புதன், 22 ஜூன், 2022

என்ன செய்யப் போகிறோம்?

 



 

 

தீவுகளின் திரள்;

----------------

 

            தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்கள், பக்கத்திலிருக்கும் இமைகளைப் பார்ப்பதில்லை

            இந்த வார்த்தைகளில் இருக்கும் நிஜம் சுட்டும் பொருள் அனேகம். உலகம் நாளுக்கு நாள் மெல்ல மெல்லச் சுருங்கி விரல் நுனியில் குவியத்தொடங்கி விட்டது. நினைத்த இடத்திலிருந்து, நினைத்த மாத்திரத்தில், யாரையும் எளிதாக செல்லிடைப் பேசிகள் மூலம் எண்களை ஒற்றித்  தொடர்பு கொள்ள முடிகிறது.

            கண்ணெதிரே விரியும் அலைதளத்தில், செய்திகள் இ.மெயில் சிறகில் சுகமாய்ப் பிரயாணிக்கின்றன விரைவாக...

            ஏதோ ஒரு நாட்டின் எங்கோ ஒரு மூலையில் பந்தின் மீது படும் மட்டையின் மெல்லிய ஒலி சட்டென்று நம் காதருகே விழுந்து திடுக்கிடச் செய்கிறது சாட்டிலைட் ஒளிபரப்பின் மூலம்...

            அனேகமாக தொலைபேசியில்லாத வீடுகளில்லை எந்த ஒரு நகரத்திலும்...

            இருப்பினும் நகரம் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகளில் ஒன்று அறிமுகமின்மை'. ஒருவருக்குமே தெரியாமல் ஒரு மனிதன் நகரத்தின் மையப் பகுதியில், நெரிசல் மிகுந்த வீதியில், கதவுகள் சாத்தப்பட்ட வீடொன்றில் வசித்து, சுவடில்லாமல் மறைந்துவிட முடியும். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் அது மிக சாத்தியம்.

            நம் முன் எழும் முக்கியமான கேள்வி தொலைத் தொடர்பில் நாம் நினைத்துப் பார்த்திராத உச்சிக்குச் சென்றுவிட்டோம். ஆனால், அருகிலிருக்கிறவரை அறிந்திருக்கிறோமா?'

            இந்தியாவின் எந்த ஒரு பெயர் பெற்ற நகரத்திலும், எந்த ஒரு பிரதான அல்லது சந்தடியற்ற வீதிகளில் வசிப்பவர்களிடம் உங்களால் மெளனத்தை மட்டுமே பெற முடிந்த கேள்வியொன்றை தைரியமாகக் கேட்டுவிட முடியும். அது, ‘உங்கள் தெருவில் வசிப்பவர்கள் அனைவரின் பெயர் மட்டுமாவது உங்களுக்குத் தெரியுமா... சந்தேகத்திற்கிடமின்றி?'

            கிராமங்களையும் மெல்ல மெல்ல நகரங்களாக்கி வருகிறோம். மனிதர்களை நாகரீகப் படுத்துவதில் அலாதி ஆர்வம் நமக்கு. மறுபடியும் அவர்களை வெள்ளந்தியான' மனிதர்களாக மாற்ற முடியுமா சில விஷயங்களுக்காகவாவது...?

            ஆனால், இவை யாவற்றுக்குமான குற்றவாளிகளென்று யாரையாவது கூண்டிலேற்றிவிட்டுத் தப்பித்தல் ஒருபோதும் தீர்வாகாது...

            காரணிகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்க, அவிழ்க்க நமக்குள் இருக்கும் சிக்கல்கள் ஒவ்வொன்றாய்க் கலையும்.

            1.வீடுகள் கிராமங்களில் உள்ளதுபோல் நெருக்கியடித்துக் கொண்டில்லாமல் தனித்தனியே விலகி பதவிசாக அமைந்திருக்கும் பொதுவான தெருக்கள் அமைப்பு.

            2.வெளியேறிச் சென்று விடாமல் கண்களையும் கால்களையும் பிடித்திழுக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள்...

            3.கிராமவாசிகள் பெரும்பாலும் சுய தொழில் சார்ந்தவர்கள். நகரங்களில் ஏதோ ஒரு நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் சூழல்களால் நேரங்களைப் பகிர்ந்தளிக்க முடியாதபடிக்கு நெருக்கடியான கால அட்டவணை.

            4.கிராமங்களில் எவ்வளவு விமர்சையாக நடந்தாலும் திருமணம் போன்ற தனிமனித விழாக்கள் வீடுகளில் நடத்தப்படுவது வழக்கம். இதனால் தெருவாசிகள் ஒவ்வொருவரையும் திருமண வேலைகளில் பங்கேற்றச் செய்யும் சாதுர்யம். நகரங்களிலோ பிறந்தநாள் விழாக்கள் கூட ஒப்பந்தக்காரர்களை நம்பி மட்டுமே...

            5.ஊர் நலனுக்கு ஊர் கூடி முடிவெடுக்கும் போக்கு இல்லாத நகர அமைப்பு...

            இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.கொஞ்சம் கொஞ்சமாக மனித மனம் மரத்துப் போகும்படி செய்யும் வாழ்க்கை முறை நம்மை எங்கே இட்டுச் செல்கிறது? மனிதத் தீவுகள் மிதந்தபடி... சலனமற்றிருக்கிறது பிரபஞ்சம் பல சமயங்களில்.

            சில உறுதிப்பாடுகள் மூலம் நம்மை நாமே நகர்த்த முடியும் எளிதாக...

            1.அடிக்கடி வசிப்பிடம் மாறும் வாய்ப்பு கிடைப்பது புதிய மனிதர்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கே என்பதைப் புரிந்து கொண்டு, நம்மை நாமே வலுக்கட்டாயமாகவாவது தெரு முழுக்க அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்-புதிதாகக் குடியேறுகையில்...

            2.புன்னகையைப் பரிமாறுதல் செலவின்றி நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளும் தேகப்பயிற்சியல்லவா...? எதிர்ப்படுவோரிடம் புன்னகைக்க முயலுவோம்.

            3.ஊர்களுக்கென்று அல்லது வட்டங்களுக்காக, குறைந்தபட்சம் தெருக்களுக்கென்று ஒரு நலச் சங்கம் அமைத்து அதன் மூலம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் முயற்சி சுவையானதாகவும், பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்தானே...!

            4.குழந்தைகளை விளையாட்டு போன்ற தனித்திறன், அல்லது கல்வியின் பொருட்டு ஒருங்கிணைத்தல் நம் அடுத்த தலைமுறைக்கு நாம் தரும் நல்ல வழிகாட்டுதலாய் இருக்குமே...

            5.ஒருநாளைக்கு ஒரு முறையேனும் நம் அண்டை வீட்டாருடன் பேசுவது என்று சங்கல்பமெடுத்துக் கொண்டால் மனிதர்களுக்கிடையே முளைத்திருக்கும் முட்புதர் கருகிவிடுமல்லவா? குறைந்தபட்சம் ஒரு ஹலோ'...

     நாம் என்ன செய்யப் போகிறோம்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...