திங்கள், 27 ஜூன், 2022

 

கிழக்கு வாசல் உதயம் இதழில் பிரசுரமான கட்டுரை 

மனிதத்திலிருந்து புனிதத்தை வென்றவர்  

அன்னை தெரசா

 


இறைவனே...!

வெறுப்புள்ள இடத்தில் அன்பையும்,

மனக்காயம் உள்ள இடத்தில்

மன்னிப்பையும்,

சந்தேகம் உள்ள இடத்தில்

உறுதியையும்

ஏமாற்றம் உள்ள இடத்தில்

நம்பிக்கையையும்

இருளுள்ள இடத்தில் ஒளியையும்

கவலையுள்ள இடத்தில் மகிழ்ச்சியையும்

நான் பரப்ப அருள் தாரும்..!

                     -அன்னை தெரசாவின் பிரதான ஜெபத்தின் வரிகள்

ருடங்களை திரும்பப் பெறும் சலுகையை அனைவருக்கும் வரமாகத் தர கடவுள் முன் வருவாரெனில், எல்லோரும் விரும்புவது பதின்மர் (Teen Age) பருவமாகத்தானிருக்கும்.

     குதூகலம் கொப்பளிக்கும் அந்த வயதின் கனவுகளில் சேரிகள் இருக்காது. சேறு தெறிக்காது. காயங்களில் வழியும் கசிவுகள் தென்படாது. பசியின் ரவுத்திரம் புரியாது. மரணத்தின் விளிம்பு தென்படாது. மலர்களும், நட்சத்திரங்களும், வானவில்லும் நதியோர சுழிப்புகளும், முகம் கொள்ளாச் சிரிப்பும் மட்டுமே நிரம்பியிருக்கும். அதுதான் மனித வாழ்க்கையின் இயற்கை நியதி.

     ஆனால், ‘புனிதர்'களின் நினைவும் கனவும் அப்படியானவையல்ல. கைவிடப்பட்ட வயோதிகத்தின் நீளும் விரல்களும், நோயினால் தேய்ந்த சருமத்தின் புண்களும் ஒருவாய் பாலுக்காகக் கதறும் குழந்தையின் அழுகுரலும் அவர்களை உறங்க விடாமல் துரத்தியபடியே இருக்கும். அவர்களும் இதனை எதிர்பார்த்தபடியே காத்திருப்பார்கள்.

     அப்படியான மனிதப் புனிதர்களில் ஒருவர்தான் பின்னாளில் அன்னை தெரசா' என்றழைக்கப்பட்ட ஆக்னெஸ் கொன்சாகா பொஜாக்சியு.' 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி யூகோஸ்லேவியாவில் உள்ள ஸ்காப்ஜே (தற்போது மெசிட்டோனியாவில் உள்ளது) எனும் நகரில் நிகோலா-திரானா எனும் அல்பேனியத் தம்பதியருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தவர்தான் ஆக்னெஸ். அவரது தந்தை சகாப்ஜே நகரில் திரையரங்கு ஒன்றின் உரிமையாளர். பெரும் செல்வந்தர். தாய் திரானா வருகிறவர்களுக்கெல்லாம் வாரி வழங்கும் ஈகை குணம் மிக்கவர். துருக்கியிடம் அடிமைப்பட்டிருந்த அல்பேனியா விடுதலைக்காக பெரிதும் பாடுபட்ட ஆக்னஸின் தந்தை நிகோலா சுதந்திர வேட்கை கொண்டவர்.

     துருக்கி அரசு சில நயவஞ்சகர்களின் துணையோடு பெல்கிரேடு நகருக்கு வந்த அவரை, நஞ்சு கலந்த உணவைத் தந்து கொன்றது. அப்பொழுது ஆக்னெஸின் வயது 9 தான். தந்தையின் மரணத்துக்குப் பிறகு வருவானம் குறைந்த நடுத்தரக் குடும்பமானது ஆக்னெஸின் குடும்பம். ஆக்னெஸின் சகோதரர் லாசர் தனது 17வது வயதில் இராணுவத்தில் சேர்ந்தார்.

