திங்கள், 20 ஜூன், 2022

 தமிழ்ப் பல்லவி முதல் இதழில் பிரசுரமான கதை 


நட்சத்திரங்களைத் துணைக்கழைப்பவள்

                          -நெய்வேலி பாரதிக்குமார்

 

‘பெருந்தலைவர் புகழ் ஓங்குக

அன்புத்தலைவர் புகழ் வெல்க’

 

     ப்படித் துவங்காமல் எங்கள் தேசத்தில் ஒரு காதல் கடிதம் கூட எழுத முடியாது. உண்மையைச் சொல்வதென்றால் காதல் என்பதே கூட இங்கே தேச விரோதச் செயல்தான். மலர் என்று உன்னை அழைக்கலாமா? Malarkodi Makizhan என்கிற உனது பெயர் எனக்கு உச்சரிக்க மிகக்கடினமாக இருக்கிறது. அது ஏன் நாக்கு சுளுக்கும் அளவு சிக்கலான உச்சரிப்புக்குரிய பெயர்களை நீங்கள் சூட்டிக்கொள்கிறீர்கள்? எங்கள் நாட்டில் உள்ளது போல யியோங், யியுன், ஹையோன், ஹயோ ஜியாங் என்பது போன்று எளிமையான பெயர்களை நீங்கள் ஏன் சூட்டிக் கொள்வதில்லை? உங்கள் முகங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கின்றன எப்படி உங்களுக்குள் அடையாளம் கண்டு கொள்கிறீர்கள் என்பது எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யமாக இருக்கிறது. அதுவுமில்லாமல் நீங்கள் அணியும் ஆடை மிகக் கவர்ச்சியாக இருக்கின்றது. பெண்களின் இடுப்பு தெரிவது எங்கள் பண்பாட்டில் மிகவும் ஆபாசம் என எங்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மைதானத்தில் இல்லாத பெரும்பாலான நேரங்களில் உங்கள் அணியில் உள்ள எல்லோரும்  saree  என்கிற பெயரில் இடுப்பு தெரிகிற மாதிரியே அணிகிறீர்கள்.     

யியோங் என்கிற எனது பெயருக்கு ‘தைரியமானவள்’ என்று எங்கள் கொரிய மொழியில் பொருள். ஆனால் தைரியம் என்ற சொல்லே எங்கள் நாட்டில் அர்த்தமற்றது இப்பொழுது நான் எடுத்திருக்கும் முடிவு என் பெயருக்கு ஏற்றாற்போல் தைரியமான ஒன்றுதான். நான் வசித்த பியாங்யோங் நகரத்துக்கு வெளியே செல்வதும், உள்ளே வருவதும் அத்தனை எளிதான விஷயம் இல்லை. எங்கள் கொரிய மக்கள் குடியரசில் வாழும் பிற நகர அல்லது கிராம மக்கள் கூட அனுமதி சீட்டின்றி பியாங்யோங் நகரத்துக்கு உள்ளே வர முடியாது. எங்கள் தேசத்தை நீங்கள் வடகொரியா என அழைக்கிறீர்கள் என்பதே நான் ஆசிய அத்லட்டிக் விளையாட்டு போட்டிகளுக்காக இந்தியாவின் புவனேஸ்வர் நகருக்கு வந்தபொழுதுதான் தெரியும்.

