகூர் தர்க்கா, தஞ்சை பெரிய கோயில் இருந்தன.. ஆனால் ஒரு போதும் மதக்கலவரங்கள் நிகழாத மாவட்டம் தஞ்சைதான்...

கிராமங்கள் தான் நம் பண்பாட்டின், கலாச்சாரத்தின் அழிக்க முடியாத அடையாளங்கள். வெறும் கொண்டாட்டங்களோடு முடிந்து விடுவதில்லை கிராமத்தில் அனுசரிக்கப் படும் பண்டிகைகள். அவை நம் வாழ்வியல் சூழலோடும், ஒவ்வொருவர் மனதோடும் பின்னிப் பிணைந்திருப்பவை. கிராமங்களில் பண்டிகைகள் பெரியவர்களுக்கு வேண்டுமானால் மதச் சம்பிரதாயங்களாய் இருக்கலாம், ஆனால் குழந்தை பருவத்தினருக்கு எல்லாமே கொண்டாட்டங்கள்தான்...

காட்டூர் என்றாலே காளியாட்டம்தான் நினைவுக்கு வரும் சித்திரை மாதங்களில் ஊர்ப் பெரியவர்களால் தீர்மனிக்கப்படும் அந்த திருவிழாவில் களி வேஷம் போடுவதற்காகவே பிரத்தியேகமான நபர்கள் இருப்பார்கள். தெரு தோறும் ஆடிக்கொண்டெ செல்லும் காளி வீடு தோறும் சென்றமர்ந்து ஆசுவாசமாய் ஆசிர்வாதம் செய்துவிட்டுப் போகும் மூன்றுநாட்களுக்கு குறையாமல் நடக்கும் அந்தத் திருவிழா முடிந்து, சிறுவர்கள் வாழை மட்டைகளை கொண்டு கை, கால் பட்டைகளாக்கி முகமும் தயாரித்து அட்டைக் கத்திகளோடு காளியை பிரதியெடுத்து ஆடுவது பெரியவர்களுக்கு கிடைக்கும் உபரி தரிசனம்.

பொங்கலை விட மாட்டுப் பொங்கல்தான் சிறுவர்கள் மத்தியில் பிரசித்தம் குறைந்தபட்சம் ஒரு பசுவும் கன்றாவது தங்கள் பால் தேவைக்காக கிராமங்களில் அப்போதெல்லாம் இருக்கும். தங்களின் பிரத்தியேக பிரியத்துக்குரிய மாட்டையோ, கன்றையோ நெட்டி மாலைகளாலும், கொம்புகளில் நெட்டி குஞ்சலங்களலாலும் அலங்கரிப்பதில்தான் எத்தனை நேர்த்தியிருக்கும்!! ஆனால் இன்று அதே கிராமங்களில் பராமரிக்க சோம்பல்பட்டு அவரவர் கைகளில் பாலித்தீன் பாக்கெட் பால்... இருக்கும் ஒன்றிரண்டு வண்டி மாடுகளுக்கும் கொம்புகளில் கட்சிகளின் வண்ணம் தீட்டி உறுப்பினர் அட்டை இல்லாத அங்கத்தினர் ஆக்கிவிட்டனர். ‘யாருடையது' என்ற பேதம் இல்லாமல் கைகளை நீட்டினால் வாஞ்சையோடு நாவால் வருடும் செல்லப்பிராணியாய் இருந்த அந்த ஜீவன்களை, இன்று எதிர்கொள்ள அச்சப்படும் அளவுக்கு எதிரிகளாக்கிவிட்டனர்..

ஆடிப்பெருக்கு தினத்தில் ‘சப்பரம்' என்று அழைக்கப்படும் சிறுதேர் தஞ்சை மாவட்டங்களில் அன்றைய வழக்கம்.. பெரும்பாலும் தச்சர்கள் பட்டறையில் எஞ்சிய மரத்துண்டுகளை தேர் போல சிறுவர்கள் இழுத்துச் செல்லும் அளவுக்கு செய்து கொள்வார்கள். ஊரின் பிரதான சிவன் கோயில் எதிரே நீண்டு கிடக்கும் வீதியில்தான் பெரும்பாலும் தேர் தயாரிப்பு பணிகள் நடக்கும். தேரை அலங்கரிப்பதற்கென்றே கை தேர்ந்தவர்கள் ஊருக்கு ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள். வண்ண வண்ண காகிதங்களை வெட்டி கிளி போலவும், மயில் போலவும் சிறு சிறு பூக்களாகவும் தயாரிப்பதில் அவர்கள் கெட்டிக்காரர்கள். ஒவ்வொரு வருடமும் புதுமையாய் அலங்கரித்து செல்லும் தேர் யாருடையதென்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கும். தேரை வீதி தோறும் இழுத்துச்சென்று ஆற்றில் விடுவதற்கு ஓடும் சிறார் கூட்டம் பார்க்க கொள்ளை அழகாய் இருக்கும். சற்றே பெரிய குழந்தைகள் பங்கேற்கும் அந்த தேர் இழுக்கும் காட்சியைப் பார்த்து அடம் பிடிக்கும் சிறு குழந்தைகளுக்காக நுணாக் காய்களை விளக்குமாற்றுக் குச்சிகளால் இணைத்து தயாரிக்கப்படும் அவசரத் தேர்களும் உண்டு..

தீபாவளி என்றால் யார் வீட்டு வாசலில் அதிகம் வெடித்து சிதறிய காகித குப்பைகள் கிடக்கும் என்று ஒரு அறிவிக்கப்படாத போட்டியே இருக்கும். வெடிக்காத வெடிகளை சேகரித்து, உள்ளிருக்கும் மருந்தை ஒரு காகிதத்தில் கொட்டி கொளுத்தும் சந்தோஷம், ஒரு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்புக்கு இணையானது. பண்டிகைகள் என்றால் அருகாமை வீட்டார்க்கு பட்சணங்கள் தருவதில் ஒரு சகோதரத்துவமும், புத்தாடைகளை காட்டி குதூகலிக்கும் உற்சாகமும் இன்று மெலிந்து நலிந்து, எல்லாத் தரப்பினரையும் தொலைக்காட்சி சிறப்பு திரைப்படங்கள் வீட்டுக்காவலில் வைத்துவிட்டன... நடுஇரவில் மயானத்தில் கூட நடந்து செல்ல முடிகிற அளவு பயமற்று இருந்த கிராமங்களில், இன்று பகலில் கடக்க கூட அச்சப்படும் அளவுக்கு வீதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன.. விளம்பர இடைவேளைகளில் மட்டும் பேசும்படி மக்கள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுவிட்டார்கள்.

தீபாவளி முடிந்து சில நாட்களில் வரும் கார்த்திகை தீபத்திருநாள் மினி தீபாவளி மாதிரி.... தீபாவளியின் போது வெடிக்காமல் சேகரித்து வைத்த வெடிகளை அன்றுதான் வீட்டுப்பெரியவர்கள் வெடிக்க அனுமதிப்பார்கள்

கார்த்திகை தீபத்தையொட்டி சிறுபிள்ளைகள், ‘கார்த்திகைப் பந்தம்' சுற்றும் வழக்கம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அனேகமாக எல்லாக் கிராமங்களிலும் அந்தக் காலத்திலுண்டு. கார்த்திகைப் பந்தம் சுற்றுவதற்கான தயாரிப்புப் பணி என்பது, ஒரு தொழிற்சாலையில் உற்பத்திப் பொருளின் தொழில் நுட்பத்துக்கு நிகரானது.

முதலில் பனம்பூக்களை சேகரிப்பர். வளையும் தன்மையுள்ள ஆடுதோடா, அகத்தி குச்சிகளுள் ஏதாவதொன்றை வெட்டி வந்து இரண்டடி ஆழக் குழி தோண்டி, அதனுள் பரப்பி அதன் மேல் பனம்பூக்களைக் கொட்டி அதன் மேல் தேங்காய் மட்டை நார் அல்லது நிலக்கடலைத் தோல் தூவி பற்றவைத்து மேலாக பூசணியிலைகளை பரப்பி, மண் தூவி மூடிவைக்க வேண்டும்.

