செவ்வாய், 21 ஜூன், 2022

 நன்னன்குடி நடத்திய இரா செம்மல் நினைவுச் சிறுகதைப் போட்டி 2021 இல் முதல் பரிசு பெற்றச் சிறுகதை 


செங்காந்தள்

     ற்றை ஆளாக கொளுத்தும் வெயிலில், கண்ணுக்கு எட்டிய வரையில் எவரும் தென்படாத பொட்டல் வெளியில் செல்வது கொடுமையாகவே பட்டது சுந்தர ராமனுக்கு... இரண்டு சக்கர வாகனம்தான் என்றாலும் பயணிப்பது அத்தனை சுலபமாக இல்லை. யாரையாவது வழியில் நிறுத்தி வீரபத்திரன் வீடு எது என்று கேட்கலாம் என்றால் மனிதர்கள் கண்ணில் பட்டால்தானே? புல்வெளிகளும் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளும் அவ்வப்பொழுது பறக்கும் காகங்களையும், தவிட்டுக் குருவிகளையும் தவிர மனித வாடையே இல்லை.

பழனிச்சாமி சொல்லித்தான் அனுப்பினார். ஒரு வாய் தண்ணிக்கு கூட வீடு போய் சேர்கிற வரைக்கும் வழி இருக்காது. வண்டியை கிளப்பினா நிக்கிற இடம் வீரபத்திரன் வீடாத்தான் இருக்கும் அப்படின்னு.. வீரபத்திரன் யாரென்று தெரியாது. அவரது முகத்தைக் கூட இதுவரை பார்த்ததில்லை.

இத்தனை வருட கோவை நகர வாழ்க்கையில் இந்த குரும்பபாளையம் பற்றி அதிகம் கேள்விப்பட்டது கூட இல்லை. வீரபத்திரன் என்கிற ஆட்டுக்காரர் வைத்தியம் பார்ப்பார் என்கிற விபரம் கூடத் தெரியாது பழனிச்சாமிதான்  சொன்னார். குரும்பபாளையம் குக்கிராமத்தில் இரண்டே இரண்டு வீடுகள்தான் இருக்கின்றன. அந்த வீடுகளில் ஒன்றில்தான் வீரபத்திரன் இருக்கிறார் அவர் மூலிகை வைத்தியம் பார்ப்பதில் கெட்டிக்காரர் கைவிடப்பட்ட பல நோயாளிகளை அவர் காப்பாற்றி இருக்கிறார் என்று பழனிதான் சொன்னார்

.. இரண்டே ரெண்டு வீடு மட்டும் உள்ள ஊரா எப்படித்தான் வாழ்கிறார்கள் எப்படித்தான் சமாளிக்கிறார்கள் என்கிற ஆர்வம் கூட சுந்தரராமனை  இவ்வளவுதூரம் பயணிக்க வைத்திருக்கலாம். சுந்தரராமன் துணிக்கடை அப்படி ஒன்றும் புகழ் பெற்ற கடை என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு எல்லோருக்கும் தெரிந்த கடைதான். வெறும் கையை வீசிக்கொண்டு கோயமுத்தூர் வந்தவன், இன்றைக்கு துணிக்கடை, நாட்டு மருந்து கடை,  சிறிய அளவிலான ஒப்பந்த வேலைகள் என்று வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் அவது நுட்பமான வியாபார அறிவுதான்.

நாமெல்லாம் ஒரு மரண காரியத்துக்குச் சென்றால் துக்கத்தின் ஒரு பகுதியையாவது தலையில் ஏற்றிக் கொண்டு வீடு வந்து சேர்வோம். பார்க்கும் ஒன்றிரண்டு நபரிடமாவது இறந்து போனவரின் அகால மரணம் குறித்து ஆதங்கத்துடன் பகிர்வோம். ஆனால் சுந்தரராமன் சுடுகாடுகளில் ஒருங்கிணைத்து செயல்படும் மனிதர் எவருமே இல்லையே என்பதை கவனித்து அடுத்த சில நாட்களில் பிறப்பு முதல் இறப்பு வரையில் எல்லா காரியங்களையும் எங்கள் பொறுப்பில் விடுங்கள் என்று அதற்கான நிறுவனத்தை ஆரம்பித்துவிட்டான்.

