பேசும் புதிய சக்தி இதழ் நடத்திய எழுத்தாளர் ராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டி 2022 இல் சிறப்புப் பரிசுப் பெற்றச் சிறுகதை
திண்ணை
-நெய்வேலி பாரதிக்குமார்
அந்தத் திண்ணை
இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஓவ்வொரு கல்லும் பெயர்க்கப்பட்டு குருதி வழிய
ஓரமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து கிளம்பிய புழுதி, ‘பிரம்பு’ சீனிவாசனின் மூச்சுக்காற்றுப் போல எனக்குத் தோன்றியது. மாணவர்களின் குரலால்
எப்பொழுதும் சப்தமாக இருக்கும் அந்தத் திண்ணைப் பள்ளி இன்று சுவடு தெரியாமல்
நொறுங்கிக் கொண்டிருந்தது. சீனிவாசனின் பிள்ளைகள்தான் ஆள் வைத்து இடித்துக்
கொண்டிருந்தனர். ஒரு வழியாக அவர்களுக்குள் இருந்த மனவருத்தங்கள் முடிந்து பாகம்
பிரிக்கப்பட்டுவிட்டது. அவர்களது அப்பா சீனிவாசனைத்தான் துகள்களாக உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்
என்று தோன்றியது. ‘பிரம்பு’ சீனிவாசன் இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டன.
நல்லவேளையாக, சீனிவாசனின் மனைவி அம்புஜத்தம்மாள் அவருக்கு முன் இறந்து விட்டார். அவர் இருந்திருந்தால் இந்தக் கொலையை
கண்கொண்டு பார்க்கமுடியாமல் துடித்திருப்பார்.
அம்புஜம்மாள்
புழங்கிய அந்த மாபெரும் பூந்தோட்டத்தை நான்கு ஆட்கள் தோண்டி சிதைத்துக்
கொண்டிருந்தனர். அந்தத் தோட்டத்தில் இல்லாத மலர்களே இல்லை. பவழமல்லி, மனோரஞ்சிதம்,
அடுக்கு நந்தியாவட்டை, பலவண்ண செம்பருத்திகள், மல்லி, கனகாம்பரம் என்று மண்ணில்
விளையும் அத்தனையையும் எங்கிருந்தோ கொண்டு வந்து சேர்த்து விடுவார். அவர்களது
வீட்டைக் கடந்து போக காற்றுக்குக் கூட மனம் வந்திருக்காது. அத்தனை மணமும், அழகும்
அங்கே நிரம்பியிருக்கும். அம்புஜத்தம்மாள் எப்பொழுது அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றுவார், எப்பொழுது பூக்களைப்
பறிப்பார் என்று யாருக்குமே தெரியாது. பரிதியின் கண்ணுக்குக் கூட படாமல்
அத்தனையையும் செய்து விடும் சாமர்த்தியம் அவருக்கு இருந்தது. சிறு மணியொலி
கேட்டால் அவர் பூஜை அறையிலும், மிளகு ரசம் வாசம் அடித்தால் அவர் சமையலறையிலும்
இருப்பதாக கற்பனை செய்து கொள்ளலாம்.
‘பிரம்பு’ சீனிவாசனின் உருவம் எவர் மனதிலிருந்தும் அத்தனை விரைவில் மறைந்து போகாது. அடர்த்தியான
குடுமி, நீளமான நாசி, சற்று அதீதமாக நீண்டு இருக்கும் அவரது நெற்றிப் புடைப்பு,
அதன் மீதே நெளிந்து ஓடும் திருமண், காப்பி நிறச் சட்டை, கையில் எப்பொழுதும் உருண்டு
கொண்டிருக்கும் இரண்டடிப் பிரம்பு என்று தனித்துவமான அடையாளம் கொண்டவர்.
கும்பினிக்காரர்கள்
கூட அவரைக் கண்டால் சற்று மரியாதையோடு அவரிடம் பேசுவதைக்கண்டு அவர் மதிப்பு
இன்னும் கூடிற்று. அவரது திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு சுற்று வட்டாரம் முழுக்க
நல்ல பேர் இருந்தது. அங்கு கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டால் அதி புத்திசாலியாக
பிள்ளைகள் வருவார்கள் என்ற அசைக்கவியலா நம்பிக்கை எல்லோருக்கும் உண்டு.
