ஞாயிறு, 26 ஜூன், 2022

 

நாம் என்ன செய்யப் போகிறோம்..?  

தன்னிலிருந்து தன்னைச் செதுக்கும் மாற்று சினிமா

                

     ( இது தமிழ்க் குறும்பட உலகின் வரலாறு இல்லை .. ஒரு சிறிய ஆதங்கம்..)

-நெய்வேலி பாரதிக்குமார்

                தகிக்கும் வெய்யிலில் வறண்ட பாலைவனத்தில்  வெற்றுப் பாதங்களோடு திரிபவனுக்கு  அபூர்வமாகத்  தென்படும் குளிர் சுனை போல், ஒரு வார ஆயுள் திரைப்படங்களைத் தாண்டி மாற்று சினிமா என்னை ஈர்க்கிறது. குறும்படங்களை அவற்றின் நீளத்தை வைத்து அவ்வாறு அழைத்தாலும் ‘மாற்று சினிமா’ என்கிற பதம் அவற்றின் நோக்கத்தை, தேவையை இன்னும் நெருக்கமாக நமக்கு உணரவைக்கின்றது.

காட்சிக் கலை ஊடகங்கள்  பற்றி நாம் அதிகம் விவாதிக்க வேண்டுமா அல்லது அதை விட்டால் இந்த நாட்டில் ஆராய வேறு விஷயங்களே இல்லையா? என்கிற முணுமுணுப்பு கேட்காமல் இல்லை. கடந்த காலங்களில் தமிழகம் திரைப்படங்கள் மற்றும் அவற்றின் வழியே பெற்ற அரசியல் தலைமைகள் அப்படியான கசப்பை நம் உடலெங்கும் ஏற்றி வைத்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லது நாம் விவாதிக்காவிட்டாலும் அவற்றின் பாதிப்புகளின் பாதாளத்தில்  நாம் வீழ்வதை நம்மால் தடுக்க முடியாது. அப்படியாக நம் நாடி நரம்பு, சமூகத்தின் சகல இடுக்குகளிலும் நீக்கமற நிறைந்து, விஷம் போல் பரவி இருக்கின்ற விஷயத்தை இடக்கையால் புறக்கணிப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.

உடலின் ஒரு பகுதியில் பரவியிருக்கும் ஒரு வியாதியை நமக்கு பிடிக்காது என்கிற காரணத்தினால் வைத்தியம் செய்யாமல் இருப்போமா? உண்மையில் வியாதி என்று நாம் கண்டுணர்ந்த பிறகு அதன் மீது தானே நம் கூடுதல் கவனம் இருக்கும். அப்படியாக நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களில் தவிர்க்க முடியாமல் சினிமாவும் இருக்கிறது. நல்ல சினிமா எது என்று நாம் புரிந்து கொள்ளவும் அதனை அடையாளம் காட்டவும் தேவை இருக்கிறது. நல்ல சினிமாவே வரவில்லை அப்புறம் எதைப்பற்றிப் பேசுவது என்று கேள்வி எழுந்தால் நல்ல சினிமாவை வரவைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இல்லையெனில் மோசமான சினிமாவிலிருந்து மோசமான மனிதர்கள் நம் தலைக்கு மேல் பீடத்தில் அமர நேரும் அபாயம் துரதிர்ஷ்டவசமாக தமிழ் சமூகத்திற்கு இருக்கிறது. மகன் ஒரு தவறான நண்பனை தேர்வு செய்தால் ஒன்று மகனை அவனிடமிருந்து நாம் விலக்க வேண்டும். அல்லது அந்த நண்பனை சரி செய்ய வேண்டிய பொறுப்பை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நம்மை யார் விடுவிப்பார்கள் என்று நினைக்கிறோமோ அவர்களே பொய் நட்சத்திரங்களைப் பார்த்து ‘விடிவெள்ளி’ என்று அழைக்கின்ற கொடுமையை நிகழ் காலத்தில் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

திரைப்படம் பார்க்கின்றவர்கள் சமூக பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் அல்லது திரைப்படத் துறையில் இருப்பவர்கள் சமூக பொறுப்புள்ளவர்களாக மாற வேண்டும். ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன் என்று கூறுபவர்கள் கூட திரைத்துறையில் ஓரளவு புகழ் பெற்றுவிட்டால் தனக்கென லட்சக்கணக்கில் செலவு செய்து உருவாக்கப்பட்ட தனி கேரவன் வேண்டுமென அடம் பிடிப்பதை நெருக்கமான திரைத்துறை நண்பர்கள் மூலம் அறிய முடிகிறது. அருகிலுள்ள மலையாள பூமியில் அரசியல்வாதிகள் முதல் திரைத்துறை சார்ந்தவர்கள் வரை ஓரளவு நேர்மையை, அவர்களை அணுகுவதில் உள்ள எளிமையை நாம் ஏன் சாத்தியமாக்க முடியவில்லை?

