பெருங்கடன்
நெய்வேலி பாரதிக்குமார்
கிருஷ்ண பரமாத்மா
சட்டென்று விழித்தபோது, நீலக்கடல்
வழக்கத்தைக் காட்டிலும் அசைந்து தளும்பியது. கலங்களும், திமிங்கலங்களும்
அதிர்ந்து பின் சமநிலைக்குத் திரும்பின. கண்ணனின் உறக்கத்தை ஏதோ ஒன்று
கலைத்திருக்கிறது என யூகித்த ருக்மணி அவரது சயன அறைக்குள் நுழைந்தாள்.
கிருஷ்ண
பரமாத்மாவின் உடலெங்கும் துளிர்த்திருந்த நீர் மினுமினுவென பிரகாசித்தது. ருக்மணி
பட்டுத்துணியால் மெல்லத் துடைத்தபடி, “எம்பெருமானின் விழித்தலுக்கும், வியத்தலுக்கும்
காரணமென்னவோ?”
“ஒரு கனவு....
என்னை மட்டுமல்ல என் நெஞ்சுக்குள் நீண்ட நாளாய் உறங்கிக்கொண்டிருந்த நினைவுகளையும்
எழுப்பிவிட்டுவிட்டது.”
“துர்க்கனவா”
“ இல்லை.. என்னை
துரத்தும் கனவு”
“ அப்படியானால்
கனவில் ராதை வந்தாளோ?”
“ஹ..ஹா..” சிரித்த கண்ணன் “ கனவில் வந்தவர்
என் குருநாதர் சாந்தீபன்”
“அட, எத்தனை
நாட்களுக்குப்பிறகு வந்திருக்கிறார்? ஆச்சர்யம்தான்.. இப்பொழுதுதான் உங்கள் நினைவு வந்தது
போலும்.. எப்படி இருக்கிறார்?”
“ கனவில் வந்தவரை
குசலம் விசாரித்த முதல் பெண் நீதான்”
“அது இருக்கட்டும், இத்தனை நாள்
கழித்து வருகிறார் என்றால் ஏதேனும் கஷ்டமோ?”
“துன்பம்
வரும்போது மட்டும்தான் மனிதர்கள் கடவுளை நினைப்பர் என்கிற உன் கணிப்பு சரிதான்.
ஆனால் அவர் பெரிய மகான்.. தனக்காக ஒரு போதும் வரமாட்டார்.. மற்றவர்களின் துயரம்
சகியாது என்னை நினைத்திருப்பார்.. அதனால்தான் அவரது வருகை இருந்திருக்கும்”
“எப்படி உறுதியாக
சொல்கிறீர்கள்?”
“கனவுலகில்
பிருந்தாவனத்தில் எப்பொழுதும் போல என்னை மறந்து குழலை வாசித்துக் கொண்டிருந்தேன்..
நந்தவனத்தில் எல்லா மொட்டுக்களும் மலர்ந்தன. ஒரே ஒரு மொட்டு மட்டும் மலராமல்
சூம்பிக்கிடந்தது. நான் அதனருகில் செல்கிறேன். பக்கத்தில் நெருங்குகையில்
ஒளிவெள்ளம் ஒன்று உருக்கொண்டு வந்தது போலிருந்தது. அங்கே சாந்தீபன்
நின்றுகொண்டிருந்தார். நான் அதில் மெய் மறந்து நின்றேன். ஞானத்தின் ஒளி
ஞாலத்தையும் தாண்டி மிளிர்ந்தது ருக்மணி”
“அப்புறம்?”
“‘உன்னுடைய
நந்தவனத்தில் ஒரே ஒரு மொட்டு மட்டும் மலராமல் சுணங்கிக் கிடக்கிறதே கவனித்தாயா
மாதவா?' என்று அவர்
கேட்கிறார்”
“‘குருவே, அதன் அருகினில்தான் நீங்கள் நிற்கிறீர்கள்' என்கிறேன் நான்”
“அது போதும் நான்
வருகிறேன் என சொல்லிவிட்டு அவர் சட்டென மறைந்துவிட்டார்”
“அதன் பொருள்”
“அவருக்கு செலுத்த
வேண்டிய கடன் ஒன்று பாக்கி இருக்கிறது ருக்மணி..அவரது குருகுலத்தில் என்னோடுதான்
சுதாமனும் பயின்று வந்தான்”
“ குசேலரைத்தானே
சொல்கிறீர்கள்..”
