சனி, 31 ஜூலை, 2010

சர்ச்சைகளின் பெட்டகம் (The Hurt Locker)


இயக்குனர்: கேத்தரின் பிக்ளே



தயாரிப்பாளர்: நிக்கோலஸ் சார்ட்டியர்

 

கதாநாயகன்: ஜெரோமி ரென்னெர்

ஆஸ்கார் வரலாற்றில் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை காதரீன் பிக்ளோ-வுக்குப் பெற்றுத்தந்த படம் The hurt locker (வேதனைகளின் பெட்டகம்)


ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவப் படையில் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் பிரிவுகள் அங்கு ஒரு வருடத்திற்கு ஒரு குழு என்ற சுழற்சி முறையில் பணியாற்றுகின்றன.

மரணத்தின் அருகே சென்று கை குலுக்கி குசலம் விசாரிக்கும் அந்த எமகாதக வேலையில் வில்லியம் ஜேம்ஸ், தாம்சன், ஓவன், ஸான்பார்ன் அடங்கிய குழு 2004-ல் பணியாற்றுகிற போது நேர்கின்ற பரபரப்பான, வேதனையான சம்பவங்களே படத்தின் மையக் கரு.

வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணியில் தாம்சன் இறந்து விடுகிறார். தேசம் விட்டு தேசம் வந்து, சொந்த பந்தங்கள் இல்லாத பூமியில் பழகிய நால்வரில் ஒருவரின் இழப்பு மற்றவர்களை வெகுவாக பாதிக்கிறது.

தாம்சனுக்குப் பிறகு ஜேம்ஸ்தான் வெடிகுண்டுகளோடு உரையாடி, உறவாடி அவற்றை உயிரற்ற ஜடமாக்கும் பணியை செய்ய வேண்டியிருக்கிறது.

குறுந்தகடுகளை விற்கும் பெக்ஹாம் என்ற சிறுவனோடு ஜேம்ஸுக்கு விளையாட்டாக நட்பு உருவாகிறது.

தங்களது அடுத்த வேட்டையின் போது முகம் சிதைந்த இறந்து போன சிறுவனின் வயிற்றுக்குள் வெடிகுண்டு இருப்பதைக் கண்டுபிடித்து, ஜேம்ஸே அதனை வெளியிலெடுத்து அழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இறந்து போன சிறுவன் பெக்ஹாம் தானோ என்ற சந்தேகம் எழ, ஜேம்ஸ் அவன் வேலை பார்க்கும் கடையில் தேடுகிறான். அங்கு அவனைப் பற்றி எந்த தகவலும் சொல்லப்படாமல் போக கவலையுடன் முகாமுக்கு வருகிறான்.

மற்றொரு வேட்டையில் உடனிருக்கும் ஓவனின் இடுப்புக்குக் கீழ் படுமோசமாகக் காயம் படுகிறது. அவன் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப் படுகிறான்.

ஈராக்கிய அப்பாவி ஒருவரின் இடுப்பில் தீவிரவாதிகள் வெடி குண்டு வைத்து கட்டிவிட, அதனைச் செயலிழக்க வைக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் அவர் தூள் தூளாகும் காட்சி உருக்கமானது. இந்த கொடூரமான காட்சியை நேரில் பார்த்தபின் இனி இப்படியான பணியில் ஈடுபடக் கூடாது என்ற மன உறுதி ஸான் பார்னுக்கு ஏற்படுகிறது. படத்தின் இறுதி காட்சியில் பெக்காம் குறுந்தகடுகளை விற்றபடி வருகிறான்.

தங்களுக்கான சுழற்சி முறை முடிந்து ஜேம்சும், ஸான் பார்னும் நாடு திரும்புகின்றனர். ஜேம்ஸ் தன் வேதனைப் பெட்டகத்தைத் திறந்து, கொடூரமான அனுபவங்களை தன் ஒரு வயதுக் குழந்தையிடம் சொல்லுகிறான். ஆனாலும் மீண்டும் வரும் அடுத்த சுழற்சி பணிக்காக திரும்பவும் தயாராகும் காட்சியோடு படம் முடிவடைகிறது.

படத்தில் ஜேம்ஸ்-ஆக வரும் ஜெரோமி ரென்னெரின் நடிப்பு அபாரமானது துல்லியமான முகபாவங்கள், அங்க அசைவுகள் அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகின்றன. பேரி அக்ராய்ட்டின் ஓளிப்பதிவு பாலைவன வறட்சியையும் மீறி அழகியலாக காட்சிகளை பதிவாக்கியிருக்கிறது. ஒரே காட்சியில் வெவேறு கோணங்களை படமாக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் கதையமைப்பு இருந்தாலும் கோணங்களை அடுத்து அடுத்து மாற்றுவதில் குழப்பமில்லாத நேர்த்தியை கையாண்டிருக்கிறார்.

ஒரு ஆவணப் படத்துக்கான சாயலுடன் எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படம் ஆஸ்கார் விருதைப் பெறுவதற்கு முன்னும் பின்னும் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்திருக்கிறது.



அமெரிக்க இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ‘பொஹம்மர்'என்ற இராணுவ வீரர், அமெரிக்கா முழுவதும் மிகப்பிரபலமானவர். அவரது வலைப்பூ மூலம் ராணுவ வீரர்களுக்காக நிதி வசூலித்து பாதிக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய வீரர்களின் குடும்பத்துக்காக உதவி வருகிறார். பொஹம்மர் படத்தில் ஜேம்ஸ் தன்னிச்சையாக பல இடங்களில் முடிவெடுத்து, தன் மேலதிகாரிகளுக்குக் கட்டுப்படாமல் சாகஸங்கள் நிகழ்த்துவது போல் காண்பிக்கப் பட்டிருப்பதைக் கடுமையாக ஆட்சேபித்தார். இராணுவத்தில் கடைநிலை ஊழியன் மேலதிகாரிக்குக் கட்டுப் படாதவன் என்கிற பிம்பத்தை தோற்றுவித்துவிடும் என்பதோடு, படத்தில் வீரர்கள் அணிந்திருக்கும் இராணுவ உடைகளும் தவறானவை. பாலைவனத்தில் அணியத்தக்கவென்றே பிரத்யேகமான உடைகள் தான் அமெரிக்க அரசால் தரப்பட்டன. வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்க பல்வேறு முறைகள் உள்ளன. படத்தில் பெரும்பாலும் கட்டிங் ப்ளேயர், ஸ்க்ரூ டிரைவர் ஆகியவற்றையே அதிகம் பயன் படுத்துவது வர்த்தக படங்களின் அடியொற்றியே எடுக்கப்பட்டிருக்கும் அறியாமையை காட்டுகிறது என்பதும் அவரது குற்றச்சாட்டு.



விருது அறிவிக்கப்படும் முன் படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘நிக்கோலஸ் சார்ட்டியர்' ஆஸ்கார் நடுவர் குழு உறுப்பினர்களுக்கு இ.மெயில் மூலம் இந்தப் படத்தை தேர்வு செய்யும் படி வேண்டுகோள் அனுப்பியது ஆஸ்கார் குழுவை எரிச்சலூட்டியது. அவர் எச்சரிக்கப்பட்டு, விருது வழங்கும் விழாவுக்கு அவர் வரக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டார்.

படத்தின் கதை ‘மார்க்போல்' என்ற பத்திரிகையாளருடையது. இவர் ஈராக் யுத்தத்தின் போது செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் இந்தக் கதையை எழுதியிருந்தார். வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவில் பணியாற்றிய அமெரிக்க இராணுவ வீரர் ஜெஃப்ரி சார்வரின் சாயலாகவே படத்தின் ‘ஜேம்ஸ்' கதாபாத்திரம் படைக்கப் பட்டிருப்பதாக அமெரிக்கா முழுவதும் நம்பப் படுகிறது. இதன் காரணமாக படத்தில் இராணுவம் பற்றிய ஆட்சேபகரமான தகவல்கள் இருப்பதாக தற்பொழுது‘ஜெஃப்ரி' வழக்குப் பதிவு செய்துள்ளார். சிறந்த கதாசிரியருக்கான ஆஸ்கார் விருதை இந்த படத்துக்காகப் பெற்ற மார்க்போல் தான், இப்படத்தின் தொழில் நுட்ப ஆலோசகரும் கூட. எனவே, மார்க்போலுக்கு இந்த வழக்கு கூடுதல் தலைவலியைத் தந்துள்ளது.

இதேபோல 1930-ல் எடுக்கப் பட்ட All Quiet on Western Front என்ற படமும் ஆஸ்கார் விருது பெறும் போது பல சர்ச்சைகளைச் சந்தித்தது. ஜெர்மன் இராணுவ வீரர்கள் மீதான அனுதாபப் பார்வையோடு எடுக்கப் பட்டது அந்த படம். அவர்களின் கொடூரமான இன்னொரு முகத்தை மறைக்கும் முயற்சி என்று விமர்சிக்கப் பட்டது.

2010-க்கான கோல்டன் குளோப் விருதுப் போட்டியில் ஜேம்ஸ் காமரூன் இயக்கிய ‘அவதார்' படம் ‘ஹர்ட் லாக்கரை'ப் பின்னுக்குத் தள்ளி வென்றாலும், ஆஸ்கார் விருதுக்கான போட்டியில், ‘அவதாரை' தோற்கடித்து ‘ஹர்ட் லாக்கர்' பரிசை தட்டிச் சென்றது.



‘அவதார்' படத்தை இயக்கிய ஜேம்ஸ் காமரூனின் முன்னாள் மனைவிதான் ‘ஹர்ட் லாக்கரை' இயக்கிய கேத்தரின் பிக்ளே என்பது மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம்.
 
(கல்கியில் வெளிவந்தது)

செவ்வாய், 13 ஜூலை, 2010

பிரதி

பிரதியெடுப்பதுதான் நடக்கிறது
வாழ்க்கை முழுதும்...

வெயிலெடுத்து போட்டது
நிழலை நிஜத்தின் பிரதியாய்...
மேகமூட்டம் போல்
புகை எழும்பி பரவியது வெளியெங்கும்....
பெருக்கெடுக்கும் வியர்வை துளி போல்
கசிகிறது நீர்த்துளி கண்ணிலிருந்து

கண்ணாடி துண்டங்கள் போல்
ஜ்வலிக்கிறது கானல் நீர் வரி வரியாய்...
பிரதிடுப்பதுதான் நடக்கிறது
உலகமெங்கும்....

கடற்கரை மணலில் பதிந்து கிடந்தது
எவர் முகத்தின் பிரதியோ...
இழுத்து சென்ற ஆழிப் பேரலை மட்டுமே அறியும்
எங்கே தவிக்கிறதோ எவராலும் பிரதி எடுக்க முடியாத
உயிர்....

கவிஞனாயிருத்தல்

வறண்டு பிளந்த நிலத்தினுள்
வதங்கித் தளர்ந்திருக்கும் வேர்தேடி
நனைத்து உயிர்ப்பிக்கும்
ஓர் மழைத்திவலை போல
இருக்க நினைத்ததுண்டு...

குளிர்ந்த கிரணங்களால் இரவை நிரப்பி
பாலாய்ச் சிரிக்க
ஒரு நிலவைப்போல்
இருக்க நினைப்பதுண்டு...

தூங்கும் மொட்டிதழை வருடியவிழ்த்து
கொஞ்சம் வாசம் உறிஞ்சி
செல்லும் திசைதோறும்
விதைத்துப்போகும்
காற்றாய்த் திரிய நினைத்ததுண்டு...

அலையாய் அலைந்து மணலை அள்ளி
உள்ளிழுத்து கர்வம் ததும்பக் கொந்தளிக்கும்
கடலாய் இருக்க நினைத்ததுண்டு...

உயிரில் இழைத்து உதிரம் நிறைத்து
பிரபஞ்ச தரிசனம் தந்த தாயாய்ப்
பிரதிபலிக்க வார்த்தைகளால் வாழ்க்கையில்
முடிந்ததில்லை
எதுவும் சாத்தியப்படாதபோது
எல்லாவற்றுக்கும் மாற்றாய் ஒன்றுண்டு.

அது‘ஒரு கவிஞனாயிருத்தல்'

மழையை ரசியுங்கள்

பூமிப் பக்கங்களில் ஒவ்வொரு முறை எழுதும்போதும்
ஒவ்வொரு பொருளைத் தரும்
மழைவரிக் கவிதைகளை வாசியுங்கள்
உங்களுக்கு அருளப்பட்ட
வாழ்வின் அர்த்தம் புரிபடலாம்.

அடர்ந்த தூக்கத்தில்ஆழ்ந்து
அதிகாலைப் பனியை
தவறவிட்டவர்களுக்காக
முதிர்பனியாய் தன்னை
நகலெடுத்துக் கொண்டிருக்கிறது மழை!

நீங்கள் வீடு திரும்பும்போது
இலை வழியே பன்னீரைத் தூவியபடி
ஒரு வரவேற்பாளனைப் போல்
பூ இதழ்களில்அலங்கார விளக்குகளேற்றிக்
காத்திருக்கிறது மழை!

அழைத்துச் செல்ல எவருமில்லாமல்
படுக்கையில் கிடக்கும்
முதிர்பருவத்தினருக்கு
ஜன்னல் வழியே
சாரல் வார்த்தைகளால்
ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது மழை!

எல்லா வெப்பத்தாலும்
சூடேறிப்போயிருக்கும் உங்களை
பாதம் வழியே தணிக்க
வாசலருகே ஆங்காங்கே கிடக்கின்றன
மழைத் திட்டுகள்.

உப்புக் கலக்காத மழைக்கண்ணீரை
நாவிலேந்துங்கள்
வானிலிருந்து இடறி விழுந்த
மழைக் குழந்தைகளை
முடிந்தால் மடியிலேந்துங்கள்...!

உங்கள் தோட்டத்து ரோஜாவை
வெயில் விரல்கள் பறித்துவிடாமல்
சுற்றி நடும் மழைக் கம்பிகளை
நன்றியுடன் ரசியுங்கள்!

பள்ளிவிட்டு தனியே வரும்போதெல்லாம்
தோளோடு அணைத்தபடி
உடன்வரும் மழைத் தோழனை
வீட்டின் வாசல் வந்ததும்
அப்படியே விட்டுவிட்டு வந்துவிடாதீர்கள்...
நட்பிற்கு இலக்கணமல்ல அது...

ஊன்றத் துடித்து தோற்று
தரையில் பரவும் மழையின் பாதங்களை
மிதித்து விடாதீர்கள்...
அதன் போக்கில் நகர விடுங்கள்.

மழைப் பரிவாரங்களின்ஆரவாரமான ஆர்ப்பரிப்பு
சிலசமயம் வலிப்பது போல் தோன்றும்...
வசை பாடாதீர்கள்...
அது பூமி விழிப்பிற்கான
எழுப்புதலாய் இருக்கலாம்...
ஒரு தாயின் அதிகாலை உசுப்புதலைப் போல.

பூமி விரிப்பில் மழைத் தூரிகைகள்
வரைந்து முடித்த ஓவியங்களில்
ஒரு சோம்பேறிச் சூரியன்
தாமதமாய் வர்ணம் கலக்க முயற்சிப்பதுபோல்
வாளாவிருந்து விட்டுப்பின் வருந்தாதீர்கள்.

மிகச்சரியாக மழையின் எந்தச் சொட்டு
உங்களைசிலிர்க்கச் செய்திருக்குமென்று
இனம் பிரித்துவிட முடியாது...
எல்லாச் சொட்டுக்களையும்
நிதானமாகச் சேகரியுங்கள்.

ஏனென்றால்-மழலைப் பருவமும்
மழைச் சொட்டுக்களும்
இழந்தால் கிடைப்பதில்லை!!

வரம்

கண்டதைக் கிழிக்கலாம்...
கண்டபடி திட்டலாம்...
காறி உமிழலாம்..

சூழலின் ஐளனத்தை உதறி
குமுறிக் குமுறி ஆழலாம்

மணல்வெளியில் மணிக்கணக்காய் புரளலாம்...
உடைகளற்றுத் திரியலாம்...

கூத்தாடி கூத்தாடி கையில் பட்டதை
போட்டுடைக்கலாம்...

கால் தடுக்கிய கல்லை
நையப் புடைக்கலாம்..

தோன்றும் போதெல்லாம் உரக்க சிரிக்கலாம்

சூரியனுக்கு நேராய் திமிராய் உறங்கலாம்...
நிலவொளியில் குபீரென
குளத்தில் குதிக்கலாம்...

துயரங்களின் துரத்தல்களிலிருந்து
தப்பித்து திரியலாம்
பைத்தியமாகும் வரம் மட்டும்
கடவுளிடம் கிடைத்துவிட்டால்...

நேரமே இல்லை..

கற்றுக்கொண்டால் போயிற்று
என்ன பிரமாதம்
என்று கைவிடப்பட்ட வித்தைகள் ஏராளம்

விடிந்தால் முடித்துவிடலாம்
என்று தள்ளிப்போடப்பட்ட
காரியங்கள் அநேகம்

பொருத்திய இடத்தில்
சுற்றியபடி
நகர்ந்தன கடிகாரத்தின் முட்கள்

சுழன்ற இடத்திலேயே
சூரியனையும் சுற்றி
பகலையும், இரவையும்
விடியவும், சாயவும் வைத்தது பூமி...

தூக்கத்தையும், கனவுகளையும்
தின்று கொழுத்து கழிந்தன பொழுதுகள்

எதேச்சையாக எதிரில் சந்தித்த
அதிமுக்கியமான நபரிடம் சொன்னேன்
'நேரமே கிடைப்பதில்லை' என்று..