ஒரு சமூகம் முழுமைக்குமான பொதுத் தன்மையை பரவலாக்க அந்த சமூகம் ஏற்கின்ற ஆளுமை, ஊடகங்கள், கலை ஆக்கங்கள், இலக்கிய படைப்புகள், ஆகியன மறைமுகமாகவும் நேரடியாகவும் தீர்மானிக்கின்றன. உதாரணமாக ஜெயலலிதா இருக்கின்ற வரை எதிர்க் கட்சி யாவும் எதிரிகளின் கட்சியே. எதிரே தென்பட்டால் அவர் உடன்பிறந்த சகோதரனே ஆனாலும் பொது சபையில் சகஜமாக உரையாடக்கூட முடியாது. ஏன் சிரிப்பது கூட குற்றம் என்கிற நிலைதானே இருந்தது. ஆனால் அவர் மறைந்த பிறகு அவரது கட்சியை சேர்ந்தவர்கள், எதிர் கட்சித் தலைவரது உடல்நிலையை மரியாதை நிமித்தம் பார்த்து வர முடிந்ததே.. ஒரு மிகப்பெரிய மக்கள் திரள் பலநாட்கள் மெரினாவில் கூடி அவர்கள் நினைத்தை சாதிக்க முடிந்ததே... இந்த மாற்றம் எல்லா தளத்திலும் நிகழ இப்பொழுது தருணம் கூடி வருகிறது. திரைத்துறைக்கான மாற்றத்தை நாம் மாற்று சினிமாவிலிருந்துதான் துவங்க வேண்டியிருக்கிறது.

மாற்று சினிமா முயற்சிகளுக்கு ஒரு வணிக சந்தை இல்லை. சொல்லிக் கொள்ள பெரிதான அங்கீகாரம் இல்லை. அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் இல்லை. திரையிட்டு ஒரு விவாதத்தை துவக்கி வைக்கத் தளம் இல்லை. எதிர்காலம் குறித்த உறுதியான நம்பிக்கையும் இல்லை. கண்ணுக்குத் தெரிந்து நேரடியான போட்டியாளர்கள் இல்லை... ஏன் விமர்சகர்கள் கூட இல்லை. எனினும் இவர்கள் அத்தனை பேரும் தனக்கு எதிரில் இருப்பதாக நினைத்து தன்னை அதற்குத் தயார் செய்து, தன்னிலிருந்து தன்னைத் தானே உருவாக்கி செதுக்கிக் கொண்டிருக்கிறது,கண்ணுக்குத் தெரியாத ஒரு தியாகக் கூட்டம்....

ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களை பார்த்து வருபவன் என்கிற அடிப்படையில் அவர்களது வளர்ச்சியை கண்கூடாக உணர முடிகிறது. சொற்பத்தொகை பரிசுகளாக அறிவிக்கப்பட்டு, அதைவிட சொற்ப பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு கடந்து போகும் சில குறும்பட போட்டிகள் மட்டுமே அவர்களுக்கான நிழற்கூடம்.. அந்த நிழல் தரிசனத்தில் எனக்கு காணக் கிடைத்த சில மாணிக்கங்கள் என்னை வியக்க வைக்கின்றன..

தமிழ் குறும்பட வரலாற்றில் காஞ்சனை சீனிவாசன், எடிட்டர் B.லெனின், ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது. எவ்வித எளிதான தொழில் நுட்ப வசதிகளும் கைக்கெட்டிய தொலைவில் கிடைக்காத  சூழலில், கவனம் பெறக் கூட வாய்ப்பில்லாத நாட்களில் அவர்களே மாற்று சினிமாவுக்கான கரடு முரடான பாதையை வெறுங்கரங்களால் செப்பனிட்டவர்கள். ‘காஞ்சனை’ என்கிற அமைப்பின் மூலம் தமிழ் சினிமாவுக்கான மாற்றைத் தேடி பயணித்த சீனிவாசனின் முயற்சிகள் எப்பொழுதும் தன்னலம் கருதாத சமூக அக்கறை கொண்டவை.   