குறைந்த காற்றோட்டத்தில் கனன்று கனன்று பற்றும் நெருப்பு,பனம் பூக்களை தனலாக்கும். பெரிய கார்த்திகைக்கு முதல் நாள் இந்த முன்னேற்பாடெல்லாம் முடிந்து விடும். திருவண்ணாமலையில் தீபமேற்றும் பெரிய கார்த்திகைத் திருநாளன்று, கவைக்குச்சிகளை மேலும் கீழுமாய் இணைத்து, நடுவில் கிடைக்கும் வெற்றிடத்தில், பதப்படுத்தப்பட்ட பனம்பூக்களை வரகு உமியுடன் துணியில் இறுகச் சுற்றிக் கிடித்து, நெருப்பேற்றுவர்.பிடித்துச் சுற்ற வாட்டமாய் இரு முழக் கயிறு ஒன்றும் இணைக்கப் படும்.

சூழலைப் புகையாகவோ, பெருஞ்சப்தமாகவோ மாசுபடுத்தாமல் விளையாடிக் களிக்க ஆண் பிள்ளைகளுக்கு ஒரு சாதனம் கிடைத்துவிடும். பெண் குழந்தைகள் கார்த்திகைத் திருநாளை, தீபங்களேற்றியும், பொரி உருண்டை பிடித்தும் கொண்டாடிட, தத்தம் வீட்டு வாசலில் சூழ்ந்திருக்கும் இருளை, ஆண்பிள்ளைகள் தம் சாகசத் திறன் மூலம் உருவாக்கிய கார்த்திகைப் பந்தத்தின் கயிறு பிடித்து தலைக்கு மேல் சுழற்றிக் கிளம்பும் தீப் பொறிகளால் விரட்டி வெளிச்சமாக்குவர். துவக்கத்தில் இலேசாகச் சுழலும் பந்தம் , நேரமாக நேரமாக வேகமெடுத்து, அப் பிள்ளைகளைச் சுற்றிலும் தீப்பொறிகளை இறைப்பது பரவசமான காட்சி.

மறுநாள் நாட்டுக் கார்த்திகை அல்லது சண்டைக் கார்த்திகை. ஒரு கம்பின் இரு புறமும் கார்த்திகைப் பந்தம் தயாரித்து சிலம்பம் சுற்றுவது போல் சுற்றுவது. விளையாட்டுத் தோழர்களோடு நட்பு குலையாமல் போட்டியிடுவது. மூன்றாம் நாள் விடையாற்றி கார்த்திகை . இப்பழக்கம் எல்லாம் தற்போது அருகி விட்டன.

ஊர் விட்டு ஊர் வந்து, இன்று ‘வயிறே' பிரதானமான பின் எத்தனை வழக்கங்கங்கள் நம் கைவிட்டுப் போயிருக்கின்றன...! ‘பொரி'யும் ‘பொறி'யுமாகக் கழியும் கார்த்திகை தீபத் திருநாள் இன்று அகல் விளக்குகளில் மட்டும் துளியாய் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. எரியும் விளக்குகளில் ஊற்றிய எண்ணெய் போல தீர்ந்து கொண்டிருக்கின்றன நம் மண்ணின் திருவிழாக்கள்.

சுழலும் ஒளிவட்டத்துடன் நகரும் சிறார் கூட்டத்தை எங்கேனும் காண நேரிடும் போதெல்லாம் நினைவில் ஒளிர்கிறது என் ஊர்...!!
(கல்கியில் வெளிவந்தது)

சனி, 13 நவம்பர், 2010

குட் பை சில்ட்ரன்


 எத்தனை பரபரப்பு நிறைந்த ஊராக இருந்தாலும், மக்கள் நெருக்கம் மிகுந்த நகரமாக இருந்தாலும், புகைவண்டி நிலையங்களுக்கு மட்டும் அமைந்துவிடுகிறது மிக அமைதியான சூழல். யோசித்து யோசித்துச் சொற்களை நெய்து கவிதை புனையும் கவிஞனைப் போல, எல்லா இரயில் நிலையங்களிலும் குல்மொஹர் போல் ஏதோ ஒரு மரம் ஒவ்வொரு பூவாய்ச் சிந்துகிறது. தண்டவாளங்களின் சரளைக் கற்களில் தடுமாறாமல் மிதந்து வந்து ஆளற்ற நடைமேடை இருக்கைகளில் மெல்ல அமர்கிறது காற்று. இத்தனை இதமாகவும் இத்தனை மென்மையாகவும் காற்றை வேறெங்கும் நம்மால் தரிசிக்க முடியாது. தோற்றுப் போனவர்களையும், புறக்கணிக்கப் படுபவர்களையும் வேறு யாரும் இத்தனை இதமாக அணைத்து ஆறுதல் சொல்லிவிட முடியாது.

புகைரத நிலையத்தில் தேங்கி நிற்கும் அமைதியைக் கையில் ஏந்தி அப்படியே ஊர் முழுக்கத் தூவி வந்தால் எப்படியிருக்கும்?!
 சில மனிதர்களுக்கு வாய்க்கப்படும் பணிகள், என்னைப் போல் சில பேருக்குப் பொறாமையை ஏற்படுத்தி விடுகின்றன. புத்தகங்களோடு சதா உரையாட வாய்ப்புப் பெற்ற நூலகர் பணி, ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையின் நியதி என்பதை உணர்த்தியபடி இருக்கும் மின் பளூதூக்கி(லிப்ட்) இயக்குனர் பணி, குழந்தைகளோடு குழந்தையாகவும், அவர்களால் என்றுமே மறக்க முடியாத ஆளுமையாகவும் இருக்கும் ஆசிரியர் பணி, கண்ணீரில் நனைந்த நன்றியோடு தினமும் இல்லம் திரும்ப முடிகிற செவிலியர் பணி, ஒவ்வொரு தினமும் புதுப் புது முகங்களை தரிசிக்கும் வாய்ப்பு பெற்ற இரயில் நிலைய தேநீர் விற்பனைப் பையன் பணி... இப்படியான பட்டியல் உங்களிடமும் இருக்கலாம்.

 புகைவண்டி நிலையம் என்பது ஒரு அறிவிக்கப்படாத முகங்களின் நூலகம் தானே..! மொழிபெயர்க்கப் படாத புத்தகங்கள் போல் எத்தனையோ முகங்கள் அங்குமிங்குமாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன்.
 வழியனுப்புவது போன்ற வலியேற்படுத்தும் அனுபவம் வேறு ஒன்றுமில்லை. நீண்டு கிடக்கும் நடைமேடைகளில், பிரிவின் துயர் படிந்த முகங்களை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். அனேகமாக நீங்கள் கூட அப்படியான ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சூழ்நிலையின் ஏளனங்களைப் பொருட்படுத்தாமல் கண்ணீர் வழியப் புகைவண்டியின் கூடவே நடந்திருக்கவும் கூடும்.
 
 நரகம் என்ற ஒன்று இருந்தால் எப்படியிருக்கும் என்று யாராலும் உணர்த்த முடியாது. அவரவர் கற்பனையின் விபரீதம் எத்தனை குரூரமானது என்பதனை நிரூபணமாக்கத் தான் ‘நரகம்' என்ற சொல் பயன்படுகிறது. நரகம் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்ற வைத்த தருணங்களில் ஒன்று பிரியமானவர்களைப் பிரியும் தருணம்தான்.
 வலி மிகுந்த ஒரு வழியனுப்புதலில் துவங்கி, கொடூரமான மற்றொரு வழியனுப்புதலில் முடியும் படம் லூயி மாலின் Good Bye Children. படத்தின் ஆரம்பக் காட்சியில், விடுமுறை நாட்கள் முடிந்து திரும்பவும் பள்ளி இருக்கும் ஊருக்கு பயணிக்க ஆயத்தமாகும் ஜீலியஸ் குவாண்டின் புகைவண்டி நிலையத்தில் பிரிய மனமில்லாமல் தவிக்கிறா ஒரு அம்மா, பிள்ளை, திரும்பத் திரும்ப ஓடி வந்து அம்மாவைக் கட்டிக்கொள்கிற போது தேசம், மொழி, நாகரீகம் என எது மாறுபட்டாலும் குழந்தைகள், குழந்தைகள்தான் எங்கும் எனத் தோன்றுகிறது. அப்படியொரு பிரியமான பிள்ளையை, ஏம்மா இப்படி வலுக்கட்டாயமா அனுப்புற என்று நீங்கள் தாங்கமாட்டாமல் கேட்க நினைக்கிற சமயத்தில் இரயில் குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறது.