அணுவைப் பிளந்தவனுக்கும்,
ஆளப்பிறந்தவனுக்கும்
எல்லா நிமிடங்களும்
எப்படி சரியாக வாய்க்கின்றன
என்று வியந்தபடி
காலியாயின தேநீர்க் கோப்பைகள்...

மழ

தனத்துக்கு காய்ச்சல் முழுவதுமாக விட்டுருந்தது. ஊர்பட்ட போக்கிரித்தனத்தை பண்ணிட்டு இந்த புள்ளைங்க தூங்கறப்பதான் எம்புட்டு அழகு!! கணேசன் அவனையும் அறியாமல் அவளது பிஞ்சு கால்களைப் பிடித்துவிட்டான். காய்ச்சல் கண்ட வேகத்துல உலர்ந்துபோன உதடுகள் காய்ந்து வெளுத்துப்போயிருந்தது. தேய்க்கும்போது தீய்ஞ்ச துணிமாதிரி வானம் கறுத்துக்கிடந்தது. இருட்டட்டும் ஒரு பாட்டம் ஆடித்தீத்துப்புடலாம்னு கறுவங்கட்டிகிட்டுத் திரியிற குடிகாரப்பய மாதிரி மேகம் அங்குமிங்குமாக அலைந்து திரிந்துகொண்டிருந்தது. கணேசனுக்கு அடுப்படி பக்கம் திரும்பிப் பாக்கவே பயமாக இருந்தது. மேல்கூரை பிஞ்சி அங்கங்கே நட்சத்திரம் போல பொத்தலாகத்தெரிந்தது.கால் அடிப்பட்ட குருவி பறக்கப்பிரயாசைப்பட்டு தவ்விக்குதிப்பதுப் போல ஒன்றிரண்டு கீற்றுத்துண்டு காற்றில் படபடத்தது. இடைவெளியில்லாமல் கொஞ்சம் நெருக்கமாக வேயப்பட்டிருந்த கூரைக்கு கீழே தேவானை தூங்கிக்கொண்டிருந்தாள். ஈர்க்குச்சி செருகப்பட்ட அவளது காதுத்துளை கணேசனது மனதைப் பிசைந்தது. போனவாரம் வரை அதில் மின்னிக்கொண்டிருந்த ஒத்தக்கல் தோடு இப்ப காசி பேங்கர்ஸ் கடையில் .... வெழலடிக்க எப்படியும் ஆயிரத்தைநூறு ஆகும்னுதான் அத அடகு வச்சான். இந்த தனம் குட்டி இப்படி மழயில நனஞ்சு காய்ச்சல வாங்கிட்டு வருவான்னு யாரு கண்டா....? ‘சுர வேகத்துல புள்ளைக்கு தூக்கிப்போடறப்ப என்னுமா கையை இறுக்கிப்புடிச்சு காசைக்கட்ட முடியும்' அப்படின்னு வாய்விட்டு சொல்லி தன்னைத்தானே நியாயப்படுத்தி, யாரும் கேக்காமலே யாருக்கோ சொல்வதுபோல சொல்லிக்கொண்டான் கணேசன். கூரப்போனாப்போவுது புள்ள உசுருப் போனா வருமான்னு பிரைவேட்ல சேத்தான். மூணு நாளைக்கு அப்புறம்தான் அன்ன ஆகாரமே உள்ளப்போச்சு தனத்துக்கு.மாத்திரை, மருந்து ஊசின்னு அது ஆச்சு எண்ணூத்து அம்பது. ஒசக்க பாத்தான் கணேசன், எப்பிடியும் பத்து பன்னண்டு கட்டு கீத்து ஆயிடும்போல இருக்கு. பிஞ்சத மட்டுமா மாத்தமுடியும்? கட்டு இருநூத்தி முப்பது சொல்றான். அத நெனச்சாதா ஒரே வெசனமா இருக்கு கணேசனுக்கு. ஒத்தாசைக்கு எதுக்கும் இருக்கட்டும்னு சம்முவத்துக்கிட்ட சொன்னப்ப, அவந்தான் சொன்னான்'அது ஏண்ணே ஒத்தைக்கு ரெட்டி வேல, காத்தடிகாலத்துல கெளப்பிகிட்டு கோராமையா பூடும். கூட அஞ்சு பத்தானாலும் போவுதுன்னு வெழலடிச்சுடுவொம்னான். அதுவும் சரிதன்னு பட்டுது. எல்லா நாயத்தையும் சரிகட்டிப்புடலாம்தான்.... காசிருந்தா... ஒரு ஒரு கஷ்டத்துக்கும் ஒவ்வொண்ணா உருவி மூளியாப்போயிட்டா தேவானை. என்னுமோ ரெண்டு மாசத்துல காசு பொரண்டடிச்சு கொல்லக்கதவ பேத்துகிட்டு வந்துடும்கறாப்ல எல்லாத்தையும் வீம்பா அடகு வச்சுடறது. அப்புறம் அடுத்த கஷ்டம் வந்தப்புறம், முன்னது வச்சது வச்சபடி இன்னமும் மூக்காம இருக்கறது நாவகம் வரும். எல்லாபக்கமும் கரண்டு பொட்டி வச்சு தேய்க்கற பசங்க கெளம்பி ஈசலு கணக்கா பெருத்தப்புறம், அடுப்புக்கரியை ஊதி, ஊதி தேய்க்கற கணேசனுக்கு யாவாரம் படுத்துடுச்சு.கால்ல வெந்நித் தண்ணிய கொட்டிகிட்டு அவதிகொல்லைன்னு அவசரப்படற ஆளுங்களுக்கு எதிலயும் பொறும இல்ல. வேல சுத்தம் பத்துன கவலையில்ல. கணேசன் ஒரு தரம் தேச்சா கல்லணை பாலத்து செவுரு கணக்கா நூல் புடிச்சாப்புல மடிப்பு நீட்டா இருக்கும்னு செவலோகம் வாத்தியாரு அவ்வளவு ஒசத்தியா சொல்லுவாரு. இப்பல்லாம் அந்த மாரி ஆள எங்க பாக்க முடியுது? சோத்துக்கையால குடுத்துட்டு ஆச்சா, ஆச்சான்னு பீச்சாங்கைய நீட்டறான். குத்துக்காலிட்டு தந்தரையில உக்காந்திருந்த கால் மரத்துப்போயிருந்தது. தாங்கறவனுக்குதான் இந்த சாமி அடுக்கடுக்கா கஷ்டத்த குடுக்கும். வெளியே தலைய நீட்டி ‘ ஏ மானங்கெட்ட மானமே ஏன் இப்பிடி பேயாட்டாம் பேஞ்சி என் பொழப்ப கெடுக்கற? இப்ப நீ பேயலன்னு யாரு அழுதா? நாசமாப் போவ' அப்பிடின்னு சாபம் வுட்டான். தனத்தோட கொட்டம் வர வர தாங்க முடியல. அதுக்காவ அந்த புள்ளைய வய்யவா முடியுது? ரொம்பவும் வாயாட ஆரம்பிச்சிட்டா. பச்ச வெங்காயத்த கடிச்சுக்கிட்டு பழஞ்சோறு திங்கறாப்புல அம்புட்டு ருசியாத்தான் இ ருக்கும் அவ பேச்சு. எல்லா கஷ்டத்தையும் அவளோட ஒரு சொல்லு கரைச்சு எடுத்துட்டு போயிடுது. தலையாரி வூட்டு டவுன்கார மருமக ‘அயன்காரரே, அயன்காரரே' அப்பிடின்னு கூப்புட்டது நாளடவுல ‘அயனாரே'ன்னு ஆயிப்போச்சு .அத பாத்து குசும்பா ‘ அய்யனாரே, அய்யனாரே'ன்னு தனம் குதியாளம் போட்டுகிட்டு கணேசன கூப்புட, கூர கொள்ளா சிரிப்பு அம்புட்டு பேருக்கும். ‘ அய்யனாரே, அய்யனாரே குதிர இல்லியா அளுக்குத்துணி தூக்க ஒரு களுத இல்லியா'ன்னு பாட்டு வேற.... ஒரு கைய இடுப்புவரைக்கும் மடக்கி, இன்னொரு கைய கக்கத்துல வச்சி அடிச்சி, அடிச்சி பாடறப்ப கண்ணுல தண்ணி வர வயத்த புடிச்சுகிட்டு சிரிக்கற அந்த நிமிசத்துக்கு எத வேணாலும் அடகு வெக்கலாம். ‘தை,தை'ன்னு ஒவ்வொருதாட்டி அவ ஆடும்போதும், அந்த காலுக்கு முத்து வச்ச கொலுசு வாங்கிப்போடணும்னு கொள்ள ஆசை தேவானைக்கு. தனத்தோட காதுகுத்தி நடந்தப்ப மாமன் சீர்ல கொலுசு வந்துடும்னு ரொம்பவும்தான் ஆசையா இருந்தா தேவானை. ஒரு நூறு ரூவா நோட்ட கவர்ல போட்டுட்டு நோவாம கெளம்பிப்போன அண்ணங்காரன் மேல அம்புட்டு கோவம் தேவானைக்கு. ‘பொருளா வந்துருந்தா கொஞ்ச நாளைக்காவது அவ கால்ல கெடந்துருக்கும். கடைக்குப்போய் வாங்குனா எங்க இன்னும் நூறு கிழியும்னு பணமா வச்சிடறேன்னு அந்த கூமுட்டதான் சொல்லிச்சுன்னு, கைசெலவுக்கு ஆவும்னு தலய தலய ஆட்டிகிட்டு இந்த குந்தாணி சரின்னுட்டா வரும்? பணம் காசு கய்யில வந்ததான் பஞ்சு முட்டாய் கணக்கா கரஞ்சி போவுதே. இது மட்டும் என்னாவும்? கொலுசு காசு கரிமூட்டையா போச்சே'ன்னு நெஞ்சு கொள்ளா கோவத்துல சமயங்கெடைக்கறப்பல்லாம் பொருமுவா தேவானை. அவ அண்ணங்காரன் மட்டும் என்ன பண்ணுவான்? திரும்பி வரும்னு தெரிஞ்சாதானே சீரும் நெறக்க வரும்? உருப்பிடி போட்டவன் எண்ணி குடுத்துட்டு, எடுக்க வர்றச்ச சரிபாக்கற மாரிதான மனுசன் வாழ்க்க அள்ளு புள்ளிகணக்கா பூட்டுது.. ஈசான மூலையில இடி இடிக்கற சத்தம் மண்டைய பொளக்கற மாதிரி இருந்தது. காளிமுத்து முந்தா நாளு வூட்டுக்கு மின்னாடி நின்னுகிட்டு, வாய்க்கு வந்தபடியெல்லாம் ஏசிட்டுப்போனதும் இப்படிதான் மண்டைய இடிக்கற மாதிரி இருந்தது. மளிகை பாக்கிய நெனச்சா மறுவேளை கவளம் வயத்துக்குள்ள எறங்காது போல இருந்தது. இனும காளிமுத்து கடையில சரக்கு வாங்க முடியாது. துணிக்கடை பாய்கூட மின்ன மாதிரி மொகங்குடுத்து பேசறதில்ல. ஆச்சு தீவாளி வரப்போவுது.வருசத்துக்கு ஒண்ணாச்சும் எடுத்துக் குடுக்கலன்னா என்னுமாதான் பொம்பள புள்ளைவோ சொச்ச நாள ஓட்டுவாங்க? வெளுத்துப்போன துணி மறுதாட்டி சலவைக்கு வந்தா உடையவங்கிட்ட மொள்ளப் பேசி வாங்கிடலாம்தான். அவ வயசு பசங்க துணி அடிக்கடி வர்றதில்லியே. என்ன பொழப்புடா இது? கட்டிக்க ரவ துணியும், கொட்டிக்க பருக்க சோறும் சம்பாதிக்க துப்பில்லாம என்னத்த வாழ்ந்து என்னத்த கிழிக்கப்போறோம்னு அலுப்பா இருந்தது கணேசனுக்கு. ஆவணி முடிஞ்சு பொரட்டாசி பொறந்தாச்சு இன்னும் ரெண்டு மாச மழக்காலத்த எப்பிடி தள்றதுன்னு நெனச்சா பகீர்னு வயித்த புடிக்குது. ஈச்சங்குடி அய்யனாரே, எப்பிடி இந்த வூட்ட காவந்து பண்ணப்போறேன்? மண்ணுத்தர இப்பமே ஓதம் காத்து உப்பிட்டு கெடக்குதே, மேக்கூர இல்லாம மொத்த மழயும் உள்ளப் பேஞ்சா எத்தினி பாத்திரத்த வச்சு புடிக்கறது? பொரட்டாசின்னதும்தான் நெகா வந்தது கணேசனுக்கு. ஆஹா... போன வருசத்துக்கு முந்தின வருசம் கார்த்திகையிலதானே புள்ள வளவி ரெண்ட காசி கடயில அடகு வச்சது. கய்யில இருந்த காச பரபரன்னு எண்ணினான் கணேசன். அரநூத்தி முப்பத்தி ஆறு ரூவா இருந்தது.. ஆத மூட்டு திலுப்பி வித்தோம்னா சேதாரம் அது இதுன்னு தள்ளுனாலும் ஒரு ஆயிரத்து எரநூறு தேறும். என்னுமோ அவசரத்துக்கு ஐநூறுக்கு வச்ச நாவகம் கணேசனுக்கு... “ தேவானை, தேவானை” பரபரன்னு எழுப்பினான் கணேசன். “ அட, இப்ப