எழுத்தாளர் ராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றச் சிறுகதை
கொடுங்கனவு
-நெய்வேலி
பாரதிக்குமார்
“எளங்கோ..
அதிர்ஷ்டக்காரன்யா நீ.. இப்ப ஒனக்கு ‘ஆப்பரேஷன் தம்பா’ டூட்டி” என்று கெக்கலிப்போடு கிருஷ்ணமூர்த்தி
சொன்னபோது ‘சொரேலெ’ன செருகியது போல இருந்தது இளங்கோவுக்கு. பாதி ‘டீ’ யை அப்படியே
வைத்துவிட்டு எழுந்தான். மடியிலிருந்த அன்றைய பேப்பர் நழுவி கீழே விழுந்தது. கிருஷ்ணமூர்த்திக்கு
எப்பவும் இளங்கோவைக் கண்டால் இளக்காரம்தான். அவனுக்கு ஒரு கஷ்டம் என்றால் அத்தனைப்
பல்லையும் துருத்திக்கொண்டு இளிப்பான். அதுவும் ‘ஆப்பரேஷன் தம்பா’ (ஸ்டேஷனில்
அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் சங்கேதச் சொல்) மிளகாப்பொடியை ஆசனவாயில் தடவி
அடுப்பில் உட்கார வைப்பதுக்கு இணையான எரிச்சல் பிடித்த வேலை.
“என்னய்யா
அநியாயமா இருக்கு போன மாசம்தானே அந்த டூட்டி எனக்கு.. இப்பவுமா? ஏன் வேற எவனுமே
இல்லையா?.. கேசவன்தானே இந்த மாசம் வரனும். எனக்குன்னா ஒரு ரூல்சும் இல்லியா”
“கேசவனுக்கு
பந்தோபஸ்து டூட்டி.. உனக்கு அயனான ஆளு துணைக்கு கலியபெருமாளு”
“அக்கிரமமா
இருக்கு அவரு வயசுக்கு மல மேலேல்லாம் ஏற முடியுமா? இதுக்கு ஆளே போடாம இருக்கலாம்..
என்னய்யா நெனச்சுகிட்டு இருக்காரு எஸ்.ஹெச்.ஓ..”
“ஒன் வங்கணத்தை
எல்லாம் அங்க போயி சொல்லு.. ஜல்தியா போ துரை... இன்ஸ்பெக்டர் வேற கலெக்டர் மீட்டிங் போறாரு”
டீக்கடையிலிருந்து
வேகமாக எழுந்து ஸ்டேஷனை நோக்கி நடந்த இளங்கோவோடு அவனது கனவும் கூடவே போனது. அந்தக்
கனவுக்கு அனேகமாக முப்பது வயது இருக்கலாம். அவனது ஐந்தாவது வயதில் பிறந்த கனவு
அது. நியாயப்படி அதுதான் அவனது முதல் பிள்ளை. நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
என்பார்களே அப்படியாக அதை வளர்த்து வந்தான். அது பிறக்கும்போதே கருப்பு கூலிங்
கிளாஸ், போலீஸ் தொப்பி, பிரவுன் கலர் ‘ஷூ’வோடு பிறந்தது. வரும்போதே ஜீப்பில்தான்
வந்தது. கையில் கையடக்கத் துப்பாக்கி. ஜீப்பை விட்டுக் கிழே இறங்கியதும் கேள்வி
கேப்பார் இல்லாம ‘பட பட’வென சுடும். பிறகு கண்ணாடியை ஸ்டைலாக சுழற்றி
மாட்டிக்கொண்டு வந்த வழியே பறக்கும். அது சுட்ட கணக்கைப் பார்த்தால் தீவிரவாதிகள்
எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையையும் தாண்டும்.
கொஞ்சம்
வளர்ந்ததும் ஜீப், சுமோவாக மாறியது. தொப்பி இல்லாமல் தலையைக் கோதி நடந்தான்.
வாயில் எப்பொழுதும் புகையும் சிகரெட். அதே துப்பாக்கிதான். ஆனால் அடிக்கடி அதன் விசையை
இழுத்து மறுபடி விடுவான் (அது எதுக்குன்னே தெரியாது)
அப்பா இறந்த
பிறகு ஐ.பி.எஸ் கனவு தகர்ந்தது. போனால் போகிறதென்று இன்ஸ்பெக்டராக இருப்பதென்று
தீர்மானித்தான். ஜீப்பிலிருந்து மாறி அரைகுறை மனதோடு புல்லட்டில் பறந்தான். ஆனால் இவனோட
நிலத்தையும் சேர்த்து பார்த்துக்
கொண்டிருந்த பெரியப்பா இறந்து போனதால், பி.ஏ ஆங்கில இலக்கியம் படிப்பை பாதியில்
விட்டுவிட்டு வீடு திரும்பியபோது கனவு நொண்டியடித்தது. இருந்தாலும் அது அவனை
விட்டு நகரவே மாட்டேன் என்றது.
ஒரு வழியாக
கான்ஸ்டபிள் போஸ்டிங் கிடைத்தபிறகு என்றைக்காவது ஒரு நாள் சர்வீசில்
இன்ஸ்பெக்டராகிவிடுவோம் என்று துப்பாக்கியை கழற்றி வைத்துவிட்டு லத்தியோடு
சுற்றிக்கொண்டு இருக்கிறது அவனது கனவு.