“ஆமாம்.. ஒரு முறை
எங்கள் இருவரையும் வேள்விக்காக சிறிது சமித்தும், அடுப்புக்காக கொஞ்சம் இந்தனமும் எடுத்து
வரும்படி குருநாதர் பணித்தார். நானும் சுதாமனும் மாலை நெருங்கும் வேளையில்
ஆரண்யத்தினுள் நுழைந்தோம். ஆனால் இரண்டையும் நாங்கள் சேகரித்துவிட்டு
திரும்பும்போது, இடியும்
மின்னலுமாக மழை கொட்டத் தயாரானது வானம். சமித்தும், விறகும் நனைந்தால் நெருப்பு மூட்டுவது பிரம்மப்
பிரயத்தனம் ஆகிவிடுமே என்பதால் நாங்கள் மழை நீர் நெருங்காத ஒரு புதரினுள் அமர்ந்து
கொண்டோம். இரவும் நகர்ந்தது. மழையும் நின்றபாடில்லை. எந்த அதிசயத்தையும்
நிகழ்த்துவது குருகுல வாழ்வில் பேதத்தை உருவாக்கும் என்பதால் இயற்கையை அதன்
போக்கில் நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களைத்
தேடிக்கொண்டு பதைப்போடு குருநாதரும் வந்துவிட்டார். அதற்குள் விடிந்தும் விட்டது.
காரிருளிலும், அடர்ந்த
வனத்தினுள் சேகரித்த சமித்து நனைந்துவிடக்கூடாது என்பதற்காக புதரில் பொழுதைக்
கழித்த எங்கள் இருவரைப்பார்த்து நெகிழ்ந்துவிட்டார் குருநாதர். இரண்டு பேரும்
எல்லா வளமும், நலமும் பெற்று
நீடூடி வாழ்வீர்கள் என ஆசீர்வதித்தார்.”
“குசேலர்
இப்பொழுது எங்கிருக்கிறார்?”
“பிரம்மபுரியில்..
இருபத்தி ஏழு குழந்தை செல்வங்கள். ஆனால் உஞ்சவிருத்தியால்தான் அன்றாட போஜனம் அவனுக்கும் அவன்
குழந்தைகளுக்கும்.. ஒரு புறம் துவாரகபுரி என்னும் இந்த மகத்தான தேசத்தின் பேரரசன்
நான். மறுபுறம் ஒவ்வொரு வேளை உணவுக்கும் பாத்திரமேந்தி அலைந்தபடி இருக்கிறான்
சுதாமன். இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூடி வாழ்வீர்கள் என்று வாழ்த்திய
என் குருவின் வாக்கினை மெய்ப்பிக்க வேண்டிய கடமை எனக்குத்தானே அதிகம்.?”
“தேவையுள்ளவர்தானே
தேடி வரவேண்டும்?”
