திங்கள், 27 ஜூன், 2022

 தாமரை இதழில் பிரசுரமான கட்டுரை 


தாயெனத் திகழும் தயாபாய்

ஒருபுறம் டிஜிட்டல் புரட்சியின் புரட்டல்களால் தேசமே கலங்கிக் கிடக்கிறது.  இன்னொரு புறம் திக்குத் தெரியாத இருட்டில் அறியாமைச் சுழலில் உழலும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் சமூகம்.

                தங்களுக்கு அருளப்பட்ட வாழ்வு தொலைந்து போனது தெரியாமல் தேட வேண்டுமென்கிற உந்துதல் இல்லாமல், பறித்தவர் எவர் என்கிற புரிதலுமில்லாமல் அன்றாடம் அவல நிமிடங்களை கடக்கும் மலையின மக்கள் பற்றி செய்திப்படங்கள், ஆவணப்படங்கள் மூலம் நாமறிந்தவை மேலோட்டமானவை.

                இயற்கையின் கரடு முரடுகளின் நசுக்குதல் போதாதென்று அதிகார வர்க்கமும், பண முதலைகளும் பிடுங்கித் தின்கின்றனர்.

                இந்தியாவின் பெரும்பான்மை பழங்குடிச் சமூகமான கோண்ட் இன மக்கள் அதிகம் வசிக்கும் மத்தியப் பிரதேச மாநில சிந்த்வாரா மாவட்டத்தில் அம்மக்களின் வாழ்வுரிமைக்காக இன்னமும் போராடிக்கொண்டிருக்கிற தயாபாய் என்கிற மெர்சி மேத்யூ மிக முக்கியமான அதே சமயம் மீடியாக்களால் அதிகம் வெளிச்சமிட்டுக் காண்பிக்கப்படாதவர்.

                மெர்சி மேத்யூ கேரள மாநிலம் கோட்டயம் அருகே பிறந்தவர். மதச் சம்பிரதாயங்கள் மீது மிகுந்த பிடிப்பும், ஓரளவு பொருளாதார வசதியும் உள்ள குடும்பம் அவருடையது. இளம் வயது முதல் தொண்டு மனப்பான்மை கொண்ட மெர்சி, வீதியோரங்களில் கிடக்கும் ஆதரவற்றோர் முதியோர், ஊனமுற்றோர், தொழுநோயாளிகள், மனச் சிதைவடைந்தவர்கள் ஆகியோருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தபடி இருந்தார். தேவைப்படும்போது அவர்களோடு சாலையோரங்களில் குடிசைகளில் தங்கிப் பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை மன நிறைவோடு ஏற்றுக் கொண்டு தன் பணிகளைத் தொடர்ந்தார்.

                நீரோட்டம் போல் நகர்ந்த அவரது வாழ்வில் மதபோதகர் என்ற போர்வையில் காமுகன் ஒருவன் அவரை சீரழித்துவிட்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள மெர்சிக்கு நீண்ட நாட்கள் பிடித்தன. இப்படியான சந்தர்ப்பங்களில் தற்கொலை அல்லது மனநிலை பிறழ்தல் இல்லையெனில் சீரழித்தவனை மன்றாடி அவனை மணாந்து கொள்வது என்பதுதான் இங்கு நிலவும் வழமையான ஒரு பழக்கமாகும். ஆனால் மெர்சி இதிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணிப்பது என்று முடிவெடுத்தார்.

                சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றபின் ஆந்திராவின் வெள்ளப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அங்கு சென்றார். மகாராஷ்டிரா மாநிலத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காகப் போராட அங்கு சில காலம் தங்கியிருந்தார். அங்கிருந்தபடி சமூகவியல் முதுகலைப் பட்டப்படிப்பிற்காக மும்பையிலுள்ள நிகேதன் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது கள ஆய்வுக்காக மகாராஷ்டிராவில் சில பின் தங்கிய பகுதிகளுக்கும், மத்தியப் பிரதேச மாநிலம் கோண்ட் இன மக்கள் அதிகம் வசிக்கும் சிந்த்வாடா மாவட்டத்திற்கும் செல்ல நேர்ந்தது. அவர்களின் அறியாமை அவர்களது அன்றாட வாழ்வைக் கேள்விக்குறியாக்கி இருளடைந்து கிடந்த சூழலைக் கண்டதும் தன் இலக்கு எதுவென அவர் புரிந்து கொண்டார். அவர்களுடனே தங்கி அவர்களது மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்பான தொண்டினை தரவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.