ஒரு நிமிடத்தில் அசரடித்த ‘சாலையின் பாடல்’  இன்றைய கல்வி முறையின் அச்சமூட்டும் சூழலை பதிவு செய்த லெனினின்  ‘மொட்டுக்கா’  ‘நாக் அவுட்  ஆகியன ஒரு புதிய பாட்டையை உருவாக்கின. எழுத்தாளர் மாலன் மெட்ரோ ரெயில் பயணத்தில் நடக்கும் கதையை ஒரு குறும்படமாக எடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். பிலிம் கேமராவில்தான் அந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் படத்தை காண்கிற வாய்ப்பு கிடைக்கவே இல்லை.   

இரா. நடராசனின் ஈரமிக்க வரிகளில் விளைந்த சிறுகதைதான் ஆயிஷா. ஒரு சிறுகதை மட்டும் தனியே அச்சிடப்பட்டு அது லட்சக்கணக்கான பிரதிகளை கடந்து இன்றும் விற்றுக்கொண்டிருப்பது ஆயிஷாதான். அந்த சிறுகதையின் அடர்த்தி சற்றும் குறையாமல் தனது அழகான திரைமொழியில் அழுத்தமாக பதிவு செய்திருப்பார் இயக்குனர் பா. சிவக்குமார். குழந்தை நட்சத்திரம் சுவேதா பொன்னென மின்னிய கதாபாத்திரம் அது. சி.ஜெ. ராஜ்குமாரின் கச்சிதமான ஒளிப்பதிவு படத்தின் இணை ஆளுமை. இன்றும் பல குறும்பட ஆர்வலர்களுக்கான  உந்து சக்தி அந்தப்படமே. அதற்குப்பிறகும் பல குறும்படங்களை இயக்கினார் சிவக்குமார். எனினும் சமீப காலங்களில் அம்முயற்சிகளில் இருந்து சற்று ஒதுங்கிவிட்டார்.  

அதன் பிறகு இலக்கியப்பிரதிகளைத் தேடித் தேடி வாசிக்க ஒரு கூட்டம் கிளம்பியது. ஆயிஷாவின் ஆகச்சிறந்த வெற்றி அதுவே.. கரிசல் இலக்கிய கர்த்தா கி.ராவின் ‘கதவு’ (இயக்கம் மதரா), தேசிய விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனின் கர்ணமோட்சம் (இயக்கம் முரளி மனோகர்), அசோகமித்திரனின் ‘கடன்’ (முரளி திருஞானம்), ஜெயகாந்தனின் சைக்கிள், தாம்பத்யம் மாதிரி பல சிறுகதைகள், ஜெயமோகனின் சிறுகதையைத் தழுவி தூதன் (புதுவை இம்மானுவேல்), என்.ஸ்ரீராமின் விசுவாசம் (மணிபாரதி), அ.முத்துலிங்கத்தின் ’சித்ரா. என பல படைப்புகள்..

பரிக்ஷா ஞாநியின் ‘ஆனந்தி’ சேலம் ஆண்டோவின் ‘தும்பலில் இன்று குடியரசு தினம்’ மதுரை அமுதனின் ‘பீ’, ஆர்.வி. ரமணியின் ‘தளர்ந்தது’ திண்டுக்கல் மணிமாறன் இயக்கிய ’18 தீக்குச்சிகள்’ பிரான்சின் அகீபன் பாலா இயக்கிய ‘நானாக நான்’ கார்த்திக் முத்துக்குமார்  இயக்கிய ‘ON DUTY’ சுப்புராஜின் ‘செடி’ போன்றவை அந்தந்த தளத்தில் அழுத்தமான உணர்வுகளை வழங்கியவை  