ஆனால் இவன் ராசி
எங்க போனாலும் முட்டும். அது என்னவோ சேர்ந்த நாளிலிருந்து இன்ஸ்பெக்டருக்கு
இவனைக்கண்டாலே பிடிக்கவில்லை. ஒரு மனிதனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று
தெரிந்தும் அவன் கூடவே நாளின் பெரும் பகுதியை கழிக்க வேண்டியிருந்தால் அது எத்தனை
கொடுமையானது. அதுவும் அந்த நபர் உயரதிகாரியாக இருந்துவிட்டால் அதைவிட நரகம்
வேறொன்றும் இல்லை.
இளங்கோ ஸ்டேஷன்
போவதற்குள் இன்ஸ்பெக்டர் வெளியே கிளம்பிவிட்டார். ‘ஏட்டு’தான் இருந்தார். அவர்
அதிகாரமற்ற அப்பாவி. இன்ஸ்பெக்டரைக் கேக்காமல் ‘உச்சா’ போகக்கூட ஆயிரம் முறை
யோசிப்பார்.
“வாப்பா இளங்கோ,
ஏரிமலையில எவனோ ஒரு பிச்சைக்காரன் செத்துட்டானாம். நீதான் போயி அந்த பாடியை ஜி.ஹெச்-க்கு
எடுத்துட்டு வந்து ஃபார்மாலிட்டி எல்லாம் முடிக்கணும். கூட கலியபெருமாளை
கூட்டிக்க”
“அவரை ஏன் சார்
வயசான காலத்துல அந்த டூட்டிக்கெல்லாம் போட்டுட்டு.. கேசவனுக்கு எல்லாம் இந்த
டூட்டியே கெடையாதா?”
‘அவரை
பந்தோபஸ்த்துக்கு போட்டாச்சு.. டூட்டி சார்ட்ல உன்னை பர்ட்டிக்குலரா ஏரிமலைக்கு,
அய்யாதான் போட சொன்னாரு. நீதான் சரியா முடிக்கற போல”
“அதெல்லாம்
ஒண்ணுமில்லை சார் அந்த நாய் பொழப்புக்கு நாந்தான் எப்பவும்.. மொதல்ல அந்த தம்பாவை
கண்டு புடிக்கணும்.. அதுக்கப்புறம் ஆவற செலவு பூரா என் தலையில..”
“போய்யா.. எந்த
ஜென்மத்துல அவனுகளுக்கு புள்ளையா பொறந்தியோ.. அநாதை பொணத்துக்கு எல்லாம் நீதானப்பா
பெறாத புள்ளை.. போ.. போ..சாமி.. .புண்ணியம் சாமி”
“கலியபெருமாளை
ஸ்டேஷன் பாராவுலேயே வச்சுக்கங்க..” என்றபடி வெளியே வெறுப்போடு கிளம்பினான் இளங்கோ.
எதிரே இருந்த
சுவரில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டரில் கூலிங் கிளாஸ் அணிந்த ஹீரோ யாரையோ சுட
குறிபார்த்துக் கொண்டிருந்தான். அந்த போஸ்டர் அவனை அந்த சுவரின் பக்கம்
மல்லுக்கட்டி இழுத்தது. இவன் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் தன்னையே தர தரவென
இழுத்துக்கொண்டு வேறு பக்கம் நடந்தான். ‘முதல்ல இவனுங்களை சுடனும்’ பற்களை கடித்தபடி
மனசுக்குள் ‘டுமீல்’ சொன்னபடி கைகளால் பின்பக்கம் சுவரை நோக்கி சுட்டான்.
பக்கத்திலிருந்த கனவு அவனை கிண்டலாக பார்த்தது. ’நவுரு எட்ட கடுப்பை கிளப்பாத’
என்று சொன்னபடி ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்தான். அது வழக்கம்தான். பஸ், கார் எதுவும்
போகமுடியாத இடம் ஏரிமலை. டூ வீலர்தான் சாத்தியம். ஆனா பைக்கில போனா வழியில நின்னுட்டா
அவ்வளவுதான்.... அதுவுமில்லாம பொணத்தை அனாயசமா சைக்கிள் கேரியர்ல கட்டிக்கிட்டு
தம்பா அவன் பாட்டுக்கு ஒண்டியாளா கிடு கிடுன்னு வந்துடுவான். கிட்டத்தட்ட நாலு
கி.மீ. தூரம். எல்லா போக்குவரத்தும் அந்த ஊருக்கு கழுதை மேலதான்.
“என்ன இளங்கோ
முழிச்சுகிட்டே தூங்கற.. கண்ணு தெரியலையா?” கிட்ட வந்து கேட்ட கருணாகரன் குரல்
அவனைத் திடுக்கிட வைத்தது. பின் சுதாகரித்து “ சும்மா நக்கல் வுடாதப்பா இன்னிக்கு
எனக்கு ஏரிமலை டூட்டி.”
“அடடா அப்படியா...
ஆனா உனக்கு ஒரு உபயோகமான நியூஸ் தர்றேன். தம்பா இப்ப அங்க இடும்பன் கோயில்கிட்ட
இருக்கான். அவன் இருக்கற இடம் தெரிஞ்சாலே பாதி வேலை முடிஞ்சா மாதிரிதானே”
அது என்னவோ
உண்மைதான். அதனாலதான் ‘ஆப்பரேஷன் தம்பா’ன்னு கிண்டலா இந்த டூட்டிக்கு பேரு.
