திங்கள், 24 நவம்பர், 2025

கனவில் ததும்பும் நதி 5

 

கனவில் ததும்பும் நதி 5

            நெய்வேலி பாரதிக்குமார்

லக வரலாற்றின் கால வரையறை அட்டவணையை இப்படி வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். பழங்காலம், நுண்கற்காலம், புதிய கற்காலம், தாமிர காலம், இரும்பு காலம். தொல்லியல் ஆய்வுகளின் தரவுகள் வழியே மனித சமூகத்தின் பயன்பாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் இப்படி பகுக்கப்பட்டிருந்தது. அதாவது உலோக வரலாற்றில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது செம்பு. அதன் பிறகுதான் இரும்பு என்கிற கருதுகோள் தொடர்ந்து நம்பப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக இரும்பைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்றி பெஸ்மார்  (Henry Bessmer, Engaland – 1856) என்று மனப்பாடம் செய்து கொண்டிருந்தோம். ஆனால் இரும்பின் பயன்பாடு கி.மு இரண்டாயிரம் ஆண்டுகளிலேயே வடஇந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தொல்லியல் சான்றுகள் கிடைத்தன. ஆனால் தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகளிலேயே இருந்ததற்கான சான்றுகளை கண்டறிந்துள்ளது. தமிழக அரசு தொல்லியல் துறை இவ்வருட தொடக்கத்தில் வெளியிட்ட சிறுநூல் ஒன்று தமிழகத்தின் இரும்புப் பயன்பாட்டைப் பற்றி விரிவாக விளக்குகிறது.

திரு ராஜன் மற்றும் திரு சிவானந்தம் ஆகியோர் இணைந்து எழுதி இருக்கும் இரும்பின் தொன்மை என்கிற இந்த நூல் இந்த ஆய்வுகள் பற்றி விரிவாக கூறுவதோடு, உலக தொல்லியல் ஆய்வாளர்கள் இந்தக் கண்டுபிடிப்புகள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது, எத்தனைச் சிறப்பு வாய்ந்தது என்பது பற்றி வெளியிட்ட கருத்துகளையும் தொகுத்துள்ளது.    

பாரிசில் உள்ள பிரெஞ்சு தேச, அறிவியல் ஆராய்ச்சி மைய முன்னாள் இணைப் பேராசிரியர் ஒஸ்மாண்ட் போப்பராச்சி தமிழகத் தொல்லியல் துறையை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் அமெரிக்காவின் பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மத்திய ஆசியா மற்றும் தெற்காசிய தொல்லியல் துறையிலும் பணியாற்றி இருக்கிறார். அவரது பாராட்டு மிக முக்கியமானது 

“உலகின் மிகவும் நம்பகமாான ஆய்வகங்களில் ஒன்றாகக் கருதப்படும் பீட்டா அனாலிட்டிக் ஆய்வகத்தில் High Probability Density Range(HPD) முறையின் அடிப்படையில் கதிரியக்கக் காால க்கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரையறுக்கப்பட்ட கால வேறுபாடுகளைத் தெளிவாக வழங்குகிறது. புத்தகத்தில் முன்மொழியப்பட்ட புதிய காலக்கணக்கீடுகள் பழைய முடிவுகளை முழுமையாக மாற்றுகிறது.” என்று போப்பராச்சி கூறி உள்ளார்.

தமிழகத்தின் தொன்மை குறித்தா ஆய்வு முடிவுகள் வெளிவரும்போதெல்லாம் திண்ணை வெட்டி விமர்சகர்கள் ஹுக்கும் இதை எல்லாம் நான் நம்பமாட்டேன் இதை உலக ஆராய்ச்சியாளர்கள் சொல்லலை. இல்லை என்றால் வட இந்தியாவில் இதைவிட பழமையான தோசைக்கல் ஒண்ணு இருக்கு என்று உருட்டியவர்கள் இப்பொழுது நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டு மவுனமாக இருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த நூலில் இந்தியாவின் பல தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்துகளும் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தெற்காசிய தொல்லியல் துறையின் தலைமைப் பேராசிரியர் திலீப்குமார் சக்ரவர்த்தி, இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் ராகேஷ் திவாரி, பேராசிரியர் பத்தய்யா, பேராசிரியர் சாந்தா சீனிவாசன், முனைவர் சி.ஜெ. செரியன், முனைவர் அசோக்குமார் கனுங்கோ ஆகியோரும் இந்த ஆய்வுமுடிவுகளை வரவேற்று ஆதரித்துள்ளனர்.

