இலக்கியப் பீடம்சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற சிறுகதை

வாக்கு
- நெய்வேலி பாரதிக்குமார்
அன்று காலை மட்டும் ஜெகதீஷ்-க்கு வழக்கம்போல் விடியவில்லை. அதே சூரியன், அதே படுக்கை, அதே ஜன்னல் என்றாலும் வழக்கமான பரபரப்பில்லாமல் மற்றவர்களின் காலை போல் மிக இயல்பாக சோம்பலாக விடிந்தது.
ஆறு மணி துவங்கி இரவு ஒன்பது மணி வரை வரையறுக்கப்பட்ட நிகழ்வுகளால் எப்போதும் நிரம்பியிருக்கும் அவரது நாள். எல்லாமே எவரெவரோ நிர்ணயித்த நிரல்கள். ஆனால், அன்றைய விடுமுறை தினத்தை அவரே பதட்டமில்லாமல் தீர்மானிக்கத் திட்டமிட்டார்.
செல்போனில் அகரவரிசைப்படி பெயர்களை நகர்த்தினார். அஜய் ரியல்ட்டர்ஸ்... ஓ... சோளிங்கநல்லூரில் ஒரு அப்பார்ட்மெண்டுக்காக ஆங்கிலத்தின், தமிழின் அத்தனை நாசூக்கான நாகரீகமான வார்த்தைகளை உபயோகித்து அவரை வந்து பார்க்கும்படி வேண்டியபடி இருந்த குரல்கள் நினைவுக்கு வந்தன...
Dialling ... Ajay Realtors...
“... ஹலோ... வெரி குட்மார்னிங் ....சார் வாட் எ சர்ப்ரைஸ்...! எப்படி சார் இருக்கீங்க?”
“ஃபைன். இன்னிக்கு உங்க ஸைட்டுக்கு வரலாம்ன்னு இருக்கேன். நீங்க அங்க இருப்பீங்களா?”
“என்ன சார் அப்படிக் கேட்டுட்டீங்க... நீங்க வர்றீங்கன்னு சொன்னதே பெரிய விஷயம். வெல்கம் சார். எத்தனை மணிக்கு...?”
“பத்து மணிக்கு வர்றேன். டாக்குமெண்ட்டெல்லாம் பார்க்கலாமா?”
“ஷ்யூர் சார்.”
அலைபேசியை அணைத்துவிட்டு, “மஞ்சு, ப்ளீஸ் ..கம். இன்னிக்கு நீ ஃப்ரீயா?”
“என்ன விஷயம்?” அவரருகே வந்து அமர்கிறாள்.
“சோளிங்க நல்லூரில் அந்த அப்பார்ட்மெண்டைப் பார்த்து அப்படியே ஷோரூம்ல உனக்கு காரையும் பார்த்துட்டு வந்துடலாமா?”
“அட, என்ன உங்க ப்ரோக்ராம் லிஸ்ட்ல நம்ம வீட்டுக்கு இன்னிக்கு அபாயின்ட்மெண்ட் யார் ஃபிக்ஸ் பண்ணினது? உங்க எம்.டி. கிட்ட லீவ் கிடைச்சுதா?”
“, இன்னிக்கு கவர்ன்மெண்ட் ஹாலிடேப்பா. ஆபீஸ் இல்லே. செம்மஞ்சேரியிலே சாமிநாதன் இருக்கான். அவனைக் கூட பார்த்துட்டு வந்துடலாம்..”
“ஹாப்பி டே ..போகலாமே...” சந்தோஷமாக தன் அலங்கார அறைக்குச் சென்றாள். ஒரே ஒரு ஸ்டட் வாங்கினால் கூட ஊரில் இருக்கும் சுற்றம் நட்புகளைப் பார்த்துட்டு வந்துடலாம்ன்னு அரிக்கும் ஊர்சுற்றி அவள்.
“ஹலோ... சாமி, நான் ஜெகதீஷ்.”
“லக்கி டே. ஜக்குவா ... என்னடா அது உலக அதிசயமா இருக்கு...!”