அவரது பிள்ளைகளுக்கு துரையின் வயதுதான் இருக்கும்.. துரையும் அவரது பள்ளியில்
வித்தை கற்றவன்தான். துரையை நான் அவரிடம் ஒப்படைத்த நாள் இன்றும் கண்ணுக்குள்
நிறைந்தே இருக்கிறது. துரைக்கு ஐந்து வயதானதும் அது ஸ்ரீ ஜெய வருடம் விஜயதசமி
அன்னிக்கு அவரிடம் கூட்டிப் போனேன். திருமாலை வணங்கி அவரது காலில்
நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான். உண்மையில் துரை அந்தப் பூந்தோட்டத்தின் வாசத்துக்கு
மயங்கித்தான் அவரிடம் சேர முன்வந்தான். ஊரில் எல்லாப் பிள்ளைகளும் அவர் பெயரைக்
கேட்டாலே கால்சட்டையை நனைத்துவிடுவர். அவர் மீதும், அவரது பிரம்பு மீதும் அத்தனை
பயம். என்றைக்காவது ஒருநாள் அந்த பூந்தோட்டத்தின் மலர்களைத் தொட்டுப் பார்த்து
விடுவது என்ற கனவோடுதான் துரை அங்கு
விசும்பாமல் சமர்த்தாகப் போய்க் கொண்டிருந்தான். ஆனால் ஒரு நாளும் அவற்றை அவன்
தொட்டதே இல்லை.
துரை சேரும் தினத்தில் அவரது காலில் விழுந்தவனை மிரட்டும்
குரலில் “அது என்னடா பேரு துரைன்னு?” என்று கேட்க.. அந்தக்குரலின் கடுமையில்
பயந்தவனாய் தேம்பித் தேம்பி அழத்
தொடங்கினான். அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வராது என்று தெரிந்து “துரையா
பொறக்கலைன்னாலும் துரையாட்டம் ஆவட்டும்னு வச்சேன்” “துரை மாதிரி எல்லாம் ஒரு நாளும் ஆக முடியாது.
அவனை மாதிரி ஆகணும்னா வெள்ளைத்தோலோட பொறக்கணும்.
சரி.. சரி எழுந்திருடா துரையாம்..” என்று கண்களை உருட்ட, அவன் மீண்டும் பெருங்குரலெடுத்து அழ முற்பட்டபோது
திடுமெனப் “போதும் நிறுத்து. சத்தம்
வரப்படாது” .. என்று கண்களை உருட்டி, நாக்கைத்துருத்தி முறைக்க அவனுக்கு சப்த
நாடியும் அடங்கிப்போனது.. “அடேய், சட்டாம் பிள்ளை இவனைக் கூட்டிண்டு போய் அங்க வெய்யில்ல
நிறுத்தி ராம நாமம் சொல்லிக்கொடு..” என்று அதட்டலாய் சொல்ல.. அவன் அத்தோடு பூக்களைத்
தொடும் ஆசையையே விட்டுத் தொலைத்தான். அவர் வெளியே அல்லது உள்ளே போகும்போது பிள்ளைகளை
அடக்கி ஆள்பவன் சட்டாம் பிள்ளைதான்.
கணக்கில் கெட்டிக்காரர். அவர் கற்றுக் கொண்டிருந்ததெல்லாம்
கண்ணெதிரே நடமாடும் மனிதர்களிடமிருந்துதான்.. அதையே பிள்ளைகளுக்கு
கற்றுக்கொடுப்பார். .
சீனிவாசன் தன் நெற்றிப் புடைப்பைத் தடவியபடி பிரம்பை
மேலுக்கும் கீழுக்குமாக விசிறி நடந்து கொண்டிருப்பது போலவே கண்ணுக்குத் தெரிந்தது.
அந்த புடைப்புக்குப் பின்னே ஒரு கதை இருக்கிறது.