“ரொம்ப
தேங்க்ஸ்பா இனிமே நான் பாத்துக்கறேன்” கொஞ்சம் ஆசுவாசமாகிக் கிளம்பினான். தம்பா
ஒண்டிக்கட்டை.... வீடு வாசல் கூட கிடையாது. ஆளு கில்லாடி எந்த வேலை சொன்னாலும்
தட்டாம செய்வான். அவனுக்கு முடியாதுன்னு ஒரு விஷயமே கிடையாது. ஏரிமலை
சுத்துவட்டாரம் முழுக்க அத்துப்படி. ஒரு குவார்ட்டரும் கொஞ்சம் பணமும்
குடுத்துட்டா அவன் எமன்தான். ஆனா அவனைப் பிடிக்கிறது அத்தனை சுலபமில்லை.
சரக்கு கண்ட இடம் சொர்க்கம்னு எவன்
குடுத்தாலும் அவன் கூட எந்த வேலைக்கும் கிளம்பிடுவான்.
கொஞ்சம் வறுத்த
கடலை, உலர்ந்த திராட்சை, இரண்டு பீடி கட்டு, ஒரு தண்ணி பாட்டில் வாங்கிகொண்டான். தம்பாவுக்கு
பீடிதான் பலநேரம் சோறு. அதனால பீடி இல்லாம இளங்கோ மலை மேல ஏறமாட்டான். சைக்கிளை
ஒரு உந்து உந்தி ஏறினான். அவனது கனவும் ‘ஜிங்’கென்று கேரியரில் ஏறி அமர்ந்து
கொண்டது. வழக்கம்போல ஏதாவது ஒரு பாடலை பாடிக்கொண்டு
மிதிக்க ஆரம்பித்தான். ஏரிமலையில் யாரவது விழுந்து தற்கொலை செய்து கொள்வது
அடிக்கடி நிகழ்வதுதான். அல்லது யாரேனும் பிச்சைக்காரர்கள், பைத்தியக்காரர்கள்
இப்படி இறந்து கிடப்பது உண்டு.
ஏரிமலை விஏஓ
ராமச்சந்திரனுக்கு போன் செய்தான்.. ரொட்டீன் கால்தான்.. ஆனா நல்ல மனுஷன்
அவருக்குத் தகவல் சொல்லிட்டுப் போனா ஊர்ல எதுனா தேவைன்னாலும் உடனே ஏற்பாடு
பண்ணிடுவாரு
“வணக்கம் சார்
.. தலயாரி சொன்னாப்புல இப்ப நான் ஜமாபந்தி விஷயமா கலெக்டர் ஆஃபீஸ் வந்திருக்கேன்.
தலையாரியும் ஊர்ல இல்ல அவரு உறவு முறையில கல்யாணம் ஒண்ணு.. எப்பவும் போல என்ன
ஃபார்மாலிட்டியோ பாருங்க நான் காலையில காரிமங்கலம் வந்துடறேன்” என்றார் விஏஒ
போச்சு இன்னிக்கு எல்லா இம்சையும் நம்ம தலையிலதான் போல..
மொபைல்
அடித்தது. கவுசிதான். சைக்கிளை நிறுத்திவிட்டு “சொல்லு கவுசி” என்றான். அவள்
அந்தப் பக்கத்திலிருந்து “என்னங்க வானூர் பெரியப்பா தவறிட்டாராம்” என்றாள்.
“போச்சுடா”
என்று தலையில் கைவைத்தான்.
“ஏன் என்னாச்சு”
“இல்லை
இன்னிக்கு எனக்கு ஏரிமலை டூட்டி. நானே போன் பண்ணனும்னு நெனச்சேன்.”
“அத யார்
தலையிலயாவது கட்டிட்டு வந்து சேருங்க”
“ முடியாதே
இப்பவே பாதி தூரம் வந்துட்டேன் “
“ அது போவுது ..
ஒரு நல்லது கேட்டதுக்கு உங்களை நம்ப முடியாதே”
“ எப்ப
எடுக்கறாங்க?”
“ நாளைக்கு
காலையில பத்து மணி ஆயிடும்னு சொன்னான் தம்பி”
“ ஒண்ணு பண்ணு
நீ இப்ப கிளம்பி போ நான் பின்னாடியே வந்துடறேன்”
“வழக்கமா
நடக்குறதுதானே.. எரிச்ச பின்னாடி வந்து சேராதிங்க. ஊருக்கெல்லாம் பந்தோபஸ்துக்கு போங்க.. ஆனா பொண்டாட்டி பிள்ளையை மட்டும் தனியாவே
எங்கயும் அனுப்புங்க.. இதோ வந்துடுவாரு ..இதோ வந்துடுவாருன்னு சொல்லி, சொல்லி
எனக்கு அது மந்திரமாவே ஆயிடுச்சு” டக்கென்று கட் செய்தாள் இன்ஸ்பெக்டர் மாதிரியே..
அவரும் இப்படித்தான் விஷயம் சொன்ன வேகத்துல கட் பண்ணிடுவாரு ..கொஞ்சம் கேப்
குடுத்தா ஏதாவது யோசிச்சிடுவோம்ல
ஏட்டுக்கு போன் செய்தான் .”சார், எங்க பெரிய மாமனார்
இறந்துட்டார் .. நான் போய் ஆகணும். இப்பதான் போன் வந்துச்சு”
“ என்னய்யா இப்படி சொல்ற .. அய்யா கிட்ட கேட்டியா”
“ அவருதான் கலெக்டர் மீட்டிங்க்ல இருக்காரே இப்ப எடுக்க
மாட்டாரு”
“அந்த பாடியை மட்டும் கொண்டு வந்து சேர்த்துட்டு அப்புறம்
போயேன் வேற ஆளு இல்லை இளங்கோ”
“ போய் நாங்க செய்ய வேண்டிய சம்பிரதாயம்லாம் இருக்குங்க
சார்”
“அது இருக்கும்தான். இப்பவே கிளம்பனும்னா ஏதோ வேணும்னு பொய்
சொல்லிட்டுப் போறேன்னு நெனைப்பாருய்யா.. அதானால ஜி.ஹெச் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்துடு
. போஸ்ட் மார்ட்டம் டூட்டிக்கு வேற ஆளை போட்டுக்கறேன்.”
