செவ்வாய், 21 ஜூன், 2022

 

சேலம் கவிஞர் சுமதி சங்கர் அவர்களின் கவிதைத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரை  

சொல்லில் ருசிக்கும் தளிரின் சுவை...

                  நெய்வேலி பாரதிக்குமார்

 

கைப்பேசிகளின் தொடக்கக் காலம் அது.. குறுஞ்செய்திகளின் வழியே காலை மற்றும் இரவு வணக்கங்களை அல்லது எப்பொழுதாவது சில அவசரச் செய்திகளை பரிமாறிக் கொண்டிருந்த காலம். தமிழ் எழுத்துருக்களைக் கூட கைப்பேசியில் ஏற்ற முடியாத அளவு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் முதிரா இளம்பருவத்தில் இருந்தது. ஆங்கில எழுத்துக்களில் தமிழ்க் கவிதைகளைத் தாங்கி இலக்கிய இதழ்களை கவிதை ஆர்வலர்கள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து நடத்திக் கொண்டிருந்தபோது உண்மையில் தமிழ்க்கவிதை ஒரு புதிய தளத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் தீவிர இலக்கிய உலகம் அதை கவனிக்கவோ வளர்த்தெடுக்கவோ முயற்சிக்கவே இல்லை. ஏனெனில் ஜனநாயகப்படுத்தப்பட்ட படைப்புக்கு எந்த இலக்கிய மதிப்பையும் அளிக்க யாரும் தயாராயில்லை..

பரவலாக்கப்பட்ட கவிதை பல கவித்துவமற்ற, அர்த்தமற்ற கவிதைகளை உற்பத்தி செய்துவிடும் ஆபத்து இருப்பதை மறுக்கமுடியாது ஆனால் வாசிக்காதவர்கள் மத்தியிலும் கவிதையைக் கொண்டு சேர்க்கும் மகத்தான வாய்ப்பு அன்றைக்கு இருந்தது. முகநூல், புலனம் போன்ற நவீன செயலிகள் சுமந்து வந்து கொட்டும் குப்பைகளுக்கு மத்தியில் இன்றைக்கு இலக்கியப் படைப்புகளுக்கு இடமே இல்லை.

கைப்பேசிகளின் வசந்த காலம் என்பது  இலக்கிய இதழ்களைச் சுமந்துவந்த அந்தத் தொடக்கக் காலம்தான்... எல்லா திசைகளில் இருந்தும் கவிதைகளும் முகமறியாத கவிஞர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள். அப்படித்தான் சுமதி சங்கர் எனக்கும் மற்ற இலக்கிய நண்பர்களுக்கும் அறிமுகமானார். பெண்கள் இரகசியமாக தங்கள் இதயங்களில் புதைத்து வைத்திருந்த கவிதைகள் மெல்ல அவிழ்ந்து மணம் பரப்பத் துவங்கியதும் அப்பொழுதுதான்..

கைப்பேசிக் கவிதைகளில் கண்ணுக்குத் தெரியாத ஒரு இலக்கிய ஆசிரியன் கண்டிப்புகள் மிகுந்த கண்களோடு கவனித்துக் கொண்டே இருப்பான். எழுத்துக்களின் வரையறை படைப்பாளியை கூர்மையாக்கிக் கொண்டே இருக்கும். சொற்சிக்கனத்துடன் எப்படி கவிதை எழுதுவது என்பதற்கான பயிற்சிக்களமாக கைப்பேசி கவிதை இதழ்கள் இருந்தன. சுமதி சங்கர் தீவிரமாக அப்பொழுது பெரும்பாலான கைப்பேசி இதழ்களில் எழுதிக் கொண்டிருந்தார். அவருடைய கவிதைகளில் இந்த சொற்சிக்கனம் அழகுற வெளிப்படும்... தனித்தனியே அவரவர் கூட்டுக்குள் இயங்கிக் கொண்டிருந்த படைப்பாளிகளை யார் ஒருங்கிணைப்பது என்று அவரவர் சிந்தித்து அப்படியே மறந்தும் போய்க் கொண்டிருந்த சமயத்தில் மிகத்துணிவோடு தனக்குப் பழக்கமான நண்பர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு சேலத்தில் ஒரு மிகப்பெரிய அரங்கில் கைப்பேசி இலக்கியவாதிகளின் கூட்டத்தை முன்வந்து நடத்தி பிரம்மிக்க வைத்தார் சுமதி சங்கர்.