ஆட்டுப்பட்டி ஒன்றும் அதன் எதிரே இரண்டு கூரை வீடுகளும் கண்ணில் பட்டது யாரையும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே அவற்றில் ஒன்றுதான் வீரபத்திரன் வீடாக இருக்கும் என்று புரிந்து கொண்டு அங்கு சென்று நிறுத்தினான்.. வீட்டின் உள்ளே தப்பட்டை சத்தம் கேட்டது. வெளியில் நின்று கொண்டு அப்படியே கவனித்தான். கண்களை மூடிக்கொண்டு முன்னும் பின்னுமாக வந்து திரும்பி ஆடிக் கொண்டிருப்பதுதான் வீரபத்திரனாக இருக்கும். சுந்தரை பார்த்ததும் கையில் இருக்கும் குச்சியால் அவனை உள்ளே வரும்படி கை அசைத்தான் வீரபத்திரன் அமைதியாக உள்ளே சென்று நின்று கொண்டான். வீரபத்திரன் அடிப்பதை நிறுத்தாமல்.... ஒரு கம்பளியை கிழே விரித்து அமரச் சொன்னான். மிகுந்த சிரமப்பட்டு கால்களை சம்மணமிட முயன்று தவித்து ஒரு வழியாக அமர்ந்தான் சுந்தர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு தப்பட்டையை கீழே வைத்துவிட்டு அவருகில் வந்து சுந்தரின் கால்களைப் பிடித்து நீட்டி வசதியாக அமர வைத்த பொழுது சுந்தருக்கு சற்று கூச்சமாக இருந்தது.

“பரவாயில்லை சும்மா நீட்டுங்க.. கல்லாத்தா...  இவருக்கு கால்வலி இருக்கு தைலத்தை எடுத்துட்டு வா “ என்றான்

அவனது மனைவியாக இருக்க கூடும்... குறுக்கே தொங்கவிடப்பட்ட கம்பளிப் போர்வையை விளக்கி உள்ளிருந்து வந்தாள். அவள் கையிலிருந்த தைலத்தினை வீரபத்திரனிடம் கொடுத்துவிட்டு “ஒண்ணும் பயப்படாதீங்க மேலுக்கு தடவுறதுதான்” என்று இயல்பாக சொன்னாள்

“இது என்னோட பொஞ்சாதிங்க  கல்லாத்தா.. போயி புளி நீரு எடுத்துகிட்டு வா”

 “நான் யாரு.. எதுக்கு வந்தேன்னு கூட கேக்கலை”

“மனுஷங்க இப்ப எல்லாம் ஊரு பேரு தெரியாத இடத்துக்கு தேடிகிட்டு வர்றாங்கன்னா அது வைத்தியத்துக்காகத்தான் இருக்கும். அதுவுமில்லாம இங்க இருக்கறதே ரெண்டு குடும்பம்தான் பக்கத்து வூடு பறை அடிக்கறவங்க.... நீங்க உக்காரும்போதே தெரியுதே உங்களுக்கு முட்டி வலி இருக்குன்னு..”

கல்லம்மா ஒரு தம்ளரில் மோர் கொண்டு வந்து தந்தாள்

“ ஓ.. புளிநீர்ன்னா மோரா ?”

“ஆமா சாப்பிடுங்க”

“அந்த காலத்துல எல்லாம் துணி வெளுக்கறவங்க, முடி வெட்டறவங்கதான் கிராமத்துல வைத்தியம் பண்ணுவாங்கன்னு சொல்லுவாங்க.. நீங்க எப்படி வைத்தியத்துல ....?”

