இருள் தீர எண்ணிச் செயல்
- நெய்வேலி
பாரதிக்குமார்.
பாலஜோதி இராமச்சந்திரனின் சுழியம் நாவலை முன்வைத்து
இன்றைய
இலக்கியச் சூழலில் ஒரு எழுத்தாளன் எத்தனைச்
சிறுகதைகள் எழுதினாலும் சமகாலத்தில் அவனைப்பற்றிய மதிப்பீடு பெரிதாக
பேசப்படுவதில்லை. புதுமைப்பித்தன், மௌனி காலம் வேறு. அது சிறுகதைகளுக்கான காலம்.
இன்றைக்கு நாவலின் வழியாகத்தான் ஒரு எழுத்தாளன் கவனப்படுத்தப்படுகிறான். அதுவும்
தலையணை அளவுக்கு எழுதுபவர்களுக்கு எல்லோருடைய பட்டியலிலும் இடம் கிடைத்துவிடும்.
நாவல் எழுதுவது என்பது உரிய கருப்பொருள், அதற்கான தரவுகளைத் தேடிக் கண்டடைதல்,
படைப்பாளிகளுக்கான நேர ஒதுக்கீடு ஆகியவற்றைப் பொறுத்து தள்ளிப்போடப்பட்டு ,
தள்ளிப்போடப்பட்டு பலருக்கு அது நித்தியக் கனவாகவே ஆகிவிடுகிறது.
ஒரு
பெரிய இலக்கிய அமைப்பு அல்லது புகழ் பெற்ற பதிப்பகங்கள் நாவல் போட்டிகளை அறிவித்து
முறையாக அவற்றை தேர்வு செய்து நூல்களாக
பதிப்பிப்பது ஒரு எழுத்தாளனை நாவல் எழுதுவதற்கான உந்துதலை, நாள் கட்டுப்பாட்டை
உருவாக்கி அவனது எழுத்துக்கள் குளத்து நீருக்குள் அமிழும் மழைத்துளி போல
கரைந்துவிடாமல் வாசகர் நெஞ்சில் பெய்யச் செய்கிறது. அந்த வகையில் ஸீரோ டிகிரி
பப்ளிகேஷனின் இந்த முயற்சி எழுபதுக்கும் மேற்பட்டவர்களை புதிதாக சிந்திக்கவும்,
எழுதவும், பத்து புதிய நாவல்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்யவும்
முன்வந்தது வரவேற்கத்தக்கது.
தேர்வு
பெற்ற பத்து நாவல்களையும் வாசிக்க ஆசைதான். ஆயினும் பாலஜோதி ராமச்சந்திரன் எழுதிய
சுழியம் நாவலை வாசிக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. நாவலுக்காக அவர் தேர்வு செய்த
கரு பிரம்மிப்பை ஏற்படுத்தியது. கூடவே அவர் தேர்வு செய்த மொழிநடைக்காக அவரை
நெஞ்சார அணைத்து மகிழ வைக்கிறது. முடிந்தவரை தூயத் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி
இருக்கிறார். மகிழுந்து, தானி, இருக்கையின் கச்சை, துள்ளுந்து இப்படி நவீன இலக்கியவாதிகள் பயன்படுத்தத்
தயங்கும் சொற்களை எல்லாம் நாவல் நெடுக பயன்படுத்தி இருக்கிறார். குறிப்பாக
ஸ்மார்ட் ஃபோன்க்கு திறன்பேசி என்கிற சொல் இனி பரவலாகப் பயன்பாட்டுக்கு வரலாம்,
வரவேண்டும். ஒரு எழுத்தாளன் தன் மொழிக்கு செய்யக்கூடிய தார்மீக கடமை அது. அறிவியல்
சொற்களுக்கு இணையாய் தாய்மொழியில் கலைச் சொற்களை உருவாக்குவது எத்தனை அவசியமோ
அத்தனை அவசியம் அவற்றை பயன்பாட்டில் கொண்டு வருவது. அதனை ஒரு படைப்பாளிதான் செய்ய
முடியும். பாத்திரங்களுக்குக் கூட எழிலன், யாழினி, கரிகாலன் என தமிழ்ப் பெயர்களையே
சூட்டியிருப்பது நவீன இலக்கிய உலகில் நிச்சயம் கொண்டாடவேண்டிய ஒன்று.