ஓடுவது எனக்குப் பிடித்தமான ஒரு விஷயம். என் இயல்பில் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு ஓடுவதில் அவ்வளவு இஷ்டம் எனக்கு. பனி பூத்தாற்போல் உடல் முழுதும் வியர்வைத் துளிகள் அப்பும்போதுதான் ஒரு தாயைப் போல காற்று வந்து மெல்லத் தழுவி குளிர்விக்கும் இல்லையா? நீயும் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை என்பதால் என் உணர்வு உனக்கு புரியும். ஒரு குதிரையைப் போல எதிர்படும் இடர்களைத் தாண்டி ஓடும் ஸ்டீபிள் சேஸ்தான் எனக்குப் பிரியமான ஒன்று. கும்சூசன் நினைவகம்தான் நான் பார்த்ததிலேயே மிக அழகான இடம். எங்கள் பெருந்தலைவர் கிம்-இல் சுங் இறந்த பிறகு அவரது நினைவாக கட்டப்பட்டது. எங்கள் பாட்டி சொல்வார் அரசர்களுக்கு மரணமே இல்லை என்று. கொரிய மக்கள் குடியரசின் அசைக்க முடியாத அரசராக இருந்தவர் அவர்தான். அவர் இறந்து போனதாக சொல்லப்பட்டபோது எங்கள் தேசத்தில் எவருமே அதை நம்பவே இல்லை. இன்னமும் அவர் உயிரோடு எங்கோ இருந்துகொண்டு கொரியாவை ஆள்கிறார் என்று நம்புபவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று சொன்னால் நீ ஒப்புக் கொள்வாயா?

கும்சூசன் நினைவகத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. வெண்ணிற ஐஸ்கிரீம் ஒன்றில் செய்து வைத்தது போல் அத்தனை அழகு. ஆனாலும் உலகில் எனக்கு மிகப் பிடித்தமான இடம் மைதானம்தான், வெள்ளைக் கோடுகள் இடப்பட்ட தடங்களின் வழியே ஓடுவது எத்தனை உவப்பானது. எல்லையைத் தாண்டி கடந்து, இரைக்க இரைக்க ஓடி வந்த பாதையைத் திரும்பி பெருமிதமாக பார்ப்பது எத்தனைக் களிப்பானது. உளவியல் ரீதியாகவும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தடத்தில் வாழ்பவளுக்கு எல்லையைக் கடப்பது ஒரு சுதந்திர உணர்வைத் தரும் என நினைக்கிறேன் அதனால்தான் எனக்கு ஓட்டப்பந்தயம் பிடித்தமானதாக இருக்கிறதோ? ஆனால் துரத்த துரத்த ஓடுவது துயர் மிகுந்தது, வலி தருவது மலர்.. நீயும் கூட அந்தத் துயரை அனுபவித்தவள் என்பதால்தான் இந்தக் கடிதத்தை உனக்கு எழுதத் தீர்மானித்தேன். நான் எல்லையைக் கடந்து ஓடப்போகிறேன் மலர்.. எனது தேசத்தின் எல்லையைக் கடந்து ஓடப்போகிறேன்...

என் மண்ணிலிருந்தும், உறவுகளிடமிருந்தும் என் தேசத்தை விட்டும் போவதற்கு நான் எடுத்த முடிவு இரக்கமற்றதாக இருக்கலாம். ‘வீடு திரும்புதல்’ என்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால் என்னைப் பொருத்தவரை அது குலை நடுங்கச் செய்யும் விஷயம். என்னால் கற்பனை செய்யவே முடியாத கொடூரங்கள் எனக்காக அங்கு காத்திருக்கின்றன.

என்னுடைய கடந்த கால வரலாற்றை உனக்கு சொல்ல வேண்டும். எங்கள் ஊரில் காற்றுக்கும் காதுகள் உண்டு. அதுவும் அவை அதிகாரத்துக்கு விசுவாசமான காதுகள். இரவு படுக்கையில் அன்னியோன்யமான தம்பதிகள் கூட ‘பெருந்தலைவரையோ, அன்புத்தலைவரையோ’ புகழ்ந்து பேசிவிட்டுத்தான் தங்களுக்குள் ஆசை வார்த்தைகளை பரிமாறிக் கொள்வார்கள். அவ்வளவு பயம் எங்களுக்கு.. அடிப்படை மனித உணர்வுகளில் அச்சம் என்கிற  ஒன்று மட்டும்தான் எங்கள் குருதியில் ஏற்றப்பட்டிருக்கிறது.

