புதன், 22 ஜூன், 2022

 

இடமாற்றத்திலிருந்து திசை எட்டும் வரை...

                -நெய்வேலி பாரதிக்குமார்

மொழிபெயர்ப்பாளர் திரு குறிஞ்சிவேலன் அவர்களின் எண்பதாவது பிறந்தநாள் விழா மலருக்கு எழுதப்பட்ட கட்டுரை 



புத்தகங்கள் வாங்குவதும் புத்தகங்களை அவற்றின் வாசத்தை நுகர்ந்து பூரிப்பதும் புதுத்துணி வாங்குவது போன்ற பரவசத்தை அளித்தது எண்பதுகளின் துவக்கத்தில் நான் பாலிடெக்னிக் படிக்கும்போது ஆரம்பித்தது. கோவை அன்னூர் பகுதியில் இருந்து கார்த்திக் பதிப்பகம் என்று நினைக்கிறேன் சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் போன்ற திருவிழாக்கள் சமயங்களில் புத்தகக்கடை போடுவார்கள். வாங்கி வந்ததும் அன்றைக்கு இரவே அதைப் படித்து முடித்துவிடும் பேரார்வம் தூங்கவிடாமல் செய்யும். அப்படியான காலகட்டத்தில்தான் ஐந்து சென்ட் நிலம் என்கிற மலையாள மொழி பெயர்ப்பு நூலை வாங்க நேர்ந்தது. அதனை தமிழில் மொழிபெயர்த்தவர் குறிஞ்சிவேலன் அவர்கள் அவர் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் என்றாலும் அவரைச் சந்திக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியதில்லை. பொதுவாக எனக்கு பிரபலமானவர்கள் பெரிய மனிதர்கள் என்றால் பெரும் தயக்கம் மற்றும் கூச்சம் காரணமாக சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம் கிளைத்ததில்லை.

பல வருடங்கள் கழித்து நெய்வேலியில் ஒரு இலக்கியக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் திசை எட்டும் என்கிற மொழிபெயர்ப்பு இதழ் தொடங்குவது பற்றிய ஆலோசனை நடைபெற்றது. அதில் நானும் கலந்து கொண்டு திசை எட்டும் புரவலருக்கான தொகையை செலுத்தி என்னை இணைத்துக் கொண்டேன். அதன்பிறகுதான் திரு குறிஞ்சிவேலன் அய்யா அவர்களுடன் தொடர்ந்து பேசவும் பழகவும் வாய்ப்புக் கிடைத்தது. பழகியபிறகுதான் அவர் எத்தனை எளிமையானவர் அணுகுவதற்கு இலகுவானவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்தியா முழுக்க மொழிபெயர்ப்பாளர்கள் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் அவருக்கு தொடர்ச்சியான நட்பு இருந்தது என்றாலும் என்னைப் போன்ற எளிமையான எழுத்தார்வம் மிக்கவர்களுடனும் அவர் சரி சமமாகப் பழகினார். திசை எட்டும் பிழைதிருத்தும் பணிகளில் சிலகாலம் என்னை அனுமதித்த அவர் அதன் ஆசிரியர் குழுவிலும் பெருந்தன்மையுடன் இணைத்துக் கொண்டார். உண்மையில் திசை எட்டும் இதழுக்கான அனைத்துப் பணிகளையும் அவர்தான் பார்த்துக்கொண்டார் என்றாலும் எங்களுக்கு அதில் இடமளித்து மிகப் பெரிய கௌரவத்தை தந்தார். திசை எட்டும் விருதுக்காக நேர்மையான நடைமுறை ஒன்றை பின்பற்றி வந்தார். விருதுக்கு வரும் நூல்களை மூன்று வெவ்வேறு தேர்வாளர்களிடம் நூல்களை அனுப்பி வைப்பார். மூவருக்கும் மற்ற  இருவர் என்று தெரியாது. அவர்கள் தேர்ந்தெடுக்கும் நூல்களின்  தகுதி வரிசையை வைத்து பின்னர் பரிசுக்குரியவர்களை திசை எட்டும் ஆசிரியர் குழு தீவிரமாக விவாதித்து முடிவு செய்யும், இரண்டு முறை அப்படி விருதுக்கான தேர்வாளர் குழுவில் என்னை இடம் பெறச் செய்ததை பெருமிதமாகக் கருதுகிறேன்.