                சிந்த்வாடா மாவட்டத்தின் மிக புறக்கணிக்கப்பட்ட தின்சாய் எனும் மலைப்பிரதேச குக்கிராமத்தில் ஒரு எளிய குடிசையில் அவரது பணி துவங்கியது. ஆனால் அங்கிருந்த கோண்ட் இன மக்கள் அவரைத் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.

                பொதுவாக கோண்ட் இன மக்கள் கடும் உழைப்பாளிகள். வனத்துறையில் பணியாற்றிய மேலதிகாரிகளாலும், சிறிய ஒப்பந்தக்காரர்களாலும் இரக்கமின்றி அவர்கள் சுரண்டப்பட்டனர். அவர்களுக்குரிய உழைப்புக்கேற்ற ஊதியம் தரப்படவில்லை. அப்படியே தந்தாலும் அதனைக் காலம் தாழ்த்தி அதில் தங்கள் கமிஷனைக் கழித்துக் கொண்டு சொற்பத் தொகையைத் தருவது. இதன்மூலம் அவர்கள் அன்றாடச் செலவுகளுக்கு கடன்காரர்களாக்குவது.அதற்கு வட்டி, வட்டிமேல் வட்டியேற்றி அதிலிருந்து அவர்கள் மீளவே முடியாத அடிமைத்தனத்தில் விலங்குகளைப் போல் சிந்திக்கவிடாது வைத்திருந்தனர்.

                தேவையின் போது பணம் தருபவர்கள் அவர்களுக்கு தேவதூதர்களாகத் தெரிந்தனர். அவர்களின் சூழ்ச்சியான சுரண்டல்களை வெளிச்சமிட்டுக் காண்பிக்க மெர்சி முயன்ற போது அப்பகுதி மக்கள் அதனைப் புரிந்து கொள்ளவேயில்லை. புரிந்து கொண்ட ஓரிருவரும் அவரைத் தங்களோடு சேர்த்துக் கொள்வதன் பின்விளைவுகள் குறித்து அச்சம் கொண்டனர். சுரண்டல்காரர்களுக்கு எதிராக அவர்களை ஒன்று திரட்டுவதென்பது எளிதான காரியமாகத் தெரியவில்லை எனவே பிற சமூகப் போராளிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வேறு பார்வையில் அவர்களை அணுகினர். தன்னை உணர்தல், அதன்மூலம் தன் சமூகத்தின் நிலையறிதல் என்கிற நிலைப்பாட்டில் தன் அடுத்த அடியை நகர்த்தினார்.

                அவர்களின் மொழியை முதலில் கற்றார். அவர்களது கொண்டாட்டமான பொழுதுபோக்குகளில் ஒன்றான தெருக்கூத்து வடிவ நாடகங்களை உருவாக்கி அதில் தானே நடிக்கத் தொடங்கினார். கோண்ட் இன மக்கள் சேலை அணியும் பாணியில் தானும் சேலை அணியத் துவங்கினார். தனது பெயரையும் அங்கு வழக்கத்தில் அதிகம் புழங்குகிற தயாபாய் என்று மாற்றிக் கொண்டார்.

                மெல்ல அவர்கள் உணர்வுகள் வழி, ரசனையில் ஊடுருவி, தனக்கான இடத்தை அவர்கள் மனத்தில் நிரப்பினார். நாடகங்கள் மூலம், அவர்களிடையே விழிப்புணர்வுக் கருத்துக்களைப் படர விட்டார். விழிப்புறச் செய்வதன் மூலம் அவர்களின் வழியைப் புலப்படச் செய்தார். தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், சட்டங்கள் குறித்து அவர்களுக்குப் போதிக்கும் வகுப்பறைகளாக அவரது நாடகங்கள் விளங்கின. உரிய ஊதியம், குறித்த நாளில் சம்பளம் போன்ற கோரிக்கைகளைக் கொண்டு அவர்களது போராட்டம் துவங்கியது. புதைத்தும் மறைத்தும் அழுத்தியும் வைக்கப்பட்ட எது ஒன்றும் வெளிக்கிளம்பும் போது வெடித்து தான் கிளம்பும். அதன் அதிர்வுகள் அதன் மீது படர்ந்து கிடந்த வேர்களைத் தகர்த்தெறியத் துவங்கின.

                சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் கடும்போராட்டத்துக்குப் பின் அவர்களது நியாயமான கோரிக்கைகள் சாத்தியமான பிறகு தயாபாய் மீது அவர்களது அன்பான நம்பிக்கை வலுப்பெற்றது. இத்தனை நாள் அடிமைத் தனத்தை எதிர்த்து அவர்கள் வெளிப்படையான எதிர்ப்பைக் காண்பித்த பிறகு தயாபாய்க்கு எதிரான சூழ்ச்சிக் காரர்களின் குரலும் ஓங்கி ஒலிக்கத் துவங்கியது. அவர் மத மாற்றத்திற்காகத் தான் அங்கே தங்கியிருப்பதாகவும், அவரது சமூக சேவைகள் உள்நோக்கம் கொண்டவை என்றும் விமர்சிக்கப்பட்டன. இரவோடிரவாக அவர் அந்த மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு நிர்ணயிக்கப்பட்டு மிரட்டப்பட்டார். ஆனால், கோண்ட் இன மக்களின் வலுவான ஆதரவின் காரணமாக அவர்களால் அவரை வெளியேற்ற முடியவில்லை. பின்னர், ஒருகட்டத்தில் உங்களுக்குத் தேவை மத மாற்றம் தானே ஓசைப்படாமல் அதை செய்து கொள்ளுங்கள். ஏன் தொழிலாளர் சட்டம், உரிமைகள் என்று அனாவசியமாகப் பிரச்சினை செய்கிறீர்கள்? என்று அவரோடு ரகசியமாய் பேரம் நடத்திய கூத்தும் நடந்தது. ஆனால் தயாபாய் எதற்கும் தளரவில்லை.

                மத்தியப் பிரதேச மலைப்பகுதிகளில் தென்படும் டெண்டு எனும் இலைகள் பீடி சுற்றும் தொழிலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தன. கோண்ட் இனப் பெண்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் அந்த இலைகளைப் பறித்து பதப்படுத்தி வைத்திருப்பார்கள். அவர்களை மிரட்டி அவற்றை அடிமாட்டு விலைக்குப் பெற்றுக் கொண்டு தனியார் நிறுவனங்களுக்கு சிலர் விற்றுக் கொழித்தனர். தயாபாய் ஒருமுறை பறித்த இலைகளை ஊரின் நடுவே பரப்பி சுற்றிலும் பெண்களை நிற்கவைத்தார். சரியான விலை தராமல் ஒரு இலையைக் கூடத் தொடக்கூடாது என்று மறியல் செய்தார். நிறுவனங்களுக்கான இலைகள் செல்வது தடைபட்டதால், வேறு வழியின்றி முதலாளிகள் உரிய விலை நிர்ணயம் செய்தனர். இந்த வெற்றிகள் அவர்களது வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின.

                மலையினப் பகுதிகளில் பள்ளிக்கூடங்களே கட்டப்படவில்லை. கல்வியறிவை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களது சந்ததியினரின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்திட முடியும் என்ற நம்பிக்கை தயாபாய்க்கு இருந்தது. எனவே, ஒரு பள்ளியை அப்பகுதியில் உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஆனால் அவர் நினைத்தது போல் எளிதான காரியமாக இருக்கவில்லை. அதற்காக நடத்திய போராட்டத்தில் ஒருவர் மரணமுற்றார். பலர் படுகாயமடைந்தனர். ஒருவழியாக எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி ஒன்று துவங்கப்பட்டது. வழக்கமாக A for Apple என்றுதான் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் படும். ஆனால் தயாபாய் மலைப்பகுதிகளில் விளையும் பொருள்களை அடையாளப்படுத்தி மலைப்பகுதி மக்களுக்கு பாடங்களை நடத்தினார். இப்படியாக தன் அணுகுமுறைகள் அனைத்தையும் அவர்கள் வாழ்வோடும் உணர்வோடும் பிணைத்துக் கொண்டதால் தான் தயாபாய் அவர்களோடு ஒருவராய் இயல்பாக தன்னைப் பொருத்திக் கொள்ள முடிந்தது.

