கிழக்கு வாசல் உதயம் இதழில் பிரசுரமான கட்டுரை
அறவழியின் அடையாளம்
ஆங் சாங் சூ கி
அமைதி தவழும் பூமி
அமைதி தவழும் பர்மாவில்
எவரும் சிரிப்பதில்லை
சப்தமாய் சிந்திப்பதுமில்லை
அமைதி தவழும் பர்மாவில்
கூட்டங்களில் மெளனத்தை உணரலாம்..
அமைதி தவழும் பர்மாவில்
எப்பொழுதும் சிப்பாய்கள் வருவார்கள்
எவரை இழுத்துச் செல்வார்கள்
என்று யாருக்கும் தெரியாது
அமைதி தவழும் பர்மாவில்
கொலை நடந்தாலும்
எவரும் கூக்குரலிடுவதில்லை.
-ஆங் சாங் சூ கி
(தமிழில்: பிருத்வி மதுமிதா)
‘தீங்கில்லா
குற்றமற்ற தூய நல்லவரைத் துன்புறுத்துகிற மூடன் மேல், காற்றுக்கெதிராகத்
தூற்றப்பட்ட தூசியைப் போன்று பாவம் விழுந்து படிகிறது'
125.10: பாபவர்க்கம்: தம்மபதம்
82
சதவீத வாக்குகளைப் பெற்ற பர்மாவின் ஒப்பற்ற தலைவி. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற
பொறுமையின் தேவதை. செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் திணறும் பேரன்பு
கொண்ட நாயகி ஆங் சாங் சூ கி.
17
ஆண்டுகள் ரகசியக் காவலில் இருந்தது
பர்மாவின் சோகம்... ஜனநாயகத்தின் களங்கம்...
அமைதியை
போதித்த பெளத்தத்தைப் பின்பற்றும் தேசங்களை ஆளும் நாடுகள், தங்கள் அதிகார
வெறிக்கு இரையாக எதை வீசினாலும்,
பசி தீராத மிருகம் போல் எப்பொழுதும் உறுமியபடி இருக்கின்றன. 1988ல் தனது சொந்த
தேசத்து மக்களை குழந்தைகள் பெண்கள் என்றும் பார்க்காமல் சுமார் 3000 பேரைக் கொன்ற
பர்மிய அரசின் கீழ் வசிக்கும் பர்மன்கள் 90 சதவீதம் பேர் பெளத்தத்தைத்
தழுவியவர்களே. பிற உயிர்களைக் கிஞ்சித்தும் துன்புறுத்தக் கூடாது என்பதே
பெளத்தத்தின் பிரதான கோட்பாடாகும்.
பிரிட்டிஷ்
காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது பர்மிய மக்களின் தனித்தன்மையைக் காப்பாற்ற 1941ல்
வெறும் முப்பது இளைஞர்களுடன் ஜப்பானில் இராணுவப் பயிற்சி பெற்று பர்மாவில் ஆயுதப்
போராட்டத்தை நடத்திய ஆங் சான்,
1948ல் கொல்லப்பட்டார். இன்றும் அவர் பிறந்த பிப்ரவர் 13ம் தேதி தான் ‘பர்மாவின்
குழந்தைகள் தினம்' ஆக
அனுசரிக்கப் படுகிறது. அவரது மகள் தான் இன்று நாம் பரவலாக அறிந்துள்ள ஆங் சான் சூ
கி. 1945ம் ஆண்டு ஜுன் 19ம் தேதி பிறந்த சூ கி, தனது தாயார் டா கின் கீ இந்தியாவுக்கான பர்மிய தூதராக
நியமிக்கப்பட்டதால் 1960ம் ஆண்டு தாயுடன் டெல்லிக்கு வந்தார். இந்தி, குஜராத்தி மொழிகளை
ஆகிய மொழிகளைக் கற்ற சூகி,
மகாத்மா காந்தியின் 'சத்திய
சோதனை'யை வாசித்தது அவரது வாழ்க்கையை மாற்றியது.
அகிம்சைப் போராட்டம் மீது அவருக்குப் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.
