திங்கள், 24 நவம்பர், 2025

கனவில் ததும்பும் நதி 8

 

கனவில் ததும்பும் நதி 8

            நெய்வேலி பாரதிக்குமார்

 

ந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதன்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்திருக்கிறது.




Catches win matches என்பார்கள்

செமி ஃபைனலில் ஆஸ்திரேலியா அணியின் அலிசா ஹீலி இந்திய அணியின்  ஜெமிமா ரோட்ரிக்ஸ் இன் கேட்சை கோட்டைவிட்டபோது ஜெமிமாவின் ஸ்கோர் 82. அதன் பிறகு ஜெமிமா 127ஐ தொட்டதுதான் இந்திய அணிக்கு வெற்றியைத் தந்தது. இறுதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த லாரா வோல்ட்வார்ட் அவுட் ஆக்கிய அமன்ஜோத்  பிடித்த அபாரமான கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது மகளிர் அணிக்கு வாழ்த்துகள்...

இந்த உலகக் கோப்பையை நியாயமாக மிதாலிராஜ்-க்குத்தான் சமர்ப்பணம் செய்ய வேண்டும். பெண்கள் கிரிக்கெட்டின்  சச்சின் டெண்டுல்கர்  என்று புகழப்படும் மிதாலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்  7800 ரன்களுக்கு மேல் குவித்தவர். இரண்டு முறை உலகக் கோப்பை போட்டிகளில் இறுதிச் சுற்று வரை தலைமைத் தாங்கி அழைத்துச் சென்றவர். இன்றைக்கு இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பெரிய கவனம் கிடைப்பதற்கு மிதாலியின் பங்களிப்பு மிக முக்கியமானது

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிக அதிக ரன் குவித்தவர் என்கிற பெருமையை பல வருடங்கள் தன் வசம் வைத்திருந்த (214) மிதாலி, அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக பத்தாயிரம் ரன்களைக் கடந்த ஒரே இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனை. கிட்டத்தட்ட 17 வருடங்கள் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்திருக்கிறார். இருபது வருடங்கள் கிரிக்கெட் விளையாடி தனது நாற்பதாவது வயதில்தான் ஓய்வை அறிவித்தார்

மகளிர் கிரிக்கெட் அணிக்கு நிதி ஒதுக்க உரக்க குரல் கொடுத்தவர். அர்ஜுனா, பத்மஸ்ரீ, கேல் ரத்னா என பல விருதுகள் குவித்தவர். அவரது கிரிக்கெட் வாழ்க்கைக் கதை இந்தியில் சபாஷ் மித்து என்கிற பெயரில் வெளியாகி இருக்கிறது..

 டாப்சிதான் மிதாலிராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிறுவயது மிதாலியாக இனாயத் வர்மா நடித்திருக்கிறார். இரண்டு பேருமே ஒரு நல்ல கிரிக்கெட் பயிற்சியாளரிடம் முறையாகப் பயிற்சி பெற்று நடித்திருக்கிறார்கள் என்பதை கிரிக்கெட் விளையாட்டு பற்றி நன்கு அறிந்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

 மிதாலிராஜ்-ன் பூர்வீகம் தமிழ்நாடுதான். நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள். அவரது தந்தை துரைராஜ் இந்திய விமானப்படையில் பணியாற்றியவர் என்பதால் அடிக்கடி பணி மாறுதல் இருக்கும். அதன் காரணமாக மிதாலிராஜ் பிறந்தது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர். வளர்ந்தது எல்லாம் செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத். தாயார் பெயர் லீலாராஜ்

மிதாலிக்கு பயிற்சி அளித்தவர் சம்பத். அவருடைய நேர்த்தியான, கடுமையான பயிற்சிதான் மிதாலியின் உயரத்துக்கும் வெற்றிகளுக்கும் முதன்மையான காரணம். மிதாலி உலகக்கோப்பை போட்டிகளுக்காக இங்கிலாந்தில் ஆடிக்கொண்டிருக்கும்போது சம்பத் ஒரு சாலைவிபத்தில் இறந்தது மீளமுடியாத துயரத்தை மிதாலிக்குத் தந்தது.

   மிதாலி இந்திய அணியில் சேர்ந்து சில தடைகளை எதிர்கொள்ளும்போது அவருக்கு ஆதரவாக இருந்தவர் சாந்தா  ரங்கசாமி. இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்த பெருமைக்குரிய சாந்தா ரங்கசாமி சென்னையைச் சேர்ந்தவர். இந்த ஆண்டு (2025) உலகக்கோப்பை பெண்கள் கிரிக்கெட் இறுதி ஆட்டம் நவி மும்பையில் நடைபெற்ற போது அரங்கில் இருந்து அணியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.

 சாந்தா ரங்கசாமி மற்றும் நூதன் கவாஸ்கர் (கவாஸ்கரின் இளைய சகோதரி) ஆகியோர் முதன்முதலில் இந்திய அணிக்காக ஆடியபோது ஸ்பான்சர்கள் எனப்படும் கொடையாளர்கள் கிடையாது. மொத்தமே நான்கு மட்டைகள்., நான்கு கால் தடுப்புகள்தான். ஆகையால் முதலில் களத்தில் இறங்குபவர் மட்டை மற்றும் கால் தடுப்புகளை நான்காம் ஆட்டக்காரர் அணிய வேண்டும். அப்படியாக சுழற்சி முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அன்றைய சூழலில் இருந்து இன்றைய மகளிர் கிரிக்கெட் அணி வெகுவாக வளர்ந்துவிட்டது. இன்று மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஹாட் ஸ்டாரில் ஐந்து கோடி பார்வையாளர்களுக்கு மேல் பார்த்திருக்கிறார்கள். உலகக் கோப்பையும் கிடைத்துவிட்டது. இனி புது வேகமெடுத்து பறக்கும். இந்திய மகளிர் அணியினர் முதன்முறையாக பெற்ற இந்த உலகக்கோப்பையை மிதாலியின் கைகளில் தந்து அவருக்குப் பெருமை சேர்த்தது பாராட்டுக்குரியது. இனிவரும் தலைமுறைக்கு மிதாலி ஒரு உத்வேகமான முன்னுதாரணம் என்றால் அது மிகையில்லை.

