எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றச் சிறுகதை
சுழியம்
-
நெய்வேலி பாரதிக்குமார்
வசீர் மடியிலிருந்த துண்டை எடுத்து முகத்தை அழுந்த துடைத்துக்
கொண்டார். இரயில் கிளம்ப இன்னும் கால் மணிநேரம் இருக்கிறது. தேர்வு காலம் என்பதாலோ
என்னவோ அனேக பெட்டிகள் காலியாகவே இருந்தன. இவரது கூபேயில் அங்கொன்றும் இங்கொன்றுமாக
மனிதர்கள் பிரிந்தே அமர்ந்திருந்தனர். வசீரின் சீட்டுக்கு அருகே, எதிரே எவரும் இல்லை.
வசீர் இருந்த பெட்டி பிளாட்ஃபாரத்தை விட்டு சிறிது தூரம் தள்ளி
வெட்டவெளி பிரதேச தண்டவாளத்தின் மீது அமர்ந்திருந்தது. ஜன்னல் வழியே வெளியே
தெரிந்த புல்வெளியைப் பார்த்தார். கீழிருந்து எழும்பி மேகத்துண்டை கவ்வும்
பேராவலில் ஒரு தவிட்டுக்குருவி, சட்டென உயரப் பறந்து பின் அந்தரத்தில்
தன் இயலாமையை உணர்ந்து அங்கேயே வட்டமிட்டது. வசீர் தனது துணிப்பையில் இருந்த சிறிய
பொட்டலத்தில் இருந்து மணிக்காரா பூந்திகளை எடுத்து அதன் பக்கம் வீசினார். ஒரு
கணத்தில் தனது இயலாமையையும், தோல்வியயும் மறந்து அழகான மஞ்சள்
உருண்டைகளை தின்னும் இலக்கில் கீழிறங்கியது தவிட்டுக் குருவி.
ஆளரவமற்ற இரயில் நிலையம் போல் அழகானது எதுவுமில்லை. மனிதர்களின்
இடையூறு இன்றி பறவைகளும், சப்தங்களை சுமக்கும் அவசியமற்ற சந்தோஷத்தில்
கூத்திடும் காற்றும் உலவுகிற இடமாக இருந்தது.
இரயில் புறப்படும் சமயத்தில் வந்தேறினாள் அந்தப் பெண். திருத்தமான சற்றே கறாரான முகம். உடைகள்,
பாவனை எல்லாவற்றிலும் ஒரு நறுவிசு தெரிந்தது.
கண்களில் ஒரு தீர்க்கம் எவரையும் ஊடுருவும் வல்லமை கொண்டதாக இருந்தது. வசீரின்
எதிர் சீட்டில் அமர்வதற்கு முன் தன் இருக்கை எண்ணை ஒரு முறை சரி பார்த்தாள். சற்றே
எரிச்சலும், ஏமாற்றமும் அவள் முகத்தில்...
“வாம்மா....உன்னோடு இருவரானோம்” என்றார் வசீர் சிரித்தபடி. திடுமென ஒலித்த
குரலொலியால் ஒருகணம் திகைத்த அவள், பின் எதுவும் கேளாதது போல் தனது பைகளை
உயரே வைத்தாள். தனது இருக்கையை துடைத்துவிட்டு தனது கைப்பையில் இருந்த புத்தகம்
ஒன்றை எடுத்து புரட்டத்தொடங்கினாள். இரயில் கிளம்பிற்று.
வசீர் எப்படி முயன்றும் புத்தகத்தின் தலைப்பை வாசிக்க முடியவில்லை
மீண்டும் பேச்சைத்துவங்கும் நோக்கில் “ பயணம் திருச்சி
வரைக்குமா.. இல்லை இடையிலேவா..?” என்றார்.
அவள் சலிப்பான பார்வை ஒன்றை பதிலாக தந்தாள்.
“இல்லை.. எங்கப் போறேன்னு கேட்டா உங்களுக்கு பிடிக்காதுதானே?”
“எனக்கு கேள்விகளே பிடிக்காது”முகத்திலடிப்பது போல் வந்தது பதில். வசீரின் வெளிறிய தாடியும், மிகச் சாதாரணமான
உடைகளும், அநாகரீகமான உடைமைகளும் அவளிடம்
வெறுப்பை சம்பாதித்திருக்கலாம் என நினைத்தார் முதல் பார்வையிலேயே தன்னை பிறருக்கு
பிடிக்காமல் போவதை, அது மிகத்தெளிவாக உணரப்படுவதையும் விட
கொடுமையான நிலை என்னவாக இருக்க முடியும்? ஆனாலும்
எப்பொழுதும் போல் மனம் தளரவில்லை வசீர்.
