புதன், 22 ஜூன், 2022

 திசை எட்டும் மொழிபெயர்ப்புக் காலாண்டு இதழில் வெளிவந்த கட்டுரை 



                                    



                



நூல் நயம்:

சொர்க்கத்தை மெல்லத் தின்னும் நரகத்தின் நாவுகள்

                         -நெய்வேலி பாரதிக்குமார்

நூற்பெயர்: என் மகஜெ

மலையாள மூலம்: அம்பிகாசுதன் மாங்காடு

தமிழில்: சிற்பி

வெளியீடு: கவிதா ப்ப்ளிகேஷன்

பக்கங்கள்: 288

விலை: ரூ. 200

 

        பரிணாமக் கொள்கையை தலைகீழாய்ப் பண்ணுகிற அந்த சக்தி என்னப்பா? என்ற கேள்வி உங்கள் முன் விழுந்தால், நீங்கள் முதலில் திடுக்கிட்டுப் போவீர்கள். பிறகு அந்தக் கேள்வியைப் புரிந்து கொள்ள சற்று சிரமப்பட்டு முயற்சிப்பீர்கள். ஒருவேளை அந்தக் கேள்வி உங்கள் கற்பனைக்கும் எட்டாத தொலைவில் காணப்படலாம். என்மகஜெநாவலை வாசிக்கும் போது இந்தக் கேள்வியின் முழு வீச்சையும் அதன் கோர தரிசனத்தையும் உங்களால் காண முடியும்.

        மலையாள சூழலியல் நாவலான என்மகஜெ’, 1975ஆம் ஆண்டு வாக்கில் கேரளாவின் காசர்கோடு மாவட்ட்த்திலுள்ள என்மகஜெ கிராமத்தில் முந்திரியின் அதிக மகசூல் காணஎன்ற பெயரில் வானூர்திகள் வழியே தெளிக்கப்பட்ட எண்டோசல்பான்என்னும் பூச்சிக்கொல்லி (ஆட்கொல்லி) மருந்தின் கோரக் கரங்களால் சிதைந்து போன மனிதர்களின் அவல வாழ்வைப் பின்னணியாக்க் கொண்ட்து.

        மனிதர்கள் மீது கொண்ட பெரும் வெறுப்பினால், ஆளரவமற்ற வனப்பகுதியில் குடியேற முனைந்த நீலகண்டன் மற்றும் தேவயானி பூமியின் சொர்க்கம்என கருதப்பட்ட என்மகஜெ பகுதியில் குடியேறுகின்றனர். கிட்ட்தட்ட குரங்குகளின் உருவத்தை எட்டிவிடுமோ என்ற உருக்குலைவு, சிந்திக்கவே முடியாதபடியான மனச்சிதைவு, ரணங்களால் குதறப்பட்ட தேகம், வயதை அனுமானிக்க  முடியாத உடல்வளர்ச்சி என்ற சகல கொடூரங்களையும் அந்த கிராமத்து மனிதர்கள் மீது திணித்த எண்டோசல்பானின் அசுரப் பாய்ச்சலையும், அதற்குத் துணைபோகும் அதிகார பீடங்களையும், நோயோடும் நோயைவிட கொடிய மனிதர்களோடும் போராடிக் களைத்த அசலான மனிதர்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்மகஜெ. சொர்க்கமில்லை இது நரகம் எனப் புரிந்தபிறகு எந்த மனித இனத்தின் மீது வெறுப்புக் கொண்டு அங்கே குடிவந்தார்களோ அதே மனித இனத்துக்காக தங்களது வாழ்வை தீர்மானிக்கிறார்கள் இருவரும். வாசித்து முடிக்கும் போது அசலான சந்நியாசிகள்என்று அவர்களை அழைக்கலாம் என்றே தோன்றுகிறது.

        சந்நியாசம் என்பது தப்பித்து ஓடுவது அல்ல. யதார்த்த்த்தை எதிர்கொள்வதுதான்என்ற நாவலில் வரும் வரிகளை வாழ்ந்து மெய்ப்பிக்கிறார்கள்.

        அம்பிகாசுதன் மாங்காடு இயல்பிலேயே ஆய்வாளர் என்பதால் எண்டோசல்பான் கேடுகள் பற்றிய முழுமையான ஆய்வை செய்த அல்லது தேடி வாசித்த பிறகே இந்த நாவலை துவங்கியிருக்கிறார் என்பது ஜெயராஜன் மூலம் உணரமுடிகிறது. ஒரு பிரச்சார நெடிஅடித்துவிடக் கூடிய அபாயத்தை அம்பிகாசுதனின் இயல்பான நடை எளிதாக்க் கடந்து விடுகிறது.

