கனவில் ததும்பும் நதி- 3
-நெய்வேலி பாரதிக்குமார்
இந்த ஆண்டு தொடக்கத்தில் லினக்ஸ் நிறுவனம் தன்னுடைய உபுண்டு
மென்பொருளின் 24.4.0 வகைமையை வெளியிட்டது. ஒரு நிறுவனம் தன்னுடைய
உற்பத்திப்பொருளுக்கு பெயர் வைக்க, பெருமளவில் மெனக்கெடுகிறது. அந்தப் பெயர்களின்
பின்னணியில் நிச்சயம் ஏதேனும் ஒரு செய்தி இருக்கும். ஒவ்வொரு வாகனம் அறிமுகமாகும்போதும்
அதற்கு சூட்டப்படும் பெயர்கள் என்னை ஈர்க்கின்றன. நான் அவை குறித்த செய்திகளைத்
தேடி வாசிக்கிறேன்.
மாருதி நிறுவனம் ஸ்விஃப்ட்
என்கிற வகைமையை அறிமுகப்படுத்தும் போது ஸ்விஃப்ட் என்னும் பறவையின் பெயரைச்
சூட்டுவது மகிழுந்துக்கு பொருத்தம்தான் என்றாலும் அது குறித்த செய்திகளைத்
தேடினேன். உழவாரன் குருவி என்று தமிழில் அழைக்கப்படும் ஸ்விஃப்ட் வானத்திலேயே அதிக
நேரம் பறக்கும் ஆற்றல் கொண்டது என்பது மட்டுமே தெரியும். பனை உழவாரன் என்னும் வகை காலை
முதல் மாலை வரை தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும், இருட்டியப் பிறகுதான் தரை இறங்கும்.
ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வலசை வரும்
ஆல்பைன் ஸ்விஃப்ட் (மலை உழவாரன்) என்னும் பறவை தொடந்து ஆறு மாதங்கள் வானத்திலேயே
பறக்கக் கூடியது. அப்படியானால் உணவு, உறக்கம்..? காற்றில் பறக்கும் சிறிய வகை பூச்சிகளை பிடித்துத்
தின்றுவிட்டு வானத்திலேயே ஓய்வெடுக்குமாம். சுவிட்சர்லாந்து பறவையியல் நிபுணர்கள்
அதன் கால்களில் சிறிய கண்காணிப்புக் கருவியைக் கட்டி பின்னர் பறக்கவிட்டனர்.
அவர்களது ஆய்வில்தான் இந்த வியத்தகு செய்தி தெரியவந்தது. உழவாரன் பறவைகள்
நீர்நிலைக்கு மேல் பறக்கும்போது பசி எடுத்தால் அப்படியே கீழிறங்கி நீரின் மேல் தலை
நீட்டும் மீன்களைக் கொத்திச் சென்றுவிடும். ஸ்விஃப்ட் என்கிற பெயருக்குப் பின்னே
இத்தனைச் செய்திகள் இருக்கின்றன.
உபுண்டுவுக்கு வருவோம்
ஆப்பிரிக்க கண்டத்தின் பல்வேறு நாடுகளில் ஒருவரையொருவர் நேசித்து விட்டுக்கொடுத்து
வாழவேண்டும் என்கிற உயரிய தத்துவத்தை முன்னிறுத்தும் சொல்தான் உபுண்டு. ஆப்பிரிக்காவின்
பள்ளி மைதானம் ஒன்றில் சிறார்களுக்கான ஓட்டப்பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கோட்டில்
ஒரு கூடை நிறைய பழங்கள் இருக்கின்றன. யார் வெற்றி பெறுகிறார்களோ அச்சிறுவனுக்கு
அந்தக் கூடை பழங்களும் பரிசு. ஓட்ட்ப்பந்தயம் தொடங்குவதற்கான கொடி
அசைக்கப்பட்டதும், தன்னிச்சையாக ஓடாமல், சிறுவர்கள் அனைவரும் ஒருவரது கையை
மற்றொருவர் பிடித்துக்கொண்டு யாரும் பின்தங்கிவிடாமல் சமநிலையில் இலக்கை அடைந்து,
பிறகு கூடைப் பழங்களையும் எடுத்து தங்களுக்குள் சமமாக பிரித்துக்கொள்கின்றனர்.