என்ன அவதிகொல்லன்னு இப்பிடி போட்டு பொறாண்டுற” “ அடி கெழகாளி, மானம் குமுத்துகிட்டு வருது. அடுப்புக்கு நேரா கீத்து கெளப்பிகிட்டு கெடக்குது. என்னாடி அப்பிடியாப்பட்ட தூக்கம் ஒனக்கு.” திகிலோடு ஒசக்கப்பாத்த தேவானை, “ என்னாய்யா பண்றது, வச்சிருந்த காசும் கொஞ்சம் கொஞ்சமா கரையுது. இது மெரட்டறத பாத்தா கண்ணு முளிப் பிதுங்குது. ஏ! பச்ச வாழி அம்மா ஒனக்கு கருணை இல்லியா?” ரெண்டு கையையும் நெஞ்சுக்கு நேரா நீட்டி கண்கலங்கினாள். “ அது செரி... இந்த தனம்குட்டி வளவி ரெண்டை காசி கடயில வச்சமே,அது போன வருசத்துக்கு முந்தின வருசம் கார்த்திகயிலதானே?” “ ஆவணின்னு நெனக்கிறேன்யா. ஒன் தங்கச்சி மவ சடங்கானப்போ, மொறை செய்ய காசில்லாமத்தான வச்சோம்” “ என் வூட்டுக் காரியம்னா ஒனக்கு கல்லுல அறைஞ்சா மாதிரி அம்பது வருசம் ஆனாலும் நாவகம் இருக்குமே” “ இல்லாததையா பொனைஞ்சு சொல்லிப்புட்டேன். அண்ணங்காரன் கஸ்டப்படறானேன்னு கொஞ்சமாச்சும் இது இருந்துச்சா அவளுக்கு? பட்டுப்புடவ எடுத்து, பதினோரு தட்டு வரிசையும் வச்சாதான் தனக்கு கவுரதன்னு மூக்கால மூணு பாட்டம் அழுததுலதான் எம்மவ வளவி அடிச்சுகிட்டு போயி அடகு கடயில அடஞ்சி கெடக்கு, அது மட்டும் வாகா மறந்துடுமே ஒனக்கு” “ அத வுடு, எம்மானுக்கு வச்சோம் அத?” “ ஆயிரத்து முந்நூறுக்கு வச்சி, சீட்டு காசு மொதமாச வட்டி எல்லாம் போவ ஆயிரத்து சொச்சம்தானே எடுத்துட்டு வந்தே” “ கிழிஞ்சுது போ, நா ஐநூறுக்கு வச்ச நாவகத்தில, அரநூத்தி சொச்சம் கயில இருக்கே மூட்டு யார்கிட்டயாவது ஒரு ரெண்டாயிரத்துக்கு வித்தா வெழலடிக்க தேத்திப்புடலாம்னு பாத்தேன்” “ மூக்கர எண்ணம் இருந்தாத்தானெ ஒனக்கு எம்மானுக்கு வச்சோம்கற நெகா இருக்கும்? இப்பமாச்சும் வந்துச்சே. காசிதான் பழய நகைய வாங்கிக்கறனாமே, அவங்கிட்டயே வெலப்பேசி வித்துட்டு கெடச்சத வாங்கிட்டு வா. மிச்சத்த பெரட்டிக்கலாம் ” “ செரி, சாமி படத்துக்குப் பின்னாலே வச்ச ஜவ்தாளு பைய எடு. அதுலதான அம்புட்டு சீட்டும் இருக்கு” சாமியெல்லாம் சந்தோசமாக சிரித்துக்கொண்டிருந்தார்கள். சாமி வெளக்கின் சுடர் காற்றில் துடித்தபடி இருந்தது. படத்துக்குப் பின்னாடி இருந்த ஜவ்தாளை எடுக்க கை நீட்டியபோது சட்டெனப்பட்ட வெளக்கின் சூடு தேவானைக்கு இதமா இருந்தது. சுடரின் நுனியைப்பிடித்து நீவிவிட வேண்டும்போல ஒரு ஆசை அவளுக்குள் எழுந்து அடங்கிப்போனது. தூறல் வலுக்க ஆரம்பித்தது. கணேசன் வெளியேப்போய் ஒரு மணி நேரமாவது ஆகும். இன்னும் வரக்காணோமே. பணம் வராட்டிப்போவுது, மனுசன் நல்லபடியா வந்தாப்போதும்னு இருந்தது தேவானைக்கு. ஒவ்வொருதாட்டி கணேசன் வெளியப்போறப்ப திரும்பி வர வரைக்கும் இருப்புக்கொள்ளாது அவளுக்கு. தனம் இன்னும் தூங்கியபடியே இருந்தாள். பாவாடை மேலேறி கெண்டைக்கால் கண்டுகண்டா பாக்க அழகாக இருந்தது. அதிலயும் படுத்திருந்த பாயின் வரிகள் படிந்திருந்தது இன்னும் அழகாக இருந்தது. எழுந்ததும் சுத்திப்போடணும் புள்ளைக்கு நினைத்துக்கொண்டாள் தேவானை. அடுப்பங்கரையில் மழத்துளி பொட்டு பொட்டாக விழுந்தது . ‘இன்னும் வலுத்தா அடுப்பும் நனஞ்சு, தரையும் நசநசத்துப்போயிடுமே, என்னப்பண்ணுவேன் மாரியாத்தா, விடிஞ்சதும் நாலணாவுக்கு சூடம் ஏத்திடறேன். மழய நீ பாத்துக்க'என்றாள் வாய்விட்டு. ‘சாமிதான் எத்தினி நாளு பாத்துக்கும்? மழய கட்டற மந்திரத்தை எவனாவது ஒரு மந்திரவாதி காதுக்குள்ளார சொல்லிட்டு போவக்கூடாதா? போன வருச மழயில செவுரு வுளுந்து மேலத்தெரு ரேணுகா செத்துப்போனா. நல்லவங்க இருக்கறதுனாலதான் ஊருக்குள்ள மழப்பேயுமாமே. எல்லா நல்லவங்களையும் எல்லை தாண்டி வுட்டுடு மாரியாத்தா.' கன்னத்தில் போட்டுக்கொண்டாள் தேவானை. வானத்துக்கு மேல உரல் உருண்டது மாதிரி இடி இடித்ததில் தனம் தூக்கம் கலைந்து புரண்டாள். மழையின் வேகம் படமெடுத்த பாம்பின் ஆக்ரோஷம் போல அதிகரித்தது. சட்டென்று ஏதோ தோன்றியவளாக மரஸ்டூலை எடுத்து குளிக்கவும், துணி துவைக்கவும் என வீட்டின் மேற்கு மூலையில் சிமெண்ட்டால் வரம்பு கட்டி ஒதுக்கி வைத்த இடத்தில் போட்டாள். அதற்கு மேலே பச்சை ட்ரங்க் பெட்டியைப் போட்டாள். அதன் மீது ஏறி நின்று பார்த்த போது உயரம் கூரையைத் தொட சரியாக இருந்தது. அதிலிருந்து நல்ல கீற்று நான்கை பாலைக்கயிறை அறுத்து உள்பக்கமாய் இழுத்தாள். மறுபடி ஸ்டூலையும், ட்ரங்க் பெட்டியையும் இடம் மாற்றி அடுப்புக்கு பக்கம் போட்டாள். அதன் மீதேறி அதற்கு நேராக பிய்ந்துப்போன கீற்றை அலக்காக மேலே தூக்கி, நல்ல கீற்றை செருகினாள். பாலைக் கயிறால் பலமாக கட்டினாள். மழத்தண்ணி விழுவது மட்டுப்பட்டது. ‘குளிக்கற எடம்தானே ஒளுவுனாப்போவுது. அடுப்படி தப்பிச்சது' என தனக்குள்ளே சொல்லிக்கொண்டு பெருமூச்சுவிட்டாள். மறுபடியும் வாசல்கதவருகே வந்து வெளியே எட்டிப்பார்த்தாள். கணேசன் ஓட்டமும் நடையுமாக ஓடி வருவது தெரிந்தது. கறுப்பு முகம்தான் என்றாலும் தண்ணி பட்டு வழிந்தது அழகாக இருந்தது.” உள்ள வாய்யா, உள்ள வா! செத்த நின்னு வரக்கூடாது?” கடிந்தபடி முந்தானையை எடுத்து அவன் தலையை துவட்டினாள். “ இருக்கட்டும் இருக்கட்டும், நீ மொதல்ல உள்ள போ, வெல்லக்கட்டியா நானு நனஞ்சா கரைஞ்சுப்போவ?” எனக்கேட்டபடி சட்டென்று கூரையை நிமிர்ந்துப் பார்த்தான். “ அட, அதுக்குள்ளாற இப்பிடி ஐடியா பண்ணிட்டியா? இதுவும் சரிதான்” “ என்னப் பண்ணச்சொல்ற அடுப்ப எப்பிடி காப்பாத்துறது? அது செரி, வளவிய வித்துட்டியா?” இடி இன்னும் பலமாக இடித்து அங்கும் இங்கும் ஓடி யாரையோ துரத்துவது போல ஆட்டம்காட்டியது. சப்தம்கேட்டு விழித்த தனத்தின் பார்வையில் வீட்டின் உள்ளே குளிக்கிற இடத்தில் பெய்த மழைதான் கண்ணில் பட்டது. ‘அய்' என்று துள்ளி எழுந்து சிமெண்ட் வரம்புக்குள் குளம் கட்டி நின்ற தண்ணீரில் ஓடி நின்றாள். தேங்கியநீரில் ‘ப்ளக், ப்ளக்'கென்று விழுந்த துளிகள் அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. கைதட்டி தன் ரசிப்பை வெளிப்படுத்தியவள், பாவாடையை தூக்கி சிறுவட்டமாக ஆக்கி, மழ அடிக்குது, மழ அடிக்குது இடியும், மின்னலும் சேந்து மழ அடிக்குது தெப்பக்குளம் போல தண்ணி தேங்கி நிக்கிது சீமத்துரையப்பாக்க நாம கப்பல் வுடலாம் மழ அடிக்குது, மழ அடிக்குது... ஆட்டமும் பாட்டுமாக குஷியாக குதித்தாள். தேவானைகோவத்துடன் நகர்ந்து அவளை நோக்கி கிளம்ப, கணேசன் வலுவாக அவள் கையைப்பிடித்து நிறுத்தி ‘போகட்டும் விடு' என்பது போல சைகை காட்டினான். குதுகூலமாக மூன்று வட்டம் சுற்றியவள் அனிச்சையாக வாசல் பக்கம் பார்க்க, அங்கே கணேசனும் தேவானையும் நிற்பதைப்பார்த்து பயந்து நிறுத்தினாள். குறும்பாக சிரித்தபடி முன்னே வந்த கணேசன், கயிலிருந்த பேப்பரை கப்பல் போல செய்து தண்ணீரில் விட்டபடி... கப்பல் ஓடுது ...கப்பல் ஓடுது... வீட்டுக்குள்ள கப்பல் ஓடுது எங்க தனத்துக்குட்டி காலடியில கப்பல் ஓடுது... என்று புதிதாக பாட்டுக் கட்டி தனத்தின் கையைப் பிடித்து சுற்றினான். “ நல்லாருக்கு அப்பனும் மவளும் பண்ற கூத்து. இப்பதான் அவளுக்கு காய்ச்ச வுட்டுருக்கு. அந்த நெகா இல்லாம என்ன ஆட்டம் மழத்தண்ணியில..?” என்று பொய்யாக கோபத்தைக்காட்டியபடி அவர்களருகே வர, தேங்கிய நீரிலிருந்து தன் பிஞ்சுக்கையால் அவள் முகத்திலடித்தாள் தனம். “ வர்றேன், வர்றேன் களுத அப்பன் கூட இருக்கற தகிரியமா?” வரம்புக்குள் உற்றுப்பார்க்க, கப்பலாக நகர்ந்து நகர்ந்து சென்றது காசிக்கடை ரசீது மாதிரி தெரிந்தது. ஒரு கணம் திகைத்தவள் கணேசனைப்பார்த்து கண்களால் கேட்டாள். அவன் ஒசக்க கை காண்பித்து தலையில் தண்ணீர் தெளித்தான்.'முழுவிடிச்சா' என்று சைகையால் கேட்டாள். அவன் மெல்ல தலையசைக்க, அவளது வயிற்றில் துக்கம் உருண்டு திரண்டு தொண்டையை அடைத்தது.எதுவும் அறியாத தனம் அவள் கைப்பிடித்து வரம்புக்குள் இழுக்க, ஏற்கனவே பலகீனமாய் நின்ற தேவானை சுலபமாய் உள்ளே நகர்ந்தாள். ‘தைய தைய' என்று குதித்த தனத்தின் சிறு பாதம் தெறித்த நீர் அவளை சற்றுத் தணிக்க, அந்த ஒரு கணத்தில் எல்லாம் மறந்து போக, தேவானையும் ஆட்டத்தில் சேர்ந்துகொண்டாள். மழத் தண்ணி கரித்துக்கொண்டு ஓடியது