சீனிவாசன் அன்றைக்கும்
அப்படித்தான் பிள்ளைகளுக்கு ‘வீசம்’ கணக்கு சொல்லிக் கொண்டிருந்தார். நான்
எப்பொழுதும் போல என் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி அவரது பாடம் நடத்தும் அழகை
ரசித்துக் கொண்டிருந்தேன். அவர் வீட்டுக்குள் ஒரு வேலையாக உள்ளே சென்ற சமயம்
பிள்ளைகளுக்குள் ஏதோ கருத்து பேதம். பேச்சு பெரிதாகி ஒரு பையன் அழுவதில் போய்
நின்றது.
உள்ளிருந்து வந்த பிரம்பு சீனிவாசன் “ஏய் கர்ணம் பயலே,
எதுக்கடா ஒழுவறே?” என்றார். அவரைக் கண்டதும் .அவனது குரல் மெல்லத் தேய்ந்து ஒரு
ஒலிக்கோடாக சிதைந்தது. அவரது பழக்கம் அது.... எவர் பெயரையும் அவர் நினைவில்
வைத்திருப்பதில்லை. அவர்களது அப்பாவின் உத்தியோகத்தை வைத்துதான் அழைப்பது வழக்கம்.
கொல்லன் மகன், நீர்க்காரன் பிள்ளை, தலையாரி மகன் என்று பலவிதமாய் சொல்லித்தான் அழைப்பார்.
அழுத பையன் சற்று ஆசுவாசமாகி நிமிர்ந்து உட்கார்ந்தான். “சட்டாம்
பிள்ளை எனக்கு இம்மியும் கணக்கு வராதுன்னு திட்டறான் சாமி” என்றான். சட்டாம்
பிள்ளை அவர் அருகே வந்தான். “அவனுக்கு கணக்கு வரவே இல்லை சாமி.. எப்பவும் அடுத்த பிள்ளையைப்
பார்த்துப் படிக்கறான்”
“சரி, உனக்கு இம்மின்னா எத்தனை அளவு, என்னன்னு தெரியுமா?” அப்படின்னு கேட்டார். சட்டாம் பிள்ளை .உதட்டைப் பிதுக்கினான். “அடக்
கிராதகா., இம்மின்னு அரிசி உண்டு. அது ரொம்ப மெலிஞ்சு இருக்கும். அந்த ‘அரிசியளவு ’ன்னு அதுக்கு
அர்த்தம். அது தெரியாமத்தான் அவனுக்கு
சாபம் விட்டியோ! போய் உக்காரு... அது இருக்கட்டும் அளவு பாடம் சொல்றேன்”னுட்டு, “எட்டு இம்மி ஒரு எள்ளு; அப்புறம் எட்டு எள்ளு ஒரு
நெல்லு; எட்டு நெல்லு ஒரு பெரு விரல்”னு அவர் பாட்டுக்கு கணிதப் பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்..
அவரது பள்ளியில் இந்த நேரத்துக்கு இந்தப்பாடம்னு ஒரு வரையறை இருக்காது. அவருக்குத்
தோன்றினபடி அவரது அந்த நாள் இருக்கும்.
ஒரு முறை அவர் வெளியில போயிருந்தப்ப பிள்ளைகள் ஒண்ணுகொண்ணு
பேச்சு முத்தி அடிச்சிகிட்டு ஒரே களேபரம். அவர் வந்த வேகத்துல எல்லாம் வாயை மூடிட்டு
சமர்த்தா உக்கார்ந்து விட்டார்கள். கைகலந்த சுவடே காணும்.
“சட்டாம்பிள்ளை, எதுவரைக்கும் நடந்துருக்கு?” என்று
கேட்டார்.
அவனுக்கு நடந்ததைச் சொல்லி நல்ல பேர் எடுக்கணும்; மத்த
பயலுகளையும் மாட்டிவிடணும்னு மனசுக்குள் திட்டம். “அடிதடி வரைக்கும் நடந்து போச்சு
சாமி” என்றான் பூடகமாக..
ஆனால் சீனிவாசன் அதை சரியாக காதில் வாங்கிக்கொள்ளாமல், அந்த
சொல்லிலிருந்து தனது பாடத்தை ஆரம்பித்துவிட்டார் “அப்படியா அப்ப அடி, தொடை, தளை,
சீர்னு” தமிழ் இலக்கண வகுப்பை எடுக்க ஆரம்பிச்சுட்டார்.