“இல்லை ருக்மணி
தேவையுள்ளவர்களை நாம்தான் தேடிச்செல்ல வேண்டும். என்னை ஒரு முறை சுதாமன் தேடி
வந்தான். அன்று அவன் தந்த அவல் இன்னும் என் நெஞ்சில் இனிக்கிறது. அனால்
அப்பொழுதும் அவன் என்னிடம் உதவி எதுவும் கேட்காமல் சென்றுவிட்டான். நண்பனின் முன்
தன்னை இயலாதவனாக காட்டிக்கொள்ள அவன் தயங்குகிறான். அவனது தன்மானத்தை சங்கடத்தில்
ஆட்படுத்த விரும்பவில்லை. ஒன்றாக பயின்றவர்களில் ஒருவர் மட்டும் உயர்நிலைக்குச்
சென்றுவிட்டால் மற்றவருக்கு அவனது குடும்பமே கூட ஒரு சந்தர்ப்பத்தில் அவனால்
பதிலளிக்க முடியாத கேள்விகளை பூதாகரமாய் முன் நிறுத்தும். ஆகையினால் அவன் என்னை உதவிக்காக
சந்திப்பதைத் தவிர்க்கிறான். ‘சூதாடும்போது
கிருஷ்ணனுக்குத் தெரிந்தால் அவர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் ஆகவே கிருஷ்ணர்
இங்கு வந்து விடக்கூடாது’ என்று தர்மன் நினைத்ததால் என்னால் அந்த கணத்தில் அங்கே நுழைய
முடியாமல் போனதே, அதே போன்றதொரு
சங்கடத்தில் நான் இன்று நிற்கிறேன். திரௌபதி போல ஒரு கணம் என்னை நினைத்தாலே போதும்
நானாக சென்றுவிடுவேன்.”
“ உதவுவது என்று முடிவெடுத்த பின் அவர் அழைக்க
வேண்டும் என்று ஏன் காத்திருக்க வேண்டும். யாரையாவது அனுப்பி அவருக்கு உதவக்
கூடாதோ?”
“அதற்காகத்தான் விஸ்வகர்மாவை நினைத்தேன்.
எப்படியும் இன்று அவர் இங்கு வருவார். அவரை பிரம்மபுரிக்கு அனுப்பி ‘வேண்டியதை
தரவேண்டும்’ என்ற கட்டளையோடு குசேலரை
சந்திக்க அனுப்பலாம் என்று நினைக்கிறேன்”
“பெண்களுக்குத்தான் குடுமபத்தின் துயரம்
புரியும். குசேலரின் மனைவி சுசீலையை சந்தித்து வரும்படி சொல்லலாம்”
“ அதுவும் சரிதான்..”
விஸ்வகர்மா பிரம்மபுரிக்கு வந்ததிலிருந்து குசேலர்
இன்றுதான் வீட்டில் இருந்து வனத்துக்கு தானியங்களுக்காக சென்றிருக்கிறார். குசேலர்
இல்லாத தருணத்தில்தான் சுசீலையை அணுகி ருக்மணி சொன்னதாக பேசவேண்டும். மெல்ல அவர்
குசேலனின் வீட்டை நெருங்கினார். உள்ளே ஏதோ சர்ச்சை நடந்து கொண்டிருந்தது.
“அம்மா மூத்தவன் என்று ஒருவன் நான் உடம்பை
வளர்த்துக் கொண்டு நிற்கிறேன். இன்னமும் அவர் உஞ்சவிருத்திக்காக வீடு வீடாய் அலைய
வேண்டுமா? தானியங்களுக்காக காட்டுக்கும் என்னை அனுப்ப மறுக்கிறார்.. உதவி கேட்டு
வா என்று துவாரகைக்கு அனுப்பினீர்கள். அங்கும் அவலை தந்துவிட்டு வெறும் கையோடு
வந்துவிட்டார்.. கேட்காமல் தந்தாலும் தன்மானம் இடம் கொடாது என்னதான் செய்வது நம்
வறுமையை?”
“அஸ்வா அவரைப்பற்றி நீ அறியாததா? நாவும்
சுழலாமல், உதடும் அசையாமல் சொல்லும் தேயாமல், கைகளும் தாழாமல் உதவி வந்து
சேரவேண்டும் என்று நினைப்பவர் அவர்... என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?”
“அவர் நினைத்தவாறே உதவி உங்கள் வாயில்படியில்
நிற்கிறது அம்மணி.” விஸ்வகர்மா மிகச்சரியாக நுழைய வேண்டிய சமயத்தில் குரல்
கொடுத்தார்.
“யாரது?”