“அட உனக்கு கேள்விகளே பிடிக்காதா? அப்படின்னா நீ ஏதாச்சும் ஒரு உயர்ந்த
பதவியில் இருக்கணும்.. இல்லாகாட்டி மேத்ஸ்ல.. அதுவும் இல்லன்னா சயின்ஸ்ல
கெட்டிக்காரியா இருக்கணும்.. கரெக்டா?”
இப்பொழுது புத்தகத்திலிருந்து கண்களை எடுத்து அவரை நோக்கினாள். அவளது
பார்வையில் அவ்வளவு கடுமை இல்லாதது போல்
தோன்றியது.
“இல்லே...அதிகமா பேசறவங்களுக்கு இலக்கியமும், அரசியலும் சினிமாவும் பிடிக்கும்.. அதிகம் பேசாதவங்க கணக்குகளிலேயும்
புதிர்கள்லேயும், அறிவியலிலேயும், ஆர்வமா இருப்பாங்கன்னு லா ஆஃப் வசீர் சொல்லுது”
“லா ஆஃப் வசீர்?”
“மீ.. நாந்தான் வசீர்.. என்னுடைய அனுமானங்கள்படி சில விதிகளை
வச்சிருக்கேன். சயிண்டிஸ்ட் பேர்ல மட்டும்தான் லா இருக்கணுமா? ஏன் சாதாரண மனிதர்கள் பேர்ல லா இருக்கக்கூடாதா? வேடிக்கை என்னன்னா சட்ட விதிகளை நிர்ணயிச்சவங்க பேர்ல கூட அதிகம் லா
இல்லை.. ஆனா சயிண்டிஸ்ட் பேர்ல எத்தனை லா?”...
அவள் பதிலேதும் பேசவில்லை.
“என் பேரை சொன்ன உடனே நீ உன் பேரை சொல்லுவன்னு நினைச்சேன்..அது
போகட்டும் இப்படி பேசா மடந்தையா இருந்தா ஆர்க்மிடீஸ்-க்கு நடந்த மாதிரி எதாவது
அசம்பாவிதம் நடந்துடப் போவுது..”
என்ன என்பது போல் பார்த்தாள்.
“ஆர்க்மிடீஸ் இப்படித்தான் யார்கிட்டயும் பேசாம தீவிரமா தனக்கு
தோணுன கணக்கை மணல்ல போட்டுகிட்டே இருந்தாராம். அப்ப பாத்து ரோமானியர்கள் அவரோட நாட்டில
படையெடுத்து வந்தாங்களாம்.. ஒரு ரோமானிய படை வீரன் ஆர்க்மிட்டீஸ் கிட்ட வந்து
என்னென்னவோ கேட்டானாம். ஆனா கணக்கு சுவாரசியத்துல அவர் கவனிக்கவே இல்லையாம். தன்னை
மதிக்கலையேங்கற கோவத்துல அவர்
எப்படிப்பட்ட மேதைன்னு தெரியாம வெட்டிட்டானாம் அந்த சிப்பாய்”
“நீங்களும் அந்த சிப்பாய் மாதிரிதான் இருக்கீங்க.. ஒரே ஒரு
வித்தியாசம்.. நான் ஆர்க்மிட்டீஸ் இல்லை”
“புரியுது.. நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியுது.. என்ன புத்தகம்
படிக்கிற?”
அவள் புத்தகத்தை
அவர் பக்கம் திருப்பினாள்.
“ஓ.... Zero:
The Biography of a Dangerous Idea by Charles Seife எல்லாம் செல்ஃபி எடுத்துகிட்டு இருக்கற வயசுல நீ செஃபி படிச்சுகிட்டு
இருக்கே.. ஆனா என்னுடைய லா ஆஃப் வசீர் வொர்க் அவுட் ஆயிடுச்சே கவனிச்சியா? உனக்கு கணக்கில் ஆர்வம் அதிகம் கரெக்ட்தானே?”
ஆமாம் என்பது போல் தலையாட்டினாள்.
“செஃபி படிக்கறே ஓ.கே.. சோஃபி தெரியுமா உனக்கு?”
“மேரி சோஃபி ஜெர்மெயின்.. பிரான்ஸ் -ல வாழ்ந்த மிகப்பெரிய கணித மேதை..