1964
முதல் 67 வரை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், தத்துவம் ஆகிய
பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்ற பின்,
1969ல் ஐ.நா. சபையில் நிதிநிலை மற்றும் நிர்வாக ஆலோசனை செயலராகப்
பதவியேற்றார்.
1972ல்
பூடானில் அயல்துறையில் பணியாற்றிய டாக்டர் மைக்கேல் ஏரிஸ் என்கிற பிரிட்டிஷ்
பிரஜையை சூ கி மணந்தார். அதனால் அவர் லண்டனில் தங்க நேரிட்டது. அங்கு அவருக்கு
அலெக்ஸாண்டர் மற்றும் கிம் என்ற மகன்கள் பிறந்தனர்.
1988ல்
தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ரங்கூன் சென்றார். அந்த காலகட்டத்தில்
தான் பர்மாவில் இராணுவ அரசாங்கம் கடுமையான சட்டங்களால் அடக்குமுறைகளைக்
கட்டவிழ்த்துக் கொண்டு இருந்தது. அரசை எதிர்த்து மாணவர்கள் கலகம் செய்துகொண்டு
இருந்தனர். ஒவ்வொரு மக்கள் போராட்டத்தின் போதும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை
அச்சுறுத்தக் காரணமின்றி கொன்று குவித்தது பர்மாவின் இராணுவ அரசு. ஒரே சமயத்தில்
ஒரு கூட்டத்தில் 3000 பேரை சுட்டுக் கொன்ற கொடுமை தான் பர்மாவை நோக்கி பிற நாட்டு
அரசியல் நோக்கர்களைத் திரும்ப வைத்தது. கடுமையான எதிர்ப்புகள் காரணமாக பர்மிய அரசு
மிரண்டாலும், அதுவரை
மக்களை ஒன்றுதிரட்டும் தலைமைப் பண்பு மிக்க ஒருவர் இல்லாததால் ராணுவ அரசு தனது
அடக்குமுறையைத் தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஆங்
சான் சூ கி இந்தப் படுகொலைகளை எதிர்த்து துணிச்சலாகக் களமிறங்கினார்.
தலைமையேற்றார். தன்னெழுச்சியாகக் கிளர்ந்த ஜனநாயக மீட்டெடுப்பு அறப் போருக்கு
சரியான தலைமை கிடைத்ததும்,
‘தேசிய ஜனநாயகப் பேரவை'
(என்.எல்.டி.) அமைப்பு துவங்கப்பட்டது. சூ கி அதன் பொதுச் செயலாளராக ஆனார்.
அவரது
தாயார் டா கின் கீ - யின் மரணத்தின் போது கூடிய திரளான கூட்டம் வெறும்
துக்கத்திற்காக மட்டும் கூடிய கூட்டமில்லை என்பதை உணர்ந்த பர்மிய ராணுவ அரசு சூ
கியின் நடவடிக்கைகளை உற்று கவனிக்க ஆரம்பித்தது.
அதன்
பிறகு சூ கி நூற்றுக்கணக்கான கூட்டங்களில் கலந்துகொண்டும், இராணுவ
துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டும்
பேசிய உரைகள், பர்மிய
மக்களிடம் பெரும் எழுச்சியையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தியது.
அவரை முடக்க தேசிய பாதுகாப்புச்
சட்டத்தின்கீழ் 1988ம் வருடம் ஜுன் 20ல் குற்றப்பத்திரிகையோ, விசாரணையோ
எதுவுமின்றி வீட்டுக்காவலில் வைத்தது பர்மிய அரசு. அதை எதிர்த்து அவரது இல்லத்தின்
முன் கூடிய பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். ஐ.நா.சபையின்
தொடர்ந்த வற்புறுத்தல், பிற
தேசங்களின் எச்சரிக்கை காரணமாகப் பர்மிய ராணுவ அரசு 1990ல் பொதுத் தேர்தலை
அறிவித்தது.