“அதவிட வேறொரு பேரதிசயம் சொல்றேன். இன்னிக்கு உங்க வீட்டுக்கு வரப்போறோம். உனக்கு வேறொண்ணும் ப்ரோக்ராம் இல்லியே?”
“எவ்ரிதிங் கேன்சல்... நீ வா வீட்டுக்கு. அத விட வேறென்ன வேணும்?
“நேரில பேசுவோம்.” செல்போனை வைத்துவிட்டு குளிக்கச் சென்றார் ஜெகதீஷ்.
மெலிதான விசிலில் ஏதோ ஒரு பாடல் ‘ஹம்' செய்ய முயற்சித்து வேறொரு பாடலுக்குத் தாவினார்.
மஞ்சு சமையலறையில் பரபரப்பாக இருந்தாள். தலையைத் துவட்டியபடி வெளியே வந்த ஜெகதீஷ்,
“ஆமா, ஷவரில் தண்ணீ ரொம்ப மெதுவா வந்துட்டு இருக்கு பெருமாளை வரச்சொல்லிப் பார்க்கச் சொல்லலாமே.”
“மூணு மாசமா. உங்க கிட்ட கத்திகிட்டு இருக்கேன் காதுலயே வாங்கல நீங்க...இன்னிக்கு என்ன eye-open dayவா?”
சிரித்தபடி கிச்சனில் நுழைந்த ஜெகதீஷ் “மருதாயி வரலையா?”
“அவளுக்கும் கவர்ன்மெண்ட் ஹாலிடே.”
“நடுவுல லீவ் போட்டா அன்னிக்கு சம்பளத்தை கட் பண்ணிடுவோம்னு சேரும்போதே சொன்னமே, அப்படியும் லீவு போடறாளா?..அடுப்பை நிறுத்து. ஹோட்டல்லயே சாப்பிட்டுட்டு போகலாம்.”
அதற்காகவே காத்திருந்தவள் போல அடுப்பை நிறுத்தி விட்டு குதூகலமாக கிளம்பினாள்.
“ஒன் திங்க் மஞ்சு... டிரஸ் பண்ண எவ்வளவு நேரம் வேணும்னாலும் எடுத்துக்க. ஆனா இந்த புடவை கட்டிகிட்டுமா... அந்த புடவையை கட்டிகிட்டுமான்னு டார்ச்சர் பண்ணிடாதே...”
“ஓகே... ஓகே.”
செல்போன் நச்சரித்தது.
“சொல்லுங்க ஜெயராஜ்.”
“சார், குட்மார்னிங். நம்ம ராயல் காஸ்மோ க்ளப் இன்னிக்கு வாக்காளர் விழிப்புணர்வு காம்பெயின் நடத்தறோம். இளங்கோ இன்விடேஷன் குடுத்திருப்பாரே..”
“ஓ... எப்ப... ஆமாமா... குடுத்தாரு.”
“நீங்கதான் கொடியசைச்சு துவங்கறீங்க. அப்படியே நாம பூத்துக்குப் போய் ஓட்டு போடறோம்.”
“ஒரு நாலு மணிக்கா வந்துடட்டுமா?”
“சார், போலிங் எட்டு மணிக்கு ஆரம்பிச்சு மதியம் நாலரை மணிக்கு முடிஞ்சுடுது. மக்களை ஓட்டு போடச் சொல்லி விழிப்புணர்வு கூட்டம் நடத்தறோம். நாலு மணிக்கு வந்தா நல்லா இருக்காதே மீடியாவுக்கு எல்லாம் சொல்லியாச்சு சார்.”
“வரது செகரட்டரியாச்சே. அவருதானே லீட் பண்ணனும்.”
“அவர் டெல்லி போயிருக்கார். பிரசிடெண்ட் ஹாஸ்பிட்டல்ல திடீர்னு அட்மிட் ஆயிட்டார். நம்ம கிளப் ‘பை’ லா' படி வி.பி. நீங்கதான் அடுத்த பொசிஷன்.”
“எனக்கு எந்த பூத்துன்னு கூட தெரியாதே, பார்த்து வைக்கலை...”
“வேளாங்கண்ணி ஸ்கூல் சார்.”
“நான் பத்து மணிக்கு சோளிங்கநல்லூர் வேற போகணும்.”
