கிழக்கு வாசல் உதயம் இதழில் பிரசுரமான கட்டுரை
மரணத்துக்குப் பின்னும் விழித்திருக்கும் உயிர்
சூசன் B ஆண்டனி
“போராடுவதற்காக
எதையும் இழக்கத் தயாராயிருக்கிறேன். ஆனால் எதற்காகவும் போராடும் குணத்தை இழக்க
மாட்டேன்.”
பெண்களை
வழிபடுதலுக்குரிய இனமாக உயர்த்திப் பேசிய நமது பாரம்பரியமிக்க தேசத்தில் பெண்கள், தெய்வங்களின்
விக்ரகங்களைத் தொடலாமா என்கிற சர்ச்சை பரவலாக நடந்தேறியது. கருவறை சுமக்கும்
பெண்கள் கருவறைக்குள் நுழையலாமா என்ற கேள்வி இந்த டிஜிட்டல் புரட்சி நடக்கும்
நூற்றாண்டில் எழுப்பப்படுகிறது. கால் செண்டர்களில் பணிக்குச் செல்லும் பெண்களின்
பாதுகாப்பற்ற சூழல், விசாரணைக்கு
அழைத்துச் செல்லப்படும் அடித்தட்டுப் பெண்களின் மீதான பாலியல் பலாத்காரங்கள், இன்னமும் பேச்சளவிலேயே
இருக்கும் 33 சதவீத இட ஒதுக்கீடு இப்படி எல்லாவற்றுக்கும் எதிராக கூர்மைப்படுத்த
வேண்டிய போராட்டங்கள், குறைந்தபட்ச
எதிர்வினைகள் எதுவுமின்றி மழுங்கிப் போயிருக்கும் இன்றைய சமூகச் சூழலில் சூஸன்
ஆண்டனி பற்றிய நினைவுகள், சமூக
அநீதிக்கு எதிரான அவரது சலியாத சமர்கள் ஆகியவை பற்றி சுருக்கமாகவாவது அறிந்து
கொள்ள வேண்டியது அவசியம்.
யார் இந்த சூசன் ஆண்டனி?
தனிமனித
சுதந்திரத்திற்கு நிகரில்லாத உதாரணமாகவும் ஜனநாயக உரிமைகளைப் பேணுவதில்
முன்னோடியாகவும் தன்னை எப்போதும்
பறைசாற்றிக் கொள்ளத் துடிக்கும் அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன் வரை
பெண்களுக்கு வாக்குரிமையும்,
அவர்கள் ஈட்டிய சொத்துக்களை அவர்களே தீர்மானிக்கும் உரிமையும் இல்லை என்பது
விசித்திரமான உண்மை.
ஆண்களுக்கு
நிகரான கல்வி, ஊதியம், பணிநேரம், சலுகைகள்
ஆகியவற்றுக்காக சிகாகோவில் நடத்திய மாபெரும் பேரணியை (மார்ச் 8, 1870) மகளீர்
தினமாக அனுசரிக்கப் படுவதை மட்டும் எல்லோரும் அறிந்திருக்கிறோம். ஆனால், அதற்கு முன்னும்
பின்னுமாக நடந்த பெண்ணுரிமைப் போர்களில் அழிக்க முடியாத இருவரின் பெயர்கள் சூசன்
ஆண்டனி மற்றும் எலிஸபெத் ஸ்டாண்டன். பொதுவுடமை இயக்கத்தின் வரலாற்றின் இரட்டையர்
என்று மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் குறிப்பிடுவார்கள். பெண்ணுரிமைப் போராட்டங்களில்
இரட்டையர் என்று சூஸனையும் ஸ்டாண்டனையும் கூறலாம்.
சூஸன்
ஆண்டனி 1870ம் ஆண்டு பிப்ரவரி 15ல் அமெரிக்காவில் ஆதம் மஸாசூட்ஸ்ஸில் பிறந்தார்.