“ஆடு.. மாடு எல்லாம் மேயுதுன்னு மட்டும்தான் நினைக்கிறீங்க.. அதுங்களுக்கு உடம்பு சரியில்லைன்னாலும் அதுங்களுக்கு எந்த இலையை சாப்பிடணும்னு தெரியும் அதைத் தேடித் தேடி ஆடுகள் எல்லாம் மேயுங்க.. ஆடு மேய்க்கறதுன்னா வெறுமே மேய்க்கறோம்னு நினைச்சுகிட்டு இருக்கீங்க அதுங்க எப்ப எதை மேயுதுன்னு எங்களுக்குத் தெரியும். இப்பவும் பசங்க மேய்க்க போயிருக்குங்க அவங்களுக்கே தெரியும்”

மோரை சாப்பிட்டு முடித்துவிட்டு “ஆனா நான் இப்ப இங்க வந்தது எனக்காக இல்லை எங்க அம்மாவுக்காக “

“அவங்களுக்கு என்ன?”

“குளிக்கப் போகும்போது தலையில அடிபட்டு அப்படியே ஆழ் மயக்கத்துக்கு போயிட்டாங்க ஆறு மாசம் ஆச்சு... பார்க்காத வைத்தியம் இல்லை போகாத வைத்தியர் இல்லை. ஆனாலும் அம்மா இன்னும் சுய நினைவுக்கு வரலை. அப்பத்தான் பழனிச்சாமி உங்களைப் பத்தி சொன்னார் “

“அம்மாவுக்கு என்ன வயசு?”

தன் பையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து அவனிடம் காண்பித்து “ம்... இவங்கதான் .. அறுபத்தி அஞ்சு ஆகுது”

ஒரு கணம் அதை பார்த்துவிட்டு “ஓகோ..?” சுந்தரிடம் திருப்பிக் கொடுத்தான்

 “நீங்க கோயம்புத்தூர் பக்கமெல்லாம் வர மாட்டீங்கன்னு பழனிச்சாமி சொன்னாரு.. எங்கம்மாவுக்காக வர முடியுங்களா?”

அப்படியே சுந்தரின் கண்களை உற்றுப் பார்க்கிறான் வீரபத்ரன்

“அம்மாவுக்காக..ம்ம்ம்?” என்று ஒரு மாதிரியாக கண்களை வைத்துக் கொண்டு கேட்கிறான் வீரபத்திரன்

 ”ஆமாங்க.. நீங்க வர்றீங்கன்னு சொன்னா தெனம் அம்பது பேரு வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணிடுவேன். வர்ற போற செலவு போக கையில மிஞ்சும். ஆமா இந்த ஊர்ல ரெண்டு குடும்பம் மட்டும் எப்படி தங்கிடுச்சு?

“எரநூறு குடும்பம் இருந்த ஊர்தான். எங்க ஆளுங்க செய்யற கம்பளி உலகமெல்லாம் போனது ஒரு காலம்.. ஆடு மேய்க்கறது எங்க தொழிலு.. குரும்பாடுன்னு சொல்றாங்கள்லே.. நாங்கதான் வளர்ப்போம்.. கம்பளி எல்லாம் பெரிய பெர்ய பணக்காரவங்க பளபளன்னு தயாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க..ஆடு மேய்க்கறது எல்லாம் எவ்வளவு நாளைக்கு கட்டுப்படியாகும்? அவங்கவங்க பொழப்புக்காக வேற வேற ஊருக்கு போவ ஆரம்பிச்சிட்டாங்க.. கட்டட வேலை, சொமை தூக்கற வேலை, வண்டி ஓட்டறதுன்னு ஆளுக்கு ஒரு வேலை”

“அப்ப  நீங்களும் போயிருக்கலாமே?”

“நான்தான்  இந்த ஊர்லேயே பெரிய பணக்காரன்“ மீசையைத் தடவிக்கொண்டு சிரிக்கிறான் வீரபத்திரன்.. மாசம் மூவாயிரம் சம்பாதிக்கிறேன் இப்பவும் எங்க கம்பளியை தேடி வந்து வாங்கற ஆளுங்க இருக்காங்க.. பத்தாததக்கு அப்பப்ப ஆடு வாங்கிட்டு போவாங்க” சுந்தரின் கால்களை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். இரண்டு கால்களின் மீதும் பரபரவென எண்ணையை தேய்க்க ஆரம்பிக்க சுந்தர் நெளியத் தொடங்கினான்

“அய்யோ கூச்சமா இருக்குங்க நானே தடவிக்கிறேன்”

“ஆங்.. இந்த எண்ணையை தேய்க்கணும்னா மேல போட்டு இருக்க்ற துணி பொசுங்கணும் அப்படி சூடு பறக்கத் தேய்க்கணும் அப்பத்தான் கேக்கும்.”