கிரிக்கெட் போன்ற கோடிக் கணக்கில் பணம் புழங்கும் விளையாட்டுத் துறையிலேயே பெண்கள் அணிக்கு இத்தனை வருடங்கள் போராடி ஒரு உயரத்தை அடைய வேண்டி இருக்கிறது. எனில் மற்ற விளையாட்டுகளில் எத்தனை பெரும் போராட்டங்களை சந்தித்து சாதனை இலக்குகளை அடைந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கையில் கண்ணகி நகர் கபடி வீராங்கனை கார்த்திகா சாதித்தது இமாலயச் சாதனைதான்.



சபாஷ் மித்து திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது தமிழிலும் உள்ளது. அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். இயக்கம் ஸ்ரீஜித் முகர்ஜி.

 

 

நிஜமும் நிழலும்....



ண்மையில் நந்தா பெரியசாமி இயக்கிய திருமாணிக்கம் திரைப்படத்தைக் காண நேரிட்டது. குமுளியில் லாட்டரி சீட்டு விற்கும் மாணிக்கத்தின் கடைக்கு வரும் பெரியவர் தான் வாங்க விரும்பியச் சீட்டுகளைத் தேர்வு செய்தபின், தன்னிடம் உள்ள ஐநூறு ரூபாய் தொலைந்து போனதை அறிந்து எடுத்துவைத்த லாட்டரி சீட்டுகளைத் திரும்பவும் கடைக்காரர் மாணிக்கத்திடமே தந்துவிட்டு தன் ஊரான இடுக்கிக்குச் செல்ல திரும்புகிறார். மாணிக்கம் அவரிடம் இந்த சீட்டுகள் உங்களுடையதுதான். நான் பத்திரமாக வைத்திருக்கிறேன் அடுத்த முறை குமுளிக்கு வரும் போது பணம் தாருங்கள்  என்று சொல்கிறார். அவ்வளவுதான் இந்த வாக்கு மட்டுமே சாட்சி. உண்மையில் அந்தப் பெரியவர் அந்த சீட்டுகளை மறந்தும் போகிறார், அப்படி எடுத்துவைக்கப்பட்ட சீட்டில் ஒன்றுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழுகிறது. மாணிக்கம் நினைத்தால் தன்னிடம் விற்காமல் எஞ்சிய சீட்டுகளில் ஒன்றுக்குத்தான் பரிசு விழுந்ததாகச் சொல்லி அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் தன்னுடைய வாக்குதான் மாபெரும் சாட்சி என்று அந்த சீட்டை பல்வேறு தடைகள், சூழ்ச்சிகள் தாண்டி அந்த சீட்டைப் பெரியவரிடம் கொண்டு சேர்க்கிறார் மாணிக்கம். ஒருவரிச் செய்தியை அழகானத் திரைக்கதை மூலம் நிறைவானத் திரைப்படமாகத் தந்திருக்கிறார் நந்தா பெரியசாமி. அறம் சார்ந்த எண்ணங்களை, அறம் சார்ந்த மனிதர்களை உருவாக்குவதுதான் கலை இலக்கியங்களின் மகத்தானப் பணி. அதை சமூகப் பொறுப்புணர்வுடன் செய்திருக்கிறார் நந்தா. இந்தப் படத்தைப் பார்க்கிற பலருக்குள்ளும் ஒரு எண்ணம் தோன்றியிருக்கும் ‘இதெல்லாம் சினிமாவுலதான் நடக்கும்.. நிஜத்துல நடக்குமா” என்பதுதான் அது... ஆனால் நிஜத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் மனித சமுதாயத்தின் மீது  மீது பெரும் நம்பிக்கையை விதைக்கிறது. 

கேரளத்தில் உள்ள மலபாரில் ஹரிதா என்றொரு பெண் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துணி துவைக்கும் வேளையில், தனது ஒன்றரை பவுன் எடையுள்ள தங்க வளையலை கழட்டி வைத்த போது ஒரு காகம் அதனை தூக்கிக் கொண்டு பறந்தது. காக்கா தூக்கிச் சென்ற நகையை தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. தங்கம் தொலைந்துவிட்டதாக நினைத்து அவர்கள் நம்பிக்கை இழந்தனர். (காகம் கூட பேராசையில் வடை திருடுவதிலிருந்து அடுத்தக்கட்டமாகத் தங்கத்தைத் திருடுவதுதான் காலம் கெட்டுப்போச்சு என்கிற கூற்றுக்கு ஆதாரமோ?)



மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திருக்கலங்கோடு என்னும் வேறொரு ஊரில்  தென்னை ஏறும் தொழிலாளியான அன்வர் சதாத். வீட்டில் மாம்பழம் பறிக்க ஏறியபோது,  மாமரத்தின் மேலே காகத்தின் கூட்டிலிருந்து தங்க நகை கீழே விழ, கீழே மாங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த அன்வர் சதாத் மகள் அதை எடுத்து தந்தையிடம் கொடுக்க, அன்வர் சதாத், திருக்கலங்கோடு பொது நூலகத்திற்குச் சென்று தகவல் தெரிவித்து, அதன் அறிவிப்பு பலகையில் விளம்பரப்படுத்தியதை அறிந்து, நகை உரிமையாளர் ஹரிதா வளையல் வாங்கிய பில்லையும் அதை அணிந்திருந்த போட்டோவையும் காட்டி தங்க வளையலை பெற்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன ஒன்றரை பவுன் நகையை யாரும் உரிமை கொண்டாட வராத நிலையில், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் சதாத் அறம் என்ற சொல்லுக்கு ஒரு வாழும் உதாரணம்.

மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமாலினி. இவர் தனது மகளுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி, சென்றுள்ளார். கோயிலில் இருந்து செல்வமாலினி வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றபோது, மதுரை வக்கீல் புதுத்தெரு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. இதனை ஓரமாக தள்ளி விடுவதற்காக தனது காலால் எட்டி உதைத்தபோது சாக்குமூட்டையில் ரூ.500 பணக்கட்டு இருப்பது போல தெரிந்தது.

பின்னர் சாக்குமூட்டையை பிரித்துப்பார்த்தபோது 500 ரூபாய் கட்டுகள் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இருந்துள்ளது. பின்னர் செல்வமாலினி அந்த சாக்கு மூட்டையை விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்று ஒப்படைத்துள்ளார். சாக்கு மூட்டையில் கிடந்த பணம் யாருடையது என்பது குறித்தான விசாரணையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களிலும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் நேர்மைத் தவறாமல் ஒப்படைத்த இருவருமே பொருளாதார ரீதியாக மிகவும்  பின்தங்கியவர்கள். செல்வமாலினி வீட்டு வேலை செய்பவர். அன்வர் சதாத் தென்னை மரத்தொழிலாளி. எல்லாம் வாய்க்கப்பெற்றவர்கள் பணத்தின் மீது ஆசை கொள்ளாமல் நேர்மையாக நடப்பதைக் காட்டிலும், பணத்தேவை உள்ள எளிய மனிதர்கள் அறத்தின் பாதையில் தங்களை செலுத்துவது எத்தனை உயர்வானது..    

வாசிப்பின் வாசல்

ழுத்தாளர், கவிஞர் கட்டுரையாளர் என்று மட்டுமே என்னால் அறியப்பட்ட அன்பிற்கினிய நண்பர் இரத்தின.புகழேந்தி  மிகச்சிறந்த மிதியுந்து வீரர் என்பதை அவரது பசுமைப் பயணம் என்கிற நூல் வழியாகத்தான் அறிந்தேன்.



பிலோ இருதயநாத் என்றொரு மானுடவியலாளர் இருந்தார். தென்னகப் பழங்குடியினரை நேரில் சந்தித்து அவர்களை ஆவணப்படுத்தியப் பெருமை அவருக்கு உண்டு.. அதுவும் மலைகள் காடுகள் என பல கடினமானப் பாதைகள் அனைத்தையும் தனது மிதிவண்டியில் ஒற்றை ஆளாகப் பயணித்து தகவல்களை சேகரித்தவர். அரசோ அமைப்போ எதனுடைய உதவியுமின்றி தன்னுடைய சொந்தச் செலவில் உழைப்பில் தனிப்பட்ட ஆர்வத்தில் அந்தப் பணியைச் செய்தவர். அவரைப் பற்றி என்னுடைய பாதை தந்த பயணிகள் நூலில் எழுதி இருக்கிறேன்.

பலசமயம் சென்னைப் புறவழிச்சாலையில் செல்லும்போது தனித்துவமான ஆடை, தலைக்கவசம் அணிந்து பலர் மிதிவண்டிகளை ஓட்டிச்செல்வதைப் பார்த்திருக்கிறேன். அது ஒரு பந்தயம் போலத் தெரியாது. சக நண்பர்களுடன் ஒரு மகிழ்வான பயணம் போலத் தோன்றும். ஒரு வகையில் அது உண்மைதான் என்பதை புகழேந்தி அவர்களின் பசுமைப் பயணம் நூலை வாசிக்கையில் உணர்ந்தேன்.

புகழேந்தி இந்த நூலைத் தந்து பல நாட்களாகிவிட்டன. முயன்றால் ஒரு மணி நேரத்துக்குள் வாசித்துவிடலாம். அவரது ஒவ்வொரு மிதியுந்துப் பயணம் பற்றி  நாட்குறிப்புகள் போல மிகச் சுருக்கமான கட்டுரைகள் ஆனால் ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் தரும் தகவல்கள், அனுபவங்கள் என் அவரது ஒவ்வொரு மிதியுந்துப் பயணம் பற்றி..  னை அவை பற்றி தேட வைத்துவிட்டன. குறிப்பாக அவரது மூன்றாவது கட்டுரையில் BRM மற்றும் SR என்று குறிப்பிடுகிறார். எப்படியாவது SR ஆக வேண்டும் என்று தன் ஆசையை சொல்லிவிட்டு  அப்படி என்றால் என்ன என்று அறியும் ஆசையைத் தூண்டிவிட்டு அவர் தன் மிதிவண்டியில் ஏறி பறந்துவிட்டார். நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு தேடத்தொடங்கினேன். 



BREVETS DE RANDONNEUR MONDIAUX (BRM) என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளை வெற்றிகரமாகக் கடந்து, குறிப்பிட்ட கால வரம்புகளுக்குள் முடிக்கப்பட வேண்டிய நிலையான தூரங்களின் சவாரிகள் ஆகும். உலகளவில் BRMகள் Audax Club Parisien (ACP) என்கிற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.