இப்பவே போகணும்னு சொன்னாதான் அப்புறமாவது போகமுடியும். மறுபடி
சைக்கிள். மறுபடி பாட்டு.. கொஞ்சம் கடலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். அவனது
கனவு ஒரு முறை அவனை இங்கே அழைத்து வந்திருந்தது. அப்பொழுது அவன் சி.ஐ.டி.யாக
இருந்தான். ஒரு முக்கியமான கடத்தல்காரனை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.
வழியிலும் அவனது கடமை அவனை சும்மா இருக்க விடவில்லை. வயசு பெண்களிடம் வம்பு செய்த
ஒரு ரவுடியை புரட்டி எடுத்துவிட்டு, காப்பாற்றிய பெண்ணோடு சின்னதாக ஒரு பாட்டு
பாடிவிட்டு (அதானப்பா இலக்கணம்),அப்படியே ஆயாவிடம் சங்கிலியைப் பறித்துச் சென்ற
திருடனைத் துரத்திப் பிடித்து, ரயிலின் குறுக்கே நடந்து சென்ற சிறு குழந்தையை
ரயில் வருகிற கடைசி நொடியில் தாவி குதித்து காப்பாற்றி (‘பஸ்’சுக்கே இங்க வழி
இல்லையாம்) இப்படி ஏகப்பட்ட சாகசங்களை செய்துவிட்டுத்தான் அந்த கடத்தல்காரனை
ரகசியமாக(!) தொடர்ந்து வந்தான். வந்த வேகத்தில் சுட்டும்விட்டான். அவனுடைய கனவில்
கோர்ட், விசாரணை எல்லாம் கிடையாது. ‘தூ’ என்று துப்பினான் அட சே...சொத்தை கடலை
‘தம்பா நிதானத்துல இருக்கானோ இல்லை குடிச்சிட்டு
எங்கனாச்சும் கெடக்கறானோ’ என நினைத்துக் கொண்டு இன்னும் வேகமாக மிதித்தான். சட்டைக்கும்,
உடம்புக்கும் இடையில் புகுந்த காற்று முதுகு வழியே நகர்ந்து இடுப்பிலிருந்து கீழே இறங்கிச்
சென்றது சுகமாக இருந்தது. தம்பா எவ்வளவுக்கு எவ்வளவு உழைப்பாளியோ அவ்வளவுக்கு
அவ்வளவு நாணயஸ்தன். காசுக்கு முணங்குறது, கூட கெடைக்கும்னு ஐடியா பண்ணி வேணும்னு
அலைக்கழிக்கறதுன்னு எந்த பிசிநாறி வேலையும் அவன்கிட்ட கிடையாது. ஒண்ணிரண்டு முறை
பாடி கெடைக்காம போனப்ப தேடுனதுக்கு கூலியெல்லாம் வேணாம் வுடுங்கன்னுட்டான். படிக்காத
மலைஜாதிக்காரந்தான் ஆனாலும் செடி, கொடி, பறவை, பூச்சி, மிருகம் அத்தனையும் அவனுக்கு அத்துப்படி.
பறவையொன்று அவன் தலைக்கு மேலே மெல்ல குரல் கொடுத்தபடி கூடவே
பறந்து வந்து கொண்டிருந்தது. விசிலடித்து அதனிடம் என்ன என்று கேட்டான். அதுவும்
தன் குரலால் ஏதோ சொன்னது. இந்த பறவைங்க பாஷையை கத்துகிட்டா எவ்வளவு நல்லா
இருக்கும்?
இடும்பன் கோயிலுக்கு வந்த போது மணி ஆறாகிவிட்டது. மரம்
சூழ்ந்த பகுதி என்பதால் அதற்குள் இருட்டிவிட்டது. ‘தம்பா’ ‘தம்பா’ என்று
கூப்பிட்டான். வெளியே வந்த பூசாரி ‘தம்பா இல்லிங்களே அய்யா’ என்றார்.
“அய்யய்யே..இங்கதான் இருக்கான்னு சொன்னாங்க. அவனை நம்பி
முக்கியமான வேலை இருக்கு”
“செக்கூர் ஆலமரத்து பிச்சைக்காரன் செத்துப்போய் கிடக்கான்.
அதானே சொல்றீங்க.. தம்பா சொல்லிட்டுதான் இருந்தான். இதோ வந்துடுவான். தேன் எடுக்கற
வலையான் கூட்டிட்டு போயிருக்கான். இப்படி உக்காருங்க”
கோயிலின் முன்னிருந்த கல்லில் அமர்ந்து கொண்டான். மொபைலை
எடுத்து பார்த்தான் சுத்தமாக டவர் இல்லை. அதுவும் நல்லதுக்குத்தான் இல்லை என்றால்
கவுசி நிமிஷத்துக்கு நூறு முறை போன் பண்ணி எங்க இருக்கீங்க என்பாள்,, கூடவே ரெண்டு
நொடிப்பும் வரும்.. எங்க இருக்கறேன்னு தெரிஞ்சுக்கறதை விட அவளோட அங்கலாய்ப்பை
சொல்லிடனும் அதான் முக்கியம். ரொம்ப நாள் வாட்ஸ் அப் செய்திகளைக் கூட்டி அள்ளி
குப்பைக் கூடையில் போட்டுக் கொண்டிருந்தான். தம்பா வந்துவிட்டான்
“வாங்க சாரு..இப்பவும் நீங்கதான் வருவீங்கன்னு நெனச்சேன்”
“எப்பவும் நான்தான்’ அலுப்போடு சொன்னான்.
