திருப்புமுனை இதழில் பிரசுரமான கட்டுரை
தரை இறங்காத தங்கப்பறவை
கல்பனா சாவ்லா
ஜனவரி 31, 2003
அடுத்த நாள் அவர்களுக்கு மிக முக்கியமான நாள். 16 நாட்கள் மிதந்து, சுழன்ற அவர்கள் தரையிலிறங்கப் போகிறார்கள். பொதுவாக தரையிலிருப்பவர்களுக்கு
‘உயரப் பறத்தல்' என்பதுதான் பெருங்கனவாக இருக்கும். ஆனால், அவர்களுக்கு அப்படி இல்லை. ஒரு சாதாரணனைப் போல் புழுதி படியப் படிய வெறுங்காலுடன் தரையில் நடக்கப் பிரியப்பட்டார்கள்.
தங்களது ஆய்வு முடிவுகளை சரிபார்த்து தொகுத்தனர்.
ஒன்றுக்கும் உதவாத, தேவையற்ற சிறுபொருட்களை வெளியேற்ற முயன்றனர்.
தங்களது சுற்றுப் பாதையில் சதுர வடிவில் சுழன்று சுழன்று இறங்கத் தலைப்பட்டது
‘கொலம்பியா'
என்று பெயரிடப்பட்ட STS- 107 விமானம்.
ஏழு பேர் கொண்ட அந்தக் குழு, தங்களுக்குள் சிவப்பு அணி, நீல அணி என்று இரண்டாகப் பிரிந்து கொண்டனர். ஒரு அணி பணியிலிருக்கும் போது மற்றொரு அணி ஓய்விலிருந்தது.
பிப்ரவர் 1, 2003
நீல அணி பணி செய்து ஓய்விலிருந்த சிவப்பு அணியை புகழ்பெற்ற BLACK WATER இசைத் தொகுப்பிலிருந்த Scotland the
brare பாடலை ஒலிபரப்பி எழுப்பினர்.
மணிக்குப் 12,000 மைல் வேகத்தில் 2,00,000 அடி உயரத்தில் ‘கொலம்பியா' தரையிறங்கிக் கொண்டிருந்தது.
குழுவின் தலைவர் ரீக் ஹஸ்பெண்ட், தரைக் கட்டுப் பாட்டு நிலையத்திலிருந்து வந்த ஒரு அழைப்பினை ஏற்று பேசிக் கொண்டிருக்கிறார்.
மெல்ல அவர் குரல் தேய்ந்து பின் தொடர்ந்து பறந்து போகிறது. சிறிது நேரம் கொலம்பியா கட்டுப்பாட்டுநிலையக் கண்காணிப்பு வளையத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறி, தவறி விட்டது. சில நொடிகளில் ஒரு நெருப்புக் கோளம் வானில் தெரிகிறது. துண்டுதுண்டாக சிதறித் தரையெங்கும் பரவி விழுந்தது ‘கொலம்பியா'. விண்கலத்திலிருந்த ஏழு பேரில் இந்தியாவின் முதல் விண்வெளிப் பெண் கல்பனா சாவ்லாவும் ஒருவர்.
கல்பனா சாவ்லா இன்றைய ஹரியானா மாநிலத்தில் கர்நூல் என்னுமிடத்தில் பிறந்தார். ‘கல்பனா' என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘கற்பனையின் பிம்பம்'
என்று பொருள். பெயருக்கேற்றாற்போல் தன் கற்பனையின் செயல்வடிவமாக தன்னை வனைந்து கொண்டவர் கல்பனா சாவ்லா.
கர்நூலிலுள்ள தாகூர் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்த கல்பனா, சண்டிகரில் உள்ள பொறியியல் கல்லூரியில் வானியல் தொழில்நுட்ப பொறியியல் படித்தார்.
இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாட்டா அப்பொழுது தனக்கு சொந்தமாக விமானம் வைத்திருந்தவர்.
அவர் அடிக்கடி விமானத்தில் பறப்பதைக் கண்ட கல்பனா, தானும் ஒரு நாள் பறவையைப் போல் பறக்க வேண்டுமென பேராவல் கொண்டார்.
பொறியியல் படிப்பை முடித்த கல்பனா, அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வானியல் தொழில்நுட்ப பொறியியலில் எம்.எஸ். டிகிரி முடித்தவர்.
ஓய்வெடுக்காமல் எம்.எஸ். இயந்திரவியலையும் படித்தார்.
1988ல் நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். விமானம் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டு, ‘டாக்டர்' பட்டம் பெற்றார். விமானம் ஓட்டுவதற்குரிய பயிற்சிகளைப் பெற்றார். அப்பொழுது பயிற்சியாளராகயிருந்த ழின் பியர்ரே ஹாரிசன் என்பவரோடு ஏற்பட்ட நட்பு காதலாகி, திருமணத்தில் முடிந்தது.