 சமீபத்தில் பிரபஞ்சனின் சிறுகதையைத் தழுவி ‘வலி’ என்கிற குறும்படத்தை வம்சி இயக்கத்தில் காண நேர்ந்தது. தீர்மானிக்கப்பட்ட சித்திரவதைகளிலிருந்து ஒரு அப்பாவியைத் தப்பிக்க வைக்க அவனைக் கருணைக் கொலை செய்வதே சாலச் சிறந்தது என்று மனம் வெதும்பி முடிவெடுக்கும் ஒரு காவல் துறை அதிகாரியைப்பற்றிய கதை. மிக அற்புதமான கலை நேர்த்தியுடன் படைக்கப்பட்டிருந்தது. அனாவசியமான நீட்டல்கள், உணர்ச்சிக் கொப்பளிக்கும் காட்சிகள், வளவளவென உரையாடல்கள் இப்படி எதுவுமின்றி கச்சிதமாக படமாக்கி இருந்தார்கள். பிரபஞ்சன் சமகால படைப்பாளிகளில் மிகச்சிறந்த கதை சொல்லி. அவரது கதையை மிக அழகாக இயல்பு கெடாமல் படமாக்கியிருந்தார் வம்சி..

இலக்கிய படைப்புகளை பிரதி செய்யும் முயற்சிகள் தமிழ்த் திரைப்பட உலகைக் காட்டிலும் குறும்பட உலகில் அதிகம் இருப்பதே ஒரு ஆரோக்கியமான சூழல் என்றே சொல்லலாம். அவர்கள் மீதான நம்பிக்கையை அதுவே அதிகரிக்க செய்கிறது. தொடர்ந்து அப்படைப்புகள் பல்வேறு விருதுகளை பெற்றுவருவது குறும்பட படைப்பாளிகளின் கவனத்தை இலக்கியம் பக்கம் ஈர்க்கச் செய்கிறது. வாசிப்பை நோக்கி நகர்த்துகிறது. கேரளா போன்ற மாநிலத்தில் நிலவும் பொது பண்பை அம்மொழியின் இலக்கியம், கலை ஆக்கங்களே நிர்ணயம் செய்கின்றன. எனவேதான் தமிழகத்திலும் அம்மாதிரியான பொதுப்பண்பு பரவலாக்கலை இலக்கிய கலை படைப்புகள் வழியே எதிர்பார்க்கிறேன்.

தொழில் நுட்ப அற்புதங்களினால் ஒரு கலைப்படைப்பை நேர்த்தியான பிரதியாக உருவாக்குவதில் நம் தமிழ் படைப்பாளிகள் பல மைல்கற்களை தாண்டிவிட்டனர். குறிப்பிடத்தக்க குறும்பட இயக்குனர் மணிமாறன் இயக்கிய ‘கடல்’ என்கிற நான்கே நிமிட குறும்படம்  ஒளிப்பதிவில் அசாத்தியமான காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது. ஒரு அலையின் மோதல்களை இப்படியும் காட்சிப் படுத்த முடியுமா என்ன?  அவர் ஏற்கனவே ‘பங்களா நாய்’ என்கிற தனது குறும்படத்தில் ஹெலி கேமராவை கவித்துவமாக கதாபாத்திரத்தின் கூடவே ஓடவிட்டிருப்பார். கவனிக்கப்பட வேண்டிய தமிழின் மிக முக்கிய குறும்பட இயக்குனர் மணிமாறன்.

கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், நலன் குமாரசாமி, பாவெல்  ஆகியோர் தங்களுக்கென ஒரு புதிய பாணியில் குறும்படங்களை உருவாக்கி புதியதொரு தலைமுறையை வழிநடத்துகிறார்கள்.

குறும்படங்களை திரைத்துறைக்கு இட்டுச் செல்லும் குறுக்கு வழியாக மட்டுமே சிலர் நினைத்துக்கொண்டிருப்பதால், வருடத்திற்கு சுமார் 5௦௦ குறும்படங்கள் வரை உருவாக்கப்படும் தமிழில் பல குப்பைகளே மலிந்து கிடக்கின்றன. சில மாணிக்கங்களே தென்படுகின்றன. இலக்கியம் குறித்த பிரக்ஞை இன்மை, நமது வரலாறு மரபு குறித்த பரிச்சயமின்மை,  தமிழ்த் திரைப்படங்களை மட்டுமே முன் உதாரணமாகக் கொள்ளும் குறுகிய பார்வை, பிற மொழி குறும் படங்களை காணும் வாய்ப்பிருந்தும் அதில் அக்கறையின்மை ஆகிய காரணங்களால் நல்ல குறும்படங்கள் உருவாவதற்கான முயற்சிகள் குறைவாக இருக்கின்றன. 