BRM-ன் விதி என்பது வரையறுக்கப்பட்ட தூரத்தை, வரையறுக்கப்பட்ட நேரத்துக்குள் தீர்மானிக்கப்பட்ட சாலை வழியாக சென்றடைவது. உதாரணமாக 200 கி.மீ தூரத்தை 13.5 மணி நேரத்துக்குள் சென்றடைவது. யாருடனும் போட்டி இல்லை. தனக்குத்தானே போட்டியாளர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.   

சூப்பர் ரேண்டன்னூர் (SR) என்பது ஒரு காலண்டர் வருடத்திற்குள் தொடர்ச்சியான BRMகளை முடிக்கும் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு ACP வழங்கும் ஒரு பட்டமாகும். இந்தத் தொடரில் நான்கு சுருக்கமான தூரங்கள் உள்ளன: 200 கிமீ, 300 கிமீ, 400 கிமீ 600 கிமீ, மற்றும் 1000 கி.மீ முறையே 13.5, 20, 27 40 மற்றும் 70 மணிநேர வரையறுக்கப்பட்ட நேர அளவுகளுடன். சென்று முடிக்க வேண்டும். ஆனால் கால்ண்டர் வருடம் என்பது ஜனவரியில் தொடங்குவது இல்லை.

நவம்பர் 1 தொடங்கி அடுத்த அக்டோபருக்குள் இந்த இலக்குகளை முடித்தால் ACP அமைப்பின் சான்றிதழ் மற்றும் பதக்கம் கிடைக்கும். இதில் என்ன கொடுமை என்னவென்றால் ACP இணையதளத்தில் பதிவுக் கட்டணம், பயணச்செலவு, இடையில் மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கான தொகையையும் சேர்த்து. பங்கேற்பாளர் தன் சொந்த செலவில்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்தப் பயணங்களை AIR (ALL INDIA RANDONNEUR) என்ற அமைப்பு கண்காணிக்கிறது. அவ்வளவுதான்.. பணமும் தரமாட்டார்கள். பொறுப்பேற்கவும் மாட்டார்கள். இத்தாலியில் தொடங்கப்பட்ட இந்தப் பயண அமைப்புகள். தற்சமயம் பிரான்சில் உள்ள ACP அமைப்பால் உலகம் முழுக்க உள்ள அமைப்புகளை அங்கீகரிக்கின்றது. நான் எப்படியும் ஆகிவிடுவேன் என்று புகழேந்தி சபதமெடுத்ததன் விளைவு நான் அங்கே எல்லாம் சென்று திரும்ப அடுத்த அத்தியாயத்துக்கு வரவேண்டி இருக்கிறது.

அடுத்ததாக விருத்தாசலத்தைச் சுற்றி பல்வேறு வரலாற்றுத் தலங்களுக்குச் சென்று அவைப் பற்றியச் செய்திகளைப் பகிர்கிறார். முகாச பரூர் அருகிலுள்ள பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி, பரூர் கச்சிராயர் வசித்த அரண்மனையின் சிதிலமடைந்த மிச்சங்கள், சுந்தர பாண்டியனின் கல்வெட்டு, வீரமாமுனிவர்  தேம்பாவணி எழுதியதாகக் கருதப்படும் கோணான்குப்பம்  பெரியநாயகியம்மன் ஆலயம் இப்படியாக அவரது மிதிவண்டிப்பயணம் பல ஆச்சர்யத் தகவல்களை சுருக்கமாகத் தருகின்றது.

பின்னர் தான் பார்த்த சோலோ என்கிற ஆங்கிலக் குறும்படம் பற்றி எழுதி இருக்கிறார். மலையேறும் குழு எப்படி பாறை இடுக்கில் இருந்து ஒரு தேரையைக் காப்பாற்றி மலை உச்சிக்கு எடுத்துச்செல்கிறார்கள் என்னும் கதையாம். இனி அந்தப்படத்தைத் தேடிப்பிடித்துப் பார்க்க வேண்டும்.

எனக்கு வேறொரு ஆவணப்படம் நினைவுக்கு வந்தது 1232 KM  என்றொரு படம். பீஹாரில் இருந்து தில்லிக்கு தினக்கூலிக்காகச் சென்று கொரானா காலத்தில் கைவிடப்பட்டு பசி பட்டினியுடன் சைக்கிளிலேயே தில்லியில் இருந்து தங்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு ஏழு நாட்கள் பயணித்து, பீஹாரின் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு கொடுமைகளை அனுபவித்தவர்களுடன் ஒரு இயக்குனர் பயணித்து படப்பதிவு செய்திருந்தார். அதுவே அந்த ஆவணப்படம். ஹாட்ஸ்டாரில் உள்ளது. தற்போது பீகார் தேர்தலையொட்டி திடீர் சாம்பார் திடீர் ரசம் போல திடீர் BIHAR LOVERS தமிழ்நாட்டில் தோன்றிவிட்டார்கள். முகநூலில் பீகார் தெருக்களில் பாலும் தெளிதேனும், பெருக்கெடுத்து தெருவில் ஓடுவதாக கூச்சமில்லாமல் எழுதுகிறார்கள். அவர்கள் அந்த ஆவணப்படத்தைப் பார்க்க வேண்டும். வெளியே சொல்லமாட்டார்கள். கையது கொண்டு மெய்யது போர்த்தி கம்மென இருப்பார்கள். 