சுடுநிழல்

புகைப்படங்கள் இல்லாத வரவேற்பறைகள் அத்துனை அழகாய் இருப்பதில்லை. எல்லா புதிய ஒப்பனைகளும், புதிய அடையாளங்களும் களைந்து அவற்றில் தெரியும் அழகற்ற முகங்களுக்கும் ஒரு ஈர்ப்பு சக்தியை எப்படியோ கேமரா ஒளி வழங்கிவிடுகிறது. அறிமுகமில்லாதவர்களின் வீடுகள்கூட எனக்கு பெரும்பாலும் அந்நியமாக இருப்பதில்லை, அந்த வீடுகளின் சுவர்களை புகைப்படங்கள் அலங்கரிக்கும் பட்சத்தில்... எதிர்பாராமல் ஆல்பங்கள் கிடைத்துவிட்டால் அதைவிட மகிழ்ச்சியான தருணம் வேறெதுவும் இல்லை. ஏதேனும் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட உங்களது முகம் ஆல்பத்தில் இருக்கும் என்கிற அனுமானம் இருந்தால் அப்பொழுது அந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பக்கத்தை புரட்டும்போதும் அவை ஏற்படுத்தும் குறுகுறுப்பு அலாதி சுகம்தான் என்பதை நீங்களும் கூட சில சந்தர்ப்பங்களில் உணர்ந்திருப்பீர்கள். அப்படித்தான் ஒரு அபூர்வமான ஆல்பம் சில சிதிலங்களுடன் எனக்கு என் பாட்டி வீட்டில் பொங்கல் விடுமுறைக்கு போனபோது கிடைத்தது. வீட்டை வெள்ளையடிக்க எல்லா பொருட்களையும் இறக்கி ஓரிடத்தில் சேர்த்தபோது இதுவரை புலப்படாத ஆல்பம் தட்டுப்பட்டது. வெள்ளையடிக்கும்போதும், வீட்டை காலிசெய்ய முற்படும்போதும்தான் நீங்கள் உங்கள் வீட்டின் எல்லாப்பகுதிகளையும் முழுவதுமாக சுற்றிவருவீர்கள். அப்பொழுதுதான் உங்கள் வீட்டில் இதுவரை நீங்கள் பார்த்திராத பகுதிகளும் தென்படும். “ பாட்டி இதென்ன இங்க ஒரு ஆல்பம் கெடக்கு?” “ இந்த வீடு கிரஹப்பிரவேசத்தப்போ எடுத்த ஃபோட்டோல்லாம் அதுல இருக்கு. ஆமா அது எப்படி உன் கையில கிடைச்சுது?” “கூட கொஞ்சம் பழைய ஃபோட்டோல்லாம் இருக்கு போல....” “ ஆமாமா எல்லாத்தையும் அதுலதான் ஒரு சமயம் போட்டுவச்சது. உங்கப்பன் உன் வயசுல மன்னம்பந்தல் காலேஜ்ல படிக்கறச்ச புடிச்ச ஃபோட்டோ கூட அதுலதான் இருக்கு. உன்னை மாதிரி உங்கப்பனும் லட்சணமா இருப்பான்.” கிணறு தோண்ட, புதையல் கிடைத்த மகிழ்ச்சியில் ஓரமாய் அமர்ந்து ஆல்பத்தைப் புரட்டினேன். “ இதென்ன பாட்டி எனக்கு காது குத்தினப்போ எடுத்தது போலிருக்கு” “கிரஹப்பிரவேசத்தோட சேர்த்து உனக்கு காது குத்தினது. அப்பல்லாம் கலர் ஃபோட்டோ எடுக்கற பழக்கமெல்லாம் ஏது? எல்லாம் கறுப்பு வெள்ளைதான் அடையாளம் தெரியுதா உனக்கு?” “ காது குத்தினப்போ எடுத்ததா? அப்போ உன்னோட அழுமூஞ்சியை பாக்கணுமே.” என்றபடி பிரவீணா என்னருகே அமர்ந்தவள், “ ஏன் பாட்டி யார் மடியில உக்காந்து எங்கண்ணன் காது குத்துது?” என்று கேட்க, பொருட்களை எடுக்க உதவியபடி இருந்த அப்பாவும் தாத்தாவும் கூட எங்களருகே வந்தனர். பாட்டியிடமிருந்து எந்த பதிலும் சற்று நேரம் இல்லை. பின்”செம்பரும்புல உங்கப்பாவுக்கு அக்கா முறை சரோஜான்னு பேரு அவ வீட்டுக்காரருதான் அவுரு. உங்களுக்கெல்லாம் மாமா முறை” “ஏன் அப்ப எங்க தண்டு மாமா எங்க போச்சு” பாட்டி சொல்வதா வேண்டாமா என்று திரும்பி அப்பாவைப் பார்த்தாள். “அவங்களுக்கும் அரசல் புரசலாத்தெரியும். சொல்லு பரவாயில்லை” என்றார் அப்பா சன்னமான குரலில். “ அப்பல்லாம் உங்க தண்டபாணி மாமாவுக்கும் உங்களுக்கும் போக்குவரத்து இல்லை. உங்கப்பாதான் உங்க அம்மா வீட்டு சம்மதம் இல்லாம லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்துட்டான்ல. அந்த கோவத்தில அவங்க வ்ந்து போறது இல்லை. இப்பல்ல ஒரு ஏழெட்டு வருசமா உறவு முளைச்சு வந்துபோயிட்டு இருக்காங்க” “ஆஹா, இங்க பாருங்க தாத்தா, யாரோ ஒரு ஆள் கூட பாட்டி ரொம்ப க்ளோஸா நின்னுகிட்டு இருக்காங்க” பிரவீணா குரலுயர்த்தி சற்று சத்தமாக சொல்ல, திகிலோடு தாத்தாவும் பாட்டியும் அவசரமாகப் பார்த்தார்கள். “அடச்சீ கழுத, அது தாத்தாதான்.. அப்பல்லாம் தாத்தாவுக்கு சுருள் சுருளா முடி முன்னக்க வந்துவிழும்” சொல்லும்போது பாட்டிக்கு வெட்கமும் பெருமிதமும் கலந்து புதிய கிளுகிளுப்பை தந்தது. பாட்டி ரொம்ப அழகாகத் தெரிந்தாள். “ ஓஹோ, அதுலதான் விழுந்திட்டியா பாட்டி நீ? ஆமா தாத்தா, அது என்ன முன்னாடி ரயில் இஞ்சின் லைட் மாதிரி சுருட்டி முடியை ரவுண்ட் கட்டி இருக்க, அதுக்கே ஒரு மணி நேரம் ஆகும் போலிருக்கு...” “ வாயாடி கழுத, அஞ்சு வயசு வரைக்கும் உனக்கு பேச்சே வரலன்னு பதறிப்போயி கழுதப் பாலு அது இதுன்னு குடுத்து உனக்கு பேச்சு வரதுக்குள்ள நாங்க பட்டபாடு...... இப்ப என்னடான்னா நீ இந்த பேச்சுப்பேசற” “நெனச்சேன் இவளுக்கு கழுதப்பாலுதான் குடுத்துருப்பிங்கன்னு” “ஏய், கொஞ்சம் கேப் கெடைச்சா சந்துல சைக்கிளா விடற நீ? இரு.. இரு.. உன்னோட காதுகுத்தி ஃபோட்டோல்லாம் இன்னும் பாக்கியிருக்கு... அம்மா அங்க உள்ள என்ன பண்ணிகிட்டு இருக்க? இங்க வா சீக்கிரம்..” அடுத்த பக்கத்தை மெல்ல புரட்டினேன். “ இது யாரு பாட்டி இந்த பொண்ணு?” என்றேன் புரியாமல் ஒரு ஃபோட்டோவைக்காட்டி. பார்த்த தாத்தா, பாட்டி, அப்பா மூவரும் கொலேரென்று சிரித்தனர்.எப்பேர்ப்பட்ட இறுக்கமான சூழ்நிலையையும் தளர்த்திவிட ஒரு ஆல்பத்தால் முடியும். “ அது வேடிக்கையான கதைப்பா.... உங்கப்பாவுக்கு முடியிறக்க சமயபுரம் போலாம்னு வேண்டுதல். என்னமோ தட்டிகிட்டே போயிட்டே இருந்தது. அதுக்குள்ள முடி நீளமா அழகா பொம்பிளை புள்ளையாட்டம் இருந்தது. மெனக்கெட்டு பின்னிவிட்டா அத்தனை ஜோரா இருக்கும். அப்ப பக்கத்து வீட்டில விஜயான்னு ஒரு பொண்ணு..இப்ப கல்யாணம் ஆகி திருவானைக்காவுல இருக்கா. அவ பெரிய மனுஷியானப்போ உங்கப்பன் ஒரே கலாட்டா. எனக்கும் புடவை எடுத்துக்குடுன்னு ஒரே அடம். அப்பதான் அவ தாவணிய எடுத்து புடவை மாதிரி கட்டிவிட்டு, பூ, பொட்டெல்லாம் வச்சு ஒரு ஞாபகத்துக்காக எடுத்தது.” அம்மாவும் கையைத்துடைத்துக்கொண்டே வந்து சுவாரசியமாக எங்களருகே வந்து பார்த்தாள். சிரிப்பை அடக்க முடியவில்லை அவளுக்கும். “அடடா, யாரு பாட்டி இவ்வளவு அழகா இருக்கா இந்த பொண்ணு” வேறொரு ஃபோட்டோவைக்காட்டி கேட்டேன். “ அது மல்லிகா. அதான் செம்பரும்புல ஒரு மாமா இருக்காருன்னு சொன்னேன்ல. என்னோட ஒண்ணுவிட்ட தம்பி, அவரு பொண்ணு. உங்கப்பா அவளை கட்டிக்கலைன்னு இப்ப அவங்க பேச்சு வார்த்தை கூட இல்லை. அப்புறம் அவளை என்னமோ வடமட்டம் பக்கம் ஜவுளிக்கடைக்காரனுக்கு கட்டிகுடுத்ததா கேள்வி.” “ அடடா மிஸ் பண்ணிட்டியேப்பா. எவ்வளவு அழகா இருக்காங்க. போயும், போயும் இத புடிச்சியே நீ” என்றாள் பிரவீணா அம்மாவைக்காட்டி. “ ஏன் இப்ப அதெல்லாம் ஞாபகப்படுத்தற? இப்ப வருத்தப்பட்டு ஆவப்போறது என்ன” என்று போலியாக முகத்தில் சோகத்தை தேக்கி அப்பா சொல்ல, அம்மா செல்லமாக அப்பா முதுகில் தட்டினாள். “ பாட்டி இது யாரு மணாளனே மங்கையின் பாக்கியம்னு பொதிகையில ஒரு படம் போட்டானே. அதுல நடிச்ச ஹீரோயினா?” “ போடி வாயரட்டை.. அது நாந்தான். அப்பல்லாம் பஃப் கைதான் ஃபேஷன், தாத்தாக்கூட பாரேன். மெனக்கெட்டு முழுக்கை சட்டை தச்சிகிட்டு அத மடிச்சு விட்டுக்குவாங்க அந்த காலத்துல..” “ சண்டைக்குப் போற சண்டியர் மாதிரி.... ஏன் தாத்தா அந்த மீசை என்ன வரைஞ்சதா இல்ல வளர்த்ததா?” தாத்தா பிரவீணாவின் காதைப்பிடித்து மெல்ல திருக, “ சரி.. சரி.. ஒத்துக்கறேன் வளர்த்ததுதான்.” என்ற பிரவீணா இன்னொரு பக்கத்தில் படுத்திருந்த குழந்தையைக்காட்டி “ அய்யய்ய...கசம்.. இது யாரு பாட்டி ?” “ உங்கப்பாதான்... எட்டு மாசத்துல எடுத்தது” “ஒரு ஜட்டி போடக்கூடாது? ஷேம்... ஷேம் பப்பி ஷேம்” வீடே குலுங்கி ஒரு முறை சிரித்தது.அப்பாவின் ஸ்கூல் ஃபோட்டோவைப் பார்த்ததும், எனக்கும் பிரவீணாவுக்கும் அதில் அப்பா யார் என்று கண்டுபிடிக்க சுவாரசியமான போட்டி ஆரம்பித்தது. வேண்டுமென்றே ஏதோ ஒரு அப்பக்கா பையனை காண்பித்து இதுவா, இதுவா என்று இருவரும் அப்பாவை கலாய்த்தோம். வீரபாண்டிய கடபொம்மன் வேஷம் போட்ட புகைப்படத்தைக் காட்டி” ஏம்பா, நாற்று நட்டாயா, களைப் பறித்தாயா எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா, மாமனா மச்சானா மானங்கெட்டவனே அப்படின்னு வசனம் பேசியிருப்பியே அத ஒருதரம் பேசி காட்டு” என்று இன்னும் சதாய்க்க, குதூகலமும் கும்மாளமும் பெருகியது. எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்ப வாழமுடியாத நிமிடங்களை கேமர ஒரு ‘க்ளிக்’கில் சாதித்துவிடுகிறது. அவரவர்களுக்கு தொலைத்துவிட்ட நிமிடத்தில் திரும்ப வாழ்வது போல் ஒரு பிரமை. “ இது யாரு ஒரு பொண்ணு சின்ன்ப்பையன்கூட... பையனைப் பார்த்தா அப்பா முகம் மாதிரிதான் இருக்கு” சட்டென்று ஒரு இறுக்கம் தழுவிற்று. தாத்தா, பாட்டி, அப்பா எல்லோர் முகத்திலும் இருள் சூழ்ந்தது. அடுத்த பக்கத்தை நகர்த்த முயன்ற அப்பாவிடம்“யாருப்பா அது?” என்றேன் மறுபடி. “ அந்த பையன் நாந்தான். அந்த பொண்ணு.....” சற்றுத் தடுமாறி “ அது தெரிஞ்சவங்க பொண்ணு” என்று தலை குனிந்தபடி நகர்ந்தார். பாட்டியும், தாத்தாவும் கூட சத்தமில்லாமல் நகர்ந்தார்கள். மனிதர்கள் பொய் பேசும்போதுதான் எவ்வளவு சகிக்க முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். என்னவோ இதில் இருக்கிறது என்று மட்டும் எனக்கு தோன்றியது. பாட்டி இதை க்ளியர் பண்ண சரியான ஆள் என்று எனக்குத்தெரியும். பாட்டிக்கு துக்கம் தொண்டையை அடைத்தால் அவள் சென்றடைகிற இடம் அடுப்பங்கரை என்றும் தெரியும். மெல்ல அடுப்பங்கரைக்கு சென்றேன். “ பாட்டி என்ன எஸ்கேப் ஆகி இங்க வந்துட்ட?” “ ஒண்ணுமில்ல..” என்று என்பக்கம் திரும்பாமல் எரிகிற அடுப்பை என்னவோ இப்பதான் பற்ற வைக்கிறவள் போல குச்சிகளை செருகியபடி இருந்தாள் பாட்டி. “ இங்க பாரு பாட்டி கஷ்டத்தை எல்லாம் மனசுக்குள்ளயே வச்சுக்கக்கூடாது. கொட்டிடணும். என்கிட்ட மறைக்கலாமா நீ? நான் கேட்டா எதுவும் இல்லன்னு சொல்லமாட்டியே? அடுப்பை சீண்டினது போதும் அது எரிஞ்சுகிட்டுதான் இருக்கு...” சட்டென்று கண்ணில் துளிர்த்த நீர்த்துளிகளைச்சுண்டி அடுப்பு நெருப்பில் எறிந்துவிட்டு, என் கைகளை வாஞ்சையுடன் பிடித்தாள். கரடுதட்டின கைகளுக்குத்தான் எத்தனை சக்தி? எந்த எரிபொருளும் இல்லாமல் என்னுள் பற்றியது சுற்றும் முற்றும் பார்த்தபடி சன்னமான குரலில் சொல்ல ஆரம்பித்தாள்“ அவ உனக்கு அத்தை முறை வேணும்.உங்கப்பாவைவிட ஏழு வயசு மூத்தவ. அத்தனை லட்சணமா இருப்பா. மஹாலட்சுமின்னு அதனாலதான் அவளுக்குப் பேரே வச்சோம். என்னமோ அவ தலைவிதி..” புடைவை தலைப்பை எடுத்து கண்களைத் துடைத்தாள் பாட்டி. “இப்ப எங்க இருக்காங்க?” யாருக்குத்தெரியும் என்பதுபோல கைகளை மேலே உயர்த்திக் காட்டினாள். “ அவ அழகுதான் அவளுக்கு வெனையா போயிடுச்சு. பொம்பளைப்புள்ளை அழகாப்பொறந்துடக் கூடாதுய்யா அதப் பெத்தவங்களுக்கும் கஷ்டம். அதுக்கும் கஷ்டம்” மூக்கைச் சிந்தி பக்கத்திலிருந்த மரத்தூணில் தடவினாள். சுருங்கி சிவந்திருந்த முகத்தில் கண்ணீர் திரண்டு ஓடியது. “ அப்ப இங்கதான்... கும்மோணம் கோர்ட்ல க்ளார்க்கா வேலை பார்த்தான். சவுந்திர பாண்டின்னு ஒருத்தன். ஆளும் ஒண்ணும் அப்பிடி லட்சணமா இருக்க மாட்டான். அவ படிக்கப்போறச்ச எப்பிடி பழக்கமாச்சோ என்ன எழவோ, அவன்கிட்ட அப்பிடி என்னத்தைதான் கண்டாளோ. அவனைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தக்கால்ல நின்னா. யாரு என்ன சாதின்னு தெரியாம எதுவும் தெரியாம குடுக்க மாட்டேன்னு தாத்தாவும் பிடிவாதமா சொல்லிட்டாரு. அப்புறம் ஒரு நாளு யாருக்கும் தெரியாம அவன்கூடப் போயி சாமிமலையில தாலி கட்டிகிட்டா. உள்ள காலெடுத்து வச்சா வெட்டிப்புடுவேன்னு தாத்தா ஒரே சத்தம். அப்ப உங்க தாத்தாக்கூட பொறந்தவங்க ரெண்டு பேரு அவங்களும் சேர்ந்துகிட்டு அவளை உள்ளயே விடலை” அடைத்துக்கொண்ட தொண்டையை ஒருமுறை செருமி சரி செய்த பாட்டி,” என்னமோ அவனும் நல்லவந்தான். ரெண்டு மூணு வருஷம் இந்த ஊர்லயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் பண்ணினாங்க. அவன் கவர்ன்மெண்டுல வேலை செஞ்சதால அவனை அடிச்சு ஒதைக்க முடியலை. அதான் அவ பண்ணிய ஒரே புண்ணியம். ஒரு பொம்பிளை புள்ளை கூட பொறந்துச்சு. அப்பவும் தத்தாவுக்கு மனசு மசியல. அப்புறம் திருநெல்வேலி பக்கம் மாத்தலாகிப்போனவங்கதான். அப்புறம் அவளைப்பத்தி தகவலே இல்லை. ஒருதரம் மகாமகத்துக்கு இங்க வந்து குளிச்சுட்டுப்போனதா பாக்கியத்தம்மா வந்து சொல்லிச்சு. ரோஷக்காரி வீட்டுப் பக்கம் காலடி எடுத்தே வைக்கலை. இப்ப எங்க இருக்கான்னே... ....” பாட்டியிடமிருந்து வந்த விசும்பல் நெஞ்சை என்னவோ செய்தது. “ கோர்ட்லதான் வேலை பாக்கறதா சொன்னீங்க. ஈசியா கண்டுபிடிச்சுடலாமே. ஒண்ணும் கம்ப சித்திரமில்லையே” “ யாரு மெனக்கெடறது? இத்தினி ஆம்பிளைங்க இப்பிடி கல்லு மனசோட இருக்கறச்ச ஒத்த பொம்மனாட்டி என்ன பண்ண முடியும் சொல்லு?” “ அப்ப அப்பாவை மட்டும் எப்பிடி ஒண்ணும் சொல்லாம ஒத்துகிட்டார்?” “ அதான்...” குரலை சற்று வேகமாக உயர்த்தி, அடுப்பின் ஓரத்தில் வெளியே ஒதுங்கியிருந்த விறகை இன்னும் உள்ளே தள்ளினாள். பட், பட்டென்று வெடித்த விறகிலிருந்து நெருப்புப் பொறி பறந்து வெளியே விழுந்தது. “ அதான்யா... அதான் ஆம்பிளைக்கு ஒரு நியாயம் பொம்பிளைக்கு ஒரு நியாயம். உங்கப்பன் வெவகாரம் காதுலஎன்னமோ கெரகவாட்டம்னு உங்க அப்பனுக்கு புத்தி பேதலிச்சுப் போச்சுன்னு அவன் ஜாதகத்தை எடுத்துகிட்டு ஊர் ஊரா ஜோசியனைத்தேடிகிட்டு ஓடுனாரு.அதுல எவனோ ஒருத்தன் சொன்னானாம், அவன் இஷ்டத்துக்கு அனுசரிச்சுப்போகலைன்னா கொள்ளி போட உங்களுக்கு புள்ளை இருக்கமாட்டான்னு. சரின்னு தாத்தா ஒத்துகிட்டாரு. கொள்ளி என்னா கொள்ளி..... இதோ எரியலை அடுப்பு?” என்று ஒரு குச்சியை எடுத்து உள்ளே செருக முன்னைவிட தகதகவென்று எரிந்தது. “ அதுக்காக உங்கப்பனை குறை சொல்லலை. உங்கம்மாவும் நல்ல பொண்ணுதான். ஒரு குத்தம் குறையில்லை. ஆனா எம்மவ பண்ணுன குத்தம் என்னா? அப்பிடி என்ன கொலைபாதகம் அது?” “ கவலைப்படாதே பாட்டி. இப்பதானே எங்களுக்கு விபரம் தெரிஞ்சிருக்கு. எப்பிடியும் கண்டுபிடிச்சுடுவோம்” “ பிரயோசனம்...?” உதட்டை பிதுக்கிப்பின் “ என்ன பிரயோசனம் சொல்லு? கரிக்கட்டையை மறுபடி வெறகாக்க முடியுமா? பதினஞ்சு, இருவது வருஷம் ஆச்சு அவங்க இங்கேர்ந்து போயி... என்ன இருந்தலும் அவ மகதான் எனக்கு மொதல் பேத்தி.. அவளுக்கு ஒரு காதுகுத்தி, மஞ்சத்தண்ணி, ஏன் ஒரு வேளை கல்யாணம் கூட ஆயிருக்கலாம். அப்பல்லாம் அவ பக்கத்துல ஒரு மக்க மனுஷா இல்லாம எப்பிடியெல்லம் எம்மவ துடிச்சிருப்பா...? போன வாழ்க்கையும், காலமும் திரும்ப வருமா? கேட்டா அவ தலைவிதிம்பாங்க, அவ திமிரும்பாங்க. அது அவளுக்கு மட்டுமில்லைய்யா, பொம்பிளை ஜென்மத்துக்கே விதிக்கப்பட்டதுய்யா.. உங்கம்மாவுக்கு மட்டுமென்ன. சின்ன வயசிலயே உங்கம்மாவைப்பெத்த பாட்டி செத்துப்போயிட்டாங்க. உங்கப்பன் கல்யாணம் பண்றதை அந்த தாத்தா ஒத்துக்கவே இல்லை. அவரு சாவுக்குப்போயிதான் உங்க மாமா உறவு உங்களுக்கெல்லாம்... அதனாலதான் உங்கம்மாவை ஒரு கடுஞ்சொல் சொன்னதில்லை நானு.. அவளும் எம்மவ மாதிரிதானே... இன்னொருதரமா அவ என் வயத்தில பொறந்துடப்போறா? நாந்தான் அவ வயித்துல பொறந்து பாவத்தை அனுபவிச்சு தீக்கணும்....”கண்ணீர்ப் பெருகி அவளது அத்தனை துக்கத்தையும் சுமந்துக்கொண்டு ஓடியது. அதுவரை கையில் தொடும்போதும், கண்ணில் படும்போதும் ‘தண்’ணென்று எப்போதும் இருந்த நிழற்படங்கள் முதல்முறையாகச் சுட்டது. அடுப்படி வாசலருகே நின்றபடி தாத்தா,” என்ன வடிவு, என்ன அடுப்பில ஒரேடியா பொகையுது” என்றார் எரிச்சலோடு. “ ஒண்ணுமில்ல.. ஈரம்... அதான் பொகையுது..”கண்களைத் துடைத்தபடி பாட்டி.. எனக்கு மட்டும் புரிந்தது இந்த புகைச்சல் யுகயுகமாய்த் தொடர்வது என்று

நடுகல்

வளவுக்குள் முதுகு வளைத்து குப்புறவே கிடப்பது செல்லம்மாளுக்கு வலித்தது. தன்னை இறுகப்பற்றியபடி தூங்கும் மாதவியை இழுத்து அணைத்து தலையில் முத்தமிட்டாள். இடுப்பில் கட்டியிருந்த போத்தலிலிருந்து ஓஸ் வழியே தண்ணீரை சிறிது உறிஞ்சிக்கொண்டாள். ரெண்டு நாளாக அவர்களுக்கு தண்ணீர்தான் உணவு. பகலா, இரவா என்று தெரியாமல் இருண்டு கிடந்தது அவர்கள் பதுங்கி கிடந்த குழி. நல்ல வேளை விஷ சர்ப்பம் எதுவும் குழிக்குள் இல்லை. சில சமயம் வெட்டப்பட்ட பதுங்கு குழிக்குள் வாகாக சர்ப்பம் தங்கி விடும். செல் அடிக்கு பயந்து பதுங்கி சர்ப்பம் தீண்டி செத்தவர் அதிகம். வழமையாக பதுங்கு குழி ஆசுவாசமாய் உட்காருமளவு இருக்கும். யுத்தம் கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்ட நேரம். ஆமிக்காரன்கள் சல்லடை போட்டு தேடி பிடிச்சுகிட்டு இருக்கானுவ. இலை, தழை பரப்பி அறியாத மாதிரிக்கு சிறிசாய் குழி இருப்பதுதா பாதுகாப்பு.