நாவலின்
மையம் இயல்பான பாலுணர்வுக்கும், கட்டற்ற இச்சையின் பொருட்டு எல்லாவகையிலும் தீர்த்துக்கொள்ள முயலும் அதீத காமஉணர்வுக்கும்
இடையிலான வேறுபாட்டை உணர்த்துகிறது. இப்படி
இரண்டு வரிகளில் எளிமையாக விளக்கிவிட முடியாத அதிமுக்கியமான விஷயத்தை ஒரு
நாவலின் வழியாகத்தான் நுட்பமான பாத்திரங்கள் வழியே ஒரு விவாதவெளியை கட்டமைக்க
முடியும். அந்த வகையில் நாவலுக்கான பொருத்தமான கரு. அதனை பின்னணியாக வைத்து ஒரு
கதைக்களத்தை உருவாக்கிய விதத்தில் பாலஜோதி தனித்து நிற்கிறார்.
என்
வாசிப்பின் புரிதலின் வழியே சொல்வதானால் இந்த நாவலின் நெடுக சொல்லப்படும் பேய்
என்கிற கற்பிதம் பொது மனநிலையில் உருவகித்துள்ள பேய் என்று நான் நினைக்கவில்லை. காமம்
என்னும் அகப்பேய் என்றுதான் தோன்றுகிறது. பேய் என்றால் நடுநிசியில்தான் வரவேண்டும்,
மல்லிகை மணம், கொலுசொலி, விட்டத்தில் பாயும் பூனை, சொம்பு உருளுதல் என பேய்க்கான
அத்தனை மனப்பிரம்மைகளையும் உருவாக்கியது திரைப்படங்கள்தான். காட்சிக் கலை
வடிவத்தில் அது தவிர்க்க முடியாதது. புற வடிவமான பேய் என்னும் கற்பிதங்கள் உயிர்
அச்சத்தை உருவாக்குவதுதான். ஆனால் அகப்பேய் வடிவமற்றது அந்தப் பேயாட்டம்
அடையாளங்களற்றது நாவலில் சுட்டப்படும் பேய் அதுதான்.
பயோடிக்
வுமன் ,பயோடிக் மேன் என்கிற அறிவியல் சாத்தியங்களை பயன்படுத்தி இருப்பது அவருடைய
சாமர்த்தியமான முடிவு என்றுதான்படுகிறது. அதை எந்த அளவு பயன்படுத்த வேண்டும்
என்பதிலும் பாலஜோதிக்கு தெளிவு இருக்கிறது. அதன் அதீத சக்திகளை, விஞ்ஞான
வியப்புகளை எல்லையற்ற வகையில் விரித்துக் கொண்டே போகலாம். அப்படி அவர்
செய்திருந்தால் இது வெறும் அறிவியல் புனைகதையாக மாறி இருக்கும். சைபாவை வியக்க
வைக்கும் ஒரு இடம் அது எழிலனோடு விவாதிக்கின்ற இடம்தான். அது அறிவு சார்ந்த அதன்
வெளிப்பாடு. பெண்ணாக இருந்தாலும் பயோடிக் வுமனாக இருந்தாலும் அறிவுதான் வியக்க
வைக்கக் கூடிய விஷயமாக இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்புதான் படைப்பாளியை
வேறுபடுத்திக் காட்டும் சிந்தனை.