 ஹிட்லரின் ஆளுமைக்குக் கீழ் ஜெர்மன் இருந்த காலகட்டத்தில் நாசிப்படைகள் (1940) ப்ரான்ஸை ஆக்கிரமித்தது. அப்பொழுது பிரான்ஸ் அதிகாரிகள் ஹிட்லரிடம் ஒரு சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி ப்ரான்ஸின் சில பகுதிகள் ஜெர்மனின் முழுக்கட்டுப்பாட்டிலும், பிற பகுதிகளில் ப்ரான்ஸின் அதிகாரிகள் ஜெர்மனின் வழிகாட்டுதலின்படி நடப்பார்கள் என்றும், ஹிட்லரின் தலையாய கொள்கையான யூதர்களை அழித்தொழிக்கும் பணிக்காக ‘கெஸ்டபோ' என்ற படையை நிறுவி யூதர்களை வேட்டையாடிக் காட்டிக் கொடுப்பது என்றும் இருந்த ஒப்பந்த ஆணைகளை ஏற்று அடிபணிந்த ப்ரான்ஸ் ஹிட்லரின் நீண்ட நாளைய பழிவாங்கும் வெறியாக, ஹிட்லரின் இளம் வயதில் ஜெர்மன், ப்ரான்ஸிடம் தோற்று எந்த இடத்தில் ப்ரான்சுக்கு அடிபணிந்ததோ அதே இடத்தில் வைத்து ப்ரான்ஸ் அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்கினார்.

 ‘கெஸ்ட்போ' என்பது அரசின் அதிகாரப் படையல்ல. கிட்டதட்ட கூலிப்படை போல கட்டற்ற சுதந்திரத்தோடும், இரக்கமற்ற கொலைவெறியோடும் யூதர்களை வேட்டையாடிய அந்தப் படையில் நகரின் ரவுடிகள், கொலைக்காரர்கள், திருடர்கள் என்று சமூக விரோதிகளே நிரம்பி வழிந்தனர். அவர்களது நடவடிக்கைகள் எந்த சட்ட விதிகளுக்குள்ளும் உட்படாதவை.

 இப்படிப் பட்ட சூழலில், ப்ரான்ஸின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் யூதக் குழந்தைகள் மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்கப் பட்டனர். ஒரு பள்ளியில் 10 அல்லது 15 இடங்கள் மட்டுமே யூதக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டன. பொதுவாக யூதர்கள் புத்திகூர்மை மிக்கவர்கள். உலகில் உள்ள பெரும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் என்று கணக்கிட்டால் பெரும்பாலும் யூதர்களே அதில் தலைசிறந்தவர்களாக இருப்பார்கள். எனவே கல்வி ரீதியாக அவர்களை ஒடுக்குவது ஹிட்லரின் முதன்மைத் திட்டமாக இருந்தது.
 இந்தச் சூழலில் ஜீலிய குவாண்டின் என்ற சிறுவன் ஜெர்மனி ஆக்ரமித்த ப்ரான்சில் உள்ள பள்ளிக்குத் திரும்பும் ப்ரெஞ்சு இனத்தவன். அவனது விடுதி அறையில் நுழையும் பாதிரியாரும் பள்ளியின்

 தலைமையாசிரியருமான ழீன் பியர்ரே மூன்று சிறுவர்களை ஜீலியனிடம் அறிமுகப்படுத்துகிறார். அதில் ஜீலியன் மட்டும் பென்னட்டுடன் தங்கி விடுகிறான். இருவருக்கும் ஆரம்பத்தில் சிறு பூசல் ஏற்படுகிறது. படிப்பிலும், பியானோ இசையிலும் தேர்ச்சி பெற்ற ரீன் பென்னட்டுடன் போட்டி போட முடியாமல் இருக்கும் ஜீலியன் பின்னர் வேறொரு விளையாட்டின் போது நட்பாகி விடுகிறான். இருவருக்குள்ளும் அன்னியோன்னியமான நட்பு உருவாகிறது. இரவு நேரத்தில் திடீரென விழிக்கும் ஜீலியன் பக்கத்தில் படுத்திருந்த ரீன் பென்னட் கிப்பா(kippaih) அணிந்திருப்பதோடு, ஹீப்ரு மொழியில் ஒரு புத்தகத்தைப் பிரார்த்தனை செய்வது போல் வாசிப்பதையும் பார்த்து விடுகிறான். வாசித்து முடித்ததும் ‘கிப்பா'வையும் அந்தப் புத்தகத்தையும் யாருக்கும் தெரியாமல் தன் பெட்டியில் மறைத்து வைப்பதையும் பார்க்கிறான். அறையில் யாருமில்லாத சமயம் ஜீலியன், ரீன் பென்னட்டின் பெட்டியை ஆராய்கிறான். அப்பொழுதுதான் பென்னட்டின் உண்மையான பெயர் ரீன் கிப்பல்ஸ்டின் என்று புரிகிறது. அவன் யூதக் குழந்தையென்பதையும், கெஸ்ட்போ படைகளுக்குப் பயந்து, பெயரை மாற்றிப் ப்ரெஞ்சுக் குழந்தை போல் படிக்கிறான் என்பதையும் உணர்ந்து கொள்கிறான்.

 கிப்பல்ஸ்டினுடனான நட்பு இன்னும் பலமாக இறுகுகிறது. ஜீலியனின் தாய், அவனைப் பார்ப்பதற்காகப் பள்ளிக்கு வரும்போது, தன்னுடைய நண்பன் என கிப்பல்ஸ்டினை தாயிடம் அறிமுகப்படுத்துகிறான். எல்லோருமாக் உணவருந்த ஒரு விடுதிக்குள் நுழைகிறார்கள். அங்கு திடீரென வரும் கெஸ்ட்போ படைகசில யூதர்களை எந்தக் காரணமுமின்றிப் பிடித்துச் செல்கிறது. அதைப் பார்த்துக் குழந்தைகள் மிரண்டு போகின்றனர். தங்கியிருக்கும் பள்ளி விடுதிக்குத் திரும்புகின்றனர்.
 பள்ளி விடுதியில் சமையல் செய்யும் ஜோசப் என்பவன் அடிக்கடி அங்கு மளிகைப் பொருட்களைத் திருடி விற்பதைப் பார்த்து விடுகிறான் கிப்பல்ஸ்டின். ஜோசப்புக்கு அதன் பிறகு கிப்பல்ஸ்டினைப் பார்த்தாலே பிடிக்காமல் போய் விடுகிறது. ஒரு கட்டத்தில் ஜோசப் தான் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில், கெஸ்ட்போ படைகளிடம் கிப்பல்ஸ்டின் உட்பட மூன்று குழந்தைகள் பெயர் மாற்றிப் படித்து வருகிற விஷயத்தைக் காட்டிக் கொடுக்கிறான். கெஸ்ட்போ படைகளின் வேட்டையாடலில் மூன்று குழந்தைகளும் பிடிபடுகின்றனர். Gas chamber எனப்படும் விஷ வாயுக் கூடத்தில் அவர்கள் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பள்ளி விடுதியை விட்டு அவர்கள் பிரெஞ்ச் குழந்தைகளிடம் விடைபெறும் கண்ணில் இரத்தம் கசியச் செய்யும் அந்தக் காட்சியோடு படம் முடிகிறது. யூதர்களாகப் பிறந்ததைத் தவிர வேறொரு பாவமும் அறியாத அந்தக் குழந்தைகளுக்குத் தரப்படும் அந்தத் தண்டனை உலக வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக ஜெர்மனி மீது படிந்தே இருக்கிறது. அவர்களுக்கு அடைக்கலம் தந்து பெயர் மாற்றிக் காப்பாற்றியதற்காகப் பாதிரியாரும் கைது செய்யப் படுகிறார். ஆனால் அவர் பிரெஞ்சு இனத்தவர் என்பதால் கொலை செய்யப்படவில்லை.

