திங்கள், 27 ஜூன், 2022

 

கிழக்கு வாசல் இதழில் பிரசுரமான கட்டுரை 


சர்ச்சைகளின் பேரரசி

               


வின்னி மண்டேலா

     ஒரு புரட்சியாளனின் மனைவி, கணவன் உயிருடன் இருக்கும்போதே விதவையாகத் தான் வாழ வேண்டியிருக்கிறது” - நெல்சன் மண்டேலா

அவரது துணிச்சல் அசாத்தியமானது. அவரைச் சுட்டு சாம்பலாக்க சுற்றி வளைக்கும் நெருப்பிலிருந்து அனாயசமாக வெளிவரும் ஆற்றல் அவருக்கு மட்டுமே இருந்ததுஎன்ற டோரத்தி நியாம்பேயின் உணர்ச்சி மிக்க மதிப்பீடு திருமதி நோம்சாமோ நோபண்ட்லா வின்னிஃப்ரட் மடிகீஸெலா பற்றியது.

     வின்னி மண்டேலாஎன்று உலக மக்களாலும் தேசத்தின் அன்னைஎன்று தென் ஆப்ரிக்க மக்களாலும் நெகிழ்ச்சியுடன் அழைக்கப்பட்ட வின்னி, செப்டம்பர் 26, 1936ல் ட்ரான்ஸ்கீ-ல் உள்ள பிஸானாவில் பிறந்தார்.

     வெள்ளையர்களின் அடக்குமுறை மற்றும் நசுக்குதலுக்குட்பட்ட தென் ஆப்ரிக்காவின் இருண்ட காலத்திலும் கல்வி மற்றும் செல்வச்செழிப்பில் உச்சத்தில் இருந்த குடும்பத்தில் எட்டுக் குழந்தைகளில் நான்காவதாக வின்னி பிறந்தார். அவரது தாய் நோமதான்கா மேஸைடுமே மடிகீஸெலா  அறிவியல் ஆசிரியராகவும், தந்தை கொலம்பஸ், ட்ரான்ஸ்கீ அரசாங்கத்தின் விவசாயம் மற்றும் வனத்துறையிலும் பணிபுரிந்தனர். ஆப்பிரிக்காவின் பழ்ஹங்குடியினர் மொழியான சோஸாஎன்னும் மொழியினைப்பேசும் போந்தோ தேசிய இனத்தை சேர்ந்தவர் வின்னி. அவரின் தாய், தந்தை இருவரும் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவர்கள் என்பதால் அவர்கள் இருவருமே இளம் வயதில் ஆங்கிலக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளில் படித்தவர்கள். குறிப்பாக வின்னியின் தந்தை போந்தொ இனத்தவர்களுக்கான சட்ட விதிகளை வரையறுக்கும் கிழக்கு போந்தோலாந்து சபையின் முக்கிய உறுப்பினராக பிற்காலத்தில் பொறுப்பு வகித்தவர். ஆகவே சிறுவயதிலேயே வின்னிக்கு உயர்தரமான கல்வி வாய்ப்புகளும், பொருளாதார ரீதியான ஆதரவும் கிடைத்தன. 

     எட்டு வயதிலேயே தன் தாயை இழந்த வின்னி, தன் பள்ளி வாழ்க்கையை பிஸானாவிலும், ஷாபெரியிலும் முடித்தார். பின், சமூகப் பணியில் டிப்ளமாவை ஜோஹன்ஸ்னர்ஸ்பர்க்கிலும் அரசியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை விட்வாடர்ஸ்டாண்ட் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். அவர்களது குடும்பம் அன்றைய சூழலில் பிற கறுப்பினக் குடும்பங்களை விட வலிமை மிக்கதாய் இருந்ததால், அதுவரை அன்றிருந்த கறுப்பின மக்கள் எதிர்கொண்ட சமூக அநீதிகளைப் பற்றி அவர் அறியாதவராகவே இருந்தார்.

     அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் ஸ்காலர்ஷிப் நிதி உதவி கிடைத்ததன் மூலம் அவர் மருத்துவம் சார்ந்த பயிற்சியினைப் பெற முடிந்தது. பரக்வநேத் மருத்துவமனையில் மருத்துவ சமூகப் பணியாளராகச் சேர்ந்தார். (அந்தப் பணியில் சேரும் முதல் கறுப்பினத்தவர் இவர்தான்.) அதன் பிறகுதான் நோயுற்ற கறுப்பின மக்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை மருத்துவ சிகிச்சை காரணமாக அதிகரிக்கும் அவர்களது மரண எண்ணிக்கையின் மூலம் வெள்ளையர்களின் மனிதாபிமானமற்ற அடக்குமுறையையும் புறக்கணிப்பையும் வின்னியால் உணர முடிந்தது.

     அதே கால கட்டத்தில் தான் நெல்சன் மண்டேலா ஆப்ரிக்க காங்கிரசின் (ANC) குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தலைமறைவு, சிறைவாழ்க்கை, இயக்கத்தின் போராட்டங்களில் முன்நிற்பது என்கிற நெல்சனின் ஓய்வற்ற போர்க்குணம் நிறைந்த வாழ்க்கை காரணமாக அவரது முதல் மனைவி ஈவ்லின் உடனான மணவாழ்க்கை முறிந்திருந்தது.

வின்னி- நெல்சனின் முதல் சந்திப்பு:

ஒருசமயம், நெல்சன் தன் மீதான தேசத்துரோக வழக்கு தொடர்பாக அவரது நண்பர் வழக்கறிஞர் ஆலிவர் டாம்பூவைச் சந்திக்க சென்றபோதுதான் வின்னியின் அறிமுகம் கிடைத்தது. வின்னியின் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கிய நெல்சன், பின்னர் அவரை சந்திக்க உருவாக்கிய சூழல்கள் காதல்ரசம் ததும்புபவை.

     மண்டேலாவை மணக்கப்போவதாக வின்னி தன் தந்தையிடம் அனுமதி கேட்டபோது, “நீ ஒரு உடும்பைப் பிடிக்கப் போகிறாய். இனி அது இழுக்கிற இழுப்புக்குத் தான் நீ ஓட வேண்டும்என்று கேலியாகச் சொன்னாராம். என்றாலும், வின்னி அதனைப் பொருட்படுத்தவேயில்லை.

     நெல்சனை மணப்பது என்பது எமது மக்களின் போராட்டத்தை, அவர்களின் விடுதலையை மணப்பது போன்றதுஎன்றார். 1958 ஜுன் 19ல் நெல்சன்- வின்னி திருமணம் நடந்தது. திருமணம்  முடிந்ததும் எனது இந்தப் புதிய வாழ்க்கைப் பாதையில் வலிகளையும் வேதனைகளையும் எதிர்பார்த்தே அடியெடுத்துவைத்திருக்கிறேன்என்று தன் கணவரின் தோளில் தலை சாய்த்தபடி, நண்பர்களிடம் கூறினாராம் வின்னி

     அநீதிக்கு எதிராக வின்னி:

அனுமதிச் சீட்டு இல்லாமல் வெளியே செல்லும் பெண்களுக்கு 10 ஸ்டெர்லிங் அபராதம் அல்லது ஒரு மாதம் சிறை தண்டனை என்ற அநீதியான சட்டம் அப்போதைய தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசால் கடுமையாக அமல் செய்யப்பட்டது. திருமணம் நடந்த சில நாட்களிலேயே அந்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்லண்டோவில் நடந்த போராட்டத்தில் ஆப்ரிக்க தேசியக் காங்கிரசின் பெண்கள் பிரிவு (ANCWL) சார்பாகக் கலந்து கொண்டு சிறை சென்றார் வின்னி.

செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவராயிற்றே சிறை வாசம் அவரை மிகவும் துன்புறுத்தி விடுமோ அதனை அவர் தாங்கமாட்டாரே என நினைத்து, நெல்சன் அவரை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்தபோது அதை மறுத்து வின்னி சிறையிலேயே இருந்தார். அந்த போராட்டம் மற்றும் சிறைதண்டனைக் காரணமாக அவரது மருத்துவ சமூகப் பணியாளர் வேலை பறிக்கப்பட்டது. ஆனாலும், அவரது போராட்ட உணர்வை குடும்ப வாழ்க்கையோ வெள்ளை அரசின் அடக்குமுறைகளோ சற்றும் குறைக்கவில்லை.