அன்றைக்கு அம்மாசி மகன் அவரது திண்ணைப்பள்ளியின் ஒரு தூணைப்
பிடித்துக்கொண்டு, கால்களை மண்ணில் சுழற்றி தேய்த்துக் கொண்டிருந்தான். அதுவரை அவனைக்
கவனிக்காமல் பாடம் நடத்திக்
கொண்டிருந்தவர் அவனைப் பார்த்தும் கடும் கோபமாகி, “என்னடா நீர்க்காரன் மகனே, பாடம்
படிக்கிற இடத்துல உனக்கு என்ன வேலை? அதுவும் கௌபீணம் கட்டிண்டு இங்க வராதேன்னு
சொல்லி இருக்கேன்ல..” என்று கத்தினார்.
தலையில் பாதியை மழித்துக் கொண்டு, இடுப்பில் ஒற்றைத்துணியை
மட்டும் குறுக்கே கட்டிக்கொண்டு ஊர் முழுக்க அலைபவன் அவன். “ஆத்துல தண்ணி
வந்துடுச்சுன்னு எங்க அய்யன் சொல்லிட்டு வர சொன்னிச்சு”
“அப்படியா, சரிசரி.
நீ முன்ன போ. நான் அப்புறம் வர்றேன்னு அப்பன் கிட்ட சொல்லு..” எழுந்து
பிள்ளைகளிடம், “எல்லோரும் வாய்ப்பாடு சொல்லிட்டு இருங்க.. நான் சித்த வெளியே
போயிட்டு வர்றேன்” என்று கிளம்பி என் பக்கம் குரல் கொடுத்தார் .”கைலாசம், சட்டையை
மாட்டிண்டு கிளம்பு ஆத்து பக்கம் போயிட்டு
வரலாம்“ என்று கூப்பிட்டார். அவருக்கு வேண்டிய சமயத்தில் எனக்கு நெருங்கினவராக
இருப்பார். சில சமயம் சற்றே விலகி இருப்பார்.
இருப்பினும் அவர் அழைத்தால் காரணம் இருக்கும். பிள்ளைகள் சத்தமாக “ஐந்தோண்
ஐந்து ஐ ரெண்டு பத்து ’ என்று குரல் உயர
வாய்ப்பாட்டினை சொல்லத் தொடங்கினர்.
அவரோடு கிளம்பினேன்.
“இந்த நீர்க்காரன் பலே பிரகஸ்பதியா இருப்பான் போல..
நீர்க்காரன்னா சும்மா பாசனத்துக்கு முறை வச்சி தண்ணி திறப்பான் அப்படின்னுதான்
நினைச்சிண்டிருந்தேன் ஆனா அவன் கணக்குல அப்படியே பாயறானாம். நீராணிக்காரன்,
கரையார்னு அததுக்கு தனித்தனி ஆளுக ஒரு காலத்துல.. இப்ப ஒருத்தனா எல்லாத்தையும்
பாத்துக்கறான்.. அவன் குடும்பமே மடையார் குடும்பம். அந்தக் காலத்திலேர்ந்து
அவனுக்கு எல்லாம் மனப்பாடம். ஆற்றோட தண்ணீர் மட்டம் எவ்வளவுன்னு பாக்கறதுதானே அவனோட
வேலை.. ஆனா அவன் தண்ணி வர்ற வேகம், அளவு, எவ்வளவு நேரம் போகும்னு எல்லாம் சொல்லிடறானாம்!”
எனக்கும் விந்தையாகத்தான் இருந்தது. “அது எப்படி? என்ன அளவை
வச்சிருக்கான் அதுக்கு?”
“அதத்தான் பாக்கப்போறோம்” என்று ஒரு குழந்தையின் துள்ளலோடு
நடந்தார். புதியனத் தேடல் அவருக்கு
எப்பவும் விருப்பமான ஒன்று.
ஆற்றங்கரையில் அம்மாசி ரொம்பப் பவ்யமாக நின்று
கொண்டிருந்தான். எங்களைக் கண்டதும் கும்பிடு போட்டான். “வரணும் சாமிமார்களே”
என்றான்.
“தாயே கங்கையாட்டாம் என்ன பிரம்மாண்டமா ஓடி வர்றா ..கூவம்
கொள்ளை அழகுடா..” தன்னை அறியாமல்
கன்னத்தில் போட்டுக் கொண்டார். “என்ன அம்மாசி தண்ணி இப்படிப் பிரளயமாட்டம் வருது!”