“ஒண்ணும் பிரச்சினை இல்ல சார். நீங்க இப்ப வந்தீங்கன்னாகூட போதும். பாய்ஸ் ஆர் ரெடி. கொடியசைக்க பத்து நிமிஷம். பசங்க சைக்கிள்ல கெளம்பிடுவாங்க. வோட்டு போட பத்து நிமிஷம். அவ்வளவுதான்”
“ஓகே”
கடுப்பாக வைத்தவர், “இங்க ஹானரரி போஸ்ட்டை எல்லாம் ரிசைன் பண்ணி தொலைக்கணும். லீவு நாளாச்சேன்னு ஒண்ணு ப்ளான் பண்ண முடியலை மஞ்சு... கெளம்பியாச்சா... வோட்டு போடணுமாம்.”
“அட 18 வயசாயிடுச்சா உங்களுக்கு?”
“ நீ வேற .. ராயல் காஸ்மோ க்ளப்ல அவேர்னஸ் காம்பெயின் வச்சு தொலைச்சிட்டாங்க நீயும் வர்றீயா?”
“அய்யோ... இப்பதான் பீரோவிலிருந்து எல்லா சாரியையும் எடுத்து வச்சிருக்கேன். சாரி செலக்ட் பண்ணனும், மேட்சிங் தேடணும் சான்சே இல்ல. நீங்க போயிட்டு வாங்க. அதுக்குள்ள ரெடியா இருப்பேன்.”
“ஓகே.” கார் சாவியை எடுத்துக்கொண்டு அவசரமாக கிளம்பி வெளியே வருகிறார்.
ஒன்பது மணிக்கே நடுப்பகல் வெயில் உக்கிரமாக அடித்தது. ‘வோட் ஃபார் ரைட்' எழுதப்பட்ட பனியன்களை அணிந்து இருபது முப்பது குட்டைச் சைக்கிள்கள், துண்டுப் பிரசுரங்கள், முதுகில் ஒரு பையில் வாட்டர்பாட்டில்கள்... அவர்களின் தலைக்கு மேல் ‘வாக்காளரை விழிப்புறச் செய்வோம்.' பேனர்
“ஜெயராஜ் ஸ்பீச் எதுவும் குடுக்கணுமா?”
“ஒண்ணும் வேணாம் சார். சும்மா கொடியசைச்சா போதும்...இந்தாங்க தொப்பி, பேட்ஜ்.”
கையில் மிகப்பெரிய கொடி, அதைவிட மிகப்பெரிய கம்பில் கட்டியபடி காற்றில் படபடக்கிறது.
கொஞ்சம் வலு சேர்த்து வேகமாக அசைத்தார். அதற்குள் வேர்த்து விறுவிறுத்து விட்டது ஜெகதீஷ்க்கு.
சைக்கிள் பையன்கள் உற்சாக கைத்தட்டல்களுடன் கிளம்பி, ஒவ்வொரு திசையில் திரும்பினார்கள்.
“ஜெயராஜ்.... எலக்ஷன்ல யார் யார் நிக்கறாங்க?”
“சார்... மெல்ல மெல்ல ... போன வாரம் நம்ம கிளப்ல வேட்பாளர்களை எல்லாம் கூப்பிட்டு ஒரே மேடையில பேச வைச்சோம். நீங்க தான் ஏதோ கம்பெனி மீட்டிங் இருக்குன்னு வரலை. பிரசிடெண்ட் தான் கண்டெக்ட் பண்ணினார்.”
“அவருக்கென்ன ஜவுளி ஸ்டோர்ஸ். வேலையை பாக்க அம்பது பேர் யூனிபார்ம்மோட இருக்காங்க. சரி வோட் போட போயிறலாமா?”
“நடந்தே போயிடலாம் சார்... எஃபக்டிவா இருக்கும்...”
பள்ளியை நெருங்கினார்கள். ரேஷன் கடையில் நிற்பது போல் நீண்ட க்யூ நின்றிருந்தது.
“ஜெயராஜ் என்ன இவ்வளவு கூட்டம்... எப்படி நாம உள்ளே போறது?”