தேர்தலில்
82 சதவிகித வாக்குகளை தேசிய ஜனநாயகப் பேரவைக் கட்சி பெற்றாலும் பர்மிய இராணுவ அரசு
தேர்தல் முடிவுகளை அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துவிட்டது. அதனால் சூ கி
யால் ஆட்சியமைக்க இயலவில்லை.
1994ல் ஐ.நா.
சபையின் பிரதிநிதி ரெஹும் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில்
ரிச்சர்ட்ஸன், நியூயார்க்
டைம்ஸ் பத்திரிகை நிருபர் பிலிப் ஷெனான் ஆகியோர் சூ கியை அவரது இல்லத்தில்
சந்தித்தனர். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட 1988க்குப் பிறகு உறவினர்
அல்லாதவர்களுடன் சந்திப்பு என்பது இதுதான். இந்த சந்திப்புக்குப் பிறகு பர்மிய
இராணுவ அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பலனாக பர்மாவில் இராணுவ ஜெனரல்
தான் ஷுவே, ஜெனரல்
கின் நிவுண்ட் ஆகியோர் சூ கியை சந்தித்தனர். இறுதியாக 1995 ஜுலை 10ம் தேதி
வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார் சூ கி. ஆக,
ஜூலை 20, 1989
முதல் நவம்பர் 10, 2010
வரையிலான 21 ஆண்டுக்காலகட்டத்தில் சுமார் 15 ஆண்டுகள் வெளிவர முடியாதபடி சிறையில்
அடைக்கப்பட்டிருந்தார்.
விடுதலையடைந்ததும்
என்.எல்.டி.யின் பிரதிநிதிகளைச் சந்திக்க பர்மா முழுக்க பயணிக்க முயன்ற சூ கியை
எந்த ஊருக்குள்ளும் நுழைய முடியாதபடி அந்தந்த எல்லைகளிலேயே தடுத்து
நிறுத்தப்பட்டார். எதிர்ப்பாளர்கள் என்று சில கூலிகளை ஏற்பாடு செய்து அவர்கள்
மூலம் கலகத்தைத் தூண்டி அதையே காரணமாகக் காட்டி அவரது சுற்றுப்பயணம்
தடைசெய்யப்பட்டது. இதனாலேயே ஊர் எல்லைகளில் பல நாட்கள் கார்களிலேயே அவர் இருக்க
நேரிட்டது. அவருக்கு உணவும் இன்னும் பிற அத்தியாவசியப் பொருட்கள் தரவும் தடை
செய்யப்பட்டது.
இந்த
சமயத்தில் அவரது கணவர் மைக்கேல் ஏரிஸ் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு படுத்த
படுக்கையாக லண்டனில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக சூ கி பர்மாவை விட்டுச்
சென்றால் திரும்பவும் பர்மாவுக்குள் அனுமதிப்பதில்லை என்பதில் பர்மிய ராணுவ அரசு
உறுதியாக இருந்தது. ஏரிஸ் 1999 மார்ச் 20ல் மரணமடைந்தார். கடைசிவரை சூ கி தன்
கணவரை சந்திக்க வாய்ப்பின்றிப் போனது.
மீண்டும்
செப்டம்பர் 2000-ல் சூகியும் என்.எல்.டி.யின் முக்கியத் தலைவர்களும் வீட்டுக்
காவலில் வைக்கப்பட்டனர். அவரது காவலை எதிர்த்து நடந்த போராட்டத்தில் நிகழ்ந்த
துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் இறந்தனர்.
அமெரிக்காவில்
வசித்து வந்த அவரது மூத்த சகோதரர் யூ ஆங் சான் பர்மிய நீதிமன்றத்தில் சூ கிக்கு
எதிராக சூகி வசிக்கும் வீட்டில் பாதியை சொத்துரிமையாகக் கேட்டு வழக்குத்
தொடர்ந்தார். இந்த வழக்கில் வெற்றி பெற்றால்,
அவருக்கு வீட்டில் கிடைக்கும் பங்கினை பர்மிய அரசிடம் விற்று விடுவது என்ற
முடிவில் இருந்ததை அறிந்த பிறகுதான் இது பர்மிய இராணுவ அரசின் தூண்டுதல் என்று
புரிந்தது. ஆனால், பர்மா
நீதிமன்றம் அந்நிய தேசக் குடியுரிமை பெற்ற ஒருவர், பர்மாவில் சொத்துரிமை கோர முடியாது என்ற சட்ட விதியின் கீழ்
அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.