                பழங்குடி மக்களில் பதின்ம வயதுப் பெண்களைக் கடத்திச் சென்று மும்பை போன்ற பெரு நகரங்களில் விபச்சார விடுதிகளில் விற்பனை செய்வது என்பதை ஒரு தொழிலாகவே கொண்டு நிறைய கும்பல்கள் திரிந்தன. பெண்கள் காணாமல் போவது குறித்து தரப்படும் புகார்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்படுவதே இல்லை. காணாமல் போனவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாகவும் அல்லது கோபித்துக் கொண்டு ஓடிப்போனவர்களாகவும் சித்தரிக்கப் பட்டனர். புகாரைப் பதிவு செய்யுமாறு மன்றாடுபவர்கள் பின்னர் மிரட்டப் பட்டனர் அல்லது சிறிய தொகை தரப்பட்டு அமுக்கப் பட்டனர்.

                மாண்டியா, டிண்ட்டோனி, சியோனி, சிந்த்வாடா மாவட்டங்களில் அடிக்கடி பெண்கள் தொலைந்து போவது தொடர்கதையாக நடந்தது. சில மாதங்களுக்கு முன் சிந்த்வாடா மாவட்டத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள சின்கோட் எனும் கிராமத்தில் நீடா எனும் 16 வயது தலித் பெண் இப்படிக் கடத்தப் பட்டு விற்கப் பட்டது பற்றித் தெரிய வந்த தயாபாய் அது குறித்த புகாரைப் பதிவு செய்யப் பெரும் போராட்டத்தை சந்திக்க நேர்ந்தது. இறுதியில் புகாரைப் பதிவு செய்த போலீஸ் குற்றவாளிகள் என்று தயாபாய் அடையாளம் காட்டிய நரசிங்கப்பூரைச் சேர்ந்த கட்டியா எனும் அடியாள் கும்பலைக் கைது செய்ய மறுத்து விட்டது. ஒருபுறம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே அந்தக் கும்பல் வேறொரு பெண்ணைக் கடத்திக் கொண்டு விற்ற கொடுமையும் நடந்தது.

                அரசியல் பலமும், பணபலமும் கொண்ட இதுபோன்ற கும்பல்களை எதிர்த்து இன்றளவும் போராடிக்கொண்டிருக்கிறார் தயாபாய். 2002ல் குஜராத்தில் நடந்த மதக்கலவரங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கு சென்று பணியாற்றிய தயாபாய் மதவெறிக்கு எதிராக கடுமையாகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்ந்து மலையினப் பகுதிகளில் மதத்தின் வழிப் பூசல்கள் ஏற்படாதவண்ணம் விழிப்புணர்வைப் பரப்பி வருகிறார்.

                2010ல் பாருல் எனும் கிராமத்தில் வசித்த தயாபாய் 68 வயதாகியும் அரசாலும், மீடியாக்களாலும் பெரிதாக கவனப்படுத்தப்படவில்லை. விருதுகள் மேல் பெரிதும் நாட்டமில்லாத தயாபாய், தர்மபாரதி எனும் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட விருதுத் தொகையை ஏழைமக்களின் நல்வாழ்விற்குப் பயன்படுமென்பதால் ஏற்பதாகக் கூறினார்.

                காற்று வீசும் சுவடோ, காற்றின் உருவமோ கண்களுக்குப் புலப்படுவதில்லை. காற்றைப் போல் வீசிக்கொண்டிருக்கும் தயாபாய் போன்ற தன்னலம் கருதாத மனிதர்களின் சமூகப் பணிகள் மேலும் பலரையும் சுவாசிக்கச் செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...