கிழக்கு வாசல் உதயம் இதழில் பிரசுரமான கட்டுரை
சமூகத்தின் விழிகளைத் திறந்த ஹெலன் கெல்லர்
ஹெலன் கெல்லர்
“பார்வை தானே
பறிபோனது
காதுகள்
தானே செவிடானது
பரவாயில்லை...
உள்ளங்கைகளையே
என்
கண்களாக்கிக் கொள்வேன்.
விரல்களாலேயே
ஒளி தேடிக் கொள்வேன்”
சிக்கலும்
சிடுக்கும் நிறைந்த இந்த மனித வாழ்வு பதில்கள் இல்லாத கேள்விகளால் நிரம்பி
வழிகிறது. ‘என்ன இந்த
வாழ்க்கை!' என்று
வெறுத்துப் போகும் அளவுக்கு எண்ணற்ற காரணங்கள் பலருக்குப் பூதாகரமாகத் தெரிகின்றன.
தற்கொலை செய்து கொள்பவர்களின் சதவீதம் வருடந்தோறும் கூடிக்கொண்டே போகிறது.
நோய்க்கொடுமை, தேர்வில்
தோல்வி, காதலில்
தோல்வி, கடன்
பிரச்சினைகள் போன்ற எளிதான தீர்வுகள் காண முடிகின்ற அற்பக் காரணங்களுக்காகவே
பெரும்பாலும் இவ்விதத் தற்கொலைகள்.
அரிதான
பிறவியாக அறியப்படும் மானிடப் பிறவியில் செயல்படாத உறுப்புகள், முடமான
உறுப்புகளுடன் பிறக்கும் ஊனமுற்ற எவரும் இந்தவிதக் கடுமையான குறைகளைக் காரணமாக்கி
தற்கொலைக்கு முயன்றதாக செய்திகளே இல்லை.
இருக்கின்ற
சூழலில் கிடைக்கின்ற வய்ப்புகளைக் கொண்டு ‘வாழ்க்கையே!
வாழ்ந்து காட்டுகிறோம் பார்!'
என வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் இந்த மெளனப் புரட்சியாளர்கள் நம்
அருகிலேயோ அல்லது நம் உறவிலேயோ இருக்கின்றார்கள். நம் கவனிப்போ பாராட்டோ
எதுவுமற்று எதையும் எதிர்பார்க்காமல்,
சகல செளபாக்கியங்களுடன் பிறக்கும் மனிதர்கள் கூட பெற முடியாத பெரும் புகழையும்
வரலாற்றில் அழியாத வாழ்வையும் பெற்ற உடல் குறையுள்ள சாதனையாளர்கள் மிகப்பலர்.
அத்தகைய மெளனப் புரட்சியாளர்களில் ஹெலன் கெல்லர் முதன்மையானவர்.
இளவயதில் ஹெலன் கெல்லர்:
அமெரிக்காவின்
அலபாமாவில் ‘டஸ்கும்பியா' எனும் சிறு
கிராமத்தில் 1880-ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் தேதி ஹெலன் கெல்லர் பிறந்த போது
அவருக்கு எந்தக் குறையுமில்லை. ஒரு வகையான மூளைக்காய்ச்சலால் அவரது ஒன்றரை வயதில்
பார்க்கும் திறனையும் கேட்கும் திறனையும் இழந்தார். இராணுவத்தில் சிறிது காலம்
பணியாற்றி ஓய்வு பெற்ற இவரது தந்தை கேப்டன் ஆர்தர் ஹென்லே கெல்லர், அவரது தாய் கதே
ஆடம்ஸ் இருவருக்கும் இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளவே சில
வருடங்களாயிற்று. ஹெலனின் 5 வயது வரை அவரது செயல்பாடுகள் மிக மூர்க்கமாகவும், சமாளிக்க
முடியாமலும் இருந்தது. ஹெலனின் உறவினர்கள் ஹெலனை ஏதாவது பார்வையற்றோர் பராமரிப்பு
இல்லத்தில் விட்டுவிடும்படி சொல்லிக் கொண்டே இருந்தனர்.