     1962ல் ஸொவேட்டோ நகரை விட்டு நகரக் கூடாது' என்று தடை விதிக்கப் பட்டார். அதே வருடம் நெல்சனும் பிறரும் துவங்கிய தேசத்தின் ஈட்டி' (உம்காண்ட்டோ வி சிஸ்வே) எனும் அமைப்பு அரசுக்கு எதிரான போராட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்தியது. தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட நெல்சனின் அனல் பறந்த போராட்டத் திட்டங்கள் தென் ஆப்ரிக்க அரசை நிலைகுலைய வைத்தது. நெல்சனும் இன்னும் சிலரும் அதன் காரணமாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். ரிவோனியா வழக்கு' என்றழைக்கப்பட்ட அவ்வழக்கில் நெல்சனுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தென் ஆப்பிரிக்கா முழுவதும் பரவியிருந்தது. அப்போதைய இரஷ்யப் பிரதமர் பிரஷ்னேவ், ஐ.நா.வின் அமெரிக்கப் பிரதிநிதி அட்லாய் ஸ்வீன்சன், இலண்டன் பல்கலைக்கழக மாணவர்களின் அறைகூவல், ஐ.நா. சபையின் 106 நாடுகள் நிறைவேற்றிய தீர்மானம் ஆகியன தென் ஆப்ரிக்க அரசாங்கத்துக்கு நெருக்குதலை உண்டாக்கியது. இறுதியில், 1964 ஜுன் 12ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிலகாலம் பிரிட்டோரியா சிறையிலும், பின்னர் ரொபேன் தீவுச் சிறையிலும் நெல்சன் அடைக்கப்பட்டார். அவரது 27 ஆண்டு கால சிறை வாழ்வு துவங்கியது அப்போதுதான்.

தன்னந்தனியாக வின்னி:

மிகச் சிக்கலான சூழலுக்குத் தள்ளப்பட்ட வின்னி, ஒரே நேரத்தில் கணவன் அருகில் இல்லாத குடும்பத்தை தாங்கி நிற்பதும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மகளீர் பிரிவின் பொறுப்பு மிக்க தலைவியாகவும், நெல்சனின் மன உறுதிக்கு அரணாகவும் இருக்க வேண்டிய நிலை வந்தது.

     வின்னி எவரையும் சந்தித்து பேசவோ, ஒருவருக்கு மேல் இருக்கும் இடத்தில் உரையாற்றவோ தடை விதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது போன்ற சூழலை எதிர்கொண்டார். இருப்பினும்  1967ல் தடையை மீறி ஸொவேட்டோ நகரை விட்டு வெளியேறி நெல்சனை சந்திக்கச் சென்றதால் கைது செய்யப்பட்டு பின் விடுதலையானார். பின் 1969ல் அமல்படுத்தப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தின்படி,முதல் நபராக அரசாங்க எதிர்ப்பு வசனங்களை அச்சிட்டு விநியோகித்தமைக்காக  வின்னி மண்டேலா  கைது செய்யப்பட்டு, பிரிட்டோரியோ சிறையில் 18 மாதங்கள் இருந்தார்.

     மீண்டும் வெவ்வேறு வழக்குகளின் அடிப்படையில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பெண்கள் பிரிவின் செயற்குழு உறுப்பினர்களாக இருந்த புகழ்பெற்ற லில்லியன் நிகோயி, ஃபிளாரன்ஸ் மடோமேலா, பிரான்ஸஸ் பார்ட் ஆகியோருடனும் தன் நெருங்கிய தோழி டோரத்தி நியாம்பேயுடனும் 1975 செப்டம்பர் வரை க்ரூன்ஸ்டாட் சிறையிலிருந்தார்.