சார் நான் எம். எஸ்.சி மேதமெடிக்ஸ்.. இப்ப பி.ஹெச்.டி பண்ணிகிட்டு இருக்கேன்”
“ஓ.. குட்..” இரயில் அடுத்த ஸ்டேஷனில் நிற்கும்
உத்தேசத்தில் வேகத்தைக் குறைத்தது. மெல்ல எழுந்தவர் “ ம்.. இது கேள்வி இல்லை .. ஒரு அக்கறை உனக்கு சாப்பிட ஏதாவது வேணுமா?”
“நோ தேங்க்ஸ்”
வசீர் கீழே இறங்கினார்.
அப்படி ஒன்றும் கூட்டம் அந்த ஸ்டேஷனில் ஏறவில்லை. வேற இடத்துக்கு
மாறிவிடலாமா என்று யோசித்தாள். அடுத்த அடுத்த இருக்கைகளை பார்க்கும் போது அவ்வளவு
சௌகர்யமாக உணரவில்லை. அதுவும் இல்லாமல் பெரியவரை பிடிக்கவில்லை என்றாலும் அவர்
முகத்தில் அடிப்பது போல செய்வது அவளுக்கே இப்பொழுது சரியாகப் படவில்லை.
இரயில் புறப்படும் சமயத்தில் தன் இரு கைகளிலும் நிலக்கடலைப்
பொட்டலங்களை எடுத்தபடி ஏறினார் வசீர். அவளிடம் ஒன்றை நீட்டினார்.
“நான் தான் வேணாம்னு சொன்னேனே” கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.
“சரி.. சரி.. பாக்க வச்சி சாப்பிடறது தப்பு இல்லையா லீலாவதி... அதான் கேட்டேன்.” இரண்டு பொட்டலங்களையும் பக்கத்தில் வைத்துவிட்டு அவளை மர்மப்
புன்னகையுடன் பார்த்தார்.
“லீலாவதி.. என் பேர் எப்படி தெரியும் உங்களுக்கு?”
“அதான் ரிசர்வேஷன் சார்ட்டுல இருக்கே.. உன் சீட் நம்பரை வச்சி
கண்டுபிடிச்சேன்”
“உங்களுக்கு வயசு என்னாவுது?”
“72.. “
“இல்லை சின்ன வயசுல எத்தனை சேட்டை பண்ணியிருப்பிங்கன்னு யோசிச்சேன்”
“
ஆனா லீலாவதிக்கும் மேத்ஸ்க்கும் ஒரு
அந்நியோன்யமான தொடர்பு இருக்கு.. தெரியுமா?”
“ மேத்ஸ்ல
யாருக்கெல்லாம் இண்ட்ரெஸ்ட் இருக்கோ அவங்களுக்கு எல்லாம் கண்டிப்பாத் தெரியும்..
12 ஆம் நூற்றாண்டுல வாழ்ந்த பாஸ்கராவோட மகள் பேருதான் லீலாவதி. பாஸ்கரா ஒரு கணித
மேதை அது மட்டும் இல்லே.. ஜோசியத்துலயும்
கெட்டிக்காரர்.. அவரு லீலாவதி ஜாதகத்தை கணிச்சாராம். அதுல லீலாவதி விதவையாத்தான்
காலம் முழுக்க கழிக்கணும்னு தெரிஞ்சது.. அத எப்படி தவிர்க்கறதுன்னு மண்டையை
உடைச்சுகிட்டு கடைசியில ஒரு குறிப்பிட்ட நேரத்துல கல்யாணம் நடந்தா
தப்பிச்சுடலாம்னு கண்டுபிடிச்சார். குறிப்பிட்ட நிமிஷத்துல கல்யாணம்னு முடிவு
செஞ்சார். அவ்வளவு துல்லியமா அப்பல்லாம்
ஏது கடிகாரம்? அதனால என்ன பண்ணினாராம்
அன்னிக்கு நாள் துவங்கறப்போ ஒரு கிண்ணத்துல கணக்கா மணலை நிரப்பி கீழ்
பக்கம் சின்ன துளையை போட்டுட்டார்.
மெல்ல மணல் இறங்க, இறங்க குறிப்பிட்ட நிமிஷத்துல கிண்ணம் காலியாகிடும்..அப்ப சரியா
கல்யாணம்னு முடிவு பண்ணினார்.