ஹெலனின்
குடும்பத்தைப் பற்றி மிகவும் அறிந்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல் (தொலைபேசியைக்
கண்டுபிடித்தவர்) இயல்பாகவே காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகள் மீது
மிகுந்த பரிவு கொண்டவர். கிரஹாம்பெல்லின் யோசனையின் பேரில் ஹெலனுக்கு கல்வி
புகட்டவும் கவனிக்கவும் மாசாசூட்ஸில் உள்ள பெர்கின்ஸன் பார்வையற்றோர் பயிற்சிப்
பள்ளியின் ஆனி ஸல்லிவன் என்பவரை அந்நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் அனக்னஸ் அனுப்பி
வைத்தார்.
ஆசிரியையாக
வந்த ஸல்லிவனின் வாழ்க்கை இன்னும் சோகமானது. ஸல்லிவனும் பிறக்கும் போதே பார்வைக்
குறைபாட்டுடன் பிறந்தவர் தான். அவரையும் அவரது சகோதரரையும் குழந்தைகளாக இருந்த
போதே அவர்களது தாயும் தந்தையும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லம் ஒன்றில்
விட்டுவிட்டு ஆளுக்கொரு திசையாக பிரிந்து விட்டனர். அந்த இல்லத்தில் பரவிய
இனந்தெரியாத தொற்று நோயால் ஸல்லிவனின் சகோதரன் இறந்து போக, ஸல்லிவன்
பிச்சைக்காரர் விடுதியில் இருந்து பெர்க்கின்ஸன் பயிற்சிப் பள்ளியில்
விடப்பட்டார். ஹெலனின் இல்லத்தில் ஆசிரியையாக நுழைந்த ஸல்லிவன் முதன்முதலாக
விரல்களால் ஹெலனின் உள்ளங்கையில் ‘வாட்டர்' என்ற சொல்லை எழுதி, கற்றுக் கொடுத்த
ஏப்ரல் 1887ஐத் தான் தன் வாழ்நாளில்மறக்க முடியாத நாளாக ஹெலன் நெகிழ்வுடன்
குறிப்பிடுகிறார். ஸல்லிவன் அவரை ஆற்றங்கரைக்கும் பூங்காக்களுக்கும், சரித்திரப்
புகழ்பெற்ற இடங்களுக்கும் அழைத்துச் சென்று ஒவ்வொன்றின் தன்மையையும் பொருளையும்
தொடுவதன் மூலம் உணர வைத்து விரல்களின் மூலம் உள்ளங்கையில் அதற்கான சொற்களை எழுதிப்
புரிய வைத்தார்.
ஒவ்வொரு
வார்த்தையாக ஒவ்வொரு வாக்கியமாக ஒவ்வொரு பத்தியாக பின் ஒவ்வொரு புத்தகமாக ஸல்லிவன்
மூலமாக தூண்டி விடப்பட்ட ஹெலனின் அறிவுத் தாகம் இறக்கும் வரையிலும் அடங்கவே இல்லை.
பார்வையில்லாத ஹெலனின் பன்மொழிப் புலமை:
பிரெய்லி முறையில்
உருவான புத்தகங்கள் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்துப் படிக்கத் தொடங்கினார்
ஹெலன். அந்தப் புத்தகங்கள் அதிகமாகப் பிரெஞ்சிலும் ஜெர்மனியிலும் இருப்பதாக அறிந்த
அவர் அந்த மொழிகளையும் கற்றார். லத்தீன் மொழியிலும் தேர்ச்சி பெற்ற ஹெலன் பிரெய்லி
முறையிலான தட்டச்சு இயந்திரம் கிரேக்க மொழியில் இருப்பதை அறிந்து கொண்டு கிரேக்க
மொழியினைக் கற்றார்.
11 வயதிலிருந்தே பொதுச்சேவை:
11வது வயதில் அவர்
எழுதி பத்திரிகையில் பிரசுரமான ‘பனிராஜா' எனும் சிறுகதை
மூலம், ஹெலனைப்
பற்றிய பரவலான அறிமுகம் வெளியுலகுக்குக் கிடைத்தது. தனக்குக் கிடைத்த பிரபல்யத்தை
வைத்து ஊனமுற்ற குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டினார். டாம் என்கிற வாய் பேசாத
காது கேளாத சிறுவனுக்காக போஸ்டன் ஹெரால்டு எனும் பத்திரிகை மூலம் கிடைத்த 1600
டாலர்களையும் இன்னும் சில நண்பர்களிடம் திரட்டிய பணத்தையும் அளித்தார். 13வது
வயதில் தன்னிடமிருந்த அரிய சேமிப்பான செப்புக் காசுகளை விற்றும், தெரிந்தவர்களிடன்
பெற்றும் அலபாமாவில் ஒரு நூலகம் கட்ட உதவினார்.