செல் சத்தம் தொடர்ச்சியாக கேட்க துவங்கியது. ஆமிக்காரனுவ வெளிக்கிட்டானுவ போல.. கிளிநொச்சியிலிருந்து மெல்ல, மெல்ல புதுகுடியிருப்பு வரை வந்துட்டானுவன்னு கேசவண்ணை குழிக்கு வரு முன்னாலே சொன்னிச்சு. யுத்தம் இங்க வராது, யுத்தம் இங்க வராதுன்னு கெடையில கெடந்தாச்சு.. கனகம்பிகை குளத்து வயல்வெளிகிட்டே மூணு தரம் செல் விழுந்ததா அம்மம்மா கதைச்சப்போ சில்லிட்டுப்போச்சு. சேத்து வச்ச சொத்து எதுவும் ஒதவலை. கையிருப்பை கொப்பிக்கொண்டு றாபற்று தோணியில இந்தியாவுக்கு தப்பிச்சு போலாமுன்னா நேவிக்காரன் றோந்து சுத்திகிட்டெ இருக்கானுவ இன்னிக்கு சாட்டில்லே எண்டு தட்டிகழிச்சிட்டெ போயிட்டான். இனி கரைக்கு கூட போவ ஏலாது. அதுக்காவ வீட்டுக்குள்ளேயும் கெடக்க ஏலாது. செல்லம்மா வீட்டுக்காரன் இப்படித்தான் போனதரம் ஆமிக்காரன் ஒழுங்கை, ஒழுங்கையா றோந்து வந்தப்ப வெறகு எடுத்தாறேன்னு வெளிக்கிட்டான். உளவு சொல்ல வந்தியோன்னு துவக்கு கட்டையாலேயே அடிச்சுக் கொன்னுட்டானுவ. பொணம்கூட கிட்ட இல்ல.

தப்பிச்சால் போதுமெண்டு சகலத்தையும் விட்டுவிட்டு குழிக்குள் பதுங்கினார்கள் செல்லம்மாவும், மாதவியும்... பக்கத்து வீட்டு ஞனத்தாச்சி எங்க பதுங்கினாளோ? பூத உடம்புக்காரி நடக்கவே சிரமப்படுவா... ஏதேதோ பூச்சிகள் ஊறுவதும், உரசுவதுமாக இருந்தன. தூங்கிக்கொண்டிருந்த மாதவியின் வாயிலிருந்து ஒழுகிய எச்சில் பரவிய இடத்தில் மண்புழு ஒன்று நெளிந்தது. கடவுளே... என்ன கொடுமை இது.. எதுக்கு இந்த உசிரை இப்படி கெட்டியா பிடிச்சுகொண்டு கெடக்கணும்?

இந்த மண்ணுல என்ன இன்னும் மிச்சமிருக்கு? மரம் செடியை கூட ஆமிக்காரன் வெட்டிட்டுப் போறானுவ. பெடியன்க ஒளிஞ்சிப்பானுகளாம்.. மொக்கையா நிண்ட மரங்களைப் பாத்து கும்பி எரிஞ்சது செல்லம்மாளுக்கு பாவிகளா மரம் என்ன பண்ணுச்சு வௌங்கவீங்களாடா எண்டு சபித்தாள் மனசுக்குள்.. செல் அடிச்சு, இருந்த மரங்களும் கருகி, மிச்சம் சில பூச்சிகளும், மண்ணும்தான்...பக்கத்தில் எங்கோ செல் விழ பூமி அதிர்ந்தது. அசைவில் விழிச்சிகிட்ட மாதவி “ என்ன அம்மை ஆச்சு? செல் ஆ ”

கண்களை மெல்ல தாழ்த்தி ஓம் என்பதுபோல் இமைகளை மூடித் திறந்தாள். “றொம்ப கதைக்க வேண்டா நா வறண்டு போச்சுன்னா.... தண்ணி கொறைச்சல் இங்கே ” எண்டாள் சன்னமாக..

“செரி ”யெண்டு தலையசைத்தாள் மாதவி சோர்வாக.

“பசிக்குதா மோளை? ”

“மரத்துப் போச்சு அம்மை... ”

ஒறங்கு என்பது போல் தட்டிக்கொடுத்தாள். ஓறங்கவே முடியாத மனம்... ஒறங்கவே முடியாத சூழல்.. எப்படி ஓறங்கறது?

மாலதி எப்படி இருக்காளோ? எங்க இருக்காளோ? கூட இருந்திருந்தாலும் இப்ப இருக்கிற குழியில சாட்டில்ல... பெடியளா இருக்கறச்ச விட்டுட்டு போயிட்டா..புத்துவெட்டுவானில் கடசியா பாத்ததா ரூபன் சொன்னான். பொழச்சியிருக்காளோ என்னமோ?

மாலதியும், மாதவியும் ரெணை பிள்ளையள்.. மாலதி இளையவ... ஒண்டரை மணித்தியாளம்தான் வித்தியாசம்... மாங்குளத்தில அவ படிச்சுகிட்டப்ப பொடி பசங்க போல ரீ சேட்டும், பேண்டும்தான் போடுவள். குணமும் அப்படித்தான் ஆனது. வெளையும் பயிரை மொளையில கெவனிக்கலை. டைப் பழக போறேன்... ரீயூசனுக்குப் போறேனிட்டு துவக்குச் சுட பழகிக்கிட்டா.. அவ முகத்துல கொதிக்கற கோவமும், குமுறலும் காணவே அச்சமாயிருக்கும்.. இறுகின முகமும், கைகளும் அவ சாதாரணமா வளரலைன்னு புரிஞ்சது... மாதவி எதுக்கெடுத்தாலும் பயப்படுவா.. தொட்டா சிணுங்கி.. எதச் செஞ்சாலும் அவ பயம் தெளியாது.. அந்த பயத்துக்கு சப்பகட்டு கட்ட அவளுக்கு அறிவு இருந்தது.. எப்படி இப்படி ஒரு வயித்துலன்னு புரியவே இல்லை!

கிளிநொச்சி பெடியனுக வசமிருந்தப்ப இடையில ஒரு தரம் மாலதி வீட்டுக்கு வந்திருந்தா.. எப்படி எப்படியோ மாறியிருந்தா.. தலை முடியெல்லாம் வெட்டி... ஒரு வடிவா இருந்தா பெத்த மனசு தாங்காம அழுதா செல்லம்மா...

“எதுக்கு அம்மை அழறியள்? அழப்படாது ”

“என்ன பண்ண சொல்றிய? ”

“எனக்கொண்டும் ஆகலை அம்மை. நல்லாத்தான் இருக்கன் ”

“ஒரு பொண்ணா ஒன்னை வளக்கலைன்னு கவலையா இருக்கு மோளை ”

“ஒரு கோழையா வளரலை அம்மை ”

“அப்பன் இப்படித்தான் கூடமாட ஒதவுறேனிட்டு காடயனுக கையில மாட்டிசெத்துப்போனாரு.. ஊருக்குள்ள நடுகல் வச்சாங்க... என்ன பிரயோசனம்? இங்க சாமியும் கல்லுதா.... மனுசனும் கல்லுதா.. ”

“காடையனுக காலை சொரண்டி பொழைக்கறதவிட கல்லா இருக்கலாம் அம்மை... அதுவும் நடுகல்லா இருந்தா செத்தப்புறமும் உசிரு இருக்கும் அம்மை... கிட்டப் போயி நிண்டு பாரு மூச்சடங்காம உள்ளோடி ஓடிகிட்டெ இருக்கும். யுத்தத்தில செத்தவங்களுக்கு சாவு இல்ல அம்மை... ”

“அப்பன் மாதிரி பொணம் கூட கெடைக்காம அனாதியா செத்துப்போவப் போறியளா மோளே ”

“உசிரா இருக்கறச்ச அனாதியாத்தான் இருக்கினம். இதுல பொணத்துக்கு என்ன பூசனை. சுதந்திரமா வாழனும் அம்மை.. ”

“இப்ப நீ இருக்கற எடத்துலயும் சுதந்திரம் இல்லையே மோளை. பீற்றரண்ணை கதைச்சுது. ”

“ஒழுங்கு வேற, ஒடுக்கறது வேற பீற்றர் ஓடுனது வேற காரணம்.. வெளிய சொல்றது வேற ”

“என்னமோ புரியலை போ... முடியெல்லாம் வெட்டி... என்ன இது கோலம்? ”

“முடிஞ்சா கர்ப்பபையைக் கூட வெட்டிப்பேன்... ஆனா அடுத்த தலைமுறை வேண்டுமே ... அதான்.. ”

மாலதி வினோதமானவளாய், முற்றிலும் விலகியவளாய் இருந்தாள். இனி மாற்றமுடியாது எண்டு செல்லம்மாவுக்கு புரிந்து போனது

அன்னிக்குப் போனவதான். பிறகு பாக்க இல்லை.

ஏதோ ஒரு ட்ரக் அதிர. அதிர நகரும் சத்தம் கேட்டது. மெல்ல, மெல்ல ட்ரக் நிற்கும் அரவம். சப்பாத்துக்கால் ஒலி தப, தபவென கேட்டது. இலைகள் நெரிபடும் ஒலி.. வயிற்றிலிருந்து ஒரு நெருப்பு சன்னமாய் பற்றிகொண்டு நகர்வது போல் நரக வேதனை.

அவொ கண்ணு அவிஞ்சு போவ... இந்த குழி அவனுவ கண்ணுல படக்கூடாது கதிர்வேலா.

மாதவி அச்சத்தில் பற்களை கடித்துக்கொண்டு அழுதாள்

“அழக்கூடாது மோளை. கண்டுபிடிச்சுடுவானுவ.. ”

சட்டென்று அழுகையை மென்னு முழுங்கினா மாதவி.. இன்னமும் இறுக்கி பிடிச்சுகொண்டாள்

ஒவ்வொரு நொடியும் நெஞ்சில் சிக்கிய நெரிஞ்சி முள்ளாய் நகர்ந்தது.

“அம்மை, அம்மை” எண்டு சன்னமாய் அழைத்தாள் மாதவி

வாயை ஒரு விரலால் மூடி “ச்சூ” எண்டாள் செல்லம்மா. மறுபடியும் முழங்கையை சுரண்டினாள் மாதவி.

என்ன என்பது போல் கையசைத்தாள்.

மாதவி தன் பாவாடை பக்கம் காட்டினாள். அப்போதுதான் படிந்த பச்சை ரத்தம் கறையாய் திட்டாகத் தெரிந்தது.

“ஐயோ பாவி மோளை நீ சாமர்த்தியப்படுவதற்கு இதுவா சமயம்... குமரன் அண்ணை வரும்தோறும் கேக்குமே எப்ப நீ சிலவு வைக்கப்போறியள் எண்டு.. வீடியோ எடுக்க இன்னின்னார், சினிமா சங்கீதத்துக்கு இன்னின்னார்னு லிஸ்டு போட்டுவச்சிருந்துச்சு.. இப்படி மண்ணுக்கடியில.. புழு பூச்சிக்கு இடையில... ஐயோ என்ன பண்ணுவன் மோளை... பற்களுக்கு இடையில் விரலை வைத்துக்கொண்டு கடித்தாள் செல்லம்மா..

வயிற்றுப் பக்கம் சுடு நீராய் சுட்டது மாதவியின் கண்ணீர். அப்படியே அவள் தலையை அழுத்தி அணைத்து அழுகையைத் தின்றாள்.

ரகசியக் குரலில் “மோளை கொஞ்சம் தண்ணி எடுத்து கழுவிக்கோ..”போத்தலை எடுக்க முயற்சித்தாள்.

“வேண்டாம் அம்மை.. கையில இருக்கற சாப்பாடு இது ஒண்ணுதான்.. அது பாட்டு காயட்டும்.”

“தலைக்கு தண்ணியூத்தாமப் போனாலும்.... கறையை கழுவக்கூட ஏலலையே ஐயோ” எண்டு தன்னயும் அறியாமல் அழுதாள்

அம்மையின் கண்ணிரைதுடைத்து வாயைப் பொத்திய நேரம் வீரெண்று அலறினாள் மாதவி. அவளது காலில் துவக்கின் நுனிக்கத்திப் பட்டு ரத்தம் பீறிட்டது. எதிர்பாராமல் சரேலென்று அவள் கால்களைப்பிடித்து இழுத்தது ஒரு முரட்டுக்கரம். அவளை உள்ளே இழுக்க முயன்று தோற்று அவள் பின்னாலேயே மேலே தூக்கி எறியப்பட்டாள் செல்லம்மா.

“அட, பெடியள் உள்ளே என்ன பண்றியள்?” தமிழில் ஒலித்தது சிங்களக்குரல் பலமாக சிரித்தபடி...

“அம்மையும் குட்டியுமா அசிங்கம் பண்றியள்?” கேலியாக கூக்குரலிட்டது இன்னொரு குரல்

அவள் பாவாடையின் ரத்தம் வழிந்த இடத்தைப் பார்த்த ஒருவன் “அட சிங்கமடெ நம்மாளு குறி பாத்து சுட்டுருக்கனம்” எண்டான்

“ஓ” வெண்டு கூச்சல் பீறிட்டது. கூசிப்போன மாதவி சிரமப்பட்டு குப்புறப் படுத்தாள். “அட என்னடி வெக்கப்படுதியள் திரும்படி” எண்டு துவக்கை அவள் இடுப்புக்கு கீழே வைத்து கெந்த முற்பட்டான் ஒருவன்

செல்லம்மா தவழ்ந்து தவழ்ந்து அவனருகே செண்டு “சேர், சேர் அவளை ஒண்ணூம் பண்ணுடாதேயள் சேர், சேர்...” எண்டு கெஞ்சினாள்

அப்ப இவளை ஏதும் பண்ணமுடியுமோடெ”

இவ கிழிஞ்ச கௌவிடே எண்டு ஒருத்தன் விழுந்து விழுந்து சிரிக்க. அவன் கால்களை பிடித்து அழுதாள் “அவளெ விட்டுரு சேர்.. என்னெ கொன்னுடு சேர்” செல்லம்மாவின் இடுப்பை பலம்கொண்ட மட்டும் உதைக்க அவள் சுருண்டு ஓடி மாதவியின் அருகில் விழுந்தாள். அப்படியே எழுந்து மாதவியின் மீது படுத்துக்கொண்டு படர்ந்த செல்லம்மா “என்ற மோளை தொட விடமாட்டன் என்னை கொண்டு போட்டுதான் இவளைத் தொடணும்” ஆக்ரோஷமாய் கேவினாள்.

துவக்கின் நுனியால் மாதவியின் பாவாடையை குத்தி கிழித்து ஒரு பகுதியை கொடி போல தூக்கி வேகமாய் ஆட்டினான். அவர்களைச்சுற்றி துவக்குகளை தூக்கிகொண்டு குதித்தார்கள்.

மாதவி அம்மையின் காதில் மெல்ல “அம்மை, அம்மை என்னை கொண்டுபோட்டுடு அம்மை”

ஒரு கணம் திகைத்தாள் செல்லம்மா

“தயை செஞ்சி கொண்டுபோட்டுடு அம்மை. எனக்கு திராணி இல்லை அம்மை”

ஒரு நொடி திகிலாகப்பார்த்த செல்லம்மா சட்டெண்டு அவள் குரல் வளையைப் பிடித்து நெரித்தாள். கூடவே பற்களால் கடித்தாள். குரல் எழும்பாமல் கைகளையும், கால்களையும் அடித்து துடித்தாள் மாதவி. உற்சாக மிகுதியில் வெறியாட்டம் ஆடியவர்களுக்கு உடனடியாக ஏதும் புரிய இல்லை.

மாதவியின் தொண்டையிலிருந்து குருதி கொஞ்சம் கொஞ்சமாக பரவி வெளியேறியது. அப்போதுதான் அவர்கள் கவனித்தார்கள்.

“ஏ, கௌவி, கௌவி என்ன பண்றிய” எண்டு அவளைப்பிடுங்கி புரட்டினார்கள். செல்லம்மாவின் வாயெல்லாம் ரத்தம். அதற்குள் அடங்கிப் போயிருந்தாள் மாதவி. வெறிப்பிடித்த குரங்கு போல் ஏய் எண்டு கத்தியபடி அவள் வயிற்றில் துவக்கு கட்டையால் செருகினான் ஒருவன். வயிற்றிலிருந்த கொஞ்ச நஞ்ச மிச்சமும் கழிவாய் வெளியேறியது அவளிடமிருந்து. வானமே இடிந்து விழுவது போல ஓவென கேவினாள் செல்லம்மா..

இன்னும் வெறியாகி அவளை உதைக்கப்போன இன்னொருவனை தடுத்தான் வேறொருவன். “விடடெ அவளை... முகாமிலெ உயிரோட சில பேரை கணக்கு காட்ட வேண்டியிருக்கு..” எண்டவன் கையோடு கொண்டு வந்த உடுப்புக் கூடையை எடுத்தான். அதில் பெடியனுக உடுப்பு மாதிரி ஒன்ரை எடுத்தான். மாதவியின் உடலில் மாட்டிவிட்டான்.“வேன்ல ஒரு ரிப்போர்ட்டர் இருக்கான் பிஸ்கட் கொடுத்து உக்கார வச்சிருக்கன் அவனை கூட்டி வா”

சிறிது நாழிக்குப்பின் ஒருவன் கேமரயோட வந்தான். மாதவியையும் செல்லம்மாவையும் போட்டோ எடுத்தான். “அம்மைக்கு பிடிக்காம நாட்டுக்கு துரோகம் பண்ணினா அதான் அம்மை நெரிச்சுக் கொன்னுட்டாள்னு எழுது.”