லீலாவதிக்கு விளையாட்டு குணம். அந்த கிண்ணத்தை ஆர்வத்துல எட்டி
பார்த்தாளாம். அப்ப பாத்து அவ கழுத்துல இருந்த மாலையில இருந்த முத்து ஒண்ணு நழுவி
அந்த கிண்ணத்துல விழுந்து, துளையை அடைச்சிடுச்சாம்.. அதுல கணக்கு தப்பி நேரம் மாறி வேற
வழியில்லாம கல்யாணம் நடந்துச்சு. கொஞ்ச நாள்லயே அவ விதவையாயிட்டா.. அதுல மனசு
உடைஞ்சு போன பாஸ்கரா, மகளோட மனசுக்கு ஆறுதலா இருக்கட்டும்னு அவர் எழுதுன கணித புத்தகத்துக்கு லீலாவதின்னு
பேர் வச்சார். அந்த புத்தகத்துல பல கணக்கு புதிர்களை லீலாவதி கேக்கற மாதிரியும், அதுக்கு தான்
பதில் சொல்றமாதிரியும் அமைச்சிருக்கார்.
அதானே”
“ இல்ல
இந்தக் கட்டுக்கதை ரொம்ப நாளா உலவிகிட்டு கெடக்கு.. உண்மையில லீலாவதி அதி
புத்திசாலி. சின்ன வயசுலேயே கணக்குல புலி. அவங்கப்பா பாஸ்கரா கிட்ட அவ கேட்ட
கேள்விகள் எல்லாம் ரொம்ப நுட்பமானவை. பொம்பளை புள்ளை அவ்வளவு புத்திசாலித்தனமா
இருக்கறதை அந்தக் காலத்து பெரிய்ய்ய மனுசனுங்களுக்கு இஷ்டமில்லை. பாஸ்கரா தன்கிட்ட
லீலாவதி கேட்ட கேள்விகளையும் அதற்கான பதில்களையும் தொகுத்தப்போ எவ்வளவு தடுத்தும்
கேக்காம அதுக்கு லீலாவதின்னு பேர் வச்சுட்டார். அதனால இப்படி ஒரு கதையை கிளப்பி
விட்டுட்டாங்க.. “
“ இண்ட்ரஸ்டிங் எனக்கே என் பெயருக்கு இப்படி ஒரு மகத்துவம் இருக்கறது
இப்பதான் தெரிஞ்சுது”
“அதுல லீலாவதியின் அடையாளமே கேள்விகள்தான்.. உனக்கோ கேள்விகளே
பிடிக்காது”
“அந்த லீலாவதியும் கேள்விதான் கேக்கறா.. அவளை யாரும் கேள்வி கேக்கலை..
அப்படித்தானே?”
“ஆஹா.. மடக்கிட்டியே..”
பெருமிதத்துடன் சிரித்தாள் லீலாவதி
“ஆமா.. இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. என்ன
படிச்சிருக்கிங்க?”
“அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி. இப்ப மாஸ்டர் டிகிரிக்கு சமானம்.. எனக்கும்
கணக்குன்னா ரொம்ப இஷ்டம். ஆனா படிக்க வசதியில்லை. தச்சு வேலைதான் குலத்தொழில்.
அதுவும் கணக்கா செஞ்சாத்தானே கச்சிதமா இருக்கும். கணக்கு இல்லாம எதுவுமே இல்லை..
சமையல்லேர்ந்து சயின்ஸ் வரைக்கும் எல்லாத்துக்கும் கணக்குதானே உயிர்நாடி. ஆமா நீ
என்ன பண்ணிகிட்டு இருக்கே?”
“டீச்சர்.. மேத்ஸ்தான் எடுக்கறேன். இப்ப கூட திருச்சியில ஒரு ட்ரெய்னிங் கிளாஸ்
அதுக்குத்தான் போய்கிட்டு இருக்கேன்.. நீங்க?”
“சொந்தக்காரவங்க வீட்டு விசேஷத்துக்கு..கணக்குன்னா எனக்கு ஒரு வெறி..
ஒரு விதத்துல தச்சனும் கணக்கனும் ஒண்ணுதான்.. காதுலயோ, விரலிடுக்கிலயோ சதா ஒரு பென்சில் இருக்கும், மனசுக்குள்ள ஒரு ஃபார்முலா ஓடிகிட்டே இருக்கும், ஸ்டெப் பை ஸ்டெப்பாதான் ப்ரொசிட் பண்ணுவாங்க.. ஒரு புள்ளி பிழையானா..
விடை சரியா வராது.. இல்லே ..எனக்கு கொஞ்சம் பசிக்குது.. நிலக்கடலை சாப்பிடலாமா?”