ன்னு கேட்டார் பிரம்பு.
“கட்டி வச்ச வேகம் சாமி. அதான் கோவமா சீறுது... இன்னும் கொஞ்ச
நாழியில சரியாயிடும்”.
அப்படியே ஒரு கல்லின் மீது இருவரும் அமர்ந்தோம்..
“கொற்றலை ஆத்துல தண்ணி வந்தப்ப அங்க போயிருந்தே அப்படின்னாங்க...”
கொற்றலை ஆறு கடம்பத்தூர் பக்கம் தனியாகப் பெருகி வரும் ஆறு.
மழைக்காலத்துல தண்ணி புரண்டு வரும்போது கூவம், கொற்றலை இரண்டும் பார்க்க கொள்ளை அழகா இருக்கும்.
“ஆமா..சாமி ...தண்ணி
நெரம்புன ஆத்தை கையில அள்ளிப் பாக்கணும் சாமி அப்படியே அமுதம் கடஞ்சி நொரைக்கற
மாதிரி அம்புட்டு அழகு.. இதோ இந்தக் கையாலதான் அள்ளிக் குடிச்சேன் .. அம்மாம் தித்திப்பும் அப்படியே இருக்கு சாமி” சொன்னதோடு
நிக்காமல் கூவத்தின் தண்ணீரை இரு கைகளாலும் அள்ளி “ இதப்பிடிங்க சாமி
கொழந்தையாட்டம் எப்படி குதிக்குது”
தீர்த்தம் வாங்கற மாதிரி பவ்யமாக வாங்கிக் கொண்டார்
பிரம்பு..
இந்த ரசனையின் ரசனையை புரிந்து கொள்ளவே முடியவில்லை யாரிடமாவது
போய் அமர்ந்து கொள்ளும்.. இந்த அம்மாசிக்கு எப்படி இவ்வளவு ரசனை? கொற்றலை
இங்கிருந்து எவ்வளவு தூரம்? மூணு காத தூரம் இருக்குமா? ஐப்பசி மழையில அதிகம் தண்ணி வரப்போவுதுன்னு அதப்பாக்க
அங்கே நடந்தே போயிருக்கான்! இங்க பக்கத்துல அஞ்சு பர்லாங்கு தூரத்துல இருக்கற சென்னகேசவப்
பெருமாள் ஆலயத்துக்கு நடந்து போய் வரதுக்குள்ள நமக்கு கால் அசந்து போயிடுது.
ஒரு நீளவாக்கு மரக்கட்டை நடுவில் ஒரு முழத்துக்கு ஒரு முழம்
கணக்கில் சதுரமாக துளையிட்டு வைத்திருந்தான். மண்ணாலான தோண்டி ஒன்றும், குடுவை
ஒன்றும் கூட வைத்திருந்தான். அதில்லாமல்
தாமரை இலை, எருக்கம் இலை, மாவிலை, செம்பருத்தி இலை கொஞ்சம் இருந்தது. ஒரு
நாழிக்குப் பிறகு தண்ணீரின் வேகம் குறைந்திருந்தது. அவன் ஆற்றின் குறுக்கில் அந்த
மரக்கட்டையை வைத்தான். துளை வழியே மட்டும் தண்ணீர் வருமாறு கவனமாக அதை
நிறுத்தினான். குடுவையால் அந்தத் தண்ணீரைப் பிடித்தான். தண்ணீர் குடுவைக்குள் போகும்
நேரம் தனது நடு விரலைக் கட்டை விரலால் சொடுக்கியபடி மனதுக்குள் எண்ணிக்கொண்டான். குடுவையிலிருந்து
தோண்டிக்கு நிரப்பினான். அரை நாழியில் பத்து உழக்கு நெறையுதுங்க சாமி” என்றான்
அவனது உத்தியும் யூகமும் வியக்க வைத்தது. “சரி வேகத்தை
எப்படிக் கணக்கு பண்ற?” வியப்புக் குறையாமல் கேட்டார் பிரம்பு.
