புதிய புத்தகம் பேசுது இதழில் வெளியான கட்டுரை
மரம் வளர்த்த மனிதனின் கதை
( அனிமேஷன் திரைப்படத்தின் திரைக்கதை
வடிவம்)
தமிழில் : ஆண்ட்டோ & இதயசீலன்
வெளியீடு: ஹாரிசான் மீடியா, 4/1320, காந்தி நகர், தும்பல், சேலம்-636114
நன்கொடை; ரூ 30/-
அனிமேஷன் படங்களை நகைச்சுவை
உணர்வைத்தூண்டும் கேலிச்சித்திரங்கள் என்பதோடு மட்டுமே
பொருத்திப்பார்த்திருப்பார்கள். பூனை எலியை துரத்துவதும், அது தப்பிக்க முயற்சிப்பதும் அல்லது
சிலந்தி மனிதன் கட்டடம் விட்டு கட்டடம் தாவுவதுமாக கதைக்களன் கொண்ட படங்களைத்தான்
அதிகம் பார்த்திருப்போம்.
ஆனால் ஒரு திரைப்படத்துக்குத் தேவையான
வலுவான திரைக்கதையோடு பல அனிமேஷன் படங்கள் உலகெங்கும் வெளியாகியிருக்கின்றன.
அப்படியான படங்களில் ஒன்று The man who planted trees. கனடா நாட்டில் தயாரான இந்தப்படம் 1987-இல் வெளியானது. 30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம்
பிரெஞ்சு எழுத்தாளர் ழான் கியானோ எழுதிய கதை ஒன்றை அடிப்படையாக கொண்டு
எடுக்கப்பட்டது. முதலில் பிரெஞ்சு மொழியிலும் பின்னர் ஆங்கில மொழியிலும் பின்னணி
குரல் சேர்க்கப்பட்டு வெளிவந்தது.
பின்னணி குரல் வழியாக வெளிப்படும் இந்த
படத்தின் திரைக்கதையை தமிழில் மொழிபெயர்த்து நூலாக சேலம் ஆவணப்பட இயக்குனர்
மற்றும் ஒளிப்பதிவாளர் ஆண்ட்டோ அவர்கள் சென்னை இதயசீலனுடன் இணைந்து
வெளியிட்டுள்ளனர். அனேகமாக அனிமேஷன் படம் ஒன்றின் திரைக்கதை நூலாக தமிழில் வருவது
இதுவே முதல்முறையாக இருக்கக்கூடும்.
ஆவணப்படங்கள் மூலம் பரவலாக அறியப்பட்ட
ஆண்ட்டோ,
சேலம்
அருகே உள்ள தும்பல் என்கிற குக்கிராமத்தைச் சார்ந்தவர். உலக சினிமாக்கள் மீது
தீராத காதல் கொண்ட ஆண்ட்டோ, அடிக்கடி சேலம் நகரில் உலக சினிமாக்களை திரையிட்டு சினிமா ரசனையை
வளர்த்துக்கொண்டிருப்பவர். இதய சீலன் தமிழகத்தின் அறியப்படாத குறும்படங்களை தனது
விமர்சனங்கள் மூலம் அறிமுகப்படுத்தியவர். இருவரும் இணைந்து இந்த புதிய முயற்சியில்
இறங்கியதன் மூலம் இன்னும் சிலரையும் இந்த பணியில் இறங்க தூண்டுகோலாக
இருக்கின்றனர்.
படத்தின் கதை இதுதான்... எல் சியர்டு
பூபியர் என்கிற ஆடு மேய்ப்பவர் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் தரிசு நிலங்களில் தனி ஒரு
ஆளாக எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் மரங்களை வளர்த்து அதன்மூலம் ஒரு காட்டையே
உருவாக்கியதை போர்வீரன் ஒருவன் கவனித்து நம்மிடம் அறிமுகப்படுத்துகிறான்
முரண்பட்ட வேலைகளைச்செய்யும் இரண்டு
கதாபாத்திரங்கள். ஒருவர் எந்த நோக்கமுமின்றி அதிகாரிகள் கட்டளையிட்டால் உயிர்களை
எடுக்கும் பணியை செய்பவர். மற்றொருவர்
எந்த அங்கீகாரமும் இன்றி மரங்களை உருவாக்குகிற பணியை செய்கின்றவர். மெல்ல, மெல்ல 10000 ஓக் மரங்களை வளர்க்கும் பூபியர் தன்
மனைவியையும், மகனையும்
கொடிய நோய் ஒன்றின் காரணமாக இழந்தாலும் அது குறித்து எந்த புகாரும்
இல்லாதவர்.