இதுதான் உபுண்டு.. உன்னால்தான் நான்.. உனக்காகத்தான் நான் என்பதுதான் உபுண்டுவின்
தத்துவம். ஜூலுக்கள் பேசும் ப்ரோட்டோ பாண்டு மொழிச்சொல்தான் உபுண்டு. வெவ்வேறு
ஆப்பிரிக்க தேசங்களில் ஒபுண்டு, உமுண்டு, முண்டோ என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும்
பொருள் ஒன்றுதான்.. நீங்கள் இருப்பதால்தான் நானும் இருக்கிறேன் என்னும் மகத்தான
உண்மை. லினக்ஸ் கணினியின் இயங்கு வகைமைக்கு இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தவர்கள்
உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். ஏனெனில் அப்பெயரின் வழியே அந்தச் சொல்லின்
பின்னிருக்கும் அற்புதமான தத்துவத்தை தேடிக் கண்டடையலாம்.
மொழி என்பது
வெறும் உரையாட மட்டும் உருவாக்கப்பட்டதா? எனில் எல்லா மொழிகளுக்கும் ஒன்றிரண்டு
ஆயிரம் சொற்கள் மட்டும் போதுமானதுதானே. செம்மொழிகளில் இன்றைக்கும் எழுத்து மற்றும்
பேசுவதற்கான முழுமையான எல்லா வகையான பயன்பாட்டிலும் உள்ள தமிழில் கிட்டத்தட்ட
ஐந்துலட்சம் சொற்கள் வரை இருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள். எழுத்தாளர்
நாஞ்சில் நாடன் தொடர்ந்து தன்னுடைய உரைகள், எழுத்துகளில் தமிழின் சொல் வளம்
குறித்தும் அவை உருவானதன் பின்னணி குறித்தும் அதிகம் பேசியும் எழுதியும் இருக்கிறார்.
இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகள் வழியே, மொழியின் அரிய சொற்களை
பாதுகாத்துக்கொண்டே வருகின்றனர். தமிழின் மொழி ஆர்வலர்கள் அறிவியலின்
வளர்ச்சிக்கேற்ப புதியப்புதிய சொற்களை உருவாக்கிக்கொண்டும் வருகின்றனர். அப்படி
சொற்களை உருவாக்கும்போது எத்தனை நுட்பமாக யோசிக்கிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த
உதாரணம்.
காபி என்கிற சொல்லுக்கு இணையான
தமிழ்ச்சொல் ஒன்றை உருவாக்க தேவநேய பாவாணர் அவர்கள் தீவிரமாகத் தேடியிருக்கிறார். முதலில்
காபி என்ற சொல் எப்படி உருவாக்கப்பட்டது என்று ஆராய்ந்திருக்கிறார். ஹீப்ரூ
மொழியில் ஒயின் என்கிற மதுபானத்தைக் குறிக்கும் காஃபா என்கிற சொல்தான் மூலம்
காரணம் அதன் நிறமும் காஃபியின் நிறமும் ஒன்று என்பதால் அந்தப் பெயர் என்றார்கள். ஒரு சிலர் காபி டச்சு மொழியில் இருந்து
பெறப்பட்டது என்றும் சொல்கிறார்கள். பிரேசிலின் ஒரு பழங்குடி குழுவினர் குதிரையின்
குளம்பு வடிவத்தில் காபிக்கொட்டை இருந்ததால் குளம்புவைக் குறிக்கும் காஃபின்
என்னும் சொல்லிலிருந்து காஃபி உருவானது என்று ஒரு தகவல் கிடைக்கிறது. அந்தச்
செய்தி அப்பெயருக்கு அர்த்தமுள்ளதாகத் தோன்றவே காஃபிக்கு குளம்பி என்கிற சொல்
உருவாக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். ஒரு சொல் உருவாக்கம் என்பது வரலாற்றை ஒரு
முறை புரட்டிப்பார்ப்பது என்கிற வகையில் ஒவ்வொரு மொழியிலும் புதிய கலைச்சொல்
உருவாக்கம் என்பது அவசியமானதுதான். சரி திருமண விழாக்களில் ஒளிப்பதிவு செய்யப் பயன்படும்
ட்ரோன் க்கு தமிழில் என்ன சொல்லலாம்? தமிழ்ப்பல்லவிக்கு கடிதம் எழுதித்
தெரிவியுங்கள்.