“கவலைப்படாதீங்க. மீடியா ஆளுங்க கூட இருங்க.. நான் வரிசையில நிக்கறவங்க கிட்ட அதையே காரணம் சொல்லி உள்ளே போக வழி பண்ணறேன். நீங்க என்ட்ரன்ஸ்ல ஒரு போஸ் கொடுத்துட்டு உள்ளே போயிடுங்க.” நகர்ந்தார் ஜெயராஜ்
“அப்படியே நீங்களும் உள்ள வந்துடுங்க
ஜெயராஜ்”
ஜெகதீஷ் நடந்து பூத்தின் வாயிற்படி அருகே சென்றார். திரும்பி நின்று ஒரு முறை கையசைத்தார்.மீடியாக்காரர்கள் கூடவே வந்து கேமராக்களின் ஃப்ளாஷ்களை அவர் பக்கம் செலுத்தினர்.
கியூவில் சின்ன பிரம்மிப்பான சலசலப்பு. “இவரு எந்த கட்சி?”
“ஏதோ தலைவராம். அதான் நூத்தெட்டு கட்சி இருக்கே... எதுன்னு கண்டோம்?”
ஜெகதீஷும் ஜெயராஜும் நுழைந்தனர். ஜெகதீஷ் அவர்கள் வசிக்கும் தெரு பெயர், வீட்டு எண்ணை குறிப்பிட்டு தேர்வு அலுவலர்களை சரிபார்க்கச் சொன்னார்.
அவர்கள் பட்டியல் முழுவதுமாக புரட்டிப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினர்.
“ கே. ஜெகதீஷ்... ம்...ம்ஹும் .. பேரும் இல்ல... வீட்டு நம்பரும் இல்லே சார். நீங்க இதுக்கு முன்னால லிஸ்ட் ஒட்டறப்போ பேரை செக் பண்ணியிருக்கீங்களா?”
“இல்லியே... ஆனா இருபத்திரெண்டு வருஷமா அங்க தானே குடியிருக்கேன்.”
“உங்க வீட்டு நம்பரே இல்லையே. அப்படியே ஜம்ப் ஆயிருக்கு. போன எலெக்ஷன்ல எங்க ஓட்டு போட்டீங்க?”
“ம்... இப்ப சரியா ஞாபகம் இல்லையே.”
“சாரோட தெருவுல மத்த நம்பருங்க இருக்கே” என்றார் ஜெயராஜ் படபடப்பாக.
“இருக்கு சார். பட் அவரு ஒரு வீட்டு நம்பர் மட்டும் இல்ல. வாக்காளர் அடையாள அட்டை இருக்கா?”
“சாரி இல்லை”
“சாரி சார். ஒண்ணும் பண்ண முடியாது.”
“என்ன சார் இப்படி சொல்றீங்க? இவரு யார் தெரியுமா” ஜெயராஜ் கோபமாக எகிறினார்.
“ஜெயராஜ்.... ஜெயராஜ் வேண்டாம் விட்டுறுங்க. ஏதாவது சீன் கிரியேட் பண்ணினா மீடியால வேற மாதிரி வந்துடும். போனாப்போவுது விட்டுடுங்க. சாரி சார், வர்றோம்.”
வெளியே வந்தார்கள். நல்லவேளை மீடியாவிலிருந்து யாரும் உள்ளே வரவில்லை. அந்த அளவுக்கு பெரிய மனிதர் இல்லை என்பதும் கொஞ்சம் ஆறுதல் ஜெகதீஷ்க்கு.
பள்ளியை விட்டு வெளியே வரும்போது பூத்திலிருந்து சற்றுத் தள்ளி மரத்தடி அருகே ஒரு கும்பல் கத்தலும், கரைச்சலுமாக கூடி நின்றிருந்தது இங்கே இருந்து பார்த்த போதே புரிந்தது ஜெகதீஷ்-க்கு. ஒரு பெண்ணின் குரல் எல்லாவற்றையும் மீறி அந்த வட்டாரத்தையே கிடுகிடுக்க வைப்பது போல் ஒலித்தது.
“ ஜெயராஜ், என்ன தகராறு அங்கே?”