 இயக்குநர் லூயி மால் சிறு வயதில் படித்த பள்ளி விடுதியில் நிகழ்ந்த சம்பவத்தை அப்படியே படமாகப் பதிவு செய்துள்ளார்.
 குழந்தைகளின் உருக்கமான விடைபெறல் காட்சி பார்க்கின்ற எவரையும் நிலை குலையச் செய்துவிடும்.

 இன்றைக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படும் போது கவனித்தால் ஏதேனும் ஒரு யூதர் அதைப் பெற்றிருப்பதையறியலாம். அறிவியல், பொறியியல், மருத்துவம் என்று அனைத்து நுண்ணறிவுத் துறையிலும் யூதர்களின் அறிவுத் திறனும், உழைப்பும் அபாரமானது. சிறு குழந்தைப் பருவத்தில் எவரேனும் மரணமடைய நேரிட்டால் நினைத்துக் கொள்வதுண்டு. ஒருவேளை மரணத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு இருந்தால் ஒரு விஞ்ஞானியாக, மகத்தான மருத்துவராக, தலை சிறந்த கலைஞனாக உருவாகியிருக்க வேண்டிய குழந்தையென்று. அப்படிப் பார்த்தால் யூத இனத்தில் பிறந்த ஒரே ஒரு குற்றத்திற்காக(!) மரணத்தைத் தழுவிய குழந்தைகளில் எத்தனை மேதைகள், ஞானிகள், கலைஞர்கள் இருந்திருக்கக் கூடும்? அவர்கள் உயிரோடிருக்கும் பட்சத்தில் ஒருவேளை எத்தனையோ கண்டுபிடிக்கப்படாத நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப் பட்டிருக்கும்? அறிவியலின் பாய்ச்சல் இன்னும் ஒரு சில நூற்றாண்டுகளைத் தாண்டியிருக்கலாம்.

  இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அடுத்தவர்களை அழித்தொழிப்பு செய்பவர்கள், உண்மையில் மற்றவர்களை அழிக்கவில்லை... தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.
 இப்படி நாம் இழந்த கவிதைகளை பூமியின் மண் துகளும், சாம்பல் கரைக்கப்பட்ட நதி நீரும், வாசித்துக்கொண்டிருக்கும் நாமோ எல்லாவற்றையும் படித்துவிட்டதாகப் பெருமை பேசிக் கொள்கிறோம்.

குறிப்புகள்: 
Kippah Hat
 1. கிப்பா(kippah) என்பது யூதர்கள் பிரார்த்தனையின் போது அணிவது.
 2. ஹிட்லரின் தளபதி ஹிட்லரின் மூளையில் உதித்த கொடூரமான உயிர்ப்பலிக் கூடம் Gas chamber. யூதர்களைக் கூட்டம் கூட்டமாக ஒரு அறையில் அடைத்து விஷ வாயுவை செலுத்திக் கொல்கிற இடம் தான் அது.

இயக்குநர் லூயிமால்: 
 
Louis Malle
    1932-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி பிரான்சில் பிறந்த லூயிமால், தனது 19-ம் வயதில் திரைப்படக் கல்லூரியில் பயின்று முடித்தபின், பிரெஞ்சுக் கடற்படைக் கமாண்டண்ட் ழாக் கூங்கோஷியுடன் துணிகரமான கடற்பயணம் ஒன்றை மேற்கொண்டார். கூங்கோ ஆழ்கடலில் மூழ்கி இயற்கையின் அற்புதங்களைப் படம் பிடித்து “நீர் மூழ்கியின் நாட்குறிப்புகள்” என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கினார். ஆழ்கடலில் எடுக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம் அதுதான். அவரோடு பயணித்த அனுபவங்களின் உதவியோடு லூயிமால் அமைதி உலகம் (Silent world)என்ற ஆவணப் படத்தை எடுத்தார். அப்போது அவருக்கு வயது 21. அந்தப் படம், கான் பட விழாவில் விருது பெற்றது.
 இதன் பிறகு Life the Galliks என்கிற திரைப்படத்தை இவர் இயக்கும் போது இவருக்கு வயது 25 தான். முதல் படமே இவருக்கு பிரெஞ்சின் உயரிய விருதான தெல்யுக் விருதை பெற்றுத் தந்தது. Lovers, Fire within, Black moon, God's country, Damase உட்பட சுமார் 20 படங்களை இயக்கினார். பல்வேறு விருதுகளையும், விமர்சனங்களையும் சமமாகப் பெற்ற லூயிமால், சில காலம் இந்தியாவில் தங்கியிருந்தபோது India, Calcutta என்ற இரண்டு ஆவணப் படங்களையெடுத்தார்.

செவ்வாய், 5 அக்டோபர், 2010

மகன்(கள்) தந்தைக்கு ஆற்றிய உதவி

தமிழில் குறும்படங்கள், ஆவணப் படங்கள் திரையிடுவதற்கும், ஊக்குவிப்பதற்க்குமான அமைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சாத்தியப்படுகிற இத் தருணத்தில் அவற்றைத் தயாரிப்பதற்கான முயற்சியில் பலரும் இறங்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான சூழலாகக் கருதலாம்.
திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸிடம் உதவியாளராகப் பணிபுரியும் A.R.சுப்புராஜ் இயக்கி, நடித்திருக்கும் ‘பயணம்' குறும்படம் சமீபத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.



அண்மையில், நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசையும், சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப் பட்ட குறும்படப் போட்டியில் இரண்டாவது பரிசையும் பெற்ற ‘பயணம்' குறும்படம், நாகர்க்கோயில் பகுதிகளில் அன்றாடம் காணும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்டது.

வட இந்தியாவில் மனநிலை சரியில்லாத நபர்களை, குறிப்பாக, முதியவர்களைப் பராமரிக்கத் திராணியில்லாதவர்கள், தென்னிந்தியாவிற்கு வரும் இரயில்களில் ஏற்றிவிடுவது வழக்கமாகி வருகிறது. இரக்கமற்ற இந்த செயலின் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கவனிப்பாரற்றுத் திரியும் பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் பின்னணி எத்தனை குரூரமானது என்று இப்படம் நிதர்சனமாக்கியிருக்கிறது.

மும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வட இந்தியக் குடும்பத்தில் நான்கு சகோதரர்கள். அவர்களைப் பாசத்தோடு வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு மனநிலை பிறழ்ந்து விடுகிறது. தந்தையின் சொத்தான வீட்டை விற்று நான்கு பிள்ளைகளும் பல லட்ச ரூபாய் பங்காகப் பெறுகிறார்கள். ஆனால் ஒருவருக்கும் தங்களது தந்தையை தங்களோடு வைத்துக் கொள்ள இஷ்டமில்லை. ஆளாளுக்கு உப்புசப்பில்லாத காரணத்தைச் சொல்லி தவிர்க்கிறார்கள். முடிவில் பிள்ளைகளில் ஒருவன் சொல்லும் யோசனை பார்க்கும் நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. கன்னியாகுமரி செல்லும் இரயிலில் அவருக்கு டிக்கெட் எடுத்து ஏற்றி விடுவதன் மூலம் அவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பிலிருந்து நழுவி விடுவது அவர்கள் திட்டம். அதன்படி அவர் ஏற்றி விடப் படுகிறார். அதே இரயிலில் வயிற்றுப் பிழைப்புக்காக சிறு சிறு திருட்டுக்கள் செய்து வரும் சிறுவர்கள் இருவரும் கன்னியாகுமரிக்குப் பயணிக்கிறார்கள்.

வயிற்றைப் பசிக்கும் போது ‘கானா' ‘கானா' என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியாத அந்த முதியவரின் செய்கைகள், முதலில் அச்சத்தோடும், பின்பு கவலையோடும் கவனிக்கப் படுகின்றன. இரயில் ஒவ்வொரு மாநிலமாகக் கடந்து தமிழகத்துக்குள் நுழைகிறது. சிறுவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சிறு சிறு பொருட்களைக் கவர்கின்றனர். பெரியவருக்கு ஒன்றிரண்டு தின்பண்டங்கள் தின்னக் கிடைக்கின்றன.

