சிறு துளியில் மிதக்கும் கடல் ....
நெய்வேலி பாரதிக்குமார்
கவிதை பல
சமயம் ஒரு சொல்லில் கிடைத்து விடுகிறது அல்லது நிறைவு பெற்றுவிடுகிறது. அந்த
சொல்லை ஒரு வாசகன் எப்பொழுது கண்டடைகிறானோ அப்பொழுது கவிதை தன் உன்னதத்தை
அடைந்துவிடுகிறது. ஆகையினால் கவிதைக்கு வடிவம் என்பது பொருட்டில்லை. கால மாற்றம்
வடிவத்தை நிர்ணயிக்கிறது. சில சமயம் வாழும் காலத்து சமூகம் கவிதையை வடிவங்களால்
அலங்கரிக்கிறது. மகாகவிகள் வாசகனை வடிவங்களின் வாசல் வழியே கவியுலகிற்கு இட்டுச்
செல்கின்றனர்.
ஜப்பானிய
சமூகம் தனக்கு ஏற்பட்ட பேரழிவுகளை உடைத்து தன்னை முன்னிறுத்தும் இயல்பு கொண்டது.
ஜப்பானை அழிக்க இயற்கையும் உலகமும் முயன்ற போதெல்லாம் சிதறிப் பிரிந்து ஒவ்வொரு
சில்லிலும் ஒரு புதிய ஜப்பானை பிறப்பிக்கும் வல்லமை கொண்டது. ஒட்டுமொத்த உலகமும்
மிகப்பிரம்மான்டம் என்ற ஒன்றை நோக்கியே வெறியாக ஓடிக்கொண்டிருந்தபோது.. ஜப்பான்
சிறியதிலும் சிறியதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. எல்லா பிரம்மாண்டத்துக்கும்
மையம் ஒரு சிறிய அணுதானே என்பதை உலகம் திரும்பி நின்று புரிந்து கொள்ள முயன்றபோது
ஜப்பான் தன்னை முதன்மையான இடத்தில் நிறுத்திக் கொண்டது ஜப்பானை நான் இப்படி
குறிப்பிடுவதுண்டு ‘சிறு துளியில்
மிதக்கும் கடல்’ என ... அது ஹைக்கூவுக்கும் பொருந்தும்...
சிறியதிலும்
சிறியது என்கிற சாதனையை தொழில்நுட்பத்தின் எல்லா தளங்களிலும் ஜப்பான் சாதித்தபோது
கவிதையில் சிறியதிலும் சிறியது முகிழ்க்கத் தொடங்கியது. ஹொக்கு, ஹைக்கு, ஹைபுன்,
சென்ரியு என்ற பலவாக அதன் சில்லுக்கள் கவிதையின் புதிய தரிசனங்களை உலகுக்கு
ஜப்பான் சீரான இடைவெளியில் தந்து கொண்டே இருந்தது.
ஜப்பானின்
மிகச்சிறந்த கவிகளான பாஷோ, பூசன், இசா, ஷிகி ஆகியோர் வெவ்வேறு சாலைகள் வழியே
வாசகனை அழைத்துச் சென்றதன் வரலாற்றையும் அவர்களின் படைப்புகளையும் வைப்பு முறை
என்று சொல்லப்படும் அழகான வரிசைப்படி நால்வர் என்கிற இந்த நூலில் கவிஞர்
பல்லவிகுமார் தொகுத்து தந்திருக்கிறார்.
சைவ
நெறியில் நால்வர் என்று சம்மந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்றும்
வைணவ நெறியில் நால்வர் என்று பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர
ஆழ்வார் என்றும் சொல்வார்கள். அது போல ஜப்பானின் நால்வரை தமிழிலக்கிய உலகிற்கு
எளிமையாக அறிமுகப் படுத்தியுள்ளார் பல்லவி.
தமிழில் ஹைக்கூ அறிமுகமாகி நூறாண்டுகளுக்கு மேல் ஆகின்றன தமிழ்
இலக்கிய உலகிற்கு ஹைக்கூ பற்றிய அறிமுகத்தை 1916 ஆம் ஆண்டிலேயே
மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரை வழியே தந்திருக்கிறார் என்கிற
செய்தி இந்த சமயத்தில் பெரும் வியப்பையும் பெருமிதத்தையும் தருகிறது.. அவருக்குப்
பின் ஈரோடு தமிழன்பன், அமுதபாரதி, சுஜாதா, மித்ரா, அறிவுமதி எனப்பலரும்... அவர்கள்
வழியில் பல்லவிகுமார் நால்வர் என்னும் இந்த நூல் வழியே ஹைக்கூவின் கரம்பிடித்து
நம்வசம் ஒப்படைக்கிறார்.