எழுத்தாளர் வானவன் அவர்களை எந்த வகைமைக்குள் அடைப்பது என்கிற
குழப்பம் அவரைப்பற்றி அறிந்தவர்களுக்கு நிச்சயம் இருக்கும். தனியார் நிறுவனம்
ஒன்றில் இயந்திரங்களோடு போராடிக்கொண்டிருக்கும் கடும் உழைப்பாளி. இன்னொரு பக்கம்
இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி அதனை தனது வாழ்நாள் கடமையாக தான் வாழும் பூமிக்கு நன்றிக்கடன்
போல் செலுத்தும் சூழலியல் போராளி. இன்னொரு புறம் பெருவெள்ளம், புயல் போன்ற பேரிடர்
காலங்களில் தான் சார்ந்த மக்களின் துயர் போக்க களமிறங்கும் மக்கள் தொண்டன்,
இவற்றுக்கு இடையில் கிடைக்கும் நேரத்தில் இலக்கியப்பணி என்று பன்முகத்துடன் தொடர்ந்து
சலியாமல் இயங்கிக் கொண்டிருப்பவர். தமிழிலக்கிய உலகில் ஒன்றிரண்டு
படைப்பாளிகளுக்கே முழுநேர இலக்கியவாதியாக இயங்குவதற்கான பாக்கியம் கிடைத்துள்ளது.
பெரும்பாலானவர்கள் இப்படியாக தன்னை எல்லாவற்றுக்கும் ஒப்புக்கொடுத்துவிட்டு
அரிதெனக் கிடைக்கும் நிமிடங்களில் பேயென உழைத்து தங்கள் படைப்புகளைத்
தருகிறார்கள். தமிழிலக்கியம் இன்றைக்கும் தழைக்க இவர்களின் பேருழைப்புதான்
பெரும்பலம்.
ஸீரோ டிகிரி 2023
ஆண்டுக்கான நாவல் போட்டி அறிவிக்கப்பட்டபோது நெடும்பட்டியலில் என்னுடைய
குற்றியலுகரம் நாவலும் வானவன் எழுதிய ஒரக்குழி நாவலும் இடம் பெற்றதை மகிழ்வுடன்
அவர் எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தபோது நான் நிலக்கரிச்
சுரங்கத்தில் பெருகி வந்து கொண்டிருந்த நீரை வெளியேற்றுவதற்கான பம்ப்-ஐ இயக்குவதற்கான
பணியில் இருந்தேன். அவர் மெஷினிஸ்ட்டாக தன்னுடய நிறுவனப்பணியில் இருந்தார். இருவரது
குரல்களும் இணையப் பிரச்சினைக் காரணமாக மெலிதாகவும் விட்டுவிட்டும் ஒலித்துக்
கொண்டிருந்தன. காற்றில் கரைந்த ஒலியை எங்கள் கற்பனை வழியே நிரப்பி இருவரும்
மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டோம். உண்மையில் அந்தப்போட்டியில் அவரது நாவல் முதல்
பரிசைப் பெற வேண்டும் என்று மனதார விரும்பினேன். தான் வாழ்ந்த வாழ்க்கையின் வழியே
அந்த நாவலை அவர் எழுதி இருக்கக் கூடும் என்று அவரது நாவலின் தலைப்பே சொன்னது.
நாவலை வாசிக்க
விரும்பியபோது உடனே அனுப்பி வைத்தார். ஆனால் என்னுடைய தொடர்ச்சியான பணிகள்,
உடல்நலக்குறைவு காரணமாக வாசிப்பதும் அது பற்றிய எனது கருத்துக்களைப் பதிவு
செய்வதும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அதற்குள் ஒரக்குழி பற்றிய விமர்சனங்கள்
வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டே இருந்தன. ஒரு படைப்பாளிக்கு இத்தனை
நண்பர்கள் அமைவது வரம்.
இயற்கை விவசாயம் பற்றிப்
பேசுவது ஒரு நாகரீகமான அறிவுஜீவித்தனம் என்பது போல பல திரைப்படங்கள் எந்த ஆழமான
புரிதலுமின்றி ஒரு சில காட்சிகளில் கதாநாயகன் கைகளில் மண்வெட்டி தந்து நெற்றி
வியர்வையைத் துண்டால் துடைப்பது போல காண்பித்து ஒரு சில வரிகளில் ஒரு பிரச்சாரத்தை
செய்துவிட்டு கடந்து விட்டன. இதன் காரணமாக விவசாயம் பற்றி பேசுவது கேலிக்குரிய
செயல் போல திரைப்பட விமர்சகர்களால் முன் வைக்கப்பட்டன. இந்தச் சூழலில் ஒரு அசலான
இயற்கை விவசாயி தன் விரல்களில் அப்பியிருக்கும் சேறு சகதியுடனும், மண்மணம் மாறா
சொற்களுடனும் இயற்கை விவசாயம் பற்றி பேச வரும்போதுதான் தீவிரத்தன்மையுடன் அதனை
அணுக வேண்டும் என்கிற கவனம் நம்மை ஆட்கொள்கிறது. ஒரக்குழி அசலான அக்கறையுடன் இயற்கை
விவசாயம் பற்றி எழுதப்பட்ட ஒரு படைப்பு.
