புதன், 22 ஜூன், 2022

 

நூலின் வழி ஓர் பேரொளி

                                            -நெய்வேலி பாரதிக்குமார்




 

                            


நூல் பெயர்: ஒளி ஓவியம்

ஆசிரியர்:  சி.ஜெ.ராஜ்குமார்

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

விலை: 390/-

                நெதர்லாந்தில் பிறந்த ரெம்ப்ராண்ட் வரைந்த இரவுக்காவல் (The Night Watch) ஓவியத்தை ரசித்துக்கொண்டிருந்தேன். ஆம்ஸ்டர்டாமில் ஊர்க்காவல் படைத்தலைவர்  பிரான்ஸ் பென்னின் காக் தன் படையணியினரோடு ஆலோசிக்கும் காட்சியினை அந்த ஓவியம் உணர்த்துகிறது. குறைந்த ஒளியில், இருளின் ஒதுக்குப்புறமான மறைவிடத்தில் அவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும் அந்தக்  காட்சியை காணும் போதெல்லாம் இருள் நம்மைச்சுற்றி கவிவது போலத்தோன்றும். ஓவியத்தில் ஒளியின் நர்த்தனங்களை, நிழலின் தத்ரூப கணங்களை அவரைப்போல வேறொரு ஓவியர் பதிவு செய்திருக்கிறாரா? என்ற கேள்வி எப்பொழுதும் எழுந்தபடி இருக்கும்.

                ஓவியத்தை விடவும் ஒளியை அதிகம் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த திரை மொழியில் , ஒரு படப்பதிவுக் கருவி எவ்விதமாக ஒளியின் அளவீடுகளை பயன்படுத்த முடியும் என்ற எல்லோரும் அறிய விரும்பும் மற்றொரு கேள்வியும் எனக்குள் உண்டு. எல்லாவற்றுக்கும் பதிலளிக்கும் விதமாக திரைப்பட ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமாரின் ஒளி ஓவியம் நூல் வெளிவந்திருக்கிறது.

                ஒளி என்பதே இயற்கையின் ஓவியம்தானே.. சூரியனின் கதிர்கள் காற்றின் மூலக்கூறுகளை ஊடுருவிப் பாயும்போது அது பிரதிபலிக்கும் வண்ணக்கலவைகளை ரசிக்காதவர்கள் உண்டா என்ன? அந்த ஒளியை எவ்வாறு பயன்படுத்துவது, எவ்விதம் அளவீடு செய்வது, எவ்வாறு கட்டுப்படுத்துவது ஆகியவற்றைக் குறித்து எளிய மொழியில், அழகிய புகைப்படங்கள் வழியில், உயரிய அச்சுப்பிரதியில் வெளிப்படுத்தி இருக்கிறார் நூலாசிரியர்.

                நிறங்களை அவற்றின் வண்ண வேறுபாடுகளை வைத்து மட்டுமே நாம் பிரித்து பார்க்கிறோம். ஆனால் ஒளிப்பதிவாளர் அதையும் தாண்டி, நிற வெப்பம், நிற அழுத்தம், நிறங்களின் தன்மைகள், செழிப்பு என எல்லாத் தளங்களிலும் நின்று பார்க்க வேண்டியதன் அவசியத்தை நுட்பமாக அதே நேரத்தில் இரத்தினச் சுருக்கமாக சொல்லிச் செல்கிறார்.

                அடுத்ததாக ஒளிப்பதிவின்போது துணை நிற்கும் உபகரணங்கள், ஒளியமைப்பின் வேறுபட்ட நிலைகள், வெவ்வேறு விதமான விளக்குகள் ஆகியவற்றைப் பற்றி சாதாரண பார்வையாளனுக்கும் புரியும் விதத்தில் அழகாக விளக்கியிருக்கிறார். ஹை-கீ மற்றும் லோ கீ காட்சியமைப்பினை புலப்படுத்த பொருத்தமான திரைப்பட நிழல் படங்களை இணைத்திருப்பது மிகச்சிறப்பு.

                ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ஆர்-ன் முந்தைய திரைப்படத் தொழில்நுட்ப நூல்களுக்கும் இதற்கும் முக்கியமான வித்தியாசத்தை குறிப்பிட வேண்டுமெனில், ஒரு ஹைக்கூ கவிஞர் தன் எண்ண வெளிப்பாடுகளை மூன்று வரிகளுக்குள் கடத்திவிட முயற்சிப்பது போல, சிறிய தலைப்புகளுக்குள் தெறிப்பான குறிப்புகளை அடக்கிவிடும் எழுத்தாளுமை கைவரப் பெற்றிருக்கிறது. சாவித்துவார இடைவெளியில் தன் வண்ணத் தூரிகையால் ஓவியம் வரைந்துவிடும் ஒளிபற்றிய நூலுக்கு இந்த பாணி பொருத்தமாகவும் இருக்கிறது. ஒளியின் பண்புகள் மற்றும் ஒளியின் தன்மைகள் குறித்த பக்கங்களில் அதன்  நேர்த்தியைக் காணலாம்.

                ரெம்ப்ராண்டின் ஓவிய அழகில் திளைத்துகிடக்கும் எனக்கு கெரிட் வான் ஹான்த்ராஸ்ட் இன் ஓவியத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இனி கெரிட்டின் ஓவியங்களைத் தேடித் தேடி அலைவேன். ஒளிஓவியம் நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்து, ரசித்து வடிவமைத்திருக்கிறார்கள் அரவிந்த்குமாரும், ராதா பழனிச்சாமியும்... ஒளிகுறித்தும், வண்ணங்கள் பற்றியுமான புரிதல் அவர்களுக்குள் சுடர் விட்டு எரிந்து கொண்டிருப்பதால்தான் நூல் இத்தனை அற்புதமாக உருவாகி இருக்கிறது. ஒளியின் வரலாறு பற்றி கூறும் பக்கங்களை தொன்மையான ஒரு வண்ணத்திலும், சமீபகால வளர்ச்சிகளை குறிப்பிடுகையில் பளிச்சென பக்கங்களை தொகுத்திருப்பது அவர்களின் அர்ப்பணிப்பை உணர்த்துகிறது.

                ஒளிப்பதிவு தொழில்நுட்பம் தொடர்பான நூலுக்கு அதுவும் ஒளி பற்றிய நுட்பமான பதிவுக்கு என்ன மரியாதையான நியாயம் செய்ய வேண்டுமோ அதனை அப்பழுக்கில்லாமல் செய்திருக்கிறார் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பன் அவர்கள். இத்தனை உயர்வாக வடிவமைக்கப்பட்ட நூலுக்கு குறைந்தவிலையை நிர்ணயித்திருப்பது , எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்கிற பரந்த நோக்குதான் காரணமாக இருக்க முடியும். இன்றைய நவீன உலகம் மிகத்தரமான கேமராக்களை எல்லோரது கைகளிலும் எளிதாக திணித்துவிடுகிறது. அதற்கான தொழில்நுட்ப அறிவையும் எளிதாக்கி வருகிறார்கள் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார், கலைக்குவியல் வடிவமைப்பாளர்கள் மற்றும் டிஸ்கவரி பேலஸ் நிறுவனத்தினர்.

                ஒளி ஓவியம் ஒளிப்பதிவு உலகிற்கு நூலின் வழி பேரொளி .. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...