அரசையும், அரசர்களையும், அதிகாரிகளையும் புகழ்ந்து, புகழ்ந்து பேச மட்டுமே எங்களுக்கு சுதந்திரம் உண்டு. எங்கள் தேசத்தில் எங்கு திரும்பினாலும் அவர்களது படங்கள்தான்.. அவர்களது புகழ் பேசும் வாசகங்கள்தான்.. பதாகைகள்..பாலங்கள்.. கட்டடங்கள் என எல்லா இடங்களிலும் அவர்களே நீக்கமற நிறைந்திருப்பார்கள்.

ஜப்பானின் பிடியிலிருந்து விடுபட்ட காலத்திலிருந்து பெருந்தலைவர் கிம் இல் சுங்கின் குடும்பத்தின் ஆட்சியின் கீழ்தான் எங்கள் நாடு. எங்கள் தேசம் தனித்துவமாக உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கவேண்டும் என மெய்யாக விரும்பியவர்தான் அவர். ஆனால் அவரது அடிப்பொடிகளும், குடும்பத்தினரும் அதிகாரங்களைக் கையில் எடுத்த பிறகு ஒரு இருண்ட குகைக்குள் பாறைகளின் இடுக்குகளில், தலை சிக்கிய எலி போல நாங்கள் ஆனோம். அவர் உருவாக்கிய ‘ஜூச்சே’ சித்தாந்தத்தை எதிர்த்தவர்கள் எல்லாம் காணாமல் போனார்கள். மர்மமான முறையில் இறந்து கிடந்தார்கள். உறுப்புகள் சிதைந்து, மனநிலை பிறழ்ந்து அரசின் பைத்தியக்கார விடுதிகளில் செத்தொழிந்தார்கள்.

‘ஜூச்சே’ சித்தாந்தம் என்றால் என்னவென்று கேட்கிறாயா? பெயர்கள் என்பதெல்லாம் வெறும் அடையாளம்தான். உலகமெங்கும் அதிகார வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் ஒரே சித்தாந்தம் ‘எல்லா இடங்களிலும் அதிகார துஷ்பிரயோகம்’ அதனை எதிர்ப்பவர்களை பூண்டோடு அழித்தல் என இரண்டே விதிகளோடு இயங்குவதுதான். அதற்கு தேசத்துக்குத் தேசம் வித்தியாசமான பெயர் உண்டு. எங்கள் நாட்டில் ‘ஜூச்சே’ என்று பெயர் அவ்வளவுதான்.

சில நாட்களுக்கு முன், அனுமதியின்றி அயல் நாட்டு எண்ணுடன் தொடர்பு கொண்டு பேசியபடியால் ஒருவர் காணடிக்கப்பட்டார். ஹாலிவுட் படம் பார்த்ததால் ஒரு பெண் கொல்லப்பட்டாள். 

இப்பொழுது கூட  அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு மந்திரி தூங்கிவிட்டார் என்ற காரணத்துக்காக பீரங்கி முனையில் வைத்து கொன்றுவிட்டதாக சொல்கிறார்கள். இல்லையில்லை அவர் உயிரோடு இருப்பதாக அவர் தோன்றும் காட்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். எங்கள் நாட்டில் இருப்பது ஒரே ஒரு தொலைக்காட்சிதான் அதுவும் கூட அரசாங்கத்தின் பிடியில்.. அதை நம்ப வேண்டும் என்று அரசு கட்டளை இட்டால், நாங்கள் நம்புவோம் அவ்வளவுதான்..