ஐ.நா.வுக்கான
பிரதிநிதி இஸ்மாயில், ஐ.நா.
மனித உரிமைகள் பிரிவு செயலர் பவுலோ செர்சியோ ஆகியோர் ஆங் சான் சூ கியுடனும் இராணுவ
ஜுண்டா அரசுடனும் நிகழ்த்திய ஏழு சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சூகி 2002ல்
விடுவிக்கப்பட்டார். என்.எல்.டி. தலைவர்களை விடுவிக்க செர்ஜியோ பேச்சுவார்த்தைகள்
நடத்தியபோது அவரது பேச்சுக்கள் ரகசியமாக டேப் செய்யப்பட்டதால், அதிருப்தியுற்ற
செர்ஜியோ பாதியில் தனது முயற்சியை நிறுத்தினார்.
பர்மாவின்
தென்மேற்குப் பகுதியில் ‘சின்' மாநிலத்தில் ஒரு
சிறிய அளவு சந்திப்புக்காக ஆங் சான் சூ கி சென்ற போது அறிவிக்காமலேயே பத்தாயிரம்
பேர் கூடினர். அங்கிருந்து ‘கச்சின்' எனும்
மாநிலத்துக்குத் செல்ல முற்பட்டபோது 300 பேர் கொண்ட கும்பல் அவர் கார் மீது
தாக்குதல் நடத்தியது. செல்லும் இடமெல்லாம் அவருக்காகத் திரளும் கூட்டத்தைக் கண்டு
அஞ்சிய பர்மிய அரசு மீண்டும் 2003 மே 31ம் தேதி அவரைக் கைது செய்த கையோடு
ரங்கூனுக்கு 40 கி.மீ. தொலைவில் யாருக்கும் தெரியாமல் மறைவாக வைத்திருந்தது.
செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் மட்டும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களும் வெளியே வந்து, ‘எங்கே
இருக்கிறாரோ அங்கு நலமாகவும் வசதியாகவும் இருக்கிறார்' என்று சொன்னார்களே
தவிர எந்த இடமென்று தெரியப்படுத்த வில்லை.
அவருக்கு
ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை
சிகிச்சையும் நடந்தது என்றாலும் சிகிச்சை விபரங்கள் வெளியிடப்படவில்லை.
ஐ.நா.வின்
அப்போதைய பொதுச் செயலர் கோபி அன்னான்,
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், நோபல் பரிசு பெற்ற
பெருந்தகையினர் என்று பலரும் விடுத்த வேண்டுகோள்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு
விட்டன. அரசு அவரது விடுதலை குறித்து நீண்ட காலம் மெளனமாய் இருந்தது.
ஆற்றின்
சீற்றத்தை அணையால் தடுத்து விடலாம். ஊற்றின் பெருக்கையும் ஒரு ஒழுங்குக்குள்
கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் கடலின் சீற்றம் எவருக்கும் தெரியாமல்
அமுங்கியபடியிருக்கும். ஒருநாள் பொங்கி அனைத்தையும் அழித்து ஆட்கொண்டுவிடும்.
பர்மிய மக்களின் மெளனமான கண்ணின் கரிப்பு,
சூ கியின் இல்லைத்தைச் சூழ்ந்து பெருகியபடியே இருந்தது.
அமெரிக்க
அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாரா புஷ்,
கட்சிப் பாகுபாடு பார்க்காமல்,
அமெரிக்க செனட்டின் அத்தனை பெண் செனட்டர்களையும் ஒன்றுசேர்த்துக் கொண்டு ஐ.நா.
பொதுச்செயலாளருக்கு சூ கியின் சமீபத்திய சிறைவாச நீட்டிப்பைத் தடை செய்யக் கோரி
கடுமையான கடிதமொன்றை எழுதினார்.