ஹெலனின்
16வது வயதில் அவரது தந்தை இறந்து போனார். இது அவரது கல்வியையும் பிரெய்லி
புத்தகங்கள் வாங்குவதற்கான பொருளாதார உதவிகளையும் பாதித்தது. ஹெலனைப் பற்றி
கேள்விப்பட்ட பிரபல ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் பத்திரிகைகள் மூலம்
நிதி திரட்டி அவரது கற்கும் ஆர்வம் தடைபடாமல் உதவிபுரிந்தார்.
அபாரமான
நினைவாற்றலும் கூர்மையான கிரகிக்கும் திறனும் இயல்பாக பெற்ற ஹெலனுக்கு பேச்சாற்றல்
என்பது சற்று திணறலான விஷயம். எவ்வளவு முயன்றும் குழறலான அவரது பேச்சுமுறை பல
கூட்டங்களில் கலந்து கொள்ளப் பெரும் தடையாக இருந்தது. தன்னைப் போலவே பேசுவதில்
தடுமாறி பிறகு குறிப்பிடத்தக்க பேச்சாளராக உருவான ராகின் ஹில்டு காடா என்ற
பெண்ணைப் பற்றி அறிந்த ஹெலன் அவளுக்குப் பேச்சுப் பயிற்சி அளித்த மிஸ் புல்லர்
என்பவரிடம் பேச்சுத் திறனை வளர்க்க ஒரு
மாணவியாகச் சேர்ந்தார்.
ஹிட்லரோடு மோதல்:
தேடுதலிலும்
அதனைக் கண்டடையக் கடுமையாக முயற்சிப்பதிலும் ஹெலன் சலிப்பதேயில்லை. சோஷலிஷக்
கருத்துக்களில் பெரிதும் ஈர்க்கப் பட்ட ஹெலன், அது சம்பந்தமான புத்தகங்களை தேடித்தேடிப் படித்தார்.
தன்னுடைய நூல்களிலும் உரைகளிலும் சோஷலிசக் கருத்துக்களை முதன்மைப்படுத்தினார். இது
அவருக்கு பல எதிரிகளை சம்பாதித்துத் தந்தது. குறிப்பாக ஹிட்லரின் நாஜிப்படைகள்
ஹெலனின் புத்தகங்களை பகிரங்கமாக பெர்லினில் உள்ள ஓபரா ஹவுஸில் எரித்தனர்.
ஹெலன்
அடுத்தடுத்த புத்தகங்கள் எழுத ஜான் மேனி என்பவர் பெரிதும் உதவினார். பின்னாளில்
ஜான் மேனி ஸல்லிவனை மணந்து கொண்டார். ஹெலன் மாசாசூட்ஸ் நகரில் சோஷலிஷக் கட்சியில்
உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு ‘இருளின்
வெளியே' எனும்
முழுக்க முழுக்க சோஷலிஷக் கருத்துக்கள் அடங்கிய நூல் ஒன்றினை வெளியிட்டார்.ஒன்றரை
வயதில் பார்க்கும் திறனையும் கேட்கும் திறனையும் இழந்த ஹெலன் கெல்லர் 75 வயது வரை
வாழ்ந்தார். அவர் ஒரு சமூக சேவகர்,
எழுத்தாளர், பேச்சாளர், பல மொழிகள்
அறிந்தவர். பார்வையற்றோருக்கு நம்பிக்கையும்,
புத்துணர்வும் ஊட்ட எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் வாழ்க்கையின் இறுதி வரை
பாடுபட்டார். 35 நாடுகளில் 40,000 மைல்கள் பயணம் மேற்கொண்டார்.
1925ல்
ஓஹியோ மாநிலம் செடர்பிரிண்ட் லயன்ஸ் உலக மாநாட்டில் கலந்து கொண்ட ஹெலன்,
“நான் உங்கள் கதவுகளைத் தட்டிக் கொண்டே இருக்கிறேன்.