சிறுவர்களில் ஒருவனுக்கு, தான் மும்பையில் திருடச் சென்ற வீட்டில் இப் பெரியவரைக் கட்டிப் போட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. யாரோ வரும் சந்தடியில் மறைந்திருந்து, அங்கு வந்த நால்வரையும் அவர்களின் திட்டத்தையும் கேட்டவன் சந்தடியின்றி நழுவியதையும் ஞாபகப் படுத்திக் கொள்கிறான். ஆக அவர்கள் திட்டப்படி அவரை அநாதரவாக இரயிலேற்றி விட்டிருக்கிறார்கள் என்று புரிந்துபோகிறது. சிறுவன், தன் நண்பனிடம் பெரியவர் பற்றிய உண்மைகளைச் சொல்லி, அவரைக் காப்பாற்றிப் பராமரிக்கலாமென அனுதாபம் மிக சொல்கிறான். தங்களது பல தவறுகளுக்குப் பிராயச்சித்தமாய் அது இருக்கட்டுமென அவர்கள் முடிவு செய்கின்றனர். கருணையுடன் அவரை அணுகும் போது, பழைய திருட்டுக்களுக்காக அவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் காவலரிடம் மாட்டிக் கொள்கின்றனர்.

‘வாங்கடா திருட்டுப் பசங்களா' என்றபடி தங்களைப் பிடித்துக்கொள்ளும் காவலரிடம், ‘அந்தப் பெரியவரோட பிள்ளைகளை என்னன்னு சொல்லுவீங்க?” என்று அந்தச் சிறுவர்கள் கேட்கும் காட்சி, பார்வையாளர்களான நம்மைச் சுடுகிறது.

பெரியவர், யாரும் கவனிப்பாரற்று, ‘கானா கானா' என்றபடி நடந்து செல்கிறார் தனியாக...

நெஞ்சைப் பிழியும் இந்தக் காட்சியுடன் படம் முடிவடைகிறது!

யதார்த்த வாழ்வுக்கு எதிராகவும், தொடர்பில்லாமலும் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மத்தியில், சமகால மனிதர்களின் அவல வாழ்வைப் பதிவு செய்யும் குறும்படமாகப் ‘பயணம்' அமைந்திருக்கிறது.

குறும்படத்தில் மனநிலை பிறழ்ந்தமுதியவராக நடித்திருக்கும் இயக்குனர் சுப்புராஜின் தந்தை எஸ். அருணாச்சலம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேலாளராக சாலிகிராமம் கிளையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். வங்கியில் பணிபுரிந்தாலும் அவரது மனம் முழுக்க நடிப்புத் துறையிலிருந்திருக்கிறது. அவ்வப்போது, அவரது சொந்த ஊரான நாகர்கோயிலில் நாடகங்களில் நடித்திருக்கிறார். பின், பணிச்சுமை காரணமாக நடிக்கமுடியாத ஏக்கத்திலேயே இருந்திருக்கிறார்.

அண்மையில் அருணாச்சலத்தின் ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாட, அவரது பிள்ளைகள் A.R. குமார், A.R.பேபிராஜன், A.R. சுபாஷ். A.R. சுப்புராஜ் நால்வரும் முடிவு செய்த போது, அவருக்கு என்ன பரிசளிக்கலாமென்ற பலத்த ஆலோசனைகளுக்கு இடையில் சுப்புராஜ் தான் இந்த யோசனையைச் சொல்லியிருக்கிறார். ஆளுக்குச் சிறிது பணம் போட்டு, ஒரு குறும்படம் எடுப்பது; அதில் அவர்களது தந்தையையே பிரதான பாத்திரமாக நடிக்க வைப்பது என்று முடிவானது. குறும்படத்தின் கதைப்படி பெற்ற தந்தையை அனாதரவாகப் பரிதவிக்க விடுகிறார்கள் பிள்ளைகள்; ஆனால் படத்தைத் தயாரித்த பிள்ளைகளோ தங்களது தந்தையின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி, அவருக்கு ஆத்ம திருப்தி தந்தது என்ன ஒரு அழகிய முரண்!


அருணாசலத்தின் தத்ரூபமான நடிப்பு, அந்தக் கதாபாத்திரத்தின் மீது ஈரம் கசிந்த பார்வையை பதியச் செய்கிறது. அவர் தனது யதார்த்தமான நடிப்பாற்றலால், அந்தக் கதைக்கு உயிரூட்டியுள்ளார். சுப்புராஜ் ஏற்கனவே இயக்கிய,'செடி' என்ற குறும்படம், திருப்பூர் அரிமா சங்கப் பரிசு, திருச்சி லயன்ஸ் க்ளப்-கிழக்குவாசல் உதயம் குறும்படப் போட்டியில் பரிசு, சென்னை prime force academy பரிசு உட்படப் பல பரிசுகளை வென்றுள்ளது. இந்தப் படம், பிள்ளைகளால் ஒரு தந்தைக்கு தரப்பட்ட மகத்தான பரிசு!

மகன்(கள்) தந்தைக்காற்றும் உதவியென்பது இதுதானோ...!!

