எலிக்குஞ்சுகளோடு எனக்கு குரோதமில்லை
கவிஞர் ப. தியாகு
அன்புமிக்க தியாகு,
உங்கள் கவிதையை வாசிக்கப்பெற்றேன்.
அந்த வாசிப்பனுபவத்தை தந்தமைக்காகவும், சமயவேலின் அற்புதமான முன்னுரையை உங்கள்
தொகுப்புக்காக பெற்றமைக்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தனிமையை எவன் உணர்கிறானோ அவனே
படைப்பாளியாகிறான். புறக்கணிப்புகளும், அவமானங்களும், தோல்விகளும் மனிதனை தனிமையை நோக்கித்
தள்ளிக்கொண்டே இருக்கின்றன. அங்கே பிறக்கிறான் ஒரு படைப்பாளி. தியாகு நீங்கள்
ரொட்டிதுண்டை மட்டுமல்ல எதை விட்டெறிந்தாலும்,
உங்களோடு
கலந்திருக்கும் படைப்பாளி உங்கள் தனிமையை விலகிட விடவேமாட்டான். வேடிக்கை
என்னவென்றால் தோல்விகள்தான் தனிமையை நோக்கித் தள்ளுகின்றன. அப்புறம் வெற்றி விடவே
விடாமல் ஒரு படைப்பாளியை தனிமையோடு இறுகப்பற்றிக்கொள்கிறது. அதற்குப்பின்
எலிக்குஞ்சுகளோடு மட்டுமல்ல எந்த உயிர்ப் பிஞ்சுகளோடும் குரோதம் இருக்கமுடியாது.
கோபமும் கனிவும் மட்டும் மாறி, மாறி ஆட்கொள்ளும்.
அவற்றின் வெளிப்பாடாக உங்கள் முதல்
கவிதை துவங்குகிறது. ஓணானிடம் கனிவும், ஆயுதமெந்திய அந்தச் சிறுவனிடம் மெல்லிய
கோபமும் தோன்றுவதை கவனிக்க முடிகிறது. இந்த காட்சி வர்ணனையை நான் சிறுவனுக்கும், ஓணானுக்குமான மௌனப்போராட்டமாக மட்டும்
பார்க்கவில்லை. சமூகத்தில் தகுதியற்றவனின் கையில் குவிந்திருக்கும் அதிகாரத்தையும், தன் பலம் உணராது கவிழ்ந்துகிடக்கும்
பலகீனமானவர்களையும் கொந்தளிப்போடு பார்த்துக்கொண்டிருக்கும் படைப்பாளியின்
நிலையாகவும் பார்க்கிறேன்.
படைப்பாளி கூர்ந்த கவனிப்பாளனாக
இருக்கவேண்டும். நீங்கள் கூர்மையான அவதானிப்பாளன் தியாகு. பிள்ளைகள் இரயிலாகட்டும், பனித்திவலையாகட்டும், மழைக்கவிதையாகட்டும்
எல்லோரிடமிருந்தும் தப்பித்த பார்வை உங்களிடம் சிக்கிவிடுகிறது.
அதுவும் அந்த பிள்ளைகள் இரயிலை வெகுவாக
இரசித்தேன். கழன்றுபோனபின் அது எதுவென பெரும்பாலோர் கவனிப்பதே இல்லை. தொடர்ந்து
ஓடிக்கொண்டிருக்கும் இரயிலைத்தான் கவனிப்பார்கள். நீங்கள் கவனிக்கிறீர்கள்.
கவிதையாக்குகிறீர்கள்.
உங்களோடு சேர்ந்து நெல்லிக்காய்களிடம்
வந்தேன். அட, அந்த
உவமை உவப்பாயிருக்கிறது. தங்க ஜிமிக்கிகள். நெல்லிக்காய்களுக்கு இதைவிடச் சிறந்த
அங்கீகாரம் கிடைத்துவிடுமா என்ன?
சோம்பலை முறிப்பதற்குத்தான் தேநீர்.
ஆனால் நவீன யுகத்தின் பரிமாறல்களின் விசித்திரம் ‘இன்னும் பருகவே இல்லை' கவிதையில் உணர்த்தப்படுகிறது.