     ஆக்னெஸ் தனது பள்ளிப் படிப்பின் போது சொடாலிட்டி (Sodality) எனும் இயேசுவின் பக்த சபை இயக்கத்தில் சேர்ந்தார். அப்போது செயிண்ட்' எனப்படும் பல்வேறு புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தார். அவர்களின் துறவு வாழ்க்கையும் பிறருக்காகத் தங்களை அர்ப்பணிக்கும் குணமும் ஆக்னெஸை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக வங்கத்துச் சேரிகளுக்கு சென்று சேவை செய்த பல்வேறு மிஷனரி அமைப்பின் சகோதரர்கள் அனுப்பிய குறிப்புகளை வாசிக்க நேர்ந்தது. அவை ஆக்னெஸின் மனதில் பெரும் பாதிப்பையும் இந்தியா வந்து அடித்தட்டு மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற லட்சியத்தையும் ஏற்படுத்தியது.

     துறவு வாழ்க்கையை (Nun) மனம் விரும்புவதை அவர் தன் தாயிடம் தெரிவித்த போது அதிகம் பதறியது அவரது சகோதரி ஆஜ் தான். ஆனால் தனது நிலைப்பாட்டில் மாறாதிருந்த அவர் இறைவனின் விருப்பம் இதுதான் என்று கூறிவிட்டார். தாய் திரானாவோ மனதைக் கல்லாக்கிக் கொண்டு சம்மதித்தார்.

அயர்லாந்தை தலைமைப் பீடமாகக் கொண்டு இயங்கி வந்த லோரேட்டா சகோதரிகள் கன்னியர் மடத்தில் சேர்ந்து பணியாற்ற அயர்லாந்திற்கு வரும்படி ஆக்னெஸிற்கு அழைப்பு வந்தது. கண்ணீர் மல்க தாய் மற்றும் சகோதரியிடம் விடைபெற்ற ஆக்னெஸ் 1928 செப்டம்பர் 26ம் தேதி அயர்லாந்து நகரில் உள்ள டப்லிங் நகர் வந்தடைந்தார். அங்கு மூன்று மாதம் பயிற்சி பெற்றார்.

கல்கத்தா நகருக்கு வருகை:

பயிற்சி முடிந்ததும் தனது நீண்ட நாள் கனவு நகரமான கல்கத்தாவுக்கு 1929 ஜனவரி 6ம் தேதி வந்து சேர்ந்தார். வந்ததுமே, அவரைக் காசநோய் ஆட்கொண்டது. சிகிச்சைக்காகவும் இறையியல் பயிற்சிக்காகவும் திருச்சபை அவரை டார்ஜிலிங் நகருக்கு அனுப்பியது. புகைவண்டிப் பயணத்தில் வழிநெடுக தென்பட்ட ஏழ்மை கோர தாண்டவமாடிய சேரிகள், நோயில் வாடி வதங்கிய அடித்தட்டு மக்கள், முதுமையடைந்த, கைவிடப்பட்ட அநாதைகள், பிச்சைக்காரர்கள், மனநிலை பிறழ்ந்தவர்கள் என்று அவர் கண்ட காட்சிகள் எல்லாம் தான் எடுத்த முடிவு சரிதான் என்று உணர்த்தியது.

தெரசாவாக மாறிய ஆக்னெஸ்:

பள்ளிப் பருவத்தில் தான் படித்தறிந்த புனித தெரசாவை தன் வழிகாட்டியாகக் கருதி தன் பெயரை தெரஸா என 1929 மே 2ல் மாற்றிக் கொண்டார். இரண்டு வருட இறையியல் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றை முடித்த பிறகு 24.05.1932ல் கன்னியர் மட  முதல் வார்த்தைப்பாட்டை ஏற்று சகோதரி தெரசா' ஆனார். கல்கத்தாவில் உள்ள செயிண்ட் மேரி பள்ளியில் ஆசிரியையாகவும் பின் தலைமை ஆசிரியை ஆகவும் பணிபுரிந்தார். என்றாலும் அவர் மனதுக்குள் சேரிகளில் தங்கிப் பணிபுரியும் ஏக்கம் தணியாமலே தகித்தபடியிருந்தது. ஆனால் சபையின் அனுமதியின்றி அவர் அதில் ஈடுபட முடியாமல் தவித்தார்.

     1946ல் கல்கத்தாவெங்கும் நிகழ்ந்த மதக் கலவரங்களினால் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறாதபடி ஊரடங்கு சட்டம் அமலில் இருந்த நேரம் தனது பள்ளியில் தங்கியிருந்த 36 சிறுவர்கள் பட்டினியால் வாடுவதை காணச் சகிக்காத தெரசா, வீதியிலிறங்கி அவர்களுக்காக கையேந்தி யாசித்தார். இராணுவம் அவரை எச்சரித்து தங்களிடம் இருந்த உணவுப் பொருட்களை தந்து பள்ளிக்குத் திரும்ப அனுப்பியது.