சிறுகதை எழுத்தாளர் இல்லையா தன் மகன் விரும்பிய மிதிவண்டியை தான் வாங்கிக் கொடுக்க இயலாமல் போனதையும், ஆனால் வேலையில் சேர்ந்தபின்  மகன் இளவேனில் தன் ஊதியத்தில் இருந்து தான் விருப்பபட்ட மிதிவண்டியை வாங்கித் தந்த அனுபவத்தையும் நெகிழ்வுடன் பதிவு செய்துள்ளார். மிதிவண்டி பற்றிய அவரது கவிதையும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மகத்தான அனுபவம் தேதிவாரியாக புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார். நேர்த்தியான வடிவமைப்பு. பயணிகள் மற்றும் பயண இலக்கியங்கள் பற்றிய பல்லவிகுமாரின் அழகான முன்னுரை.

இரத்தின புகழேந்தியுடன் அர்த்தப்பூர்வமான  மிதிவண்டிப் பயணங்களை நாமும் அனுபவித்தது போன்ற உணர்வு புத்தகத்தை வாசிக்கும்போது ஏற்படுகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர் புகழேந்தி.   . .

 

கனவில் ததும்பும் நதி – 7

 



கனவில் ததும்பும் நதி
– 7

                                        நெய்வேலி பாரதிக்குமார்

பொதுவாக சீக்கியர்கள் என்றால் அறிவில் குறைந்தவர்கள் என்கிற எண்ணம் எப்படியோ நமக்குள் விதைக்கப்பட்டுவிட்டது. இந்திய அளவில் மிக அதிகமாக பகிரப்படும் நகைச்சுவைத் துணுக்குகள், பெரும்பாலும் சீக்கியர்கள் அசட்டுத்தனமானவர்கள் என்கிற எண்ணத்தையே உருவாக்குகின்றன. அந்தத் துணுக்குகள் ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்துகின்றன என்கிற கவலை இன்றி பரப்பப்பட்டவை. தென்னிந்தியர்கள் கருப்பர்கள்,, மதராசிகளுக்கு அலங்கரிக்கத் தெரியாது, தமிழர்களுக்கு உடை உடுத்தத் தெரியாது என்பது மாதிரியான கருத்துகளை கூச்சமில்லாமல் படித்தவர்கள் கூட்டம் தீர்ப்பு எழுதிக் கொண்டிருப்பதை ஊடகங்களில் காணும்போது அறச்சீற்றம் பொங்கி எழுகிறது.

தங்கள் சமூகத்தைத் தூக்கிப்பிடிக்க சற்று மிகையாக சொல்கிறவர்களைக் கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் எவ்வித அறிவுசார் ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு சமூகத்தை, இனத்தை இழிவுபடுத்துகிறக் கூட்டத்தை சகித்துக்கொள்ளவே முடியாது. தமிழர்களுக்கு விருந்தோம்பல் பண்பு அதிகம் என்று பலர் சொல்கிறார்கள் என்றால் அதற்கு ஆதாரம் உண்டா என்று கேளுங்கள் தவறில்லை. ஆனால் அதற்காக தமிழர்களுக்குத்தான் விருந்தோம்பல் பண்பே கிடையாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? இதே போல் தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வே கிடையாது என்று ஒருவர் மேடையில் பிதற்றினார் அதுக்கும் நாலு மண்டுகள் கைத்தட்டுகின்றன.

ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக விமர்சிக்க உரிய தரவுகள் தர வேண்டும். போகிற போக்கில் விமர்சிப்பது அயோக்கியத்தனமானது. சீக்கியர்கள் அறிவு சார்ந்து இயங்குபவர்கள் இல்லை அதிகம் உடல் வலு சார்ந்து இயங்குகிறவர்கள் என்று நட்பு அளாவலில் ஒருவர் குறிப்பிட்டார் நான் அவரிடம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அதிக காப்புரிமை பெற்ற இந்தியர் யார் என்று தெரியுமா என்று கேட்டேன். அவருக்குத் தெரியவில்லை. அதைவிட மோசம் இந்தியர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் செய்திருக்கிறார்களா என்ன? என்று கிண்டலாகக் கேட்க ஒரு சிறு கூட்டம் சிரித்தது.

எனக்கு கிரிக்கெட் வீரர் கபில்தேவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. இந்திய கிரிக்கெட் நிர்வாகம்  நடத்திய 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாமில், நான்கு மணி நேர கடினமான பயிசிக்குப் பின் இரண்டே இரண்டு சப்பாத்திகள் மட்டுமே கபில்தேவுக்கு உணவாகத் தரப்பட்டன. வேகப்பந்து வீச்சாளரான கபிலுக்கு அவை போதுமானதாக இல்லை. ஆகவே இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலராக இருந்த கேகி தாராப்பூரிடம் “நான் வேகப்பந்து வீச்சாளர். என்னுடைய நான்கு மணி நேரப் பயிற்சிக்குப் பின் இரண்டு சப்பாத்திகள் போதுமானதில்லை” என்று கபில்தேவ் தெரிவித்தார். அதற்கு தாராப்பூர் “இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரே இல்லையே.” என்று கிண்டலாகக் கூறினாராம். பின்னாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளராகத் தன்னை உயர்த்திக்கொண்ட கபில், ஒரு விழாவில் தாராப்பூரைச் சந்தித்தபோது இப்பொழுது நீங்கள் சொல்ல முடியுமா இந்தியாவில் வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லை என்று? என கேட்டாராம்.