இப்பொழுது மறுக்காமல் வாங்கிக்கொண்டாள்.
“ஆக்சுவலா நிலக்கடலை எத்தனை சுவையோ அதை விட பல மடங்கு சுவை சில சமயம்
அத மடிச்சிருக்கிற பேப்பர்ல கிடைக்கும்.. ஒரு முடிவு தெரியாத கதை.. பதில் இல்லாத
கேள்வி, விடை இல்லாத புதிர்..இப்படி.. நீ
வாசிச்சிருக்கியா? மத்த தின்பண்டம் தீர்றப்போ ஒரு
வருத்தம் வரும் ஆனா பொட்டலத்துல கிடைக்கிற தின்பண்டம் தீரும்போதுதான் இன்னும்
சுவாரசியமா இருக்கும்.. அந்த பேப்பர்ல என்ன இருக்கும்கற குறுகுறுப்பு.. பேப்பரை
விரலால ஒரு தட்டுத் தட்டிட்டு படிக்கறச்சே ஒரு அலாதி சுகம் கிடைக்கும்
கவனிச்சிருக்கியா?”
ரசனையான மனிதர் என்று நினைத்துக் கொண்டாள்.” ஆமா நானும் ஒரு துண்டு பேப்பர் ரசிகைதான்..” என்றாள்.
“அப்ப ஒண்ணு பண்ணுவோம்.. கடலை தீர்ந்ததும் கடைசியா அந்த பேப்பர்ல என்ன
நம்பர் வருதோ அத வச்சு ஒரு புதிர், ஒரு சுவாரசியமான விஷயம் இப்படி ஏதாவது
சொல்ல முடியுமான்னு பாப்பமா?”
சுவாரசியமாகத்தான் இருக்கு என்று நினைத்தபடி சாப்பிடத்துவங்கினாள்.
சிறு குழந்தையின் கொண்டாட்டம் போல் குஷியான அவரிடம் இரயில் பயண குதூகலம்
தொற்றிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். பஸ் பிரயாணத்திலேயோ, விமான பிரயாணத்திலேயோ கிடைக்காத ஒரு உன்னத உறவு இரயில் பயணத்தில் சக
பிரயாணிகளிடம் கிடைத்துவிடும். தற்காலிகமானதுதான் என்றாலும், ஒரு நெருக்கமான பிணைப்பை இரயிலின் சக்கரங்கள் தடதடவென
தைத்துவிடுகின்றன.
“என்னோட பேப்பர்ல பக்கத்துக்கு நம்பர் போட்டிருக்கு..139.. ம்ம்.. எனக்கு சட்டுன்னு பிள்ளையோட சார்புபகா எண்கள்தான்
ஞாபகத்துக்கு வருது.. “
“அது சார்புபகா எண்.. சரி.. ஆனா .. அது என்ன பிள்ளையோடது?”
“
சுப்பையா சிவசங்கர நாராயணப்பிள்ளை..
குற்றாலத்துக்காரரு.. இராமனுஜருக்கு அப்புறம் இவர்தான் இந்தியாவின் சிறந்த கணித
மேதைன்னு இராமானுஜருக்கு உதவி செய்த ஹார்டிங்கறவரு சொல்லியிருக்காரு.. இவரும் சின்ன வயசுலேயே ஆக்சிடெண்ட்ல செத்துப்போயிட்டாரு.. இவர்தான்
சார்புபகா எண்களை முதல்ல எடுத்து சொன்னவர்.. அது சரி உன்னோட பேப்பர்ல..”
“சாரி இதுல நம்பர் எதுவும் இல்லே.. ஏதோ ஒரு இங்கிலீஷ் பாராகிராப்தான்
இருக்கு. ம்.. ஒ.கே.. இதுல இருக்கற லெட்டர்ஸை வச்சு ஒரு புதிர்.. I
என்ற எழுத்தை I ஆல் பெருக்கும் போது அதன் மதிப்பு ME
என்று வருகிறது. அந்த ME யை ME ஆல் பெருக்கினால் வருவது SHE. அப்படின்னா SHE
ன்
மதிப்பு என்ன?”
