புதன், 22 ஜூன், 2022

 

எளிமையான நடையில் வலிமையான கதை

                                         -நெய்வேலி பாரதிக்குமார்.

சங்கு இதழ் ஆசிரியர் வளவத்துரையன்  எழுதிய  

            சின்னசாமியின் கதை நூலுக்கு விமர்சனம் 

 

 


            நவீன இலக்கிய உலகில் நாவல்களை எதிர்கொள்வது அச்சமாக இருக்கிறது. 600 பக்கங்களுக்குக் குறைவாக எழுதினால் அது நாவல் இல்லையோ என்று தோன்ற வைக்கிறது. எர்னஸ்ட் ஹெமிங்வேயின் நோபல் பரிசு பெற்றகடலும் கிழவனும்' குறைந்த பக்கங்கள் கொண்டது தான். பலநூறு வருடகால சரித்திரங்களை உள்ளடக்கியதாக அல்லது சமகால நிகழ்வுகளை அதிகம் பேசாத நாவல்கள் தான் இன்று உயர்வாகப் பேசப் படுகிறது. குடும்பம், சமகால சமூகம் சார்ந்த கதைகள் பத்தாம்பசலித்தனமாகக் கருதப் படுகின்றன.

            ஒரு வாசகனை அவனது பாதையிலிருந்து வேறொரு பாதைக்கு இட்டுச் செல்வதற்கு முடிந்தவரை மென்மையான போக்கையே கடைபிடிக்க வேண்டும். 90 சதவீத மதிப்பெண்கள் பெறும் புத்திசாலிகளை மட்டுமே சேர்த்துக் கொண்டு ஆண்டுதோறும் 100 சதவீத தேர்ச்சியைத் தருவோம் என்று சில பள்ளிகள் தம்பட்டமடிப்பது போல ஒரு சாராரை மட்டும் உடன் அழைத்துச் செல்வது அல்ல நல்ல இலக்கியவாதியின் பணி. அரசுப் பள்ளிகளில் அனைத்து வகையான மாணவர்களையும் அரவணைத்து அழைத்துச் செல்வது போல் ஒரு படைப்பாளி நகரவேண்டும்.

            சின்னசாமியின் கதை' ஆசிரியர் ஒரு அரசுப் பள்ளியின் ஆசிரியர் போலவே வாசகர்களை வழிநடத்திச் செல்கிறார். உரையாடல்கள், வர்ணனை, உவமைகள் யாவும் எளிமையானவை; ஆனால், சாதியை முன்னிறுத்தும் எவருமே தன் சுயநலம் கருதியே அதைச் செய்கிறார்கள் என்ற கதைக் கரு மிக கனமானது. அத்தனை சுலபத்தில் எந்த படைப்பாளியும் கைக்கொள்ள அஞ்சுவது.

            கதையின் நாயகன்கரு'தானே தவிரகதைமாந்தர்கள்' அல்ல! என்பதை தனது சமத்துவமான பாத்திரப் படைப்புகள் மூலம் வளவ.துரையன் நிரூபித்திருக்கிறார். ‘வாசகர்கள் தீர்மானிக்கட்டும்' என்று கடவுள்கள் பேச்சினூடே வருவது ஒரு சாமர்த்தியமான எழுத்துத் திறன் என்றே சொல்லவேண்டும்.

            பஞ்சாபி கதாபாத்திரத்தின் உள்ளேயும் அன்பழகன் கதாபாத்திரத்தின் உள்ளேயும் அடங்காமல் பேயாட்டம் போடும் பிராமணீயத்தை உரித்துக் காட்டும் போது எவ்வித சமரசத்தையும் அவர் மேற்கொள்ளவில்லை. இருவரது சுயநலம்தான் அவர்களின் கோட்பாடுகளை வடிவமைக்கிறது என்பதை வெளிச்சமிட்டிருக்கிறது. அன்பழகனாவது கதையின் இறுதியில் மெல்ல கரையேற முயற்சிக்கிறார். ஆனால் பஞ்சாபி அதில் ஊறி கரைந்தவர் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது வளவ.துரையனின் பாத்திரப் படைப்பு.