காலால் ஆற்றை நோக்கி ஆற்று மணலில் ஒரு கோடு போட்டான். ஒரு
ஐம்பது தப்படி நடந்து சற்றுத் தள்ளி அதற்கு
இணையாக இன்னொரு கோடு போட்டான். தண்ணீரின் மேல் முதல் கோட்டுக்கு நேராக நின்று
முதலில் தாமரை இலையைப் போட்டான் அது அடுத்த கோட்டுக்குச் செல்லும் வரை மறுபடி
விரல் சொடுக்கினான். அடுத்தது எருக்கம் இலை, மாவிலை அப்புறம் செம்பருத்தி இலை... வரிசையாகப்
போட்டு முன்போலவே செய்தான். “இப்படியே
தண்ணி வந்தா ஒன்றரை நாழியில ஒரு காதம்
போயிடும் சாமி” என்றான்.
“பலே” என்று தன்னை அறியாமல் ஆற்றின் குறுக்கே அவனருகில்
சென்று இடுப்பிலிருந்து எதையோ எடுத்துத் தரப்போன சீனிவாசன் ஆற்றின் வேகத்தைக்
கணிக்காமல் அப்படியே ‘தொபுக்கடீர்’ என விழுந்து விட்டார். விழுந்த வேகத்தில் உள்ளிருந்த
பெருங்கல்லில் நெற்றி மோதி அந்த இடம் வீக்கமாகிவிட்டது. எந்த வைத்தியத்துக்கும்
கட்டுப்படாமல் புடைப்பாகத் தங்கிவிட்டது. ஆற்றின் நீரளவை கணிக்க அவன் சொன்ன யுக்தியைத்தான்
பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். நீர்க்காரனிடமிருந்து பெற்றதை
திண்ணைப்பள்ளிக் கூட பிள்ளைகளுக்கு கணிதமாக கற்றுத்தரும் சாமர்த்தியம்
அவரிடமிருந்தது. ஆனால் அதை நீர்க்காரன் பிள்ளைதான் அவரிடம் கேட்க வழியில்லாமல் திண்ணைக்கு
வெளியில் நிற்க வைத்தது காலம்.. ஒரு வேளை அந்தக் கணக்கை தன் அப்பனிடமிருந்துதான்
சீனிவாசன் பெற்றார் என்பதை கண்டுபிடித்து விடுவான் என்கிற அச்சம் அவரிடமிருந்ததோ
தெரியாது.
கோட்டைக்குள்ளே கும்பினிக்காரர்கள்
கும்பிடும் சிலுவைக் கோயிலில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் கும்பினிப்
பிள்ளைகள் மட்டும்தான் அதில் சேர்க்கை இருந்தது. அப்புறம் கலப்புப் பிள்ளைகள்
சேர்க்கப்பட்டனர். கறுப்பர்களின் பிள்ளைகளைச் சேர்த்தால் அதுக்குத் தனியாக வரி
போடணும்னு லண்டன்லேர்ந்து தாக்கல் வந்துச்சாம். ஆனா சாமியார் வில்லியம் அதுக்கு
சம்மதிக்காம ‘படிப்பு எல்லோருக்கும் இலவசம்’னு சில மாதங்கள் கழித்து உள்ளூர்க்காரப்
பிள்ளைகளையும் அனுமதித்தார். அதில் சேரும் பிள்ளைகளை மேரி தெய்வத்தை கும்பிடச் சொல்கிறார்கள் என்று
பேச்சு இருந்தது. ஆனால் ஒரு பணமும் வாங்காமல் சொல்லிக்கொடுக்கறாங்க; அதுவும்
வெள்ளைக்காரன் பாஷையையும் கத்துக்கலாம்னு பெரும்பாலும் சேர்ந்துட்டாங்க.. எல்லா ஜாதிக்காரனையும்
வேற சேத்துக்கறாங்கன்னு ஒரு புகழ். அம்மாசிப் பையன் கூட சேர்ந்துட்டான். கால்சராய்,
மேல்சட்டையும் போட ஆரம்பிச்சுட்டான்.
பிரம்பு சீனிவாசனின் திண்ணைப் பள்ளியில் கூட்டம் குறைந்தது.