பொதுச் சமூகத்தில் நாம் முன் வைக்கும் கருத்துகளை மிகுந்த கவனத்துடன் அறிவுச் சமூகம் பகிர வேண்டும். இந்தியாவில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அமெரிக்க காப்புரிமைகளை அதிகம் பெற்ற இந்தியர் குர்தேஜ் சாந்து சிங். அக்டோபர் 19, 2021 தேதிய நிலவரப்படி அவர் 1382 அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அமெரிக்க காப்புரிமைகளைப் பெற்றவராக இருந்தார். உலக அளவில் அவருடைய இடம் 7. தாமஸ் ஆல்வா எடிசன் வைத்திருந்த அமெரிக்கக் காப்புரிமைகளின் எண்ணிக்கை 1093. எடிசனையும் தாண்டிய எண்ணிக்கையில் காப்புரிமை வைத்திருக்கும் குர்தேஜ் சாந்து 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி லண்டனில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் சர்ஜித் சாந்து மற்றும் குர்மித் சாந்து 1963 ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார்கள். குர்தேஜ் சாந்துவின் பள்ளிப் படிப்பு இந்தியாவில்தான். டெல்லி ஐ.ஐ.டி.யில் மின்னியல் துறையில் பட்டம் பெற்றார். பிறகு 1985 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று தெற்கு கரோலினாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் மின்னியல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

மைக்ரான் நிறுவனத்தில் இணைந்த அவர் தொடர்ச்சியான தன்னுடைய ஆய்வில் பல்வேறு மின்னணுப் பொருட்களைக் கண்டுபிடித்தார். மென்படலம் எனச் சொல்லப்படும் மைக்ரோ ஃபிலிம் பற்றிய ஆய்வுகள் அவரது நிறுவனம் சார்ந்த பல்வேறு புதிய மின்பொருட்களை உருவாக்க பெரிதும் துணையாக இருந்தது. தற்சமயம் அவர் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். குர்தேஜ் -ன் சாதனை அளப்பரியது செமிகண்டக்டர் எனப்படும் குறைமின் கடத்திகள் கண்டுபிடிப்பில் குர்தேஜ்ன் இடம் மிக முக்கியமானது.  சீக்கியர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகளைப் பரிமாறுவதற்கு முன் குர்தேஜ் சாந்து சிங் பற்றி அறிந்து கொள்வது சிறந்தது.

 

நிகழ்வும் நினைவுகளும்



ண்மையில் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை இந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்கான பரிசளிப்பு விழாவினை கம்பம் நகரில் கோலாகலமாக நடத்தி முடித்தது. ஒவ்வொரு ஆண்டும் சிறுகதை, நாவல், கட்டுரை நூல்களுக்கான போட்டிகளை அறிவித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களுக்கான பரிசளிக்கும் விழாவை ஆகஸ்ட் 15 ஆம் தேதி மிக விமரிசையாக நடத்துகிறார்கள். மேலும் சிறந்த சிற்றிதழ் மற்றும் பதிப்பகத்துக்கும், வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கும் பரிசளிக்கின்றனர். இந்த ஆண்டு 19 வது வருடம். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் பாரதன் அவர்களின் கடினமான முயற்சியில் இந்த விழா தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகள் ஒரு அலங்கார ஊர்தியில் அமர வைக்கப்பட்டு, அவர்களுக்கு முன்பாக பாரதித் தமிழ்ப் பேரவை நிரவாகிகள், உறுப்பினர்கள், கொடையாளர்கள் நடந்து வர பூலித்தேவன் சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளியின் சிறார்கள் சிலம்பம், மான்கொம்பு, ஸ்கேட்டிங் போன்ற பல்வேறு ஆச்சர்யப்படுத்தும் கலைகளை செய்துகாட்டியபடி வர, மேல தாளம் முழங்க கிட்டத்தட்ட இரண்டு கி.மீ அளவுக்கு அந்த ஊர்வலம் கம்பம் நகரையே அதிர வைத்து விழா மண்டபத்தை அடைகிறது.

பரிசு பெறுகிற படைப்பாளிகளை மேடைக்கு அழைக்கும் போது கொற்றக்குடை பிடித்து பதாகை ஏந்தி கூடவே பாரதன் அவர்கள் படைப்பாளியின் பெயரை உரக்கச் சொல்லி வாழ்த்த கூட்டத்தினரும் வாழ்த்த படைப்பாளியின் பெயரும் புகழும் கம்பத்தில் கோடிக் கட்டி பறக்க விடப்படுகிறது. எல்லா வருடமும் பரிசு பெரும் படைப்பாளிகளுக்கு மட்டும் ஒற்றை நாற்காலி போடப்பட்டு அவர்க்கு பாரதி அணிவது போன்ற தலைப்பாகை அணிவிக்கப்பட்டு பரிசுத் தொகையும் சான்றிதழும் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மேடையில் அந்தத் தலைப்பாகையை பாரதி மற்றும் செல்லம்மாள் வேடமிட்ட இரு குழந்தைகள் அணிவித்தது சிலிர்ப்பான தருணம்.

தமிழ்நாட்டில் படைப்பாளிகள் கவனிக்கப்படுவதே இல்லை என்ற குற்றச்சாட்டை வீசுபவர்கள் கம்பம் நகரில் பாரதித் தமிழ்ப் பேரவை நடத்தும் கோலாகலமான கொண்டாட்டத்தையும், மணப்பாறையில் சௌமா ராஜரத்தினம் அவர்களின் சௌமா இலக்கிய விருதுகள் விழாவையும் (கவிஞர் தமிழ் மணவாளனின் துணையுடன்) கவனிக்காதது போல திரும்பி நிற்கிறார்கள். படைப்பாளிகளை உச்சி முகர்ந்து கொண்டாடும் இவ்விரண்டு அமைப்புகள் பற்றி எந்தப் பெரிய இலக்கியவாதியும் பேசுவதே இல்லை.