புதியசபை சிந்தனை:

     தான் பணி ஆற்ற வேண்டிய இடம் நான்கு சுவர்களுக்குள் இல்லை என்று உணரத் தொடங்கிய தெரசா, புதிய சபை ஒன்றை நிறுவி அதன் மூலம் ஏழை மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தை தனக்கு ஒத்திசைவான எண்ணம் கொண்ட அருட்தந்தை வான் எக்ஸம் அடிகளிடம் தெரிவித்தார். அவர் தெரசாவின் எண்ணத்தை கல்கத்தாவின் பேராயர் பெரியாரிடம் சொன்னபோது மறுப்பே பதிலாகக் கிடைத்தது. ஆனால் தொடர்ந்து அருட்தந்தை வான் எக்ஸம் எடுத்த பெரும் முயற்சிகளின் காரணமாக தெரசாவின் விருப்பம் விண்ணப்பமாக தலைமைப் பீடத்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பப்பட்டது. ஆனால் உரிய பதில் வர சில காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

     1948 ஆகஸ்ட் முதல் வாரத்தில் டப்ளின் தலைமைப் பீடத்திலிருந்தும் பிறகு ரோம் சபையின் தலைமையகத்திலிருந்தும் அனுமதி வந்து சேர்ந்தது.

ஐந்து ரூபாயில் தொடங்கிய சேவை:

     பாட்னாவில் மருத்துவ முதலுதவி சிகிச்சைக்கான பயிற்சியை மூன்று மாதம் முடித்த பிறகு 21.12.1948ல் கல்கத்தா திரும்பிய தெரஸா மோட்டேஜ் நகரின் சேரியில் தங்கி மக்களுக்கான நேரடி சேவையைத் தொடங்கினார்.

     ஐந்து ரூபாய் கையிருப்புடன் மூன்று சேலைகள் (உடுத்த ஒன்று, மாற்றுக்கு ஒன்று, மூன்றாவது ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சிக்கு) ஒரு சிலுவை, ஒரு ஜெபமாலை இவைதான் அப்போது தெரசாவிடமிருந்த சொத்து. 19.03.1949ல் அவரது பழைய மாணவி சுபாஷிணிதாஸ் என்பவர் தெரசாவோடு தன்னை இணைத்துக் கொண்டார். அன்றுதான் புனித சூசையப்பர் பெருநாள். அதே நாளில் தான் தெரசா அன்னை தெரசா' என்றழைக்கப்பட்டார். பின், அவரது இன்னொரு மாணவி மதலேனா கோமஸ் என்பவரும் தெரசாவோடு இணைந்து கொண்டார்.

     மூவரும் பெண்களாக இருந்தபடியால் அவர்கள் தங்க ஒரு பாதுகாப்பான இடம் தேவை என்று நினைத்த அருட்தந்தை வான் எக்ஸம் அவர்கள் பணியாற்றிய சேரிக்கு அருகிலேயே மைக்கேல் கோமல் என்பவரது இல்லத்தின் மாடிப்பகுதியில் தங்க ஏற்பாடு செய்தார். ஒரு வருட பரிசீலனை சேவைக்காலம் முடிந்த பிறகு அவர்கள் மக்கள் சேவையைத் தொடரலாம் என்று போப் ஆண்டவர் அனுமதித்தார்.

அன்பின் பணியாளர் சபை- தொடக்கம்

07.10.1950ல் தெரஸா தங்கியிருந்த அறையிலேயே அன்பின் பணியாளர் சபை' (Missionories of Charity) தொடங்கப்பட்டது. அப்போது தெரசாவுடன் இருந்தவர்கள் பத்து சகோதரிகள் மட்டுமே.

     இந்த சபை தொடங்கியதும் முழுமூச்சில் இறங்கிய தெரசா, கல்கத்தா நடைபாதைகளில் இறக்கும் நிலையில் கைவிடப்பட்டவர்களுக்காக நிர்மல் ஹிருதய்' எனும் இல்லத்தைத் துவக்கினார்.