ஊருக்குள் மாமன், மச்சான்,
மாப்பிள்ளை என்று உறவு முறை சொல்லி அழைக்கும் போது கிடைக்கும் அன்னியோன்யம்
இருக்கே அதனை அனுபவிப்பவர்களால் மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும்.
மாட்டுக்கொட்டைக்கு சிமெண்ட் தரையா? மாட்டு மூத்திரத்தை உரத்துக்கா ? என்று முதல்
அத்தியாயத்தில் இருந்தே வாசிப்பவர் புருவங்கள் உயர்கின்றன. அந்தக் காலத்தில்
இல்லாத வியாதியா என்று முனகுபவர்களுக்கு நோய்க்கூறுகளின் வித்தியாசத்தை போகிற
போக்கில் விவரிக்கின்றார் கதையின் நாயகன் செல்லமுத்து
வெற்றிலைப் பாக்கு போடும்
பழக்கம் என்பது ஒரு மயக்கம் தரும் அனுபவத்துக்காக அல்ல அதன் பின்னே
ஒளிந்திருக்கும் உடல் ஆரோக்கியம் சார்ந்த செய்திகளை உரையாடல் வழியாகச்
சொல்லிக்கொண்டே போகிறார். பாக்கு சேர்த்துப் போடும்போது மலச்சிக்கல் இருக்காது.
சுண்ணாம்பு சிறிது சேர்க்கும்போது நன்கு பசி எடுக்கும். பெண்களுக்கு மாதாந்திரப்
பிரச்சினைகளைச் சரி செய்யும். பாட்டிகள் கூட வெற்றிலைப் பாக்கை இடித்து
அதப்புவார்கள். அவர்களுக்கு கர்ப்பப்பைப் பிரச்சினைகளே வராது என்பதை வானவன்
குறிப்பிடும்போது யோசித்துப் பார்த்தால் அந்தப் பழக்கத்தை பெண்கள் கைவிட்ட
சமீபகாலமாகத்தானே கர்ப்பப்பைப் பிரச்சினைகள் பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம்
என்பதை உணர முடிகிறது.
கொய்யாப்பழம் என்பதற்கான
பெயர் எப்படி வந்தது? .சிறுவிவசாயிகள் தங்களின் நிலங்களின் பக்க வரப்புகளில்
பறவைகள், அணில்களுக்காக இந்தப் பழ மரங்களை நட்டார்களாம். அந்த மரங்களில்
கனிந்திருக்கும் பழங்களை உண்ணும் பறவைகள் விளைநிலங்களில் உள்ள பயிர்களை உண்ணாது.
அதுவுமில்லாமல் பயிரைத் தாக்கும் பூச்சிகளையும் தின்றுவிடும். ஆகையால் இப்படியான
மரங்களில் பழுக்கும் கனிகளை மனிதர்கள் பறித்து சாப்பிடக்கூடாது அவை பிற உயிரினங்களுக்காக
என்பதால் மனிதர்கள் கொய்யா பழம் (பறிக்காத பழம்) என்ற பொருளில் அந்தப்பெயர்
சூட்டப்பட்ட்தாக செல்லமுத்து சொல்லும்போது மீண்டும் ஒரு மொழியில் பெயர் சூட்டல்
என்பது எத்தனை அர்த்தப்பூர்வமானது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.
செல்லமுத்துவின் மென்மையான
இயற்கை விவசாயப்புரட்சிதான் நாவலின் மையம். அவனது வழிநடத்தலை யதார்த்தமாக,
அறிவுப்பூர்வமாக கட்டமைப்பதில் வானவன்
மிகக் கவனமாக தனது எழுத்தில் கையாள்கிறார். அனைவரையும் வாசிக்க வைக்கும்
செல்லமுத்துவின் முயற்சி மிக முக்கியமானது மாசானபு புகோகாவைப் பற்றி எளிய
விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வது அறிதலுக்கான புதியத் தேடல்.
இப்படியாக நாவல் வழியாக பல
செய்திகள். என் அபிமானத்துக்குரிய உத்தம்சோழன் ஒரு பாத்திரத்தின் பெயராக இருப்பது
, கிழக்கு வாசல் பத்திரிகை, நம்மாழ்வார் பற்றி எல்லாம் பதிவு செய்வது காலத்தின்
ஆவணம்.
ஒரக்குழி விவசாயம் குறித்த
ஒரு உண்மையான அக்கறை உள்ள அனுபவம் சார்ந்த படைப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>