ஞாயிறு, 26 ஜூன், 2022

 


தனிமையின் வெம்மையும் தணியாத வேட்கையும்

(பாதியில் நிறுத்தப்பட்ட ஓவியம் .. இராகுலனின் கவிதைத் தொகுப்பை முன் வைத்து)

                -நெய்வேலி பாரதிக்குமார்

 

னிமையின் மகத்தான பரிசு கவிதை. தனிமைதான் நாம் சுவாசிக்கும் காற்றை  நமக்கே அடையாளப்படுத்துகிறது. ஒரு புல்லின் தலையாட்டலை கவனிக்க வைக்கிறது. இருந்த இடத்திலிருந்து சதா பயணிக்க வைக்கிறது. கணக்கற்ற அந்த பயணங்களை கவிஞன் மட்டுமே பதிவு செய்து வைக்கிறான். இராகுலனின் கவிதைகள் அவர் தீரா தேடலுடன் பயணிக்கும் மனவெளிப் பயணங்களின் நுட்பமான பதிவுகள் என்றே சொல்லலாம். அவரே அவரது கவிதையில் குறிப்பிட்டுள்ளது போல

நீர் வேண்டும்/ மனதாகம் தணிக்க/ கிணற்றை/ குளத்தை/ ஏரியை/ ஆற்றை/ கடலைத் தேடிச் செல்ல வேண்டும் / இன்றேல் /கிணற்றை /குளத்தை /ஏரியை / ஆற்றை/ நானே வெட்டிக்கொள்ள வேண்டும்

அதன் நீட்சியே ஓர் மென்மைப் பார்வை/ யாரும் தருவதில்லை என்று துவங்கும் கவிதை இந்த வழியாகத்தான் / தனிமையை வந்தடைய நேர்ந்தது என்கிற கவிதை. வேறு வழியில்லை கவிஞன் ஏதோ ஒரு வழியில் தனிமையைத்தான் வந்தடைய வேண்டி இருக்கிறது. தனிமை என்பது கடவுள் கவிஞனுக்கு வழங்கிய கொடை   

அந்தக் கொடையின் இலக்கியப் பயன்தான் ‘விழுந்து கொண்டிருக்கின்றன/ மனக்குளத்தில்/தொடர்ந்து மழையென கற்கள் எனக் காட்சிப் படிமமாக விரியும் கவிதையை நமக்கு வாசிக்க அளிக்கிறது. அந்தக் கவிதை  கவனிப்பாரற்ற தனிமையை அதன் தவத்தை நமக்கு உணர்த்தியபடியே செல்கிறது.

அவரது மனதில் அலைவுறும் எண்ணங்கள் ஆச்சர்யமான சொற்கள் வழியே நம்மை அறியாத நீரோடைக்கு  அழைத்துச் செல்கின்றன. சொற்களும் அவற்றின் சுழிப்புக்களும் நம்மை அங்குமிங்குமாக சுகமாக இழுத்துச் செல்கின்றன.

நாம் சந்திக்க நேர்ந்தது/ உன் பயணத்தின் போதும்/ என் பயணத்தின் போதும்/ என்று தொடங்கும் கவிதை இட்டுச் செல்லும் வெளி இறுதியில் வாசிக்கும் யாவரையும் துணுக்குற வைக்கும். சற்றுத் தள்ளிச் செல்லும் எந்த உறவின் இடையிலும் எப்படியோ ஒரு விதை காரணமே இல்லாமல் முளைக்கத் தொடங்கிவிடுகிறது. பின்னர் காரணமே இல்லாமல் விருட்சமாகி விடுகிறது. இதற்கு எந்த உறவுமே விலக்கில்லை..

இந்தக் கவிதையின் வேறொரு வடிவமாக வரும் கேள்விகள் தொடர்ந்து கேட்கிறீர்/ என்று துவங்கும் கவிதை கூட அப்படியான நிலையை உரித்து வைக்கும் அர்த்தமுள்ள கவிதையே...

ஆங்கிலக் கவிஞர் டெனிசன் தன்னைப் புறக்கணிக்கும் இந்த சமூகத்தின் மீதேறி உந்தி தான் கால் பதிக்க விரும்பும் புதிய உலகை நோக்கி இப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று தொனிக்கும் கவிதைகளை எழுதி இருப்பார். உதாரணமாக அளவிலா இனிமை என்பது எது/ அதை என் வாழ்வு அடையும் முன்னே/ வருவது வரட்டும் / பூமி பிளவாமல் என்னைத் தாங்கி நிற்கும் என்கிற கவிதையை நினைவூட்டும் கவிதைகளை இராகுலனும் இந்தத் தொகுப்பில் நிறைய எழுதி இருக்கிறார்.

அந்தம் முற்ற என்ற தலைப்பில் உள்ள கவிதை,  தேடி/ யாரையும்/ எதற்காகவும்/ என்ற கவிதை தொகுப்பின் தலைப்புக் கவிதையான பாதியில் நிறுத்தப்பட்ட ஓவியம், யாவரும் உறங்குகிறீர் என்கிற கவிதை, கூடுகளற்றும்/ ஒரே ஒரு பறவையேனும் என்கிற கவிதை, மாற்றிக்கொள்கிறேன்/ உங்களுக்குத் தோதாக/ எனத்துவங்கும் கவிதை ஆகியன மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட மனதின் இறுதி வலியோடு எழுந்து நின்று உக்கிரமாக அதே சமயம் மென்மையாக எச்சரிக்கும் குரலின் பதிவாகவே உணர்கிறேன்.