அந்தக் கவலையில் அவர் உடல் இளைத்துத் துரும்பாகிவிட்டார். வெள்ளைக்காரப் பிள்ளைகள்
தோஷம் பார்க்காம தோள் மேல கை போட்டுட்டு நம்ம பிள்ளைகள் கூட கூடி விளையாடறதுல துரைக்கும்
ஒரு ஆவலாதி. அவனையும் அங்கேயே சேர்த்தேன். துரை அதுக்கப்புறம் நிறைய மாறிட்டான். எதிர்
வீட்டுப் பூந்தோட்டத்தை அவன் திரும்பிப் பார்க்கறதே இல்லை. வெள்ளைக்காரக் கூட்டாளிப்
பயல்கள் மேல்சட்டையில ஏதோ வாசனைத் திரவத்தை தெளிச்சுக்கறானுங்கன்னு அது மேல ஆசை.
அவனுகளுக்கு சீமையிலேர்ந்து வருது நாம எங்கப் போறதுன்னு ஒரு நாள் சத்தம் போட்டேன்.
சிநேகிதன் ஒருத்தன் குடுத்தான்னு சட்டை மேல அந்தக் கருமத்தை வேற தெளிச்சுட்டு
வந்தான். கெட்ட நாத்தம் கொமட்டல் தாங்காம இனிமே அதை ஊத்திட்டு வந்தே கொலை
பண்ணிடுவேன்னு அவன் அம்மாக்காரி ஒரு ஆட்டம் போட்ட பிறகும் அவன் அசரலை..
நீர்க்காரன் அம்மாசி மகன் இப்ப கால்சட்டை, மேச்சட்டையோட
கம்பீரமா நடந்து போறான்.. சீனிவாசன் வீட்டுத் திண்ணையை திரும்பிப் பார்த்து நக்கலா
ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு போனா மாதிரி இருந்துச்சு.. அவன் படிக்கிற வகுப்புல
அவன்தான் கணக்குல கெட்டிக்காரன்னு அவனோட கூட்டாளிகள் பேசிக்கறாங்க....
அம்புஜத்தம்மாள் இறந்தப்பக் கூட அவர்களது
தோட்டத்திலிருந்துதான் மலர்கள் எடுக்கப்பட்டன. ஆனால் அவர் இறந்த பிறகு பார்க்க
ஆளில்லாமல் தோட்டம் கருகிவிட்டது. சீனிவாசன் இறந்த போது வெளியிலிருந்துதான்
பூக்கள் வாங்கப்பட்டன. அவரின் பிள்ளைகள் வளர்ந்து தூர தேசத்தில் வேலைக்குப் போய்
விட்ட நேரம். அவரது உடலருகே நாள் முழுக்க இருக்கணும்னு எனக்கு ஆசை. பாழாப்போன
வாசனைத் திரவியத்தை எல்லாப் பயல்களும் மேல ஊத்திட்டு வந்துட்டாங்க போல.. வயித்தை
பெரட்டிடுச்சு.. அப்படியே வீட்டுக்கு வந்து படுத்துட்டேன் அன்னிக்கு..
இப்ப அதே பிள்ளைகள்தான் நேர்ல நின்னு வீட்டுத் திண்ணையை
இடிச்சு அவங்கவங்க பாகத்துல வீட்டை மாத்திக்கட்ட முனைப்பா இருக்கானுங்க. அந்த
நாத்தத்துக்குப் பயந்து நானும் கிட்டப் போகலை அவங்களுக்கும் நான் தேவைப்படலை. வீசியெறியப்பட்ட
பூ மாதிரி எதிர்த் திண்ணையில படுத்துக் கிடக்கிறேன்.
திண்ணைங்க இப்பல்லாம்
சோம்பேறிங்க பள்ளிகொள்ளும் இடமாயிடுச்சு
அப்பப்ப அதுல படுத்துகிட்டு காலை ஆட்டிகிட்டு “ம்.. எப்படி
இருந்த திண்ணை?” அப்படின்னு ஏதாவது ஒரு பெரிசு பெருமூச்சு விட்டுகிட்டுத்தான் இருக்கு.. எனக்கு அப்படி ஒண்ணும்
தோணலை..எத்தினி நாளைக்கு திண்ணைக்குள்ளேயே தாயம் ஆடுறது.... உலகம் திண்ணைக்கு
வெளியேத்தானே இருக்கு
பூ வாசம் இல்லாமல் மௌனமாகக் கடந்து சென்றது காற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>