“சரி”யெண்டு தலையாட்டினான் நிருபன். செல்லம்மா சுற்றிலும் பார்த்தாள் எங்கெங்கோ பதுங்கிக் கிடந்த அவர்களது ஒழுங்கையில் இருந்த சனம் குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடந்தனர் அருகருகே... ஞானத்தாச்சி அவளைப் பார்த்தபடிகிடந்தனள். கௌவியா இருந்ததால கெடச்ச உபகாரம் உயிர்.. ட்ரெக் ஒன்று வந்து பிணங்களை மரக்கிளைகளை வாரிப் போடுவது போல ஏற்றிக்கொண்டிருந்தது.

நிருபன் செல்லம்மா அருகே வந்து குட்டியோட பேரு என்ன?

சிறிது யோசித்து பின் தெளிவாகச்சொன்னாள் “ மாலதி”

ஞானத்தாச்சி வெருட்டெண்டு அவளை நிமிர்ந்து பார்த்தாள் . செல்லம்மா அவளைக் கவனியாமல் வேறெங்கோ பார்த்தாள். அதற்குள்ளாக ஒரு ஆமிக்காரன் அவர்களருகே வந்து “ம்...ம்..ம்ம் போதும் மக செத்த துயரத்துல கௌவிக்கு விசிர் பிடிச்சிடுச்சு போதும் கேள்வியெல்லாம்” எண்டு வெருட்ட நிருபன் தலயாட்டிவிட்டு நகர்ந்தான்.

ஞானத்தாச்சி சன்னமான குரலில் “அவொகிட்ட ஏன் அப்படி சொன்ன? போயி ஆமிக்காரன் காலில் விழுந்து அவ பொணத்தைக் கேளு அவனுவ கும்பலா போட்டு எரிப்பானுவ.. பாதி எரியாம கெடக்கும் கழுகு கொத்தும்.. போ..போயி கெஞ்சு..”

“ போவட்டும் ஆச்சி... பொணமானப்புறம் எப்படி போனா என்ன?” எண்டவளை அதிசயமாகப்பார்த்தாள் ஆச்சி.

“ அது போவட்டும் ஏன் மாலதியினிட்டு பேர் மாத்தி சொன்னே?”

“அது மாலதியின்னு நெனச்சு போகட்டும். அப்பம்தான் அவளைதேட மாட்டானுக. அதுவுமில்லாமெ தொடர்ந்து பேசமுடியாமல் தொண்டை அடைத்தது.. அதுவுமில்லாம சாவுறவரைக்கும் மாலதியா ஆவ முடியல... செத்தப்புறமாவுது ஆவட்டும்” எண்டு தேம்பத்துவங்கினள் செல்லம்மா. எவர் காதையும் எட்ட முடியாத அவள் கதறல் காற்றில் துடித்து கடலில் கரைந்தது

The Killing Fields

உலக வரைபடத்தில் வியட்நாமுக்கும், தாய்லாந்துக்கும் மிக அருகே அமைந்த வனப்புமிக்க சிறிய தேசம் கம்போடியா. நரவேட்டையாடிய ஹிட்லர், முசோலினி, இடிஅமீன், இராஜபக்சேவுக்கு இணையான கொடுங்கோலன் போல்பாட்டின் ஆட்சி காலம் கம்போடியாவின் இருண்ட காலம்.

அதிகார போதை தலைக்கேறினால் தனக்குத் தோன்றிய அத்தனை பைத்தியக்காரத்தனங்களையும் அப்பாவி மக்கள் மீது திணிப்பதும் காரணமின்றி கூட்டம் கூட்டமாக மக்களைக் கொன்றும் எலும்புக் கூடுகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கி ரசிப்பதுமான மனவிகாரம் பிடித்தவன் போல்பாட்.

இயக்கம் : ரோலண்ட் ஜோஃப் (Roland Joffé)

போல்பாட்டின் ஆதரவு குழுக்கள் கம்போடியாவை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து கைப்பற்றிய காலத்தில் அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகையான நியுயார்க் டைம்ஸ் துணிச்சல் மிக்க நிருபர் சிட்னி ஷான்பெர்க் செய்தி சேகரிக்க கம்போடியா செல்கிறார். அவர் செல்கின்ற நேரம் மிகச்சரியாக அமெரிக்க அதிபர் நிக்சன் வாட்டர் கேட் ஊழலில் சிக்கியிருந்தார். அதிலிருந்து திசைதிருப்ப அமெரிக்க படைகளை கம்போடியாவின் முக்கிய நகரங்களின் ஒன்றான நியுக் லுங்-கில்(Neak Leung) குண்டு வீச அனுப்புகிறார். அமெரிக்க காங்கிரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அமெரிக்க விமானங்கள் கம்போடியாவில் போல்பாட்டிற்கு ஆதரவாக குண்டுவீசக் காரணம்? போல்பாட் தன்னை கம்யுனிஸ எதிர்ப்பாளனாக காட்டிக் கொண்டதுதான். இயல்பாகவே நிக்சன் கம்யுனிஸ்டுகள் மீது கடும் வெறுப்பு கொண்டவர். ஒருமுறை ரஷிய அதிபர் குருசேவ்வை நேருக்கு நேராக “பன்றி” என்று திட்டியதால் கடும் கண்டனத்துக்கு ஆளானவர்.
ஒளிப்பதிவு : க்ரிஸ் மென்கஸ் (Chris Menges)
மற்ற பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பறப்பதை ‘வானிலை சரியில்லை’ என்று தந்திரமாக தடைசெய்திருந்ததால் சிட்னி இரண்டு மணி நேரம் தாமதமாக கம்போடியாவில் வந்து இறங்குகிறான். அவனுக்கு உதவி செய்யவும் மொழி பெயர்த்து சொல்லவும் காத்திருக்கும் உள்ளுர் நிருபர் டித் பிரான் நியுக்லுங்கில் நடந்த குண்டுவீச்சு பற்றிய தகவலை சிட்னியிடம் தெரிவிக்கிறான். சிட்னி இதுபற்றிய தனது சந்தேகங்களை அமெரிக்க இராணுவ தளபதியிடம் கேட்க, அவர் மழுப்பலான உறுதியற்ற பதில்களை சொல்கிறார். அதோடு சிட்னி நியுக் லுங் நகருக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

எப்படியும் அங்கு சென்று உண்மைகளை அறிந்து செய்தியாக்கிட துடிக்கும் சிட்னிக்கு பிரான் தனது தொடர்புகளை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக ரகசிய பயணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். இருவரும் நியுக்லுங் பகுதியில் குண்டுவீச்சில் மக்கள் படும் சொல்லவொன்னாத துயரங்களை செய்தியாகவும் புகைப்படங்களாகவும் சேகரித்து நியுயார்க் டைம்ஸ்க்கு அனுப்புகிறார்கள்.

அப்பட்டமான படுகொலைகள், அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் அவர்களை கெமர் ருத் எனும் குழுவினர் பிடித்துச் செல்கின்றனர். விடாமல் அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி பிரான், சிட்னி மற்றும் இன்ன பிற பத்திரிகையாளர்களை காப்பாற்றி வருகிறான்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பிரானுக்கும் சிட்னிக்கும் இடையேயான தொழில் ரீதியான நட்பு ஆத்மார்த்தமாகத் தொடர்கிறது. இந்த காலகட்டத்தில் கம்போடியா முற்றிலும் போல்பாட்டின் அதிகாரத்தில் கீழ் வந்து விடுகிறது. 1975-ல் அனைத்து வெளிநாட்டு பிரஜைகளையும் போல்பாட் வெளியேறுமாறு உத்தரவிடுகிறான். கம்போடியா மக்களின் நிலைமை படுபாதாளத்துக்குள் வீழ்ந்தது. நகரங்களில் வசித்தவர்கள் வலுக்கட்டாயமாக விவசாயம் செய்யும்படி பணிக்கப்பட்டு பயணற்ற பொட்டல் நிலங்களில் கொட்டடியில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இதற்கு பெயர் விவசாய புரட்சியாம். ஒரே நாள் இரவில் கம்போடியாவின் புழக்கத்திலிருந்த பணம் மொத்தமும் ஒரு இடத்தில் கொட்டப்பட்டு போல்பாட்டின் உத்தரவுப்படி எரிக்கப்பட்டது. வேலைசெய் அரசு கஞ்சி கொடுக்கிறது. இனி பணத்தின் தேவையென்ன என்பது போல்பாட்டின் வாதம்.

வெளிநாட்டு பிரஜைகள் வெளியேற விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பிரான்னின் மனைவி குழந்தைகள் அமெரிக்காவுக்கு புலம் பெயர சிட்னி தன் செல்வாக்கை பயன்படுத்தி முயற்சித்து வெற்றியும் பெறுகிறான். ஆனால் பிரான் அவர்களுடன் அமெரிக்கா செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. சிட்னியும் அவனது நண்பர்களும் போலி பாஸ்போர்ட் ஒன்றை தயார் செய்து அதன் முலமாக பிரான்-ஐ கூட அழைத்துக் கொண்டு லாஸ் ஏஞ்ஜல்ஸ் செல்கிறார்கள். அவர்களை வழி அனுப்பிவிட்டு அழுது கொண்டே பிரான் விமான தளத்தை விட்டுச் செல்லும் அந்த காட்சி எவரையும் கலங்கச் செய்யும் நெகிழ்ச்சியான காட்சியாகும்.

பிரான் கம்போடியா படைகளின் பிடியில் சிக்கி சித்திரவதை படுகிறான். அங்கிருந்து தப்பிக்க முயற்சித்து மாட்டிக் கொள்கிறான். இரண்டாவது முறை வெற்றிகரமாக தப்பி, மற்றொரு ஆயுதக் குழுவிடம் சிக்கிக் கொள்கிறான். அந்த ஆயுதக்குழுவின் தலைவனது குழந்தைகளோடு அவனுக்கு நெருக்கம் அதிகரிக்கிறது. பிறிதொரு சமயத்தில் அந்த குழு மீது விமானங்கள் குண்டுவீச, குழந்தையோடு தப்பிச் செல்லும் வரைபடம், சிறிது பணத்துடன் தலைவனால் பிரான் பத்திரமாக அனுப்பி வைக்கப்படுகிறான். ஆனால் தப்பிக்கும் வழியில் கண்ணி வெடியில் சிக்கி குழந்தையும் துணைக்கு வந்தவர்களும் மரணமடைய பிரான் மட்டும் ஒருவழியாக தாய்லாந்து எல்லையில் அமைந்த செஞ்சிலுவை சங்க முகாமில் தஞ்சமடைகிறான்.

லாஸ் ஏஞ்சல்சில் பிரான்னின் குடும்பத்தினரை பத்திரமாக பாதுகாக்கும் சிட்னி அயராமல் பிரான் பற்றிய விசாரணை கடிதங்களை எல்லா செஞ்சிலுவை முகாம்களுக்கும் அனுப்பியபடி இருக்கிறான். பிரான் கிடைத்த செய்தி அறிந்து சிட்னி அவனை அழைத்து வந்து லாஸ்ஏஞ்சல்சில் அவனது குடும்பத்தினருடன் சேர்த்து விடுகிறான். சிட்னியுடன் நியுயார்க் டைம்ஸ்ல் சிறிது காலம் பணியாற்றிவிட்டு, நோயின் காரணமாக பிரான் இறந்து போகிறான். உண்மைச் சம்பவமான இந்த கதை சிட்னி எழுதிய பிரான்னின் “வாழ்க்கையும் மரணமும்“ என்ற நூலைத் தழுவி “தி கில்லிங் பீல்டு“ திரைக்கதையாக பரிணமித்தது. கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் போல் ஆகிவிடக்கூடிய அபாயம் உள்ள இந்தக் கதையை மிக நேர்த்தியான புருஸ் ராபின்ஸின் திரைக்கதையின் உதவியுடன் மிகச் சிறந்த படமாக இயக்கியுள்ள ஜோஃப்க்கு இது முதல் படம். யுத்த புமியின் அவலங்களை எவ்வித மிகை குறைவிமின்றி சொல்லியிருக்கும் இப்படத்தில் கம்போடியாவின் அரசியல் நிலவரங்கள் குறித்தோ அதன் அன்றைய ஆயுதக்குழுக்களின் நிலைப்பாடுகள் போக்குகள் குறித்தோ எதுவும் நேரிடையாக சொல்லப்படவில்லை என்றாலும் எல்லாவற்றையும் உணர முடிகிறது. முழுக்க முழுக்க ஒரு நிருபரின் பார்வையில் சொல்லப்படும் கதையாகவே காண்பிக்கப்படுகிறது.

படத்தில் ஊடுருவும் உணர்வுப்புர்வமான விஷயங்கள் பார்ப்பவர் மத்தியிலும், பரவசம் செய்வதில் ஒளிப்பதிவாளர் க்ரிஸ் மென்ஜாஸ்க்கு பெரும்பங்கு உண்டு. கலை இயக்குனரின் பங்கும் பாராட்டுதலுக்கு உரியது. படத்தின் முக்கியமாக பலவீனமாக இசையை குறிப்பிடலாம். பிரான் தப்பித்து மலைப்பகுதிகள் வழியே பயணிக்கும் காட்சிகளில் இசை பொருத்த மற்று,வேறொரு மனநிலைக்கு இட்டுச் செல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

சிட்னியாக வரும் ஸாம்(Sam Waterston) நடிப்பும் பிரான் ஆக வரும் நோர் (Haing S.Ngor) நடிப்பும் வெகு இயல்பான யதார்த்தமான நடிப்பாகும். இருவரின் உடல்மொழி முகபாவங்கள் அந்த பாத்திரங்களுக்கு வலு சேர்க்கின்றன.

கம்போடியாவில் நிகழும் அத்துமீறல்கள் குண்டுவீச்சில் ஏதுமறியா அப்பாவி மக்களின் துயரங்களை படத்தில் பார்க்கும் போது ஈழத்தில் சமீபத்தில் நிகழ்ந்த அட்டுழியங்களை நினைவுப்படுத்துகிறது. நடுநிலையான நிருபர்களை வெளியேற்றி, தனக்கு ஆதரவான நிருபர்களை அனுமதித்து ராஜபக்சே செய்த ஊடக வன்முறை போல்பாட்டின் ஊடகங்களை விஞ்சியவை.

நகரும் மரங்களாக, மின் கம்பங்களாக ஜன்னல் வழியே நம்மை கடந்து சென்ற காட்சிகளைப் போல் ஈழத்தில் நிகழ்ந்த அவலங்கள் சாட்சிகளற்று அரங்கேறிவிட்டன, ஏதும் செய்ய இயலாத கையாலாகத்தனத்துடன் நாம் ஒரு இரயில் பிரயான பயணிபோல் வெறும் பார்வையாளனாக இருந்தது மன்னிக்க முடியாத கொடுங்கோன்மையோ என்ற குற்ற உணர்ச்சி எழுவதை படம் பார்க்கும் போது தவிர்க்கவே இயலவில்லை.

டாக்டர் ஹெய்ங் நோர் கம்போடியாவில் உள்ள ஸாம்ரங் யுங்-ல் பிறந்தவர். மருத்துவர். அவரும் அவரது மனைவியும் போல்பாட்டின் படைகளால் எவ்வித காரணமுமின்றி கைது செய்யப்பட்டு சித்ரவதை கூடத்தில் மிக மொசமாக தண்டிக்கப்பட்டார்கள். அவரது மனைவி தொடர் சித்திரவதை காரணமாக உயிரிழந்தார். நோர் விடுதலை செய்யப்பட்ட பின். அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்தார்.

சிட்னியுடன் இருந்த டித் பிரான்-ஐ சந்தித்த பின் இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள், ஜோஃப் பின்னாளில் நோர்-ஐ சந்தித்த போது அவரையே பிரான் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படிகேட்டுக் கொண்டார். இப்படத்தில் நடித்ததற்க்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது, கோல்டன் க்ளோப் விருது ஆகியன அவருக்கு கிடைத்தன. அதற்குப் பிறகு சில ஹாலிவுட் படங்களில் நோர் நடித்தார்.

துரதிர்ஷ்டவசமாக அவரை சில வழிப்பறி கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த கழுத்து சங்கிலிக்காக அடித்து கொன்றுவிட்டனர். போல்பாட்டிடம் தப்பித்த சில பிக்பாக்கெட்காரர்களின் கையில் அவரது மரணம் நிகழ்ந்தது விசித்திரம்தானே?

விருதுகள் : ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, துணை நடிகர் (நோர்)
ஆகியவற்றுக்காக 3 ஆஸ்கர் விருதுகள்.

கோல்டன் க்ளோப் விருதுகள், லண்டன் அகாடமி விருதுகள்.

Green Mile


“ஸ்டீபன் கிங்“ எழுதிய பிரபலமான நாவலான The Green Mile ஆறு தொகுதிகளாக வெளிவந்து பெரிதும் வாசிக்கப்பட்டவை. இந்த நாவலை தழுவி தலைச்சிறந்த திரைக்கதையாசிரியரான ஃபிராங்க் டாராபாண்ட் ( FrankDarabont) இயக்கத்தில் உருவான அற்புதமான திரைப்படம்தான் கிரீன் மைல்.