“கெட்டிக்காரி.. நீ எல்லாமும் பெண்மையில் அடக்கம் அப்படிங்கறதுதானே
உன் கணக்கு.. ரிவர்ஸ்ல போகவேண்டியதுதான்.. I ன்னா சிங்கிள் டிஜிட், ME ன்னா டபுள்
டிஜிட்.. SHE ன்னா டிரிபிள் டிஜிட்.. Iன் மதிப்பு 3ன்னு வச்சிகிட்டா ME ன்னு ஆன்சர் கிடைக்காது.. அப்ப I ஓட மதிப்பு 4 இல்லே 5 ஆகத்தான் இருக்கணும்.. 5ன்னா MEக்கு சரியா வராது அப்ப 4 தான் சரி ம்.. அப்படின்னா SHE வந்து 256 கரெக்டா?”
“அபாரம் எப்படி இவ்வளவு சீக்கிரத்துல.. நிஜமாவே நீங்க ஜீனியஸ் தான்”
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.. நாம ஒரு கண்ணை இழந்துட்டு
இன்னொரு கண்ணை மட்டும் வச்சிருக்கோம்”
“புரியலை”
“தமிழ் எண் எல்லாத்தையும் விட்டுட்டோம்.. உனக்குத் தெரியுமா?”
“
ம்ஹூம்... தெரியாது”
“தெரிஞ்சிருக்கணும்.. உங்க ஸ்டூடண்ட்ஸ் ஒரு நாள் திடீர்னு கேட்டா என்ன
சொல்லுவே?”
“அவங்க தமிழ்ல சாதாரணமா எழுதறதே பெரிய விஷயம்.. அவனுங்க எங்க
நம்பரையெல்லாம் கேட்க போறானுங்க.. அதுவுமில்லாம எப்படி ஞாபகம் வச்சிக்கிறது?”
“பழக்கு... தன்னால ஞாபகம் வந்துடும்.. ‘கடுகு, உளுந்து, ஙயந்து, சலிச்சு ருசிச்சு சாப்பிட்டேன் என்று அவன் கூறினான்’.. அப்படின்னு
தமிழ் எண்களை ஞாபகம் வச்சிக்க ஒரு வாசகம் உண்டு.. இதுல உள்ள சொற்கள்ல இருக்கற மொத எழுத்து மாதிரிதான் தமிழ் எண்கள் இருக்கும்.. வரிசையா பொருத்தி பாரு”
“உங்களுக்கு சுகர் உண்டா”
“அல்லாவோட கருணையால எந்த வியாதியும் இல்லே”
தனது பேக்கில் இருந்து ஒரு டிஃபன் பாக்ஸை எடுத்தாள். அதிலிருந்த
சுழியன்களை அவரிடம் தந்தாள்
“எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு அம்மா செஞ்சுதந்தாங்க.. பயப்படாம
சாப்பிடுங்க.. நான் மயக்க மருந்து எதுவும் வைக்கலை..”
“இந்த சுழியன் செஞ்ச செலவு கூட என்கிட்ட தேறாதே அதனால தைரியமா
சாப்பிடுவேன் .சுழியனை பார்த்ததும் சுழியம் ஞாபகம் வருது.. ஆமா இந்த புத்தகத்துல
என்ன சொல்றாரு உன் செஃபி”
“பூஜ்ஜியம்தான் எல்லாத்துக்குமான தொடக்கம்.
எப்படி சக்கரம் அறிவியலின் முதல் கண்டுபிடிப்புன்னு சொல்றமோ.. அது போல கணிதத்தின்
ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு பூஜ்ஜியம்.. பூஜ்ஜியம் புழக்கத்துக்கு வராத ஐரோப்பாவின்
காலம் இருண்ட காலம்னு சொல்றாரு”
“அப்புறம் “சுழியனை ருசித்து சாப்பிட்டபடியே
சுவாரசியமாக கேட்கிறார்.
“இந்தியர்கள்தான் பூஜ்ஜியத்துக்கு
இட மதிப்பு தந்து முதல்ல பயன்படுத்தனவங்க. அரேபிய வணிகர்கள் அத தெரிஞ்சுகிட்டு தங்களோட அரபு எண்களோட அத சேர்த்துகிட்டாங்க. அல் குவாரஸ்மிதான் பூஜ்ஜியத்தோட மகத்துவம்
தெரிஞ்சு அத அப்படி பயன்படுத்தலாம்னு ஒரு புத்தகம் எழுதுனாரு. அவர்கிட்டே இருந்து
இத்தாலியர் ஃபிலிப்போ புருனெல்ஷி அப்படிங்கறவரு
இத ஐரோப்பியர்களும் பயன்படுத்தனும்னு ரெக்கமண்ட் பண்ணினாராம். இந்தோ அரபி
கூட்டுறவின் அற்புதம்தான் சுழியம்.. இல்லன்னா ரோமன் எண்கள்ல பத்தாயிரத்துக்கு அப்புறம்
எழுதனும்னா கூட நுரை தள்ளியிருக்கும்”
“ஹா.. ஹா.. “ சிரிக்கிறார் வசீர்.