இதில் ராகேஷ் திவாரி ஏற்கனவே கீழடியிலும் கொற்கையிலும் கிடைத்த கறுப்புநிற பானை ஓடுகளை கவனமாக ஆராய்ந்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவீந்திர என் திவாரியுடன் இணைந்து தெரிவித்த அறிக்கையில்  கங்கைச் சமவெளிக்கும் இந்தப் பகுதிகளுக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்ததை உறுதிசெய்வதாக மாநில தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழியில் கி.மு. 15 ஆம் நூற்றாண்டு வெண்கல தகரப் பொருட்கள் இருந்தன. மேலும் சாஸ்தாபுரம், உலைப்பட்டி, அடுக்கம், திருமலாபுரம், ஆரோவில் ஆகிய இடங்களில் கிடைத்த ஈமத்தாழிகளிலும் இவ்வாறு தகர வெண்கலப்பொருட்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தன. ஆனால் தற்சமயம் சிவகளையில் கிடைத்த சான்றுகள் 3000 ஆண்டுகளுக்கும் முந்தைய கால இரும்பு என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே  சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லை கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதன் வயது 3,175 ஆண்டுகள் என்று தெரியவந்திருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இவை அனைத்தையும் முதலமைச்சர் என்கிற அடிப்படையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்/ ஒரு முதலமைச்சர் தெரிவிக்கிறார் எனில் அதை மேம்போக்கான ஒன்றாக கருதிவிட முடியாது உரிய ஆய்வாளர்களின் கருத்துகளோடு உறுதி செய்து இரும்பின் தொன்மை – தமிழ்நாட்டின் அண்மைக்கால கதிரியக்க காலக்கனக்கீடுகள் என்கிற நூலை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியிட்டுள்ளது. உண்மையில் இந்த ஆய்வு முடிவுகளை இந்தியாவே கொண்டாடி இருக்கவேண்டும். ஆனால் தமிழ்நாட்டின் தொன்மை என்று சொல்வதில் உள்ள கசப்புணர்வு தமிழர் அல்லாத அத்தனை மனிதர்களுக்கும் நெஞ்சு வரை இருக்கிறது என்பதையே ஒவ்வொரு கட்டத்திலும் வெறுப்பாளர்களின் கருத்துகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவின் தொன்மை எத்தனை பழமையானது என்று சொன்னால் புளகாங்கிதப்படுவதும் அதுவே தமிழகத்தின் தொன்மையைப் பற்றிப் பேசினால் குடல் வரை எரிவதும் விசித்திரமான நோய் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. உண்மை என்பது அணையா நெருப்பு அதை காகிதப் பொட்டலத்தில் கட்டி மறைத்துவிட முடியாது.

சிறார் இலக்கிய நூல்கள் வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுவர்களை திசைத்திருப்பும் பல்வேறு கண்ணிகள் கைக்கெட்டிய தூரத்தில் கிடைக்கின்ற இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காலகட்டத்தில் சிறுவர்கள் புத்தகங்களை நோக்கி வருவார்களா என்கிற கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.

எல்லா காலக்கட்டத்திலும் வாசிக்கின்ற கூட்டம் ஒன்று அளவில் சிறியதாயினும் நிச்சயம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் என் உறவினர் குடும்பத்து பெண் ஒருவர் இளம் வயது முதல் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கிறவராக இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு போனேன். அங்கு வாசிக்க அதிகபட்ச நூல்களைத் தேடிப் போகவேண்டும் என்றால் சிங்கப்பூர் நூலகத்தைத்தான் அணுகவேண்டும். என்றாலும் தனது தீராத வாசிப்பு தாகத்தால் அவர் தேடித்தேடி வாசிக்கிறார். இப்படி சிலரை அடையாளம் காட்டமுடியும்.

வாசிப்பது என்பது குறுகிய கால கேளிக்கை அல்ல. இன்றைக்கு காணக் கிடைக்கும் காணொளித்துளிகள் அற்ப ஆயுளில் மடிபவை அதிகபட்சம் ஒரு நாளைக்கு மேல் அதன் ஆயுள் இருப்பதில்லை. ஒரு சில தாண்டி வாழலாம் அவற்றின் உள்ளடக்கம் ஒருவேளை பயனுள்ளதாக இருக்கும். ஆனால் புத்தகங்களின் வாசிப்பாளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கலாம். ஆனால் எல்லா காலகட்டத்திலும் கணிசமான வாசகர்கள் புத்தகங்களைத் தேடிக்கொண்டு இருப்பார்கள். உண்மையில் பாரப்ட்சம்ற அசல் வாசகர்கள் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஐம்பது அறுபது ஆண்டகளுக்கு பின்னர்தான் கிடைப்பார்கள். ஆகவே நிகழ்கால பயன்கருதி புத்தகங்கள் வெளியாவதை குறைக்கவோ தடுக்கவோ கூடாது.

சிறார் இலக்கியத்தில் தொடர்ச்சியான செயல்பாடுகளை தீவிரமாக செலுத்திவரும் உமையவன் அவர்கள் கவனிக்கத்தக்க அளவு தன் படைப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவரது கிணற்று பூதம் என்கிற சிறார் கதைகளின் தொகுப்பை வாசித்தேன். அவரிடம் என்னைக்க் கவர்ந்த இரண்டு விஷயங்களை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். அவரது எழுத்துநடை என்பது சிறுவர்களிடம் நேரிடையாக உரையாடுவது போல எளிமையாக அதே சமயம் வலிமையுடன் ஒரு பள்ளிச் சிநேகிதன் உரையாடுவது போல சுவாரசியமாக இருக்கிறது. மற்றொன்று சிறார்கதைகள்தானே, எவ்வளவுக்கு எவ்வளவு மாயா ஜால விஷயங்களை சேர்க்கிறோமோ அவ்வளவுக்கு சுவாரசியம் என்று நினைக்காமல். பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை கண்டித்து எழுதுகிறார். சிறுவர்கள் மத்தியில் இம்மாதிரியான அறிவு அறத்துடன் செயல்பட வேண்டியது எழுத்தாளனின் நேர்மையான கடமை.

