திங்கள், 27 ஜூன், 2022

 

கிழக்கு வாசல் உதயம் இதழில் பிரசுரமான கட்டுரை 


மாதர்குலத்தை மகிழவைத்த மகத்தான மருத்துவமேதை

 


     பத்மபூஷன் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி

 

     இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், உலகின் முதல் சட்டமன்றப் பெண் துணைத் தலைவர், அவ்வை இல்லம், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிறுவனர்.

காங்கிரஸ் பேரியக்கம் சுதந்திரப் போருக்காக மட்டுமே கட்டமைக்கப் பட்டதன்று. புரையோடிப் போன சமூகச் சீர்கேடுகளைக் களைய வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உண்டுஎன்று சென்னையில் நடந்த பெருங்கூட்டத்தில் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி குறிப்பிட்டதை காங்கிரஸ் தொண்டர்களுக்கு நினைவூட்டுகிறேன். முத்துலட்சுமி போன்ற பேராற்றல் கொண்ட சமூகப்பொறுப்பு மிக்க பெண்மணிகள் அத்தகைய கேடுகளை ஒழிக்கத் தலைமையேற்க வேண்டும். -யங் இந்தியாவில் மகாத்மா'

தேவதாசி முறை கடவுளுக்குச் செய்யும் சேவையாகும். அந்தப் புனிதம் மிக்க பணியில் பெண்கள் ஈடுபடுத்தப் படுதல் இழிவல்ல!

      1928ம் ஆண்டு தேவதாசி முறை ஒழிப்பு மசோதா குறித்து பேசும்போது  அன்றைக்கு காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் தெரிவித்த கருத்து இது.

     அப்படிப்பட்ட புனிதம் மிக்க பணியில் உங்கள் சமூகத்துப் பெண்கள் ஈடுபடட்டும்!என்று அவருக்குப் பதிலடி கொடுத்தவர்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

     புதுக்கோட்டை அரசர் தொண்டைமானின் ஆலோசகராக இருந்த நாராயணசாமி-சந்திராம்மாள் தம்பதிகளின் எட்டுக் குழந்தைகளில் ஒருவராக 1886ல் பிறந்தவர் முத்துலட்சுமி. அவர்களில் மிஞ்சியது முத்துலட்சுமி உட்பட நால்வர் மட்டுமே. வெவ்வேறு நோய்கள் காரணமாக நான்கு குழந்தைகள் இறந்து போயினர். முத்துலட்சுமியும் கூட சிறுவயதில் ஆஸ்துமா காரணமாகவும் காய்ச்சல் காரணமாகவும் மிகப் பலவீனமாகவே இருந்தார்.

     தந்தை நாராயணசாமி அந்தக் காலத்திலேயே பி.ஏ. படித்தவர். அப்போதைய அரசுக் கல்லூரிப் பேராசிரியராகவும், பின் கல்வித்துறைப் பொறுப்பாளராகவும் பணிபுரிந்த கல்விமான் என்பதால், இயல்பிலேயே முத்துலட்சுமிக்கு படிப்பில் மிகுந்த ஆர்வமிருந்தது. அந்தக்காலத்தில் இளமையிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து விடுகிற பழக்கம். 8ம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிப்பது என்பது ஏறக்குறைய தடை செய்யப் பட்டிருந்தது. முத்துலட்சுமியின் 11வது வயதில் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் பாலையா என்பவர் முத்துலட்சுமியின் அபார அறிவுத் திறனையும், கல்வி ஆர்வத்தையும் அவரது பெற்றோர்களுக்கு எடுத்துச் சொன்னார். இதனால் மீண்டும் முத்துலட்சுமிக்கு பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மறுபடியும் 13ம் வயதில் பூப்பெய்தியதைக் காரணம் காட்டி மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினர்.

     கல்வியின் மீதான அளவுகடந்த அவரது ஆர்வத்தை உணர்ந்துகொண்ட அவரது தந்தை, வீட்டிற்கே ஆசிரியர்களை வரவழைத்து கல்வி கற்க வைத்தார். அப்போது புதுக்கோட்டையில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய 100 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 10பேர். அதில் முத்துலட்சுமியும் ஒருவர்.

     புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி ஆண்களுக்கு மட்டுமேயானது என்பதால் அவருக்கு இடமளிக்க மறுத்தனர். அவரது தந்தை புதுக்கோட்டை அரசரின் ஆலோசகராக இருந்தும், நிறைய போராட்டத்துக்குப் பிறகு மன்னரால் முத்துலட்சுமிக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. முத்துலட்சுமி கல்லூரியில் படிக்கும் ஒரே பெண் மாணவி என்பதால் அது அவருக்கு அனல்சூழ் அனுபவமாக இருந்தது. காகித அம்புகள், கேலிப்பேச்சுகள், அவமதிக்கும் செயல்பாடுகள் என்று பல்வேறு சோதனைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இத்தனைக்கும் அவருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு திரை தொங்கவிடப் பட்டிருந்தது. படிக்கும்போது இடையறாத ஆஸ்துமா தொல்லையும் கண்பார்வைப் பிரச்சினைகளும் சேர்ந்து அவரது உடல் மிகவும் நலிவுற்றது. உடல் உபாதைகள் இருந்தும் இண்டர்மீடியட்டில் முதல் மாணவியாகத் தேர்வு பெற்றார். இருந்தும் உடல்நிலை காரணமாக ஓராண்டுகாலம் வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டியிருந்தது.

     இந்தியப் பெண் ஒருவர் இண்டர்மீடியட் வரை படிப்பதே அன்றைக்குப் பெரும் சாதனை. முத்துலட்சுமியின் தாயாருக்கோ தன் மகளுடைய திருமணம் உரிய வயதில் நடைபெறாமல் தள்ளிப் போகிறது என்ற கவலையால் மனநோய் தாக்கியது. உள்ளூர் வைத்தியம் எதுவும் எடுபடாத நிலையில் வான் ஆலன் எனும் அமெரிக்க மருத்துவர் அளித்த சிகிச்சை மூலம் அவர் குணமடைந்தார். சிறுவயதில் தன் சகோதர சகோதரிகள் நோயினால் இறந்த துயரம், தாயின் மனநோய், புற்றுநோய் காரணமாக உறவினரொருவர் இறப்பு ஆகிய நிகழ்வுகள், முத்துலட்சுமிக்கு மருத்துவக் கல்வி பயில வேண்டுமென்ற தீவிர லட்சியம் கொள்ளக் காரணமாயிற்று.

பெண்களுக்கு எட்டாத தூரத்தில் மருத்துவக் கல்வி:

     அன்றைய கால கட்டத்தில் பெண்கள் மருத்துவக் கல்வி படிப்பது என்பது மிகுந்த வலி தரும் சுமையாகவே கருதப்பட்டது. 1875ல் டப்ரின் என்கிற பெண்மணி, பெண்கள் மருத்துவக் கல்லூரியைத் துவங்க வேண்டுமென்கிற நோக்கத்தில் டில்லியில் ஹஸ்டிங்கர் மருத்துவக் கல்லூரி, சென்னை வெலிங்டன் கல்லூரி, ஆக்ரா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைத் துவங்கினார். ஆனால், இந்தக் கல்லூரிகளில் படித்தவர்கள் ஆங்கிலேயப் பெண்களும் பிரெஞ்சுப் பெண்களும் மட்டுமே.

     இந்தச் சூழலில் முத்துலட்சுமியின் மருத்துவக் கல்வி ஆவலைப் புரிந்து கொண்ட தந்தை, தனது கல்லூரியின் பழைய மாணவ்ர் சீனிவாசராவின் உதவியோடு சென்னை மருத்துவக் கல்லூரியில் மகளைச் சேர்த்தார். ஆக, சென்னைதான் பெண்கள் மருத்துவக் கல்லூரிக்கான முன்னோடி.

     மகளுக்குத் துணையாக நாராயணசாமியும் சென்னை இராயப்பேட்டைக்கு வந்துவிட்டார். புதுக்கோட்டை அரசு முத்துலட்சுமியின் படிப்பிற்காக மானியம் தந்து உதவியது. படிக்கும் காலத்தில் அவரது உடல்நிலை மிகவும் நலிவுற்றது. அப்பொழுது அவருக்காக டாக்டர் தாமன்சிங் என்பவர் இலவசமாக மருத்துவம் பார்த்தார்.

     மருத்துவக் கல்வி பயிலும்போது அவருக்கு டாக்டர் நஞ்சுண்டராவ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. முத்துலட்சுமியின் சமூக அக்கறைக்கும் ஆர்வத்துக்கும் அவரது சீர்திருத்தக் கருத்துகளுக்கும் பெரிதும் காரணமாக இருந்தவர் டாக்டர் நஞ்சுண்டராவ்.