பாரம்பரியமிக்க அதே நேரம் மிகவும் முற்போக்கான குடும்பத்திலிருந்து வந்தவரான சூஸன்
இயல்பிலேயே ஒழுக்க நெறிமுறைகளைப் பின்பற்றுபவராகவும், நேர்மையானவராகவும்
விளங்கினார்.
சூஸனின்
குடும்பம் பணிநிமித்தமாக 1845ல் ரோஸெஸ்டர் நகருக்கு இடம் பெயர்ந்தது. அவரது
வாழ்வில் முக்கியமான திருப்பங்களுக்கு அடிகோலியது. கறுப்பின மக்களின் அடிமை
வாழ்விற்கெதிரான இயக்கங்களோடு சூஸனின் குடும்பத்திற்குத் தொடர்புகள் ஏற்பட்டன.
சூஸனின் குடும்பத்திற்குச் சொந்தமான பண்ணைகளில் அந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்
ஞாயிறுதோறும் கூடி தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர். கறுப்பின மக்களின் விடுதலை
இயக்கங்களைக் கட்டியவர்களுள் மிக முக்கியமானவர்களான பிரடரிக் டக்ளஸ், வில்லியம் லாயிட்
காரிஸன் ஆகியோருடன் சூஸனின் சகோதரர்கள் டேனியல், மெர்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர். இச்சந்திப்புகள் தான்
பிற்காலத்தில் சூஸனிடம் அசைக்க முடியாத போர்க்குணத்தை விதைத்தது.
1846ல்
புகழ்பெற்ற கனேரியா அகாதெமியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார் சூஸன். அப்போது
அவருக்கு அளிக்கப்பட்ட ஊதியம் ஆண்டுக்கு 110 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இது
அவரோடு பணியாற்றிய ஆண் ஆசிரியர்களின் சம்பளத்தோடு ஒப்பிடுகையில் பன்மடங்கு குறைவு.
மதுப்பழக்கம்
என்பது ஒரு குற்றமாக அல்லது ஒழுக்கக் கேடாக கருதப் படாத அமெரிக்கக் கலாச்சாரத்தில்
சூஸனின் குடும்பம் அதற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருந்தது. சூஸனின் மனதில் குடி
வெறிக்கு எதிரான எண்ணத்தை வலுப்படுத்தியது. 1849ல் ரோஸெஸ்டர் நகரில் குடியால்
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெண் வாரிசுகளைக்
கொண்ட சங்கத்தை தோற்றுவித்தார்.
மதுபானங்களை
விற்பனையில் கடுமையான சட்டங்களைப் பரிந்துரைத்து ஒருபுதிய மனுவை அமெரிக்கப்
பிரஜைகள் பலரிடமும் கையெழுத்தைப் பெற்று அரசிடம் சமர்ப்பித்தார். ஆனால் அந்த மனுவை
அரசு நிராகரித்தது. அதற்கு என்ன காரணம் தெரியுமா?
‘அந்த மனுவில்
முழுக்கவும் கையெழுத்திட்டது பெண்களும் குழந்தைகளும் மட்டும் என்பதுதான்.' யார்
பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் தானே கையெழுத்திடுவார்கள். பெண்களுக்கு வாக்குரிமை
இல்லாததுதான் இந்த அலட்சியத்திற்குக் காரணம்.