தன்னை பிரதானப்படுத்திக்கொள்ளாத நல்ல
மனிதர்கள் தங்கள் தன்னலமற்ற செயல்களால் எவரையும் தன்பக்கம் ஈர்த்துவிடுகிறார்கள்
என்பதற்கான உதாரணமே மரம் வளர்த்த மனிதனின் கதை.
அருமையான அர்த்தமுள்ள எழுத்துவடிவம்.
இத்தனை ஆயிரம் மரங்கள் வளர இயற்கையும், மரங்களை சேதப்படுத்தாத எலிகள் மற்றும்
வேர்க்கரையான்களும் காரணம் என்று ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை வாசிக்கையில்
ஆச்சர்யமூட்டுகிறது. எத்தனை நேர்மறையான எண்ணம் ஒரு வேலை கெட்டுப்போனால் அதற்கான
காரணத்தை யார் தலையில் தூக்கிப்போடலாம் என்று யோசிக்கும் மனித மனம் அதுவே வெற்றி
பெற்றுவிட்டால் அதற்கான முழுக்காரணமாக தன்னையே முன்னிலைப்படுத்தும். தன்முயற்சி
வென்றால் துணை நின்றவர்களையே மறந்துவிடும் இன்றைய உலகில் எத்தனை பேர் இடையூறு
செய்யாமல் விட்டுவைத்தவர்களுக்கு நன்றி சொல்லத்துணிவார்கள்?
இன்னொரு இடத்தில் அந்த மனிதனுக்கு உரிய
அங்கீகாரம் கிடைக்காமல் போனதையும் சாதகமாகவே கூறுகிறார். நல்லவேளை அவரது வேலையை
மற்றவர்கள் அறியாமல் போனார்கள், அப்படி யாருக்காவது தெரிய நேரிட்டால் எப்படியாவது தடை செய்ய
முயன்றிருப்பார்கள் என்று தேறுதலாய் சொல்வது எல்லா தன்னார்வலர்களுக்கும் ஆறுதலான
செய்தி.
ஆண்ட்டோவும் தன்னார்வ படைப்பாளிதான் அவரது
ஆவணப்பட்டங்கள் எந்த ஆரவாரமுமின்றி சமூகத்தில் பாதிப்புகளை உண்டாக்கியவை.
தும்பலில் ஒரு குடியரசு தினம், புலி யாருக்கு ஆகியன இயல்பான அதே நேரத்தில் தமிழ் ஆவணப்பட உலகில்
புதிய உத்திகளையும், நோக்கினையும் உருவாக்கியவை. நகரங்களிலிருந்து குறுக்கே ஓடிய ஆற்றினால் துண்டிக்கப்பட்ட மலைக்கிராமத்திற்கு ஒரு பாலம் அமைந்திட அவரது
கனவுப்பாலம் ஆவணப்படம் காரணமாக இருந்தது.
சினிமா ரசனையையும், சரியான இலக்கையும் படைப்பாளிகளிடம்
பதியவைக்கும் இந்த நூலை வெளியிட்ட ஹாரிசான் மீடியா பாராட்டுக்குரியது. இயற்கையை
நேசிக்கும், மரங்கள்
மீதான அக்கறையை வெளிப்படுத்தும் இந்த நூலை ரீசைக்கிள் தாள்களில்
அச்சிட்டிருப்பதும் பொருத்தமானது.
சமூகம் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் பூபியர்களும்
ஆண்ட்டோக்களும் விதைத்தபடிதான் இருக்கிறார்கள், உருவாகின்றன மரங்களும் பாலங்களும்...
-
நெய்வேலி
பாரதிக்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>