     சிறைபுகுவதும், வெளிவருவதும், போராடுவதும் பின் சிறைபுகுவதுமான அவரது போராட்ட வாழ்க்கையில் சற்றும் தளர்வில்லை. 1976ல் 6 மாத சிறை தண்டனை பெற்று ஃபோர்ட் சிறைச்சாலையில் கைதி எண் 4 என்றழைக்கப்பட்டு அடைக்கப்பட்டார். (ரோபோன் தீவு சிறையில் இருந்த நெல்சனின் எண் 466/64) அங்கிருந்து 1977ல் விடுவிக்கப்பட்ட போது ஸொவேட்டோ நகருக்குச் செல்லத் தடை விதித்து, அவரை பிராண்ட்ஃபோர்ட் நகருக்குச் செல்லுமாறு பணித்தது. 9 ஆண்டுகள் அவர் அங்கு வாழ்ந்தாலும், இடையிடையே தடையை மீறி ஸொவேட்டோவுக்கு செல்வதும், அதன் காரணமாக கைது செய்யப்படுவதும் நிகழ்ந்து கொண்டே இருந்தது. இரண்டு முறை அவர் வசித்த வீடு வெடிகுண்டு வீச்சால் தகர்ந்தது. ஆனால் எவர் மீதும் அக்குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆக இதுவும் கூட அரசின் மறைமுக தூண்டுதலாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

      தென் ஆப்ரிக்க மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை நியாயங்களை உணர்ந்து அவற்றை ஆதரிக்கும் விதமாக  இந்திய அரசு உலக அமைதிக்காக நெல்சன் மண்டேலா ஆற்றிய அரும்பணியைப் பாராட்டி அவருக்கு "நேரு சமாதான விருது" வழங்கியது. ஆனால் அச்சமயம் அவர் சிறையில் இருந்த காரணத்தினால் அவரது சார்பில் அவருடைய மனைவி வின்னி மண்டேலா டெல்லிக்கு வந்து அந்த விருதினை ஏற்றுக்கொண்டார்

     உறவினர்கள் மற்றும் அரசியல் தாண்டிய நண்பர்கள் வின்னியிடமிருந்து விலகியே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் அச்சத்தையும் அன்றைய ஆங்கிலேய அரசு ஏற்படுத்தியது. இப்படியான சூழலில் தன் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்தபடியே, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் மற்றும் அவ்வப்போது அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்பது என வின்னியின் வாழ்க்கை முட்கள் நிறைந்த காலம் அது. நெல்சன் மண்டேலா 1990 பிப்ரவரி 10 ல் விடுதலை செய்யப்படும் வரை வின்னியின் பணிகள் தென் ஆப்ரிக்க வரலாற்றில் புறக்கணிக்க முடியாதவை.

     இப்படியான அவரது போராட்ட உணர்வுகள், தேசத்துக்காக தன் சொந்த வாழ்க்கையின் பெரும் பகுதியை தியாகம் செய்த காரணங்களுக்காகத்தான் வேல்ஸ் நாட்டின் ஐல்வின்பரோவின் குடி உரிமை நெல்சன் மண்டேலாவுக்கும், வின்னி மண்டேலாவுக்கும் சேர்த்தே வழங்கப்பட்டது. மலேசியாவின் சர்வதேச ஆய்வுக் குழுவினர் அமைப்பு மூன்றாம் உலகப் பரிசை நெல்சன் மற்றும் வின்னி மண்டேலாவுக்கும் இணைந்து வழங்கியது.

     வாழ்நாள் முழுவதும் அடக்குமுறைகளுக்கும், அவர் மீதான தடைகளுக்கும் எதிராக மட்டுமல்லாமல், சர்ச்சைகளுக்கும் எதிராக அவரது போராட்டம் தொடர்ந்தபடியே இருந்தன.