கூட்டத்தை விலக்கி விட்டு ஆக்ரோஷமாக கத்தியபடி வந்தது மருதாயி.
“இன்னாய்யா நியாயம். என் வோட்டை எவ வந்து போட்டா விடியறதுக்கு மின்னாடி. எதுக்குய்யா போட்டோ புடிச்சு அட்டை குடுக்கறீங்க?”
ஜெயராஜ் அங்கே போய் கூட்டத்தை விலக்கி துரிதகதியில் விவரம் சேகரித்து வருகிறார்.
“என்னா ஜெயராஜ், கூட்டிட்டு வந்த கட்சிக்காரன் காசு தரலியா?”
“இல்ல சார். அந்த பொம்பளை ஓட்டை யாரோ காலையிலேயே போட்டுட்டாங்களாம். அதான் கத்துது.”
“ லிஸ்ட்ல போட்டொவெல்லாம் ஒட்டியிருக்குமே.. எப்படி?
“நம்மாளுங்க விட்டா கைரேகையையே போர்ஜரி பண்ணிடுவானுங்க சார். அந்த பொம்பள எவன்கிட்டயும் ஓட்டுக்காக காசு வாங்கலைபோல... எங்கயாவது காசு வாங்கிடணும் சார். அதான் சேஃப். இல்லின்னா எல்லா பயலுங்களுக்கும் சந்தேகம் வந்துடும். கறாரா இருந்தா நம்ம ஓட்டை எவனாவது குத்திடுவான்.”
மருதாயி ஜெகதீஷை நெருங்கி வந்து “சாரு... நானே சோலிக்கு போவாம விடிய சொல்லியும் இங்க வந்து நிக்கறேன். அதுக்குள்ளயும் எந்த சிறுக்கி வந்து போட்டா? அவள எப்டி வுட்டானுக?”
ஜெகதீஷ்க்கு சட்டென்று கூச்சமானது. எல்லோரும் அவரையே பார்ப்பது போல இருந்தது . தேவையா இந்த பஞ்சாயத்து...? உள்ள போனமா, வெளிய வந்து வண்டி ஏறுனமான்னு இல்லாம நின்னது தப்பாப் போச்சு.
“விடு மருதாயி... அதுக்காக பப்ளிக் ப்ளேஸ்ல இப்படிக் கத்தலாமா?”
“என் வோட்டை எப்படி சார் இன்னொருத்தி போட முடியும் என் புள்ளைய இன்னொருத்தி தன்னுதுன்னு சொல்லிட்டு தூக்கிட்டா வுட்டுடுவோமா?”
என்னவோ ஐ.நா.வுல வீட்டோ பவர் வோட்டு மாதிரி இவ பண்ற அலும்பு பெருசா இருக்கே...
“உனக்காவது பரவாயில்ல. இன்னிக்கு லிஸ்ட்டுல உன் பேருக்கு ஓட்டுன்னு ஒண்ணு இருந்துச்சு. எனக்கு அதுவும் இல்ல. அது தெரியுமா உனக்கு?”
“அய்ய, அப்ப ஏன் சார் வுட்டுட்டு வந்தீங்க... இப்பத்தான் வோட்டு என் ரைட்டுன்னு அப்படின்னு கோஷம் போட்டுக்கினு உள்ளே போனீங்க. ஓட்டு போட வராதவங்களை ஜெயில்ல போடணும்,ரெஷன் கார்டை புடுங்கணும்னு உங்காளுவ பெருசா செத்த மின்னாடி சத்தம் குடுத்தாங்க ... அது மாதிரி வோட்டர் லிஸ்டில பேர் இல்ல நான் வரி கட்ட மாட்டேன்னு கேசு போடு சாரு... படிச்சவங்க நீங்க பேசாம வந்தா நாங்க இன்னா பண்றது... கத்தத்தான் முடியும்...?”
மருதாயியை உற்று நோக்கினார். அவள் அவரை அலட்சியம் செய்துவிட்டு மறுபடி இன்னும் அதிகமாக பூத்தை நோக்கிக் கத்தத் தொடங்கினாள்.
-
நெய்வேலி பாரதிக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>