திருச்சியை நெருங்கியது இரயில். அவரவர்கள் தங்கள் உடைமைகளை
அவசரம் அவசரமாக லக்கேஜ் கேரியரில் இருந்து
இறக்க முயன்றனர்.
“உங்களை கூப்பிட உங்க பிள்ளைங்க யாராச்சும் வர்றாங்களா?.. என்ன பண்றாங்க உங்க பிள்ளைங்க?”
வசீர்-இன் உதடுகளில் நெளிந்து கொண்டிருந்த சிரிப்பு சட்டென்று
நின்றது. பின் சுதாகரித்துக் கொண்டு சொன்னார் “ ஒரு பொண்ணு... மேத்ஸ் டீச்சரா இருக்கா. இப்ப பி.ஹெச்.டி பண்றா
கணக்குல மகா கெட்டிக்காரி.. அவளுக்கு கேள்விகள் -ன்னாலே பிடிக்காது..” ஒரு கணம் புரியாமல் திகைத்தாள் லீலாவதி.
வசீர் தனது உடைமைகளை சரி செய்தபடி சொன்னார் “ ஆனா எனக்கு கேள்விகள்னா ரொம்ப இஷ்டம்.. ஒரே ஒரு கேள்வியைத் தவிர..
அந்த ஒரு கேள்வியை எதிர் கொள்ள முடியாமத்தான் 50 வருஷமா நானும் என் மனைவியும் தவிக்கிறோம்.. ஒவ்வொரு பிரயாணத்துலயும்
எனக்கு ஒரு வாரிசு கிடைக்கும்.. போன பிரயாணத்துல கிடைச்ச பையன் ஒரு பிளம்பர்..
அதுக்கு முன்னாடி ஒரு பேரன் கிடைச்சான் படு சுட்டி.. ஃபேஸ்புக்கில எனக்கு
ஃபிரெண்ட் ரிக்வஸ்ட் தர்றேன்னு சொன்னான்.. எனக்குத்தான் பார்க்க முடியலை.. உனக்கு
என் வலி புரியுமான்னு தெரியலை.. முகம் தெரியாத நபர்கள் என்னை மாதிரி வயசாளிகளை
கேக்கற முதல் கேள்வி இதுதான்.. நீ நல்ல வேளை கடைசியா கேட்ட..”
“எனக்கும் உங்க வலி புரியும்.. ஸ்கூல் டேஸ்ல ஒவ்வொரு வகுப்பு
தாண்டுறப்பவும் நடக்கற அறிமுக வகுப்பை நான் வெறுப்பேன். ஏன்னா அதுல தவறாம ஒரு
கேள்வி இருக்கும் .. உங்க அப்பா என்ன பண்றாருன்னு.. என்ன சொல்றது.. முகத்தைக் கூட
ஞாபகம் வச்சிக்க முடியாத வயசுல ஈவு இரக்கம் இல்லாம விட்டுட்டு போயிட்டார்னா..
எப்படி வலியில்லாம அந்த நிமிஷத்தை கடக்கறது..?.. ஒவ்வொரு பிள்ளையும் அவங்க அப்பாவோட இடுப்பைக் கட்டிகிட்டு டூ வீலர்ல
சொகமா போறச்ச.. கடை வாசல்ல நின்னுகிட்டு ‘வேணுங்கறதை
வாங்கிக்க'ன்னு சொல்ற யாரோ ஒரு அப்பாவோட குரல்
கேக்கறச்ச.. ‘போய் போன் பண்ணு'ன்னு பஸ் ஜன்னலுக்கு கீழே நின்னு கம்மலா கையசைக்கறப்ப எல்லாம் ஒரு
கத்திய எடுத்து குரல்வளையில செருகிற மாதிரி துக்கம் அடைக்கும்.. “லீலாவதியின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது..