‘சோங்பன்’ என்கிற சமூகப் பிரிவு உங்கள் நாட்டில் இருக்கிறதா? ஆனால் அப்படி ஒரு சபிக்கப்பட்ட மக்கள் பிரிவு எங்கள் நாட்டில் உண்டு. அதாவது என்றாவது ஒரு நாள் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு துரும்பை அசைத்துவிட முயற்சித்தால் அதனை அதிகாரிகள் சந்தேகப்படும்படி செய்திருந்தால். அவர்கள் தேச விரோதிகள். அதன் பிறகு அவர்களின் மூன்று தலைமுறை பிள்ளைகளும் கூட குற்றவாளிகள்தான். அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. அந்த சந்ததியினர் மூன்றாவது தலைமுறையில் அதிகாரிகள் திருப்தியடையும் வகையில் நடந்து கொண்டால் ஒரு வேளை அவர்களுக்கு அரசின் தடைகள் நீக்கப்படும். மறைமுகமாக சொல்வதென்றால் அவர்களின் மூன்று தலைமுறையினர் கொத்தடிமைகள்தான். அதிகாரிகளின் உடல்பசி, மமதை, கோமாளித்தனங்கள் எல்லாவற்றுக்கும் இரையாக படைக்கப்பட்டவர்கள் அவர்கள். என்னுடைய தாத்தா ‘ஜூச்சே’வை எதிர்த்து தன்னுடைய குரலை உரக்க எழுப்பியவராம்.. ஆகையினால் எங்கள் குடும்பத்தினர் ‘சோங்க்பன்’. ரேஷனிலிருந்து எஜுகேஷன் வரை எங்களுக்கு எல்லாமும் மறுக்கப்படும்.

இதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். சோங்க்பன் வீட்டு பெண்களை சூறையாடும் கொடுமையை என்னவென்று சொல்ல.. யுத்தம் என்று வந்தால் இந்த நாட்டுக்கும் அந்த நாட்டுக்கும் இடையில் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். அல்லது இந்த குழுவுக்கும் அந்தக் குழுவுக்கும் இடையில் என்பதும் பொய்.. உண்மையில் எல்லா யுத்தங்களும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படுபவைதான். பெண்களுக்கெதிரான வன்முறைகளை நிகழ்த்துவதில்தான் வெற்றியின் வரலாறு எழுதப்படுகின்றது.

அப்படியாக என்னைச் சுற்றி வட்டமிட்ட பருந்துகளின் பசிக்கு அம்மா இரையானாள். இளமையும் அழகும் அவளிடம் எஞ்சியிருந்ததால் என்னை விட்டுவிடும் படி கெஞ்சிய அவளை சிதைத்துவிட்டுத்தான் அவர்கள் நகர்ந்தார்கள்..என் உடலில் கட்டிகள் இருப்பதாக அவர்களிடம் பொய் சொல்லி என்னைக் காப்பாற்றினாள். இப்பொழுது என்னை என் ஓட்டப்பந்தயத் திறமை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. நான் தேசத்தின் சார்பாக ஒடுகிறவள் என்பதால் விட்டு வைத்திருக்கிறார்கள். எங்களுடன் வந்தவர்களில் ஹயோ ஜியாங் மட்டும் வெள்ளிப் பதக்கம் வாங்கியிருக்கிறாள். அவள் தப்பிவிடுவாள்.. எஞ்சிய நாங்கள் என்ன கதிக்கு ஆவோம் என்று எங்கள் தேசத்துக்கு போனால்தான் தெரியும்.

நீயும் கூட பேசிக்கொண்டிருக்கையில் உங்கள் ஊர்..  அது என்ன பெயர் .. ம்ம்.. ஸ்ரீலங்காவில் வட்டுக்கோட்டைதானே..அங்கு ஓடும் ஏதோ ஒரு ஆறு.. என் மனதில் அந்தப் பெயர் நழுவிச் சென்றுவிட்டது.. ‘அந்த ஆறுதான் எங்கள் சகோதரி என்று நீ சொன்னது மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. அவளிடம் சென்றுதான் நாங்கள் அழுவோம். அவளுக்கு மட்டுமே எங்கள் கண்ணீரின் வெம்மைத் தெரியும்’ என்றாய். ஓ.. இப்பொழுது நினைவுக்கு வருகிறது அந்த ஆற்றின் பெயர் வழுகை நதி என்றதாக ஞாபகம்.. நீங்களும் எங்களைப்போலவே சபிக்கப்பட்ட இனத்தில் பிறந்தவர்கள் என்பது உன்னிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான் புரிந்தது. யாரோ காடையர்கள் உங்களையும் சூறையாடிய துயரக்கதையைக் கேட்டதும் ரத்தம் கொதித்தது..     