சர்ச்சைகளில் வின்னி:

ஊடகங்களின் தீராப் பசிக்கு வின்னியின் பிற்காலத்திய செயல்பாடுகள் இரையாயின. அவரது மகளை அரச குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு மணம் முடித்ததன் மூலம் இளவரசி' அந்தஸ்தை பெற்ற நாளிலிருந்து அவர் மீதான சர்ச்சைகளின் படலம் துவங்கியது. சிறையிலிருந்த நெல்சனும் அனுமதி பெற்று மகளின் திருமணத்தில் கலந்து கொண்டார். ஆனால், இளவரசி அந்தஸ்தைப் பெற்றதன் நோக்கமே நெல்சனை சிறையில் அடிக்கடி சந்திக்க வேண்டுமென்பதே. அப்போதைய சட்டப்படி அரச குடும்பத்தினர் மட்டும் சிறைக் கைதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் சந்திக்கலாம்.

     மண்டேலாவின் பெயரால் வின்னி துவங்கிய கால்பந்து அணி பெரும்பாலும் மைதானத்தைத் தவிர நாட்டின் பிற இடங்களில் விளையாடியது சர்ச்சைக்குள்ளானது. அவரது பாதுகாப்பைக் காரணம் காட்டியும், அவரை எதிர்ப்பவர்களை அடக்குவதுமாக சொல்லியும் கொடூரமான தாக்குதல்களுக்குப் பலர் உள்ளாயினர்.

     நெக்லஸிங்' எனப்படும் கழுத்தில் டயரை இறுக்கிக் கொளுத்திவிடும் அராஜகங்களை அவர்கள் நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஸ்டோம்பிவெய்பேய்'  எனும் 14 வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பிரச்சினை பற்றி எரிந்தது. வின்னி மீதான வெவ்வேறு 18 வழக்குகள் (கொலை மற்றும் ஆள் கடத்தல்) குறித்த பூர்வாங்க விசாரணை நவம்பர் 1997ல் வந்தது. அதற்கான தீர்ப்பு வருவதற்குள் அவர் மீதான வழக்குகளின் எண்ணிக்கையும் கூடியது. ஒட்டுமொத்தமாக 43 மோசடி வழக்குகளும், 25 கிரிமினல் மற்றும் திருட்டு வழக்குகளும் பதியப்பட்டன.

     ஆனால், எல்லா வழக்குகளிலும் நீதிமன்றத்தால் எச்சரிக்கை, அபராதம் என்கிற அளவில் விடுவிக்கப்பட்டார். தீர்ப்பில் கூட அந்தக் குற்றங்களை அவர் தம் சுயலாபம் கருதி செய்யவில்லை. இயக்கம் மற்றும் நாட்டுக்காக மட்டுமே அவற்றைச் செய்தார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது ஆதரவாளர்கள் இந்த வழக்குகள் அனைத்தும் அன்றைய போதா அரசின் சூழ்ச்சி என்றும், வின்னிக்கும் நெல்சனுக்கும் இடையே இடைவெளியை அதிகரிக்கவே இவற்றை ஜோடித்தார்கள் என்றும் வாதிட்டனர்.

     நெல்சன் மண்டேலாவுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்திய இந்த சம்பவங்களின் போதும், அவர் வின்னியை விட்டு விலகவில்லை. வின்னி மீதான அன்பும், அவரது போராட்டப் பணிகளும் சேர்ந்து வின்னியை இச்சூழலில் கைவிட விரும்பவில்லை. வின்னி நீதிமன்றத்தில் அவ்வழக்கில் சிறிய அபராதத்துடன் விடுவிக்கப் பட்டார்.

     என்றாலும், வின்னிக்கு நெல்சனுடனான மன வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே போனது. முடிவில் மணவாழ்வு முறிந்து போனது. மணவிலக்கு பெற்றாலும் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்தாத நெல்சனின் உரையை இங்கு காணலாம்.