“என் பெயர் விஸ்வகர்மா.. கிருஷ்ண பரமாத்மா
அனுப்பினார். உதவி என்று வாயால் கேட்காமல் வந்துவிட்ட தங்களின் கணவரின் தன்மானத்தை
தகர்க்க விரும்பாமல் அவர் சென்ற பிறகு என்னை இங்கு அனுப்பியுள்ளார். இந்த
பிரம்மபுரியில் யாரும் இது வரை காணாத பிரம்மாண்ட இல்லத்தை தங்க, வைர வைடூரியங்கள்
நிரப்பி கண்ணனின் பேரருளின் துணையோடு
என்னால் நிமிடத்தில் உருவாக்க முடியும்.. அம்மணி தங்கள் உத்திரவுக்காக
காத்திருக்கிறேன்”
“நல்லவேளை கேட்டீர்கள்.. அப்படி எதுவும்
செய்துவிடாதீர்கள்”
“:அம்மா.. என்னம்மா சொல்கிறாய் ?” அஸ்வன்
கோபத்தோடு கேட்டான்
“எல்லாம் காரணமாகத்தான் சொல்கிறேன். இத்தனை நாள்
இந்த இருபத்தொன்பது உயிர்களுக்கும் வயிறு
வளர்க்க இந்த பிரம்மபுரி மக்கள்தான் அவர்களிடம் இருந்த அரிசியில் அன்றாடம் ஒரு
பிடி தந்து அவர்களது அரை வயிற்றை நீரால் நிரப்பி வந்தனர். அவர்களது இல்லங்களும்
ஏழ்மையின் கையில்தான் இருக்கின்றன. கிருஷ்ணனின் நண்பன் என்கிற காரணத்தினால் எங்கள்
இல்லம் மட்டும் செழிப்பாக மாறி அவர்களது வீடுகள் அப்படியே இருப்பது எப்படி
நியாயமாகும்?”
:”அம்மணி உங்களுக்குத் தேவையானதை
தருவதற்குத்தான் எனக்கு உத்திரவு”
“எங்கள் தேவை பெரியது அய்யா.. இந்த கிராமம் அளவு
பெரியது. அதைவிட கிருஷ்ணரின் பொக்கிஷமும் பெரியது என்று அறிவோம். ஒரு பிடி
அவலுக்கு எங்களுக்கு எல்லாம் கிடைக்கும் என்றால். இருபத்தி ஒன்பது பிடி அரிசிக்கு
எவ்வளவு என்கிற கணக்கு உங்களைப்போன்ற ஞானிகளுக்கு தெரியாதா என்ன?. அதுவுமில்லாமல்
எங்களின் தேவை என்னவோ அதை தரச்சொல்லித்தானே கிருஷ்ணர் உத்திரவிட்டிருக்கிறார்..?”
“அம்மா ஒரு சொல்லில் பல மாங்கனிகளை
பறித்துவிட்டீர்கள். உங்கள் குடும்பத்தின் கஷ்டங்களை கேட்காமலே போக்கிவிட்டீர்கள்.
உங்கள் குடும்பம் இந்த பிரம்மபுரிக்கு பட்ட பெருங்கடனை தீர்த்துவிட்டீர்கள்.
உங்கள் கணவர் வீடு திரும்பும் போது எல்லா வீடும் செல்வம் நிரம்பி வழிந்தால்.
நீங்கள்தான் கேட்டீர்கள் என்றும் தெரியாது அம்மணி உங்கள் கருணை உள்ளம் யாவற்றிலும்
பெரியது. தங்கள் விருப்பபடி இந்த பிரம்மபுரி இனி இந்திரபுரியாகும் “ வணங்கி
விடைபெற்றார் விஸ்வகர்மா.. சுசீலை பொங்கி எழுந்த பெருமூச்சினை அரவம் தெரியாமல் அடக்கிக்
கொண்டாள். அது மெல்ல கரைந்து பிரம்மபுரியின் காற்றில் கலந்தது பிரபஞ்சத்தையே
புரட்டும் சக்தி சுவடு தெரியாமல் தன்னை வரலாற்றிலிருந்து மறைத்துக் கொண்டது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>