வேறு வழியில்லாமல் நான் சீன எல்லைக்கு உள்ளே நுழையும் யாலு நதி கூடவே சென்று தப்பிவிட முடிவு செய்துவிட்டேன். நீ சொன்ன பிறகு நதிகளை நம்பவே விரும்புகிறேன். யாலு நதியும்  எங்கள் சகோதரி மாதிரிதான் அவள் என்னை நிச்சயம் கைவிட மாட்டாள். என் போன்ற பலரை அவள்தான் தேச எல்லையை விட்டு அழைத்து சென்று இருக்கிறாள்.

எங்களுக்காக குரல் கொடுக்க எவருமேயில்லை என்று கதறி அழுதாய்.. நீ எங்களின் குரலாய் இரு. உனக்குத்தான் எங்களின் அவலம் புரியும். ஒரு வேளை என் முயற்சிகள் தோற்றுப் போய்விட்டால், இந்தக் கடிதமே உலகத்தின் கண்களுக்கு சாட்சியாக இருக்கட்டும் அதற்காகத்தான் இந்தக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். நல்ல வேளையாக நம் இருவருக்கும் ஆங்கிலம் தெரியும்.

உனக்கு மிக அழகான குரல். உனது மொழியில் நீ பாடிய பாடல் ஒன்று எனக்கு புரியாவிட்டாலும். கேட்பதற்கு இனிமையாக இருந்தது. எனக்கும் கூட பாட ஆசையாக இருந்தது. எங்கள் நாட்டில் எவரும் அவ்வளவு சுலபத்தில் பாடிவிட முடியாது. அரசை புகழ் பாடும் பாடல்களை, அதிகாரத்துக்கு நெருக்கமானவர்கள் மட்டும் பாடுவார்கள். அந்தப் பாடல்களே எங்கும் ஒலிக்கும்.

ஆனால் நீ பாடிய பாடலின் அர்த்தத்தை நீ உணர்ச்சிகரமாக சொன்னபோது எனக்குமே அந்தப்பாடலை இன்னொரு முறை கேட்க வேண்டும் போல் இருக்கிறது.

‘எச்சாமம் வந்து எதிரி அழைத்தாலும்... குடியிருந்த கோபத்தை மெச்சுகிறேன் மெச்சுகிறேன்’ என்று நீ முடித்ததாக நினைவு.. கோபத்தை மெச்ச வேண்டும் என்று எழுதிய அந்த கவிஞன் எத்தனைப் பெரிய சிந்தனையாளனாக இருக்க வேண்டும்..

உன் பாடல் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது மலர்.. அந்தப் பாடலை என்னோடு நான் அழைத்துச் செல்கிறேன். மீண்டும் உன்னை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமெனில் அப்பொழுது அந்தப் பாடலை உன்னிடம் ஒப்படைக்கிறேன். எனக்காக இன்னொரு பாடலுடன் காத்திரு..

                            இப்படிக்கு உன் துயரின் துணையான சகோதரி..

                                     யியோங்...

 

அந்தக் கடிதத்தை ஆங்கில மொழியிலிருந்து மொழி பெயர்த்து  கொரிய மொழியில் சொல்லி முடித்தான் அந்த அரசு அதிகாரி

“நல்லது .. இந்தக் கடிதத்தை முதலில் யார் கண்டுபிடித்துத் தந்ததாக சொன்னீர்கள்..? “

“அணியின் மருத்துவப் பரிசோதகர்”

“அவர் தொடர்ந்து அப்பணியில் இருக்கட்டும். டீமின் கோச் எங்கே?”

“இதோ இங்கிருக்கிறேன் அன்புத் தலைவரே..”