இலக்கியத்தில் பாகுபாடு என்பது படைப்பாளிகள் ரீதியாக, படைப்புகள் ரீதியாக, விருதுகள் ரீதியாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தப் பாகுபாடு சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மாதிரி மூன்று அடுக்குகள் கொண்டது. பளபளப்பான சிற்றிதழ்களில் எழுதும் படைப்பாளிகள் அவர்கள் பெறும் விருதுகள் எலைட் ரைட்டர்ஸ் பிரிவு. , வணிகப் பத்திரிகைகளில் எழுதுபவர்கள் அவர்களுக்கான அங்கீகாரங்கள் “தரம் கம்மிங்க பட்டியலில் வரும் ஆகவே அந்த படைப்பாளிகள் குறித்து விமர்சனங்கள் கிண்டல்கள் மிக அதிகம் பொருளாதாரத்தில் நலிவடைந்த சிற்றிதழ்களில் எழுதும் இடைநிலைப் படைப்பாளிகள் இரண்டாம் நிலை. இவர்கள் மத்திமர் வகையினர் இவர்களைப்பற்றி மூச்சு விடுவதில்லை. அவர்களின் படைப்புகள், அவர்கள் வாங்கும் பரிசுகள் விருதுகள் பற்றியும் பேசுவதில்லை. உண்மையில் இடைநிலை எழுத்தாளர்கள் பலர் உன்னதமான இலக்கியங்களைப் படிக்கிறார்கள் ஆனால் அவை படிக்கப்படாமல், பேசப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன.

கம்பம் பாரதி தமிழ்ப் பேரவை தேர்வாளர் பாரதன் அவர்கள் அணைத்து நூல்களையும் வாசிக்கின்றார். அந்த நூல்கள் குறித்து அவற்றின் படைப்பாளிகளுடன் பேசுகிறார். பிறகு தரமான படைப்புகளைத் தேர்வு செய்கிறார். அவர்களைக் கொண்டாடுகிறார். இப்படி கொண்டாடுபவர்களையாவது எலைட் எழுத்தாளர்கள் கொண்டாடலாம். ஆனால் தமிழ்நாட்டில் எழுத்தாளர்களை எவரும் கண்டுகொள்வதே இல்லை என்று எல்லா இடத்திலும் எலைட் எழுத்தாளர்கள் புலம்பித் தீர்க்கிறார்கள். இடைநிலை எழுத்தாளர்கள் இப்படி எல்லாம் புலம்புவதில்லை. விருது கிடைத்தவர்களை வாழ்த்துகிறார்கள், ஏழை எழுத்தாளர்களையும் வாழ்த்துகிறார்கள், வணிக எழுத்தாளர்களையும் பாராட்டுகிறார்கள். இந்த மனநிலைதான் அவர்களை மிக இயல்பாக இயங்க வைக்கிறது. கம்பம் தமிழ்ப் பேரவை வழங்கிய சிறந்த சிற்றிதழுக்கான பரிசினை 2023 ஆம் ஆண்டு தமிழ்ப்பல்லவி இதழ் பெற்றது என்பது பெருமைக்குரியச் செய்தி. அதே ஆண்டில் நான் எழுதிய பாதை தந்த பயணிகள் நூலுக்கும் இந்த ஆண்டு ஹே ராம் என்றொரு திரைத்தவம் நூலுக்கும் கம்பம் தமிழ்ப் பேரவை விருதுகள் கிடைத்தன. கம்பம் தமிழ்ப் பேரவை அமைப்புக்கும் சௌமா கல்வி நிறுவனத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

வாசிப்பின் வாசல்



பொள்ளாச்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொலுசு இதழ் ஏற்பாடு செய்திருந்த சிறுகதைப் பயிலரங்கை நான் நடத்திய போது பல்வேறு ஆச்சர்யங்கள். முதலாவதாக அந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்வதற்கு முன்பாக ஆசிரியர் அறவொளி என்னை சந்தித்ததே இல்லை. என்னுடைய உரைகளையோ, நான் எடுக்கும் வகுப்பையோ அவர் கேட்டதுமில்லை. என் கதைகளைப் படித்துவிட்டு அந்த நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு என்னை முழுநாள் வகுப்பெடுக்க பணித்தார். அந்தப் பயிலரங்கு நடப்பதற்கான அரங்கு, மதிய உணவு, இரண்டு வேளை தேநீர், இவை தவிர சில ஜெராக்ஸ் பிரதிகள் இவற்றையும் உள்ளடக்கி நபர் ஒன்றுக்கு 200 ரூபாய் கட்டணம் என்று அறவொளி அறிவித்தபோது எனக்கே அச்சமாக இருந்தது. எத்தனை பேர் வருவார்கள் என்று.. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் 130 பேர் அதில் கலந்துகொள்ள பதிவு செய்தனர். பலருக்கு இடமில்லாத காரணத்தினால் மறுக்கப்பட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அறவொளி கைவிட்டு பணம் செலவு செய்துதான் ஈடுகட்ட முடிந்தது. 12 வயது மாணவர்கள் முதல் 70 வயது முதியவர் வரை கலந்து கொண்டதில் என்னை வெகுவாக ஆச்சர்யப்படுத்தியவர் கனிமொழி என்கிற கனி.