            நாவலின் துவக்கத்தில் வரும் கடவுள்களின் உரையாடல்கள் புன்னகைக்க வைக்கின்றன. ‘அதை வளவ.துரையன்கிட்டதான் கேட்கணும்' என்று நாவலின் போக்கு பற்றி ஓரிடத்தில் கடவுள்கள் பேசிக்கொள்வது போல் வருவது நாவலாசிரியரின் குறும்பு என்றே சொல்லலாம்.

            ஆனால், திடீரென அந்தக் கடவுள்கள் ஏன் காணாமல் போய்விட்டார்கள்? நாவலின் இறுதியில் எல்லா மனிதர்களும் கடவுளாகி விட்டதாலா?

            வளவ.துரையன் இயல்பாகவே நேர்மறையான எண்ணம் கொண்டவர். அவரது உலகத்தில் எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு தருணத்தில் நியாயவான்களே. அவர்களிடம் வன்மம் இருக்கும்; ஆனால் வன்முறை இருக்காது. குறைகள் இருக்கும்; குயுக்தியான செயல்பாடுகள் இருக்காது. இந்த நாவலிலும் அப்படியே. பஞ்சாபியும் அன்பழகனும் பொய்ப்புகார் ஒன்றை காவல் நிலையத்தில் தருவதைத் தவிர அதிகபட்சமாக எதையும் செய்யாதவர்கள். வாய்ப்பு கிடைத்தால் திருந்துவதற்கு தயாராகவே இருப்பவர்கள். அவரது மென்மையான மனம் போலவே அவரது பாத்திரங்களும்...

            தொலைந்து போன கிராமியம் குறித்த ஏக்கம் அவரது எழுத்தில் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது. மண்டபங்களில் நடக்கும் திருமணம் எத்தனை போலித்தனமானது! கிராமப் புறங்களில் வீடுகளில் நடக்கும் திருமணம் எத்தனை அற்புதமானது! என்பதை யோசிக்க வைக்கிறது மதியழகன் திருமணம் குறித்து முருகனுடன் மதியழகன் நடத்தும் உரையாடல்.

            கிராமங்களில் எந்தவொரு வீட்டின் விஷேஷமாக இருந்தாலும் அந்த வீட்டுக்குத் தேவையானவற்றை கிராமத்தின் மற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள் தாமாக முன் வந்து தங்களது உடலுழைப்பைத் தருவார்கள். ஆனால், மண்டபங்களுக்குத் திருமணங்கள் இடம் பெயர்ந்த போது அந்த அன்பையும் ஆதரவையும் இழந்துவிட்டோம் என்று உணர முடிகிறது. உண்மையில் திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்கள் தான் சம்பிரதாயமானவை என்பது மிகையற்ற கூற்று.

            சிலருக்கு நெடியாக இருப்பது சிலருக்கு வாசனையாக இருக்கிறது; சிலருக்குத் துன்பமாக இருப்பது சிலருக்கு இன்பமாக உள்ளது' என்ற குப்புசாமியின் மன ஓட்டத்தை ஓரிடத்தில் பதிவு செய்திருக்கிறார். அண்மையில் துரியன் பழம் பற்றி செய்தி ஒன்றை வாசித்தேன். அது மிக துர்நாற்றம் வீசுகிற பழம் என்பதால் இந்திய துணைக்கண்டத்தில் அதிகம்  பரவவில்லை. ஆனால், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்  இன்னமும் துரியன் பழத்துக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. ‘பழங்களின் அரசன்' என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். இந்த ரசனையின் வேர் குறித்து நாம் ஆராய வேண்டியதில்லை. குப்புசாமியின் மன ஓட்டத்தை வாசித்தால் மேற்கண்ட தகவலின் முரண் புரியும்.

