திங்கள், 27 ஜூன், 2022

 சத்தியத்துக்கு எதிரான சோதனை

           ஐரோம் ஷர்மிளா சானு

 

 

     ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

     இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்; ஒருநாளும்

     என் நோவறியா இடும்பைகூர் என்வயிறே

     உன்னோடு வாழ்த லறிது

                           -ஒளவையார்'

     ஒரே ஒரு வேளை உணவு உட்கொள்ளப்படாவிட்டால் நாம் அடைகிற துன்பம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. ஆனால்  மிக நீண்ட 16 வருடங்கள் உணவையே ருசிக்காத நாவுடன் வாழ்தல் என்பது எப்பேற்பட்ட சோதனை..

     காந்தி தேசம் என்று ஒன்றுபட்ட இந்தியாவுக்கு பெயர் சூட்டலாம் என்ற யோசனையை சுதந்திரத்திற்குப் பின் முன்வைத்தவர்கள் பலர். தேசத்தின் மீதான அபரிமிதமான பற்றும் காந்தீயக் கொள்கைகள் மீதான அளவற்ற நம்பிக்கையும் அவர்களை அப்படியான கோரிக்கை வைக்கத் தூண்டியிருக்கலாம். காந்தியின் பெயர் சூட்டப் பொருத்தமானதாக இருக்கிறதா நம் தேசம் என்கிற கேள்வியைப் பல்வேறு சமகால நிகழ்வுகள் நம்முன் எழுப்பியபடி இருக்கின்றன.

     எதிரியின் உயிரையோ, இரத்தத்தையோ காவு கேட்கும் ஆயுதங்களை களத்தில் இறக்குவதுதான் போர்த்தந்திரங்களாகக் கருதப்படும் சூழலில், தன்னையே வருத்திக்கொள்ளும் உபவாசம் போன்ற வழிமுறைகளை யுத்த உத்தியாகக் கையாண்டவர் காந்தி. அவரது செயல்பாடுகள், கொள்கைகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் உண்டு. ஆனால் அவற்றைக் கடைபிடிப்பதில் அவர் காட்டும் உறுதியை எவரும் விமர்சிப்பதில்லை.

     அவரது அஹிம்சா வழி யுத்தங்களை இன்றைக்கு கடைபிடிக்க முயல்பவர்கள் செய்தித்தாள்களில் உரிய இடம் பெறக்கூட கவனம் இழந்தவர்களாக அலட்சியப்படுத்தப் படுகிறார்கள் என்பது அதிர்ச்சியான நிதர்சனமாகும்.

தழலாக தகிக்கும் மணிப்பூர்:

மணிப்பூர், நாகலாந்து, மிசோரம் போன்ற இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நாம் அடிக்கடி லாட்டரிச் சீட்டு விற்கும் அப்பாவிச் சிறுவர்கள் மூலமாகவோ, அந்தக் கால திரையரங்குகளில் திரைப்படத்துக்கு  முன் திரையிடப்படும் நியூஸ் ரீல் எனப்படும் செய்தித்துறை ஆவணப்படங்களில் அந்தப் பகுதிக்குச் செல்லும் அரசியல் தலைவர்கள் தங்கள் எளிமையைப் பறை சாற்ற அங்குள்ள பழங்குடி மக்களோடு இடுப்பில் கைகோர்த்தபடி ஆடும் நடனங்கள் வழியாக மட்டும் அறிந்திருப்போம். ஆனால் இந்த மாநிலங்களில் எல்லாம் பொட்டலம் கட்டப்பட்ட தழலாக பிரச்சினைகள் கனன்று கொண்டே இருக்கின்றன.

     குறிப்பாக, மணிப்பூரில் எல்லையை ஒட்டி பர்மா இருப்பதால் அங்கிருந்து வரும் அகதிகள் என்கிற போர்வையில் ஊடுருவும் அண்டை நாட்டு இயக்கங்களின் கைக்கூலிகள், பக்கத்து மாநிலமான நாகாலாந்துடனான எல்லைப் பிரச்சினை காரணமாக அவ்வப்போது எழும் கலவரங்கள், மணிப்பூரின் பூர்வகுடி மக்களுக்கும் இன்னொரு இனப் பிரிவினருக்குமிடையே ஏற்படும் ஆக்ரோஷமான உள்நாட்டுச் சண்டைகளும் மணிப்பூரை அடையாளப் படுத்தியபடி இருக்கின்றன.