சுந்தர் சற்று மெல்லிய குரலில்  “நான் என்ன சாதின்னு தெரியுங்களா?”

“எனக்கும் தெரியாதுங்க நான் குடுக்கற மருந்துக்கும் தெரியாதுங்க.. எனக்கு தெரிஞ்சது மனுஷன் மருந்துக்கு தெரிஞ்சது உடம்பு.. பக்கத்து வீட்டுல இருக்கறாங்களே.. அவங்க திருவிழாவுக்கு, சாவுக்கு எல்லாம் பறை அடிக்கிறவங்க.. எந்த ஊர்ல திருவிழான்னாலும் இங்க வந்து அவங்களை கூட்டிட்டு போவாங்க.. அவங்ககிட்டதான் பறையடிக்க கத்துகிட்டேன்..”

“அய்ய்ய்யே.. நான் சாதி எல்லாம் பாக்க மாட்டேங்க.. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்”

”அப்படியா அப்படின்னா.. தெருவுக்கு ஒரு அடுப்பு போதும்னு உங்க வூட்டு அடுப்பை எல்லாம் மூடிட்டு ஒண்ணா சமைச்சு ஒண்ணா சாப்பிடுவீங்களா ?”

“அது.. எல்லாரும் சேர்ந்துல்லே முடிவெடுக்கணும்.. நான் மட்டும் சொல்ல முடியாதுல்லே?”

”ஆனா இங்க அப்படி இல்லைங்க எங்க ரெண்டு குடும்பத்து  வீட்டுல சேர்ந்து முடிவெடுத்துட்டோம்   சில நாளு அவங்க வூட்டுல சமைப்பாங்க நாங்க அடுப்பை மூடி வச்சிடுவோம்.. சில நாளு எங்க வூட்டுல அடுப்பு எரியும்.. நீங்க எல்லாம் ரொம்ப படிச்சவங்க.. ஒரு வீட்டுலேயே ரெண்டு அடுப்பு கூட எரியும்.. ஆமா உங்களுக்கு  மூலம் இருக்குதுங்களா?”

“ஆமாங்க”

“அதான் உக்கார சிரமப்படறீங்க... கடுக்காயை தூளாக்கி தண்ணியில கொதிக்க வையுங்க அப்புறம் அந்த தண்ணியை ஆறவச்சு அப்படியே ஆசன வாயில தடவிகிட்டே வந்தீங்கன்னா சரியா போயிடும்” கால்களை உருவி சொடுக்கு எடுக்க வலி தாங்காமல் உதறினான் சுந்தர்.

“வலி தாங்க மாட்டீங்களோ.?. உடம்புல கொழுப்பு சக்தி கொறைஞ்சா வலி தாங்க முடியாது.. தேங்கா, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு எல்லாம் தாராளமா சாப்பிடுங்க” சிரித்தபடி கால்களை நீவிவிட்டான்

சடுதியில் வலி குறைந்து நிம்மதி பரவியது போல இருந்தது.

”எல்லாம்தான் வெளியூருக்கு போய்ட்டாங்களே நீங்க மட்டும் ஏன் இன்னும் பிடிவாதமா இங்கயே இருக்கீங்க? வந்துடலாமே?”

“காட்டைத் திருத்திதான் ஊருங்க வந்திச்சு.. அந்த காலத்துல எல்லாம் அப்படித்தான் செஞ்சாங்க.. காட்டை அழிச்சு உண்டாக்கலை. வேண்டாங்கற செடியை வெட்டி, வேணுங்கற செடியை வச்சித்தான் அப்பல்லாம் வீடுங்க வந்துச்சு.. வீடு சின்னதா இருக்கும் தோட்டம் பெரிசா இருக்கும்.. பட்டணத்துல எல்லாம் வீடு பெரிசா இருக்கு தோட்டமே இல்லாமே போச்சு..“