“இனி இருக்க வேண்டியதில்லை.. கொரிய மக்கள் குடியரசு வாழ்வோர் பட்டியலிலிருந்து இவரை நீக்கி விடலாம்”

“ அன்புத்தலைவரே.. அன்புத்தலைவரே..“ அவரது கதறல்கள் யார் காதிலும் விழவில்லை. அவரை இழுத்துக் கொண்டு சென்றனர்.

“ அவரது ஆவணங்கள் நீக்கப்படும்..” தலைமை நிர்வாக அதிகாரி.

“ எல்லை கண்காணிப்புக்காக நாம் நியமித்த அதிகாரி ..?..”

“ அவரும் வெளியில் உங்கள் ஆணைக்காக காத்திருக்கிறார்..”

“ ஒரு சாதாரண பெண். அவள் பியாங்க்யோங் எல்லையைத் தாண்டும் போது எதை பார்த்துக் கொண்டிருந்தான்? கண்ணிருந்தும் குருடன்.. அவனுக்கு கண்கள் தேவையா?”

“ எடுத்துவிடலாம் அன்புத்தலைவரே..”

“ எது வரை சென்றிருப்பாள்?”

“இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் போட்டிகளுக்கு போகும் முன் அவளது காதணியில் தொடர்பு கருவி பொருத்தி இருக்கிறோம்.. அதனை நம் அரசு அதிகாரிகள் சரியாக கண்காணித்து வருகிறார்கள். தற்சமயம் அவள் சினுஜூ நகருக்கு அருகில் அம்டோக் நதியின் ஓரம் நடந்து சென்று கொண்டிருக்கிறாள். அவள் சீன எல்லையைத் தொட வேண்டும் என்றால் இன்னும் 1500 கி.மீ செல்ல வேண்டும். நமது தேடுதல் படையினர் சினுஜு நகருக்கு சற்று முன்னதாக சென்று கொண்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கு அவள் இருக்கும் இடத்தைப் பற்றி தகவல் தெரிவித்தாகி விட்டது.”

“அவள் கிடைத்தால் கைப்பற்றியவர்கள் தங்கள் இஷ்டம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.. ஆனால் அவளின் ஒரு சதைத் துண்டு கூட கிடைக்கக் கூடாது. இது என் ஆணை ..ஆமாம் அவள் யாருக்கு கடிதம் எழுதி இருக்கிறாள்?”

“அந்தப் பெண் ஒரு ஸ்ரீலங்கா குடிமகள்.. ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை. அவள் கைக்கு இந்தக் கடிதம் கிடைக்கும் முன் ஓட்டப் பந்தய அணியின்  மருத்துவ ஆலோசகர் கண்டெடுத்துவிட்டார். வெளி உலகம் அறிய வாய்ப்பில்லை அன்புத்தலைவரே..”

அவ்வளவுதான் சபை கலைந்தது.

 

யியோங், யாலு நதியின் கரைகள் வழியே சென்று கொண்டிருந்தாள். இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். நட்சத்திரங்கள் சற்று தூரமாக மின்னிக் கொண்டிருந்தன. சுற்றிலும் எவரும் தென்படவில்லை. உரத்த குரலில் “ நட்சத்திரங்களே.. நட்சத்திரங்களே நீங்கள் என்னைத்தான் கண்காணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்கள் ஒளியிலிருந்து ஒவ்வொருவரும் சிறு துளி கொடுங்கள். என் வாழ்க்கையை ஏற்றிக் கொள்கிறேன். நான் சீனாவின் ஜியான் நகர் செல்லும் வரை எனக்கு துணையாக வாருங்கள்” என்றாள் குதூகலமாக.. ஜியான் நகர் அவளிடமிருந்து மிகத் தள்ளி.. மிகத் தள்ளி இருந்தது. தேடுதல் படை அவளை மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தது...

 

 

  

-    நெய்வேலி பாரதிக்குமார்

   

 

 

 

   

  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...