இயக்கம் : ப்ராங்க் டாராபேன்ட் ( FrankDarabont)



ஒளிப்பதிவு : டேவிட் டாட்டர்ஸால் (David Tattersall)


நாவல் : ஸ்டீபன் கிங் (Stephen King)
உலகின் மிகச் சிறந்த படங்கள் என்று கணக்கில் எடுத்துக்கொண்டால் அவை பெரும்பாலும் ஏதேனும் ஒரு நாவலை அல்லது சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டவையாக இருக்கும். ஹாலிவுட்டின் குறிப்பிடத்தக்க பொழுதுபோக்கு படங்கள் கூட முடிந்தவரை நாவல்களை தழுவி எடுக்கப்பட்டவைதான்.


இந்தியாவின் சிறந்த படங்கள் என்று சுட்டிக்காட்டப்படும் படங்கள் கூட படைப்பிலக்கியங்களை தழுவி எடுக்கப்பட்டவைதான். பதோ் பாஞ்சாலியிலிருந்து தமிழின் உதிரிப்பூக்களை உதாரணமாக சொல்லமுடியும்.


மனிதன் தன்னை ஒழுங்குபடுத்தவும், வெளிப்படுத்தவும் சட்டங்களையும், விதிமுறைகளையும் வரையறுக்கிறான்.உலகின் எந்த நாட்டு சட்டமும் முழுமையாக கசிவுகளற்று, கச்சிதமாக வடிவமைக்கப்பட்டவை அல்ல. எல்லா விதிகளும், சட்டங்களும் வெவ்வேறு தருணங்களில் திருத்தி அமைக்கப்பட்டவைதான். இன்னமும் திருத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளோடு இருப்பவைதான் எனில் மரணதண்டனை என்கின்ற உயிர் பறிக்கும் தண்டனை சட்டப்படியான ஒன்றாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்? யாரை ஒழுங்குபடுத்த? இந்த விடையற்ற கேள்விகளை எழுப்புகிற படம்தான் Green Mile.

குற்றவாளி உணர்ச்சி மேலிட்ட உள்மன உந்துதலால் தரும் தீர்ப்பு ஒரு குடும்பத்தை நிர்க்கதியாக்குகிறது என்றால் ஆய்ந்து தெளிந்து தரப்படும் மரணதண்டனை தீர்ப்பாகும் போது இரண்டு குடும்பங்கள் நிர்க்கதி ஆகின்றன.

ஒரு விதத்தில் பார்த்தால் மரணம் எப்படி குற்றவாளிக்கு தண்டனை ஆக முடியும்? உறுத்தலான குற்ற உணர்வில் உள் மனதில் எழும் போராட்டம் அவனைச்சார்ந்த பொறுப்புகள் யாவற்றிலிருந்தும் நொடிப்பொழுதில் கைநழுவி கழுவுவது அவனுக்கு விடுதலைதானே? எந்த வகையில் பார்த்தாலும் மரணதண்டனை என்று மனித சமூகத்தில் அறிவுடைமையான தீர்ப்பாக சொல்லி விடமுடியாது.

கிரீன் மைல் எனப்படும் சிறைக்கொட்டடி மரண தண்டனை கைதிகளுக்கென்றே கட்டப்பட்டது. அதில் சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றுகிறான் பால். அவனது சகாக்களாக வாட்சன், ஏர்லன், புருட்டல், பெர்சி கொட்டடிக்கு கொண்டு வரப்படும் கைதிகள் மின்சார நாற்காலியில் அமர்த்தப்பட்டு உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சி கொல்லப்படுகிறார்கள். மின் நாற்காலியில் அமர்த்தப்படும் போது உச்சந்தலையில் தண்ணீரில் நனைக்கப்பட்ட ஸ்பான்ஜை வைத்து அதன் வழியே மின்சாரம் பாய்ச்சுகிறார்கள். இது கிட்டத்தட்ட மூளையை நோக்கி சுடப்படும் துப்பாக்கி குண்டுக்கு இணையாக உடனடி மரணத்தை சம்பவிக்கச் செய்கிறது.

கொட்டடிக்கு கொண்டு வரப்படுபவர்களில் ஜான் ஃகாபே, டெல், வார்ட்டன் ஆகிய மூன்று வெவ்வேறு வகையான கதாப்பாத்திரங்களை ஸ்டீபன் கிங்கும், இயக்குநர் பிராங்கும் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். ஜான் ஃகாபே கறுப்பினத்தைச் சார்ந்த ஆஜானுபாகுவான தோற்றமுடையவனாக இருக்கிறான். இரண்டு பெண் குழந்தைகளை கொன்றதாக அவன் மீது குற்றச்சாட்டு. டெல் சராசரியான தோற்றமுடைய மென்மையான குணம் படைத்தவனாக இருக்கிறான். பில் வார்ட்டன் வாளிப்பான, அழகான தோற்றமுள்ள இளைஞன்.

இதில் ஜான் ஃகபேக்கு சில அபூர்வமான சக்திகள் இருக்கின்றன. அதன் மூலம் எத்தகைய நோயும் நொடிப்பொழுதில் குணமாகி விடுகிறது. சிறை அதிகார பால் சிறுநீரக தொற்று நோய் காரணமாக அவதிப்படுகிறார். இதையறிந்த ஃகபே அவரை எளிதில் அத்துன்பத்திலிருந்து விடுவிக்கிறான். இதனால் அவன் மீது அவருக்கு இனம்புரியாத அன்பு ஏற்படுகிறது.

டெல் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் ஒரு எலி புழங்க ஆரம்பித்துவிடுகிறது. அதனோடு வெகுவாக பழகிடும் டெல் ஒரு கட்டத்தில் அவன் சொல்லும்படியெல்லாம் செய்யும்படி எலியை பழக்குகிறான். அதற்கு Mr.Ingles என்று பெயரிடுகிறான்.

மிக சாது போல் தோற்றமளிக்கும் வார்ட்டன் எதிர்பாராத சமயத்தில் கிறுக்குத்தனமாக எதையேனும் செய்கிற மனநோய் பீடித்தவனாக நடந்து கொள்கிறான். இதன் காரணமாக தனிமைச் சிறையில் அவ்வபோது அடைக்கப்படுகிறான். இந்த முரண்பட்ட மூன்று கைதிகளோடு பால் என்கின்ற மென்மையான அதிகாரியின் பழகுகிற இயல்பு தன்மையும் பெர்சி என்கிற முரட்டுத்தனமாக மனவிகாரம் பிடித்த அதிகாரியின் கடினப்போக்கையும் ஊடாட வைத்து அற்புதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பிராங்க்.

பெர்சி எல்லா கைதிகளையும் ஏளனமாக நடத்தும் போதெல்லாம் அவனை பால் கண்டிப்பதும், அவன் இன்னும் உக்ரமாகி அதை விட மோசமாக வேறொரு சந்தர்ப்பத்தில் நடப்பதையும் காட்சிப்படுத்தும் பிராங்க் குற்ற மனநிலை என்பது எவர் மனதில் பேயோட்டம் போடுகிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். உளவியல் ரீதியாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த பாத்திரங்கள் மற்றும் அவர்களது நடவடிக்கைகள் பற்றிய அப்பட்டமான பதிவு உளவியல் மாணவர்களுக்கு பாடமாக வைக்கலாம் என்கிற அளவுக்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.


குறிப்பாக ஃகாபேயை தரக்குறைவாக நடத்துவதையும், டெல் மீது எப்பொழுதும் ஏளன பார்வையோடு உரையாடுவதையும் பெர்சியாக நடித்த டவ் ஹெர்ட்சன் மிக அருமையாக முகபாவங்கள், வசனவெளிப்பாடுகள் மூலம் அனாயசமாக நடித்திருக்கிறார். குறிப்பாக சிறைக்கதவு அருகே பெர்சி நடந்து செல்கையில் எதிர்பாராவிதமாக வார்ட்டன் அவனது கழுத்தை கம்பி வழியே நெரிக்க, பயத்தில் சிறுநீர் கழித்துவிடும் பெர்சி அவனிடமிருந்து தப்பித்தபின் எதுவும் நடவாதது போல் பிறரை எச்சரிப்பதும், அடக்கமாட்டாமல் சிரித்த டெல்லை பார்வையால் விரட்டுவதும் நடிப்புக்கலை பயில்பவர்களுக்கு சரியானதொரு ஆசிரியர் போல் திகழ்கிறார்.

டெல்லின் எலியை அவனை பழிவாங்கும் பொருட்டு பெர்சி காலால் நசுக்குவதும், டெல் அதற்காக கதறி அழுவதும், ஜான் ஃகாபே தன் அபுர்வ சக்தி மூலம் எலியை குணப்படுத்துவதும், ஏமாற்றமடைந்த பெர்சி, டெல் மரணதண்டனை நிறைவேற்றத்தின் போது உச்சந்தலையில் நீரில் நனைக்கா ஸ்பான்ஜை வைப்பதும், அதன் காரணமாக டெல் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து உயிர்விடுவதும் நெகிழ்ச்சியான இடங்கள். திருத்த வேண்டிய இடத்தில் இருக்கும் ஒரு அதிகாரியின் குற்ற மனநிலையையும், குற்றம் சாட்டப்பட்டு கைதிகளாக இருப்பவர்களின் மென்மையான மனநிலையையும் இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

சிறையின் தலைமை அதிகாரியின் மனைவி மூளையி்ல் உள்ள கட்டியின் காரணமாக மரணப்படுக்கையில் இருக்கிறார். சிறை அதிகாரி பால், ஜான் ஃகாபேவினால் நிச்சயமாக அவளை குணப்படுத்தி விட முடியும் என்று நம்புகிறான். இதர அதிகாரிகளும் நம்புகிறார்கள். ஒரு நாள் இரவு நேரத்தில் ஜான் ஃகாபேயை தலைமை அதிகாரி வீட்டுக்கு அவர்கள் அழைத்துச் செல்கிறார்கள். அங்கு ஃகாபே எளிதில் அவளது நோயை குணப்படுத்துகிறான். அவன் மீதான பாசமும் நம்பிக்கையும் அதிகரிக்கிறது.

ஃகாபேயை மின்சார நாற்காலியில் அமர வைக்கும் நாளுக்கு முதல் நாள் இரவு பால் அவனிடம் தான் அவனுக்காக எதுவும் செய்ய தயாராக இருப்பதாக கூறுகிறான். .காபே அதனை மறுத்து சட்டப்படி தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனையை ஏற்க தயாராக இருப்பதாக சொல்கிறான். அதோடு மட்டுமில்லாமல் தான் அந்த பெண் குழந்தைகளை கொல்லவிலலை என்றும் மனநிலை பிறழ்ந்த வார்ட்டன்தான் கொன்றதாகவும் கூறுகிறான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் பால் அவன் குற்றமற்றவன் என்று தெரிந்தும் சட்டப்படியான மரணதண்டனை ஆணையை கையில் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாதவராய் திகைத்து நிற்கிறார். ஆனால் ஃகாபே தனக்கு வாழ விருப்பம் இல்லை என்றும், மரணத்தை ஏற்பதாகவும் கூறிவிட அவனுக்கான மரணதண்டனை சிறை உயர்அதிகாரி மற்றும் ஃகாபேயினால் காப்பாற்றப்பட்ட அவரது மனைவி முன்னிலையில் நிறைவேற்றப்படுகிறது.

காட்சி அமைப்பதிலும், பாத்திரங்களை உருவாக்குவதிலும் பிராங்க தலைசிறந்தவர் என்பதை நிரூபிக்கும் இடங்கள் படத்தி்ல் விரவிக்கிடக்கின்றன. முக்கியமாக டெல் முதல்நாள் எந்த பார்வையாளர்கள் முன் சுண்டெலியை வைத்து வித்தைகள் நிகழ்த்துகிறானோ அதே பார்வையாளர்கள் முன் மின் நாற்காலியில் அமர்த்தப்பட்டு பொசுக்கப்படும் காட்சி. மரண தண்டனைக்காக அவனை அழைத்து வரும் போது மனஇறுக்கத்தில் நடந்து வரும் போது அறையின் புழுக்கத்தைக் கூடதாளாமல் விசிறிக் கொண்டு இருக்கும் பார்வையாளர்களின் அலட்சிய மனநிலையை படம் பிடிக்கும் காட்சி என்று பலவற்றை சொல்ல முடியும். படத்தின் வசனங்கள் நறுக்கு தெறித்தாற் போலவும், எள்ளலுடனும் அமைத்திருக்கிறார். டுட்ரு என்கிற கதாப்பாத்திரம் மரண தண்டனைக்கு முன்னதான ஒத்திகையின் போது நடிப்பவராக காட்டப்படுகிறார். அவரது நடை, உடை, பாவனை வசனங்கள் அத்தனையும் எள்ளல். மின்நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு போலியாக தண்டனை நிறைவேற்றுவது போல பாவனைக் காட்டி முடித்தவுடன் “Oh It is Shocking Experience!” என்று அந்த நிகழ்வை குறிப்பிடுவது எலலாமே காட்சிகளை உருவாக்குவதன் கலையை உணர்த்துகின்றன.

பால் என்கிற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் டாம் ஹாங்ஸ் (Tom Hanks) அற்புதமான உடல் மொழி அமையப்பெற்றவர். மார்லன் பிராண்டோ, டஸ்டின்ஹாப்மேனுக்கு பிறகு மிகச்சிறந்த நடிகர் என்று அவரை குறிப்பிடலாம். Forrest Gump, Cast Away போன்ற மிகச்சிறந்த பட வரிசையில் இந்த படத்தையும் குறிப்பிடலாம். இந்தி நடிகர் அமீர்கான் நடிப்புபாணி பெரும்பாலும் டாம்ஹாங்ஸ்ன் நடிப்பு பாணியை ஒத்திருப்பதை சிலர் உணரக்கூடும்.

டேவிட் டால்ட்ரஸால் (David Tattersall) ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். ஃகாபேயை அறிமுகப்படுத்தும் காட்சியில் இடம் பெற்ற எல்லோரும் ஃகாபேவை விட உயரம் குறைவானவர்கள் (உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும்) என்பது போல் ஃகாபேயின் முகத்தையே காட்டாமல் அவன் நடமாட்டத்தை காண்பிக்கும்படி அவர் வைத்த கோணங்களும், டெல்லை மரணதண்டனைக்கு அழைத்துவரும் காட்சியில் அவர் பயன்படுத்தியிருக்கும் காட்சி அமைப்பும் படத்தின் மையக்கருவை உள்வாங்கி கொண்டு அமைக்கப்பட்டவை.


உளவியல் ரீதியாகவும் திரைப்படக்கலையை மிக நோ்த்தியாக கட்டமைத்திருக்கும் விதத்திலும் The Green Mile மிக அற்புதமான படம் என்றே குறிப்பிடுவேன்.

U-571

இயக்கம் : JONATHAN MOSTOW
ஒளிப்பதிவு : OLIVER WOOD

இசை : RICHARD MARVIN


இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்ற சமயம் ஹிட்லரின் U-BOAT எனப்படும் நீர் மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்க, இங்கிலாந்து மற்றும் பிறநாடுகளின் கூட்டுப்படைகளைச் சார்ந்த சுமார் 1000 கப்பல்கள் அழிந்தன. இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான கப்பல் வழிப்போக்குவரத்தை நிலைகுலையச் செய்யும் முயற்சியாக செய்யப்பட்ட இந்த தாக்குதலால் அமெரிக்காவின் கூட்டுப்படைகள் விழிபிதுங்கி நின்றன. ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பல்களில் தொழில்நுட்ப தரமும் மிக நவீனமாக இருந்தது அதற்கு மிக முக்கியமான காரணமாகும். அதோடு ஜெர்மனியின் படைகளுக்கு இடையே பரிமாறிக்கொள்ளும் சங்கேத குறியீடுகளை அமெரிக்க உளவுப்படை யூகிக்க முடியவில்லை. எனவே அவர்களுக்கு இடையே நடக்கும் ரேடியோ அலைச்செய்திகளை உருவாக்கும் ‘எனிக்மா’ (ENIGMA) எனும் கருவியை கைப்பற்றினால் மட்டுமே அந்த சங்கேத குறியீடுகளை இனம்காண முடியும் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது.

ஜெர்மனியின் நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று அமெரிக்க கப்பல்களை தகர்த்துவிட்டு திரும்ப யத்தனிக்கையில் அந்த கப்பலின் இரண்டு மிக முக்கியமான டீசல் என்ஜின்கள் பழுதுபட்டுவிட, பேட்டரிகளும் செயல் இழந்துவிட்டன. எனவே அந்த நீர்மூழ்கிகப்பலை சீர்செய்ய ஜெர்மனியின் தலைமையகத்துக்கு (BERLIN) செய்தி அனுப்பிவைத்துவிட்டு கப்பல் நடுக்கடலில் மிதந்தபடி இருந்தது என்கின்ற செய்தி அமெரிக்க உளவுப்படைக்கு கிடைத்துவிடுகிறது. அது போன்றதொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த அமெரிக்க கப்பற்படை ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பலைப்போன்றே ஒரு கப்பலை தயார் செய்து அதில் அமெரிக்க வீரர்களை ஜெர்மனியின் வீரர்கள் போல் உடையணியச்செய்து அந்த கப்பலை தகர்க்க திட்டமிடுகிறது. இதன் மூலம் எனிக்மா இயந்திரத்தை கைப்பற்றி விட்டால் செய்திகளை இடைமறித்து கேட்பதும் அதன்படி யுத்த யுக்திகளை வகுப்பதும் எளிதாகிவிடும் என்பது அமெரிக்க இராணுவத்தின் கணக்கு. ஜெர்மனியிலிருந்து பழுது நீக்க வரும் கப்பல் அந்த இடத்தை அடைவதற்குள் அமெரிக்க கப்பல் அங்கு சென்றுவிடவேண்டும் என்பதால் அமெரிக்க வீரர்கள் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் புறப்படுகின்றனர்.