யாராலும் மறக்க முடியாத அந்த கூட்டத்துக்கு அரங்கம், உணவு, மற்றும் நினைவுப்பரிசுகள் என அத்தனைச் செலவுகளையும், மெனக்கெடல்களையும் அவரே தன்னந்தனியாக சுமந்து கொண்டார். பிறகு வெவ்வேறு கூடல்கள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றாலும் சுமதி அவர்களின் முயற்சிதான் எல்லாவற்றுக்கும் உந்து சக்தி.. எப்பொழுதோ அவரது கவிதைத் தொகுப்பு வந்திருக்க வேண்டியது காலம் கடந்து வந்தாலும் இன்றைக்கும் ரசிக்கக் கூடியதாக இருக்கின்றன.

சுமதி அவர்களின் கவிதைகள் மிக மென்மையான சொற்களால் சுருக்கமாக கட்டமைக்கப்பட்டவை. சிலசமயம் அதன் வலிமை வாசிப்பவர்களை நிலைகுலையச் செய்யும். அவரின் கவிதைகளை சுருக்கமாக நீராலானவை என்று சொல்வேன். நீரின் குளிர்ச்சியும் , சுழித்தோடும் தன்மையும்,  எந்த இடத்துக்குள்ளும் தன்னை நிரப்பிக்கொள்ளும் இயல்பும் கொண்டவை. பேரழகு பொங்கக் கொட்டும் அருவியின் சுளீர் விளாசலும் இருக்கும். அவருடைய சில கவிதைகள் மேலோட்டமாக வாசிக்கையில் ஒரு அர்த்தத்தையும் இன்னும் சற்று யோசிக்கையில் வேறொரு பொருளையும் தரக்கூடியவை..

மனம் திறந்து பேசு என்றாய்

பேசிக்கொண்டு இருக்கிறேன்

கேட்பதற்கு நீயில்லாமல்

தனிமையில்..

முதலில் இந்தக் கவிதை வழக்கமான காதல் கவிதை போலத்தான் தோன்றும். ஆனால் இரண்டு நண்பர்களுக்கு இடையில் புரிதல் குறையும் போது, ஒரு அரசியல் தலைமைக்கும் அதன் அணுக்கத் தொண்டனுக்கும் இடையே புரிதல் நிகழும் போது அல்லது பிடித்தமான உறவுகளுக்குள் ஒரு குரல் கவனிக்கப் படாதபோது என எதிலும் இந்த வரிகளைப் பொருத்திப் பார்க்கலாம்..

அப்படித்தான் இந்த வரிகளையும் நான் வியக்கிறேன்

அன்பு

இன்று கவலைக்கிடமாய்

நமக்குள்

மாற்றுமருந்தின்றி....

 

 மாற்று மருந்து என்கிற சொல் இந்தக் கவிதையில் ஒரு அழகிய முரண் சொல் பொதுவாக மாற்று மருந்து என்பது விஷத்தை முறிக்கும் ஒரு செயலுக்கானது. அன்பு முதலில் அமுதமாய் இனிக்கும்,, அன்பு ஒரு கட்டத்தில் உணவாய் செரிக்கும் பின்பு ஒரு நாள் அதுவே விஷமாக மாறி ஆளைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும். முதல் இரண்டு வரிகளில் அன்புதான் கவலைக்கிடமாக இருக்கிறது ஆனால் கடைசி இரண்டு வரிகள் உட்கொண்ட நபரைச் சுட்டுகிறது

அவருடைய காதல் கவிதைகளில் அரும்பும் மெல்லிய உணர்வு மரமல்லியின் வாசம் போல அத்தனை ரகசியமாய் ரசிக்கக் கூடியது

                     களவாடியப் பொழுதுகளில்

மறந்து போனது

கேட்க நினைத்த

ஒற்றை முத்தம்....

 

கூடலின் போது விருப்பங்கள் பலவும் மறந்து போகும் அல்லது தயக்கத்தின் காரணமாக அமிழ்ந்து போகும். ரொம்பவும் விளக்க முடியாத கவிதை ...