வள்ளலார் அவரது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சென்ற திண்ணையில்தான் இன்றைக்கும் அவர் தனது மொழியாக்கப் பணிகளை, திசை எட்டும் இதழுக்கான வேலைகளை கணினியில்  செய்து கொண்டிருக்கிறார். அந்தப் புனிதத்துவமான இடத்தில் கணினியில் சில சமயம் அவர் திசை எட்டும் இதழுக்கான படைப்புகளை காண்பிக்க அவற்றை அவரோடு உடனிருந்து கவனித்த  தருணங்கள் சிலிர்க்க வைக்கின்றன.

சில திசை எட்டும் இதழ்களுக்காகவும்  இட்டிக்கோரா என்கிற மலையாள நூலின் மொழிபெயர்ப்புக்காகவும் தட்டச்சுப் பணிகளை எனது துணைவியார் ஆதிலட்சுமி என்கிற நிலாமகள் செய்துதரும் நல்வாய்ப்பைத தந்தது எங்களுக்கு கிடைத்த பெரும்பேறு என்றுதான் கருதுகிறோம்.

மலையாளத்திலிருந்து மகத்தான பல படைப்புகளை மொழியாக்கம் செய்து தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய பணிகள் யாவும் அவரது கால்நடை ஆய்வாளர் பணி மற்றும் உடல்நலனை எல்லாம் தாண்டிய மாபெரும் சாதனை என்றே சொல்லவேண்டும். அத்தனைப் பணிகளுக்கும் அவரது துணைவியார் அவர்களின் ஆக்கப்பூர்வமான அன்பான துணை நிற்றல் முக்கியமான காரணம் என்றே கருதுகிறேன்.

ஏழு மொழிகள் கற்றறிந்தவர் என்றாலும் மலையாள மொழியில் இருந்து மட்டுமே மொழியாக்கம் செய்வதற்கு காரணம் அம்மண்ணின் கலாச்சாரத்தை நேரடியாக  அறிந்து புரிந்ததுதான். மூல மொழியின் கலாச்சாரம் அறிந்தவர்கள் மட்டுமே அம்மொழியின் இலக்கியங்களை மொழிபெயர்க்க வேண்டும் என்கிற அவரது கொள்கை மொழிபெயர்ப்புப் பணிக்கான மிகச்சிறந்த இலக்கணம்..

அவரது கால் நடை ஆய்வாளர் பணியின் போது அவரது மேலதிகாரி ஒருவர் குறிஞ்சி வேலன் அய்யா மீது கொண்ட அநீதியான கோபத்தின் காரணமாகத்தான் அவரை வண்டிப்பெரியார் என்கிற தமிழக கேரளா எல்லைப் பகுதிக்கு இடமாறுதல் செய்துவிட்டார் என்று அடிக்கடி அய்யா அவர்கள் குறிப்பிடுவார்கள். யாரோ ஒருவரின் காழ்ப்புணர்ச்சி ஒரு மகத்தான இலக்கியவாதியை தட்டி எழுப்பி திசை எட்டும் பயணிக்க வைத்திருக்கிறது ஒரு எதேச்சதிகார  அதிகாரியின் காழ்ப்புணர்ச்சி தமிழ் இலக்கிய உலகிற்கும் மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கும் மகத்தான ஒரு மொழியாக்க படைப்பாளியை, அயராத உழைப்பாளியை தந்திருக்கிறது எனில் அது தமிழர்களின் நல்லூழ்.. அவரது எண்பதாவது பிறந்தநாளில் அவரது ஆசிகளை வேண்டி வணங்குகிறேன்          


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...