சுய
ஒழுக்கக் கட்டுப்பாடு என்பது தனித்தீவில் பேணப்படுவது அல்ல தன்னைச் சுற்றிலும்
பெண்கள், அதிலும் தன்னையே விரும்புகிற பெண்கள், அதற்காகவே விரும்பும் பெண்கள்
இருக்கும் தருணங்களில் சுய ஒழுக்கம்தான் ஒரு மனிதனை தனித்துவமானவனாக அல்லது அசல்
மனிதனாக காண்பிக்கும். எழிலன் அப்படியானவனாக வாழ்நாள் முழுவதும் எல்லா
சந்தர்ப்பங்களிலும் இருப்பது அந்தப் பாத்திரத்தின் உன்னதம். இடையில் சைபாவுடன் ஒரு
இரவைக் கழிப்பதும் அந்த பேரனுபவத்துக்குப் பிறகு யாழினியை சந்திக்கின்ற
காட்சியும், தன் மீது அதீத காதலுடன் இருக்கும் அவள் விரும்பாத போது தொடக் கூட
முயற்சிக்காமல் தனித்து உறங்குவதும். அந்தப்பாத்திரத்தை இடறல் இல்லாமல் அழகாக
வடிவமைத்திருக்கிறார்.
பயோடிக்
வுமனுடன் இருக்கும் எழிலன் யார்? அது அவனுக்குள் காப்பாற்றி வைத்திருந்த இயல்பான
பாலுணர்வு. எப்பொழுது எப்படி வெளிப்பட வேண்டும் என்கிற அறிதலுடன் மலர்ந்த காமம்.
நாவலின் மற்றொரு அற்புத பாத்திரப் படைப்பு கரிகாலன். சமூகத்தால் வகுக்கப்பட்ட
அறக்கட்டுப்பாடுகளை வாழ்வியல் சூழல் காரணமாக மீறுகின்ற கதாபாத்திரம். ஆனால் தான்
உயிர் பிழைத்தல் காரணமாகவே அதைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் என்பதை விளக்கும்
கரிகாலன். தனக்கு சந்தர்ப்பங்கள் வாய்த்தும் அதில் பெண்களை காம இச்சையுடன்
அணுகியதே இல்லை என்று சொல்லும்போதும் சைபாவை அம்மா போல இருக்கிறாள் என்று
முத்தமிடுவதும் அந்தப் பாத்திரத்தை புரிந்து கொள்ளமுடிகிறது.
பாலு
வழியாக தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வுகளை எத்தனை அரசியல் காழ்ப்புகள் சீரழிக்க
காத்திருக்கின்றன என்பதையும் அது ஒரு இனத்துக்கு எதிரான அநீதி என்பதையும் உரக்கச்
சொல்கிறார் பாலஜோதி. இந்த அநீதிகளைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு நவீன இலக்கியத்தில் இடமே இல்லை என்னும்
எழுதப்படாத கோட்பாட்டில் இயங்கும் சமகால இலக்கியவாதிகள் மத்தியில் துணிந்து எழுந்த
நவீனக்குரல் பால்ஜோதியினுடையது. அதற்காக அவரை வணங்குகிறேன். நவீன இலக்கியவாதிகள்
கட்டுரைகள் எழுதினாலும் மேடைகளில் பேசினாலும் தொடர்ந்து இந்தத் தமிழர்கள் எத்தனை
இழிவானவர்கள் தெரியுமா, தமிழினம் எவ்வளவு மோசமானது தெரியுமா, தமிழ் ஒன்றும் அத்தனை
வருடங்கள் தொன்மையானதில்லை. என்று உளறுவதைக் கேட்டுக் கேட்டு அவர்கள் மீது
கசப்புணர்வே மிஞ்சுகிறது. அவர்களின் அவ்விதமான பேச்சுக்களும் எழுத்துக்களும்
குளியலறை அழுக்குகள் போல பாதாள சாக்கடைகளில் காலம் கரைத்துவிடும் என்கிற எளிய
உண்மையைக் கூட உணராமல் தொடர்ந்து
வன்மத்துடன் இந்த அவச்செயலை செய்தபடியே இருக்கிறார்கள். தமிழ் என்பது உலகத்தின்
மிகத் தொன்மையான மொழி, தமிழினம் என்பது அறிவும் நாகரீகமும் அறக்கோட்பாடுகளும்
கொண்ட நீண்ட வரலாறு கொண்டது என்பதை காலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும்
நிரூபிக்கும். அப்பொழுது அவர்களது உளறல்கள் செல்லாக் காசாகிவிடும்.