இப்பொழுது பரவலாக பின்பற்றப்படும் பஃபே முறை உணவு வழங்கல் ஒரு விதத்தில்
சௌகர்யம்தான் என்றாலும் விருந்தினர்களை பிச்சைப்பாத்திரம் ஏந்தவைப்பதுபோல்
தோன்றுவதை தவிர்க்கவே முடியவில்லை. இதையும் கவிதையாக்கலாம் நீங்கள்...
இறகொன்றின் முனை செலுத்தி காதுகுடைய
முனையும் எண்ணம் இனிவருமா என்று தோன்றவைக்கிறது உங்கள் மற்றொரு கவிதை. பறவையொன்று
திமிறிச் சிறகடிக்கும் சத்தம் உணர்த்தும் அந்த கவிதை அற்புதம்.
ஊஞ்சல் குழந்தை கவிதையில் பாகை 90க்கு திரும்பிவிட்டிருந்தது பூங்கா
என்ற வரியோடு முடித்திருப்பது அழகு. எந்தவித தூண்டிலோ, நூலோ இல்லாமல் நம் கழுத்தை இழுத்து
பின் வீட்டுவிடுகிற வித்தை குழந்தைகளுக்கு மட்டும் எப்படியோ அருளப்பட்டிருக்கிறது.
பனித்துளிகளும், தீபத்தை ஏற்றியிருக்கும் திரிகளும், காற்றில் புரளும் இலைகளும் உங்கள் தனிமையை அடையாளப்படுத்தியபடி அடிக்கடி
வருகின்றன உங்கள் கவிதைகளில்... சில சமயம் மறுவாசிப்பு போல் தோன்றிவிடுகிறது.
இலக்கங்களால் ஆனவன் கவிதை சமகால வாழ்வின் மாறிப்போன மனித அடையாளங்களை பதிவு செய்த
யதார்த்தமான கவிதை. அந்த கவிதையை ‘சர்ப்பம் வெளியேறுவதைப்போல' என்ற வரியோடேயே நிறுத்தியிருந்தால்
இன்னும் கனமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
சமயவேல் அழகாக ஆடிகள் வழியேத் தோன்றும்
மாயபிம்பங்கள் பற்றி தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ‘யானை' கவிதைகூட இந்த மாயத்தோற்றத்தை
புலப்படுத்தும் மற்றொரு கவிதை எனலாம். நமக்கு கண்ணாடிகள் தரும் குழப்பத்தைப்போல , யானைக்கு கால் சங்கிலிகளும், பாகனின் அங்குசமும்... இரண்டுமே
பிரம்மாண்ட தோற்றத்தை தந்து அதனை நகரவிடாமல் செய்கின்றன.
‘கூரைத்துளை' என்ற வார்த்தைப்பிரயோகம் ‘அட' என்று யோசிக்க வைக்கும்போது அது
பிரமிளின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டது என்று பதிவு செய்கிற நேர்மை எனக்குப்
பிடித்திருந்தது. கவிஞன் பல சமயம் தன் கவிதைகளில் வாழ்கிறான்.. சில சமயம் இது
போன்ற அறங்களில்...
‘ஒரு குருவிகள்' என்கிற வரி மிகவும் ரசிக்கவைத்தது.
இப்படியான பிழையான சொற்றொடரை கவிஞனால்தான் சரி என சொல்லும்படி லாவகமாக கையாள
முடியும்
நூலில் ஆகச்சிறந்த (உரை நடை) கவிதை
சமயவேல் அவர்களுடையதாகத்தான் இருக்க முடியும். அத்தனை நுட்பமான அவதானிப்பு.
வண்ணதாசனின் மனம் கவர்ந்தவர் என்பதால் அவர்மீது எனக்கு மெல்லிய பொறாமை கூட உண்டு.
மிகச் சரியாக அவரை தேர்வு செய்திருக்கிறீர்கள் தியாகு.
வெய்யில் நதி வெளியீடாக
கொண்டுவந்திருக்கும் உங்கள் பெருந்தன்மை போற்றுதலுக்கு உரியது. நண்பர்களை
கௌரவிப்பதும் இலக்கியமே..
முதல் தொகுப்பு என்று தோன்றாத வகையில்
முதல் தொகுப்பு அமையவேண்டும் தியாகு அந்த வகையில் வெற்றிப்பெற்றிருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள்...
மிக்க அன்புடன்
பாரதிக்குமார்
24-01-2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>