சனி, 11 செப்டம்பர், 2010

விசும்பல்


“சொக்கன் வந்துட்டானா?”
“கெழக்கால பக்கம் நிக்கிறேன் சாமி.....”
“ அப்பிடியே பந்த கால் பக்கம் குந்துடா. அரை மணிக்கொரு தரம் நீயா பாத்து ஊதவேண்டியதுதான்... ஒனக்கு ஒரு ஆளு மேம்பார்வை பாத்துகிட்டு வெரட்டிகிட்டு இருக்கமுடியாது... சுத்தம்பற ஊதுனாத்தான் பேசுனபடி காசு..” தலையாரி உத்தரவு போட்டுக்கொண்டே நடந்தார்.
“ தெரு கிளிஞ்சிடாது... ஓன் சோலியப்பாரு... அய்ய.... என்னப் பத்தி கவலப்படாதே” சங்கை எடுத்து மணி அடித்தபடி ஊதத்துவங்கினான் சொக்கன்.
தெரு சனம் ஒவ்வொருவராய் வர துவங்கினர். சின்ன வயசு சாவுதான் என்றாலும் விபத்து நடந்து மூணு மாதமாகியும் அப்பவோ இப்பவோ என்று இழுத்துக்கொண்டதில் எதிர்பார்த்த சாவுதானே என்ற அசுவாரசியம் தெரிந்தது எல்லோர் முகத்திலும். ஊரில் நல்ல காரியம் வைக்க தேதி குறிக்க முற்படுபவர்கள் ‘எதுக்கும் ஒரு எட்டு செவனாண்டி வூட்டுல பாத்துட்டு வா.. அங்க வேற ஒண்ணு சொள்ளைகரைக்கு போவேனான்னு அடம் புடிச்சுகிட்டு கெடக்கு” அப்பிடின்னு ஆளனுப்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
32 வயசெல்லாம் ஒரு வயசா... ஆனாலும் மனித மனம் எத்தனை குரூரமாக மாறிவிடுகிறது சுயநலம் என்று வந்துவிட்டால்... செவனாண்டி மகன் சம்பத்து வண்டியில் ஏறி ஒரு அரக்கு அரக்கி பறந்தானென்றால் தெரு கொஞ்சம் ஆடிதான்போகும். கடைசியில் அவனது வாகனமே அவனுக்கு எமனானது..முதுகெலும்பில் பட்ட அடி மூளையை பாதிக்க வெறும் உயிர் ஒடும் ஊடகமாக மட்டுமே அவனது உடல் கிடந்தது மூன்று மாதமாய்...
“ முருகேசா... மருதாயி கெளவிக்கு ஆளனுப்பிட்டியா?”
“ அனுப்பிட்டேன் பெரிசு. அவ மவகாரி வந்துருக்கா போல இருக்கு.. மதியமா வரேன்னிருக்கா..”
“ அதுவும் செரிதான்.. தெருக்கார சனத்துக்கு தொண்டை அடுத்த வேளை கவளம் எறங்கறவரைக்குந்தான்...அப்பறம் கத பேச ஆரம்பிச்சுடுவாளுக..அப்பறம் ஒப்பாரி வைக்க ஆளிருக்காது மருதாயி அப்பம் வந்தா போதும்”
மருதாயி கெளவி குரலும், ஒப்பாரியும் ஜில்லா பிரசித்தம். எங்க சாவு விழுந்தாலும் முறைக்காரனுவங்களுக்கு முன்னாடி அவளுக்கு செய்தி போயிடும். அப்பப்ப டீ தண்ணியும், ஒரு சொம்பு சுடு தண்ணியும் இருந்தாபோதும்,ரெண்டு நாளானாலும் பிசிறு தட்டாது ... ஊரு கிடுதாங்கற மாதிரி வெங்கலக் குரல் அவளுக்கு.
புருஷன்காரன் ரெண்டு புள்ளையக் குடுத்துட்டு ஓடிப்போனப்பறம் தென்னங்கீத்து முடையற வேலை போக ஒப்பாரிக்கு போறதுலதான் அவ பொழப்பு ஓடுது. ‘எவன் வூட்டுலயாவது எழவு வுளுந்தாதான் எனக்கு வாழ்வு' என்பாள் அடிக்கடி.
பாத்திர யாவாரி வேலுவத்தான் கட்டிப்பேன்னு ஒத்தக் கால்ல நின்னு, இப்ப அவங்கிட்ட அடியும் ஒதையும் தின்னு ஒடம்பு வீங்கி மாசம் தவறாம வர்ற மவ எச்சுமி பத்தின துக்கமும், காலு வெளங்காம மூளை வளராம வூட்ட விட்டு நகராம மொடங்கிக் கெடக்கற மவன் ராசுவோட வைத்தியத்துக்கு காசு இல்லாத துக்கமும் தீரப்போவதுமில்ல... அவ அழுக ஓயப்போறதுமில்ல.
எப்படி முடியுது விடாம அழுவ அப்படீன்னு யாராவது கேட்டா,
‘உங்களுக்கெல்லாம் பொறக்கறச்சயும் சாவறச்சையும் தான் அழுவை. எனக்குப் பொழப்பே அழுவைதான்' அப்படீன்னு அவ பொலம்பறதைக் கேட்டா கஷ்டமாத்தான் இருக்கும்.
மருதாயிக் கெழவி அடுப்பு நெருப்பைத் தூண்டியபடி எச்சுமி பக்கம் திரும்பாமல் எக்கச்சக்க கோபத்தில் இருந்தாள்.
“எவடி இங்க ஒன்னை வெத்தலைப்பாக்கு வெச்சு கூப்பிட்டா? எதுக்கு வர்றே? பெரிய கார்த்திகை அன்னிக்குக் கூட வயித்தால போயி இப்பவோ அப்பவோன்னு கெடந்தேன். இருக்காளா செத்தாளான்னு பாக்க ஒரு நாதியில்லே. இப்ப மட்டும் எதுக்குடி வந்தே...?”
“எங்க போவேன் ஆத்தா... நெனச்சா வர்றதுக்கு சீமான் வூட்லயா வாக்கப்பட்டிருக்கேன்? ரெண்டு அலுமினியப் பாத்திரத்த வெச்சுகிட்டு தெருத்தெருவா சுத்தற வெறும் பயகிட்டல்ல லங்கு அடிச்சிட்டு கெடக்கேன்...”
“நானாடி கட்டிக்கச் சொன்னேன்? ஒந்திமிருக்கு நாயி வாயில வெரல விட்டுட்டு இப்பக் கடிக்கிதே கொதறுதேன்னா எப்பிடி?”
“அதான்... அதான். கெரவம். என் புத்திக்கு நாத்தம் புடிச்சிக் கெடக்கேன். மவராசி நீ சொன்னதான்... வெளக்கமாத்தால மொத்து, என்னை அடிச்சிக் கொல்லு... ஆனா என்னை வராதேன்னு சொல்லாதே ஆத்தா.”
பேரப்பய முருவன் இது எதுலயும் கவலப்படாம மருதாயிக் கெழவி புடவையப் பிடிச்சு இழுத்தான்.
“வருந்தோறும் ஏண்டி இந்த சிசுவ வேற இளுத்துகிட்டு வர்றே... தூண்டிப் புழுவாட்டம். இவனக் காமிச்சிக் காமிச்சி இருக்கற மீனெல்லாம் பிடிச்சிட்டுப் போயிட்ட. இப்ப ஏங்கிட்ட என்னாடியிருக்கு? கொளம் வத்திப் போச்சு. போதும் என்ன வுட்டுடு.”
“அப்பிடி சொல்லாத ஆத்தா. சைக்கிளப் பிடிங்கிட்டுப் போயிட்டான் கடங்காரப்பய. அவன் ஒரு கழிச்சல்ல போவோ... வெக்கங் கெட்டு அவன் கால்ல வுளுந்து கூட கதறிப்பாத்தேன். படுபாவி மனசெரங்கலையே. எட்டி ஒதச்சிட்டுப் போயிட்டான். சைக்கிள் இல்லாம யாவாரத்துக்கு எப்பிடி போவும்?”
முருவன், சோர்ந்து சுருண்டு கிடக்கும் ராசுவின் முகத்தில் இரு கைகளால் அடித்து எழுப்பினான். ஒரு முறை தலையுயர்த்திப் பார்த்து விட்டு, இயலாமல் திரும்பவும் சுருண்டான் ராசு.
“அங்க பாரு... ஆமை மாதிரி கெடக்கு. என்னால சாவக் கூட முடியாதுடி. இது இருக்கற வரைக்கும் என் உசிரப் புடிச்சு வெச்சிக்கணும். ஒப்பன் ஓடிப் போறப்ப வைரமும் வைடூரியமுமா வெச்சிட்டுப் போனான்...? இந்த சப்பாணிப் பயல ஏந்தலையில சுமையா தானே வெச்சிட்டுப் போனான்? எங்க சுத்தி எங்க வந்தாலும் ரவைக்கு வூடு திரும்பிடனும். ஒரு ஆம்பளையா லட்சணமா சைக்கிள் வாங்கப் பணம் பொரட்ட முடியாத பொறம்போக்கு ஒன்னை ஒதைச்சு அனுப்புறானே... தூத்தேரி... வெளங்குவானா?”