1851ல்
நடந்த மதுப்பழக்கத்திற்கு எதிரான மாநாட்டில் பெண் என்பதால் சூஸன் அனுமதி
மறுக்கப்பட்டார் என்றாலும் மாநாட்டிலிருந்து வெளியேறி தனியொரு ஆளாக தன்
பிரசங்கத்தைத் துவக்கினார். அவரது அறைகூவல்,
ஏற்கனவே பெண்ணுரிமைப் போராட்டங்களை முன்னின்று நடத்திய புகழ்மிக்க தலைவர்களான
அமெலியா புரூமர் மற்றும் எலிஸபெத் ஸ்டாண்டன் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள்
அவரை 1852ல் ஸிராகஸில் நடந்த மகளிர் உரிமை மாநாட்டுக்கு அழைத்தனர். அம்மாநாட்டில்
கலந்து கொண்டதால் ஆயுதம் தாங்கிய குண்டர்களால் துரத்தவும்தாக்கவும் பட்டார். அதுவே
பின்னாளில் சூஸன் நிகழ்த்திய பல போராட்டங்களுக்கு அடியுரமாக அமைந்தது.
கறுப்பினமக்களின்
அடிமை வாழ்வுக்கெதிரான இயக்கங்களை ஒருங்கிணைத்தல், அவற்றுக்கான அறிக்கைகள் பிரசுரங்கள் வெளியிடுதல்
ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபடத் துவங்கினார். என்றாலும், அவர் மனதில்
பெண்களுக்கெதிரான சமூக அநீதிகளை வேரோடு வெட்டியெறிய முயற்சிப்பதே முதற்கடமை என்று
தோன்றியது.
பெண்களுக்கு சம உரிமை கேட்டு...
1852ல் எலிசபெத்
ஸ்டாண்டனுடன் இணைந்து பெண்ணுரிமைச் சங்கத்தை நிறுவினார். 1853ல் மாகாண ஆசிரியைகள்
மாநாட்டினைக் கூட்டி பெண்களுக்கு தகுதிக்குரிய பணி, ஆண்களுக்கு நிகரான ஊதியம் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை முக்கியக்
கோரிக்கைகளாக முன்வைத்தார்.
தொடர்ந்து
1859ல் நியூயார்க்கில் ட்ராய் நகரில் நிகழ்த்திய பேருரை வாயிலாகவும், மாஸாசூட்ஸ் நகரில்
நடத்திய பேரணி வாயிலாகவும்,
கல்வி கற்பிக்கும் பள்ளிகள்,
கல்லூரிகளில் ஆண், பெண்
இருபாலரும் சேர்ந்து படிக்கும் முறைக்கு அனுமதி மற்றும் உயர்கல்விச் சாலைகளில்
பெண்கள் படிப்பதற்கும் பணி செய்வதற்குமான உரிமைக்காகப் போராடினார். 1860ல் பெண்கள்
தாங்கள் ஈட்டும் தொகையினை தங்கள் விருப்பத்திற்கே சொத்துரிமை கொண்டாடவோ யாருக்கும்
விற்கவோ உரிமையில்லாத நிலையை எதிர்த்து தீரம் மிக்க அறப்போரினைத் துவக்கி, நியூயார்க்
மாகாணத்தில் அதை சட்டமாக்கிய பின்னரே ஓய்ந்தார்.
கறுப்பின மக்களுக்கு ஆதரவாக..
1863ல்
ஸ்டாண்டனுடன் இணைந்து அமெரிக்க தேசியப் பேரவை ஒன்றைத் துவக்கி கறுப்பின மக்கள்
மற்றும் பெண்களுக்கு முழுக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதற்காகவும், அடிமைத் தனத்தை
அங்கீகரிக்க அமெரிக்க சட்ட விதி 14 மற்றும் 15ஐ முழுமையாக ரத்து செய்யவும்
வெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் விதியை அமல்படுத்தவும் மிகப்பெரிய போராட்டத்தை
நடத்தினார். ஆனால் அந்தப் போராட்டத்தால் அடிமைத் தளையிலிருந்து சில விலக்குகள் பெற
முடிந்ததே தவிர பெண்களுக்கான உரிமைகள் எதுவும் வழங்கப்படவில்லை சூஸனும்
விடுவதாயில்லை.