ஹைக்கூ
கவிதையுலகில் பாஷோவையும், எடோவையும்
அறிந்த அளவுக்கு பூசன் , ஷிகி ஆகியோரை அறிந்திருப்போமா? என்றால் ஹைக்கூவின்
வரலாற்றோடு பரிச்சயமானவர்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம்.
ஹைக்கூ கவிதைகளை ஒரு வாசகனாக ரசிப்பவர்கள் இந்த நால்வரை சென்றடைந்திருப்பார்களா
என்பது சந்தேகமே
பல்லவி
ஒரு வரலாற்று எழுத்தாளனைப்போல அவர்களின் வாழ்வியல் சம்பவங்களை ஒரு கோர்வையாக அதே
நேரம் சுவாரசியமாக குறிப்பிட்டுவிட்டு ஒரு கவிஞனின் நேர்த்தியான நடையோடு அவர்களின்
கவித்துவ வரிகளை நமக்கு கடத்துகிறார்.
ஒவ்வொருவரின்
வாழ்க்கைப் பற்றிய செய்திகளை குறிப்பிட்டுவிட்டு இடையிடையே பொருத்தமான மனம் கவர்
கவிதைகளை ஒரு முன்னோட்டம்போல இடம்பெற வைத்து கட்டுரையின் கடைசியில் அவர்களின்
ஆகச்சிறந்த கவிதைகளை மழையென பொழியச் செய்திருக்கிறார்
மொழிபெயர்ப்பில்
மிகக் கடினமானது கவிதைகளை மொழிபெயர்ப்பதுதான். பிள்ளையார் பிடிக்க குரங்காய்
முடியும் மொழிபெயர்ப்புகளை பலரும் அனுபவித்திருக்கக் கூடும். ஆனால் இடர்பாடில்லாத
வாசிப்பு அனுபவத்தை தருகிறது பல்லவியின் மொழிபெயர்ப்பு சில கவிதைகள் ஜப்பானிய
வாசகனின் மெய்யான அதே அனுபவத்தை ஒரு தமிழ் வாசகன் உணரும் அளவு இருக்கின்றன.
காற்றின் கொப்பளிப்பு
பாறைகளால்
பிளவுபட்டது
தண்ணீரின்
குரல்
என்கிற பூசனின் கவிதைதான் எத்தனை அளப்பரிய நுட்பங்களைக் கொண்டது
புதர்க்
காட்டு வாசல்
பூட்டாய்
இருந்தது
நத்தை
என்கிற இசாவின் கவித்துவ பார்வை தரும் வியப்பு எல்லையற்றது
ஷிகியின் கவிதைகளை இன்னும்
தமிழுலகம் கொண்டாடவில்லை என்று ஒரு உரையாடலில் ஆதங்கமாய் குறிப்பிட்டார் பல்லவி
ஊமையின் இராப்பிச்சை
காதுகேளாதவன்
பாத்திரத்தில்
தாளமிடும் மழை
என்கிற கவிதையையும்
சிட்டுக்குருவி
சற்று
கால் தூக்கிட
சேறு துடைக்கும் பூ
என்கிற கவிதையையும் வாசிக்கும் போது நாமும்
பல்லவியின் கருத்தை ஆமோதிக்கிறோம் ஆம். ஷிகியை கொண்டாடியே தீரவேண்டும்..
நால்வர்
என்கிற இந்த நூல் வழியே ஹைக்கூ கவிதை உலகிற்கு நீங்கள் செய்திருக்கும் இந்தப் பணி
மகத்தானது பல்லவி அதற்காக உங்களையும் கொண்டாடியே ஆக வேண்டும்.
அணிந்துரையை
எழுதி முடித்தாலும் பல்லவிகுமார் மொழிபெயர்த்த இந்த கவிதைகள் மீண்டும் என்னை
நூலுக்குள் இழுக்கின்றன. நான் கவிதைகளுக்குள் மூழ்குகிறேன் ஒரு படைப்பாளனின்
வெற்றி அங்கு நிறுவப்படுகிறது .....
மிக்க
அன்புடன்
நெய்வேலி
பாரதிக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>