 

                     முத்தத்தை

பரிசளித்து

மொத்தத்தையும்

அபகரிக்கும்

வசூல்காரன்

நீதானடா... 

 

என்கிற கவிதையை வெறுமே காதல் கவிதை என்று நினைப்பது பிழை.. அதற்குள் மேலாதிக்க மனப்பான்மைக்கு எதிரான குரல் ஒன்றுஒளிந்திருக்கிறது.

இன்னொரு காதல் கவிதை கடைசி இரண்டு வரிகளை இன்னும் கொஞ்சம் கவனமாக செதுக்கி இருந்தால் வேறொரு தளத்துக்குச் சென்றிருக்கும்

               

நான் தானே

என்று கேட்க

எனக்கு தெம்பில்லை

நீதான்  என்று

சொல்ல உனக்கும்

துணிவில்லை

உன் கவிதை

பெண் யாரடா ?

கடைசி இரண்டு வரிகளை இப்படி கவித்துவமாக வடித்திருந்தால் வெவ்வேறு அர்த்தங்களை தந்திருக்கும்

 

உன் கவிதைக்குள்

மாயமாய் உலவும் நிழலுருவம்

 

மிக அற்புதமான காதல் கவிதை ஒன்றை இந்தத் தொகுப்பில் தேர்வு செய்யச் சொன்னால் நான் இந்தக் கவிதையைத்தான் சொல்வேன்

வாசித்து விடேன்

சிறிது நேரம்

வசமாகிவிடுகிறோம்

நானும் குழலும்....

     அந்தக் கடைசி வரி புல்லாங்குழலை மட்டுமே சொல்வதாக நினைத்தால் கவிதையை சரியாக உள்வாங்கவில்லை என்று பொருள்.

     பெண்ணியம் சார்ந்த உணர்வுகள் எப்பொழுதுமே அவருக்கு உண்டு அது காதல் கவிதை அல்லது சமூகம் சார்ந்த கவிதை எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்  

                உனக்குள் இருக்கும்

அனைத்தும்

எனக்குள்ளும் இருக்கிறது

காதலும்தான்

     பெண்மையும் பெண்ணியமும் ஒன்று சேர முகிழ்க்கும் கவிதை இது..

 

யாருமே எதிர்பாராத நேரத்தில் சட்டென்று மனதைச் சொடுக்கும் வரிகள் அவரிடமிருந்து விழும்

            

 மரத்தடியில் புத்தர்

 ஞானம் பெற்றது

 நீலவானம்....

 

என்ற கவிதையும்

 

வேண்டிக் கொண்டுதான்

இருக்கிறேன்

வரம் கொடுக்குமிடத்தில்

இறைவனைத் தேடியபடி..

என்ற வரிகளும் நம்மை இட்டுச் செல்லும் தூரம் அதிகம். இரண்டு கவிதைகளையும் விளக்க முனைவது அவற்றின் வீச்சை சுருக்க முயல்வது போல..

கவிதை என்பது வாசிக்கிற ஒவ்வொருவரையும் வெவ்வேறு கற்பனைக்கு அழைத்துச் செல்லும் இலக்கிய வாகனம்.. மனநிறைவு அளிக்கும் பயணத்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து ஒவ்வொரு காட்சியாக விழிகள் விழுங்குவது போல அத்தனை உவப்பானது

நீளமான கவிதைகள் வாசிப்பவர் மனதில் சில நேரம் அயற்சியையும் ஒரு தடங்கலையும் ஏற்படுத்தலாம்  துளிப்பாக்கள் புளியந்தளிரை ருசிப்பது மாதிரி சுகமானது.. ஒரு துவர்ப்பையும் மீறி கண்களைச் சுருக்கச் செய்யாத இதமான புளிப்புச் சுவை இருக்கும் அது இனிப்பை விட மிக அற்புதமானது

சுமதி சங்கரின் துளிப்பாக்கள் காலை நேர நடைப்பயிற்சியில் ஆளரவமற்ற  சாலையில் இனிமையாக ஒலிக்கும் பறவைகளின் குரல் போல அளவற்ற சுகம் தரக்கூடியவை.. அந்தச் சாலையில் அணிந்துரைக்காக என்னை நடைபயில வைத்த அவருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

                     -நெய்வேலி பாரதிக்குமார்

                           ஜூன் 19, 2022  

 

 

 

 

.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...