உழைக்கும் பெண்களுக்காக உழைக்கும் சூஸன்:
1868ல்
‘அனைவருக்கும் சம
நீதி' எனும்
முழக்கத்தை முன்வைத்து ‘தி
ரெவல்யூஷன்' எனும்
பத்திரிகையைத் துவக்கினார். அதன் புகழ்பெற்ற பிரதான வாசகமான ‘உரிமை பெற்ற ஆண்கள்
பெண்க¨ளைட
மேலானவர்கள் என்பதற்கு கூடுதல் தகுதி ஏதுமில்லை. ஆண்களுக்கு நிகரான உரிமை பெற
பெண்களுக்குத் தகுதிக்குறைவு எதுவுமில்லை'
என்பது இப்போதும் நினைவுகூறப் படுகிறது.
‘தி ரெவல்யூஷன்' மூலமாகப்
பெண்களுக்கான வாக்குரிமை, முழுக்
குடியுரிமை, ஆண்களுக்கு
நிகரான பணி நேரம், ஊதியம்
மற்றும் சலுகைகள், பல்கலைக்
கழகங்களில் பெண்களுக்கு அனுமதி என்கிற பலமுனை நோக்கோடு அனல் தெறிக்கும் கட்டுரைகளை
வெளியிட்டார். அது பெண்ணுரிமைச் சங்கங்களுக்கும் போராளிகளுக்கும் பெரும்
உத்வேகத்தை வழங்கின.
ரெவல்யூஷன்
பத்திரிகை துவங்கியதன் வாயிலாக அச்சுப்
பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அங்கும்
பெண்களுக்கு விதிக்கப்பட்ட பணிச்சுமை,
வரையறுக்கப்படாத பணிநேரம் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டிய தொழிற்சங்கங்களில்
பெண்கள் உறுப்பினர்களாக அனுமதி மறுக்கப்பட்டது கண்டு வெகுண்டார். எனவே, பெண் தொழிலாளர்களை
ஒருங்கிணைத்து ஒரு பொதுச் சங்கத்தினை நிறுவினார்.
பெண்களாலும் முடியும்...
1869ல்
நடந்த அச்சகத் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் (ஆண்களை மட்டுமே உறுப்பினர்களாகக்
கொண்டது) நடத்திய வேலை நிறுத்தத்தின் போது அச்சக முதலாளிகளை அணுகி, ஆண்களுக்குத்
தரப்பட்ட ஊதியம் பணி நேர வரையறை,
விடுப்பு ஆகியவற்றை உறுதி செய்தால் பெண் தொழிலாளர்களைக் கொண்டு அச்சகத்தை தாம்
நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இதற்கு முதலாளிகள் உடன்படவும், பெண்
தொழிலாளர்களைக் கொண்டு அச்சகங்களை இயக்கினார். இதனால் ஆண் தொழிலாளர்களால் ‘விரோதி துரோகி' என்றுதூற்றப்பட்டாலும்
உறுப்பினர்களாக்க மறுக்கப்பட்ட பெண்களின் நிலையொடு ஒப்பிடுகையில் அவரது முடிவே
மிகச் சரியானது ராஜ தந்திரமானது என்றுஅரசியல் நோக்கர்கள் கருதினார்கள். 1870ல்
ஒருங்கிணைக்கப்பட்ட அச்சகப் பெண் ஊழியர் சங்கத்தின் தலைவராக ஒருமனதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். தையல் துறையில் ஈடுபட்ட பெண்களுக்கான சங்கத்தையும் அவர்
துவக்கினார். 1870ல் சிகாகோவில் நடத்திய மிகப்பெரிய பேரணியில் பலகட்டப்
போராட்டங்களுக்குப் பிறகு பெண்களுக்கு 8 மணி நேரப் பணி மற்றும் சலுகைகள்
ஆகியவற்றைப் பெறுவதற்கு சூஸன் ஆண்டனியின் தொடர்ந்த போராட்டங்கள் பெரிதும் காரணமாக
இருந்தன.