     அந்த இல்லத்தில் சேர்ந்தவர்களைப் பராமரிக்கவும் சிகிச்சை செய்யவும் உணவளிக்கவும் போதுமான இடம் வேண்டி கல்கத்தா காளி கோயில் அருகிலிருந்த தர்மசாலை ஒன்றை வாடகைக்கு எடுத்தார். தாராள மனம் படைத்தவர்களின் ஆதரவோடும் நன்கொடைகளோடும் இல்லத்தை நடத்தி வந்த தெரசாவிற்கு எதிராக மதவெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காளிக்கோயில் அருகே கிறிஸ்தவ சபை இருப்பதா? என்று சில விஷமிகள் தூண்டியதால் ஒரு கும்பல் அந்த இல்லத்தின் மீது கல்லெறிந்தது. எதிர்ப்பாளர்களின் பேச்சைக் கேட்டு அவர்களோடு வந்த பிரதேச அரசியல் தலைவர் ஒருவர் அந்த இல்லத்திற்குள் நுழைந்து பார்த்த போது கண்கலங்கிப் போனார்.

அழுகும் புண்களோடும் துர்நாற்றம் வீசும் உடல்களோடும் தொடவே கூசும் நிலையில் இருந்த நோயாளிகளைக் கழுவி சுத்தம் செய்து மருந்திட்டு உணவூட்டிய அந்த சகோதரிகளின் அன்பான சேவையைக் கண்டு மனம் நெகிழ்ந்து போன அவர் வெளியே வந்து அந்தக் கும்பலைப் பார்த்து ஆத்திரப்பட்டார்.

    உங்கள் பேச்சைக் கேட்டு இந்த சகோதரிகளை இங்கிருந்து விரட்டி விடுகிறேன். அதற்குப் பதிலாக உங்கள் தாயாரோ நீங்களோ உங்கள் சகோதரிகளோ இந்த சேவையைச் செய்யத் தயாரா?” கூட்டம் பதில் சொல்லத் தெரியாமல் மெளனமாக நின்று பின் கலைந்தது.

     இதில் வேடிக்கை என்னவென்றால் பின்னாளில் அந்தத் தலைவரைத் தூண்டிய விஷமிகளில் ஒருவர், தன் இறுதிக்காலத்தை தான் எதிர்ப்புக் காட்டிய அதே நிர்மல் ஹிருதய்' இல்லத்தில் கழிக்க நேர்ந்தது.

எச்சில் எனக்குப் போதும்:

அன்னை தெரசா அவர்கள் கல்கத்தா வீதியெங்கும் வறியவர்களுக்காக யாசகம் கேட்டுச் சென்றபோது அருவருப்பான சீழ் பிடித்த நோயாளிகளைப் பராமரிக்கும் அன்னையை வெறுப்போடு பார்த்த செல்வந்தர் ஒருவர், ஏந்திய அவரது கைகளில் காறி உமிழ்ந்தார். அன்னையோடு வந்த சகோதரிகளும் பணியாளர்களும் பதறிப் போயினர். அன்னையோ கொஞ்சமும் ஆத்திரப்படாமல் இந்த எச்சில் எனக்குப் போதும்! என்னோடு இருக்கும் வறியவர்களுக்கு உங்களால் முடிந்ததை தாருங்கள்!என்று பொறுமையாகக் கேட்டார். அதே செல்வந்தர் பின்னாளில் அன்னையின் அன்பிற்குப் பாத்திரமாகி ஏராளமான உதவிகள் செய்யத் தொடங்கினார் என்பது அன்னையின் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம்.

புதிய மருத்துவமனை:

     தொழுநோயாளிகளை மட்டும் பராமரிக்க ஹவுராவில் மருத்துவமனை ஒன்றை பேராயர் பெரியர் உதவியோடு கட்டினார் அப்போதைய வங்க முதல்வர் பி.சி.ராய் 34 ஏக்கர் நிலத்தை வழங்கினார். அதில் கட்டப்பட்ட இல்லங்கள் இன்று காந்திஜி பிரேம் நிவாஸ் என்று அழைக்கப் படுகிறது.

     பெற்றோரை இழந்த குப்பையில் கிடந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக நிர்மல் சிசு பவன்' என்ற இல்லம் ஒன்றினையும் ஏற்படுத்தினார். அன்னையோடு பணிபுரிய மேலும் மேலும் ஏராளமான சகோதரிகள் இணைந்தவண்ணம் இருந்ததால், அவர்களுக்காக அன்னை இல்லம்' என்ற புதிய இல்லம் ஒன்றைக் கட்டினார்.