பக்கத்தில் இருந்த மூங்கில் கூடையை எடுத்து அதிலுள்ள இலைகளை காண்பித்து “இதெல்லாம் இங்க உள்ள என் புள்ளைங்க.. ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு வைத்தியன்.. நான் தனியா இல்லை இதுங்க துணையோட இருக்கேன் இவுங்களை எல்லாம் விட்டுட்டு எப்படி வர்றது? கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்னு நீங்க சொல்றீங்க.. மூலிகை இல்லாத ஊரு மூளியான ஊருன்னு நான் சொல்லுவேன் இதை எல்லாம் வுட்டுட்டு எப்படிங்க வர்றது”

”மூலிகை எல்லாம் ஊருக்குள்ள வளராதா..? எங்க மாடி தோட்டத்துல வச்சி வளப்போம் வாங்க”

”புள்ளைய வூட்டுல வளக்கறதுக்கும் அனாதை இல்லத்துல வளக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கில்லே.. நீங்கள்லாம் அடைக்கலம் குடுப்பீங்க ஆனா சொந்த புள்ளை மாதிரி பார்த்துக்க மாட்டீங்க.. இது அவங்க சொந்த மண்ணு அதுங்க கூட்டாளிங்க கூட,, ரத்த சொந்தங்க கூட அதுங்க பாட்டு வளரும்.. புடுங்கி வேற எங்கயோ நட்டா அதுங்களை கவனிக்கலைன்னா துடிச்சு போயிடும்.”

“அப்ப எல்லா ரகசியத்தையும் நீங்க யாருக்கும் தெரியாம பத்திரமா வச்சுக்கணும்னு நெனைக்கறீங்க?”

“.இல்லைங்க எல்லாம் புத்தகமா கிடைக்குது  பெரிய பெரிய கட்டடம் கட்டி அதுல எவ்வளவு பேரு அந்த புத்தகங்களைப் படிக்கிறாங்க.?. ரகசியமா வச்சிக்க முடியுமா? உங்களுக்கு தேய்ச்ச எண்ணை இருக்கே அது கார்த்திகை பூ வேர்ல செய்யறது.. அந்த பூ பாக்கறதுக்கு திகு திகுன்னு தீ கொளுந்து விட்டு எரியற மாதிரி இருக்கும். அதனால செங்காந்தள்னு இன்னொரு பேரு சொல்லுவாங்க அதுல தேன் நிறைய இருக்கும் அதனால அந்த பூவை சுத்தி எப்பவும் வண்டுங்க, தேனிங்க சுத்திகிட்டே இருக்கும். மத்த பூவெல்லாம் வாடினாக்கா உதிர்ந்து போயிடும் ஆனா செங்காந்தள் உதிராது. எல்லா மூலிகையையும் கவனிச்சு பார்த்தீங்கன்னா மறக்காது சுலபமா ஞாபகம் வச்சிக்கலாம். ஆனா கவனிக்க மாட்டேங்கறீங்க”

”ஓ அப்படியா? எங்க கண்ணுக்கு அதெல்லாம் தெரியறது இல்லே சரி எண்ணைக்கும், தேய்ச்சு விட்டதுக்கும் எவ்வளவு காசுன்னு சொன்னீங்கன்னா........”

“வைத்தியத்துக்கு காசு வாங்கறது இல்லைங்க.”

“இவ்வளவு பெரிய வித்தையை கையில வச்சுகிட்டு இந்தக் குடிசையில சிரமப்பட்டுகிட்டு இருக்கீங்க.. கோவைக்கு வாங்க எங்கிட்ட கடை இருக்கு அங்க உக்காந்து வைத்தியம் பாக்கலாம். மாசம் பத்தாயிரம் தர்றேன்.. தங்க இடமும் தர்றேன்”