1995ல் விண்வெளிப் பயணத்தில் பங்கேற்க தகுதியாக்கும் பயிற்சியில் சேர்ந்தார்.
கடுமையான சோதனைகளும், பயிற்சிகளும் கொண்ட அந்த காலகட்டத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுத் தேர்ந்தார்.
1996ல் முதல் விண்வெளிப் பயணத்துக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.
விண்வெளியில் பழுதடைந்த ‘ஸ்பார்டன்' எனும் அமெரிக்க செயற்கைக்கோளை மீண்டும் இயக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, STS-87 என்ற விண்கலத்தை அனுப்ப நாசா முடிவு செய்தது.
STS
விண்கலத்தில் வின்ஸ்டன் ஸ்காட் தலைமையில் ஆறு பேர் பயணிக்கத் தேர்வாயினர். அதில் கல்பனா சாவ்லாவும் ஒருவர். விண்வெளியில் வின்ஸ்டன் ஸ்காட்டரும்,
தாகோவோ டோய்-ம் நடந்து சென்று ‘ஸ்பார்டன்' செயற்கைகோளின் பழுதை நீக்கும் வரையிலும் கல்பனா சாவ்லாதான் மிகத் திறமையாக அவர்களின் துணையாக செயல்பட்டார். வெற்றிகரமான அந்தப் பணி முடிந்து தரையிறங்கிய பின், கல்பனாவின் அறிவார்ந்த பணிக்காக சக விண்வெளி வீரர்களே அவருக்கு விருந்து அளித்துப் பாராட்டினர்.
2000ம் ஆண்டில் STS-107 எனும் விண்கலத்தை அனுப்ப நாசா முடிவு செய்து ரிக் ஹஸ்பெண்ட்,
வில்லி மெக்கல், மைக் ஆண்டர்சன்,
டவ் பிரெளன், லாரல் க்ளெர்க், இலன் ராமோன் ஆகிய ஆறு பேருடன் கல்பனா சாவ்லாவும் தேர்வு செய்யப் பட்டார். கொலம்பியா என்று பெயரிடப்பட்ட அந்த விண்கலம் பல முறை பறப்பதற்கான நாள் குறிக்கப்பட்டு,
பின்னர் வெவ்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் கைவிடப்பட்டது.
ஒருவழியாக,எல்லாக் கோளாறுகளும் சரிசெய்யப்பட்டு விண்ணில் 2003, ஜனவரி 16ம் தேதி தனது பயணத்தைத் துவங்கியது.
16 நாட்கள் விண்வெளியில் சுழன்று, விண்வெளி தொழில்நுட்ப மேம்பாடு குறித்தும், விண்வெளி வீரர்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் 80 ஆய்வுகளை மேற்கொண்டது அந்தக் குழு. நாசாவின் தரைதளத்தில் திட்டமிட்டபடி ஒவ்வொரு மணித்துளியையும் கழித்த அந்தக் குழுவினர், இறுதியாக பிப்ரவரி 1ம் தேதி தரையிறங்க முற்பட்டபோது எதிர்பாராமல் வெடித்துச் சிதறியது கொலம்பியா. நாசாவின் 42 கால விண்வெளிப் பயண வரலாற்றில் மனிதர்களோடு அனுப்பப்பட்டு விபத்துக்குள்ளான முதல் விண்கலம் கொலம்பியா தான்.
கல்பனாவின் வருகையை அமெரிக்கா மட்டுமல்ல. இந்தியாவும் ஊருக்குத் திரும்பும் குழந்தையை எதிர்நோக்கும் தாயைப்போல வழிநோக்கிக் காத்திருந்தது.
ஆனால் ஒரு எரிநட்சத்திரம் விழுவது போல் விழுந்து உதிர்ந்தார் கல்பனா. அவரது சாம்பல் அனைக்க முடியாத பிணைப்போடு மண்ணில் கலந்தது... அவரது கனவுகளோடு.
கல்பனா ஒரு இசைப்பிரியை.
துயரமான அவரது மரணத்தினால் பாதிக்கப்பட்ட ‘ஸ்டீவ் மோர்ஸ்'
எனும் இசைக்கலைஞர் வெளியிட்ட ‘BANANA'
என்ற இசைத் தொகுப்பில் ‘Contact Cost'
எனும் பாடலை கல்பனாவுக்காக இசைத்துள்ளார்.
நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு கல்பனா சாவ்லாவின் பெயர் அவர் நினைவாக சூட்டப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் ஏழு சிகரங்கள் கொண்ட ஒரு மலைத் தொடருக்கு
‘கொலம்பியா ஹில்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டு, ஒவ்வொரு சிகரத்துக்கும் கொலம்பியா விண்கலத்தில் பயணித்த ஏழு பேரின் பெயர் சூட்டி பெருமைப்படுத்தியுள்ளனர்.
டெக்ஸாஸில் கல்பனா பயின்ற கல்லூரியின் மாணவர் விடுதி ‘கல்பனா சாவ்லா ஹோம்' என்றழைக்கப்படுகிறது. சண்டிகரில் அவர் பயின்ற கல்லூரியில் வானியல் தொழில்நுட்பப் பொறியியலில் முதலிடம் பெறும் மாணவ மாணவியருக்கு கல்பனா சாவ்லா விருதும், ரூ.20,000
ரொக்கமும் அளிக்கப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வுக் குழுமம் (ISRO)விண்ணில் செலுத்திய விண்கலத்துக்கு
‘கல்பனா
- 1' என்று பெயரிட்டது. நாசா விண்வெளி ஆய்வு மையம் வெவ்வேறு மூன்று விருதுகளை கல்பனா சாவ்லாவுக்கு வழங்கியது.
நாசாவில் வெளியாகும் தனிநபர் வாழ்க்கைக் குறிப்புப் பதிவுகளில் கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலம்பியா விண்கலம் விழுந்த பிறகு நாசா ஆய்வுக்குழு ஒன்று அதற்கான காரணங்களைத் தேடிப் பிரயாணித்தது.
டெக்ஸாஸிற்கும் நெவதா நகரத்திற்கும் இடையில் சிதறிய அதன் பல பாகங்கள் கிடைத்தன.
‘மோடல்'
என்ற இடத்தில் கிடைத்த Flash Memory
Cord அதில் அதிமுக்கியமானது. லாங்டன் என்பவர் தலைமையில் இயங்கிய அந்தக் குழு அந்த ‘நினைவுத் தகட்டை' பல நாட்கள் ஆய்வு செய்து, அதனுள் இருந்த தகவல்களை தரவிறக்கம் செய்தது. ஆய்வுக் குழுவின் தலைவர் லாங்டன், ஒரு காலத்தில் கல்பனா சாவ்லாவுடன் பணி செய்தவர். கொலம்பியா விண்கலத்தில் பயணித்த ஆய்வுக் குழுவினர் விண்ணில் மேற்கொண்ட ஆய்வுகளில் சில லாங்டனின் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் லாங்டனுக்கு இந்த மீட்புப் பணியில் கூடுதல் ஆர்வமிருந்தது.
அந்த நினைவுத் தகட்டில் கல்பனா சாவ்லா பதிந்த முக்கியமான ஆய்வுக் குறிப்பு ஒன்று, நில அதிர்வுகள் அதிகம் ஏற்படும் பிரதேசங்களில் கட்டப்படும் வீடுகள் எந்த அளவு அதிர்வுகளிலிருந்து பாதுகாப்பாக வடிவமைக்கப்பட வேண்டும் என்பதற்கு போதுமான ஆலோசனைகளை தருவதாக அமைந்திருந்தது என்று லாங்டன் குறிப்பிட்டுள்ளார்.
‘மாண்டு தீதீ' என்று அவர் பிறந்து வளர்ந்த ஊரிலும் ‘கே.சி' (K.C.) என்று நாசாவிலும் அன்பாக அழைக்கப்பட்ட கல்பனா சாவ்லா ஒரு விண்வெளிப் பயணி மட்டுமல்ல...
ஒரு கனவின் அடையாளம்; ஒரு கற்பனையின் பிம்பம்.
நம்மால் கைவிடப்பட்ட கனவுகளும் கற்பனைகளும் ஏராளம். பள்ளிப் பருவத்தில் நமக்குள் தோன்றும் கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் நம்மால் உருவம் கொடுக்கவோ நனவாக்கவோ முடிந்ததேயில்லை.
அவை சிறுபிள்ளைத்தனமானவை என நாமே அவற்றைச் சிதைத்திருக்கிறோம்.
கல்பனா இன்னும் மரணமடையவில்லை.
அவள் ஒரு நட்சத்திரம் போல் வானில் ஜொலித்துக் கொண்டேயிருக்கிறாள் என்று அவரது சகோதரர் சஞ்சய் சாவ்லா, கல்பனாவின் நினைவுக் கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டதில் ஒரு பொய்யுமில்லை. இரவின் ஏகாந்தத்தில்,
கறுத்திருக்கும் வானில் சிரித்தபடியே உற்றுநோக்கும் ஏதேனும் ஒரு நட்சத்திரம் கல்பனாசாவ்லாவை பிரதிபலித்தபடியே இருக்கிறது....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>