நல்ல திரை ரசனையை உருவாக்கும் பணியில் ‘நிழல்’ திருநாவுக்கரசு, ‘பதியம்’ பாரதி வாசன், ‘தமிழ் ஸ்டூடியோ’ அருண் ஆகியோர் தளராது முயற்சித்து வருகிறார்கள். ‘நிழல்’ திருநாவுக்கரசு தொடர்ந்து பல குறும்பட பயிற்சிப் பட்டறைகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார். சென்னையைத் தாண்டியும் சினிமா குறித்து நல்ல கனவுகளுடன் இருக்கும் பல இளைஞர்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்கம். ‘சொல்லப்படாத சினிமா’ என்கிற குறும்படங்கள் பற்றிய அவரது தொகுப்பு மிக முக்கியமானதொரு நூல்.

‘தமிழ் ஸ்டூடியோ’ அருண் மிக இளம் வயதில் மாற்று சினிமாவுக்காக ஒரு வெறியுடன் தன்னை ஒப்புக் கொடுத்தவர். ஆண்டு தோறும் அவர் நடத்தும் குறும்படப் போட்டிகள் மாற்று சினிமா படைப்பாளிகளுக்கான விருதுகள், இணையதளம் என பரவலாக அதற்காக இயங்கி வருகிறார்.

நெய்வேலி என்.செல்வன் தன்னுடைய குறும்படங்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். நெய்வேலி மாணவர்களிடையே குறும்படங்கள் குறித்த ஆவலை ஏற்படுத்திய வண்ணம் இயங்கி வருகிறார். குவியம் வாஞ்சிநாதனும் அவரது நண்பர் ஒளிப்பதிவாளர் பாலாவும் மிக இளம் படைப்பாளிகளுக்கு பிரதிபலன் பாராது துணை நிற்கின்றனர்.

அம்ஷன்குமார், விஸ்வாமித்திரன், யமுனா இராஜேந்திரன் ஆகியோர் தொடர்ந்து மாற்று சினிமாவுக்கான கட்டுரைகளை காத்திரமாக எழுதி வருகிறார்கள். தியோடர் பாஸ்கரன், அ.ராமசாமி ஆய்வு ரீதியாக தங்களது எண்ணங்களை பதிவு செய்து வருகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அவ்வப்பொழுது நல்ல முயற்சிகளை அறிமுகப்படுத்துகிறார். (அவரது மகன் ஹரிபிரசாத் சமீபத்தில் பெண் விளையாட்டு வீராங்கனைகளை சமூகம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதை தனது கிளீன் போல்ட் குறும்படம் மூலம் பதிவு செய்திருக்கிறார்.) ஒளிப்பதிவாளர் சி.ஜெ. ராஜ்குமார், விஜய் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர்  தொடர்ந்து ஒளிப்பதிவு தொழில்நுட்பங்கள் குறித்த நூல்களை எழுதி வருகின்றனர்.

தமிழகமெங்கும் குறும்படப்போட்டிகள் பரவலாக நடத்தப்படுவது ஆரோக்கியமான ஒரு விஷயம். நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி மூலம் ஆண்டு தோறும் குறும்படப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இன்றைய இணைய யுகத்தில் இளம் படைப்பாளிகள் போட்டிகள் மூலம் மட்டுமே சர்வதேச அளவில் சில லட்சங்கள் வரை பரிசாக பெற முடியும் என்கின்றனர். எனவே மெல்ல ஒரு தென்றல் வீசும் தருணத்தை விலகியிருக்கும் ஜன்னல் வழியே அனுபவிக்க முடிகிறது. குறைகளை மட்டுமே பறை சாற்றிக்கொண்டிருக்காமல் நமது வாசலை நாம் திறந்து வைப்போம் நல்ல குறும்படங்களை உருவாக்குவது, திரையிட செய்வது, விவாதிப்பது, அவற்றைப் பற்றி பதிவு செய்வது, அவர்களை ஊக்குவிப்பது காலத்தின் கட்டாயம்.. தமிழ் சமூகத்தின் தேவை.. நாம் என்ன செய்யப் போகிறோம்..?  

  

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...