தாயைப்பார்க்க முடியாத மகள்:

     சபையின் பத்து ஆண்டுகாலச் சேவையை கூர்ந்து கவனித்த தலைமைப் பீடம், வெளிநாடுகளில் வெளிநாடுகளில் கிளைகளைத் துவக்க அனுமதி அளித்தது. அதன்பேரில் வெளிநாடுகளின் அழைப்புகளை ஏற்று அங்கெல்லாம் இல்லம் தொடங்கவும் நிதி திரட்டவும் பயணம் மேற்கொண்டார்.

     தென் இத்தாலிக்கு அன்னை சென்ற போது எதிர்பாராத விதமாக நாடுகடத்தப்பட்ட தனது சகோதரர் லாசர் குடும்பத்தினரைச் சந்தித்தார். அன்னையின் தாயாரும் சகோதரியும் அல்பேனியாவில் உள்ள ரையானாவில் அச்சமயம் இருந்ததை அறிந்தார். இத்தாலியில் உள்ள அல்பேனிய தூதரகத்தின் மூலம் அவர்களைச் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அல்பேனிய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது. தாயை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று.

     சில ஆண்டுகள் கழித்து அன்னையின் தாய் மரணம் அடைந்த போது கூட அவரால் பார்க்க முடியாமலே போனது. அந்தத் துயரம் அன்னையின் உள்ளத்தில் நெடுநாள் வரையிலும் நீங்கவேயில்லை. ஆயிரக்கணக்கான அநாதைகளுக்குத்  தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து ஆதரவளித்த அன்னை தெரசா, தன்னைப் பெற்றெடுத்த தாயை பதினெட்டு வயதுக்குப் பின் பார்க்கவே முடியாமல் போனது விவரிக்க இயலாத ஒரு வரலாற்று சோகம்.

உலகத்தின் தாய்:

     132 நாடுகள் 500 க்கும் மேற்பட்ட கிளைகள், 6000 சகோதரிகள் ஏறத்தாழ 1000 சகோதரர்கள் என்று உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் அன்னையின் சேவையைப் பாராட்டி 1979ம் ஆண்டு நோபல் பரிசு' வழங்கப்பட்டது. அதோடு பத்மஸ்ரீ, பாரத ரத்னா உட்பட 50க்கும் மேற்பட்ட விருதுகள் அன்னையைத் தேடி வந்து பெருமைப்பட்டுக் கொண்டன.

ஆச்சர்யமான ஒற்றுமை:

     தன் உடல்நிலை காரணமாக 1997 ஜனவரியில் சபையின் தலைமைப் பொறுப்பில் இருந்து அன்னை தெரசா தானே விலகிக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக 120 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபையின் தலைமைப் பொறுப்பிற்கு சகோதரி நிர்மலா என்பவரைத் தேர்வு செய்தனர். என்றாலும், சேவைக்கான தன் அர்ப்பணிப்பை தன் இறுதி மூச்சு அடங்கும் வரை அன்னை தெரசா நிறுத்திக் கொள்ளவேயில்லை.

அன்னை தெரசா ஆதரவற்ற மக்களுக்கான தனது நீண்ட கால அர்ப்பணிப்பு வாழ்க்கையை 1997,செப்டம்பர் 5ம் தேதி நிறைவு செய்தார்.

     அன்னையின் நிறைவு நாளில் ஒரு ஆச்சர்ய ஒற்றுமை எனில், அவர் தன் வழிகாட்டியாகக் கருதிய புனித தெரசா மரணமடைந்த ஆகஸ்ட் 26ம் தேதிதான் அன்னை தெரசாவின் பிறந்தநாள்.

     அதே போல் புனித தெரசா இறந்து சரியாக 100 ஆண்டுகள் கழித்து அன்னை தெரசா தன் வாழ்க்கையை நிறைவு செய்தார்.

     மக்கள் நெருக்கம் மிகுந்த வசிப்பிடங்களில் யாரையும் அடக்கம் செய்யலாகாதுஎன்ற விதியைத் தளர்த்தி, அவர் வாழ்ந்த அன்னை இல்லத்திலேயே அவரை அடக்கம் செய்ய அனுமதி அளித்த கல்கத்தா மாநகராட்சி ஆனையர் ஆசிம் பர்மன் என்பவர் ஒரு இஸ்லாமியர். அன்னையின் கல்லறையை மிக நேர்த்தியாக வடிவமைத்த கட்டிடக் கலைஞர் ஒரு இந்து. அன்னையின் வாழ்வும் நிறைவும் நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் இவை!