இந்த நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் ஒரு சிக்கலான கட்டத்தில் நானும் வின்னியும் திருமணம் செய்து கொண்டோம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாலும், நிறவெறியை எதிர்த்துப் போராடியதாலும் நாங்கள் இருவரும் இயல்பான திருமண வாழ்க்கையை மேற்கொள்ள முடியவில்லை. நான் ரொபேன் தீவில் அடைபட்டுக் கிடந்த 20 ஆண்டுகளிலும், குடும்பத்திற்கு வின்னிதான் தூணாக இருந்து காத்தார். அரசு அவர் மீது ஏவிய அடக்குமுறைகளை துணிச்சலோடு எதிர்த்தார். சுதந்திரப் போராட்டப் பாதையிலிருந்து சிறிதும் நழுவவில்லை. வின்னியின் மீதான அன்பும் மரியாதையும் கிஞ்சித்தும் குறையவில்லை. இருந்தாலும், பல பிரச்சினைகள் குறித்து அண்மைக் காலத்தில் எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதால் மனரீதியாக இருவரும் விலகியே இருப்பதே நல்லதென்று முடிவெடுத்திருக்கிறோம்.

     மண்டேலாவின் இந்த அறிவிப்போடு வின்னியின் அரசியல் வாழ்வு முடிந்து போனது என்ற எல்லோரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி மீண்டும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மகளீர் பிரிவில் தலைவியானார். பலவீனங்களிலிருந்து மீண்டெழும் பலம் வின்னிக்கு இயல்பாகவே இருந்தது.

     நெல்சன் மண்டேலாவின் முழுப்பெயர் ரோலிஹல்லா மண்டேலா' (மண்டேலா என்பது அவரது தாத்தாவின் பெயர்) ரோலிஹல்லா என்பதற்கு ஆப்ரிக்காவின் சோஸா மொழியின் கிராமப்புற வழக்கில் தொல்லை தருபவர்' என்று பொருள். நிறவெறி அரசாங்கத்திற்கெதிரான அவரது உக்கிரமான போராட்டங்களை நோக்கும்போது அவரது பெயர் மிகப் பொருத்தமானதாகவே இருக்கிறது.

     அதைப்போலவே நோம்சாமோ வின்னி' எனும் பெயரில் நோம்சாமோ' என்பதற்கு முயற்சிப்பவர்' அல்லது தொல்லைகளை சமாளிப்பவர்' என்று பொருள். உண்மையாகவே தனக்கு வந்த தொல்லைகளை வின்னி ஏறி மிதித்து மீண்டு வந்தார்.

     மிக விசித்திரமான இவர்களது பெயர் ஒற்றுமை, போராட்ட குணத்தின் ஒற்றுமை, தலைமைப் பண்பின் ஒற்றுமை இவைகள் தான் தென் ஆப்ரிக்கா இன்று சுவாசிக்கும் சுதந்திரக் காற்றுக்கு மூலகாரணம். என்பதை யாராலும் மறுக்க முடியாது.

      தென் ஆப்ரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் உயர்மட்ட செயற்குழு உறுப்பினராகவும் செயலாற்றும் வின்னி சர்ச்சைகளின் பேரரசி'யாகவே கருதப்படுகிறார்.

                -----------------

 

     பெட்டிச் செய்தி

          வின்னி மண்டேலாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து வின்னி மண்டேலா' என்கிற திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியானது. ஜெனிஃபர் ஹட்ஸன் என்னும் அமெரிக்க நடிகைதான் வின்னியாக நடித்தார். ஆனால் வின்னி மண்டேலா இந்த படத்தை உருவாக்கியவர்கள் என்னிடம் ஒரு வார்த்தை கூட கலந்தாலோசிக்கவே இல்லை. நான் என்னைப்போல் நடித்த ஜெனிஃபரை எதிர்க்கவில்லை ஆனால் ஒட்டுமொத்த திரைப்படத்துக்கும் எதிரானவளாக இருக்கிறேன். அதுவும் சில மொழிகளில் இது மொழிமாற்ரம் செய்யப்பட்டபோது வின்னியின் காதல் நினைவுகள் என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டதாக அறிகிறேன். இது முற்றிலும் என் போராட்ட வாழ்வை அவமதிப்பதாகும்என வருத்ததோடு குறிப்பிட்டார். திரை விமர்சகர்கள் கூட ஒரு புனிதரின் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பது போல துவங்குகிற இப்படம் கடைசியில் ஒரு நரகத்தின் துயரத்தோடு முடிவுற்றது எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...