        நீலகண்டன், தேவயானியின் முன்கதை சுருக்கத்திலிருந்து நாவலைத் துவங்கும் அவரது நேர்த்தியினால் ஒரு வாசகன் ஈடுபாட்டுடன் அவரது விரல்களைப் பிடித்துக் கொண்டு நடக்க முடிகிறது. மனிதர்களை விட, குகை, கண்ணாடி ஆகியன ஆத்மார்த்தமாக உரையாடுகின்றன.

        நாவலினூடே கையாளப்படும் மகாபலியின் கதைகள், நாவலின் களத்தை இலகுவாக நம்முன் நிறுத்தி விடுகின்றன. அபே எட்வர்ட் மற்றும் ஜீவான் ருய்ஃபோ போன்றோரின் சூழலியல் நாவல்கள் வாசிக்கவு சுவாரஸ்யமானவை என அறிந்திருக்கிறேன். அம்பிகாசுதன் எழுத்து வன்மை என்மகஜேவின் பேரழகையும் பறவைகளற்ற பேரமைதியையும், இரசாயன மருந்தினால் ஏற்படும் பேரழிவையும் அதனதன் உணர்வுகளோடு நம்மை இயைந்து போக வைக்கிறது. அவரது தெறிப்பான வரிகளால் பல இடங்களில் நாம் உலுக்கப்படுகிறோம்.

ஒரு நேர்த்தியான திரைப்படம் போன்றதான காட்சி விவரணைகள், இயல்பான கதை நகர்த்தும் உத்தி, வலுவன ஆதாரங்கள்,  . சொல்ல வந்த்தை அழுத்தமாக பார்வையாளர் மனதில் பதியச் செய்யும் திறன் இவையெல்லாம் பளிச்சிடும் இந்நாவலை எழுதிய அம்பிகா சுதனும் கையொப்புஎன்ற திரைப்பட்த்தின் திரைக்கதை ஆசிரியர் அல்லவா!

        கடவுளை வணங்கிப் பழகியிராத நீலகண்டன், குறத்தியம்மாவுக்கு முன்பாக அமர்ந்து, “அம்மா, உன் மக்கள் இப்படி நரகத் துயரில் வாழ்கிற போது நீ ஏன் இப்படி கல்லைப்போல் உணர்ச்சியின்றி பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று பிரார்த்திக்கும் போது(!) குலைந்து போகாதவர்கள் ஒருவரும் இருக்க முடியாது.

        மொழிபெயர்ப்புக்காக ஒரு படைப்பை தேர்வு செய்யும் போது அந்தப் படைப்பு அதற்கான சகல தகுதிகளோடும் இருக்க வேண்டும். ஒரு பண்பாட்டை, வரலாற்றை, மக்களின் இயல்பான பிரச்சினைகளை, அது வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். தெர்ந்த மொழிபெயர்ப்பாளர் சிற்பி ஒரு நியாயமான படைப்பை அதன் இயல்பு கெடாமல் நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார். எட்டு மொழிகள் பேசும், எட்டு கலாச்சார மனிதர்கள் வாழும் ஆச்சர்யங்கள் நிறைந்த என்மகஜெவை, அங்கு நிகழ்ந்த பேரவலத்தை, பதிவு செய்த மிகச் சிறந்த படைப்பை தமிழில் தந்த்தற்காக சிற்பி அவர்களுக்கு தமிழ் வாசிப்புலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அம்மக்கள் பேசும் துளு மற்றும் இன்னபிற மொழிகளிலேயே சில உரையாடல்கள் வந்திருப்பது நாவலின் உயிர்ப்பை மிகுவிக்கிறது. மட்டுமல்லாமல் அவற்றுக்கான தமிழ் அர்த்தங்களை பிரயாசையோடு தந்தளித்தமைக்காகவும் சிற்பி அவர்கள் பாராட்டுக்குரியவர்.

        நாம் எந்த மாதிரியான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்னும் கேள்வி நம்மை அச்சுறுத்தியபடி தான் இருக்கிறது. என்மகஜெ அந்தக் கேள்வியை இன்னும் பலப்படுத்தி நம்மை வேறொரு கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிறது. நாவலை வாசித்து முடித்த பிறகு ஏதோ ஒரு தலைசிறுத்த, புண்கள் நிறைந்த, மனச்சிதைவுற்ற குழந்தை ஒன்று நம் மார்பிலோ முதுகிலோ தொற்றிக் கொண்டே வருவது போல் ஒரு உணர்வு எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. தோழனாக, பாம்புகளோ, புலிகளோ, தவளைகளோ நிறைந்திருக்கும் நமக்கான குகைஎங்கே இருக்கிறது?

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...