            வேறு எவரையும் விட நியாயவான்கள் மீதுதான் கேள்விக்கணைகள் பாயும். ஒரு பகுத்தறிவாளனின் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் ஆன்மீகவாதிகளாய் இருந்தால் அது பகுத்தறிவாளனின் குற்றம் போல் கருதப் படுவது இங்கே இயல்பாகிறது. இதற்கு மிகச் சரியான தார்மீக விளக்கத்தை கண்ணுசாமி-முருகன் பேசும் போது முன்வைக்கிறார். அதே சமயம், பகுத்தறிவாளனாக சுயமரியாதைத் திருமணத்தை ஊரறிய நடத்தும் கண்ணுசாமி யாருக்கும் தெரியாமல்  ஒரு நிர்பந்தத்தின் காரணமாக சாஸ்திர சம்பிரதாயப்படியும் தாலிகட்டும் வைபவத்தை நடத்துவதை முருகன் மூலம் விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார். இந்தப் புரிதல்தான் கதாபாத்திரப் படைப்பில் குழப்பமற்ற கொள்கைகளோடு அவர் இருப்பதை புலப்படுத்துகிறது.

            இயன்றவரை ஆங்கிலம் கலவாமல் கதையின் போக்கு மற்றும் உரையாடல்களை வடிவமைத்திருப்பது அவரது தமிழ்ப்பற்றைக் காண்பிக்கிறது. சில இடங்களில் சில சொற்கள் ஒட்டாமல் இருந்தாலும் அப்படியாவது சிலர் பழகட்டும் என்றே தோன்றவைக்கிறது.

            முனைவர் பாஸ்கரனின் முன்னுரை அடர்த்தியானது. ‘எழுத்து மலையை உருவாக்கி விட்டேன்; வலிமை உள்ளவர்கள் அதில் ஏறி வாருங்கள்' என்று புதினங்களை சிலர் கடினப்படுத்தி விட்டதைப் பற்றி எள்ளலுடன் கூறியிருப்பதை ரசிக்க முடிகிறது.

            நூலை மன்றவாணனுக்கு சமர்ப்பித்ததற்காக வளவ.துரையனைப் பாராட்டலாம். மன்றவாணன் மிகச் சிறந்த வாசகர். நேர்மையான விமர்சகர். எளிமையான வழக்கறிஞர். என்றாலும் எவரிடமும் எப்போதும்வழக்கு' பேசாது மென்மையாக தனது கருத்துக்களை முன்வைக்கும் இயல்பினை உடையவர். ஒரு நூலை சமர்ப்பிக்க சகல தகுதியும் படைத்தவர்.

            எழுத்துப் பிழைகள் மலிந்து கிடப்பது பெரிய குறைதான். சில சமயம் அனர்த்தமாகிவிடும் ஆபத்தைத் தருமளவு பெருகிக்கிடக்கிறது. அடுத்த பதிப்பில் இந்தக் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.

            கதையின் நாயகன் யார் என்பதை வாசகர்களின் பொறுப்புக்கு விடும் வளவ.துரையன், ஏன் நாவலுக்குசின்னசாமியின் கதை' என்று தலைப்பிட்டு சின்னசாமியை முன்னிலைப் படுத்துகிறார் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

            சின்னவர்'களாக உதாசீனப்படுத்தப் பட்டவர்கள்சாமி'களாக உருமாறுவதும், ‘சாமி' என்று விளிக்கப் பட்டவர்கள்சின்னவர்'களாக நடந்து கொள்வதையும் புலப்படுத்தும் கதை என்பதால் அவ்வாறு பெயர் சூட்டினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.  ஆனால், வளவ.துரையன் தன் முன்னுரையில்இது நடந்த கதை' என்று சூசகமாக சொல்வது போல் தெரிகிறது. கதையின் முடிவுப் படிஎங்கும் நடக்கும் கதை'யாக இது இருக்கட்டும் என்றே மனது விழைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...