மணிப்பூர் மாநிலமாக உருவான வரலாறு:

     மணிப்பூர் கி.பி. 33லிருந்து காங்னா' எனப்படும் மன்னரின் கீழ் ஆளுமைக்குட்படுத்தப்பட்டு, அவரது வம்சா வழியினரும், இன்னும் பலருமாக கிட்டதட்ட 109 மன்னர்களின் கீழ் வழிநடத்தப்பட்டு வந்தது. அவர்களில் மஹராஜா பாக்யசந்திரா மிகக் குறிப்பிடத்தக்கவர். புகழ்பெற்ற ராசலீலா நடனம் அவரது காலத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. வைணவத்தைப் பரப்புவதன் மூலம் ஒன்றுபட்ட மணிப்பூரைக் கட்டுவது சாத்தியம் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. பர்மாவுடனான எல்லைப் பிரச்சனைகள் அவரது காலத்திலும் இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் படைகள், கிழக்கு ஆசியாவை வீழ்த்திவிட்டு, பர்மாவின் வழியே மணிப்பூரை வந்தடைந்தது. அப்போது நடந்த உக்கிரமான போரில் மடிந்த இந்திய வீரர்களுக்கான நினைவிடம் இன்னும் நன்றியுடன் வணங்கப்படுகிறது.

     1947ல் இந்திய சுதந்திரத்துக்கு பிறகு மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்காமல், அப்போது இருந்த மஹராஜா புத்தசந்திரா தனித்த அதிகாரம் பெற்றவராகத் தொடர்ர்ந்து மணிப்பூரை நிர்வகித்துள்ளார்.

     1949ல் அஸ்ஸாம் தலைநகர் ஷில்லாங்கில் நடந்த இணக்கமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு 'கிரேடு மாநிலமாக அறிவிக்கப்பட்டு, பின் 1956ல் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. 1972ல் தான் மணிப்பூர் மாநில அந்தஸ்தை அடைந்தது.

     மணிப்பூர் மக்களை மூன்று முக்கியப் பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். மெய்திகள் என்றழைக்கப்படும் ஒரு பிரிவும், மலையின பழங்குடி மக்களான நாசாக்கள், குகி சின் பிரிவினைச் சார்ந்த இரு பிரிவினர்கள் ஆவர். மெய்திகளுக்குள் இரண்டு உட்பிரிவுகள் உண்டு. ஒன்று பெங்காலி பிராமணர்களைக் கொண்ட மெய்தி பாமர், வங்காள தேச அகதிகளைக் கொண்ட மெதி பங்கள். குகி சின் என்றழைக்கப்படும் மூன்றாவது பிரிவினர் பர்மாவின் சின்' பிரதேசத்திலிருந்து மணிப்பூரில் குடியேறிய இனத்தவர்.

     மணிப்பூரில் மெய்திகளுக்கும் நாசாக்களுக்கும் இடையே ஏற்படும் கலவரங்கள் பல குழுக்களை தோற்றுவித்தது. மட்டுமின்றி பர்மாவுடனான எல்லைப் பிரச்சினைகள், ஊடுருவல்கள், எப்பொழுதும் மணிப்பூரை பதட்டமிக்க மாநிலமாக உருவாக்கின. மத்திய அரசு அவற்றை எதிர்கொள்ளும் விதமாக ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1958 ஐ மாநிலத்தில் அமல்படுத்தி மணிப்பூரில் ஆங்காங்கே முகாம்களை அமைத்தது. விசாரணை என்ற பெயரில் நீண்ட காலமாக சிறைப்படுத்தல், பாலியல் அத்துமீறல்கள், தொட்டதற்கெல்லாம் துப்பாக்கிச் சூடு என்று மணிப்பூர் கலவர பூமியாகவே காட்சியளித்தது.

     ஓநாய்களின் வேட்டையில் சில ஆடுகளின் மரணம் தவிர்க்க முடியாததுஎன்று தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் முகாமின் அதிகாரிகளுக்கு ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது' என்கிற நியாயம் புரியாமல் போவதுதான் வினோதம்.