“வேணாங்க.. இதை விட லாபம் அதிகம் வரும்னு தெரிஞ்சு எனக்கு ஒருத்தன் இருவதாயிரம் தர்றேன்னு சொல்லுவான் அப்புறம் நான் உங்களுக்கு துரோகம் பண்ணனும்.. அப்புறம் நீங்க என்னை அழிக்க இன்னொருத்தனை கண்டுபிடிச்சு அவனுக்கு ஆசை காட்டணும்.. அப்புறம் அதிக லாபம் வரணுமேன்னு குட்டைத் தண்ணியை பிடிச்சு பாற்கடல்ல கடைஞ்ச அமிர்தம்பான்.. நான் அவனை மிஞ்ச வேற ஒரு தில்லு முல்லு பண்ணனும் .வேணாங்க.. நான் வூட்டுல உள்ள புள்ளைங்களையும் கெடுக்க விரும்பலை.. தோட்டத்துல உள்ள புள்ளைங்களையும் அழிக்க விரும்பலை.. கல்லாத்தா.... இவருக்கு ஆவாரம் தேத்தண்ணி குடு.. சாப்பிட்டுட்டு கிளம்புங்க”

“உங்க விருப்பம் .. அப்புறம் எங்க அம்மாவுக்கு ஆழ்மயக்கம்னு சொன்னேனே அதுக்கு மருந்து தர மறந்துட்டீங்களே?”

ஒரு கணம் அப்படியே அவனைப் பார்த்து பெருமூச்சு விட்டான் வீரபத்திரன்

“அந்த அம்மாவோட படத்தை காமிச்சீங்களே அது அவங்க சாவறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி எடுத்ததா?”

சுந்தர் அப்படியே திகைத்து நின்றான்.

“எப்படி நீங்க......?”

“அவங்க கண்ணு சொல்லிச்சு.. உயிர் இங்கதான் ஒட்டிகிட்டு இருக்கு.. இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோதான்னு சொல்லுது அவங்க கண்ணு.. அம்மாவை படம் பிடிக்க மறந்து,  அய்யோ சாவப் போறாங்களேன்னு கடைசி நேரத்துல எடுத்திருக்கீங்க. போல . நாடி பாக்கணும்னு அவசியம் இல்லைங்க... பழனிச்சாமி சொன்னாருங்களா? நான் முகத்தைப் படிச்சு வைத்தியம் பண்ணுவேன்னு.. சரிதானான்னு சோதிச்சு பார்த்துட்டீங்க”

“என்னை மன்னிச்சுடுங்க..”

“அப்படியே உங்க சாதி என்னன்னு கேக்கற மாதிரி என்னோட சாதியை என் வாயால வரவழைக்கப் பாத்தீங்க போகட்டும் விடுங்க... வியாபாரத்துக்கு நான் சரியா வருவேனான்னு பார்த்தீங்க.. நானே சொல்லிடுறேன்.. நான் சரி வர மாட்டேங்க.. வைத்தியத்தையும் , வைத்தியம் பண்றவனையும் வியாபாரமா ஆக்குனதாலதான் புதுசு புதுசா இவ்வளவு வியாதிங்க.. அப்புறம் அந்த செங்காந்தள் பூ இருக்கே அதுக்கு இன்னொரு பேரு இருக்கு கண்ணு வலி பூ.. ரொம்ப நேரம் அதையே உத்து பாத்தீங்கன்னா கண்ணு வலி வந்துடுமாம். உங்க கண்ணு வியாபார கண்ணு... நாங்க எல்லாம் செங்காந்தள் மாதிரி.. ரொம்ப உத்து பாக்காதீங்க கெளம்புங்க.. கல்லம்மா அந்த எண்ணையை கொஞ்சம் இவருக்கு ஊத்தி குடும்மா”  எழுந்து துண்டால் தரையைத் விசிறித் துடைத்தான் .

ஒரு நேர்முகத் தேர்வில் முதன் முறையாக நேர்முகம் செய்தவரே தோற்றுப்போனது இன்றுதான் என நினைத்துக் கொண்டான் சுந்தர்ராமன் தளர்வான நடையுடன் வீட்டை விட்டு வெளியே வந்து வண்டியைக் கிளப்பினான். அது அகால வேளையில் காதை பிடித்து இழுத்ததும் கத்தும் கழுதையின் குரல் போல ஒலித்தது... அந்த சத்தம் அமைதியான காற்று வெளியினை கிழிப்பது போல கொடூரமாக கேட்டது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...