“நல்லா துப்பு... காறி துப்பு.” புடவைத் தலைப்பை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு அழுத எச்சுமி, “அடி...தாங்கலை ஆத்தா. ஆம்பளையா லட்சணமா என்னையத்தான் போட்டு ஒதைக்கிறான். நேர்ல பாக்க ஒனக்குக் கொடுத்து வெக்கலை. சம்பாதிக்கத் துப்பில்லைன்னு சொல்லிட்டாப் போதும்... எலும்ப ஒடிச்சிட்டுத்தான் மறுவேலை... இங்கப் பாரு” என்று புடவையைத்தூக்கி கெண்டைக்கால் காயத்தைக் காண்பிக்கிறாள்.
“புள்ளையையும் காயத்தையும் காட்டிக் காட்டி என்னைக் கரைக்காதடி. வேணுமானா ஒரு ஓரமா ஒக்காரு. ஒருபாட்டம் ஒனக்காவ அழுவறேன்.”
“காதுல போட்டிருந்தியே ஏழுகல்லுத் தோடு... அதைக் கொஞ்சம் குடு ஆத்தா. அப்பனாணை விக்க மாட்டேன்... எங்கனாச்சும் வெச்சி, ரெண்டு மாசம்... எண்ணி ரெண்டே மாசம் மூட்டுக் குடுத்துடறேன்.”
“ஏங்கிட்டப் பொட்டுத் தங்கம் இல்லே தாயி... ஆளை வுடு. அத வெச்சுத்தான் எனக்கு வைத்தியம் நடந்துச்சு. தோ... கெடக்கானே சவலைப் பிள்ளை... அவனுக்கும் வைத்தியம் பாத்தேன். இனும ஒரு நயா பைசா பேறாது.”
“கஞ்சிக்கிக் கூட வழியில்ல வூட்ல... யாவாரத்துக்குப் போயி இன்னியோட நாப்பத்தஞ்சு நாளாச்சு. இன்னும் எத வித்து சாப்பிடறதோ தெரியல. எப்பிடிப் பொழைப்பேன் ஆத்தா?”
“நீ வாழ வேண்டாண்டி வாழ வேணா. ஒண்ணு, இங்க வந்துறு. இல்ல செத்துப் போயிடு. ஒருத்தி வாழ ஒம்போது பேர் சாவ முடியாது. வாழ்ந்து வழிச்சது போதும். போம்மா மவராசியா.”
“என்னா ஆத்தா இப்புடி சொல்லிட்ட... ஒரு பெத்த தாய் இப்புடிப் பேசலாமா?”
“என்னை என்னடி பண்ணச் சொல்ற? வந்ததுக்கு ஆக்கி வெச்சிருக்கறதச் சாப்புட்டுட்டு அந்த அரிசிப் பானையில கொஞ்சம் நொய்யரிசி இருக்கு. எடுத்துட்டுக் கெளம்பு. அவ்வளவு தான் முடியும்.”
“ஏ கெளவி... தலையாரி ஒன்னை அர்சண்டா வரச் சொன்னாரு. பாடை கட்டறப் பயலுவ கூட வந்துட்டானுவோ. ஒன்னைக் கையோட இட்டாரச் சொன்னாரு.” வாசலில் குரல் கேட்டது.
தலை முடியை அள்ளி முடிந்துகொண்டு கிளம்பிய மருதாயி, “ரெண்டு ரெஸ்க் கெடக்கு அந்தப் பச்சை டப்பாவில.முருவனுக்கு அதை எடுத்துக் குடு. இங்க ஒரு எழவு. நா போவனும். சாப்புட்டு நீ கெளம்பு.” வெளியேறினாள் மருதாயி.
செவனாண்டி வீட்டில ஜனம் கொலேரென்று கூடியிருந்தது. மருதாயி தெருவுக்குள் நுழைந்த போதே புரிந்துகொண்டாள். ஒறமொறக்காறனுவ அதிகம்னு. கூடுமான வரைக்கும் எவ கொரலையும் எழும்ப விடக் கூடாதுன்னு தொண்டைய செருமிகிட்டு, கையிரண்டையும் உயரே விரித்து, பெருங்குரலெடுத்து,
“அய்யோ... ஈ வந்து மொய்க்கலையே
எறும்பு ஒன்ன நெருங்கலையே
கண்ணுல வெச்ச உசிர
இமை கூட காக்கலையே...
என்னப் பெத்த அய்யா
பூவாட்டம் தூங்குறியே
பொழுது இன்னும் சாயலியே”
என்று பிணத்தருகே சென்று அட்டனக்கால் போட்டமர்ந்து மூக்கைச் சிந்தி அருகாமை தூணில் தடவினாள்.
சன்னமாக மெலிந்து தேய்ந்து ஆங்காங்கு அழுது கொண்டிருந்த குரல்கள் ஆசுவாசமாயின. அப்பாடா... வந்துட்டா. இனும அவ பாத்துப்பா என்ற மகிழ்ச்சியில் புற வாசலுக்கு நழுவினர் பெண்டுகள்.
சிவனாண்டி பெண்டாட்டியும் மாமியாரும் பாய்ந்து வந்து மருதாயியைக் கட்டிக்கொண்டு அவள் பாட்டுக்கு சுருதிபோல ராகம் போட்டு அழுதனர்.
“வலை போட்டு வீசினாலும்
சிக்காத வஞ்சிரமே...
சங்கு கழுத்தழகா
உன் சிங்கார சிரிப்பழக
சேத்து வெக்க மறந்தேனே
பாவி, இனியெப்ப பாக்கப்போறேன்
பொசக் காத்து போறாப்ல ஏங்கண்ணே
பொசுக்'குன்னு பறப்பியே தெருமேல
பொணமாக் கெடக்கியே
புயலோஞ்சு கெடக்குது ஊரு”
ஒருமணி நேரம் சளைக்காமல் தனியாவர்த்தனமாய் ஒலித்தது கெழவியின் ஒப்பாரி. வருகிறவர்கள் அவளுக்கு ஈடு கொடுக்க மாட்டாமல் புடவைத் தலைப்பை வாயில் புதைத்தபடி துக்கம் தாளாதவர்கள் போல குனிந்தபடி நழுவினர்.
மேட்டுத் தெரு பொன்னம்மாவுக்கு மருதாயி மேல் தாங்கமுடியாத பெருமிதம் உண்டு. யாருக்கும் கேட்காமல் பக்கத்திலிருந்தவரிடம் கெழவியின் பராக்கிரமத்தை பரப்பிக் கொண்டிருந்தாள்.
“எம காதகி... அவ இழுவைக்கு எவளும் கிட்டே நெருங்க முடியாது. அழுவறத நெறுத்திட்டா பொணமே எந்திரிச்சி ‘பாடுடி இன்னும் செத்த'ன்னு கேக்கும்!”
“நெசம் தான் ஆத்தா! பெத்தவ கூட இத்தனை பதறலை... அட! இவ ஒப்பாரிக்கே சாகலாம் போலிருக்குன்னா பாத்துக்கயேன்.” பொன்னம்மாவுடன் பாக்கியமும் உவந்தோங்கி போனாள்.
“இருக்காதா பின்னே... நம்ம வல்லக் கோட்டைக்காரரோட மூத்தாரு செத்தப்ப, அவரு புள்ள சிங்கப்பூரிலேருந்து வரணும்னு ரெண்டு நாள் பொணம் கெடந்துது. மவராசி ஓயலியே! ரெண்டு நாளும் இவ அசராம வெச்ச பாட்டுலதான் பொணம் நாறாம தூங்குச்சுன்னு இப்பவும் ஊர் பேசுதே.”
“மூஞ்சுல அழவை வெக்கலைன்னாலும்... மூச்சுல அழுவைய வெச்சுட்டான் கடவுள்.”
ருக்குமணி கெழவி மருதாயி காதில், “ஒன்னப் பத்திதான் பின்னாடி இருக்கறவளுவோ பேசிக்கறாளுவோ. தலைய உட்டு உன்னை எறக்கறதில்லே.”
“உளுது... உளுது... காதுல உளுது. பின்னாடி எல்லா சிறுக்கிவோளும் பெருமையாத்தான் பேசுறாளுவோ... எதுக்க வந்துட்டா ஒப்பாரி வெக்கிறவ வர்றாளே... சகுன பெசகுன்னு ஒளியறாளுவோ. எதுலியும் எனக்கு ஏறுமாறுதான்.பாரேன்... வெத்தலைத் தட்டில களிப்பாக்கைத் தேடறேன் பொட்டலம் பாக்கா கெடக்கு!” என்றபடி களிப்பாக்குக்காக முந்தியின் முடிச்சையவிழ்க்கும் போது பகீரென்றது அவளுக்கு.