துடைக்கவும் மறந்து “ காலேஜ் அப்ளிகேஷ்ன்ல, எல்லா
பிள்ளைகளும் வெறும் கையெழுத்து மட்டும்தான் போடுங்க.. அப்பாதான் எல்லாருக்கும்
எல்லாத்தையும் ஃபில்லப் பண்ணுவார்.. நான் மட்டும் நானேதான் எல்லாத்தையும்
செய்யணும்.. அம்மாவுக்கு எழுத படிக்கத் தெரியாது.. அப்பாவோட முகத்தை ஒரு கரி
படிஞ்ச போட்டோவுல பார்த்தது.. கலங்கலா ஒரு புகை மாதிரிதான் அப்பாவோட உருவம் எனக்கு
தெரியும்.. இப்பவும் பஸ்ல தூக்கமே வரலன்னாலும் அப்பாவோட தோள்ல ஒரு பூனைக் குட்டி
மாதிரி தூங்கிட்டுப் போற பெண் குழந்தைகளை பார்த்தா பொறாமையா
இருக்கும் அம்மா இல்லாத உலகம் எப்படின்னு எனக்கு அனுமானிக்கத் தெரியலை.. பெண்
குழந்தைகளுக்கு அப்பா இல்லாத வாழ்க்கை சூன்யம்.. “
“சூன்யத்திலேர்ந்துதானே எல்லாம் துவங்குது.. இந்த உலகமே
சூன்யத்திலேர்ந்துதான்.. ஞான சூன்யம்னு சொல்றமோ.. உண்மையில் ஞானம்தான் சூன்யம்னு
சில சமயம் தோணுது.. அறியாமைதான் அற்புதம் இல்லையா லீலாவதி.. மேத்ஸ் மாஸ்டர்...
சுழியத்தின் மகத்துவம் தெரிஞ்சவ நீ.. ஒன்றுமில்லாத ஒன்று என்று உலகத்துல ஒன்றுமே
இல்லைங்கறத புரிஞ்ச பெண்தானே நீ?..”
இரயில் பிளாட்பாரத்தின் அருகே சென்றது. மனிதர்கள் ஏறும் உத்வேகத்தில்
இரயில் பின்னாலேயே ஓடி வந்தார்கள். அவர்களது மங்கலான முகங்கள் மனதில் ஓடி பின்
மறந்தன.
“
புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்.. அறிவு சமாதானம்
ஆயிடுது.. மனசு சமாதானம் ஆகறதில்ல.. எப்பவாச்சும் ஏதாவது ஒரு தெருவை கடக்கறச்சே
யாராவது அவங்க குழந்தையா செல்லமா பப்பின்னோ.. பாப்புன்னோ கூப்புடறச்சே மனசு
ஏங்குது அப்பா உயிரோட இருந்தா எப்படி என்னை செல்லமா கூப்புடுவார்னு.. லீலுன்னா..
லில்லின்னா.. லில்லுன்னா.. “ அடக்கமாட்டாமல் அழுதாள் லீலா..
“மகளே.. “ வசீரின் குரல் தழுதழுத்தது.. “ஒரு வேளை அவர் மகளேன்னு கூட கூப்பிடலாம்.. நான் உன்னை அப்படியே
கூப்பிடறேன்.. எல்லா உதாசீனங்களையும், வெறுப்புகளையும்
உதறித்தள்ளிட்டு, வம்படியாவது
எல்லார்கிட்டயும் பேச்சு குடுத்து ஒவ்வொரு பிரயணத்துலயும் என் பிள்ளைகளை தேடி சம்பாதிக்கிறேன்.. நீ என்
அபூர்வமான அறிவான மகள்.. வாழ்க்கையே ஒரு பிரயாணம்தானே.. பிரயாணத்தின் ஒவ்வொரு
தருணத்திலயும் நமக்கான உறவுகள் காத்துகிட்டுதான் இருக்கு”
“
இப்பவும் கூட நீங்க என் கூட வரலாமே ... வாப்பா “
என்றாள் லீலாவதி
“அடுத்த பிரயாணத்தில் தந்தை இல்லாத மகனோ, மகளோ எனக்காக.. இந்த பிள்ளை இல்லாத
தந்தைக்காக... சுழியன்களோட உட்கார்ந்திருப்பாங்க..
உனக்காகவும் யாராவது காத்திருக்கலாம்.. நாம அந்த புதிய முகங்களை கற்பனை
பண்ணிகிட்டே சொச்ச காலத்தை கழிப்போம்”
இரயில் நின்றது.. இருவரும்
இறங்கி அவரவர் வழிகளில் நடந்தனர். ஊர்களை நோக்கி பயணிக்கும் ஆவலில் மனிதர்கள்
தாவினர்.. அவர்களுக்கான இருக்கைகள் பெருமூச்சுடன் காத்திருந்தன. ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>