“தேனு வேணுமா சாரு.. நல்லாருக்கும்”
“எனக்கு வேணாம்.. தம்பா போலாமா?”
தம்பா கோயிலின் உள்ளே நுழைந்து கயிறு, ஒரு பழைய ஓலைப் பாய்,
பழந்துணி, வழக்கமா வச்சிருக்கும் நீள கம்பு, நெருப்பெரிக்க கொஞ்சம் சீமெண்ணெய்,
தீப்பெட்டி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
“கைவிளக்கு இருக்கா சாரு “
“இருக்கு.. இருக்கு அதுவுமில்லாம மொபைல் இருக்கு போலாம்” தம்பா
முன்னால் நடக்க ஆரம்பித்தான். இளங்கோ சைக்கிளைத் தள்ளிக்கொண்டே அவனை ஃபாலோ
செய்தபடி நடந்தான். சி.ஐ.டி பிரிவில் இருந்தால் நிறைய கிரிமினல்களை ரகசியமாக ஃபாலோ செய்யலாம் என நினைத்துக்
கொண்டிருந்தான். அங்க இருக்கற அறிவழகனை பொறாமையோடு ஒரு முறை அவன் வேலையை பத்தி
கேட்டப்ப “அட போப்பா பெரும்பாலான நேரம்
பார்ட்டி ஆபிஸ் டூட்டிதான். ஏதாவது கட்சி ஆபிஸ்ல எவனாவது ஒரு இத்துப்போன
அல்லக்கையை பின்னாடி துரத்திகிட்டுப் போவனும். அவனுக பல நேரம் டாஸ்மாக்குல
இருப்பானுக இல்லன்னு வப்பாட்டி வூட்டுல இருப்பானுக ‘ஆஸ் யூஷ்வல்’னு ரிப்போர்ட்
எழுதணும். பொழப்பாப்பா இது” என்றான் அலுத்துக்கொண்டு.. இப்ப இவன் தம்பாவை பாலோ
செய்தபடி...
“ஏன்யா இவன் தற்கொலை பண்ணிகிட்டானா? உடம்பு சரியில்லாம
இருந்தானா?”
“எங்க ஊர்காரன் எவன் சாமி தற்கொலை பண்ணியிருக்கான்..
எல்லாம் அசலூரு ஆளுங்கதான் இங்க வந்து விழுந்து சாவானுங்க.. ஆலமரத்துக்காரன்
வயித்துப்பசி தாங்காம செத்துருப்பான். அவனால நவுந்து அடிவாரம் போவ முடியாது இங்க
எவன்கிட்ட சாரு காசு இருக்கு அடுத்தவனுக்கு போட...? எஞ்சுனது மிஞ்சுனதை கூட அடுத்த
வேளைக்குத்தானே வச்சுக்குவோம். காலு நல்லா இருந்தாலும் ஒண்ணுல நாளுல வேலை
கிடைக்கும். முடவன் சாமி அதான் “
கையிலிருந்த கடலையையும் பீடியையும் அவனிடம் கொடுத்தான். வாங்கிக்கொண்ட தம்பா
“ஏதாவது வயித்துக்கு துன்னியா சாமி?”
“இல்லை தம்பா டீதான்.. இனிமே வேலையை முடிச்சப்புறம்தான்”
வாகனம் வந்து போகிற வசதி இல்லாததாலே இது மாதிரி
அசம்பாவிதம்னா சைக்கிள்ல வச்சிக்கிட்டுத்தான் காரிமங்கலம் ஜி.ஹெச்.க்கு போகணும். போஸ்ட் மார்ட்டம்
முடிஞ்சப்புறம், பேப்பர் ஃபார்மாலிட்டிஸ் அதுக்கப்புறம் கொண்டு எரிக்கறவரைக்கும்
கூடதான் இருந்து தொலைக்கணும். அதுக்குன்னு டிபார்ட்மென்ட்ல காசு எதுவும்
தரமாட்டாங்க. எடுத்துட்டு வர்ற கான்ஸ்டபிள் தலையிலதான் அவ்வளவும் விடியும்.
தம்பா தீப்பெட்டியைக் கொளுத்தி ஒரு சுற்று சுற்றி
பார்த்துவிட்டு பீடியை பற்ற வைத்துக்கொண்டான். டார்ச்சை உயிர்ப்பித்தான் இளங்கோ.
“இங்க சரக்கு இப்ப யாரு வச்சு விக்கறா?”
“நீ காசை குடு சாரு நான் வாங்கிட்டு வர்றேன். உங்களைப்
பார்த்தா ஓடிப்போயிடுவானுங்க”
கையிலிருந்த பணத்தை அவனிடம் கொடுத்தான். எண்ணிப்
பார்த்துவிட்டு “ கூட இருக்கு சாமி.. சரக்குக்கும் தொட்டுக்கைக்கும் இவ்வளவு
போதும்.” மீதிப் பணத்தை திருப்பிக் கொடுத்தான். இளங்கோ அங்கேயே நின்று கொண்டான்.