தோட்டைக் காணோமே என்று விக்கித்து ஒருகணம் திகைத்த மருதாயிக்கு உடனே ஞாபகம் வந்தது, ‘அய்யோ நேத்து தானே பத்திரமாயிருக்கட்டும்னு அரிசிப்பானையில வெச்சேன். ஆக்கங்கெட்ட மூதி! அத மறந்துட்டு முந்தியில முடிஞ்ச நெனப்பா வந்துட்டேனே... ராசுப்பயலுக்கு இடுப்பு தேஞ்சித் தேஞ்சி ரணமாக் கெடக்கு. டவுனுக்குப் போயி வைத்தியம் பண்ணலாம்னு இத்தினி நாளு சாக்ரதையா காவந்து பண்ணி வெச்சிட்டு இன்னைக்கு வுட்டோட்டிட்டேனே... சும்மா கெடந்தவள நொய்யரிசிய எடுத்துக்கோன்னு வேற சொல்லித் தொலைச்சிட்டேனே... பாதகத்தி கண்ணுல பட்டுட்டா நோவாம எடுத்துடுவாளே. வெக்கத் தெரியாதவ வெக்கப்போர்ல வெச்ச மாதிரி ரோசனையில்லாம கைநீளக்காரி இருக்கற எடத்துல நொய்யரிசிப் பானையில மாட்டிக்கிச்சே தோடு...! பச்ச வாழியம்மா இப்ப நா என்ன பண்ண... உள்ளுக்குள் மருகினாள் மருதாயி.
அப்போதுதான் உள்நுழைந்த சிவனாண்டியின் உறவுக்காரி மருதாயியைக் கட்டிக்கொள்ள ஒப்பாரியை விட்ட இடத்திலிருந்து தொடங்கினாள் மருதாயி.
“கையிருப்பு கரைஞ்சிடுச்சே
களவாட விட்டுட்டேனே
தங்கமே ஒன்ன
ஒளிச்சு வெக்கத் தெரியலையே
எமங் கையில கொடுத்தேனே
வெலையில்லா பொக்கிஷமே
வேற கதி ஏதெனக்கு
ஒண்ணே ஒண்ணு
ஏங்கண்ணே கண்ணு
ஒன்னை விட்டா யாரெனக்கு?
கழுகு ஒன்னக் கொத்தாம
காவந்து பண்ணி வெச்சேன்
பருந்து ஒன்னத் தூக்காம
பத்திரமா பாத்து வெச்சேன்
காத்தாட்டம் பறந்திடுச்சே
கண்சிமிட்டும் நேரத்தில
கையிருப்பு கரைஞ்சிடுச்செ
களவாட வுட்டுட்டனே”
தாண்டிச் சென்ற தலையாரியை அருகே அழைத்து ‘எப்ப சாமி எடுக்கப் போறீங்க' என்று கேட்டாள்.
“எடுத்துட வேண்டியதுதான். குளுசம் முடிய அரை மணியிருக்கு இப்ப ஒனக்கென்ன அவசரம்?”
“இல்ல... ஏம் மவ வந்திருக்கா...”
“ஆமா, டெல்லிக்கு மகராணி... சோத்தை தின்னுட்டு கெடக்கப்போறா... போலாம் போலாம் செத்த தொணப்பாதே.”
இன்னும் அரைமணி நேரமா.. அதுக்குள்ள அவ கையில சிக்கிட்டா... சண்டாளி அடுத்த செகண்டு கெளம்பிடுவாளே... பெரியகுப்பம் அய்யனாரே, எட்டணா சூடமேத்தறேன். அவ கண்ணுல மாட்டாம மறைச்சுடு. அவளும் என்ன பண்ணுவா... காசில்லாத கூறு... அதுக்காவ….. அந்தக் கால் சூம்புன பயலுக்கென்ன விமோசனம்? இருப்புக் கொள்ளாமல் தவித்தாள் மருதாயி. நிமிஷங்கள் நரகமானது.
“பொணத்தக் குளுப்பாட்டனும்... எல்லாம் செத்த வெளிய இருங்க” ஏழுமலையின் குரல் கேட்டு அப்பாடாவென்றிருந்தது அவளுக்கு.
இன்னும் செத்த நேரம் தள்ளுனா ஓடிப்போயிடலாம். பொணத்தை எடுத்தாத்தான் ஒப்பாரி கூலி கைக்கு வரும். பொணம் சொள்ளக் கரைக்குப் போவாம தலையாரி காசு பிரிச்சி கொடுக்க மாட்டான்.
“சொர்க்கம் சேர்... வைகுண்டம் சேர்... ஈஸ்வரன் பாதம் சேர்...
சொர்க்கம் சேர்... வைகுண்டம் சேர்... ஈஸ்வரன் பாதம் சேர்...” ஏழுமலை சூடத் தட்டை ஏந்திக் கொண்டு பிணத்தைச் சுற்றி வர நெருங்கிய உறவுக் கூட்டமும் கூடவே சுற்றியது.
“கோயிந்தா... கோயிந்தா...” என்றபடி பிணத்தைத் தூக்க பெண்டுகளும் குரலுயர்த்தி அழுதனர். நகரத் துவங்கியது ஊர்வலம்.
எப்பவும் மணிக்கடைக்கு வந்து டீயும் பொறையும் உள்ளே போனால்தான் வண்டி நகரும் மருதாயிக்கு. ஆனால் இன்னைக்கு அதையெல்லாம் உதறிவிட்டு ஓட்டமும் நடையுமாக வீடிருக்கும் தெருமுனைக்கு ஓடினாள். மனசு வேற திடும் திடும்ன்னு அடிக்குது வேகமா. முருவன் குரல் கூட கேக்கலையே... அம்மா தாயே பச்சைவாழியம்மா என்னைக் கைவிட்டுறாதே... வேண்டுதலோடு நுழைந்தாள் வீட்டுக்குள். ராசு மட்டும் கூழையாய் சுருண்டுகிடந்தான். நடுவீட்டில் அரிசிப்பானை கவிழ்ந்துகிடந்தது. நிமிடத்தில் புரிந்து போனது மருதாயிக்கு.
“அய்யோ பாதகத்தி... கண்ணு சிமிட்டறதுக்குள்ள களவாண்டுட்டியே... நீ கட்டையில போவோ... நாசமத்துப் போவோ... அம்மா தாயே இருந்த ஒண்ணும் போச்சே... நா என்னா பண்ணுவேன்” என்று புடவையை கீழே விரித்து கதறத் துவங்கினாள்.
ராசுவுக்கு விழிப்பு வந்து ஒரு கணம் அலங்க மலங்கப் பார்த்தான். கடைவாயில் ஒழுகிய எச்சில் துணியையெல்லாம் நனைத்திருந்தது. அவளது அழுகையைப் பார்த்துப் பார்த்து அலுத்ததாலோ என்னவோ தலையை ஒரு உதறு உதறி திரும்பவும் சுருண்டு கொண்டான்.
“பெத்த வயித்துல பெரண்டைய வெச்சிக் கட்ட... இப்படி ஒரு புள்ள எனக்குத் தேவையா...பாழும் வயித்துல நெருப்பு வெச்சித் தீய்க்க...” ‘ஓ’வென்று ஓலமிட்ட அவளது குரல் இரவைக் கிழித்து தெருவெங்கும் பரவியது.
“கெழவி….நிறுத்து. நிறுத்துன்னா நிறுத்தனும் ”குடிகார மாசிலாமணி குரல் இடிபோல் வெளியே கேட்டது. நிக்கவே முடியாத அளவுக்கு போதை தலைக்கேறி தள்ளாடினான் மாசி. “உள்ள வந்தேன்... வாயில மிதிச்சிடுவேன். ஓங்கொரலக் கேட்டாலே எங்க எழவு விழுந்துடுச்சோன்னு சும்மா பகீருங்குது வயிறு. எதுக்குடி அழுவுற...? இப்ப எதுக்கு அழுவுற...? யார் இங்க மண்டையப் போட்டா? ஒனக்கு தான் பொணத்தக் கண்டா பிச்சிட்டுக் கெளம்புமே பாட்டு. அப்புறமெதுக்கு ஒப்பாரிக்கு ஒத்திகை... ஒழுங்கா வாய மூடு... இல்ல... தலையாரிகிட்ட தெருக்காரங்க எல்லாம் சேந்து எந்த எழவுக்கும் உன்னக் கூப்புடக்கூடாதுன்னு கண்டிச்சி சொல்லிடுவோம். அப்பறம் ஒன் பொழப்பு நாறிடும் நாறி!” என்று துண்டை உதறி கத்தி மாதிரி வீசிட்டு நடையக் கட்டினான்.
“ஒழிச்சிடுவன்... யாருகிட்ட...” என்று காற்றிடம் சவால் விட்டு நாக்கைத் துருத்தி எச்சரிக்கை செய்தான் மாசி.
உறவே இல்லாத எத்தனையோ பிணத்துக்காக தொண்டை வறள ஒப்பாரி பாடிய மருதாயி பொழைப்புல மண்ணு விழுந்துடுமேன்னு பயந்து வாயில் துணியைப் புதைத்துக்கொண்டு சப்தம் வராமல் விசும்பினாள்.
கழுவ முடியாத கறையோடு கண்ணீர் அவளது சுருங்கிய கன்னங்களில் உருண்டோடி பின் விக்கித்து நின்றது.
(கல்கியில் வெளிவந்தது)

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...