     தங்ஜம் மனோரமா என்கிற இளம் பெண்ணை விசாரணை என்கிற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த பிரச்சினை, மணிப்பூரில் உள்ள சில குழுக்களை ஒன்றிணைத்து போராட  வழிவகுத்தது. கிட்டத்தட்ட 32 சமூக இயக்கங்கள் ஒரு குடைக்கு கீழ் மிக அமைதியாக ஒத்துழையாமை இயக்கத்தை அவர்கள் நடத்தி வந்தனர். ஆனால், தொடர் சித்திரவதைகள், அத்துமீறல்கள் குறையாததால், மணிப்பூர் மாணவ இயக்கத்தின் பிஷன்பூர் பிரிவு ஆலோசகராக இருந்த பெபம் சித்தரஞ்சன் தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டு பிஷன்பூர் மார்க்கெட்டில் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு ஓடியபடி உயிர்விட்ட சம்பவம் பல வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமாக இருந்தது.

     பதற்றம் நிறைந்த மணிப்பூரில் பாலியல் ரீதியான கொடுமைகள் குறையவே  இல்லை. மாமனாரின் கண் முன்னர் மெர்சி காஸயா என்பவர் கற்பழிக்கப் பட்டார். பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்களின் உறவினர்கள் முகாம்களுக்கு எதிராக நடத்திய நிர்வாணப் போராட்டத்தை அப்போதைய சில பத்திரிகைகள் வாயிலாக அறிகிறோம்.

     மலோம்' எனுமிடத்தில் நடைபெறுவதாக இருந்த அமைதிப் பேரணியில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958 (AFSPA) ஐ திரும்பப் பெறுமாறு மத்திய அரசைக் கோருவது என்கிற எழுச்சிமிக்க தீர்மானத்துடன் கூடியிருந்த கூட்டத்தை கண்மூடித்தனமாக சுட்டனர். இது கூட்டத்தில் கலந்து கொள்ள சற்றுத் தாமதமாக வந்த ஷர்மிளா சானு என்கிற இளம்பெண்ணின் மனதை வெகுவாகப் பாதித்தது.

     "சிறுவயது முதலே வியாழக்கிழமைகளில் உண்ணாதிருக்கும் விரதத்தை கடைபிடிக்கும் சர்மிளா கொலை நிகழ்ந்த நாள் வியாழக்கிழமையாக அமைந்திருந்த காரணத்தால் தனது உண்ணாநிலையை அப்படியே தொடர்ந்தார்". அவர் உண்ணாநிலைப் போராட்டத்தை துவங்கிய நாள் நவம்பர் 4 என்றும் அதற்கு முந்தைய நாள் தனது இரவு உணவை முடித்துக்கொண்டு அன்னையின் கால்களில் விழுந்து வணங்கி அனுமதி பெற்று, தாயின் ஆசீர்வாதத்தோடு துப்பாக்கிச் சூடு நடந்த அதே இடத்தில் தனது உண்ணா நோன்பை நவம்பர் 2, 2000 -ம் ஆண்டு துவக்கினார். நவம்பர் 21ல் அவரைக் கைது செய்து வலுக்கட்டாயமாக நாசி வழியே திரவ உணவைச் செலுத்தி வந்தார்கள். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக திரவ உணவு மட்டும் உட்செலுத்தப்பட்டதால் பெண்மையின் இயற்கையான மாதவிடாய் சுழற்சி 32 வது வயதிலேயே நின்று போய், நகர்வது கூட இயலாமல் தவழ்ந்தபடி இருந்தார்.

யார் இந்த ஷர்மிளா சானு?

ஷர்மி என்று அழைக்கப்படும் ஷர்மிளா சானு 1972ம் ஆண்டு நந்தா சிங்கிற்கும் சாந்தி தேவிக்கும் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தவர். அவர் பிறந்த சில வருடங்களில் அவரது தந்தை இறந்து விட, அவரது பள்ளிக் கல்வி சிரமத்துடனே தொடர்ந்து பின் நின்றுபோனது. இயல்பாகவே ஷர்மி சிறந்த கவிஞராகவும் ஓவியராகவும் பின்னர் கடின பயிற்சிகள் காரணமாக  யோகக்கலை நிபுணராகவும் விளங்கினார். பள்ளிப் பருவத்திலேயே சமூக அக்கறையும் சம கால நிகழ்வுகளின் மீது பொறுப்பான கவனமும் அவரிடம் இருந்தது. அவரது படைப்புகள் சமூகப் பிரக்ஞையுடன் வெளியான பல்வேறு சிற்றிதழ்களில் வெளியாயின.