நாவலுக்காக
சில தரவுகளைத்தேடி புதிய விஷயங்களை சொள்ளவிழைவது ஒரு படைப்பாளியின் அடுத்ததான கடமை
என்றே நினைக்கிறேன். கூனிமாதோரை பற்றிய விவரணை மிகப்புதிது.வெப்பத்தையும்
குளிர்ச்சியையும் ஒரே நேரத்தில் உள்ளடக்கியது புனைச்சி உறுப்புகள் என்பதையும்
கூனிமாதோரை அதற்கான் நெல் வகை என்பதையும் அவர் இணைத்துக் குறிப்பிடுகையில் தமிழர்
நுண்ணறிவு எது குறித்தும் அவர்களின் தெளிவான பார்வை ஆகியவை வியக்க வைக்கின்றன.
அதைவிடுத்து ஒரு இனத்தின் பெருமையை ஒரு சிலர் தற்பெருமை காரணமாக மிகைப்படுத்துவதால்
முற்றிலும் நிராகரிப்பது மாபெரும் இலக்கியக் குற்றம். நெல் பற்றிய ஆய்வாளர் பெயரை
ஜெயசீலன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். எனக்கு நெல் ஜெயராமன் நினைவு வந்தது.
ஜெயராமன் என்றே கூட சொல்லி இருக்கலாம். தவறில்லை.
சைபாவும்
எழிலனும் விவாதிக்கும்போது சாத்தான் எதனுடைய நகல் என்கிற கேள்வி அத்தனை
சாதாரணமானது அல்ல. எனக்குள் நீண்ட நாளாக இருந்த கேள்வி. ஒரு அதீத மதவெறியரிடம் இதே
கேள்வியை நான் கேட்டபொழுது கடுங்கோபமாகி இப்படி கேள்வி கேப்பவர்கள்தான்
சாத்தான்கள் என்று சாபமிட்டார். .
பல
இடங்களில் பாலஜோதியின் உவமைகள் மிகப்புதிதாக இருந்தன உதாரணமாக உணர்ச்சி வெப்பம்
ஆவியாவதை அதிகாலைத் தடாகத்தில் இருந்து எழும் ஆவி என்கிற ஒப்பீடு. அதனைத்தொடர்ந்த
நீண்ட விவரணைகள்.. ஒரு இடத்தில் இவர் கையாளும் மனமடிவுகள் போன்ற சொற்கள்
புழக்கத்தில் இல்லாத அதே சமயம் இலக்கியத்தரமான சொல்லாடல்..
இந்த
நாவலின் கடைசி அத்தியாயம் புதியதாக நீட்டிக்கப்பட்டது என்று தனித்த உரையாடலில் சொன்னார்.
அனால் அது ஒரு புதிய பரிமாணத்தை நாவலுக்குத் தருகிறது. முதல் நாவல் என்று
தோன்றாவண்ணம் நேர்த்தியாகத் துவங்கி முன்னும் பின்னுமாக நாவலை நகர்த்தி அழகாக
முடித்து இருக்கிறார்.
நாவலில்
ஒன்றிரண்டு நெருடலான விஷயங்களை குறிப்பிடாமல் இந்த விமர்சனத்தை முடிக்க இயலாது. பாலுவும்
எழிலனும் பேசிக்கொள்கிற இடங்கள் ஒரு வகையில் திணிப்பு போலத் தோன்றினாலும் அதில்
தவறில்லை ஒரு படைப்பாளி தனது கருத்தாக சிலவற்றையாவது தான் படைக்கும் நாவலில்
எந்தப் பாத்திரத்தின் வழியாகவாவது பதிவு செய்துதான் ஆக வேண்டும். அதிலும் தமிழ்
தமிழ் மீதான வெறுப்புணர்ச்சி மூர்க்கமாக் வெளிப்படும் இந்த அவலமான சூழலில்
நிச்சயமாகத் தேவையான ஒன்றுதான்.