‘மியான்மர்
நாட்டின் தோழிகளுக்கு எங்களது ஆதரவு என்றும் உண்டு' என்றும் சொல்லியிருக்கிறார். இதை அடுத்து உலக நாடுகளின்
பார்வையில் விழுந்த ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டிய நெருக்கடிக்கும்,கட்டாயத்திற்கும்
உள்ளான ராணுவ அரசு கடந்த 2010ம் ஆண்டு அவரை விடுதலை செய்தது. ஆங் சான் சூகி
விடுதலையான போது அவருக்கு வயது 65.
2011-ம்
ஆண்டு முதல் ராணுவ ஆதரவு பெற்ற ஐக்கிய ஒருமைப்பாடு மற்றும் மேம்பாட்டுக் கட்சி
(யுஎஸ்டிபி) ஆட்சி நடத்தி வந்தது. ஆகையினால் சூ கி விடுதலை ஆனாலும் கூட
சுதந்திரக்காற்றை மியான்மர் அனுபவிக்க முடியவில்லை. தொடர்ச்சியான சூகியின் மக்கள்
சந்திப்பு, போராட்டங்கள், சர்வதேச நாடுகளின்
அழுத்தங்கள் காரணமாக மியான்மரில் பொதுத் தேர்தல் மீண்டும் 2015 ஆம் ஆண்டு
அறிவிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
பொதுத்தேர்தலில், ஆங் சான்
சூ கி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது. அந்நாட்டின்
சட்டவிதிகளின்படி, வெளிநாட்டவரை
திருமணம் செய்த ஆங் சான் சூ கி அதிபராக
பதவியேற்க முடியாத நிலையில்,
அவர் தனது நம்பிக்கைக்குரிய ஹிதின் கியா-வை அதிபர் வேட்பாளராக வெற்றி
பெறவைத்தார். ஆனால், வெளிநாட்டவரை
திருமணம் செய்துகொண்டவர், நாட்டின்
அமைச்சராக செயலாற்ற குறிப்பிடும்படியான தடை ஏதுமில்லை என்பதால் ஆங் சான் சூகிக்கு
மியான்மர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இணையான மாநில ஆலோசகர் பதவி
அளிக்கப்பட்டுள்ளது.
சூ கி 1990 இல் ராஃப்டோ பரிசு, சாக்கரோவ் பரிசு, மற்றும் நோபல்
பரிசு (1991) ஆகியவற்றைப் பெற்றார். ஐரோப்பிய யூனியன் அமைப்பின் சார்பில்
வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான சக்காரோவ் விருது 1990ம் ஆண்டு ஆங் சான் சூ கீக்கு
வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும்,
அக்காலகட்டத்தில் இவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததால் அதை பெற
இயலவில்லை. சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு அவ்விருதினை 2013இல் ஆங் சான் சூ கீ
பெற்றுக் கொண்டார். 1992 இல் இந்திய அரசின் சவகர்லால் நேரு அமைதிப் பரிசைப்
பெற்றார். 2007 இல் கனடா அரசு இவரை அந்நாட்டின் பெருமைய குடிமகளாக அறிவித்தது இப்படி அறிவிக்கப்பெற்றுப் பெருமை பெற்றவர்கள்
ஐவரே.
இளம்பருவத்தில் தனது சகோதரர்களுடன் சூகி ஏரி ஒன்றில் குளிக்கச்
சென்ற போது அவரது சகோதரர் ஒருவர் ஏரியில் மூழ்குவதை பார்த்து, அவரது தலை
முடியைப் பிடித்து இழுத்து வெளியே காப்பாற்றினாராம். அப்பொழுது அவருக்கு வயது ஆறுதானாம். அப்படியான துணிச்சலும், மன உறுதியும்
கொண்ட சூ கி தனது தேசம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாமல் திணறிய போது தன்
வாழ்வின் பெரும் பகுதியை தியாகம் செய்து இன்று ஜனநாயகம் மலர காரணமாக இருந்ததில்
வியப்பில்லைதானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>