     மணிப்பூரில் நிலவும் சூழலும் அதிகாரத்தின் வழி அன்றாடம் அரங்கேறும் அக்கிரமங்களும் அவரது மனதில் ஆறாத ரணங்களை ஏற்படுத்தின. மலோம் நகரில் நடைபெற இருந்த பேரணிக்காக ஆலோசனைக் கூட்டத்தில் அவரும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் இரக்கமற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை நேரடியாகப் பார்த்த ஷர்மி, அதன் கொடூரமான வலியை தணிக்க இயலாதவராக தவித்தார். அவரது உறுதி மிக்க உண்ணா நோன்புக்கான அடிநாதம் அவரது சமூக அக்கறை மிக்க இலக்கிய மனம்தான். அவரது விடுதலைக்காக அனைத்து இயக்கங்களும் போராட்டங்களில் குதித்தன. போராட்டங்களின் விளைவாக அவர் இரண்டு முறை இடையில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாததால், ஷர்மி விடுதலையான பின்னும் தனது அறப்போரைக் கைவிடாததால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

     குடும்பத்தின் வருவாய்க்குப் பெரிதும் காரணமாக இருந்த அவரது மூத்த சகோதரர் மரணமுற்ற நிலையிலும் அவரது இன்னொரு சகோதரர் ஷர்மிக்கு ஆதரவாக இருந்த காரணத்துக்காக பணி நீக்கம் செய்யப்பட்ட சூழலிலும் கூட, அவர் தனது போராட்டத்தைக் கைவிடவே இல்லை. போராட்டத்தை துவங்கிய தினத்திற்குப்  பிறகு அவரது தாயார் சாந்தி தேவி அவரைப் பார்க்க மறுத்து விட்டார். ஒருவேளை, தான் அவரைச் சந்தித்தால் அது அவரது மன உறுதியை அசைத்துவிடும் என்பதால் அவர் தன் போராட்டத்தில் வெற்றி பெற்ற பின்னரே பார்ப்பேன் என்கிற உறுதியோடு சாந்திதேவி இருந்தார்.

     ஷர்மிக்கு ஆதரவாக பல அமைப்புகளும் போராடியபடியே இருக்கின்றன. அவரோடு துணையாக இடையில் இணைந்த மெம்சா மற்றும் பாங்கி எனும் இரண்டு பெண்மணிகள், பின் குடும்பச் சூழல் காரணமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டாலும் ஷர்மி மட்டும் மனம் தளராமல் போராடினார். மணிப்பூர் என்கிற மாநிலத்தை அறியாதவர்களுக்கும் அறிமுகப்படுத்தியவர் ஷர்மிதான். அங்கு நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி ஒரு சர்வதேச கவனத்தை ஏற்படுத்தியவரும் அவர்தான். ஆனால் என்ன ஒரு கொடூரமான நன்றி கெட்ட உலகம் இது. அவரது போராட்டங்கள் அரசுக்கு எதிராக திரும்புவதற்குப் பதிலாக அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டன. யாரெல்லாம் அவர் சிறையிலிருந்து நீதிமன்றம் வரும் போது கூடவே கோஷமிட்டபடி, உணர்ச்சி பொங்க பாடல்களை இசைத்தபடி நடந்து வந்தார்களோ அவர்கள் எல்லாம் அவரது தியாகங்களை சற்றும் நினைக்காமல் அவருக்கு எதிரான நிலைப்பாட்டுடன் பூதாகரமாக நிற்கிறார்கள்.

     கிட்டத்தட்ட 16 நீண்ட வருடங்கள், இளமையின் எவ்வித கொண்டாட்டங்களையும் அனுபவிக்காமல் கடந்து போன துயர்மிகு காலங்கள்உடல் ரீதியாக அவர் எதிர் கொண்ட வலிகள், இழப்புகள் அனைத்தையும் பொருட்படுத்தாமல் போராடிய அவருக்கும் தனிப்பட்ட உணர்வுகள் இருக்கும், இந்த பூமியில் மனிதராய் பிறந்த எவருக்கும் கிளர்ந்தெழும் உணர்ச்சிகள் என்பதைக் கூட கருதாமல் அவரை ஒரு கருவியாக மட்டும் முன்னிறுத்த விரும்பும் சுய நலக் கூட்டமாக சிலர் மாறிவிட்டதுதான் சகிக்க முடியாத கொடுமை.