உங்களைப் பார்க்க முடியும்,
கேட்க முடியும். ஈரமனசு கொண்ட நீங்க,
பார்வைத் திறனைக் காக்க பார்வையற்றோர்க்கு தொண்டு செய்ய பார்வையிழப்பிற்கு
எதிரான போர் வீரர்களாக மாற வேண்டும்”
என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
அந்த
உருக்கமான வேண்டுகோளை பன்னாட்டு லயன்ஸ் அமைப்பு தனது முதன்மைப் பணியாக
அர்ப்பணிப்பு உணர்வோடு ஏற்றுக் கொண்டு இன்றளவும் செயல்படுகிறது.
பொது நலனுக்காக சொந்த வீட்டினை விற்றவர்
1918ல்
பார்வையற்ற குழந்தைகளுக்காக நிதி ஆதாரம் ஒன்றை உருவாக்குவதன் அவசியத்தை உணர்ந்த
ஹெலன், தனக்குச்
சொந்தமான வீட்டினை விற்றுவிட்டுக் கிடைத்த தொகையுடன், ஸல்லிவன் மற்றும்
மேஸியுடன் நியூயார்க்கில் உள்ள ஃபாரஸ்ட் ஹில்ஸ் எனும் இடத்தில் குடியேறினார்.
அங்கிருந்தபடியே பல்வேறு சொற்பொழிவுகள்,
நிகழ்வுகளில் பங்கேற்று அதன்மூலம் கிடைக்கும் நிதியினை ஒரு அறக்கட்டளை மூலம்
பலருக்கும் உதவினார்.
1921ல்
ஹெலனின் தாயாரும், ஆசிரியையும்
தோழியுமான ஸல்லிவனும் அடையாளம் காண முடியாத நோய் காரணமாக அடுத்தடுத்து இறந்து
போயினர். பேரிடி போல் விழுந்த இந்த மரணங்கள் ஹெலனை அதிரச் செய்தது. எனினும் பாலி
தாம்சன் என்பவர் ஹெலனுக்கு உதவியாளராக வந்து சேர்ந்தது ஆறுதலாகவும், பேருதவியாகவும் இருந்தது.
உலகச் சுற்றுப்பயணம்:
பாலி தாம்ஸனுடன் சேர்ந்து உலகச் சுற்றுப் பயணம்
ஒன்றைத் துவக்கினார் ஹெலன். ஜப்பான் அரசு ஹெலனை தனது தேசத்தில் உள்ள
பார்வையற்றோருக்கு புத்துணர்ச்சி அளிக்க உரைகள் நிகழ்த்துமாறு அழைப்பு விடுத்தது.
அதன்பின், ஹெலனின்
சுற்றுப்பயணங்களும், சொற்பொழிவுகளும்
ஓய்வின்றித் தொடர்ந்தது. ஆஸ்திரேலியா,
நியூசிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, தென் ஆப்ரிக்கா
போன்ற தேசங்களுக்குச் சென்றார். அங்கெல்லாம் பார்வையற்றவர்களுக்கிடையே நிகழ்த்திய
உரையாடல்கள், நிதி
திரட்டல்கள் மூலம் அங்கிருந்த
ஊனமுற்றவர்களிடையே பேரெழுச்சியையும் வாழ்வின் மீதான பெரும் நம்பிக்கையையும்
ஏற்படுத்தினார்.
இதன்
தொடர்ச்சியாக ஹெலன் 1955ல் இந்தியாவிற்கும் வந்தார். சென்னை சாந்தோமில் உள்ள காது
கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு
தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசினார். 1957ல் அவரது உதவியாளர் பாலி தாம்சன்
மரணமடைய, வின்ஸி
கார்போலி என்பவர் அவருடைய இடத்தை நிரப்பினார்.