ஆனால்
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தக் குடி என்கிற
சொல்லாடலை பழமொழி என்று எழிலனும் அதற்கு விளக்கம் சொல்லும் பாலு என்கிற தொல்லியலாளரும்
சொல்வது அந்த வாசகம் எதில் வருகிறது என்கிற அறிதல் இல்லாமல் கையாளப்படுகிறது
என்கிற எண்ணத்தையே உருவாக்குகிறது, முதலில் அது பழமொழி அல்ல. பழமொழி என்பது
எதையும் நேரடியாக சொல்வது அல்ல. மறைபொருளை ரகசியமாக யதார்த்த மொழியில் சொல்வது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது மாதிரி. கல் தோன்றி.. என்பது தனித்துப்
பார்க்கையில் அது ஒரு வாக்கியம். ஒரு ஸ்டேட்மென்ட். ஆனால் அது. புறப்பொருள் வெண்பா
மாலை என்னும் நூலில் இடம் பெற்ற பாடலின் ஒரு வரி.
முழுப்பாடல்
இதுதான்
“பொய் அகல, நாளும்
புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம்
போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக்
கல் தோன்றி
மண் தோன்றாக் காலத்தே, வாளொடு
முன் தோன்றி
மூத்த குடி!
இதன் ஆசிரியர் ஐயனாரிதனார்.. இந்தப் பாடலின் மூன்றாவது வரி
அதிகம் மேடைகளில் பேச்சாளர்களால் பேசப்பட்டு அது ஸ்டேட்மென்ட் ஆக மாறிவிட்டது.
தமிழினத்துக்கு எதிராக பேசுபவர்களும் இந்த வரிகளைப்பற்றி எதுவுமே தெரியாமல் அது
எப்படி கல் மண்ணு தோன்றுவதற்கு முந்தி மனுஷன் வந்திருப்பான் என்று முட்டாள்தனமாக
உளறிக் கொட்டினார்கள்.
முதலில் தமிழின் சொல்வளம் அவற்றை பயன்படுத்திய புலவர்களின்
அறிவுத்திறன் இவற்றை எல்லாம் பற்றி அறிந்துகொண்டு பிதற்றும் வழக்கம் தமிழின எதிரிகளுக்கு இருப்பதில்லை.. கல் என்ற
சொல்லுக்கு பலபொருட்கள் உண்டு (விரிவாக அறிந்து கொள்ள அரசெழிலன் எழுதிய கல் என்கிற
நூலைப் படிக்கவேண்டும்) கல் என்பதற்கு மலை என்கிற பொருள் உண்டு. உதாரணமாக மலை
சார்ந்த ஊர்களுக்கு திண்டுக்கல் நாமக்கல் என்று பெயர் சூட்டுவது நம் பழக்கம். மண்
என்பது வயலைக் குறிக்கும் இதற்கும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. இப்பவும்
கிராமங்களில் ‘மண்ணை வாங்கிப்போட்டு’ என்ற சொல்லாடல் இருப்பதைக் காணலாம். மண்
என்பது மனை அல்ல பயிரிடும் வயல்.