     1912ல் இந்தியாவிலேயே ,முதல் பெண் மருத்துவராக முத்துலட்சுமி பட்டம் பெற்றார். அவருக்கு பணிபுரியும் வாய்ப்பு தர விக்டோரியா மருத்துவமனை, கோவா மருத்துவமனை, பஞ்சாபிலுள்ள லூதியானா மருத்துவமனை, கள்ளிக்கோட்டை மருத்துவமனை ஆகியன முன்வந்தன என்றாலும், அவர் பணியில் சேர்ந்தது எழும்பூர் குழந்தைகள் பெண்கள் மருத்துவமனை தான்.

நிபந்தனைகளுடன் திருமணம்:

     முதல் பெண் மருத்துவராக தேறிய முத்துலட்சுமியின் புகழ், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பரவியது. விசாகப்பட்டினத்தில் பணிபுரிந்த சுந்தரரெட்டிக்கு முத்துலட்சுமியை மணம் செய்ய வேண்டுமென்ற தணியாத ஆவல். இவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சுப்பராய ரெட்டியின் மருமகன் முறை. இவரை முத்துலட்சுமியின் பெற்றோருக்கும் பிடித்துவிட்டது. ஆனால், முத்துலட்சுமி திருமணத்துக்கு எளிதாக சம்மதிக்கவில்லை. சுந்தரரெட்டி தன் மீது காட்டிய அளவற்ற அன்பை உணர்ந்ததன் பலனாக சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார். மேற்படிப்பு படிப்பேன் மருத்துவ சேவை, சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்பதுதான் அவர் போட்ட நிபந்தனைகள். 1913ல் நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு லண்டன் சென்று எஃப்.ஆர்.சி.எஸ். முடித்து வந்த பிறகு 1914ல் தான் திருமணம் நடந்தது. கணவர் விசாகப்பட்டினத்திலும் முத்துலட்சுமி சென்னையிலுமாக பணியாற்றினர். பின், புதுக்கோட்டை சமஸ்தான மருத்துவமனையில் சுந்தர ரெட்டிக்கு வேலை கிடைத்தது.

     முத்துலட்சுமி தம்பதியருக்கு முதலில் பிறந்த குழந்தை ராம்மோகன். அவர்தான் பின்னாளில் பவர் பிளானிங் கமிஷன் இயக்குநராகப் பணி புரிந்தவர். 1919ல் இரண்டாவதாகப் பிறந்த கிருஷ்ணமூர்த்தி தான் பிற்காலத்தில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநர்.

     சோதனைகளின் துரத்தலில் முத்துலட்சுமி:

     முத்துலட்சுமியை சோதனைகள் துரத்தியபடியே தான் இருந்தது. 1919ல் அவரது தாயார் மரணமடைந்தார். அவரது சகோதரி சுந்தராம்பாள் ஹிஸ்டீரியா நோயினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பின், புற்றுநோய் பீடித்ததால் கல்கத்தாவில் உள்ள போஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல்கள், செலவினங்கள் முத்துலட்சுமிக்கு பெரும் சுமையானது. சிகிச்சை பலனின்றி 1923ல் சுந்தராம்பாள் மரணமடைந்தார். படிப்பதற்காகப் பட்ட கடன், சகோதரியின் சிகிச்சை செலவுக்குப் பட்ட கடன் இவைகளுக்காக தனக்குக் கிடைத்த பாராளுமன்ற  மேலவை உறுப்பினர் பதவியைக் கூட ஏற்க மறுத்து விட்டார்.

     தனது வாழ்நாளில் பெரும்பகுதியை நோயுற்றவர்களுக்காகவும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவுமே போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1968ம் ஆண்டு ஜுலை 23ல் மீளாத் துயிலில் ஆழ்ந்தார்.

     சோதனைகளில் தளராத மன உறுதி, எடுத்துக்கொண்ட லட்சியத்திற்காக அர்ப்பணிப்பான உழைப்பு, சமூகத்தின் சீர்கேடுகளை எதிர்க்கும் சமரசமில்லாத போர்க்குணம் இவற்றின் மொத்த உருவம் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. புரட்சியாளர்கள் என்றால் ஆயுதமேந்திப் போராடுபவர்கள் மட்டும் தான் என்ற தவறான கற்பிதங்கள் நம்மிடையே உண்டு. ஆனால் அறிவையும் மன உறுதியையுமே ஆயுதங்களாகக் கொண்டு போராடிய டாக்டர் முத்துலட்சுமியின் தீரம் மிக்க வாழ்க்கை பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்குமே ஓர் அற்புத உதாரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...