     கத்தோலிக்க மதத்தில் உள்ள புனிதர்களுடன்  அன்னை தெரசாவையும் சேர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். ஒருவர் இறந்த பிறகு அவரை புனிதராக அறிவிக்க 2 அற்புதங்கள் நடந்திருக்க வேண்டும் என்பது விதி முறை. அதன்படி, கொல்கத்தாவை சேர்ந்த மோனிகா என்ற இளம்பெண், தனது வயிற்றில் இருந்த புற்று நோய் அன்னை தெரசாவால் குணமானதாக தெரிவித்தார். பின்னர் பிரேசில் நாட்டில் மூளை பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்த இளைஞர் மார்சிலோ ஹதாத் ஆன்டிரினோ, அன்னை தெரசாவின் அருளால் குணமானதாக கூறினார். தனது மனைவி அன்னை தெரசாவை வேண்டி பிரார்த்தனை செய்ததால் தான் குணமானதாக கூறியிருந்தார்.

     இந்த 2 அற்புதங்களையும் பல்வேறு வகைகளில் ஆய்வு செய்து உறுதி செய்த பின்னர், அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று போப் பிரான்சிஸ் 2016 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் அறிவித்தார். அதற்கேற்ப, வாடிகன் சதுக்கத்தில் அன்னை இயற்கை எய்திய செப்டம்பர் 5 ஆம் தேதியை நினைவில் நிறுத்தி 2016 செப்டம்பர் 5 ஆம் தேதி அவருக்கு புனிதர் பட்டம் அறிவிக்கப் பட்டது. போப் பிரான்சிஸ் முறைப்படி அன்னை தெரசாவை புனிதராக பிரகட னம் செய்தார். தனது வழிகாட்டியின் பாதையில் அன்னை தெரசாவும் புனித தெரசா ஆனார்.

     பிறப்பதும் இறப்பதும் இயற்கையின் நியதி. இடைப்பட்ட காலத்தில், ‘வாழ்வது' என்பதற்கான உண்மையான பொருளை தேடித் தேடி பலரும் களைத்துப் போகிறார்கள். ஆனால், ‘வாழ்வது' என்பதற்கு முன்னால், ‘பிறருக்காக' என்ற சொல்லைச் சேர்த்துவிட்டால் நமக்குக் கிடைத்த இந்த வாழ்வு எத்தனை அர்த்தமுள்ளதாகவும் அனுபவிக்கக் கூடியதாகவும் இருக்குமென்பதை நிரூபணம் செய்ய, அவ்வப்போது கடவுள் யாரையேனும் இந்த பூமிக்கு அனுப்பி உணர்த்தியபடி இருக்கிறார்.

     சமீபத்திய நிரூபணம் யாராலும் மறக்கமுடியாத அன்னை தெரசா!

பெட்டிச் செய்தி

அன்னை தெரசாவைக் கவர்ந்த புனித தெரசா:

ஸ்பெயினில் உள்ள கேடலோனியாவில் பிறந்த புனித தெரசா, இளமையில் வறுமையும் அதனால் ஏற்பட்ட எண்ணற்ற கஷ்டங்களையும் அனுபவித்தவர். மிகுந்த சிரமங்களுக்கிடையே கல்வி பயின்று லேரிடாவில் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். இறையியல் பணி செய்ய விரும்பி அதற்கான தேர்வு ஒன்றினை எழுதினார். தேர்வில் வெற்றி பெற வில்லை.

     தோல்வியைப் பொருட்படுத்தாமல் எவருடைய உதவியுமின்றி கைவிடப்பட்டவர்களுக்காக சேவை செய்யும் வறியவர்களுக்கான இளைய சகோதரிகள் சபை (Little Sisters of the Poor)என்ற பெயரில் 27.01.1872ல் ஸ்பெயினில் உள்ள பார்பேஸ்ட்ரோ'வில் துவங்கினார். தன் வாழ்நாள் முழுவதையும் அந்தச் சபைக்காக அர்ப்பணித்த புனித தெரசா மரணமுற்றபோது இளைய சகோதரிகள் சபையின் பொறுப்பில் 50 பராமரிப்பு இல்லங்கள் இருந்தன. அவரது சேவையை அங்கீகரித்து 6ம் போப் பால் 1974ல் புனிதர்' பட்டம் வழங்கினார். அந்தப் புனிதர்களின் வரிசையில் நம் அன்னை தெரசாவை கல்கத்தாவின் புனித தெரசா' என்றழைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...