தம்பா ஒரு சந்தில் புகுந்து மரங்களினூடே மறைந்து போனான். நல்ல ஆஸ்பத்திரி
கிடையாது, நல்ல பள்ளிக்கூடம் கிடையாது, ஆனா எல்லா காலத்திலயும் இங்க சரக்கு
மட்டும் கிடைச்சுடும்.
சரக்கை ஏத்திகிட்டுத்தான்
ஒரு பாட்டில் கைவசம் வச்சிருக்கான்னு தம்பா இடுப்பைப் பார்த்தாலே தெரியுது.
மேல்சட்டை இல்லாம வெறும் கம்பளி போர்த்தியபடிதான் எப்பவும் இருப்பான் தம்பா. வேட்டி
மடிப்புதான் அவனுக்கு லாக்கர். அது முட்டிக்கொண்டு தெரிந்தது. முறுக்கை மென்றுகொண்டே
நடந்தான் தம்பா. கொஞ்சம் ஆட்டமும் சேர்ந்த நடை அது. சரக்கு ஏறினா வர்ற ஆட்டம் அது.
“துறிஞ்சி மரக்காட்டுக்குள்ளே சின்னப்பயலே
துக்கிரிப்பொண்ணு ஒடி வந்தா சின்னப்பயலே
தூக்கம் கெட்டு போச்சுதடா சின்னப்பயலே
துக்கமெல்லாம் ஓடிப்போச்சு சின்னப்பயலே
பாலக்கோடு போவோமாடா சின்னப்பயலே –
உனக்கு பலப்பக்குச்சி வாங்கித்தாரேன் சின்னப்பயலே..’
ஒரு லயத்தில் பாடி வந்தான் தம்பா. அதுக்கு ஏத்த மாதிரி ஒரு
ஆட்டம். கவலைகளின் நடுவே அவனது ஆட்டமும் பாட்டும் களிப்பாக இருந்தது. ஒரு பக்கம்
அவனைப்பார்த்தால் பொறாமையாகவும் இருந்தது.
பிணம் கிடந்த இடத்துக்கு வந்தார்கள். தம்பா சருகுகளைப்
போட்டு சிறு ‘தீ’ வளர்த்தான். பாயை
விரித்துக் கீழே போட்டான். பழந்துணியால் பிணத்தைக் கட்டினான். ஒரு முறை வானத்தைப்
பார்த்து கும்பிட்டான்.
“ஒருகை பிடி சாரு.. “ என்று தலைப்பக்கம்
பிடித்துக்கொண்டான். இளங்கோ கால் பக்கம் பிடித்தான் இருவருமாக சைக்கிளின்
கேரியரில் வைத்து மடக்கி பின் கயிறு போட்டுக் கட்டினார்கள். கருத்த தம்பாவின்
முகம் நிலவொளியில் பளபளவென ஜொலித்தது. வேர்வையைத் துடைத்துக்கொண்டு சைக்கிளைத்
தள்ளினான்.
‘சொர்க்கம் போ சொர்க்கம் போ சொக்கப்பனே
சொந்த ஊரு எந்த ஊரோ எங்கப்பனே’
என்று குரல் கொடுத்தான் தம்பா.
“போதும் சத்தத்தைக் குறை தம்பா.. இனிமே மூச்சு விடப்படாது..
நவுரு நவுரு”
வாயில் கை வைத்து ‘ம்ம்’ என்பது போல் தலையாட்டிவிட்டு
மீண்டும் சைக்கிளைத் தள்ளினான் தம்பா.
கிட்டத்தட்ட நாலு மைல் நடந்தே வந்தார்கள். இரவு பதினொன்றரை
ஆகியிருந்தது. ரோட்டில் ஈ, காக்கா இல்லை. இது போன்ற இரவு நேரம்தான் இந்த வேலைக்கு லாயக்கு
என்பதால் எப்பவும் இந்த நேரத்தைத்தான் தேர்வு செய்வார்கள். ஒரு டீத்தண்ணிக்கு வழி
இல்லை. ஒரு மரத்தடியில் நின்று இருவரும் ஆசுவாசம் செய்தார்கள்.
“சரி தம்பா நீ இப்படியே ஜி.ஹெச் போயிடு.. சிவலிங்கம்தான்
நைட் டூட்டி அவன்கிட்ட குடுத்துட்டு அங்கேயே நில்லு. நான் ஸ்டேஷனுக்குப் போய் பேப்பர்
எல்லாம் எடுத்துட்டு வரணும். இந்தா இத வச்சுக்க” என்று சொல்லிவிட்டு நூறு ரூபாயை
அவன் கையில் வைத்துத் திணித்துவிட்டுக் கிளம்பினான் இளங்கோ.
விடியற்காலை நாலு மணி
பஸ்ஸில் ஏறி அமர்ந்தபோது கால்களும் கண்களும் கெஞ்சின. 12 மணிக்கு ஜி.ஹெச்சில்
பேப்பர்களை இரவு டாக்டரிடம் கொடுத்துவிட்டு மார்ச்சுவரியில் பாடியை வைத்துவிட்டு
தம்பாவிடம் இன்னும் ஐம்பது கொடுத்து ‘விடிஞ்சப்புறம் எதுனாச்சும் சாப்பிட்டு
விட்டு சைக்கிளை காலை டூட்டி கான்ஸ்டபிள்கிட்ட குடுத்துட்டுக் கிளம்பு’ என்று
சொல்லிவிட்டு ஏட்டுக்கு போன் செய்து கிளம்ப மணி மூன்றாகிவிட்டது. போஸ்ட்மார்ட்டம்
காலையில்தான் அதுக்கு கருணாகரன் வந்துடுவான். கண்கள் எரிந்தன. கால்களை நீட்டி
சற்று நேரத்தில் உறங்கிப்போனான்.