வாக்குரிமைப் போராட்டம்:
பெண்களுக்கான
வாக்குரிமை கோரும் பிரச்சாரங்களையும்,
போராட்டங்களையும் இதனூடே இணைத்து நடத்தியபடியே இருந்தார். ஸ்டாண்டனுடன்
இணைந்து நடத்திய போராட்டத்தின் புதிய யுக்தியாக மாகாணம் மாகாணமாக வாக்குரிமைச்
சட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பது என்பதன் அடிப்படையில் மிகப்பெரிய சுற்றுப்
பிரயாணத்தைத் துவங்கினார். அதன் சிறு வெற்றியாக வையோமிங் எனும் ஒரு சிறு யூனியன்
பிரதேசத்தில் (நம் புதுச்சேரி போல்) பெண்களுக்கான வாக்குரிமைச் சட்டத்தை 1869ல்
முதன்முதலாக அமல்படுத்த முடிந்தது என்றாலும் மற்ற மாகாணங்கள் இதனைப் பின்பற்ற
அவர் முயன்றதற்குத் தோல்வியே கிட்டியது.
அமெரிக்காவின்
மேற்குப் பகுதியில் மிகத் தீவிரமாக உரை நிகழ்த்திய போது அவரும் அவரது மூன்று
சகோதரிகளும் 1872ல் கைது செய்யப்பட்டனர். தேர்தல் ஆய்வாளர் பொதுக்குழு அவர் மீது
சட்ட விரோத நடவடிக்கை என்று வழக்கு பதிவு செய்தனர். அவ்வழக்கிலிருந்து ஜாமீனில்
வெளிவர மனு செய்ய மறுத்துவிட்ட சூஸன்
சிறையிலிருந்தபடி வழக்கைச் சந்தித்தார். 100 அமெரிக்க டாலர் அபராதம் செலுத்தும்படி
தீர்ப்பளிக்கப்பட்டது. என்றாலும்,
தந்திரமாக, அந்தத்
தொகையை சூஸன் கட்டத் தவறினால் சிறை தண்டனை எதுவும் விதிக்கும்படி
தீர்ப்பளிக்கவில்லை. தண்டனை வழங்கப்பட்டால் தான் மேல்முறையீடு செய்ய இயலும் என்கிற
விதி இருந்தபடியால் அவரால் மேல்முறையீடு செய்ய முடியவில்லை.
பெண்களுக்கான
வாக்குரிமையை வலியுறுத்தி 1877ல் 26 மாகாணங்களில் இருந்து சுமார் 10,000
கையெழுத்துக்களைப் பெற்று (அப்போதைய அமெரிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி
பார்த்தால் இது அதிகபட்சமே) ஒவ்வொரு அமெரிக்க காங்கிரஸ் கூடும் போதும் அம்மனுவை
முன் வைத்தார். அது ஏற்கப்படாதது மட்டுமல்லாமல் அதற்காக மிக மோசமாக கேலியும்
செய்யப்பட்டார்.
1887ல்
பெண்களுக்கான வாக்குரிமைக்காகப் போராடிய இரண்டு
முக்கியமான சங்கங்கள் ஒரே அமைப்பின் கீழ் வந்தபோது ஸ்டாண்டன் அதன்
தலைவராகவும், சூஸன்
உபதலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 1892ல் ஸ்டாண்டன் தாமாகவே அப்பதவியிலிருந்து
ஓய்வு பெற்ற போது சூஸன் அதன் தலைவராகத் தேர்வு பெற்றார்.
அதற்குப்
பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய சுற்றுப் பிரயாணத்தைத் துவக்கி வாக்குரிமைப் போரை
கடுமையாக நடத்திய சூஸனின் முயற்சிக்கு இந்த முறை ஓரளவுக்கு பலன் இருந்தது. சில
மாகாண அரசுகள் அவரிடம் விரைவில் வாக்குரிமை சட்டத்தை அமல்படுத்துவதாக
உறுதியளித்தன.