ஆக மலை தோன்றி அது வயலாக சீர் செய்யும் காலத்துக்கு முன்பாக
வாள் மற்றும் வில்லேந்தி போரிட்டவர்கள் தமிழர்கள் என்பது பொருள், அதிலும் கூட
இரும்பு எப்பொழுது தோன்றியது வாள் எப்பொழுது செய்தார்கள் என்கிற கேள்வியை
எழுப்புபவர்கள் இருக்கிறார்கள். எகிப்தின் பாரோ மன்னன் துட்டகாமன் இரும்பு வாள்களை தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக
சேலம் அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு செய்யப்பட்ட வாள்களை
தருவித்து பயன்படுத்தியதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. துட்டகாமனின் காலம் கி.மு. 1300.. அதன் பொருள் அதற்கு முன்பே உருக்காலை எல்லாம் இங்கே இருந்திருக்கிறது
என்பதுதானே வட இந்திய அரசன் புருஷோத்துமன் தனது அன்பளிப்பாக இரும்பு வாளை
அலேக்சாந்தருக்குத் தந்ததாக செய்தி. அந்த வாள் தென்னிந்தியாவிலிருந்து
பெறப்பட்டது. ஆக அந்த வரி வெற்று கோஷம் அல்ல..அதற்குள் வரலாற்று உண்மை இருக்கிறது
உங்கள் கதையில் பாலு இப்படி விளக்குவார் என நினைத்தேன் ஆனால் அவரும் பழமொழி என்றே
சொல்கிறார். படைப்புகளின் வழியாகத்தான் வரலாறு நிறுவப்படுகிறது என்பதால் நாம்
கவனமாக இருக்க வேண்டும். அதுவும் இல்லாமல் பாலுவின் மொழி உரையாடல் மொழி இல்லை அது
உரைநடை மொழி. நாவலின் பிற பகுதிகளில் உரையாடல் மொழி இயல்பாக கையாளப்படும்போது பாலு
மட்டும் அப்படி பேசுவது இயல்பானதாக இல்லை.
பயோடிக் உமனை ஒரு பாத்திரமாகத் திறமையாகக் கையாண்ட ஆசிரியர்
ஏன் பயோடிக் மேன்-ஐஒரு காட்சிப்பொருளாக,
போகப்பொருளாக மட்டுமே வைத்துவிட்டார்.
அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி வேறொரு கோணத்தைப் பதிவு செய்திருக்கலாமே.? அதோடு
மட்டுமல்லாமல் நாவலில் எழிலன், கரிகாலன் என ஆண்கள் சுய ஒழுக்கக் கட்டுப்பாடுகள்
உள்ளவர்களாக இருக்கும் பொழுது ஒரு பெண் பாத்திரம் கூட ஏன் அப்படி
படைக்கப்படவில்லை? என்கிற கேள்வி எழுகிறது. அப்படி படைப்பது தேவையும் கூட
சில சொற்கள் தவறாக எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணமாக கட்டிடம்
என்பது மனையைக் குறிக்கும். கட்டடம் என்பதுதான் பில்டிங். அருகாமை என்பதன் பொருள்
தூரத்தில் என்பதுதான் இயலுதல் என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம் இயலாமை என்பது போல
அருகில் என்பதற்கு அருகாமை என்பது எதிர்ப்பதம்.
நாவலின் எழுத்து நடை சற்றும் சலிப்பு ஏற்படுத்தாத வகையில்
எழுதப்பட்டிருப்பது கூடுதல் பலம். நேர்த்தியான வடிவமைப்பு, கண்களை உறுத்தாத
எழுத்துரு இவை எல்லாம் நூலின் கனத்தை இன்னும் மெருகேற்றுகிறது. பொது புத்தியில்
காமம் என்பது திரை நீக்கப்படாத இருள் வெளியாகவே இருக்கிறது. யாரிடமும் சென்று
கேட்க முடியாத தயக்கத்துடனே எல்லோரும் மயங்கியபடியே இருக்கிறோம். ஒரு
படைப்பாளிதான் அந்த இருள் வெளிக்கு வெளிச்சம் பாய்ச்ச இயலும். மெல்லிய நூலிழையில்
பயணிப்பது போன்றதொரு அபாயகரமான முயற்சியில் பாலஜோதி வெற்றி பெற்று இருக்கிறார்.
அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>