வானூர் வந்து இறங்கிய போது மணி எட்டு இருக்கும்.
அருகிலிருந்த டீக்கடையில் வாய் கொப்பளித்து முகம் கழுவி, ஒரு டீயை குடித்த போது
இதமாக இருந்தது. பட்டினி கிடந்த வயிறு சட்டென குளிர்ந்தது. பூக்கடைப் பார்த்து
பெரிய மாலை ஒன்று வாங்கிக்கொண்டான். அவன் அருகிலிருந்த அவனது கனவு கைகளைத் தட்டி
ஆட்டோவை கம்பீரமாகக் கூப்பிட எத்தனித்தது. அதற்குள் மொபைல் ஒலித்தது.
இன்ஸ்பெக்டர்தான்
“அய்யா வணக்கம்”
“எங்கய்ய இருக்க இப்ப நீ?”
“வானூர்லங்கய்யா. என்னோட பெரிய மாமனாரு தவறிட்டார்”
“ ராத்திரி என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க?”
“அதெல்லாம் கிளீனா பாடியை நைட் டூட்டி டாக்டர்கிட்ட
ஒப்படைச்சுட்டு.. பேப்பர்ஸ்-ஐயும் குடுத்துட்டு ஏட்டய்யாகிட்ட போன் பண்ணி
சொல்லிட்டு அப்புறம்தான்யா பஸ் ஏறினேன். காலையில கருணாகரன் டூட்டி”
“மண்ணாங்கட்டி. நடுவுல எங்கய்யா போன?”
“எங்கயும் போகலைய்யா”
“எல்லாம் தம்பா சொல்லிட்டான். அவனைப் போவ சொல்லிட்டு நீ
ஸ்டேஷன் போறேன்னு வந்துட்டியாமே ஒரு வேலையை முழுசா பண்ணத் தெரியாதா? பேப்பர்காரன்
எப்படியோ நடுவுல போட்டோ புடிச்சு அரை
பக்கத்துக்கு செய்தி போட்டுட்டான். ‘சைக்கிள் கேரியர்ல பிணம் போலீசின் கையாலாகாத்தனம்’னு
எல்லா பொட்டிக்கடையிலயும் தொங்குது நம்ம வண்டவாளம்.”
“அய்யா தம்பா இப்ப எங்க இருக்கான்?”
“அவனைப் புடிச்சு உள்ள போட்டு முட்டிக்கு முட்டி
தட்டினப்புறம்தானே.. நீ நடுவுல போனதை சொன்னான். எல்லாப் பயலுக்கும் தண்ணி வாங்கிக்
குடுத்து விசுவாசி ஆக்கி வச்சிருக்கீங்கய்யா.. வாயைத்தொறக்கலை நாயி.. நாலு
போட்டப்புறம்தானே பேசுச்சு. காலையிலேயே டி.எஸ்.பி வண்டி வண்டியா வுட்டாரு டோஸ் ..
தேவையாய்யா எனக்கு?”
“அய்யா எப்படி நடந்துச்சு, எப்ப வந்தான் பேப்பர்க்காரன்னு
தெரியலைங்கய்யா.. ஆனா தம்பா அப்பாவிங்கய்யா.”
“அதனாலதான் உன்னை சஸ்பெண்ட் பண்ணியிருக்கு.. திங்கக்கிழமை
காலையில டி.எஸ்.பி. ஆபீஸ் வந்துடு
என்கொயரி இருக்கு” பட்டென கட்டானது கால்.
அவ்வளவுதான் இனி விளக்கமோ, வியாக்கியானங்களோ தேவைப்படாது.
காலடியில் யார் முகமோ தெரிவது போல எட்டி உதைத்தான். காரி உமிழ்ந்தான். ‘போங்கடா
நீங்களும் உங்க சஸ்பென்ஷனும்..இன்னும் நாலு நாள் எங்கனா இருந்துட்டுப் போறேன்’
என்று சத்தமாக சொல்லிக்கொண்டே சாவு வீட்டுக்கு நடக்கத் தொடங்கினான். ‘தம்பா என்னடா
தப்பு பண்ணினான் அவன் ஒருத்தன் இல்லன்னா எப்படிடா பொணத்தை எடுத்துட்டு
வந்திருப்போம்’ அவன் என்ன நினைப்பான் என்னமோ நானும் சேர்ந்துல்லே அவனை
மாட்டிவிட்டதா நினைப்பான்.
சாவு வீடு பெரிதான களேபரம் இல்லாமல் அமைதியாக இருந்தது. இவன்
உள்ளே நுழைந்து மாலையைப் போட்டு காலைத் தொட்டுக் கும்பிட்டான். எங்கிருந்தோ ஒரு
சோகம் அவனைக் கவ்வ “ஒ”வென பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினான். கூட்டம் ஒரு கணம்
ஸ்தம்பித்தது பெரிய மாமனாரின் மகன்கள் கிட்டே வந்து ஆறுதலாக அழைத்துச் சென்று
கொல்லையில் உட்கார வைத்தனர். யாரோ ஒருவர் ‘அட எவ்வளவு பெரிய போலீஸ் ஆபீசர் எப்படி
கதறிட்டாரு பாருங்க..சே.. பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான்.. எவ்வளவு பாசம்” என்று பிரஸ்தாபிப்பது
காதில் விழுந்தது. கவுசி தண்ணீரை ஒரு சொம்பில் எடுத்துக்கொண்டு அவனருகில் வந்து
தலையைத் தடவிக் கொடுத்தாள். ’நான் கூட என்னமோன்னு நினைச்சேன் உங்களை..’ என்று
மெல்லமாகச் சொன்னாள். அவன் எதுவும் பேசாமல் தண்ணீரைக் குடித்தான். ‘டேய்
அத்தானுக்கு காபித் தண்ணி கொண்டாடா’ என்று தம்பியை விரட்டினாள் கவுசி.