முன்னுரையையே சிறுவர்களை நோக்கி பேசுவது போல எழுதி இருக்கிறார். நீங்க இந்தக்கதைகளை எல்லாம் படிச்சிட்டு உங்க நண்பர்கள் கிட்ட சொல்லுங்க. நீங்க கதை சொல்லும்போது எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா என்று தன் படைப்பை நோக்கி இழுக்கிறார்.

தலைப்புக் கதையான கிணற்று பூதம் சிறுகதையில் பணத்துக்காக கிணற்றில் இருந்து நீரை ரகசியமாகத் திருடி விற்பவர்கள், கிணற்றில் பூதம் இருப்பதாக புரளியைக் கிளப்பிவிட்டு, கிணற்றுப் பக்கம் ஊர்மக்கள் வர விடாதபடி செய்துவிடுகின்றனர். சிறுவன் பாலு இந்த விஷயத்தை எதேச்சையாகப் பார்த்துவிட, தண்ணீர்த் திருடர்களை அம்பலப்படுத்த அவர்கள் அறியாமல் மொபைலில் வீடியோ எடுக்கிறான். ஊர்மக்கள் மத்தியில் அவர்களை கையும் களவுமாக பிடிக்க ஒரு திட்டத்தையும் வகுக்கிறான். இறுதியில் அவன் நினைத்தபடியே நடக்கிறது. அதோடு கிணற்றில் பூதம் இருப்பது போல் ஒரு செயற்கை ஒலியை அவர்கள் எப்படி ஏற்படுத்துகிறார்கள் என்பதையும் கதையின் இறுதியில் விளக்குகிறார், இதுதான் இன்றையத் தலைமுறைக்குத் தேவையான ஒன்று. நான் மாயக்கை கிணறு என்று சிறுகதை எழுதி இருக்கிறேன். பெரியவர்களுக்கான கதைதான் அதன் உள்ளடக்கமும் மூடநம்பிக்கைக்கு எதிரானதுதான்.

இரண்டாவது கதையான கறுப்பி என்னும் எருமை என்கிற சிறுகதை குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தத்தை போக்கும் முயற்சியில் எழுதப்பட்டது. கறுப்பு நிறம் குறித்து வெவ்வேறு கோணத்தில் எல்லோரும் சமாதானம் சொன்னாலும் அந்தக்குறை மனதில் கொதித்துக் கொண்டே இருக்கும். அதுவும் உடல் நிறத்தைக் கேலிசெய்யும் வகையில் யாராவது பெயரிட்டு அழைத்தால் இன்னும் மனம் ரணமாகும்.

கருப்பு நிறத்தில் பிறந்த ஒரு எருமை தன் கறுப்பு நிறம் காரணமாக பகடி செய்யப்படுவதை சகிக்காமல் வனதேவதையை அணுகி தன்னை சிவப்பாக மாற்றிக்கொள்கிறது. அப்படி சிவப்பாக மாறிய காரணத்தால் இறைச்சிக்கு எடுத்துச் செல்பவர்கள் தங்களின் முதல் தேர்வாக அந்த எருமையை வண்டியில் ஏற்றுகின்றனர். வெட்டப்படுவதற்குத்தான் தான் ஏற்ரப்படுகிறோம் என்பதை தாமதமாக உணர்ந்த எருமை மறுபடியும் வனதேவதையை சந்தித்து மீண்டும் கறுப்பாக மாறிவிடுகிறது. இச்சிறுகதை உண்மையில் சிறுவர்களால் வாசிக்கப்படவேண்டும். உருவகேலி என்பது எந்த அளவுக்கு மனதைத் தைக்கும் என்பது அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறிந்த வலி. இச்சிறுகதையை வாசிக்கும் சிறார்கள் நிச்சயம் அந்த வலியை அறிவார்கள். அதேசமயம் அதை ஒரு குறையாக நினைத்து வருந்தவேண்டியது இல்லை என்று உணர்வார்கள்.

இப்படி உமையவன் கதைகள் சிறுவர்களுக்கான அறிவுலகத்தைத் திறக்கின்றன. திரைப்படங்களும், கார்ட்டூன் படங்களும் திரும்பத்திரும்ப அறிவுக்குப் புறம்பான விஷயங்களையே முன்னிறுத்துகின்றன. இச்சூழலில் உமையவனின் கதைகள் சிறுவர்கள் உள்ளத்தில் நிச்சயம் சிறு வெளிச்சத்தைப் பாய்ச்சும்.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

கனவில் ததும்பும் நதி 8

  கனவில் ததும்பும் நதி 8             நெய்வேலி பாரதிக்குமார்   இ ந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதன்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று...