      சில ஆண்டுகளுக்கு முன், கடிதங்கள் வழியே அறிமுகமான இங்கிலாந்து இளைஞர் டெஸ்மண்ட் காட்ஸிஷர்மிளாவின் இரும்பு இதயத்துக்குள் காதல் அரும்புகளை மலரச் செய்தார். உலகம் முழுக்க போராளிகளை உயிர்ப்போடு நகர்த்தியதில் காதலுக்கு பெரும் பங்கு இருக்கிறது. மார்க்ஸ்- ஜென்னி, நெல்சன் மண்டேலா-வின்னி என இதற்கு உதாரணமாக பலரைச் சொல்ல முடியும். ஆனால்  ஷர்மிளாவின் காதல், அவரைச் சுற்றியிருந்தவர்களைப் பெரும் பதற்றத்தில் தள்ளியது. அவர்களுக்கு ஷர்மிளா என்கிற பிம்பம் காதலில் கரைந்துவிடுமோ என அஞ்சினார்கள். இந்திய மனம் என்பது தங்களுக்கான பிரச்சினைகளைத் தீர்க்க ஏதேனும் ஒரு தேவதூதன் அல்லது ஒரு தேவதை வருவார், அவர் எல்லாவற்றையும் துறந்து தங்களுக்கான பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார். பிரச்சினைகள் தீரும் வரை அவருக்கு  வேறு தனித்த வாழ்வு என்று ஒன்று இருக்கவே கூடாது. இனி தேசத்தின் பிரச்சினை அவரது பிரச்சினை நமக்கானது அல்ல என்கிற பொதுக்குணம் இந்தியர்களுக்கானது. எனவே அவர் அதிலிருந்து விலகி விட்டால் யார் தலையில் கட்டுவது என்கிற தலையாய கவலை வந்துவிட்டது.

     ஷர்மிளாவைச் சந்திக்க டெஸ்மண்ட் காட்ஸி வந்தபோது அவர்கள் அவரை அனுமதிக்க மறுத்தார்கள். டெஸ்மண்ட் காட்ஸி தன் காதலியின் வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார்ந்தார். காந்தி வெள்ளையர்களை எதிர்த்து அறவழிப்போராட்டங்களை அறிமுகம் செய்தார். ஆனால் சுதந்திர இந்தியாவில், அறம் சார்ந்த விஷயத்திற்காக வெள்ளையனையே மணிப்பூர்வாசிகள் உண்ணாவிரதத்தில் உட்கார வைத்துவிட்டனர். பிரச்சினை பெரிதான பின் வேறு வழியின்றி அவரை அனுமதித்தார்கள். ஷர்மிளாவின் போராட்டத்தில் பெரும் பிளவை அவர் உண்டாக்குவார் என்றும் அவர் இந்திய அரசின் உளவாளி என்றும் கதைகளை உருவாக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஷர்மி தனக்கு எதிராக திரும்பிய போராட்டக்காரர்களுக்காக வெறுத்துப் போய் தனது பிரதான கொள்கையை விட்டுத்தரவில்லை. அதேசமயம் ஷர்மிளா தன் இயல்பான உறுதியை காதலிலும் கொண்டிருந்தார். தன் வாழ்நாள் முழுமையும் தன் சமூகத்துக்கானது என்றும் தன்னுடைய காதலரும் போராட்டத்தில் இணைந்துகொள்வார் என்றும் அவர் சொல்லிவந்தார்.  டெஸ்மண்ட் காட்ஸி அவருக்கு அளித்த, ‘ஐ லவ் யூ' எழுத்துகளைத் தாங்கிய கரடி பொம்மை அவருக்கு எப்பொழுதும் உற்ற துணையானது.