சின்ன சகலை முருகேசன் தனது மகன் சபரீஷை கிட்டே
அழைத்துக்கொண்டு வந்தார். அவன் என்றைக்கும் இல்லாமல். ஏகத்துக்கும்
வெட்கப்பட்டுக்கொண்டு வளைந்து நெளிந்து கொண்டு வந்தான். கைகள் ஒன்றோடு ஒன்று
பின்ன, நாக்கை உள்ளே மடித்து நாணிக் கோணி நின்றான். சபரீஷை எப்பவும்
இளங்கோவுக்குப் பிடிக்கும். எப்ப ஊருக்கு வந்தாலும் அவன்தான் இளங்கோவனுடைய மடியில்
இருக்க முடியும். வேறு யாரையும் விடமாட்டான்.
“என்னடா வாலுப்பயலே.. என்ன புதுசா வெக்கம்?” என்று அவனைத்
தூக்கி மடியில் வைத்துக்கொண்டான் இளங்கோ.
“இல்லை சகலை..அவன் உங்களுக்கு ஒரு பேரு
வச்சிருக்கான்..என்னன்னு கேளுங்க”
“அப்படியா என்னைப் பெத்த ராசா என்னடா எனக்கு பேரு
வச்சிருக்க?” என்று அவனை இறுகக்கட்டிக் கொண்டான். அவன் இன்னும் வெட்கப்பட்டு
இளங்கோவின் தோளில் முகத்தினைப் புதைத்துக்கொண்டான். கன்னத்தில் குழிவிழ விரிந்த
அவனது வெட்கப்புன்னகை இளங்கோவின் அத்தனைத் துக்கத்தையும் கழுவிக் கரைத்தது.
மெல்லியக் குரலில் “என்கவுன்டர் இளங்கோ” என்றான் சபரீஷ்.
துக்க வீடு என்பதையும் மறந்து சுற்றி இருந்தவர்கள் கொலேரென
சிரித்தார்கள்.
“சகலை உங்கப்பய நெறையத் தமிழ் சினிமா பாக்கறான் போல
இருக்கே” இளங்கோ வாஞ்சையோடு கட்டிக்கொண்டான். “ நான் சுட்டதை எங்கடா பாத்தே..?
அதற்குள் கவுசி அவன் முகத்தைத் திருப்பி “ அது சரி
பெரியப்பாகிட்ட எப்படி துப்பாக்கியால சுடுவேன்னு சுட்டுக் காமி..” என்றாள். “ ஓ..
அது வேறயா..” என்றான் ஆச்சர்யமாக இளங்கோ.
சபரீஷ் உற்சாகமாகக்
கிழே இறங்கினான். தன் வண்டியை உதைத்து ‘டுர்’ என சப்தம் கொடுத்து ஆக்சிலேட்டரைத்
திருகினான். பின்னர் ஒருரவுண்ட் அடித்து ஸ்டேன்ட் போட்டு நிறுத்தி ஸ்டைலாக
காலைத்தூக்கி இப்படியும் அப்படியும் வைத்து இறங்கி தன் கைகளை இளங்கோ முன்பாக
துப்பாக்கி போல நீட்டிக் குறி பார்த்தான்.
“ டேய் நீ போலீசையே
சுடுவியா?” என்று மிரட்டலாகக் கேட்டான் இளங்கோ
சபரீஷ் பயப்படவே இல்லை “நீங்க திருடனை சுடுவீங்க நான்
போலீசையே சுடுவேன்..” என்று கைகளை அழுத்தமாக வைத்துக்கொண்டு ‘டட்ட
டட்ட’ என சுட்டான்
“அய்யய்யோ பயமா இருக்கே மெஷின் கன் வச்சு சுடறானே “ என்று
போலியாக பயந்து தலையைக் குனிந்தான் இளங்கோ. சபரீஷ் சிரித்துக்கொண்டே தனது
வண்டியில் ஏறுவது போல ஆக்ஷன் காட்டினான்.. வண்டியில் ஏறி பின்பக்கமாக தன்
துப்பாக்கியை நீட்டி மறுபடி சுடுவது போல பாவனை செய்தான் சபரீஷ். .
குனிந்திருந்த இளங்கோ தன் பின்பக்கம் நைசாகத் தலையைத்
திருப்பிப் பார்த்தான். அவனது ‘கனவு’ சுடப்பட்டு ரத்தச் சகதியில் பிணமாகக் கிடந்தது. ஒரு கணம் திகைத்து
எதிரே திரும்பினான். சபரீஷ் தனது வண்டியை டுர் சத்தத்துடன் ஸ்டார்ட் செய்தான்.
அவனது வண்டியை உற்றுக் கவனித்த போது சிறிய
உருவத்தில் ‘கனவு’ ஒன்று இவனைப் பார்த்து புன்னகைத்தபடி பின்சீட்டில் கர்வத்துடன்
அமர்ந்திருந்தது...
.
.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>