கைக்குழந்தை மற்றும் கணவர் சகிதம் அவர் சென்னை கூடுவாஞ்சேரியில் இருந்து பொள்ளாச்சி வந்து அந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டார். பெரும்பாலான நேரம் அவரது கணவர் பாலா குழந்தையைப் பார்த்துக்கொள்ள, கனி அன்றைய நிகழ்வின் எல்லா செயல்பாடுகளிலும் ஈடுபாட்டுடன் தன்னைச் செலுத்திக்கொண்டது வியப்பாக இருந்தது. இலக்கியத்தை மெய்யாக நேசிக்கும் உள்ளம்தான் அத்தனை அர்ப்பணிப்புக்கும் காரணம். அதன்பிறகு அவர் குடும்பத்தினருடன் தன் சொந்த ஊர்றன திருவண்ணாமலைக்கு இடம் பெயர்ந்துவிட்டார். ஆனால் அவருக்குள் இருந்த படைப்புத் தீ கொழுந்துவிட்டபடியே இருந்தது. சமீபத்தில் அவர் வெளியிட்ட பொழிலதிகாரம் கவிதை நூலை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.

பொதுவாக குத்ம்பத்துக்கும் படைப்பாளிகளுக்குமான தூரம் மிக அதிகமானது. புற உலகைவிட வீடு மிக அதிகமாக படைப்பாளிகளை அலட்சியப்படுத்தி இருக்கிறது. படைப்பாளிகளும் குடும்பத்துடன் பல சமயம் ஒன்றிணைய முடியாமல் விலகி இருப்பார்கள். இந்தச் சூழலில் பெண் படைப்பாளிகள் பலரும் தங்கள்  குடும்பத்தை, உறவை கொண்டாடுபவர்களாக இருப்பதைக் கவனித்து இருக்கிறேன். அவர்களுக்குள் இருக்கும் தாய்மை உணர்வுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

கனிமொழியின் பொழிலதிகாரம் அவர் கருக்கொண்டது முதல் குழந்தை உருக்கொண்டு உடன் உறையும் காலம் வரையிலான உணர்வு கொந்தளிப்பின் மொழி வடிவம்தான் பொழிலதிகாரம். ஒரு கனிந்த தாயால்தான் தன தாய்மையை முழுமையாக உணரமுடியும். கனிமொழி மிக இளம் வயதிலேயே கனிந்த தாயாகிவிட்டார். அந்தத் தாயின் உணர்வுகளை வேறொருவர் அத்தனை அற்புதமாக ஒரு மொழியில் கொண்டு வந்துவிட முடியாது. வாசிக்கும் ஆண்கள் கூட பொறாமையுடன் தன் வயிற்றைத் தடவிப் பார்த்து  அந்தத் தாய்மை தனக்கு வாய்க்க வாய்ப்பில்லையே என வருந்தக்கூடும்.

தான் கர்ப்பவதி என்கிற உணர்வை முதன்முதலாக உணரும் தருணம் எத்தனை அற்புதமானது? வீட்டிலேயே சோதிக்கும் வசதி வந்தபிறகு எல்லா பெண்களுக்கும் பெரும் கனவு கர்ப்பத்தை உறுதி செய்யும் பிங்க் வண்ணம்தானே. தன முன்னுரையில் அதை விவரிக்கும் காட்சி அடடா எவ்வளவு உணர்வுப் பூர்வமானது?

தன மகன் பொழிலனின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்.

                  எதையும் ஒருகை பார்த்துவிடுபவள் நான்

                    உன்னைக் கையில் தந்தபிறகு

                    ஒவ்வொரு நொடியும் நடுக்கம்

      எவ்வளவு அழகான சொல்லாடல்? தேர்ந்த கவிஞர் போல அனாயசமாக வந்த வரிகள் இவை.

      நீ பிறந்தபிறகு/ உனக்கு எத்தனையோ பெயர்கள் வைக்கலாம்/ ஆனால் நீ துடிக்க ஆரம்பித்த உடன்/ நாங்கள் இட்ட பெயர் காதல்   காதலின் உயிர்ப்பான அடையாளம்தானே குழந்தை..

      அவன் மென்விரல் நகங்களை வெட்ட/ ஒரு பூ செய்து கொடுங்களேன் என்கிற வரி எத்தனை அன்பானது. எத்தனை மென்மையானது

      கண்ணு பட்டுறப் போகுது/ கறுப்புப் போட்டு வைம்மா என்றார்கள்/ கறுப்புப் போட்டு வைத்தப் பிறகுதானே கண்ணுபடுகிறது உனக்கு ..என்கிற வரிகள் எத்தனை அழகு?

      சில இடங்களில் கனியின் சொல்லாடல் மிரள வைக்கிறது. ஒரு இடத்தில் மகனை ‘உயிரா” என்று விளித்திருப்பார். உச்சரிக்கும் போதே அன்பு பெருகுகிறது. புழுதி பதிப்பகத்தின் வடிவமைப்பு அபாரம். தளபதி சல்மானின் அட்டை மற்றும் வடிவமைப்பு கூடுதல் கவிதைகள்.  

      பல வரிகள் கவிதைகள் ஆகாமல் உணர்வு பெருக்குகளாகத் திரண்டு இருக்கின்றன. அன்பின் வரிகள் கவித்துவமானதுதானே. ஒரு தாய் தன் குழந்தைக்கு அளிக்கும் மகத்தான பரிசு தான் எழுதிய கவிதைகள்தானே. பொழிலன் வாழ்நாள் முழுக்க பெருமிதமாகக் கருதும் பொழிலதிகாரம் உணர்வுகளின் ஆவணம்.      

.          

 

 

கனவில் ததும்பும் நதி 8

  கனவில் ததும்பும் நதி 8             நெய்வேலி பாரதிக்குமார்   இ ந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதன்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று...