அமெரிக்காவின்
மிக உயரிய அதிபர் விருதினை அப்போதைய அதிபர் லிண்டன் ஜான்சன் வழங்கினார். அதனைத்
தொடர்ந்து பல்வேறு விருதுகள் அவரைத் தேடி வந்தது. வாழ்நாளெல்லாம் பார்வையற்றவர்களுக்காகப்
பாடுபட்ட ஹெலன் கெல்லர், 1968ம்
ஆண்டு ஜுன் 1ல் பூமியில் நிரந்தரமாக ஓய்வெடுத்தார். அவருடைய அஸ்தி அவரது பிரதான
ஆசிரியை மற்றும் வழிகாட்டிகளான ஸல்லிவன் மற்றும், பாலி தாம்சன் ஆகியோரின் நினைவிடமான வாஷிங்டன் தேசிய
கதீட்ரல் சதுக்கத்தில் வைக்கப் பட்டு நினைவிடமாக ஆக்கப்பட்டுள்ளது. ஹெலன்
கெல்லரும் அவருடைய தோழியும் ஆசிரியையுமான ஸல்லிவனும் பாலி தாம்சனும் இங்குதான்
மெளனமாக அவருடன் உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.
இனி
உலகம் முழுக்க வெளிச்சமே இல்லாத இருள் மட்டும் தான் என்ற நிலை ஏற்பட்டால், நம்மில் பலருக்குப்
பைத்தியம் பிடித்து விடலாம். அல்லது தற்கொலை பெருகலாம். ஆனால், தனக்கு
விதிக்கப்பட்ட குறையுள்ள ஒரு வாழ்க்கையை,
ஒரு போராளியின் திட மனதுடனும்,
தீரத்துடனும் எதிர்கொண்டு மற்றவர்களுக்கு வாழ்வளித்த ஹெலனின் வாழ்க்கை, சரித்திரத்தில்
தனித்தே மின்னுகிறது.
பெட்டிச்
செய்தி :
ஊசியால்
போனது ஊசியால் வந்தது;
லூயிஸ்
பிரெய்லி என்பவர், 1809ம்
ஆண்டு பாரீசில் பிறந்தார். ஹெலனைப் போலவே பிறக்கும் போது எந்தக் குறையும் இல்லாமல்
பிறந்தவர். அவரது தந்தை ஒரு தோல் பொருள் தயாரிப்புத் தொழிலாளி. சிறு வயதில் அவரது
பட்டறையில் உள்ள உபகரணங்களை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த பிரெய்லியின் கண்
நரம்புகளை அங்குள்ள குத்தூசி ஒன்று பதம் பார்த்து விட்டது. அப்பொழுது பிரெய்லிக்கு
வயது 6 தான். பார்க்கும் திறன் முற்றாக அழிந்து போனது. இருந்தாலும் படிக்கும்
ஆர்வம் பிரெய்லிக்குக் குறைவேயில்லை.
ஆனாலும்
அப்பொழுது பார்வையற்றவர்களுக்காக இருந்த உப்பலான எழுத்துக்கள் அடங்கிய புத்தகங்கள்
தடிமனாகவும் குறைந்த எண்ணிக்கையிலுமே இருந்தது. எனவே, ஒரு புதிய எழுத்து
வடிவத்தை கண்டுபிடிக்க பிரெய்லி முயற்சித்துக் கொண்டு இருந்தார்.
அந்த
தருணத்தில், பிரெஞ்சு
ராணுவத்தில் வீரர்களுக்கு இடையே இரவு நேரத்தில் விளக்கின் உதவி இல்லாமல் இருட்டில்
தகவல் பரிமாறிக் கொள்ள, படிக்க
எழுத்து வடிவங்களைத் துளையிட்டு சங்கேதக் குறியீட்டு அட்டைகளைப் பயன்படுத்தி
வந்தனர். அதிலொரு அட்டை பிரெய்லிக்குக் கிடைத்தது. அந்த எழுத்துக்களை அப்படியே
துளையிட்டு வடிவமைத்தால் பார்வையற்றோருக்கு பயனுள்ளதாக இருக்குமெனக் கருதிய
பிரெய்லி, வெறும்
ஆறு துளைகள் மட்டும் வரும்படி எழுத்துக்களை உருவாக்கினார்.
எந்தக்
குத்தூசி அவரது கண் பார்வையைப் பறித்ததோ அந்தக் குத்தூசியைப் பயன்படுத்தி பிரெய்லி
உருவாக்கிய எழுத்துக்கள் தான் இன்று உலகமெங்கும் உள்ளவர்களுக்கு வரப்ரசாதமாக
அமைந்திருக்கும் பிரெய்லி எழுத்து முறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>