மாஸாசூட்ஸ்
பல்கலைக்கழகத்தில் 50,000 அமெரிக்க டாலர்கள் பிணைத் தொகையாக செலுத்தினால், பெண்கள் உயர்கல்வி
பயிலும் பிரிவைத் துவங்க முன்வருவதாக அதன் உயர் மட்டக்குழு கூடித் தெரிவித்தபோது
அதற்காகத் தனது ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்தை அடமானமாக வைத்து அப்பிரிவைத்
துவங்கக் காரணமாயிருந்தார்.
1900ம்
ஆண்டில் வயோதிகம் காரணமாக பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் பொறுப்பிலிருந்து தானே
விலகினார் என்றாலும், 1904ல்
பெர்லினில் நடந்த உலகப் பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் கெளரவத் தலைவராகத் தேர்வு
செய்யப்பட்டார்.
1906ம்
ஆண்டு மார்ச் 13ம் தேதி ரோஸெஸ்டர் நகரில் மேடிசான் தெருவிலுள்ள தனது இல்லத்தில்
சூஸனின் உயிர் பிரிந்த போது திருப்தியற்ற மனநிலையிலேயே இருந்திருக்க வேண்டும்.
ஏனெனில் அவர் இறக்கும் வரை அமெரிக்கா முழுமைக்குமான பெண்கள் வாக்குரிமைச் சட்டம்
நிறைவேற்றப் படவில்லை. கிட்டத்தட்ட ஒரு வனவாச காலத்துக்குப் பிறகு அதாவது அவர்
இறந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு (1920) அமெரிக்க அரசு பெண்களுக்காக வாக்குரிமை
வழங்கும் மசோதாவை சட்டமாக்கியது.
சூஸன் பெயரிலேயே சட்ட திருத்தம்:
திருமண வாழ்வைத்
துறந்து வாழ்நாள் முழுவதும் பெண்களுக்கெதிரான எல்லா அநீதிகளுக்கும் எதிராக தன்னை
அர்ப்பணித்துக் கொண்ட சூஸனுக்கு அவர் வாழ்ந்த காலம் வரை போராட்டங்களுக்குத் தலைமை
ஏற்பது அல்லது பாதிக்கப்பட்ட சங்கங்களுக்குத் தலைமை ஏற்பது என்பதைத் தவிர வேறு
எந்த அங்கீகாரமும் கிடைத்ததில்லை. போராளிகள் எப்பொழுதும் கிரீடங்களைக் குறி வைத்து
தங்களைச் செலுத்துவதில்லை. என்ற உண்மையை சூஸன் தான் வாழ்ந்த வாழ்வின் மூலம்
நிரூபித்தவர். அதனாலோ என்னவோ 1920ல் அமெரிக்க அரசு பெண்களுக்கான வாக்குரிமைச்
சட்டத்தை அமல்படுத்தியபோது ‘சூஸன்
ஆண்டனி சட்டத் திருத்தம்' என்று
அறிமுகப்படுத்தியது.
மரணத்திற்குப்
பின் வாழ்வு உண்டா என்பது குறித்த சர்ச்சைகளை ஆன்மீகவாதிகளும் பகுத்தறிவாளர்களும்
இன்றைக்கும் உலகமெங்கும் நிகழ்த்தியபடி தான் இருக்கின்றனர். அவற்றையெல்லாம்
புறந்தள்ளி சரித்திரம் ஒருசிலரை மட்டும் மரணத்திற்குப் பின்னும் வாழவைத்தபடி
இருக்கிறது.
மிகச்
சரியாக 2006ம் ஆண்டுடன் சூஸன் மறைந்து நூறாண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் உலகின்
எந்த மூலையில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினாலும் அதன் அடிநாதமாக தீரம்
மிக்க சூஸன் ஆண்டனியின் ஆன்மா உயிர்ப்புடன் துடித்தபடியே இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>