     இந்தச் சூழலில் 2016 ஆகஸ்ட் 9 அன்று தன்னுடைய போராட்டத்தைக் கைவிட்டு, அரசியலில் இறங்கும் முடிவை அவர் அறிவித்தார். ஆனால் சுயநலமிக்க மனிதர்களின் போக்கு மாறவேயில்லை.  போராட்டத்தைப் பாதியில் கைவிட்ட அவர் தங்கள் வீட்டுக்கு வரக் கூடாது'' என்றார் அவருடைய உடன்பிறந்த அண்ணன். ஆதரவாளர்கள் குழு இரண்டாக பிரிந்தது. மருத்துவமனையிலிருந்து புறப்படும்போது எங்கு செல்வது என்கிற நிலை ஷர்மிளாவுக்கு உருவானது. தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அவர் செல்லத் திட்டமிட்டபோது, அங்கே அவர் தங்கக் கூடாது என்று அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     ஆயுதங்கள் ஏந்தி தம் மக்களுக்காக போராடியவர்களை அவர்கள் அறவழியில் ஏன் போராடவில்லை என்று கேள்விகளால் குதறியவர்கள், கொத்திக்கொண்டு இருப்பவர்கள் இன்று ஷர்மியின் போராட்டங்கள் குறித்து வாய் திறப்பதே இல்லை. இன்னமும் அறம் சார்ந்த வழிகளில்தான் தனது மக்களுக்கான பிரச்சினைகளை முன் நிறுத்துகிறார் ஷர்மி. ஆனால் அந்த மக்களே அவருக்கு எதிராக திரும்பியதற்கு அரைகுறை அறிவுஜீவிகளின் கையாலாகாத பிரச்சாரங்களே காரணம்.

     வெவ்வேறு பிரச்சினைகளின் பொருட்டு வெவ்வேறு கால கட்டங்களில் தன்னை வருத்திக் கொண்டு உண்ணா நோன்பினைக் கைக்கொண்டு உயிர் துறந்தவர்கள் அனேகம். வரலாற்றின் பக்கங்களில் சில வரிகளுக்குள் அவர்களது பெயர்களை அடக்கிவிடலாம். மனசாட்சியின் உறுத்தல் மிக்க பகுதிகளில் அவர்களுக்கான தீர்வுகள் ஒளிந்து கொண்டிருக்கும். சிறு புண்களை மருந்திட்டு ஆற்றலாம். சில காயங்களுக்கு அறுவை சிகிச்சை தான் நிவாரணம் என்று  காயங்களைக் களைவதற்குப் பதிலாக உறுப்புகளைக் களவாடி விடுகின்றனர். தேசத்திற்கு காந்தியின் பெயர் சூட்டுவது இருக்கட்டும். காந்தியின் அறவழிகளை நாம் கைகொள்கிறோமா?

                     -------------------

பெட்டிச் செய்தி

     ஷர்மிளாவின் உண்ணா நோன்பினை துறந்த  நான்காம் நாள் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி வுமன் அண்ட் கிரைம்' பத்திரிகையில் பணியாற்றிய அராபம் ரொபிடா என்னும் பெண்மணி திடீரென சாகும் வரை உண்ணா நோன்பு போராட்டத்தை அறிவித்து இம்பாலில் உள்ள தன் அலுவலகத்தின் கீழ்ப்பகுதியில் அமர்ந்துவிட்டார். ஷர்மிளா எந்த நோக்கத்துக்காக போராடினாரோ அதே காரணத்துக்காகத்தான் தான் உண்ணாவிரதம் இருப்பதாகவும், ஷர்மிளா போராட்டத்தை பாதியில் கைவிட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறி மணிப்பூரை கிடுகிடுக்க வைத்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவர் இம்முடிவை எடுத்ததில் தனக்கு உடன்பாடில்லை என அவரது கணவர் கொந்துஜம் ஹெரா தெரிவித்தார். இரண்டு நாட்கள் ஊடகங்களில் அவர் பரபரப்பான செய்தியாக திகழ்ந்தார். ஆனால் குடும்பத்தின் வற்புறுத்தல் காரணமாக தான் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக 15 ஆம் தேதி அறிவித்தார். அத்தோடு அந்த இரண்டு நாள் நாடகம் முடிவுக்கு வந்தது. எவரையும் விமர்சிப்பது, கேலி செய்வது எளிது ஆனால் தான் அந்த காரியத்தில் இறங்கும்போதுதான் உண்மையான வலியை உணரமுடியும் என்பதற்கு உதாரணமானார் அராபம் ரொபிடா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...