S-26 எனப்படும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் பல சாகசங்களைப் புரிந்த எக்ஸிகியூட்டிவ் ஆபீஸர் ஆன்ட்ரு (ANDREW TYLER) தனக்குத்தான் CAPTAIN பதவி வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். ஆனால் S-33 எனும் புதிய நீர்மூழ்கிக்கப்பலுக்கு பணியாற்ற வரும் பொழுதுதான் அவனுக்கு CAPTAIN பதவி தரப்படவில்லை என்ற தகவல் கிடைக்கிறது. அவனை வெகுவாக விரும்பும் சக வீரர்களை இந்த செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அவனோடு பணியாற்றும் CHIEFக்கும் இது மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது. ஆன்ட்ருவும் மற்றும் அவனது சகவீரர்களும் எனிக்மா இயந்திரத்தை கைப்பற்றும் மிக முக்கியமான அதிரடி வேலைக்கு ஆன்ட்ருவிற்கு பதவி உயர்வு தர மறுத்த டெல்காம் தலைமையில் செல்ல வேண்டிய விசித்திரமான சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இருந்தாலும் தலைமையின் ஆணைக்கு கட்டுப்படவேண்டும் என்கின்ற விதியை மதித்து அனைவரும் அந்த பணிக்கு ஆயத்தமாகின்றனர்.

ஜெர்மனியின் நாசகார கப்பலை சில மணி நேரங்களில் அடையும் அமெரிக்க கப்பலில் ஜெர்மன் மொழி தெரிந்த இரண்டு பேரும் உடன் வருகின்றனர். சிறிய லைஃப் போட் (LIFE BOAT) மூலம் அந்த கப்பலை அடையும் சமயத்தில் ஜெர்மனியின் படைவீரர்களால் அடையாளம் காணப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்றாலும் வெற்றிகரமாக கப்பலை தங்கள் வசம் கைப்பற்றும் அவர்கள் எனிக்மா இயந்திரத்தையும் சங்கேத குறியீட்டு மத்தகத்தையும் எடுத்துவிடுகின்றனர். ஆனால் அவற்றை எடுத்து தாங்கள் வந்த கப்பலுக்கு மாற்ற முயற்சிக்கும்போது ஜெர்மனியின் கப்பல் வந்து அமெரிக்க கப்பலை தூள் தூளாக்கிவிடுகின்றன. வேறு வழியில்லாமல் ஜெர்மனியின் கப்பலிலேயே தொடர்ந்து முயற்ச்சித்து தப்பிக்க நினைக்கிறார்கள். எனவே ஜெர்மனியின் கப்பலில் ஏற்பட்ட பழுதினை நீக்கி அதனை கடல் மட்டத்துக்கு உள்ளே இறக்குகின்றனர். ஜெர்மனியின் கப்பற்படை நீரினுள் வெடிக்கும் குண்டுகளை தொடர்ந்து வீசியபடி இருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க தங்கள் நோக்கத்தை நினைத்தபடி நிறைவேற்றி நாடு திரும்புவதோடு படம் முடிகிறது.

வர்த்தக நோக்கில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தாலும் படை வீரர்கள் என்பவர்கள் தலைமையின் ஆணையை அப்படியே ஏற்பதும், அதன் வழி நடக்க உயிரையே பணயம் வைப்பதும், காட்சியின் பிரமாண்டமும் பிரமிக்க வைக்கிறது. எதிர்பாராமல் இவர்களது தாக்குதலுக்கு தயாராகும் ஆன்ட்ரு வழியில் CAPTAIN இறந்து போவதால் கப்பலின் முழு பொறுப்பையும் ஏற்கிறான். அவன் மீது எழும் அவதூறு பேச்சுக்களை அமெரிக்க கப்பல்படையின் CHIEF கடுமையாக அடக்குவதுடன் அவனுக்கு பல்வேறு யோசனைகளையும் வஞ்சனையில்லாமல் சொல்கிறார்.
180 மீட்டர் ஆழம் வரை மட்டுமே நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலுக்கு கீழே செல்லமுடியும். ஆனால் நீரில் வெடிக்கும் குண்டுகளை ஜெர்மனியின் கப்பற்படை வீசும்போது கப்பலை 200மீக்கும் கீழே போகும்படி ஆணையிடுகிறான் ஆன்ட்டி. ஜெர்மனியின் தொழில் நுட்பம் நிச்சயம் அமெரிக்க தொழில் நுட்பத்தைவிட உயர்ந்ததாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையில் 200மீக்கு ஆழத்தில் கப்பலை இறக்குமாறு பணிக்கிறான். அச்சம் பீடித்தபடி அதனை செய்யும் வீரர்கள் ஜெர்மனியின் தாக்குதலிருந்து தப்பி விடுகின்றனர். எனிக்மா இயந்திரம் மற்றும் சங்கேத குறிப்புகளைக் கைப்பற்றி சிறிய படகில் வெற்றிகரமாக நாடு திரும்பும் அவர்கள் புள்ளியாக மறைகையில் படம் முடிகிறது.

தனி மனித வீர சாகசமாக இதனை மிகைப்படுத்தாமல் ஒரு யதார்த்தமான வரலாற்று நிகழ்வாக இயக்குநர் ஜோனாதன் மாஸ்டோ (JONATHAN MOSTOW) பதிவு செய்ததினால் இதனை முக்கியமான படமாக கருதுகிறேன். படத்தினை எடுப்பதற்கு முன் 1941 மே மாதம் 9ந்தேதி u-110 எனம் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து எனிக்மா இயந்திரத்தையும் குறியீட்டு குறிப்புகளையும் கைப்பற்றிய லெப்டினென் ஜெனரல் டேவிட் பால்மேவையும் அமெரிக்காவின் அப்போதைய உதவி அட்மிரல் பேடிக் ஹான்ஃபின்னையும் சந்தித்து அதற்கான தகவல்களை சேகரித்திருக்கிறார். தொல்பொருள் ஆய்வாளர்கள் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆகியோரை சந்தித்து படத்தினை உண்மைத்தன்மையுடன் உருவாக்க முனைந்திருக்கிறார்.

படத்தின் கலை இயக்குநர்கள் லாடோ ஸ்கின்னர், கோட்ஸ் வெயிட்னர் ஆகியோர் இரண்டாம் யுத்த காலத்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் பெரிங்கோப் டார்பிட்டே குண்டுவீசும் பீரங்கிகள் என்று நம் கண் முன்னே நிறுத்துகின்றனர். இணையற்ற ஆலிவர் வுட்டின் ஒளிப்பதிவு நம்மை கடலுக்குள் இட்டுச்சென்று இரண்டு மணி நேரம் நனைத்துவிடுகிறது. படம் முடிந்தும் கூட ஈரம் உலராமல் நாம் சட்டையை பிழிய முனைந்தால் ஆச்சர்யமில்லை என்கிற அளவுக்கு உன்னதமான படப்பிடிப்பு ரிச்சர்ட் மர்வினின் இசை அற்புதமான ஒத்திசைவு. உடைகளை வடிவமைத்த ஏரியல் ஃபெர்ரியும் பாராட்டுதலுக்குரியவர்.

ஒரு டைப்ரைட்டிங் மெஷினுக்காக அத்தனை உயிர் பலியாக வேண்டுமா? என்று படத்தில் ஒரு கதாபாத்திரம் சலித்துக்கொள்ளும். அதற்கு அந்த கப்பலின் இட்ன்ச் தலைமையிலிருந்து உன்னையும் என்னையும் விட எனிக்மா இயந்திரம்தான் மிக முக்கியம என உத்தரவிட்டிருக்கிறது. அப்படியானால் அதுதான் நம தேசத்துக்கு மிக முக்கியம் என்பதைத் தவிர வேறு எண்ணம் உனக்கு வரக்கூடாது. அதுதான் ஒரு இராணுவ வீரனின் கடமை என எச்சரிக்கிறார். படத்தின் ஒற்றை வரி கவிதையும் இதுதான்.

இராணுவத்துக்காக ஒதுக்கப்படும் நிதி ஆதாரங்கள் செலவிடப்படும் மனித சக்தி குறித்து மாறுபாடான எதிர் கருத்துகள் பரவலாக சிந்தனையாளர்கள் மத்தியில் இருப்பது நியாயமானதுதான் என்றாலும் யதார்த்ததில் ஆற்றி மூளும் பகை நெருப்புக்கு எதிராய் பாதுகாப்பாய் இருக்கும் ஒவ்வொரு தேசத்தின் இராணுவ வீரர்களின் தியாக வரலாறும் நீரின் அடியில் அமிழ்ந்துகிடக்கும் கண்ணுக்குத் தெரியாத தகவல்கள் போல் ஈரமிக்கது. இரவுக்காவல்காரர்களின் உறக்கமற்ற இரவுகளைக்கூட அலட்சியமாய் புறக்கணிக்கும் நமக்கு எலிமையில் விழித்திருக்கும் இராணுவ வீரர்களின் அச்சமிக்க பொழுதுகள் பற்றி எபபொழுது கவலைப்பட்டிருக்கிறோம்? நட்சத்திரங்களின் அழகை ரசிக்கும் கண்களுக்கு ஒரு போதும் இமைகள் தெரிவதில்லை என்பது உண்மைதானே.

ஞாயிறு, 4 ஜூலை, 2010

கடவுளின் வாழ்த்து

எல்லாக் கணங்களும் கடந்து போகின்றன
எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாமலேயே...
எல்லா தினங்களும் முடிந்து போகின்றன
எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமலேயே...

இருப்பினும் சில தினங்களை நினைவு கூர்கிறோம். சில தினங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ப்ரியங்களைப் பகிர்ந்து கொள்ள சில நாட்களைத் தேர்வு செய்கிறோம். நாட்கள் சரியாக அமைந்து விடுகின்றன.

ப்ரியங்களை மிகச் சரியாகப் பகிர்கிறோமா? யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு முறை புத்தாண்டு பிறக்கும் போதும் உற்சாகமாக வரவேற்கிறோம். வாழ்த்துகளும் விசாரிப்புகளும் பரிமாறப் படுகின்றன. சில உறுதிமொழிகள் எடுக்கப்பட்டு பின்பு, மறக்கப் படுகின்றன.

ஆனால், குறிப்பாக என்ன செய்தோம் என்று நினைவு படுத்த முடியவில்லை. ‘புத்தாண்டும் ஒரு தினமே' என்று நினைவுப் பெட்டகத்தில் இருக்க மறுத்து கரைந்து விடுகிறது.

மனித வாழ்வில் சராசரி வாழ்வு 60 வயது. ஏதுமறியா குழந்தைப் பருவம், ஏதும் முடியா முதுமைப்பருவம் நீக்கினால், உண்பதும் உறங்குவதுமாகக் கழியும் பெரும்பொழுதும் போக உருப்படியாய் கழிந்த பொழுதை மட்டும் கணக்கிட்டால் மாதக் கணக்கில் சுருங்கிடும் அற்பமே நம் வாழ்நாள்.
வேஷமின்றி துவேஷமின்றி பிறருக்காக வாழ்தல் என்பது மிக உன்னதமான நாட்கள். நம் ப்ரியமானவர்களுக்காக வாழும் வாய்ப்புக் கிடைத்தால் அவையும் அர்த்தமுள்ள நாட்களே.

எல்லா குடும்பத்திலும் எவரேனும் ஒருவர் ஜீலையில் பிறந்திருக்கிறார்கள்.
அப்படி ஜீலையில் பிறந்த அனைவருக்காக, அவர்களை வாழ்த்த நாங்கள் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தோம்.





‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதனினும் அரிது கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது'  என்றாள் ஒளவை.

சகலமும் சரிவரப் பெற்று வாழும் நாம், அப்படியாக இல்லாமல் ஊனமுற்றவர்களாகப் பிறந்து வறுமையில் வாடும் சிலரோடு நம் உறவினர் பிறந்த தினங்களைக் கொண்டாடினோம்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் வாய் பேச இயலாத, காது கேளாத குழந்தைகள் கல்வி பயில அரசுக் காப்பகங்கள் மட்டும்தான் வழி. அங்கு தங்கியிருக்கும் ஒரு குழந்தைக்கு உணவு செலவுக்காக அரசு ஒதுக்கும் தொகை மாதம் ரூ.225/- மட்டுமே. அந்த தொகைக்குள் அவர்களுக்கு தினசரி மூன்று வேளைகள் வீதம் மாதம் முழுதும் உணவிட வேண்டும். கஞ்சியோ கூழோ, கலந்த சாதமோ, விற்கும் விலையில் கட்டுப்படியாகும் காய்கறிகளோ இட்டு நிரப்பி அக்குழந்தைகளின் பசியாற்ற காப்பகப் பொறுப்பாளர்கள் படும் பாடு படாத பாடுதான். நன்கொடையாளர்கள் கிடைக்கும் நாட்களில் தான் அக்குழந்தைகளின் வயிறு நிறைந்து முகம் மலர்கின்றன.

இந்த ஜீலை மாதம் பிறந்தநாள் காணும் நம் பிரியமானவர்களுக்காக 25.06.2010. அன்று கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளிக் குழந்தைகள் 25 பேருக்கு மதிய உணவும், அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் கைவினைப் பொருள்கள் செய்யத் தேவையான பொருட்களும் அளித்து மனநிறைவோடும் நிம்மதியோடும் வீடு திரும்பினோம்.






கடந்த 7,8 வருடங்களாக இது போன்ற வெவ்வேறு காப்பகங்களில் எங்கள் திருமண, பிறந்தநாள், உறவினர் பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகிறோம்.



இதனை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளக் காரணம் நீங்களும் உங்களுக்குப் பிரியமானவர்களுக்கான சிறந்த தினங்களை இப்படிக் கொண்டாடத் திட்டமிடலாமென்றுதான்.


சில கேள்விகள் எழுவது இயற்கை.

1.ஒரு வேளை உணவளிப்பதால் அவர்கள் துயரம் தீர்ந்துவிடுமா?

எல்லாக் கடலும் நீர்த்துளிகளின் சேர்க்கைதான். பிறருக்காக சிந்தும் கண்ணீர் ஒரு துளியென்றாலும் அது கனமானது, ஈரமானது, தேவையானது...



2.கையில் பணமிருந்தால் எல்லாரும்தான் செய்யலாம்...அந்த அளவுக்கு வருமானமில்லாதவர்கள்...?

உங்கள் கொண்டாட்டங்களுக்காக நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் தொகையில் சிறிதளவு தரலாமே... இல்லாவிடில், உங்கள் நேரத்தை ஒதுக்கி அவர்களுக்கு ஏதேனும் கற்பித்தல், வழிகாட்டல், மகிழ்வித்தல் என இயன்றதை செய்யலாம். தேவை, எளியோர்க்கு இரங்கும் கருணை மனம்.



3.அரசுதானே இதைச் செய்யவேண்டும்... நாமெதற்கு?

யார் செய்ய வேண்டுமென்ற தர்க்கம் வயிற்றுக்குத் தெரிவதில்லை. அதற்குத் தெரிந்தது பசி. தீர்க்க முயல்பவன் தர்க்கம் செய்வதில்லை.



4. மீன் பிடிக்கக் கற்றுத் தருவது மீன் தருவதை விடச் சிறந்தது..

மீன் பிடிக்கக் கற்றுத் தருவது மாபெரும் கொடை. முடிந்தால் அதைச் செய்யலாம். அது வரை மீன் கொடுங்கள்

.
5.ஒரு நாள் தந்து விட்டால் மீதி நாள் அதற்கு மனம் ஏங்குமே...



எல்லா தினங்களிலும் யாராவது பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைக்குக் கூட உங்கள் பிரியமானவர்களின் பிறந்தநாளாக இருக்கலாம். நீங்கள் தரலாம். அல்லது அவரைத் தரும் படித் தூண்டலாம். அப்படியான முயற்சியிது.



எங்களுக்குப் பிரியமான உங்களுக்காகவும், நாங்கள் இதைச் செய்தோம். கட்டாயம் ஏதுமில்லை. நீங்கள் இருக்குமிடத்தில் உங்கள் அருகில் நீங்கள் தருவதைப் பெற எவரேனும் இருக்கலாம்.
பிறப்புக்கும் இறப்புக்குமிடையே என்ன சாதித்திருக்கிறோம் என்ற கேள்வி எப்போதேனும் ஒரு முறை தாக்கியிருக்கலாம்.

‘என் வாழ்வின் அத்தியாயத்தில் அர்த்தமுள்ள பக்கங்களும் இருந்தன' என்று அடையாளப் படுத்த உங்களுக்கான தினங்களை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.

இதோ மெளனமாகப் பிரார்த்திக்கும் இவர்களிடம் பேசிக்கொள்ள மொழியில்லை. ஆனால் அர்த்தம் பொதிந்த வரிகள் நிரம்பியிருக்கின்றன.



கடவுளின் அருளுக்காக எல்லா வழிகளிலும் பிரார்த்திக்கிறோம். கடவுளை வாழ்த்தியபடி...

கடவுளின் வாழ்த்து சுலபமாகக் கிடைக்கிறது... நமக்காகப் பிரார்த்திக்கும் மனங்களில்...

எல்லோர்க்கும் எங்கள் பிரார்த்தனைகள்...

எல்லோர்க்கும் எங்கள் வாழ்த்துகள்...!



மிக்க அன்புடன்,






(நெய்வேலி பாரதிக்குமார்)

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...