தொகுப்பின் ஆகச்சிறந்த அல்லது என்னைக் கவர்ந்த கவிதை என்று ‘எதிர் இருக்கை’ என்கிற கவிதையைச் சொல்லுவேன். அது இராகுலனுக்குள் உலாத்தும் ‘நான்’ என்பவரை மீறி இன்னொரு ‘அவனை’ அற்புதமாக வெளிப்படுத்துகிறது. மண்டியிடுகிறேன்/ வாய் மூடி இருக்கிறேன்/ என் நிழலை ஒப்படைத்திருக்கிறேன்/ என்கிற கவிதை எப்பொழுதும் போல் இராகுலனின் கவிதையாகத்தான் துவங்குகிறது. ஆனால் அது சென்றடையும் இடம் அலாவுதீன் அற்புத விளக்கைத் தேய்த்தபின் வெளிப்படும் பூதமென சட்டென ஒரு இமாலய உருவத்தை உங்கள் முன் வைக்கிறது. யாரும் அமர முடியாது/ உங்களுக்கு சமமான எதிர் இருக்கையில்/ என்னைத் தவிர்த்து என்று முடியும் போது ஒரு கவிதை முடிப்பு எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதை அவருக்கே புலப்படுத்துவதாக இருக்கிறது.

இன்னொரு நெகிழ்வான கவிதை சமீப காலமாக/ கைகள் கால்கள் மறக்கிளைகளாய்/ என்றுத் துவங்கி இருப்பினும் நகர முடியாது படுத்திருக்கும்  இந்த அறை/ பிரபஞ்சமாய் விரிகிறது/ என்று முடிக்கப்படும் போது அந்த பிரபஞ்சத்தின் உள்ளே நாமும் கனத்த மனத்துடன் பயணிக்க இயலுகிறது.

இராகுலனிடமிருந்து வெளிப்படும் சில சொற்கள் மின்னதிர்வை தருகின்றன. தழும்புகிறேன் மாதிரியான சொற்கள் அவரது கவிதைகளின் வயதினையும் தாண்டி வியக்க வைக்கின்றன.  

இராகுலனின் கவிதைகளை மூன்று பிரிவுகளுக்குள் எளிதாக அடக்கி விடலாம். ஒன்று அவரது தனிமையும் அதனுடனான அவரது போராட்டங்களும் அடுத்தது அவருக்கும் பிற உறவுகளுக்கும் இடையில் விழும் இடைவெளிகள் அதன் வலிகள் மூன்றாவது அந்த வலிகளையும் இரணங்களையும் துடைத்துக் கொண்டு திமிறி எழுந்து அவர் விடும் கூக்குரல்கள்..

அவரது முதல் தொகுப்பின் விமர்சனக் கூட்டத்தில் பேசிய பொழுது சொன்னவை மீண்டும் எனக்கு நினைவுக்கு வருகின்றன. மிகச்சீக்கிரமாக இந்தக் கதவுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் உங்களுக்கான உலகத்தை தனிமை தந்திருக்கிறது. தனிமை ஒரு விசித்திரமான ஆயுதம் அது சிலசமயம் வைத்திருப்பவனை கொல்லும் அதுவே பல சமயம் உங்களுக்கான கனிகளை உன்ன வசதியாக உங்கள் முன் தங்கத் தட்டுகளில் அரிந்து வைக்கும். உண்மையில் யாருமே கவனிக்காது இருப்பது மாதிரியான தனிமை கவிஞனுக்கு வரம். அந்த வரத்தை எந்த அளவுக்கு அவன் பயன்படுத்துகிறானோ அந்த அளவுக்கு அவனை உலகம் உற்றுப் பார்க்கும். உலகம் ஒரு நாள் உற்றுப்பார்க்கும் கவிதைகள் இராகுலனுக்குள் இருக்கும் சுவடுகளை  அவரது இரண்டு தொகுப்புகள் உணர்த்துகின்றன.

அணிந்துரையில் கலாப்பிரியாவின் கவிதை நெடுநேரம் மனதில் அதையே திரும்பத் திரும்பச் சொல்வது போல எனக்குப் படுகிறது. அந்த தண்டவாளத்தில் கொஞ்ச நேரம்/ இந்தத் தண்டவாளத்தில் கொஞ்ச நேரம்/ அமர்ந்தமர்ந்து சமாதானப் படுத்துகிறது/ இரயில் கடந்து போன தண்டவாளங்களை/ ஒரு சிட்டுக்குருவி என்ன ஒரு அற்புதமான அவதானிப்பு.

ஆம் இராகுலன் உங்கள் இரண்டு தொகுப்புகளும் ஒரு சிட்டுக்குருவியைப் போல உங்கள் மனதை அமர்ந்து அமர்ந்து சமாதானப் படுத்திவிட்டன. அடுத்தப் பயணத்துக்காக தண்டவாளங்களும் மனங்களும் உற்சாகமாக தயாராகிவிட்டன.. நீங்கள் உதற  வேண்டியதும்.. உடன் ஏற்ற வேண்டியவையும் நிறைய இருக்கின்றன நம்பிக்கையோடு நிலையம் உங்களின் அடுத்த வண்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறது..

   . 

        

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...